பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 23, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 7

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 7

சேவப்ப நாயக்கர். (1532 - 1580)

தஞ்சைக்கு அனுப்பப்பட்ட சேவப்ப நாயக்கரின் காலம் 1532 முதல் 1580 வரையிலானது. இவருடைய தந்தையார் பெயர் திம்மப்ப நாயக்கர். இந்த திம்மப்ப நாயக்கர் ஆற்காடு பிரதேசத்தில் ராஜப்பிரதிநிதியாக இருந்தவர். இவரை திம்மப்பா என்றும் திம்மப்ப பூபதி என்றும் அழைப்பார்கள். ஆற்காடு பகுதியின் ஆளுகைக்குப் பொறுப்பான இவர் இப்போதைய வேலூர் மாவட்டம் நெடுங்குன்றம் எனும் ஊரில் இருந்து கொண்டு ஆட்சி புரிந்தார்.

விஜயநகர சாம்ராஜ்யம் இப்போதைய ஆந்திரப் பிரதேசத்தில் பரவியிருந்த ஒரு பெருமைக்குரிய இந்து சாம்ராஜ்யம். இதனை தெற்கே தமிழ்ப்பேசும் பகுதிகளுக்கு விரிவு படுத்த இந்த நெடுங்குன்றம் பகுதியிலிருந்து தான் தொடங்கினர். தென் தமிழகம் உட்பட அனைத்துப் பகுதிகளும் நாயக்கர் ஆட்சிக்கு அடிகோலியது இந்த நெடுங்குன்றம் ஆட்சிதான். அதற்கு வித்திட்ட பெருமை திம்மப்ப நாயக்கருக்கு உண்டு.

யார் இந்த திம்மப்பர்? நாம் முன்பே குறிப்பிட்டபடி விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் தங்கள் பகுதிகளை ஆள்வதற்கு கூடியமட்டும் தங்கள் உறவினர்களையே தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அப்படி உறவினர்கள் இல்லையென்றால், அவர்களது நம்பிக்கைக்குரிய ஊழியர்களை அனுப்புவார்கள். அப்படி இந்த திம்மப்பர் ஆற்காடு பகுதிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக இவர் மாமன்னர் கிருஷ்ணதேவராயரிடம் வாயில் காப்போனாகப் பணியாற்றி வந்தார். அந்தப் பணிக்கு "வாசல்" என்று பெயர். மன்னரின் வாசல் எனும் பதவியோடு இவர் தளவாய் எனும் படைத்தளபதியாகவும் இருந்தார். மன்னரின் தளவாயாக இருந்த காலத்தில் ரெய்ச்சூர் உட்பட பல பகுதிகளுக்குப் படையெடுத்துச் சென்று போரிட்டிருக்கிறார் இவர். இவருடைய சகோதரர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் நாகம்ம நாயக்கர். நாகம்ம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயக்கர்தான் மதுரைப் பகுதியை ஆள அங்கு அனுப்பப்பட்டு அவர் மூலம் தென் தமிழகம் முழுவதும் நாயக்கர் ஆட்சிக்குள் கொண்டு வரப்பட்டது.

நாகம்ம நாயக்கரும் திம்மப்ப நாயக்கரும் அண்ணன் தம்பி என்பதைப் பார்த்தோம். இதில் நாகம்ம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயக்கர் மதுரைக்கும், திம்மப்பரின் மகன் சேவப்பர் தஞ்சைக்கும் அனுப்பப்பட்டனர். இவர்கள் அனைவருமே மாமன்னர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இவர்களைப் பற்றியும் சிறிது விரிவாகத் தெரிந்து கொள்வது நல்லதுதானே!

திம்மப்ப நாயக்கருக்கு நான்கு பிள்ளைகள். இவர்கள் பெத்தசேவா, சின்னசேவா, பெத்தமல்லா, சின்ன மல்லா என்ற பெயர் உடையவர்கள். இவர்களில் சின்னசேவா என்பவர்தான் நமது கதாநாயகனான சேவப்ப நாயக்கர். இவர் திம்மப்ப நாயக்கருக்கும் பையாம்பிகா எனும் ராணிக்கும் மகவாகப் பிறந்தவர். சேவா என்பது சேவப்பர் என்பதன் சுருக்கம். தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பிறகு இவருடைய பெயரைத் தமிழில் "சிறு சேவா" என்று குறிப்பிட்டனர். சரி மற்ற பிள்ளைகள் என்னவானார்கள்? அது பற்றிய விவரம் தெரியவில்லை. சரித்திர ஆசிரியர்களும் இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. சேவப்பருக்கு முன்னதாக சோழ தேசத்துக்கு விஜயநகர சாம்ராஜ்யத்தின் கவர்னராக இருந்த செல்லப்பா என்கிற வீரநரசிம்மரைத் தொடர்ந்து இவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். "தஞ்சாவூரு ஆந்திர ராஜ்யலு சரித்திரமு" எனும் தெலுங்கு இலக்கியம் சேவப்பருக்கு அவருடைய திருமணம் மூலம் கிடைத்த வரதட்சிணை என்கிறது. ஆனால் வேறு சில செய்திகள் சேவப்பர் தன் வீரத்தினால் போரிட்டு இந்த தஞ்சாவூர் ஆட்சியைக் கைப்பற்றினார் என்கிறது. இப்படி தொடங்குகிறது இந்த நாயக்கர் வம்சத்தின் வரலாறு. 

திம்மப்பர் ராஜாங்க பணியில் இருந்த காரணத்தால், முதலில் அவருடைய குமாரர்களும் ராஜாங்கத்தில் பணி அமர்த்தப்பட்டனர். தஞ்சைக்கு அனுப்பப்பட்ட சேவப்ப நாயக்கர் முதலில் கிருஷ்ணதேவராயரிடம் பணிபுரிந்து வந்தார். ஒரு காலகட்டத்தில் திம்மப்பரும் அவர் மகனான சேவப்பரும் விஜயநகர சாம்ராயப் படையில் பணிபுரிந்து பல போர்களில் பங்கு கொண்டிருக்கின்றனர். இவருடைய பணி சிறப்பாக இருப்பதை உணர்ந்து மன்னர் இவரிடம் அக்கறை காண்பித்து இவருக்கு உரிய அந்தஸ்தையும் கொடுத்திருந்தார். சேவப்ப நாயக்கர் நல்ல நிர்வாகியாகவும் பெயர் பெற்றிருந்தார். 

கிருஷ்ணதேவராயரின் சகோதரர் அச்சுததேவராயர். அண்ணனுக்குப் பிறகு அச்சுததேவராயர்தான் விஜயநகர சக்கரவர்த்தியாகப் பதவிக்கு வந்தார். இவருடைய மனைவியின் பெயர் திருமலாம்பா. அரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், சிறந்த நிர்வாகியுமாகத் திகழ்ந்த சேவப்பருக்கு இந்தத் திருமலாம்பாவின் சகோதரியைத் திருமணம் செய்து வைத்தனர். அந்தப் பெண்ணின் பெயர் மூர்த்திமாம்பா. இந்தத் திருமணத்தின் மூலம் சேவப்பர், ராஜாவின் சகலையாக ஆகிவிட்டார். சேவப்பர் தஞ்சாவூரின் அரசராக ஆனதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ராஜாவின் குடும்பத்தில் அல்லவா பெண் எடுத்திருக்கிறார் சேவப்பர். அதற்கு வரதட்சிணையாக தஞ்சாவூரைப் பெற்றார் என்றும் சொல்பவர்கள் உண்டு. 

முதலில் சேவப்பர் அச்சுததேவராயருக்கு அடப்பக்காரனாக பணிபுரிந்தார். அது என்ன அடப்பக்காரன்? அடப்பக்காரன் என்றால் மன்னருக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுக்கும் பணி. அட இது என்ன? மன்னருக்கு தாம்பூலம் மடித்துக் கொடுப்பது என்பது அவ்வளவு உயர்ந்த பணியா? அதை இவரைப் போன்ற ஒருவர் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று தோன்றுகிறதல்லவா? இது ஒன்றும் அப்படிப்பட்ட எளிய, தாழ்ந்த பணி அல்ல. அடப்பக்காரனாக மன்னர் வைத்துக் கொள்கிறார் என்றால், அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான, உறுதியான பாதுகாவலராக இருப்பவரைத்தான் வைத்துக் கொள்வார். காரணம் வெற்றிலை மடித்துக் கொடுப்பவன் அதில் ஏதாவது விஷம் கலந்து கொடுத்துவிட்டால் மன்னரின் கதி? ஆகவே மிகவும் நம்பிக்கை உள்ளவராகத்தான் இந்த பதவிக்கு வைத்துக் கொள்ள முடியும். அந்தப் பதவியிலும் இருந்தவர் நமது சேவப்பர். நம்பிக்கை, நாணயம், மன்னரை பாதுகாக்கும் உணர்வு அதற்கான வீரம் அத்தனையும் இருந்ததால்தான் சேவப்ப நாயக்கர் மன்னரிடம் இந்த பணியைச் சிறப்பாக செய்து வந்தார். சுருக்கமாகச் சொல்வதென்றால் மன்னரின் அந்தரங்க பாதுகாவலராகப் பணி புரிந்தவர் சேவப்ப நாயக்கர்.

சேவப்ப நாயக்கருக்கு ராஜப்பிரதிநிதியாக பதவி உயர்வு கொடுத்து முதலில் ஆற்காட்டுக்கும், பின்னர் தஞ்சாவூருக்கும் அனுப்பக் காரணமாக இருந்தவர் மன்னர் அச்சுததேவராயர் என்பதால்தான், பின்னாளில் சேவப்ப நாயக்கர் தனது மகனுக்கும் மன்னரின் பெயரையே வைத்தார். அந்த மகனின் பெயர் அச்சுதப்ப நாயக்கர். சேவப்ப நாயக்கர் தஞ்சாவூருக்கு மன்னராக வந்து பதவியேற்ற காலம் தொட்டே அவருடைய மகன் அச்சுதப்ப நாயக்கரும் இளவரசராக இருந்து கொண்டு தந்தைக்கு உதவி செய்து வந்தார்.

சேவப்ப நாயக்கரின் ஆட்சியில் சொல்லிக்கொள்ளும்படியான எந்த பெரிய நிகழ்ச்சியோ அல்லது போரோ நடைபெறவில்லை. பொதுவாக நாடு அமைதியாகவும் வளமானதாகவும் இருந்திருக்கிறது. இவர் காலத்தில் கட்டப்பட்ட மாளிகைகள், அரண்மனைகள், நகரங்கள் இவைகளே நாடு அமைதியாக இருந்ததற்கான அடையாளங்கள். விஜயநகர அரசர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தங்கள் பார்வையில் வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அறியாமல் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது அத்தனை பாதுகாப்பு.

சேவப்ப நாயக்கர் தஞ்சாவூரைத் தலைநகரமாக ஆக்கிக் கொண்டு பாண்டியர்களால் அழிக்கப்பட்ட தலைநகருக்கு அருகிலேயே புதிதாக ஒரு நகரத்தை உருவாக்கிக் கொண்டு அங்கு நீர்நிலைகளையும், ஆலயங்களையும், மாளிகைகளையும் உருவாக்கி ஒரு புதிய ராஜ்யத்தை உருவாக்கினார். அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு இன்றும்கூட 'சேவப்பநாயக்கன் ஏரி' இருக்கிறது. அங்கு ஏரியும் இல்லை, தன்ணீரும் இல்லை, அதனை சமப்படுத்தி அங்கு வீடுகளைக் கட்டிக் கொண்டு மக்கள் ஒரு குடியிருப்பாக மாற்றிக் கொண்டுவிட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூருக்கு ஒரு விளையாட்டு அரங்கம் (Stadium) தேவை என்பதை உணர்ந்து இந்த சேவப்ப நாயக்கன் ஏரி பகுதியில் அன்றைய அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அடிக்கல்கூட நாட்டினார். பின்னர் ஸ்டேடியம் இப்போது இருக்கும் கணபதிநகர் பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டது.

சேவப்ப நாயக்கன் ஏரியில் சுற்றுப்புற மேட்டுப் பகுதிகளிலிருந்து மழைநீர் வந்து தேங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த நீர் ஏரிக்கு வந்த பிறகு அதை பெரிய குழாய்கள் மூலம் சிவகங்கைக் குளத்துக்குக் கொண்டு சென்று, அது நிரம்பியதும் நகரின் மற்ற குளங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் நீர்நிலைகள் பாதுகாப்பை உருவாக்கி யிருந்தார். இதுபோன்ற அமைப்புகள் புதுக்கோட்டையிலும் திவான் சேஷையா சாஸ்திரி காலத்தில் உருவாக்கப்பட்டு நகரின் பல நீர்நிலைகள் மழைக்காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நிரம்பி கடைசியில் புதுக்குளம் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததைக் காண்கிறோம். தஞ்சாவூரிலும் நீர்நிலைகளுக்கு பூமிக்கு அடியில் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் அமைப்பு இருந்திருக்கிறது.

சேவப்ப நாயக்கரைப் பற்றிய ஆதாரபூர்வமான கல்வெட்டுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சோழ தேசத்தில் இவர் ஆட்சி புரிந்தது மட்டும் வரலாற்று ஏடுகளில் பதிவாகியிருக்கிறது. இவருடைய காலத்தில் திருச்சினாப்பள்ளி தஞ்சாவூர் ராஜ்யத்திற்கு உட்பட்டும், வல்லம் மதுரை நாயக்கர்களிடமும் இருந்திருக்கிறது. இவர் திருச்சியை மதுரை நாயக்கர்களிடம் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக வல்லத்தை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது. 

இனோரு வரலாற்றுச் செய்தியும் இவர் காலத்தைப் பற்றி சொல்லப்படுகிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் தளபதி ராமராஜ விட்டலர் தன்னுடைய படைகளோடு திருச்சினாப்பள்ளியில் தங்கிக்கொண்டு *திருவடி (திருவிதாங்கூர்) ராஜாவோடும், தென்னிந்திய கடற்கரை பரவர்களோடும் 1545இல் போரிட்டுக் கொண்டிருந்த போது சேவப்பர் தளபதி ராமராஜருக்கு படைகளைக் கொடுத்து உதவியும், மற்ற உதவிகளையும் செய்ததாகத் தெரிகிறது. (திருவாங்கூர் ராஜாக்கள் அவ்வூரிலுல்ள பத்மநாபசுவாமியின் திருவடி என்று தங்களைச் சொல்லிக் கொள்வதால் அவர்களை 'திருவடி' என்பது வழக்கம்).

சேவப்ப நாயக்கர் தஞ்சாவூர் ராஜ்யத்தில் பல கோயில்களைக் கட்டியிருக்கிறார். இடிந்து சிதிலமான பல கோயில்களைப் புதுப்பித்திருக்கிறார். அவர் காலத்திற்கு முன்பு இங்கு படையெடுத்து வந்த வட இந்திய சுல்தான்கள் படைகளினால் நாசமாக்கி இடிக்கப்பட்ட பல கோயில்களையும் சரிசெய்ய முடியாவிட்டாலும், பல கோயில்களின் இடிபாடுகளிலிருந்த பொருட்களைக் கொண்டு ஏதாவதொரு கோயிலையாவது புதுப்பித்துக் கட்டியிருக்கிறார்கள். அப்படிக் கட்டப்பட்ட கோயில்களில் செந்தலை கோயிலும் ஒன்று. 

முன்பே குறிப்பிட்டபடி தஞ்சையில் நீராதாரத்தைப் பெருக்கியதைப் போல நாட்டின் பல இடங்களிலும் பல குளங்களை வெட்டி தண்ணீரைச் சேகரித்து வைக்க ஏற்பாடு செய்தார். வேதங்கள் ஓதிய பிராமணர்களுக்கென்று பல அக்ரஹாரங்களை அமைத்துக் கொடுத்து அவற்றை வேத பண்டிதர்களுக்கு சர்வமான்யமாகக் கொடுத்துதவினார். 

தஞ்சை சிவகங்கைக் கோட்டையை சீர்செய்து செம்மை படுத்தியிருக்கிறார் சேவப்ப நாயக்கர். திருவண்ணாமலையில் பதினோரு அடுக்கு கோபுரம் ஒன்றைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். இப்படியொரு கோபுரத்தைக் கட்டித்தரும்படி சேவப்ப நாயக்கரிடம் கேட்டுக் கொண்டவர்கள் பெயர்கள் தெரிய வருகின்றன, அவர்கள் சிவநேசன் அவர் தம்பி லோகநாதன் ஆகியவராவர். இவை தவிர விருத்தாசலம் எனும் திருமுதுகுன்ற ஆலயத்துக்கும், காஞ்சிபுரத்தில் சில ஆலயங்களுக்கும் சுற்றுப் பிரகாரங்களை இவர் அமைத்துத் தந்திருக்கிறார். 

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் வெளிப்பிரகார மதிற்சுவற்றை சீர்படுத்தி ஒழுங்காக்கிக் கட்டிக் கொடுத்தார். சிதம்பரம் நடராஜா கோயிலின் கோபுரத்தைக் கட்டிக் கொடுத்தார். திருப்பதி பெருமாளின் மூலத்தானத்துக்கும், ஸ்ரீசைலம் ஆலயத்தின் விமானத்துக்கும் தங்கத் தகடுகள் வேய்ந்து உதவினார். இவை தவிர 1550இல் நாஞ்சிக்கோட்டைக்கருகில் ஒரு இஸ்லாமிய மசூதிக்கு என ஏழு வேலி நிலத்தை நன்கொடையாக அளித்தார். 1574இல் மாத்வ ஆச்சார்யரான விஜயேந்திர தீர்த்தருக்காக ஒரு கிராமத்தை கொடையாக வழங்கினார். தவிரவும் 1579இல் திருவிளந்துறை எனும் இடத்தில் இருந்த ஒரு புத்த விஹாரத்துக்காக நிலங்களை வழங்கியிருக்கிறார். இப்படி மத வேற்றுமை பாராட்டாமல் அனைவருக்கும் தேவையான உதவிகளை இவர் செய்து வந்திருக்கிறார். 

இவருடைய காலத்தில் போர்த்துகீசியர்கள் நம் நாட்டுக்கு வியாபாரம் செய்ய வந்திருந்தார்கள். இவர்கள் தவிர, ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என்று பல ஐரோப்பிய நாட்டவர்களும் தாங்கள் கால்பதிக்க இடம் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தனர். போர்த்துகீசிய வியாபாரிகளுக்கு இவர் ஆதரவு கொடுத்து இடம் கொடுத்து உதவியிருக்கிறார். பிரான்சிஸ் சேவியர் என்பார் எழுதியுள்ள சுயசரிதையில் சேவப்பர் போர்த்துகீசியர்களுக்குச் செய்த உதவிகளைக் குறித்து எழுதியிருக்கிறார். 

தன்னை தஞ்சாவூருக்கு அரசனாக அனுப்பிய விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு இவர் எப்போதுமே நம்பிக்கைக்குப் பாத்திரராகவே இருந்து வந்தார். அச்சுதப்ப தேவராயருக்கு மட்டுமல்ல, அவருக்குப் பின் பதவிக்கு வந்த சதாசிவ ராயருக்கும் அவருடைய படைத் தளபதியான ராமராஜ விட்டலதேவ மகாராயருக்கும் இவர் உண்மை விசுவாசியாக இருந்தார். இந்தப் படைத் தளபதி திருவாங்கூரை வென்றபின் திருவரங்கம் வந்து மன்னரோடு ஐந்து ஆண்டுகள் வரை இருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையை கவனிக்கும்போது சேவப்ப நாயக்கர் விஜயநகர சாம்ராஜ்யப் படைகளுக்கு அவர்களது தெற்கு படையெடுப்பின்போது எல்லா உதவிகளையும் செய்திருக்க வேண்டுமென்பது தெரிகிறது.

சேவப்ப நாயக்கர் ஆட்சி பற்றிய விவரங்கள் அதிகம் தெரியாவிடினும் அவர் செய்த பொது நன்மைக்கான கொடைகள், தர்ம காரியங்கள் இவை அனைத்தும் காணக் கிடைக்கின்றன. இவர் காலத்தில் நிறைய கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. பல நீர்நிலைகள் செப்பனிடப்பட்டு நீரைத் தேக்க வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பல ஊர்கள் தானமாகக் கொடுக்கப்பட்டு அங்கெல்லாம் மக்கள் குடியமர்த்தப் பட்டிருக்கின்றனர். தஞ்சை சிவகங்கைக் குளத்தை இவர் செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அளித்த வரலாறு தெரியவருகிறது. 

சேவப்ப நாயக்கர் நீண்ட நெடுங்காலம் தஞ்சையை ஆட்சி புரிந்திருக்கிறார். வயது முதிர்ந்துதான் இவர் காலமானார். இவர் வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தான் ஆண்ட தஞ்சாவூர் ராஜ்யத்தில்தான் கழித்தார். இவர் ஆட்சி கி.பி.1532இல் தொடங்கி 1563 வரையில் நடைபெற்றிருக்கிறது. இவர் காலமானது 1580 இவர் பதவி விலகிக் கொண்டு தன் மகன் அச்சுதப்ப நாயக்கரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி நிர்வகிக்கச் செய்த தொண்டு பாராட்டுக்குரியது.

சேவப்பர் தன்னுடைய காலத்திலேயே தன்னுடைய மகனை யுவராஜாவாக வைத்துக் கொண்டு அவரும் ராஜ்ய பரிபாலனத்தில் முழுமையா ஈடுபட வைத்ததைத் தொடர்ந்து 1563இல் தான் தர்ம காரியங்களைக் கவனிக்க முடிவு செய்து மகனையே ராஜ்யத்தை ஆளும்படி ஏற்பாடு செய்துகொண்டார்.

ராஜ்யத்தை நல்ல முறையில் 1532 முதல் 1563 வரையில் 21 ஆண்டுகள் சிறப்பாக ஆண்ட திருப்தியில் மன்னர் சேவப்பர் தன் மகனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு மக்கள் பணியில் ஒரு தொண்டனாக இருந்து செயல்பட்டுவிட்டு 1580இல் காலமானார். இவருடைய அந்திம காலத்தில் இவர் கர்நாடகத்திலிருந்து வந்த வேத பிராமணர் கோவிந்த தீக்ஷிதர் என்பாரை ஒரு அமைச்சராக நியமித்தார். இந்த கோவிந்த தீக்ஷிதர் தஞ்சை நாயக்கர் ஆட்சியில் எத்தகைய மேலான இடத்தைப் பிடித்திருந்தார், என்னென்ன சாதனைகளைப் புரிந்தார் என்பதையெல்லாம் பின்னால் பார்க்கலாம். அச்சுதப்பர் தந்தை நிழலில் இருந்து கொண்டு ஆண்ட நிலை மாறி இப்போது தனித்து ஆட்சிபுரியலானார்.


No comments: