பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, September 27, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 17

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 17

செங்கமலதாஸ் (1674 முதல் 1675)

தஞ்சைப் போரில் விஜயராகவ நாயக்கரும் அவரது மகன் மன்னாருதாசனும் இறந்து போன செய்தியைப் பார்த்தோம். மதுரை மன்னன் சொக்கநாத நாயக்கர் தனது ஒன்றுவிட்ட சகோதரன் அழகிரி நாயக்கரை தஞ்சாவூருக்கு மன்னனாக அறிவித்தார். 1673இல் பதவியேற்றுக்கொண்டு அழகிரி நிர்வாகத்தைச் சீரமைத்து ஒழுங்குபடுத்தி, போரினால் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்யத் தொடங்கினார். அழகிரி நாயக்கர் தஞ்சாவூருக்கு பொறுப்பாளராகத்தான் இருந்தார் என்பதால் மதுரைக்குக் கப்பம் கட்ட வெண்டியிருந்தது. முதல் ஆண்டுக்கு மட்டும் அவர் கப்பம் செலுத்தினார். மறு வருஷம் இவருக்கு ஒரு அலட்சியம் ஏற்பட்டு மதுரைக்குக் கப்பம் செலுத்தவில்லை. இந்த அலட்சியப் போக்குக்குக் காரணம் விஜயராகவ நாயக்கரிடம் ராயசம் (செயலாளர் போன்ற பதவி) பணியாற்றிய தெலுங்கு பேசும் நியோகி பிராமணன் வெங்கண்ணா என்பவர் என்று சொல்லப்படுகிறது. தன்னால் பணியில் நியமிக்கப்பட்ட அழகிரி நாயக்கர் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் என்பதால் சொக்கநாதர் அவர்மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதற்கிடையே மதுரைக்கு ஒரு செய்தி வந்து சேர்ந்தது. அதாவது தஞ்சை நாயக்க மன்னர்களின் வாரிசுகள் விஜயராகவ நாயக்கரின் மரணத்தோடு முடிந்துவிடவில்லை. அவருக்கு ஒரு குழந்தை இருந்து அந்தக் குழந்தையை நாகப்பட்டினம் எடுத்துச் சென்று ஒரு வணிகரிடம் கொடுத்து வளர்த்துவருவதாக ஒரு செய்தி வந்து சேர்ந்தது.

முந்தைய விஜயராகவ நாயக்கரின் கீழ் முக்கியமான பதவியில் பணியாற்றிய ராயஸம் வெங்கண்ணா, மாறிவிட்ட சூழ்நிலையில் அழகிரி நாயக்கர் நிர்வாகத்தில் எந்த பொறுப்பும் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தினாலோ என்னவோ, இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்து நாகப்பட்டினத்தில் வளரும் விஜயராகவ நாயக்கரின் குழந்தையைத் தேடி கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டினார். மேலும் மதுரை சொக்கநாத நாயக்கருக்கு அழகிரியின் போக்கில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதையும் பயன்படுத்திக் கொண்டு இதில் ஏதாவது விஷமம் செய்ய முனைந்தார் ராயஸம் வெங்கண்ணா. அழகிரியை நீக்கிவிட்டு தஞ்சாவூருக்கு எப்படியாவது நாகப்பட்டினத்தில் மறைந்து வளரும் விஜயராகவ நாயக்கரின் மகன் செங்கமலதாஸ் என்பவனைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து ஆட்சியில் அமரச்செய்யத் துடித்தார் வெங்கண்ணா. இந்த செங்கமலதாஸ் எனும் பையன் விஜயராகவ நாயக்கரின் மகன் அல்ல, மன்னாருதாசன் என்ற பெயரில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த அவருடைய மகனுடைய பிள்ளை என்று சொல்வோரும் உண்டு. இதற்குக் காரணம் சொல்லும்போது விஜயராகவ நாயக்கர் போரில் இறக்கும்போது எண்பது வயதைத் தாண்டியவர், அப்படிப்பட்ட வருக்குச் சின்ன குழந்தை இருக்க நியாயமில்லை, அது அவருடைய பேரனாக இருக்க வேண்டும் எனும் வாதத்தில் நியாயம் இருப்பதாகத் தெரிகிறது. எப்படியாயினும் அந்தக் குழந்தை அவருடைய வாரிசுதானே.

ராயஸம் வெங்கண்ணா நாகப்பட்டினம் சென்று அங்கு வளர்ந்த செங்கமலதாஸ் பத்து அல்லது பன்னிரெண்டு வயது வரும்வரை காத்திருந்து, அதற்குப் பிறகு அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு பீஜப்பூர் சென்று அங்கு சுல்தான் அலிஅடில்ஷாவை சந்தித்து தஞ்சாவூர் ராஜ்யத்துக்கு இந்த செங்கமலதாஸ்தான் உண்மையான வாரிசு என்றும், அங்கு வந்து ஆக்கிரமித்திருக்கும் அழகிரியை அங்கிருந்து விரட்ட சுல்தான் உதவி செய்யவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட சுல்தான் தனது தளபதிகளில் ஒருவரான ஏகோஜி என்கிற வெங்கோஜியை அழைத்து ஒரு பெரும்படையுடன் தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தார். வரும் வழியில் ஏகோஜியின் படை ஆரணியைப் பிடித்துக் கொண்டு, தஞ்சாவூரை நோக்கி முன்னேறி வந்தது. அப்போது தன்னை விரட்ட பீஜப்பூர் சுல்தானின் படைகள் ஏகோஜி தலைமையில் வருவதைத் தெரிந்துகொண்ட அழகிரி மதுரையில் இருந்த சொக்கநாத நாயக்கரிடம் உதவி கேட்டு அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் வேகமாக வந்து கொண்டிருந்த ஏகோஜியின் படைகள் தஞ்சாவூர் ராஜ்யத்தினுள் நுழைந்து நேராக தஞ்சையை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்தது.

தஞ்சையிலிருந்து அழகிரி தன்னை எதிர்த்துப் போரிட வந்துகொண்டிருக்கும் சுல்தான் படைகளை எதிர்த்துப் போரிடக் கிளம்பி அய்யம்பேட்டைக்கு அருகில் இரு படைகளும் மோதிக்கொண்டன. அதில் சுல்தான் படைகள் சுலபமாக அழகிரியைத் தோற்கடித்து விட்டது. போரில் தோற்றுப்போன அழகிரி அரியலூர் வழியாகத் தப்பிச் சென்று மைசூரை நோக்கிப் பயணமானார். வெற்றி வீரனாக ஏகோஜி அய்யம்பேட்டையிலிருந்து கிளம்பி தஞ்சாவூர் கோட்டைக்குள் நுழைந்து, அங்கு செங்கமலதாசுக்கு தஞ்சை அரசனாக முடிசூட்டி வைத்தார். தனது நன்றியைத் தெரிவிக்க செங்கமலதாஸ் ஏகோஜிக்கு விலைமதிப்புள்ள பல பரிசுப்பொருட்களை அளித்து கெளரவித்தான். ராஜாவாக செங்கமலதாஸ் முடிசூட்டிக் கொண்ட பின்னர் அரண்மனையில் இருந்த சிலர் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த அரிய செல்வங்கள் இருக்குமிடத்தை அவனிடம் காட்ட, செங்கமலதாஸ் அவற்றை எடுத்து வைத்துக் கொண்டான். அந்த செல்வத்தின் மதிப்பு அன்றைய நிலைமையில் இருபத்தியாறு லட்சம் பகோடா என்கிறது செய்திகள். படையெடுத்து வந்த செலவுக்காக செங்கமலதாஸ் ஏகோஜிக்கு கும்பகோணம், மன்னார்கோயில் (மன்னார்குடி) பாபநாசம் ஆகிய ஊர்களிலிருந்து வசூலான வரித் தொகையைக் கொடுத்தான். அதன் பின் ஏகோஜி கும்பகோணத்தில் சிலகாலம் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. ஆனால் மெக்கன்சி சுவடிகளின் ஆதாரங்கள்படி ஏகோஜி ஊர் திரும்ப கொள்ளிடத்தைக் கடந்து திருமழபாடி சென்றபோது அவரது மனைவியரில் ஒருத்திக்குக் குழந்தை பிறந்ததால் அங்கு சிலகாலம் தங்கியிருந்ததாக எழுதப்பட்டிருக்கிறது.

கி.பி.1674 இல் தஞ்சையின் அரசனாக செங்கமலதாஸ் ஆளத் தொடங்கினான். அவனுடைய துரதிர்ஷ்டம் அவன் அமைதியாக ஆளமுடியாமல் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டுவிட்டது. காரணம் செங்கமலதாஸ் நாகப்பட்டினத்தில் வளர்ந்த வணிகரைத் தனக்கு அமைச்சராக வைத்துக் கொண்டான். இந்த பதவியை எதிர்பார்த்து எல்லா உதவிகளையும் செய்துவந்த ராயஸம் வெங்கண்ணாவுக்கு இதனால் ஆத்திரம் வந்து அவர் அரசனுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கிவிட்டார். இதனால் மனமுடைந்த வெங்கண்ணா ஊர் திரும்பாமல் தங்கியிருந்த ஏகோஜியிடம் சென்று, தஞ்சை ராஜ்யத்தை அவரையே எடுத்துக் கொள்ள தூண்டினார் வெங்கண்ணா. இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஏகோஜி, வெங்கண்ணாவின் ஆதரவு இருக்கும் தைரியத்தில் தஞ்சைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார். ஏகோஜி தஞ்சைக்கு வந்து ஆட்சியை ஏற்றுக்கொள்ளப் போகிறார் என்பது தெரிந்தவுடன் செங்கமலதாஸ் அரியலூர் பக்கம் சென்றுவிட்டார். ஆகையால் எந்தவித பெரிய எதிர்ப்பும் இல்லாமல் தஞ்சாவூர் மராத்திய தளபதி ஏகோஜியின் கைக்கு வந்துவிட்டது. மராத்தியர்கள் நல்ல நிர்வாகிகள் என்பதால் முதலில் தஞ்சாவூர் ராஜ்யத்தில் இருந்த குழப்பங்களையெல்லாம் நீக்கி நல்ல நிர்வாகத்தைத் தொடங்கினர். நீண்ட காலமாக போரினாலும், குழப்பமான அரசியல் சூழ்நிலைகளாலும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தஞ்சாவூர் மக்களுக்கு மராத்தியர்கள் நல்ல நிர்வாகம், அமைதி ஆகியவற்றைக் கொடுத்தது கண்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். 1675இன் தொடக்க காலத்தில் தஞ்சாவூர் மராத்தியர் வசம் ஆனது. சரியாகச் சொல்லப்போனால் 1675 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ஏகோஜி தஞ்சை ஆட்சியை மேற்கொண்டார். (1675 பிப்ரவரி 7ஆம் தேதி என்றும் ஒரு செய்தி தெரிவிக்கிறது.) ஏகோஜி காலத்து தஞ்சாவூர் ராஜ்யம் ஆறு சுபாக்களைக் கொண்டதாக இருந்தது, அவை திருவாடி (திருவையாறு), கும்பகோணம், மாயவரம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, இன்னொன்று வாளும்பட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு நீண்ட நெடிய காலம் தஞ்சை பகுதிகளை ஆண்ட நாயக்க மன்னர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை மராத்தியர்களிடம் இழந்து 1675 முதல் மராத்தியர் ஆட்சி இங்கு நிலை கொள்ளத் தொடங்கிவிட்டது. கடைசி நாயக்க மன்னரான விஜயராகவ நாயக்கர் காலத்தில் போர்த்துகீசியர்களும், டச்சுக்காரர்களும் சோழநாட்டு மண்ணில் காலடிஎடுத்து வைக்கத் தொடங்கிவிட்டனர் என்பதைப் பார்த்தோம். இவர்களில் போர்த்துகீசியர்களுடன் பல போர்களை நாயக்க மன்னர்கள் நடத்திய போதும், ஓரளவு நட்புணர்வுடன் டச்சுக்காரர்களுடன் பழகியிருக்கிறார்கள். டச்சுக்காரர்களுக்கு அவர்கள் வாணிபத்தை இந்த மண்ணில் நடத்திக் கொள்ள நாயக்கர் மன்னர்கள் சில பத்திரங்களை அவர்களுக்கு எழுதித் தந்திருக்கிறார்கள். அவைகளில் ஒன்றை இப்போது பார்ப்போம். அந்தக் கால மொழி நடை, தெலுங்கில் இருந்ததை அவர்களே தமிழிலும் மொழிபெயர்த்திருக்கின்றனர். அது இதோ:

மன்னர் விஜயராகவர் டச்சு கடற்படை தளபதி வான் கோயன்ஸ் என்பாருக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்தின் தமிழாக்கம்.

"திரு சின்னப்ப செட்டி என்பார் நம்மிடம் சில மனுக்களைக் கொடுத்திருக்கிறார். அவற்றின்படி உங்கள் கம்பெனி நாகப்பட்டினம் துறைமுகம் மூலமாக இந்த நாட்டில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கும்படியும், அந்த அனுமதியை ஒரு அரசு ஆணை மூலமாகப் பிறப்பிக்கும்படியும் அவர் கேட்டிருந்தார். அவர் கேட்டுக் கொண்டபடி டச்சுக்காரர்களாகிய நீங்கள் நாகப்பட்டினம் வந்திறங்கி உங்கள் வர்த்தகத்தைத் தொடங்க இதன்மூலம் அனுமதிக்கிறோம். நாகப்பட்டினம் பகுதியில் போர்த்துகீசியர் வசம் இருந்த துறைமுகம், வீடுகள், சரக்குகள் வைக்குமிடங்கள் அனைத்தும் உங்களிடம் வழங்கவேண்டுமென்று ஆணை பிறப்பித்திருக்கிறோம். இவை தவிர கீழ்கண்ட பத்து ஊர்களையும் உங்கள் வசம் ஒப்படைக்கிறோம். அவை, புத்தூர், முட்டம், பொருவளாச்சேரி, அண்டோனிபெட், கருவேப்பங்காடு, அலிஞ்சிலமங்கலம், சங்கமங்கலம், நிருத்தமங்கலம், மஞ்சக்கொல்லை, நரியாங்குடி ஆகியவைகள். இந்த ஊர்கள் ஏற்கனவே போர்த்துகீசியர் வசம் இருந்தவை, இவை தவிர போர்த்துகீசியர்களின் தேவாலயம், தோட்டங்கள் இவையும் அடங்கும். இவைகளை அனுபவித்துக் கொள்ளுவதற்காக நீங்கள் எங்கள் அரசாங்கத்துக்கு ஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும். எங்கள் துறைமுகம் வாயிலாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாகும் துணிமணிகளுக்கும், தானியங்களுக்கும் எந்தவிதமான வரிகளும் விதிக்கப்பட மாட்டாது. எங்கள் கடற்கரையில் தரைதட்டி நிற்கும் கப்பல் உங்கள் உடைமை என்றாலும் எங்களுக்கு அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும். உங்கள் வியாபார கப்பலில் பணம் கையாடல், உடமைகளைத் திருடி கிராமங்களில் பதுங்கியிருப்போரிடமிருந்து அவை பறிமுதல் செய்யப்பட்டு உங்களிடம் அளிக்கப்படும். நீங்கள் எங்கள் ஊர்களில் வியாபாரம் செய்யும் போது பொதுவாக விதிக்கப்படும் சின்னஞ்சிறு வரிகள் உங்கள் விருப்பப்படிக்கு விலக்கு அளிக்கப்படும். இவைகளைக் கருத்தில் கொண்டு நீங்களும் உங்கள் கம்பெனியாரும் எங்களுடன் நட்புறவோடும் விசுவாசத்தோடும் மகிழ்ச்சியோடு உங்கள் வியாபாரத்தைத் தொடரவும், பூமியில் சந்திர சூரியர் இருக்கும் வரை இந்த ஒப்பந்தப்படி வரிகளைச் செலுத்திக் கொண்டு உங்கள் வியாபாரத்தைத் தொடரலாம். ஒப்பம்: விஜயராகவா.

காவிரி நதி பாய்ந்து வளப்படுத்தும் சோழ வளநாட்டை சோழ மன்னர்களைத் தொடர்ந்து பலகாலம் இடைவெளிக்குப் பிறகு விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகள் அரசாண்டதைப் பார்த்தோம். இவர்கள் காலம் தமிழகத்துக்குப் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். இறை பக்தியும், வீரமும், நேர்மையும் இவர்களுடைய மார்க்கமாக இருந்திருக்கிறது. இந்த மண்ணை ஆண்ட இந்த சிறப்பு மிக்க நாயக்க மன்னர்களான சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகிய மன்னர்களைப் போற்றி வணங்குவது ஒன்றே நாம் அவர்களுக்குச் செய்யும் கைமாறாகும். 

                                                            வணக்கம்.

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 16

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 16

தஞ்சையில் விஜயராகவ நாயக்கரின் ஆட்சி காலம்.

1633 முதல் 1673 வரையிலான நாற்பது ஆண்டுகள் விஜயராகவ நாயக்கர் தஞ்சையை ஆண்டு வந்தார். அவருடைய ஆட்சி காலத்தில் அவருக்கு அமைதியே இல்லாமல் போய்விட்டது. எப்போதும் கலகம் சண்டை, எதிரிகள் தொல்லை என்று அவர் அமைதியின்றி ஆட்சிபுரிந்தார். எப்போதும் சண்டை நடந்து கொண்டிருந்ததால் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டது. நாட்டு மக்களில் ஆண்கள் போரில் ஏராளமானோர் இறந்து போனார்கள். ஆட்சிக்கு வந்து சுமார் பத்து வருஷங்கள் அவர் அமைதியாகத்தான் ஆட்சியை கவனித்து வந்தார்.

அவர் நாட்டின் கிழக்குப் பகுதியில் அந்நியர்கள் வந்து குடியேறினர். நாகப்பட்டினத்தில் போர்த்துகீசியர்களும், தரங்கம்பாடியில் டச்சுக்காரர்கள் என்று இங்கெல்லாம் அந்நியர்களின் குடியிருப்பு ஏற்படலாயிற்று. 

'மன்னாருதாசவிலாசம்' எனும் நூலின்படி மன்னர் விஜயராகவ நாயக்கர் ராஜசந்திரா என்பவரின் மகள் காந்திமதி என்பாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மன்னருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார்கள் இருந்ததாகத் தெரிகிறது. 

நீண்ட நெடுங்காலம் தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் முடிவு சோகமான முடிவு. தந்தை ரகுநாத நாயக்கரைப் போலவே இவரும் கலை ஆர்வலர். இவர் வயது முதிர்ந்த பின்னர்தான் போர்க்களத்தில் கொலையுண்டார் எனினும் இவரது வாழ்க்கை சிறப்பானது. தற்கொலைப் படையைப் போல தன் வீட்டுப் பெண்டிரை பலி கொடுத்து அவரும் அவருடைய மகனுமாகப் போர்க்களம் போனார்கள். 

மதுரை சொக்கநாத நாயக்கர்:

மதுரையை ஆண்ட நாயக்கர் வம்சத்தில் முத்து அழகாத்ரி நாயக்கர் என்பவரின் மகன் இந்த சொக்கநாத நாயக்கர். இவர் பதவி ஏற்றுக்கொண்ட சமயம் இவருக்கு வயது 16. அந்த இளம் வயதில் இவர் மதுரையில் இருந்த முசல்மான் படைகளை வெளியே விரட்டிவிட்டார். செஞ்சியின் மீது பெரிய படையொன்றை அனுப்பி அந்த கோட்டையைப் பிடித்துக் கொண்டார். வயதில் இளையவரான மன்னரை ஏமாற்றி இவரது படைத் தலைவர்கள் நன்றாகக் கொள்ளையடித்தார்கள். இவரது நடவடிக்கைகளில் மனம் கசந்த மதுரை வாசிகள் இவருக்கு எதிராகக் கலகம் செய்யவும் முயன்றனர். அப்படி நடந்த கலகத்துக்குத் தலைமை தாங்கியவரும் சொக்கநாதரிடம் படைத்தலைவராக இருந்தவர்தான். இந்த தளபதியின் குட்டு வெளிப்பட்டுவிட்ட நிலையில் மன்னர் இவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்பதற்கு முன்பாக அந்த தளபதி கட்சி மாறி முன்பு விரட்டப்பட்ட முகமதியர் படைகளோடு சேர்ந்து கொண்டுவிட்டார். அவர், தான் சேர்ந்து கொண்ட படையை திருச்சினாப்பள்ளி மீது திருப்பி அதைப் பிடித்துக் கொள்ள ஏற்பாடு செய்தார்.

அந்த துரோகி தளபதிக்கு எதிராகப் போரிட சொக்கநாதர் அனுப்பிய படையின் தளபதியும் மன்னருக்கு எதிராக எதிரிகளோடு சேர்ந்து கொண்டுவிட்டார். இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன சொக்கநாதர் தானே படைத் தலைமையை ஏற்றுக் கொண்டு புரட்சிப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு அவர்களை தஞ்சைக்கும் செஞ்சிக்குமாக விரட்டிவிட்டார்.

சொக்கநாதர் பெற்ற வெற்றி ஓராண்டு கூட நிலைக்கவில்லை. மறு ஆண்டில் தோற்று ஓடிப்போன படைகள் மீண்டும் ஒன்று சேர்ந்து திருச்சினாப்பள்ளியையும், மதுரையையும் சூறையாடிவிட்டுப் போய்விட்டார்கள். போரின்போது அவர்கள் இழைத்த மனிதாபிமானம் இல்லாத கொடுமைகள் சொல்லும் தரமன்று. திருச்சினாப்பள்ளியைப் பிடித்துக் கொண்ட அந்த கும்பலுக்கு சொக்கநாதர் பெருமளவில் செல்வத்தை அள்ளிக் கொடுத்து சமாதானமாகப் போக நேர்ந்தது. இந்த கும்பலின் பின்னணியில் இருந்தவன் சந்தாசாஹேப். இந்த போரில் தனக்கு உதவி செய்ய முன்வராத தஞ்சை நாயக்கர் மீதும், ராமநாதபுரம் சேதுபதி மீதும் சொக்கநாதருக்கு ஆத்திரம். ஆகையால் அவர் ராமநாதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்று வழிநெடுக பல கோட்டைகளைப் பிடித்துக் கொண்டார். இந்தப் போரில் ராமநாதபுரம் மறவர் படைகள் மறைந்திருந்து தாக்கி சொக்கநாதரைப் பின்வாங்கும்படி செய்தது குறிப்பிடத் தக்கது.

ராமநாதபுரத் தாக்குதலை யடுத்து சொக்கநாதரின் பார்வை தஞ்சாவூரின் பக்கம் திரும்பியது. அங்கு வழியில் வல்லம் கோட்டையைத் தாக்கிப் பிடித்துக் கொண்டு தஞ்சையின் மீது போரிட்டு விஜயராகவரை கொடுமையாக வெட்டிக் கொன்றார்கள். அத்தோடு நான்கு மன்னர்கள் மட்டுமே ஆட்சிபுரிந்த தஞ்சை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. விஜயராகவர் போர்க்களத்தில் கொலையுண்டு மாண்டு போவதற்கு முன்பு அவர் வெடிமருந்து வைத்து வெடித்து அரண்மனைப் பெண்களையெல்லாம், சொக்கநாத நாயக்கர் மணம் பேசிய தன்னுடைய மகள் உட்பட அனைவரையும் கொன்றுவிட்டார்.

தான் மணம்புரிய விரும்பிய பெண் மாண்டுபோனதில் சொக்கநாதருக்கு மிகுந்த வருத்தம். அந்தப் பெண் நல்ல அழகி, அதுமட்டுமல்ல நல்ல புத்திசாலிப் பெண். இந்த விவகாரங்கள் எல்லாம் தொடங்குமுன்பாகவே சொக்கநாத நாயக்கருக்கும் இந்தப் பெண்ணுக்கும் ரகசிய காதல் மலர்ந்திருக்கிறது. அந்த ரகசியத்தை அங்கு பணிபுரிந்த வேலைக்காரப் பெண் ஒருத்தி ராஜா விஜயராகவரிடம் சொல்லிவிட்டாள். அதனால் ஆத்திரமடைந்த விஜயராகவர் அந்தப் பெண்ணையும் ஈவு இரக்கம் காட்டாமல் கொன்றுவிட்டார்.

இந்த துயர சம்பவத்துக்குப் பிறகு மதுரை சொக்கநாதரால் அமைதியாக அட்சிபுரிய முடியவில்லை. தினமும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போவார். இறந்து போன பெண்ணின் சாம்பலை அங்கிருந்த நீர்நிலைகளில் தூவினார். சதா அந்த நினைவாகவே காலத்தைப் போக்கினார் சொக்கநாதர்.

தஞ்சையை, அதன் மன்னரைப் போர்க்களத்தில் வெட்டிப் போட்டுவிட்டு ராஜ்யத்தை அபகரித்துக் கொண்ட சொக்கநாதர் தஞ்சையைத் தன் சகோதரன் அழகிரியிடம் கொடுத்து ஆளச் சொல்லிவிட்டு மதுரை வந்துவிட்டார். துயரக் கடலில் வீழ்ந்துவிட்ட சொக்கநாதருக்கு மதுரையையும் சரியாக ஆளமுடியவில்லை, தஞ்சையில் இருந்த அழகிரியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை.

தஞ்சையின் சுதந்திரப் பறவையாக பதவியேற்ற அழகிரிக்கு அங்கு பெரிய சோதனை காத்திருந்தது. போரில் விஜயராகவ நாயக்கர் கொல்லப்பட்டு, அரண்மனைப் பெண்டிர் வெடிமருந்து வைத்து தகர்க்கப்பட்டபோது மரணமடைந்தவர்கள் தவிர ஒரு ராணியும், ஒரு வேலைக்காரியும் ராஜாவின் குழந்தையொன்றோடு தப்பி நாகைப்பட்டினம் சென்றதைப் பார்த்தோமல்லவா? அந்த விஜயராகவரின் மகன் செங்கமலதாஸ் என்பவன் நாகைப்பட்டினத்தில் ஒரு தனவணிகர் வீட்டில் வளர்ந்தான். 


தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 15

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 15

மதுரை நாயக்கர்களின் தஞ்சை மீதான இறுதி யுத்தம்.

1673ஆம் வருஷம் மதுரை சொக்கநாத நாயக்கர் தஞ்சாவூருடனான இறுதி யுத்தத்துக்குத் தயாராகிவிட்டிருந்தார். இதற்கு முன்பு பார்த்த வரலாற்றுப் பின்னணியில் மதுரையும் தஞ்சையும் அடிக்கடி போரில் ஈடுபட்டிருந்தது தெரிகிறது. கடைசியில் மதுரை சொக்கநாத நாயக்கர் இராமநாதபுரம் சேதுபதி விவகாரத்தில் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டிருந்ததால் அப்போது தஞ்சை விஜயராகவ நாயக்கர் எடுத்த போர் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட முடியாமல் போயிற்று. அதோடு தங்கள் வசமிருந்த வல்லம் உள்ளிட்ட பல இடங்களைத் தஞ்சாவூரிடம் இழக்க நேர்ந்தது. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு சொக்கநாத நாயக்கர் இப்போது தஞ்சாவூர் மீது தங்கள் முழு பலத்தையும் உபயோகித்து போருக்குக் கிளம்பிவிட்டார்.

மேற்சொன்ன காரணங்கள் தவிர மதுரை சொக்கநாத நாயக்கருக்கு இன்னொரு சொந்த விஷயமும் இந்த போருக்குக் காரணமாக இருந்தது. சொக்கநாத நாயக்கர் இளைஞன், இவருக்கு தஞ்சை விஜயராகவ நாயக்கரின் பெண்ணைத் திருமணத்துக்குக் கேட்டு தூதர்களை தஞ்சைக்கு அனுப்பினார். ஆனால் தஞ்சையில் விஜயராகவ நாயக்கர் இந்த சம்பந்தத்துக்கு விருப்பமில்லாமல், மதுரையில் பெண் கொடுக்க மறுத்ததோடு தூது வந்தவர்களையும் அவமதித்து விட்டார். தனக்குப் பெண் கொடுக்க மறுத்த விஜயராகவ நாயக்கர் மீது ஏற்பட்ட கோபமும் கூட இந்த படையெடுப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதற்கு முன்புகூட இவ்விரு ராஜ்யங்களுக்கிடையே பெண் கொடுத்தல், திருமணம் செய்தல் இவை நடந்திருக்கின்றன என்று தெரியவருகிறது. விஜயராகவ நாயக்கரின் தந்தையார் ரகுநாத நாயக்கர் மதுரை அரச வம்சத்தில்தான் பெண் எடுத்திருந்தார் என்பதும், மதுரை திருமலை நாயக்கர் தஞ்சை நாயக்கர் வம்சத்து பெண்ணைத் திருமணம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் திருமலை நாயக்கர் திருமணம் செய்துகொண்ட தஞ்சாவூர் ராஜகுமாரி மதுரையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார் என்பதும்கூட இப்போது விஜயராகவ நாயக்கர் தங்கள் பெண்ணை மதுரைக்குக் கொடுக்க மறுத்ததற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் நம்பும்படி இருக்கிறது. 

இப்படியெல்லாம் இவ்விரு ராஜ்யங்களுக்கிடையே திருமண பந்தங்கள் இருந்திருந்தும், இந்த முறை தஞ்சை பெண்ணை சொக்கநாதருக்குக் கொடுக்க மறுக்கக் காரணம் அரசியல் காரணமாகத்தான் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் மதுரை சொக்கநாத நாயக்கருக்கு மைசூர் எதிரியாக இருந்த காரணத்தால், அவர்களை எதிர்க்க விஜயராகவ நாயக்கரின் நட்பு தேவைப்பட்டிருக்கலாம், அதற்காகக் கூட தஞ்சையில் பெண் கேட்டு அவர் தூது அனுப்பியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்த விஷயம் இன்னொரு கோணத்திலும் பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக தஞ்சை நாயக்கர்கள் தங்கள் எஜமானர்களான விஜயநகர பேரரசோடு திருமண பந்தம் உள்ளவர்கள் என்பதால், அப்படிப்பட்ட சக்கரவர்த்தி உறவு எதுவும் இல்லாத மதுரையோடு திருமணம் செய்ய விருப்பமில்லாததும் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. எது எப்படியோ மதுரை சொக்கநாத நாயக்கர் தஞ்சாவூர் மீது படையெடுப்பது உறுதியாகிவிட்டது.

வரலாற்றாசிரியர்கள் மத்தியில் இன்னொரு சந்தேகமும் எழுப்பப்படுகிறது. தஞ்சை ரகுநாத நாயக்கர் நிச்சயம் மதுரை திருமலை நாயக்கருக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்து வைத்திருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். மேலும் அப்படி திருமலை நாயக்கர் தன் மனைவியை, அதாவது தஞ்சை ரகுநாத நாயக்கரின் மகளைக் கொலை செய்திருப்பாரானால், பலம் பொருந்திய ரகுநாத நாயக்கர் அவரை சும்மா விட்டிருப்பாரா என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. திருமலை நாயக்கர் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் ரகுநாத நாயக்கரின் மகள் அச்சுத ரகுனாதாம்பா எனும் பெண் ஒருத்தி ரகுநாத நாயக்கருக்கு இருந்ததா என்ற ஐயப்பாடும் உண்டு.

இவை எல்லாவற்றையும் மீறி, விஜயராகவ நாயக்கர் வல்லத்தை மீண்டும் 1664இல் மீட்டெடுத்தது மதுரை நாயக்க மன்னரின் கெளரவத்தை பாதித்துவிட்டதால் இந்த யுத்தத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வல்லத்தை மட்டுமல்ல, முந்தைய போரில் தாங்கள் இழந்த அனைத்தையும் விஜயராகவர் மீட்டுவிட்டது மட்டுமல்லாமல், முன்னர் ஒப்புக்கொண்டபடி மதுரைக்கு கப்பம் கட்டவும் தஞ்சாவூர் மறுத்து விட்டதும் காரணமாக இருக்கலாம். 

சொக்கநாத நாயக்கர் மதுரை ராஜ்யத்தின் தளவாய் வேங்கடகிருஷ்ணப்ப நாய்க்கர், பேஷ்கார் சின்னத்தம்பி முதலியார் ஆகியோர் தலைமையில் மதுரை படைகளைத் தஞ்சையின் மீது தாக்குதல் நடத்த அனுப்பி வைத்தார். இவர்களோடு கன்னிவாடி எனுமிடத்தின் பாளையக்காரர் சின்ன கத்திரி நாயக்கர் என்பாரும் சேர்ந்து கொண்டார். இப்படி மதுரை படைகள் தங்கள் மீது தாக்குதல் நடத்த வந்து கொண்டிருக்கிறது என்கிற செய்தியைக் கேள்விப்பட்ட விஜயராகவ நாயக்கர் தஞ்சாவூர் படைகளை உடனே மதுரை படைகளை எதிர்கொண்டு வழிமறித்து அவர்கள் தஞ்சைக்கு வருவதறேகு முன்பே தாக்குதல் நடத்தும்படி ஆணை பிறப்பித்து அனுப்பி வைத்தார். ஆனால் வேங்கடகிருஷ்ணப்ப நாயக்கரின் மதுரைப் படை தஞ்சை படைகளைத் தோற்கடித்துவிட்டு வல்லம் கோட்டையைப் பிடித்துக் கொண்டது. வல்லத்தைப் பிடித்த சூட்டோடு தஞ்சை கோட்டையையும் நெருங்கி வந்து முற்றுகையிட்டது. 

நடந்த நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்ட விஜயராகவர் தஞ்சை கோட்டைக்குள் இருந்த தங்கள் படைகளையெல்லாம் ஒன்றுதிரட்டிக் கொண்டு வேங்கடாத்ரி நாயக்கர் தலைமையில் கோட்டைக்கு வெளியே வந்து மதுரை படைகளோடு கடுமையாகப் போராடினார். எனினும் வெற்றி மதுரை படைகளுக்கே கிடைக்க, விஜயராகவரின் படைகள் பலத்த சேதத்தைச் சந்திக்க நேர்ந்தது. இந்த யுத்தம் பற்றி இன்னொரு செய்தியும் சொல்லப்படுகிறது. மதுரை தளபதி வேங்கடகிருஷ்ணப்ப நாயக்கர் விஜயராகவ நாயக்கருக்கு தூது அனுப்பி சில நிபந்தனைகளை விதித்து அவற்றுக்குக் கட்டுப்படுவதானால் அமைதி ஒப்பந்தம் செய்தி கொள்ளலாம் என்பதைத் தெரிவித்ததாகவும், விஜயராகவர் அதனை ஏற்காமல் போர் செய்ய முற்பட்டு படைகளுக்குத் தானே தலைமை ஏற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் போர் தொடங்கும் சமயத்தில் மன்னர் விஜயராகவ நாயக்கரின் குமாரன் மன்னாருதாஸ் என்பவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். தஞ்சையை ஆண்டுவரும் மன்னின் குமாரன் சிறையிலா? திகப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அவன் மீது குற்றம் சுமத்தப்பட்டதால், தன் மகன் தானே என்று புத்திரபாசம் காரணமாக அவனுக்கு ஒரு தொல்லையும் கொடுக்காமல் இருந்திருக்கலாம் மன்னர். ஆனால் விஜயராகவ நாயக்கர் நீதிநெறி தவறாமல் ஆட்சிபுரிந்தமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தன் மகனே ஆனாலும், தன் மகனைத் தேர்க்காலில் இட்டு தண்டனை கொடுத்த மனுநீதிச் சோழன் ஆண்ட தேசமல்லவா இது. அந்த ராஜகுமாரன் மீது எழுந்த குற்றச்சாட்டுதான் என்ன? பார்ப்போம்.

முனைவர் சிவ.சீதளா எனும் பேராசிரியர் "நாயக்கரின் நாட்டாண்மை" என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிடும் செய்தி இது. தஞ்சை விஜயராகவரின் மகன் இளவரசன் மன்னாருதாசன் தஞ்சையிலிருந்து புறப்பட்டு வெளியூர் சென்றுகொண்டிருந்தான். அப்படி அவன் சென்றது புதுக்கோட்டை செல்லும் பாதை. வழியில் தாகம் எடுத்ததால் இளவரசன் வழியிலிருந்த ஒரு நீர்ச்சுனைக்குச் சென்றானாம். அப்போது அங்கு சில பெண்கள் இருப்பதையும், அதில் ஒருத்தியின் பேரெழிலில் இளவரசன் மயக்கம் கொண்டதாகவும் தெரிகிறது. அப்போது அவ்விருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்ததாம். அந்தப் பெண்ணின் பெயர் மங்களாம்பிகை, தஞ்சை நாயக்க மன்னர்களின் அமைச்சர் கோவிந்த தீக்ஷிதரின் பெண் அவள். இவ்விருவரின் காதலை அறிந்து கொண்ட அரண்மனை ராயசம் வெங்கண்ணா என்பவர் இதனை அமைச்சர் கோவிந்த தீக்ஷதரிடம் சொல்ல, அவர் மகாராஜா விஜயராகவ நாயக்கரின் காதுகளில் போட, இந்த அபவாதம் நீங்க மன்னர் தன் மகன் மன்னாருதாசனைச் சிறையில் அடைத்ததாக அதில் குறிப்பிடப்படுகிறது.

அந்த மன்னாருதாசனை விடுவித்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு விஜயராகவ நாயக்கர் போர்க்களம் செல்கிறார். அப்போது மன்னர் அக்கிராஜு எனும் தன்னுடைய பணியாளிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப் போர்க்களம் செல்கிறார். போரில் விஜயராகவர் கொல்லப்பட்டால் உடனடியாக அரண்மனை அந்தப்புரத்தை வெடிமருந்து வைத்துத் தகர்த்துவிட வேண்டும். அரண்மனைப் பெண்டிர் எவரும் எதிரிகள் கையில் அகப்பட்டுவிடக் கூடாது என்பது கட்டளை.

போர் கடுமையாக நடந்தது; போர்க்களத்தில் விஜயராகவ நாயக்கரின் படை தோல்வி முகத்தில் இருக்கும்போது மதுரை தளபதி வேங்கடகிருஷ்ணப்ப நாயக்கர் தஞ்சை ராஜகோபாலசாமி கோயில் வாசலில், வடக்கு வீதிக்கு அருகில் விஜயராகவரோடு போரிட்டுக்கொண்டே அவர் தலையை வெட்டி விடுகிறார். உயிர் போன மன்னரின் உடல் தரையில் விழுந்த செய்தி அரண்மனையை எட்டியவுடனேயே முன்னமே தீர்மானித்திருந்தபடி அரண்மனை அந்தப்புரத்தை அக்கிராஜு வெடிவைத்துத் தகர்த்துவிட்டான். அதில் உள்ளே இருந்த அத்தனை பேரும், மதுரை சொக்கநாத நாயக்கர் திருமணம் செய்துகொள்ள விரும்பிய இளவரசி உட்பட அனைவரும் உயிரிழந்தனர். அதிலும் தப்பிப் பிழைத்தவர்கள் மூவர் இரு பெண்கள், ஒரு குழந்தை. அந்தக் குழந்தை மன்னரின் வாரிசு இளவரசனாக வளர்ந்த குழந்தையொருவன்.

தஞ்சை ராஜ்யம் மதுரையோடு இணைக்கப்பட்டது. சொக்கநாதரின் ஒன்றுவிட்ட தம்பி அழகிரி நாயக்கர் தஞ்சைக்கு மன்னராக முடிசூட்டி வைக்கப்பட்டார். 1673ஆம் ஆண்டு விஜயராகவ நாயக்கர் போர்க்களத்தில் கொல்லப்பட்டதோடு தஞ்சை நாயக்கர்கள் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது.


தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 14

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 14

மீண்டும் விஜயராகவ நாயக்கர் ஆட்சி

இதற்கிடையில் மதுரையில் முத்துவீரப்ப நாயக்கர் இறந்து அவருக்குப் பின் சொக்கநாத நாயக்கர் 1659ஆம் வருஷம் ஜூலையில் பதவிக்கு வந்தார். இந்த சொக்கநாதர் பதவிக்கு வந்ததும் மீண்டும் மதுரைக்கும் தஞ்சைக்குமான விரோதம் தலைதூக்கி ஆடத் துவங்கியது. சொக்கநாதர் பதவிக்கு வந்தபோது அவருக்கு வயது 16. அதனால் அவருடைய பிரதானி, ராயஸம், தளவாய் ஆகியோர் கூட்டாக ராஜ்யத்தை நிர்வாகம் செய்து வரலாயினர். இப்படிப்பட்டவர்கள் வாய்ப்பு கிடைத்தால் சும்மா இருப்பார்களா? ராஜாவோ சின்ன பையன், தங்களால் இயன்றவரை செல்வத்தைக் கொள்ளையடித்துப் பங்கு போட்டுவிடலாம் என்று முடிவு செய்தனர்.

மைனர் ராஜா சொக்கநாதனுக்கு நல்லது செய்வதைப் போல இந்த பிரதானி, ராயஸம், தளவாய் ஆகியோர் ஒரு யோசனை சொன்னார்கள். மதுரை படைகளை அனுப்பி பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்களின் படைகளோடு போரிட்டு அவர்களை விரட்டிவிடலாம் என்று. மன்னரும் சிறு வயதினர் தானே, அமைச்சர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு லிங்கம நாயக்கர் என்பவர் தலைமையில் நாற்பதினாயிரம் வீரர்களை அனுப்பி சுல்தானின் படைகளையும், அதன் தளபதிகளான ஷாஜி, மூலா எனும் முஸ்தாபா கான் ஆகியவர்களையும் விரட்டியடிக்க அனுப்பி வைத்தான். அப்போது அவர்கள் செஞ்சியில் முகாமிட்டிருந்தனர். அந்த சுல்தான் படைகளை விரட்டியடிக்க அனுப்பப்பட்ட லிங்கம நாயக்கர் எதிரிகளிடமே கையூட்டு வாங்கிக் கொண்டு போரிடாமல் திருச்சினாப்பள்ளியில் தங்கிக் கொண்டு காலம் தாழ்த்திக் கொண்டிருந்தார். 

இந்த சூழ்நிலையில் மதுரையில் சொக்கநாதருக்கு ஆலோசனை சொல்லுமிடத்தில் இருந்த பிரதானியும் ராயஸமும் (இவை பதவிகள்) ஒரு சூழ்ச்சியில் இறங்கினர். இந்த சொக்கநாதரை எமனுலகம் அனுப்பிவிட்டு அவனுக்கும் இளையவனான அவன் ஒன்றுவிட்ட தம்பியைப் பதவியில் அமர்த்திவிட்டால், தாங்களே எல்லா சுகங்களையும் அனுபவிக்கலாம் என்பது அவர்கள் திட்டம். இவ்விருவரின் திட்டத்தைத் தெரிந்து கொண்டாள் அரண்மனைப் பெண் ஒருத்தி. அவள் ராஜாவுக்கும் மதுரை ராஜ்யத்துக்கும் விசுவாசமுள்ளவள் என்பதால் இவ்விரு அமைச்சர்களின் சூழ்ச்சியை ராஜா சொக்கநாதரிடம் போட்டுக் கொடுத்து விட்டாள். இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் சொக்கநாதர் சிறிதுகூட தாமதிக்காமல் நடவடிக்கை எடுத்தார். அமைச்சர்களில் ஒருவரான பிரதானியின் இரு கண்களும் குருடாக்கப்பட்டன. ராயஸம் பதவி வகித்தவர் கொல்லப்பட்டார். இந்த துர்மந்திரிகளின் மரணத்தையடுத்து சொக்கநாதரே நேரடியாக ராஜ்ய பரிபாலனத்தைக் கவனிக்கத் தொடங்கினார். 

பதவி ஏற்றுக் கொண்ட சொக்கநாதருக்குத் தான் ஏற்கனவே செஞ்சிக்கு நாற்பதினாயிரம் படைவீரர்களுடன் சுல்தான் படைகளை விரட்டியடிக்க லிங்கம நாயக்கரை அனுப்பினோமே, அவர் என்ன ஆனார்? ஏன் போரிடவில்லை, என்ன நடக்கிறது அங்கே என்று விசாரித்து ஓரளவு நடந்தவைகளைத் தெரிந்து கொண்டுவிட்டார். இந்த நிலையில் லிங்கம நாயக்கரை விரோதித்துக் கொண்டால் நமக்கு ஆபத்து நேரலாம் என்பதை உணர்ந்த புத்திசாலியான சொக்கநாதர் ஒரு தந்திரம் செய்தார். அந்த லிங்கம நாயக்கருக்கு செய்தி அனுப்பி, அவர் நலனில் அக்கறை கொண்டவர் போல, அவரைத் திரும்பவும் ஊருக்கு அழைத்து உறவு கொண்டாடுவது போல நடித்து, அவர் இங்கு வந்ததும் ஆளைத் தீர்த்துவிட எண்ணி அவருக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பில் ஏதோ சூது இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட லிங்கம நாயக்கர் சாமர்த்தியமாக கட்சி தாவி, திருச்சினாப்பள்ளியிலிருந்து தப்பித்துச் சென்று செஞ்சியில் இருந்த எதிர்கட்சி தளபதியான ஷாஜியோடு சேர்ந்து கொண்டுவிட்டார்.

இந்த சின்ன பையன் சொக்கநாதனுக்கு இத்தனை சாமர்த்தியமா என்று எண்ணிக்கொண்டு அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க எண்ணி லிங்கம நாயக்கர் தன்னுடன் இருந்த குதிரைப்படை வீரர்களில் பன்னிரெண்டாயிரம் பேரை அழைத்துக் கொண்டு போய் திருச்சினாப்பள்ளியை முற்றுகையிட்டார். இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த தஞ்சை நாயக்கர் விஜயராகவர், எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் எனக் கருதிக் கொண்டு லிங்கம நாயக்கருக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதில் லிங்கம நாயக்கர் மதுரையைத் தாக்கி போரிடுவதானால் தானும் தஞ்சாவூர் படைகளை அவருக்கு உதவிக்கு அனுப்புவதாக வாக்களித்தார். 

இந்த சூழ்நிலையில் திருச்சினாப்பள்ளி முற்றுகை லிங்கம நாயக்கர், விஜயராகவர் படைகளின் கூட்டு முயற்சிக்கு வெற்றி அளிக்கும் போல இருந்தது. அப்படி திருச்சினாப்பள்ளியைப் பிடித்துவிட்டால், சொக்கநாதரை உயிரோடு பிடித்துவிட வேண்டும், அப்பாடா ஒரு எதிரி ஒழிந்தான் என்று நிம்மதியாக இருக்கலாம் என்று விஜயராகவர் கனவு கண்டுகொண்டிருந்தார். தன்னுடைய அமைச்சர்கள், பிரதானி, ராயஸம் போன்றவர்களின் சூழ்ச்சிகள் பற்றி தெரிந்து கொண்ட சொக்கநாதர் படை தளபதி பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டு போரிடலானார். ஷாஜியையும், லிங்கமனையும் தீரமாக எதிர்த்தார். போரில் சொக்கநாதர் கரங்கள் வலுப்பெற்று எதிரி படைகள் தோற்றுக் கொண்டிருந்தன. வேறு வழியில்லாமல் மதுரையின் எதிரிகள் தஞ்சாவூருக்கு பின்வாங்கி வந்து சேர்ந்தனர். தன் படைகள் வெற்றி மேல் வெற்றியைக் குவிக்கும் மனோ நிலையில் இருப்பதை புரிந்து கொண்டு சொக்கநாதர் தன் படைகளைத் தஞ்சாவூர் மீது ஏவினார். தஞ்சையில் இருந்து கொண்டு ஷாஜிக்கும் லிங்கமனுக்கும் உதவி செய்து கொண்டிருக்கும் விஜயராகவ நாயக்கருக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க வேகம் கொண்டார் சொக்கநாதர். வழக்கம் போல் தான் தோற்போம் எனும் நிலைமை வந்ததும் விஜயராகவ நாயக்கர் எதிரியிடம் பரிபூரண சரணாகதி அடைந்து விட்டார். அவருடைய கூட்டாளிகளான ஷாஜியும், லிங்கமரும் செஞ்சிக்கு ஓடிவிட்டனர். இந்த செய்திகள் எல்லாம் 1662இல் வெளிநாட்டு மிஷனரிகளின் கடிதங்கள் மூலம் தெரிய வருகின்றன. சொக்கநாதரின் தஞ்சை படையெடுப்பு 1661இல் நடந்திருக்கலாம் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
ராஜ்யத்தில் குழப்பம்

இப்படி விஜயராகவ நாயக்கர் காலத்தில் தஞ்சாவூர் ராஜ்யத்தில் நடைபெற்ற சண்டை சச்சரவுகள் காரணமாக ராஜ்யமே குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. அதன் விளைவுகளும் மக்களை அதிகமாக பாதித்திருந்தது. பெரும்பாலான மக்கள் இடம் பெயர்ந்து வெவ்வேறு இடங்களைத் தேடி குடியேறத் தொடங்கினார்கள். மக்களின் துயரைத் துடைக்க வழி தெரியாமல் விஜயராகவ நாயக்கர் சங்கடப்பட்டு வாழ்ந்தார். படையெடுப்புகள் நிகழ்த்திய கோரம் போதாதென்று அப்போது ஏற்பட்ட கொடிய பஞ்சமும் மக்களின் உயிர்களை பலி கொண்டன. உணவு கிடைக்காமல் மக்கள் தவிக்கத் தொடங்கினர். 

இப்படி மக்கள் வருந்திக் கொண்டிருக்கும் நேரத்தில் தஞ்சை மண்ணில் காலடி எடுத்து வைத்திருந்த அன்னிய நாட்டு வாணிபக் கம்பெனிகள், குறிப்பாக டச்சுக்காரர்கள் ஒரு தந்திரம் செய்தனர். தங்களிடம் ஏராளமான உணவுப் பொருட்கள் இருக்கின்றன, வாருங்கள், வயிறார சாப்பிடுங்கள் என்று அழைத்துச் சென்று தங்கள் கப்பலில் ஏற்றி, அவர்களை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று அடிமைகளாக விற்கத் தொடங்கினர். 

விஜயராகவ நாயக்கர் மதுரை சொக்கநாதரிடம் சரண் அடைந்த பின்னர் சொக்கநாத நாயக்கர் ஊர் திரும்பி விட்டார். தஞ்சை மக்களும் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஊரும், மக்களும் அமைதியாக வாழ முற்பட்ட நேரத்தில் விஜயராகவ நாயக்கருக்கு மட்டும், தான் பட்ட அவமானத்தைத் துடைக்க மீண்டும் மதுரை மீது படையெடுத்து பழிவாங்க வேண்டுமென்கிற உணர்வு இருந்து வந்தது. ஆனால் அடிபட்டு ஓய்ந்து வீழ்ந்து கிடக்கும் இந்த நிலையில் தான் மட்டும் எதுவும் மதுரைக்கு எதிராக செய்ய முடியாது என்பதால் தக்க துணை வரும் என்று காத்திருந்தார் விஜயராகவர். அப்போதுதான், அதாவது 1663இல் பீஜப்பூர் சுல்தானின் தளபதியொருவன் தென்னகத்தின் மீது படையெடுத்து வந்து கொண்டிருந்தான். அவன் திருச்சினாப்பள்ளி கோட்டையை முற்றுகையிட்டான். தான் பட்ட அடி, அவமானங்கள் இவை அத்தனையையும் மறந்து விஜயராகவர் அந்த பீஜப்பூர் படைகளுக்கு உதவிகளைச் செய்தார். இப்படி பீஜப்பூரும் தஞ்சாவூரும் சேர்ந்து முற்றுகை இட்டும் திருச்சி விழவில்லை என்றதும் பீஜப்பூர் தளபதி சொக்கநாதருக்கு ஒரு தூது விட்டான். தங்களுக்கு இழப்பீடு கொடுத்து விட்டால் தான் திரும்பிச் சென்றுவிடுவதாகச் சொன்னான். இது நல்ல சந்தர்ப்பம் என்று பீஜப்பூர் தளபதிக்கு நஷ்ட ஈடு கொடுத்து அவனைத் திருப்பி அனுப்பிவிட்டு, தஞ்சாவூர் நாயக்கரை பழிவாங்க சமயம் பார்த்துக் கொண்டு காத்திருந்தார் சொக்கநாதர்.

பீஜப்பூர் படைகள் திரும்பிப் போகும்வரை காத்திருந்துவிட்டு மதுரை சொக்கநாதர் படைகள் தஞ்சை மீது மீண்டும் படையெடுத்து வந்தது. வல்லமை பொருந்திய மதுரைபடைகள் வல்லம் கோட்டையைப் பிடித்துக் கொண்டு ஊருக்குள் நுழைந்தது. விஜயராகவ நாயக்கர் இந்த திடீர் படையெடுப்பை எதிர்பார்க்கவில்லை. வேறு வழியில்லாமல் சொக்கநாத நாயக்கரிடம் அவர்கள் கேட்டதைக் கொடுத்து சமாதானத்தை விலைகொடுத்து வாங்கிக் கொண்டார். முன்பு அச்சுத ராயர் காலத்தில் மதுரை நாயக்கர் வசம் இருந்த வல்லத்தை தஞ்சை வாங்கிக் கொண்டு திருச்சினாப்பள்ளியை அவர்களுக்குக் கொடுத்திருந்தனர். அப்போது மதுரை நாயக்கர்கள் இழந்த வல்லத்தை இந்த முறை போரிட்டு மீட்டுக் கொண்டுவிட்டனர். இந்த நிகழ்ச்சி 1663இல் நடந்திருக்கலாம் என்கின்றனர் வரலாற்றாளர்கள்.

இதற்கு அடுத்த வருஷமே தஞ்சை விஜயராகவ நாயக்கர் தன்னுடைய படைகளை வலுப்படுத்திக் கொண்டு மதுரையிடம் இழந்த இடங்கள் அனைத்தையும், வல்லம் உட்பட அனைத்து பிரதேசங்களையும் மீட்டுக் கொண்டுவிட்டார். மதுரை நாயக்கர்கள் ஐரோப்பிய கம்பெனிக்காரர்களிடம் உதவி கேட்டு தூது அனுப்பினார், ஆனால் அவர்கள் தாங்கள் வியாபாரத்துக்காக வந்திருப்பதால் இங்கு நடக்கும் போர்களில் எந்த பக்கத்திலும் சேர்வதில்லை என்பதில் அப்போது உறுதியாக இருந்தனர். மதுரை நாயக்கர்கள் இப்படி தஞ்சாவூர் படைகளிடம் தோற்பதற்கு ஒரு காரணம் இருந்தது. அப்போது ராமநாதபுரம் மறவர் ஆட்சியில் ஏற்பட்ட குழப்பங்களைத் தீர்ப்பதில் சொக்கநாதர் ஈடுபட்டிருந்ததால் தஞ்சையை வெற்றிபெற முடியாமல் போயிற்று. குழந்தைகள் விளையாடும் ஏற்றப் பலகை (Seesaw) விளையாட்டு போல வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. ஆனால் மதுரை மட்டும் நல்லதொரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அடுத்த முறை தஞ்சைக்குக் கொடுக்கும் அடி, அவர்கள் எழுந்திருக்க முடியாத அடியாக அமைய வேண்டுமென்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர்; அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள்.


தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 13

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 13

பாமினி சுல்தான்கள் தெற்கே படையெடுப்பு.

இதற்கிடையே பீஜப்பூர், கோல்கொண்டா படைகள் செஞ்சியை முற்றுகையிட்டு அதனைப் பிடித்துக் கொண்டு அந்த வெற்றியின் சூடு ஆறுவதற்கு முன்பாக தஞ்சையின் மீதும் மதுரையின் மீதும் படையெடுத்து வந்தன. இதனால் திகைத்துப்போன விஜயராகவ நாயக்கர் தனது ராஜ்யத்தின் அடர்ந்த காட்டுக்குள் சென்று தங்கிக் கொண்டு நேரடியான மோதலில் இருந்து தப்பித்துக் கொண்டார். ஆனாலும் அவருடைய ராஜ்யத்தினுள் புகுந்த சுல்தான் படைகள் நாட்டை சூரையாடத் தொடங்கியபோது, மக்கள் நாலா புறமும் அச்சத்தோடு ஓடும்போது மக்களைக் காக்கும் பொருட்டு மறைவிலிருந்து விஜயராகவர் வெளிவர வேண்டியதாகி விட்டது. மன்னர் விஜயராகவ நாயக்கருக்கு வேறு வழியில்லை, ஏராளமான சேதங்களைத் தவிர்க்கும் பொருட்டு எதிரியிடம் சரணாகதி அடைந்து அவர்கள் கேட்ட அளவுக்குப் பொன்னும் பொருளும் அவர்களுக்குக் கொடுத்து அமைதியை விலைகொடுத்து வாங்க நேர்ந்தது. 1646இல் ஏற்பட்ட இந்த தலைக்குனிவு தஞ்சைக்கும் விஜயராகவ நாயக்கருக்கும் பெருத்த இழப்பாக ஆகிப்போனது.

விஜயநகர சாம்ராஜ்யம் வலுவிழந்து போனது, மதுரையும் மைசூரும் எதிரிகளாக ஆகிப் போனது, தஞ்சை ராஜ்யம் கோல்கொண்டா சுல்தானுக்கு அடிமைப்பட்டுப் போய் அவமானப்பட்டது ஆகிய காரணங்களால் விஜயராகவ நாயக்கர் செய்வதறியாது திகைக்கவேண்டியதாகி விட்டது. இந்த காலகட்டத்தில் மதுரையில் 1659இல் திருமலை நாயக்கர் காலமாகி முத்து வீரப்ப நாயக்கர் பதவி ஏற்றார். இவர் தன்னுடைய ராஜ்யத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாத்திட எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். சுல்தான்கள் படையெடுப்புகளை எதிர்த்திட ஆயத்தங்களைச் செய்துகொண்டார். அதற்காகத் திருச்சிராப்பள்ளி கோட்டையை நன்கு வலுப்படுத்திக் கொண்டார். பீஜப்பூர் சுல்தான் கப்பம் கட்டச் சொன்னபோது அப்படிச் செய்ய மறுத்துவிட்டார் முத்து வீரப்ப நாயக்கர். ஆயினும் தஞ்சைக்கும் மதுரைக்கும் இருந்த விரோதம் மட்டும் அப்படியே இருந்து கொண்டிருந்தது.

இப்படி தெற்கே இருந்த நாயக்க மன்னர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையின்றியும், போட்டி பொறாமை கொண்டு பிரிந்து கிடந்ததைப் பார்த்த பீஜப்பூர், கோல்கொண்டா சுல்தான்கள் சசோகி என அழைக்கப்பட்ட ஷாஜி, மூலா எனப்படும் முஸ்தாஃபாகான் ஆகிய இரு படைத் தலைவர்கள் தலைமையில் தங்கள் படைகளைத் தெற்கே அனுப்பி வைத்தனர். திருச்சிக்கு வந்த சுல்தான் படைகள் திருச்சி கோட்டை வலுவாகப் பாதுகாக்கப்பட்டு வருவதையும் அதனை வெல்வது அத்தனை சுலபமல்ல என்பதைப் புரிந்துகொண்டு அங்கு காத்திருந்து பயனில்லை என்று கிழக்கே திரும்பி தஞ்சையின் மீது படையெடுத்து வந்து தாக்கினார்கள்.

இப்படித் திடுதிப்பென்று சுல்தான் படைகள் தஞ்சை மீது படையெடுத்து வரும் என்பதை எதிர்பார்க்காத விஜயராகவ நாயக்கர் போரைத் தவிர்க்கும் பொருட்டு தன் மருமகனிடம் தஞ்சை கோட்டையை ஒப்புவித்துவிட்டு வல்லத்துக்குச் சென்று மறைந்து கொண்டுவிட்டார். இந்த நிகழ்ச்சி நடந்த காலம் 1659 மார்ச் மாதம் 19ஆம் தேதி. தஞ்சை கோட்டை முற்றுகைக்கு ஆளான விவரம் குறித்து சில சரித்திர ஆசிரியர்கள் கூறும் செய்திகள் மனதுக்கு மிகவும் வருத்தத்தை உண்டாக்கும் விதமாக இருக்கின்றன. 

தஞ்சாவூர் கோட்டை பல ஆண்டுகளாக மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. எதிரிகளின் படையெடுப்பையும் முற்றுகையையும் பல மாதங்கள் சமாளிக்கக்கூடிய வகையிலும், எதிரிகளால் சுலபமாக வெல்ல முடியாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு கோட்டைக் காவலுக்கு என ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படை வீரர்கள் பலகாலம் பயிற்சி அளிக்கப்பட்டு எந்த சூழ்நிலையையும் எதிர்த்துப் போரிடும் வல்லமை பெற்றவர்களாகவும், மன உறுதி உள்ளவர்களாகவும் இருந்தனர். முற்றுகை இட்டிருக்கிற சுல்தான் படைகளிடம் ஒரு பீரங்கிகூட கிடையாது. அப்படியிருக்கும்போது இந்த முற்றுகையை பலம் பொருந்திய தஞ்சைப் படை மிக எளிதாக முறியடித்திருக்க முடியும். ஆனால்.... என்ன நடந்தது? 

கோட்டை முற்றுகையிட்டிருந்த சமயம் விஜயராகவ நாயக்கரின் மருமகன் அந்த கோட்டையின் தளபதி வீரமாக கோட்டையின் மீதேறி சுற்றிலும் நிற்கும் எதிரிகள் கூட்டத்தை ஒருமுறை பார்த்தார். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு அம்பு அவர் மீது பாய்ந்து குத்திட்டு நின்றது. உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை, எனினும் சிறிது காயம் ஏற்பட்டுவிட்டது. அந்த அம்பைப் பிடுங்கி எறிந்துவிட்டுத் தன் படைகளுக்கு எதிரிகளைத் தாக்க உத்தரவு இடுவதற்கு பதிலாகத் தன்மீது அம்பு பாய்ந்தவுடன் அவரிடம் இருந்த வீரமெல்லாம் ஓடிப்போன நிலையில் அந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டார்.

அங்கு போரிட கூடியிருந்த வீராதி வீரர்களும் சிற்றரசர்களும் இவரது செய்கையைக் கண்டு அவமானப் பட்டனர். கோட்டை காவலுக்கு இருந்த வீராதி வீரர்கள் அனைவருமே உள்ளூர் வாசிகள்; போரைக் கண்டு அஞ்சக்கூடியவர்கள் அல்ல; உயிரை திரணமாக மதித்து எப்பேற்பட்ட யுத்தத்திலும் வெற்றி கொள்ளும் உள்ளத் திண்மையுடையவர்கள். அவர்களுக்குக் கத்தி, கேடயம், வேல், அம்பு இவைகளைக் கையாளும் திறமை மிக்கவர்கள். அப்போதுதான் அறிமுகமாயிருந்த துப்பாக்கியையும் சுடத் தெரிந்தவர்கள். இப்படியிருக்கும்போது போரில் தலைமை தாங்கி நடத்துவோர் ஓடிப்போன பின்பு படைவீரர்கள் என்ன செய்வார்கள் பாவம். கோட்டை எதிரிகளின் வசம் வீழ்ந்தது. மிகச் சுலபமாக சுல்தான் படைகள் தஞ்சை கோட்டையைப் பிடித்துக் கொண்டார்கள். ஆனால் பரிதாபம், தஞ்சைப் படையின் வீரமிக்க ஏராளமான உண்மையான வீரர்கள் செத்து வீழ்ந்தார்கள். சுல்தான்களின் படைகளுக்குத் தலைமை தாங்கி வந்த இரு தளபதிகளும் இந்த சுலபமான வெற்றியைக் கண்டு உத்சாகம் அடைந்தார்கள். இதோடு விட்டுவிடக் கூடாது என்று தஞ்சையிலிருந்து கிழக்கே சில கல் தூரத்திலிருந்த மன்னார்கோயில் (மன்னார்குடி) கோட்டையைத் தாக்கி அதனையும் பிடித்துக் கொண்டார்கள். இந்த வெற்றியால் மேலும் மனமகிழ்ச்சியடைந்த சுல்தான்கள் படைவீரர்கள் தஞ்சைக்கு தென்கிழக்கே இருந்த வல்லம் கோட்டையைச் சென்றடைந்து முற்றுகை இட்டார்கள். 

வல்லம் கோட்டை

இந்த வல்லம் கோட்டை சற்று மேட்டுப் பாங்கான பகுதியில் அமைந்திருந்தது. சிறிய குன்றுபோல காட்சியளித்த அந்த மேட்டின் மீது இருந்த கோட்டை பலமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது. அங்குதான் தஞ்சாவூர் ராஜா விஜயராகவ நாயக்கர் ஏராளமான செல்வங்களுடன் தனது மனைவிமார் குடும்பத்தார் சகிதம் வல்லம் அரண்மனையில் வந்து தங்கியிருக்கிறார் என்ற செய்தி சுல்தான் படைகளுக்குக் கிடைத்தது. இந்த கோட்டை அமைந்திருந்த இடம், அதனைச் சுற்றியிருந்த புலிவார்டு (அலங்கம்) பகுதிகள் இவை அத்தனை சுலபத்தில் பிடித்துவிடக் கூடியதாக இருக்கவில்லை. இதனை சுல்தான் படைகளும் நன்கு அறிந்திருந்தன. 

வல்லம் கோட்டையினுள் தங்கியிருந்த விஜயராகவ நாயக்கருக்கு வேறு வழியில்லை. எப்படியாவது இந்த கோட்டையைக் காப்பாற்றினால்தான் தன்னுடைய ராஜ்யமும், ஏராளமான செல்வமும், தனது பெண்டு பிள்ளைகளும் தப்பிக்க முடியும் என்பதால் வீரத்தோடு கோட்டையைக் காக்க போருக்குத் தயாரானார். ஆனால் போர் நெருங்கி வரும் நேரம் அவருடைய எண்ணம் உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கவும், ஏராளமான பொன் பொருள் ஆகியவற்றைக் காக்கவும் விரும்பினார். தன்னை நம்பியிருந்த குடும்பத்துப் பெண்களும், உறவினரும், வல்லம் மக்களும் இந்தப் போரினால் அதிகமாகப் பாதிக்கப்படக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டு வல்லத்தை விட்டு வெளியேறி அருகிலிருந்த காட்டுக்குள் சென்று விட்டார். (அந்த பகுதியைத் தாளவராயன் என்கின்றனர், அது எங்கு இருக்கிறது அதன் இப்போதைய பெயர் என்ன என்பது தெரியவில்லை). 

கோட்டையைக் காவல் காத்த வீரர்கள் தங்கள் தலைவர் கோட்டையைவிட்டுச் சென்றுவிட்ட பின் எப்படி போராடுவது என்று தயங்கியிருந்த நேரத்தில் சுல்தான் படைகள் அவர்களை வீழ்த்திவிட்டுக் கோட்டையையும் பிடித்துக் கொண்டனர். மீதமிருந்த வீரர்கள் மெல்ல மெல்ல தங்கள் இடத்திலிருந்து ஓசையின்றி விலகிச் சென்றுவிட்டனர். அணுவளவு எதிர்ப்புமின்றி வல்லம் கோட்டை சுல்தான் படைகள் வசம் வந்துவிட்டது. இதனால் தஞ்சைப் படைகளுக்கு தீராத அவமானமும் தோல்வியும் கிடைத்து விட்டது. கோட்டைக்குள் புகுந்த சுல்தான் படைத் தலைவர்களுக்கு தங்களை எதிர்க்க அங்கு எவரும் இல்லை என்பது தெரிய வந்தது. கோட்டையிலிருந்து வீரர்கள் தப்பி ஓடி விட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து மக்கள் ஓடிவந்து பொக்கிஷ அறையைத் திறந்து அதிலிருந்த தங்கம், முத்து, நவரத்தின கற்கள் பதித்த நகைகள் இவைகளை தூக்க முடிந்த அளவுக்குத் தூக்கிக் கொண்டு அருகிலிருந்த காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டனர். 

இப்படி வல்லம் கோட்டையிலிருந்து அளவற்ற செல்வத்தோடு அக்கம்பக்கத்து கிராம மக்கள் காட்டினுள் சென்று பதுங்கிக் கொண்ட செய்தியறிந்து சுல்தான் படைகளுக்குப் பெருத்த ஏமாற்றம். வல்லம் மக்கள் அரசாங்கத்தின் ஏராளமான சொத்துக்களை அந்நியர் கொள்ளை கொண்டு போய்விடாமல், அவற்றை எதிர்களின் கையில் சிக்காமல் மீட்டு விட்டனர்; செல்வத்தை மட்டுமல்ல, தஞ்சாவூரின் மானத்தையும் கூட.

சுல்தான் படைகள் கோட்டைக்கு வரும்போது அவர்களுக்கு வெறும் கோட்டை மட்டும்தான் இருந்தது. குவித்து வைக்கப்பட்ட செல்வம் அக்கம் பக்கத்து கிராம மக்களிடம் கிடைத்துவிடவே, அவர்கள் வறுமையிலிருந்து விடுபட்டு நலமாக வாழ வழிவகுத்துவிட்டது. கோட்டையில் ஒன்றும் இல்லை என்று தெரிந்தபின் சுல்தான் தளபதிகள் ஒரு சிறு படையை மட்டும் அங்கு விட்டு வைத்தார்கள். வல்லம் வெற்றியை அடுத்து, இந்த படையெடுப்பால் பெரிய அளவில் செல்வம் எதுவும் கிடைக்காத நிலையில் சுல்தான் படைத்தளபதிகள் அங்கு தங்கினர்.

போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டதும், அவர்கள் உடல்கள் முறையாக அடக்கம் செய்யாததாலும், மழையின்றி வறட்சி, பஞ்சம் ஏற்பட்டதாலும் அந்தப் பகுதிகளில் தொற்று நோய்கள் பரவின. மழை பெய்யாமல் விவசாயம் நடக்காததால் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டன. இனியும் இங்கு இருந்தால் நோயால் மடிய நேரிடும் அல்லது பசி பட்டினியால் இறக்க நேரிடும் என்று முடிவு செய்தனர் சுல்தான் படையினர். சில நாட்களுக்குப் பின் சுல்தான் படை தஞ்சை ராஜ்யத்தை விட்டு மீண்டும் திரும்பிவிட ஏற்பாடுகள் செய்து கொண்டார்கள். காட்டில் மறைந்திருந்த விஜயராகவ நாயக்கருக்கு செய்தியொன்றை அனுப்பினார்கள். தாங்கள் தொடர்ந்து தஞ்சையில் இருக்க விரும்பவில்லை, தங்கள் நாட்டுக்குத் திரும்புவதாகவும், தங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கான கப்பத் தொகையை மட்டும் கொடுத்தால் வாங்கிக் கொண்டு போய்விடுவதாகவும் சொல்லி அனுப்பினார்கள்.

ஆனால் அனைத்தையும் இழந்து காட்டில் இருக்கும் தம்மிடம் எதுவும் இல்லை என்று சொல்லிவிட, சுல்தான் படைகள் இனியும் இந்த ராஜ்யத்தில் இருந்தால் பஞ்சத்திலும், தொற்று நோய்களாலும் உயிருக்கு ஆபத்து என்று பயந்துகொண்டு கிளம்பிவிட்டார்கள். போகும் வழியில் திருச்சி கோட்டையிலும் தங்கள் வேலையைக் காட்ட அங்கும் வீரர்கள் கடுமையாக எதிர்க்கவே, போதும் இந்த வம்பு என்று ஊர் போய்ச்சேர்ந்தார்கள். விஜயராகவ நாயக்கரும் காட்டைவிட்டு வெளிவந்து வெறுமையாகிப் போன தஞ்சாவூரை மீண்டும் அடைந்து ஆட்சியைத் தொடர்ந்தார். 

தஞ்சைக்கு மீண்டும் வந்து அரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டு விஜயராகவருக்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆபத்து காலத்தில் தங்களை விட்டுவிட்டுத் தன்னைக் காத்துக் கொள்ள காட்டுக்குள் சென்று விட்ட ராஜாவை இன்னமும் நம்ப அவர்கள் தயாராக இல்லை. படை வீரர்களும் சோர்ந்து போனார்கள். வீரத்தோடு தலைமை தாங்கி போரை நடத்த வேண்டிய தலைவர்கள் ஓடிப்போன பின்னர் தங்கள் வீரம் மட்டும் என்ன சாதித்துவிட முடியும், இவர்களால் தங்களுக்கும் தலைக்குனிவு என்று அவர்களுக்கும் உத்சாகம் குறைந்து போனது.

இத்தனைக்கும் மத்தியில் இறை நம்பிக்கையும், கடவுள் காப்பாற்றுவார் என்கிற மன உறுதியும் விஜயராகவருக்குச் சற்று மன ஆறுதலைக் கொடுத்தது. மன்னரின் இந்த பரிதாபகரமான நிலைமையை உணர்ந்த வல்லம் கிராமத்து மக்கள் தாங்கள் வல்லம் கோட்டையிலிருந்து எடுத்துச் சென்ற செல்வத்தில் ஒரு பகுதியை மன்னருக்குக் கொண்டு வந்து கொடுத்து, மீண்டும் ராஜ்யத்தை சரிவர பரிபாலனம் செய்து வருமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சூழ்நிலையில் மன்னர் விஜயராகவ நாயக்கர் மீண்டும் தஞ்சையை ஆட்சி புரியலானார்.

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 12

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 12

விஜயராகவ நாயக்கர் (1590 - 1673)

விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகளாக தஞ்சைக்கு அனுப்பப்பட்ட நாயக்க ராஜாக்களில் முதல் ராஜா சேவப்ப நாயக்கர். அவர் தொடங்கி வைத்த வரிசையில் தஞ்சைக்குக் கடைசி நாயக்க அரசராக ஆகப் போகிற விஜயராகவ நாயக்கர் 1634இல் தனது ஆட்சியைத் தொடங்கினார். அந்த ஆண்டு தொடங்கி 1673 வரையிலான 39 ஆண்டுகள் அவர் தஞ்சாவூரை ஆண்டிருக்கிறார். இந்த விஜயராகவ நாயக்கருக்கு மன்னாருதாசர் என்றொரு பெயரும் உண்டு. மதுரை சொக்கநாத நாயக்கரோடு போரிட்டு இவர் கொலையுண்ட ஆண்டோடு சேவப்ப நாயக்கர் பரம்பரையின் ஆட்சி தஞ்சையில் முடிவுக்கு வந்துவிட்டது. முதிர்ந்த வயதுடைய விஜயராகவ நாயக்கரை மதுரையில் ஆண்ட சொக்கநாதரும் அவர் தம்பி அழகிரியுமாகச் சேர்ந்து போர்க்களத்தில் தலையைக் கொய்து இவரது வாழ்வை முடித்த கதை ஒரு சோகக் கதை.

மிகவும் புகழ்வாய்ந்த தஞ்சை நாயக்க மன்னரான ரகுநாத நாயக்கரின் மூத்த மகன் விஜயராகவ நாயக்கர். இவருடைய தந்தையார் காலமான பிறகு அதே 1633ஆம் ஆண்டில் இவர் பதவிக்கு வந்தார். இவருக்கு நடந்த முடிசூட்டு விழாவின்போது இவர் "சோடச மகாதானம்" என்கின்ற பதினாறு வகையான தானங்களை வழங்கியதாகத் தெரிகிறது. இந்தச் செய்தியை இந்த மன்னரின் அவையில் இருந்த புலவர் ஒருவர் தன்னுடைய "விஜயராகவ வம்சாவளி" எனும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த நூலில் இந்த தானங்கள் வழங்கப்பட்ட காலத்தையும் குறிப்பிடுகிறார். அதாவது 1633 ஆகஸ்ட்-செப்டம்பருக்கு இணையான ஸ்ரீமுக ஆண்டு ஸ்ரவண மாதம் என்பதிலிருந்து இது தெரியவருகிறது. நீண்ட நெடிய இவருடைய ஆட்சியில் தந்தை ரகுநாத நாயக்கரைப் போல சொல்லக்கூடிய செயற்கரிய சாதனைகள் எதையும் இவர் படைக்காவிட்டாலும், தந்தையின் வழியில் திறமையாக ஆட்சி புரிந்திருக்கிறார். தந்தையைப் போல இவருக்கும் இசையிலும், கலைகளிலும் ஆர்வம் இருந்தது. இவரே ஒரு நல்ல தெலுங்கு மொழிக் கவிஞர். தன்னுடைய தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் ஒரு காவியமாக இவர் இயற்றியிருக்கிறார்.

இவர் பதவியேற்ற காலம் தந்தை ரகுநாத நாயக்கர் விட்டுச் சென்ற அமைதி, வளம் போன்ற அம்சங்கள் நிறைந்திருந்த நாடாகத்தான் இருந்தது. அவர் நீண்ட காலம் இந்த நாட்டை ஆண்டு வந்தார். அவருடைய காலம் தொடக்கக் காலத்தைப் போல அத்தனை அமைதியாக இருக்கவில்லை. உள்நாட்டுத் தொல்லைகள், எதிரிகளால் தொல்லை, போர் என்று எப்போதும் குழப்பமாகவே இருந்து வந்திருக்கிறது. அவர் காலத்தில் நாயக்கர் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருந்த அன்னியர் படையெடுப்புகள் காரணமாக இவர் அதிகம் அதிர்ந்து போயிருந்தார். ஒரு பக்கம் மதுரை நாயக்கர்களின் அச்சுறுத்தல், மறுபுறம் சுல்தான்கள் படையெடுப்பினால் உருவான அபாயம். இவருடைய நிலைமையே இப்படி ஆபத்துக்கள் சூழ்ந்து இருந்ததால் இவர் தங்கள் எஜமானர்களாகிய விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு அதிக அளவில் உதவிகள் எதையும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். 

கி.பி.1642இல் 3ஆம் ஸ்ரீரங்க ராயர் விஜயநகரத்து மாமன்னராக முடிசூட்டிக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதலாக அவருக்கு நாலா பக்கமிருந்தும் யுத்த மேகங்கள் சூழ்ந்து அச்சுறுத்தத் தொடங்கி விட்டன. விஜயநகர சாம்ராஜ்யமே சரியுமளவுக்கு ஆபத்துக்கள் வரும்போது தஞ்சாவூர் ராஜ்யம் மட்டும் எப்படித் தாக்குப்பிடிக்க முடியும்? பீஜப்பூர், கோல்கொண்ட சுல்தான்கள் விஜயநகரத்தின் மீது படையெடுத்து வந்தனர். மதுரையும், மைசூரும் சுதந்திரமாக இருக்க முயற்சியில் ஈடுபட்டிருந்தன. மதுரையில் திருமலை நாயக்கரும், மைசூரில் காந்திருவ நரச உடையாரும் சாம்ராஜ்யத்துக்கு எதிராக ஆகினர். செஞ்சி நாயக்கர் வழக்கம்போல மதுரை நாயக்கர்களுக்கு பின்பாட்டுப் பாடத் தொடங்கினர். இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கு நடுவே விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆதரித்து வந்த ஒரே ராஜ்யம் தஞ்சாவூர் ராஜ்யம். அந்த பணியை விஜயராகவ நாயக்கர் மிகவும் சாமர்த்தியமாகச் செய்ய வேண்டியிருந்தது.

தெற்கே இப்படி விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு எதிரான கலகம் வெடித்து வந்ததைக் கருத்தில் கொண்டு விஜயநகர மன்னர் தெற்கே படையெடுத்து வந்தார். இந்த முயற்சியை முறியடிக்க வேண்டி மதுரை திருமலையரசர் கோல்கொண்டா சுல்தானுக்கு ஆள் அனுப்பி விஜயநகரத்தின் மீது படையெடுக்க வேண்ட, அவரும் அதற்கு உடன்பட்டு படையெடுக்க விஜயநகர மன்னர் தென்னக படையெடுப்பை விலக்கிக் கொண்டு கோல்கொண்டா படைகளுடன் போரிட வேண்டியிருந்தது. மதுரை நாயக்கர்களின் சூழ்ச்சி பலித்தது மட்டுமல்ல, தங்கள் நிலைகளையும் காப்பாற்றிக் கொண்டனர்.

இந்த குழப்பங்களுக்கிடையில் மதுரை, செஞ்சி நாயக்கர்கள் தஞ்சை விஜயராகவ நாயக்கர் மீது அவர் தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்று வன்மம் கொண்டனர். இதற்கிடையில் சுல்தான்களின் குதிரைப்படை ஒன்று தஞ்சை மீது தாக்குதல் நடத்தியது; அப்போது விஜயநகரப் படைகள் தஞ்சையின் உதவிக்கு வரமுடியவில்லை. தஞ்சை மன்னர் விஜயராகவ நாயக்கருக்கு மதுரையை உதவி கேட்டு அணுக முடியவில்லை, காரணம் இவ்விரு அரசுகளுக்குமிடையே இருந்த விரோதம். ஆகையால் விஜயராகவ நாயக்கர் தஞ்சையைத் தாக்கிய சுல்தான் படைகளுடன் ஏராளமான பொருட்செலவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு போரையும் உயிர்ச் சேதங்களையும் தவிர்க்க வேண்டியதாகி விட்டது.

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 11

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 11


ரகுநாத நாயக்கர் காலத்து கலைகளும் கர்நாடக இசையும்.

ரகுநாத நாயக்கருக்கு கர்நாடக இசையில் ஆர்வம் அதிகமிருந்ததால் அதை மக்கள் கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்தினார். மன்னருடைய தாய்மொழி தெலுங்கு என்பதால் தெலுங்கில் இயற்றப்பட்ட கர்நாடக இசை கீர்த்தனைகளில் அதிகம் கவனம் செலுத்தலானார். தமிழ்நாட்டில் தெருக்கூத்து போல, தெலுங்கு கன்னடம் பேசும் பகுதிகளில் வழங்கிவந்த கிராமியக் கலையான "யட்சகானம்" எனும் கலையில் இவர் அதிக ஆர்வம் காட்டினார். வாத்திய இசையில் வீணை வாத்தியம் வாசிப்பதிலும் இவர் வல்லவராக இருந்தார். யட்சகானத்துக்காக பாடல்களையும் இவர் இயற்றியிருக்கிறார். 

க்ஷேத்ரவ்யர் என்பவர் புகழ்பெற்ற வாக்யேயக் காரர். அவர் தஞ்சைக்கு வந்து மன்னருக்காக பல பதங்களை இயற்றித் தந்திருக்கிறார். நாயக்க மன்னர்கள் அனைவருமே சிறந்த வைணவ பக்தர்கள் என்பதால் இவர் பல பெருமாள் கோயில்களை புனரமைப்பு செய்து கொடுத்திருக்கிறார். கும்பகோணம் நகரத்தில் அமைந்திருக்கும் புகழ்வாய்ந்த ராமஸ்வாமி ஆலயம் இவரால் கட்டப்பட்ட கோயில். தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகமும், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வர சுவாமி ஆலயத்தின் கோபுரமும் இவரால் கட்டப்பட்டவை. கும்பகோணத்தை அடுத்த ஒப்பிலியப்பன் கோயிலை விரிவு படுத்தியும், மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயத்தின் விரிவாக்கத்தையும் இவரே செய்து முடித்தார். திருவையாறு கோயிலுக்கு தேர் அமைத்துக் கொடுத்து, தேரோட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்து வைத்தார். பசுபதிகோயிலிலும் தேரோட்டம் சிறப்பாக நடத்திட ஏற்பாடுகள் செய்தார்.

இசைக் கருவிகளுள் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியின் கரங்களில் தவழும் இசைக் கருவி வீணை. மிகப் புனிதமான இந்த இசைக் கருவி இவர் காலத்தில் இருந்த அமைப்பை மாற்றி இப்போது நாம் பார்க்கும் வீணை அமைப்பை இவர்தான் உருவாக்கினார். இசைக் கலையில் வல்லவரான இவர் ஜயந்தசேனா எனும் புதிய ராகமொன்றையும் ராமானந்தா எனும் தாளத்தையும் கண்டுபிடித்தார். தெலுங்கு மொழியில் பல இசைக் காவியங்களையும் எழுதி உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அவைகளில் சில பாரிஜாதப்ரஹரணமு, வான்மீகிசரித்திரம், ருக்மணிபரிணயம், யக்ஷகானம், ராமாயணம் முதலியன. சங்கீத சுதா எனும் சம்ஸ்கிருத நாடகமும், பரதசுதாவும் இவரால் எழுதப்பட்டவை.

ராமபத்ராம்பா, மதுரவாணி, செமகுரு வெங்கடராஜு, கிருஷ்ணத்வாரி ஆகியோர் இவருடைய காலத்தில் சிறந்த அறிஞர்களாக விளங்கியவர்கள். மன்னன் ரகுநாத நாயக்கர் குதிரை சவாரி செய்வதிலும், வாட்போரிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

வேதவித்துக்களாகத் திகழ்ந்த பிராமணர்களிடம் மன்னருக்கு அபிமானம் அதிகம் இருந்தது. இவர் காலத்தில் அமைந்துக் கொடுக்கப்பட்ட அக்ரஹாரங்களில் அவர்கள் குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு ஏராளமான வசதிகளும், வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஏழை பிராமணர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் இவர் ஏராளமாக உதவிகளை வாரி வழங்கியிருக்கிறார். ஸ்ரீரங்கம் கோயில் பராமரிப்புக்காக இவர் ஒரு கிராமத்தையே கோயிலுக்கு எழுதி வைத்தார். மாத்வ குருவான விஜயேந்திர தீர்த்தருக்கும் அவருடைய கும்பகோணம் மடத்துக்கும் ஏராளமாக சொத்துக்களை எழுதிவைத்தார்.

ரகுநாத நாயக்கரே சிறந்த கல்விமானாகத் திகழ்ந்தமையால் இவரது அரசவையில் கற்றுணர்ந்த பல தேர்ந்த கல்விமான்களும் கவிஞர்களும் நிறைந்திருந்தனர். ரகுநாத நாயக்கரை கல்வியில் ஒரு கடலாகக் கருதினால் அவர் அவையில் இருந்த பல அறிஞர் பெருமக்களும் அந்தக் கடலில் வந்து கலக்கும் நதிகளாகக் கருதப்பட்டனர். அவர் காலத்தில் சரஸ்வதி தேவியானவள் தஞ்சை ராஜ்யத்திலேயே குடியேறிவிட்டாளோ என நினைக்குமளவுக்கு கல்வியில் சிறந்த நாடாக இந்த நாடு திகழ்ந்தது என்று ராமபத்ராம்பா எனும் பெண் கவிஞர் வர்ணிக்கிறார். அறிஞர்களும் இசைக் கலைஞர்களும் கவிஞர்களும் மன்னரால் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அரசவையில் இருந்த மாபெரும் அறிஞர்களூள் அமைச்சர் கோவிந்த தீக்ஷதரும் அவருடைய இரு மகன்களும் அடங்குவர். அவர்கள் யக்ஞநாராயண தீக்ஷதர், கவி வேங்கடமுகி ஆகியோராவர். 

ஐரோப்பியர்களுடனான உறவு.

டென்மார்க்கிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் இந்தியா வந்து குடியேறி வர்த்தகம் செய்து வந்த ஐரோப்பிய வியாபாரிகளிடம் இவர் நல்ல உறவு வைத்திருந்தார். ரகுநாத நாயக்கர் அரசப் பதவி ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக சென்னப்பட்டினம் அருகில் சாந்தோம், கடற்கரைப் பட்டினமான நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் போர்த்துகீசியர்கள் தொழிற்சாலைகளை உருவாக்கி நடத்தி வந்தனர். டச்சுக்காரர்களும் தங்கள் பங்குக்கு 1610இல் புதிதாகத் தொழிலைத் தொடங்கினர். இங்கிருந்த மன்னர்களுக்கு போர்த்துகீசியர்களிடம் நல்லெண்ணம் இருக்கவில்லை, ஆனால் டச்சுக்காரர்களை முழுமனதோடு ஆதரித்து வந்தனர். ஓரளவுக்கு போர்த்துகீசியர்களை அடக்கி வைக்க இதை ஒரு உபாயமாகக்கூட இவர்கள் பயன்படுத்தி வந்தனர். 

டேனிஷ்காரர்கள் கடற்கரைப் பட்டினமான தரங்கம்பாடியில் 1620இல் ஒரு குடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டனர். ஆங்கிலேயர்களுடைய கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதிகளாக ஜான்சன் என்பவரும் புராக்டன் என்பவரும் தஞ்சாவூருக்கு வந்து அரசவையில் மன்னன் ரகுநாத நாயக்கரைச் சந்தித்திருக்கின்றனர். மன்னரிடம் அவருடைய பிரதேசத்தில் வியாபாரம் செய்வதைப் பற்றி வேண்டுகோள் வைத்திருக்கின்றனர். அவருடைய சம்மதத்தின் பேரில் 1624இல் கம்பெனி சார்பில் ஒரு தூதுக்குழு காரைக்காலுக்கு வந்து இறங்கி பின்னர் தஞ்சாவூர் சென்று மன்னரை அரசவையில் சந்தித்திருக்கின்றனர். 

கிழக்கிந்திய கம்பெனி வியாபாரிகளின் தூதுக்குழுவை மன்னர் அன்போடு வரவேற்று உபசரித்திருக்கிறார். அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, அவர்கள் காரைக்காலில் வியாபாரத்தைத் தொடங்க அனுமதி அளித்திருக்கிறார். முதலில் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு இப்படி அனுமதி கொடுத்தாரே தவிர, பிறகு என்ன நினைத்தாரோ என்னவோ அவர்கள் ஆண்டொன்றுக்கு 7000 ரியால் வாடகை கேட்டிருக்கிறார். மன்னர் ஏன் இப்படி மாறினார் என்பதற்கு ஆங்கில கம்பெனியார் சொன்ன காரணம் மன்னர் போர்த்துகீசிய, டேனிஷ் வியாபார நிறுவனங்களின் நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டு இப்படி நடந்து கொள்கிறார் என்று காரணம் கற்பித்தனர். 

மன்னருடைய உத்தரவை ஏற்றுக் கொள்ளாத கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியான ஜான்சன் இங்கிலாந்துக்குத் திரும்பிவிட்டார். ஆனால் இப்படி மன்னரின் விருப்பத்துக்கு மாறாக நடந்து கொண்டு, நாடு திரும்பிய ஜான்சனின் நடத்தையை கம்பெனி ஏற்றுக் கொள்ளவில்லை. கிழக்கிந்திய கம்பெனியார் புதுச்சேரியையும் தங்கள் வியாபாரத் தலமாக ஆக்கிக் கொள்ள செஞ்சியை ஆண்ட நாயக்க மன்னர்கள் மூலம் முயன்று பார்த்து அதிலும் தோல்வி கண்டனர்.

ரகுநாத நாயக்கரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள்.

தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ரகுநாத நாயக்கர் ஆட்சி புரிந்தாலும் தஞ்சை சோழமண்டலத்தின் எல்லைகளையும் தாண்டி அவரது ஆட்சி விரிவடைந்திருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூர், திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடி, காஞ்சிபுரம் அருகிலுள்ள கோவிந்தவாடி, வேலூர் அருகில் நெடுங்குன்றம் மற்றும் நாரத்தம்பூண்டி ஆகிய இடங்களிலும் இவர் காலத்திய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தஞ்சைப் பகுதியை ஆண்ட நாயக்க மன்னர்களிலேயே எல்லா துறைகளிலும் சாதனை படைத்தவராகவும், கல்வி அறிவு மிக்கவராகவும், இசை, இலக்கியம் ஆகிய துறைகளில் வல்லவராகவும், போர்க்கலையில் தேர்ந்தவராகவும் விளங்கிய முதன்மையான மன்னர் ரகுநாத நாயக்கரே! இவருக்குப் பிறகு இவருடைய குமாரர் விஜயராகவ நாயக்கர் தஞ்சை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.


தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 10

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 10

ரகுநாத நாயக்கர். (1600 - 1634)

அச்சுதப்ப நாயக்கர் காலத்திலேயே பதவிக்கு வந்துவிட்டவர் அவருடைய குமாரர் ரகுநாத நாயக்கர். தஞ்சை நாயக்கர் பரம்பரையில் மூன்றாவது மன்னர் இவர். 1600 தொடங்கி 1634 வரையிலான காலகட்டத்தில் இவர் தஞ்சையை ஆண்டார். இதே 1600இல்தான் இங்கிலாந்து நாட்டில் இந்தியாவுக்கு வந்து வாணிபம் செய்வதற்காக கிழக்கிந்திய கம்பெனி எனும் ஒரு ஸ்தாபனம் உதயமானது. பின்னாளில் இந்த கிழகிந்திய கம்பெனி இந்தியாவின் பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு முன்னூறு ஆண்டுகள் கோலோச்சிய வரலாறும் பின்னாளில் நடந்திருக்கிறது.

தஞ்சையை ஆண்ட நான்கு நாயக்க மன்னர்களில் இவர்தான் சிறப்பானவர் என்று சொல்கிறார்கள். இவர் காலம் தஞ்சை ராஜ்யத்தின் பொற்காலம். காரணம் கலை, இலக்கியம், கர்நாடக இசை போன்ற துறைகளில் தஞ்சை சிறந்து விளங்கியது. அச்சுதப்ப நாயக்கரின் மூத்த மகன் இவர். தனக்கு புத்திர பாக்கியம் வேண்டும் என்று எல்லா தெய்வங்களையும் பிரார்த்தித்துப் பிறந்த மகன் இந்த ரகுநாத நாயக்கர். ராஜாவின் அன்பிற்குரிய புத்திரன் என்பதால் மிக அருமையாகப் போற்றப்பட்டு வளர்க்கப்பட்டார் ரகுநாதர். இளம் வயதிலேயே சாஸ்திரங்களை நன்கு கற்றுத் தேர்ந்தார். போர்க்கலையிலும் வல்லவராக விளங்கினார் ரகுநாதர். தந்தையார் ராஜாவாக இருந்த போதே இவரை யுவராஜாவாக நியமித்திருந்ததால் நிர்வாக விஷயங்களிலும் நன்கு தேர்ந்தவராக இருந்தார் இவர். 

இவருக்கு அன்றைய ராஜ வம்சத்தின் வழக்கப்படி பல மனைவியர் இருந்தனர். மூத்த பட்டத்து ராணியாக இருந்தவர் கலாவதி என்பார். இவருக்குப் பல ஆசை நாயகிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் ராமபத்ராம்பா என்பவர். இவர்தான் நாயக்கர் வரலாற்றை இலக்கியமாக நூலாக்கித் தந்தவர். விஜயநகர சாம்ராஜ்யம் சிறப்புற்று விளங்கிய காலத்தில் தட்சிண சுல்தான்கள் எனும் தென்னாட்டு சுல்தான்களோடு போர் நடப்பது வழக்கமாக இருந்தது. தன்னுடைய இளம் வாலிப பருவத்திலேயே ரகுநாதர் கோல்கொண்டா சுல்தானுடன் போர் புரிந்திருக்கிறார். 

அச்சுதப்பர் வாழ்ந்த காலத்திலேயே இவர் யுவராஜாவாக அக்கப்பட்டாரல்லவா? அப்படி இவர் யுவராஜாவாக நியமிக்கப்பட்ட ஆண்டு 1600. அதுமுதல் பதினான்கு வருடங்கள் அதாவது 1614 வரை இவர் தன் தந்தைக்கு உதவியாக செயல்பட்டு வந்தார். 1614க்குப் பிறகு ரகுநாதரே ராஜாவாக முடிசூட்டிக் கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்யத் தொடங்கி விட்டார். அதுமுதல் 1634 வரையில் இவர்தான் தஞ்சை நாயக்க ராஜ்யத்தின் ஏகசக்ராதிபதியாக விளங்கினார்.

ரகுநாத நாயக்கர் காலத்தில் போர்கள்.

ரகுநாத நாயக்கர் தன்னுடைய ஆட்சி காலத்தில் பல போர்களைச் சந்தித்திருக்கிறார். விஜயநகர பேரரசு சார்பிலும் போரிட்டார், தன்னுடைய ராஜ்யத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த சில சிற்றரசர்களோடும் போரிட்டார், கடல்கடந்து யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்த போர்த்துகீசியர்களுடனும் போரிட்டு வெற்றி பெற்றார். அவற்றை விவரமாகப் பார்ப்பதற்கு முன்பாக அந்த யுத்தங்களின் பின்னணியைச் சற்று பார்ப்போம்.

இவர் காலத்தில் விஜயநகர சக்கரவர்த்தியாக இருந்தவர் இரண்டாம் ஸ்ரீரங்க ராயர். இவர் ஒரே ஒரு ஆண்டு மட்டும் அரசராக இருந்தவர் என்பது தெரிகிறது. இவருக்கும் ஜக்கராயா என்பவருக்கும் விஜயநகர் அரசர் பதவிக்கு போட்டி இருந்தது. இருவரும் எதிரிகளாகப் போர் புரிந்தனர். இவர்களுக்குள் நடந்த போரில் இரண்டாம் ஸ்ரீரங்க ராயர் கொல்லப்பட்டார். இதனால் கோபமடைந்த தஞ்சை ரகுநாதர் ஜக்கராயர் மீது போர்தொடுத்தார். ஜக்கராயரின் மீது போரிடும் முன்பாக ஜக்கராயரின் கீழ் செஞ்சி ராஜாவுக்குக் கீழுள்ள ஒரு சிற்றரசனாக இருந்த சோழகன் என்பவர் கொள்ளிடம் அருகில் இருந்த கோட்டையில் இருந்து கொண்டு ரகுநாதரைத் தடுத்துப் போர் புரிந்தார். இந்த சோழகரை கும்பகோணம் வரை துரத்தியடித்துவிட்டு கொள்ளிடத்துக் கோட்டையையும் பிடித்துக் கொண்டார் ரகுநாதர்.

சோழகருக்கு எதிரான போர்.

ராமபத்ராம்பா எழுதியுள்ள வரலாற்றுக் காவியத்தில் சோழகருக்கு எதிரான போர் பற்றி குறிப்பிடுகிறார். கொள்ளிடம் அருகே ஆற்றுக்கிடையே அமைந்த தீவு ஒன்றை ஆண்டுகொண்டிருந்தவர் சோழகர். இவர் செஞ்சி மன்னனுக்குக் கீழ்படிந்த ஒரு சிற்றரசன். செஞ்சியை ஆண்டவரும் ஒரு நாயக்க மன்னரே. இந்த சோழகர் ஆண்ட பகுதியொன்றும் பெரும் நிலப்பரப்பு அல்ல. ஏதோ பெயருக்கு ராஜா என்றாலும் இவர் வழிப்பறி செய்து பொருள் சேர்த்துக் கொண்டிருந்தார் என்கின்றனர். ஆழ்வாரில் ஒருவரான திருமங்கை மன்னனே பெருமாள் கைங்கர்யத்துக்காக வழிப்பறி செய்தாரல்லவா? அதனால்தானோ என்னவோ இந்த சோழகரும் வழிப்பறி செய்து வாழ்ந்தார். இவரை எப்படியாவது அடக்கி வைத்துவிட எண்ணி ரகுநாத நாயக்கர் முடிவு செய்து இவரோடு போரிட முடிவு செய்தார்.

முதலில் ரகுநாத நாயக்கர் இந்த சோழகரின் தலைமையகத்தைத் தாக்கினார். கும்பகோணத்துக்கு அருகில் இருந்தது இந்தப் பகுதி. சோழகருக்கு கிருஷ்ணப்ப நாயக்கர், போர்த்துகீசியர்கள், முகமதிய வியாபாரிகள் ஆகியோர் உதவி செய்தனர். அந்த பலத்தைக் கொண்டு அவர் பலம் பொருந்திய ரகுநாதரை எதிர்த்துப் போரிட்டார். ஆனால் இறுதியில் ரகுநாத நாயக்கர் பீரங்கிகளைக் கொண்டு குண்டு மழை பொழிந்து போரில் வெற்றிக் கொடி நாட்டினார். சோழகரைப் பிடித்து அவருடைய குடும்பத்தாரோடு சிறையில் தள்ளி அவர்களுடைய தொல்லைக்கு ஒரு முடிவு கட்டினார்.

இதனைத் தொடர்ந்து ரகுநாத நாயக்கர் அப்போது யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போர்த்துகீசியர்கள் மீது போர்தொடுத்தார். அங்கு சென்று அவர்களோடு போரிட்டு வென்றபின் ஊர் திரும்பினார். அந்தப் போர் பற்றிய விவரங்களை இப்போது பார்ப்போம்.

யாழ்ப்பாணப் படையெடுப்பு.

சின்னஞ்சிறிய பகுதியின் தலைவனாக இருந்த போதிலும், பலம் பொருந்திய பல நண்பர்களையும் போர்த்துகீசியர்களையும் சேர்த்துக் கொண்டு வல்லமை பொருந்திய தஞ்சை நாயக்க மன்னரை எதிர்த்துப் போரிட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சோழகர். இவருடன் நடந்த போரில் இவருக்கு ஆதரவாக இருந்த போர்த்துகீசியர்களை தண்டிக்க எண்ணினார் ரகுநாத நாயக்கர். இந்த படையெடுப்புக்கு ரகுநாத நாயக்கரே தலைமையேற்று படை நடத்திச் சென்றார். 

சோழகருக்கு எதிரான போருக்காகச் சென்றவர் தேவிகோட்டையை விட்டுப் புறப்பட்டு கடற்கரை ஓரமாகவே தெற்கு நோக்கித் தன் படையுடன் கிளம்பினார் ரகுநாத நாயக்கர். யாழ்ப்பாணத்தில் போர்த்துகீசியர்களால் துரத்தப்பட்ட யாழ்ப்பாண அரசனும் அவர்கூட இருந்தான். அப்படி அவர்கள் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்த மார்க்கத்தில் காவிரி நதி கடலோடு கடக்கும் காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தார்கள். அதன் வழியாக மன்னார்குடாவை வந்து அடைந்தது நாயக்கர் படை. மன்னார்குடாவிலிருந்து கடலில் படகுகளை வரிசையாக நிற்கவைத்து அதனை ஒரு பாலம் போல அமைத்து அதன் வழியாக நாயக்கர் படை யாழ்ப்பாணத்தை அடைந்தது. ஆங்காங்கே கடலில் மர மிதவைகளும் உபயோகிக்கப்பட்டன.

அங்கு யாழ்ப்பாணத்தில் நாயக்கர் படைகளுக்கும் போர்த்துகீசியர்களுக்குமிடையே நடந்த போரில் அந்நியர்கள் தோற்று ஓடினார்கள். பலரும் கடல் வழியாக தோணிகள் மூலம் தப்பிச் சென்றார்கள். இந்தப் போரில் ரகுநாத நாயக்கர் போர்த்துகீசியர்களுக்கு பலத்த தோல்வியைக் கொடுத்தபின் உள்ளூர் அரசனுக்கு ஆட்சியைக் கொடுத்து அவனை அரசனாக அமரச் செய்தார்.

கடல்கடந்து சென்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த யுத்தத்தில் தஞ்சை நாயக்கர் படைகள் வெற்றி பெற்று போர்த்துகீசியர்களை அங்கிருந்து துரத்தியடித்தது. வெற்றி பெற்று சொந்தமாக்கிக் கொண்ட யாழ்ப்பாணத்துக்கு அந்த தேசத்து ராஜா ஒருவரை பதவியில் அமர்த்திவிட்டு ரகுநாத நாயக்கர் ஊர் திரும்பினார். பாவம் அந்த ராஜா, இரண்டு ஆண்டுகள் மட்டுமே ராஜ்யத்தை ஆண்டபின் 1619இல் அவரை பதவியிலிருந்து தூக்கியடித்த உள்ளூர் எதிரிகள் அவரைக் கொன்றும் போட்டனர்.

அதன் பின் விஜயநகர மன்னர் ஸ்ரீரங்காவைக் கொன்ற ஜக்கராயர் மீது பார்வையைத் திருப்பினார். திருச்சிக்கருகில் இருக்கும் தோப்பூர் எனுமிடத்தில் பல லட்சம் வீரர்கள் கொண்ட இரு பக்கத்துப் படைகளும் மோதின. இந்தப் போரில் ரகுநாத நாயக்கர் வெற்றி பெற்றார். இந்த தோப்பூர் யுத்த வெற்றியை ஒரு வெற்றி ஸ்தூபி எழுப்பி கொண்டாடினார், அதன் பின்னர் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியைப் பிடித்துக் கொண்டார்.

அச்சுதப்ப நாயக்கர் காலத்திலேயே அவர் தலைமையில் அவருடைய மகன் ரகுநாத நாயக்கர், அமைச்சர் கோவிந்த தீக்ஷிதர், யாழ்ப்பாணத்திலிருந்து ஓடிவந்து தங்கியிருந்த அந்நாட்டு அரசர் ஆகியோர் கூடி விஜயநகர பேரரசருக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் ஜக்கராயர் மீதும் தெற்கே அவருடைய ஆதரவாளரான சோழகர் மீதும் படையெடுப்பது பற்றி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் ரகுநாத நாயக்கர் இப்போது இந்தப் படையெடுப்பையும் நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்.

தோப்பூர் யுத்தம்.

அந்த காலகட்டத்தில் தோப்பூர் யுத்தம் என்பது மிகவும் பெரிய யுத்தமாகக் கருதப்பட்டிருக்கிறது. வட நாட்டில் நடந்த பல யுத்தங்கள் சரித்திர ஆசிரியர்களால் எழுதப்பட்ட அளவுக்கு இந்த தோப்பூர் யுத்தம் எழுதப்படவில்லையாதலால் இதனைப் பற்றி பலரும் அறிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 1616 டிசம்பர் 16ஆம் நாள் இந்த யுத்தம் நடந்திருக்கிறது. ரகுநாத நாயக்கர் பற்றி ராமபத்ராம்பா எனும்அவருடைய ஆசைநாயகியொருவர் எழுதிய வரலாற்று நூலில் இந்த விவரம் குறிக்கப்படுகிறது. 

இந்த தோப்பூர் யுத்தத்துக்காக ரகுநாத நாயக்கர் தன் படைகளுடன் சென்று திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள பழமார்நேரி எனும் ஊரில் 1616ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே சென்று முகாமிட்டிருந்தார் என்றும் தொடர்ந்து அந்த வருஷம் டிசம்பர் மாதம் தோப்பூர் யுத்தம் நடந்ததாகவும் தெரிகிறது. இந்த தோப்பூர் யுத்தத்தின் பின்னணி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? இப்போது பார்ப்போம்.

ரகுநாத நாயக்கர் தஞ்சாவூரில் திறமை மிக்க அரசாட்சியைக் கொடுத்து வந்த நேரத்தில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைமையில் வாரிசுரிமைப் போர் துவங்கியது. வேலூர், சந்திரகிரி ஆகிய இடங்களில் இந்த வாரிசுரிமைப் போர் தொடர்ந்து நடைபெற்றது. தக்ஷிண சுல்தான்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தைத் தோற்கடித்து அது சின்னாபின்னமடைந்த நிலையில், விட்ட குறை தொட்ட குறையாக விஜயநகர மன்னர்கள் மேலும் தெற்கே வேலூர் சந்திரகிரி ஆகிய இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த அரசர் வரிசையில் இரண்டாம் வெங்கட ராயரின் தம்பி கொப்புரி ஜக்க ராயர் என்பவர் இருந்தார். இவருக்கு ஒரு ஆசை நாயகி, ஆடம்பரமும், பதவி மோகமும் கொண்ட ராணியாகத் திகழ்ந்தார். அவர் பெயர் ஒபவம்மா. இவருக்கு ஒரு வளர்ப்பு மகன் இருந்தான். அவனுக்குத்தான் ராஜ்யத்தை ஆளும் உரிமை என்று இந்த ஒபவம்மா தூண்டுதலினால் இரண்டாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசுரிமை பெற்றவரையும், அவருடைய முழு குடும்பத்தையும் வேலூர் சிறையில் கொன்றுவிட்டனர். 

இந்த சூதும் சதியும் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க இந்த ஒபவம்மாவின் கணவர் ஜக்க ராயரை எதிர்த்து காளஹஸ்தி பகுதியை ஆண்ட எச்சமன் என்பவர் ராம தேவர் என்பவர்தான் பட்டத்துக்கு உரியவர் என்று கலகம் விளைவிக்கத் தொடங்கினார். வேலூர் சிறையில் அடைபட்டிருந்த இந்த ராமதேவரை இந்த காளஹஸ்தி அதிபர் விடுவித்து வெளிக் கொணர்ந்து விட்டார். ஜக்கராயர் மட்டும் என்ன இளைத்தவரா? இவர் போய் செஞ்சியை ஆண்டுகொண்டிருந்த நாயக்க மன்னரையும், மதுரையில் இருந்த முத்துவீரப்பரையும் சந்தித்து காளஹஸ்தி எச்சமனையும், ராமதேவரையும் எதிர்த்து போரிடும்படி தூண்டினார்.

காளஹஸ்திக்காரர் மட்டும் என்ன இளிச்சவாயனா என்ன? அவர் பங்குக்கு தஞ்சை ரகுநாத நாயக்கரை சந்தித்து ராமதேவனை பதவியில் அமர்த்த உதவி கேட்டார். ரகுநாத நாயக்கர் வஞ்சனையில்லாமல், தனக்கு இன்றும் என்றும் விஜயநகர சாம்ராஜ்யாதிபதிகள்தான் எஜமானர்கள் எனும் உணர்வுடையவராதலால் அவருக்கு உதவி செய்ய ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் பழைய விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்றுவிட்ட நிலையிலும், அதன் பிரிவுகளாக ஆங்காங்கே சிதறிக் கிடந்த நாயக்க வம்சத்து சிற்றரசர்கள் தங்களுக்குள் பதவிப் போராட்டத்தில் குதித்தனர். ஜக்கராயர் ஒரு பெரும் படையுடன் திருச்சினாப்பள்ளிக்கு அருகில் வந்து சேர்ந்தார். மதுரை முத்துவீரப்பர் தனது திருச்சினாப்பள்ளி படைகளுடன், செஞ்சி, மதுரை ஆகிய இடங்களிலிருந்தும் படைகளை வரவழைத்துக் கொண்டார். இவர்கள் தவிர கடற்கரை பகுதிகளில் வியாபாரம் செய்ய வந்து சேர்ந்திருந்த போர்த்துகீசியர்களிடமிருந்தும் படைவீரர்களைக் கேட்டுப் பெற்று தனக்கு உதவிக்காகக் கொண்டு வந்திருந்தார். 

விஜயநகரத்து படைகளை தன்னுடைய காளஹஸ்தி படையுடன் சேர்த்து எச்சமன் தலைமை வகித்து அழைத்து வந்தான். அப்படி அந்த படைகள் வரும் வழியில் தஞ்சைக்கு வந்து ரகுநாத நாயக்கரின் படைகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். போதாதற்கு கர்நாடகப் பகுதிகளிலிருந்து படைகளும், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த படைகளும், டச்சுக்காரர்களும் இந்த படையில் சேர்ந்து கொண்டனர். இப்போது இரு கட்சிகள் ஒன்றுக்கொன்று மோத தயாராக நின்றன.

ஒன்று ஜக்கராயர் தலைமையில், மதுரை, திருச்சி, செஞ்சி, போர்த்துகீசியர் ஆகிய படைகள். எதிரில் விஜயநகர சாம்ராஜ்யப் படைக்கு காளஹஸ்தி எச்சமன் தலைமையில் தஞ்சை ரகுநாத நாயக்கர் படை, கர்நாடகப் படை, யாழ்ப்பாணப் படை, டச்சுக்காரர்கள் படை ஆகியவை எதிர் வரிசையில் நின்றன.

இவ்விரு படைவீரர்களும் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தோப்பூர் எனுமிடத்தில் 1616ஆம் வருஷத்தில் ஒருவரையொருவர் எதிர்கொண்டு மோதினர். தோப்பூர் எனும் இந்த இடத்தில் கூடிய இவ்விரு படைகளிலும் உள்ள வீரர்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம் இருக்குமென்று சரித்திராசிரியர்கள் கூறுகின்றனர். தென்னகத்தில் நடந்த போர்களில் மிக அதிக அளவில் வீரர்கள் கலந்துகொண்ட போர்களில் இந்த தோப்பூர் போரும் ஒன்று என்பது அவர்கள் கருத்து.

போர் உக்கிரமாக நடந்தது. விஜயநகர படைகள் எச்சமன், ரகுநாத நாயக்கர் ஆகியோர் தலைமையில் வீரமாகப் போரிட்டனர். ஜக்கராயர் தலைமையிலான படையால் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. போரின் உச்ச கட்டத்தில் ஜக்கராயர் எச்சமனால் கொல்லப்பட்டார். ஜக்கராயர் படைகள் தலைதெறிக்க ஓடத்தொடங்கினர். ஜக்கராயரின் தம்பி எதிராஜர் உயிர் பிழைக்க ஓடிவிட்டார். மதுரை முத்துவீரப்ப நாயக்கர் தப்பி ஓட முயல்கையில் எச்சமனின் தளபதியிடம் திருச்சினாப்பள்ளி அருகே மாட்டிக் கொண்டார். செஞ்சி மன்னர் செஞ்சி கோட்டை தவிர மற்ற எல்லா இடங்களையும் இழ்ந்து நின்றார். இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமான ஒபவம்மாவின் வளர்ப்பு மகன் இரண்டாம் வெங்கடராயர் சிறைபட்டான். இந்த போரின் வெற்றியை தஞ்சை ரகுநாத நாயக்கரும், எச்சமனும் சிறப்பாகக் கொண்டாடினர். ராம தேவனுக்கு ராமதேவ ராயர் எனப் பெயர் சூட்டி 1617இல் மகுடம் சூட்டி, இதன் நினைவாக பல இடங்களில் வெற்றி ஸ்தூபிகளை எழுப்பி கொண்டாடினர். புதிய மன்னன் ராமதேவராயருக்கு அப்போது வயது 15. இப்படியாக சோழ மண்டலத்தில் நாயக்க மன்னர்களில் தலைசிறந்தவராகவும், கலை இலக்கியங்களில் மட்டுமல்ல, போரிலும் தான் வீரம் மிக்கவர் என்பதை நிரூபித்தார் ரகுநாத நாயக்கர். 

பிற போர்கள்:

சோழகருடனான யுத்தம், தோப்பூர் யுத்தம், யாழ்ப்பாண யுத்தம் ஆகியவை தவிர வேறு சில போர்களிலும் ரகுநாத நாயக்கர் ஈடுபட்டார். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் போரிட்டு போர்த்துகீசியர்களைத் துரத்திவிட்டு உள்ளூர் ராஜாவை பதவியில் அமர்த்திய பின்னர் அவரும் இரண்டே ஆண்டுகளில் கொல்லப்பட்டு புரட்சி ஏற்பட்டது அல்லவா? அந்த நிகழ்வுகளைத் தன்னால் தடுத்து நிறுத்த முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் மட்டும் ரகுநாதருக்கு இருந்தது. அதனால் தொடர்ந்து போர்த்துகீசியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டேயிருந்தார். மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் 1620 ஆம் ஆண்டுவாக்கில் இருமுறை போர்த்துகீசியர்களுக்கு எதிராக போரிட்டு எழுந்தார்கள். ரகுநாதரும் அந்த காலகட்டத்தில் ஐந்து முறை படைகளை அனுப்பி யாழ்ப்பாணத்தைப் பிடிக்க முயன்றார், ஆனால் முடியவில்லை.

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 9

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 9

அச்சுதப்ப நாயக்கர் கால கலைகள்.

போர்கள் ஒரு பக்கம், அமைதியான சூழ்நிலை ஒரு பக்கம், அமைச்சர் கோவிந்த தீக்ஷிதரின் ஆணைப்படி மக்களுக்குப் பயன்படக்கூடிய முன்னேற்ற திட்டங்கள் ஒரு பக்கம் என்று அச்சுதப்பரின் ஆட்சி நன்றாக முன்னேறி வந்தது. இறைப் பணிகளுக்கு அவர் மிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். 1608ஆம் ஆண்டில் செம்பொன்னார்கோயிலுக்கு அருகிலுள்ள விளநகர் எனும் ஊர் ஆலயத்தில் ஒரு பெரிய மண்டபம் கட்டிவைத்தார். மாயூரத்தை அடுத்த மூவலூரிலுள்ள மார்க்கசகாயேஸ்வரர் கோயிலுக்கு நிறைய நிலபுலன்களை எழுதி வைத்தார். அவை தவிர சிதம்பரம், பனைப்பாக்கம் ஆகிய இடங்களில் இருக்கும் கோயில்களுக்கும் நிலங்களை மானியமாகக் கொடுத்துதவினார். 

அச்சுதப்ப நாயக்கர் விஜயநகர பேரரசர் பரம்பரை வழக்கப்படி ஒரு வைஷ்ணவ பக்தர். திருவரங்கப் பெருநகருள் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமாள் மீது சிறு வயது முதலே அசைக்கமுடியாத பக்தி. ஸ்ரீரங்கத்தில் ரங்கநாத சுவாமி ஆலயத்தின் வடக்கு, மேற்கு வாசல் கோபுரங்களை இவர் எழுப்பினார். எட்டு சுற்றுப் பிரகாரங்களையும் இவர்தான் வடிவமைத்துக் கட்டினார். விமானங்கள், கோபுரங்கள் ஆகியவற்றைக் கோயில் வளாகத்துள் கட்டிக் கொடுத்தார். உள் விமானங்களின் மேல் உள்ள தங்க முலாம் பூசியதும் இவர்காலத்தில்தான். ஆலயத்தின் துவஜஸ்தம்பம் தவிர விலை உயர்ந்த கற்கள் பதித்த கிரீடம் உட்பட பெருமாள் விக்கிரகத்தையும் இவர்தான் ஆலயத்துக்கு அளித்தார். ஸ்ரீரங்கம் காவிரியில் படித்துறையொன்றையும் கட்டித் தந்தார். இதற்கெல்லாம் ஊக்கமளித்தது அவருடைய அமைச்சர் கோவிந்த தீக்ஷிதர் என்றுகூட சொல்வதுண்டு. 

காவிரி நதிக் கரையில் புஷ்யமண்டபம் எனும் பெயரில் படித்துறையோடு கூடிய மண்டபங்கள் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட ஊர்களாவன, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு ஆகிய இடங்களாகும். ஏழை பிராமணர்களுக்கு உணவளிக்க இந்த மண்டபங்களைப் பயன்படுத்தி வந்தார்கள். திருவையாறு அருகே காவிரிக்குக் குறுக்கே ஒரு தடுப்பணையையும் இவர் அமைத்து, விவசாயத்துக்குத் தன்ணீர் கிடைக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்தார். (திருவையாற்றுக்கு அருகில் அப்படிப்பட்ட தடுப்பணை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை; ஒருக்கால் கல்லணையை சீர்படுத்திக் கட்டியிருப்பாரோ என்னவோ) இவர் சமஸ்தானத்திற்குட்பட்ட பற்பல சிறு கிராமங்களிலும் அக்ரஹாரம் எனும் குடியிருப்பை அமைத்து அங்கெல்லாம் வேதம் கற்றறிந்த பிராமணர்களை குடியேற்றினார். வேதங்களைப் பயிலவும், வேத முறைகளின்படி யாகங்களை மக்கள் நன்மைக்காக செய்யவும் இவர் ஊக்கமளித்தார். சோழநாட்டை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில்தான் வேத பிராமணர்களுக்கென்று நிலவுடைமை, பசுக்கள் இவைகள் தானமாகப் பெற்று வாழ்ந்த செய்தி நமக்குக் கிடைக்கிறது.

இலக்கியம் இவர் காலத்தில் செழித்து வளர்ந்தது. தமிழும், சம்ஸ்கிருதமும், தெலுங்கும் மக்கள் நன்கு அறிந்திருந்தனர். பற்பல இலக்கியங்கள் இந்த மொழிகளில் உருவாகி வந்தன. அப்போது இயற்றப்பட்ட சம்ஸ்கிருத, தெலுங்கு இலக்கியங்கள் தஞ்சை நாயக்க வம்சத்தின் பெருமைகளை பறைசாற்றின. அந்த இலக்கியங்கள் தஞ்சை நாயக்கர்கள் ஆண்ட பகுதிகளை இப்போது போல நெற்களஞ்சியம் எனும் பொருள்பட "சாலிவனம்" என்று அதாவது நெல்விளையும் காடு என்று குறிப்பிட்டு, நாட்டின் வளத்தைச் சொல்லி பெருமைப் பட்டன. ஆக மொத்தம் பொதுவாக நாயக்க மன்னர்கள் காலம், குறிப்பாக அச்சுதப்ப நாயக்கர் காலம் காவிரிபாயும் சோழவழநாடு செல்வச் செறுக்கோடும், வளத்தோடும் இருந்து இலக்கியங்கள், கலைகள் இவைகளின் மறுமலர்ச்சி காலமாகவும் விளங்கியிருப்பது தெரிகிறது. இத்தனை இருந்தும் இந்த நாயக்க வம்சத்தினர்களின் ஆட்சி குறித்து அதிகம் பேசவோ, எழுதவோபடவில்லை என்பது ஏன் என்பது தெரியவில்லை. காரணம் தெலுங்கு மொழி கோலோச்சியதால், தமிழில் எந்தவொரு இலக்கியமும் இவர்கள் மீது இயற்றப்படாமல் இருந்திருக்கலாம்.

அச்சுதப்ப நாயக்கர் பதவியேற்ற காலம் தொடங்கி தன்னுடைய இறுதி காலம் வரை எஜமான விசுவாசியாகவே இருந்திருக்கிறார். அச்சுத் தேவ ராயர் காலத்தில் தஞ்சைக்கு அனுப்பப்பட்ட இவருடைய தந்தை சேவப்பர் காலத்திலும் சரி, இவர் பதவியேற்ற காலம் முழுவதும் விஜயநகரத்தில் மன்னர்கள் தொடர்ந்து மாறியபோதும், அதாவது அச்சுத தெவராயர், சதாசிவ ராயர், திருமலை ராயர், ஸ்ரீரங்கா, வேங்கடபதி ராயர் ஆகியோரிடமும் இவரது விசுவாசம் மாறாமலே இருந்து வந்திருக்கிறது.

சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் விஜயநகர பேரரசுக்கு எதிராக எழுந்த மதுரை, செஞ்சி நாயக்கர்களின் கலவரத்தை அடக்குவதற்கு தஞ்சை நாயக்கர்கள் பேருதவி புரிந்து வந்திருக்கிறார்கள். 1565இல் நடந்த தலைக்கோட்டை யுத்தம் விஜயநகரத்து இந்து சாம்ராஜ்யத்தைத் தலைகீழாகப் புறட்டிப் போட்டுவிட்டு, தட்சிண சுல்தான்களின் ஆதிக்கம் பரவ காரணமாக அமைந்தது. இத்தனைக்கும் மத்தியில் விஜயநகரத்தில் வேங்கடபதி ராயரும், தெற்கே தஞ்சையில் அச்சுதப்ப நாயக்கரும் அவர்களது ஆட்சி நீடித்து நிலைக்க அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டனர். அச்சுதப்ப நாயக்கரின் இந்த அரிய பணிக்கு அமைச்சர் கோவிந்த தீக்ஷதரும், மகன் ரகுநாத நாயக்கரும் உறுதுணையாக இருந்து வந்தனர்.

மதுரையில் 1572 முதல் 1595 வரையிலான காலகட்டத்தில் அரசாண்ட மன்னர் வீரப்ப நாயக்கர். இவரோடு விஜயநகர மன்னர்கள் தஞ்சையை அடுத்த வல்லம் எனுமிடத்தில் போர் செய்ததாகவும் ஒரு செய்தி இருக்கிறது. எனினும் இந்த யுத்தம் குறித்த செய்தி சொல்வதற்குக் காரணம் எப்போதும் தஞ்சை நாயக்கர்கள் விஜயநகர மன்னர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்வதற்காகத்தான்.

இந்த வல்லம் யுத்தத்துக்குப் பிறகு மதுரையை 1595 முதல் 1601 வரை அரசாண்ட 2ஆம் கிருஷ்ணப்ப நாயக்கரும் 1601 முதல் 1609 வரை அரசாண்ட முத்துகிருஷ்ணப்ப நாயக்கரும் முந்தைய வீரப்ப நாயக்கரைப் போலன்றி விஜயநகர பேரரசுக்கு அடங்கி நடந்து கொண்டிருந்திருக்கின்றனர். அந்த காலகட்டத்தில் மதுரை நாயக்கர்களுக்கும் தஞ்சை நாயக்கர்களுக்கும் எந்தவித உரசலும் இல்லாமல்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் முத்துகிருஷ்ணப்ப நாயக்கருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த முத்து வீரப்ப நாயக்கர் காலத்தில் தஞ்சை நாயக்கர்களோடு ஒத்துப் போகவில்லை என்பது தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் முந்தைய மதுரை அரசர்களைப் போல் அல்லாமல் விஜயநகர பேரரசோடும் மோதல் போக்கையே கையாண்டிருக்கிறார். "ரகுனாதப்யுதயம்" எனும் சம்ஸ்கிருத இலக்கியத்தில் அச்சுதப்ப நாயக்கர் போர்த்துகீசியருடன் நாகப்பட்டினம் அருகே யுத்தம் செய்தது பற்றி குறிப்பிடுகிறது. அதில் போர்த்துகீசியர்களை 'பரசிகர்கள்' என்றும் மற்றொரு இலக்கியத்தில் பொதுவாக 'பறங்கியர்கள்" என்றும் குறிக்கிறார்கள்.

இத்தனைக்கும் இடையில் அச்சுதப்பரின் காலம் அமைதியான காலம் என்கிறது வரலாறு. தஞ்சை படைகள் பல போர்களில் பங்கு கொண்டாலும், இவர்களது இழப்பு ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லை எனத் தெரிகிறது. அச்சுதப்பருக்கு யுத்தத்தைக் காட்டிலும் கலை இலக்கியங்களின்பால் ஈர்ப்பு அதிகமாக இருந்திருக்கிறது. இவர் காலத்தில்தான் நிர்வாக வசதிக்காக பல அரசாங்கக் கட்டடங்கள் கட்டப்பட்டதாகவும், பழுதுபட்ட பல ஆலயங்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. திருவண்ணாமலை கோயிலுக்கு இவருடைய தந்தை செய்த கொடைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல அக்கோயிலின் கலசத்துக்கு தங்கக் கலசம் அளித்ததாகவும் தெரிகிறது. மத்தியார்ச்சுனம் என புகழ்பெற்ற திருவிடைமருதூர் மகாலிங்கர் ஆலயத்துக்கு ஆடிப்பூரம் உத்சவத்துக்காக ஒரு கிராமத்தையே கொடையாகக் கொடுத்திருக்கிறார். மாயூரத்தை அடுத்த மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயிலுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுத்திருக்கிறார். 

இவைகள் அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல இவர் ஒவ்வோராண்டும் இராமேஸ்வரம் யாத்திரை செல்வது வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அங்கு இராமநாதசுவாமி கோயிலுக்குக் கோபுரங்கள் கட்டித் தந்திருக்கிறார். அங்கு ஒவ்வொரு நாளும் கடலில் நீராடி சுவாமி தரிசனத்துக்கு வரும் ஆயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார். 

அச்சுதப்பரின் இறுதிக் காலம்.

இப்போதெல்லாம் பதவியில் இருப்போர் போதும், நமக்கு வயதாகிவிட்டது என்று இளைய தலைமுறையை பதவியில் அமர விடுவதில்லை. தசரத சக்கரவர்த்தி தன் தலைமுடியில் ஒன்று நரைத்து விட்டது என்பதைக் கண்டு, போதும் நாம் ஆண்டது, இனி ராமனை அரசனாக்குவோம் என்று அவனுக்குப் பட்டம் சூட்ட முனைந்தானாம். அது அந்தக் காலம். கேரளத்தில் அச்சுத மேனன் என்றொரு கம்யூனிஸ்ட் தலைவர். ஒரு முறை முதல்வராக இருந்த அவர் போதும், இனி வேறு யாராவது பொறுப்பேற்கட்டும் என்று விலகி நின்ற கதை நம் காலத்தில் நடந்தது. போகட்டும் அந்தக் கதைகள். நாயக்கர்கள் கதைக்கு வருவோம். அச்சுத மேனன் பற்றி பார்த்தோமல்லவா, அதே பெயரைக் கொண்டதாலோ என்னவோ அச்சுதப்ப நாயக்கரும் விஜயநகர சக்கரவர்த்தி வேங்கடபதி ராயர் 1614இல் காலமானவுடன், தான் ஆண்டதும் போதும் என்று பதவி விலகிக் கொண்டு, தனது மகன் ரகுநாத நாயக்கரை பதவியில் அமர்த்திவிட்டுத் தான் நற்காரியங்கள் புரிந்து இறை பணியில் தன் வாழ்நாளைக் கழித்திட முடிவு செய்தார். வானப்பிரஸ்த வாழ்க்கை வாழ்ந்தார்.அதற்காக அவர் ஸ்ரீரங்கம் சென்று ஆன்மிகத்திலும் வழிபாடுகளிலும் ஈடுபட்டு, வைஷ்ணவ அறிஞர்களோடு தொடர்பு கொண்டு இறுதிக் காலம் வரை வாழ்ந்தார். திருவரங்கன் கோயிலில் ஒரு வைணவ பக்தனைப் போல உடை அணிந்துகொண்டு, உடலெங்கும் பன்னிரெண்டு திருமண் இட்டுக் கொண்டு, அரங்கன் பெயரைச் சொல்லி கைங்கர்யங்கள் செய்து வந்த காட்சியை என்னவென்று சொல்வது. ஒரு மாமன்னன் வானப்பிரஸ்தனாகி அனைத்தையும் துறந்து பெருமாள் கைங்கர்யத்தில் ஈடுபட்ட அதிசயம் இங்குதான் நடக்க முடியும். அப்படிப்பட்ட அற்புதான வாழ்க்கை அச்சுதப்ப நாயக்கரின் வாழ்க்கை. மற்றவர்கள் பார்த்து பின்பற்றவேண்டிய அசாத்தியமான பண்புகளைக் கொண்டிருந்தவர் அவர். அவருக்கு அமைந்த அமைச்சரும் அப்படிப்பட்டவர் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். வாழ்க அச்சுதப்ப நாயக்கரின் பெருமை.

இவ்வளவும் சொல்லிய பின் அச்சுதப்பர் எப்போது இறந்தார்? தெரியவில்லை. ஒரேயொரு செய்தி மட்டும் அவர் இறந்த ஆண்டை கணக்கிட உதவுகிறது. ஒரு சம்ஸ்கிருத இலக்கியத்தில் அச்சுதப்பரின் ஆசியைப் பெறுவதற்காக ரகுநாத நாயக்கர் ஸ்ரீரங்கம் வந்து தந்தையிடம் ஆசி வேண்டினார் என்கிறது. அது நடந்தது 1617 என்பதால், அச்சுதப்பர் 1617க்குப் பிறகுதான் இறந்திருக்க வேண்டும்.


Tuesday, September 23, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 8

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 8

அச்சுதப்ப நாயக்கர். (1560 -1614)

சேவப்ப நாயக்கரின் புதல்வர் அச்சுதப்ப நாயக்கர் என்பதையும், தந்தை காலத்திலேயே இவர் இளவரசராக இருந்து ராஜ்ய விஷயங்களைக் கவனித்து வந்தார் என்பதைப் பார்த்தோம். சேவப்ப நாயக்கருக்கு தஞ்சை மன்னன் என்கிற பதவியை வழங்கிய விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தியும் கிருஷ்ணதேவ ராயரின் தம்பியுமான அச்சுததேவ ராயரின் நினைவாக சேவப்பரின் மகனுக்கு அச்சுதப்ப நாயக்கர் என்று பெயரிடப்பட்டது. இவர் தஞ்சாவூர் ராஜ்யத்தை 54 ஆண்டுகள் சிறப்பாகவும், அமைதியாகவும் ஆட்சி புரிந்து வந்திருக்கிறார். இவர் தன் தந்தையிடம் யுவராஜாவாக பணியாற்றியதைப் போல இவர் காலத்தில் இவருடைய மகன் ரகுநாத நாயக்கர் தந்தைக்குத் துணை புரிந்து வந்தார்.

1560ஆம் ஆண்டு தொடங்கி 1580வரையிலான இருபது ஆண்டுகளில் தந்தைக்குத் துணையாக இருந்து கொண்டு ராஜ்ய பாரத்தை நடத்திக் கொண்டிருந்த அச்சுதப்ப நாயக்கர் 1580 தொடங்கி 1614 வரையிலான காலகட்டத்தில் ராஜ்யத்தின் மன்னனாக தனித்து ஆட்சியைக் கவனித்துக் கொண்டிருந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் மக்கள் சுகமாகவும், அமைதியாகவும், நிலையான ஆட்சியின் கீழ் வாழ்ந்து வந்தனர். 

சேவப்ப நாயக்கரின் மூத்த மகன் இந்த அச்சுதப்ப நாயக்கர். இவருடைய மனைவி மூர்த்திமாம்பா. இந்த அச்சுதப்ப நாயக்கரை சின்னசேவா அச்சுதா என்றும் சேவப்ப அச்சுதா என்றும்கூட குறிப்பிடுகின்றனர். அச்சுதப்ப நாயக்கர் தஞ்சாவூரை 54 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கிறார். இவருடைய காலத்தில் கட்டடக் கலையும், சிற்பக் கலையும், கலை இலக்கியங்களும் சிறப்பாக வளர்ச்சியடைந்தன. இசை, நடனம் போன்ற கலைகள் வளர்ச்சியடைந்தன. இவருடைய 54 ஆண்டு ஆட்சிக் காலத்தின் முற்பகுதி பெரும்பாலும் அமைதியாகத்தான் நடைபெற்றது. ஆனால் அவருடைய ஆட்சியின் கடைசி கட்டத்தில் முகமதியர் படையெடுப்புகளாலும், போர்த்துகீசியர்களோடும் இவர் போராடவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இவர் விஜயநகர சக்கரவர்த்தியுடன் சுமுகமான உறவை மேற்கொண்டு வந்தார். அவர்கள் ஈடுபடும் போர்களில் எல்லாம் தஞ்சை மன்னரான அச்சுதப்ப நாயக்கர் பேருதவிகள் புரிந்தார். அச்சுதப்ப நாயக்கரின் வெற்றிக்குப் பின்புலத்தில் இருந்தவர் அமைச்சர் கோவிந்த தீக்ஷிதர். மகா பண்டிதரான கோவிந்த தீக்ஷிதரின் சாதுர்யம், அறிவாற்றல், செயல் திறன் இவைகளால் அவருக்கு மட்டுமல்ல, அவரது எஜமானரான அச்சுதப்ப நாயக்கருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இன்று வரை கோவிந்த தீக்ஷிதரின் பெயர் மக்களின் நினைவில் இருக்கிறதென்றால், அதற்கு அவருடைய செயற்கரிய சாதனைகளே காரணம்.

அமைச்சர் கோவிந்த தீட்சதர்.

தஞ்சை நாயக்க மன்னர்களின் காலத்தில் சேவப்ப நாயக்கரின் கடைசி நாட்கள் தொடங்கி அச்சுதப்ப நாயக்கர் காலம் முழுவதும் இருந்து பிறகு ரகுநாத நாயக்கர் காலம் வரை அவர்கள் ஆட்சியில் அமைச்சராகவும், ராஜகுருவாகவும் இருந்து வழிகாட்டி, நல்ல பல காரியங்களை மக்கள் நலனுக்காக செய்தவர் கோவிந்த தீட்சதர். சோழ நாட்டின் தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இவர் பெயரை இன்றும் சொல்லக்கூடிய எத்தனை இடங்கள்? ஐயன் கடைத் தெரு, ஐயன்பேட்டை, ஐயன் வாய்க்கால், ஐயன் குளம் இதுபோன்ற இடங்களில் ஐயன் என்பது இவரைக் குறிக்கும் சொல். இவர் அந்த காலத்தில் செய்த செயற்கரிய சாதனைகளின் சரித்திரச் சான்றுகள் இவை.

ஒரு மன்னன் தன் குடிமக்களுக்கு என்னவெல்லாம் செய்து தரவேண்டும், தான் சுகபோகங்களோடு வாழ்க்கை நடத்துவதும், எதிரிகளோடு போர் புரிந்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலியிடுவதும், தன் மக்கள், தன் சுற்றம் இவர்களின் நல்வாழ்வை மட்டும் பேணிப் பாதுகாப்பது மட்டும் ஆட்சி அல்ல. பின் என்ன செய்ய வேண்டும்? மக்கள் பயன்பாட்டுக்கான தர்ம காரியங்களைச் செய்வது, கல்விக்காக, உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காக, ஒரு இடம் விட்டு வேறொரு இடம் பயணம் செய்ய நல்ல சாலைகளை அமைப்பதற்காக, நீர் நிலைகளை நல்ல முறையில் பேணி பாதுகாக்கவும், புதிய நீர் நிலைகளை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுத்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது ஒரு அரசின் தலையாய பணி அல்லவா? அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் செய்து தந்தவர் இந்த கன்னடத்து பிராமண அமைச்சர். எழுபத்தைந்து ஆண்டுகள் இவர் அமைச்சராக மூன்று மன்னர்கள் காலத்தில் இருந்து தொண்டாற்றியவர் கோவிந்த தீட்சதர்.

இதில் என்ன புதுமை இருக்கிறது. வரலாற்றுப் பாடங்களைப் படிக்கும்போது எல்லா மன்னர்களுமே செய்த பணிகள் எவை என்பதைக் குறிப்பிடுகையில், அவர்கள் சாலைகளைப் போட்டார், வழிநெடுக மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார் என்றுதானே எழுதுகிறார்கள் என்று சொல்வதும் புரிகிறது. ஆனால் இவர் சாதனை அவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை. காலத்தால் அழிக்கமுடியாத அரிய பல செயல்பாடுகள் இவர் செய்திருக்கும் சாதனை. கும்பகோணம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது மகாமகம். கும்பேஸ்வரன் கோயிலின் இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த விழாவில் மக்கள் மூழ்கி எழும் மகாமகக் குளத்தைப் பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டாவது இருப்பீர்கள். அந்த மாபெரும் குளத்தையும், சுற்றிலும் படிக்கட்டுகளையும், அதனைச் சுற்றி பதினாறு ஷோடச சிவலிங்கங்கள் அதற்குரிய மண்டபங்கள் இவை அத்தனையையும் கட்டி முடித்தவர் இந்த கோவிந்த தீட்சதர்.

இவரது இந்த சாதனையைப் பாராட்டி நாயக்க மன்னர் ஒருவர் இவருக்கு துலாபாரம் செய்து தராசில் ஒரு தட்டில் இவரை உட்காரவைத்து மற்றொரு தட்டில் பொன்னை அள்ளிக் கொட்டி இவருக்கு அளித்தாராம். அந்த சிலையை மகாமகக் குளக் கரையிலுள்ள ஒரு மண்டபத்தில் இப்போதும் பார்க்கலாம்.

கும்பகோணம் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்திருப்பது, குறிப்பாக பெரிய கடைத்தெருவுக்கு மிக அருகில் அமைந்துள்ளது இராமசாமி கோயில். இதனைக் கட்டியவர் கோவிந்த தீட்சதர். இந்த கோயிலின் சிறப்பு என்ன தெரியுமா? இங்கு இராமாயணக் காட்சிகள் அனைத்தையும் பிரகாரச் சுவற்றில் வண்ணத்தில் தீட்டிவைத்தது இவரது சாதனை. கும்பகோணத்தில் மங்களாம்பிகா அம்மன் கோயில், பட்டீஸ்வரம் தேனு புரீஸ்வரர் கோயில், பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை ஆலயம் இவைகள் அனைத்துமே இவரது அர்ப்பணிப்புகள்.

புதிதாக உருவாக்கிய கோயில்கள் தவிர, மிகப் பழமையான சில கோயில்களை இவர் புதுப்பித்துக் கட்டியிருக்கிறார். அவை விருத்தாச்சலம், திருவண்ணாமலை, சிதம்பரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள புகழ்மிக்க ஆலயங்கள்.

காவிரி ஒரு புனித நதி. கரையெங்கும் காவிரித்துப் புகழ் பரப்பி ஓடும் ஜீவநதி. அந்த காவிரியின் கரையெங்கும் படித்துறைகள். புனிதத் தலங்களில் புஷ்ய மண்டபங்கள், அவை திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை துலா கட்டம் என்று இன்றும் மக்கள் பயன்பாட்டுக்குக் காணக்கிடைப்பவை. மயிலாடுதுறையிலும், திருவிடைமருதூரிலும் மகாதானத் தெரு என்ற பெயரில் ஒரு தெரு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். மகாதானம் என்றால் என்ன? வேத விற்பன்னர்களுக்குத் தானமாக வீடுகளைக் கட்டிக் கொடுத்து புகழ்மிக்கத் தலங்களான இந்த ஊர்களில் மக்கள் நன்மைக்காக யாகங்களை செய்துவர வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட வீதிகள் இவை. இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இவர் சில ஊர்களை முழுவதும் தானமாகக் கொடுத்திருந்தார், அவை மூவலூர், தேப்பெருமநல்லூர், சூலமங்கலம், ஊத்துக்காடு, சாலியமங்கலம் முதலியவை.

தெருக்கள் மட்டுமா இவர் மகா தானமாகக் கொடுத்தவை, அல்ல, சில ஊர்களும் கூட இதில் அடங்கும். குறிப்பாக திருவையாறு கும்பகோணம் சாலையில் உள்ள ஈச்சங்குடி, கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள வரகூர், கந்தமங்கலம் ஆகிய ஊர்கள் இதே காரணங்களுக்காக உருவாக்கப்பட்டு மகா தானமாக அளிக்கப்பட்டவை. இங்கு குறிப்பிடும் ஈச்சங்குடி கிராமத்தில்தான் காஞ்சி பரமாச்சாரியார் என வழங்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமியின் தாயார் அவதரித்தார். எங்கும் எப்போதும் மக்கள் வளத்தோடும், மனமகிழ்ச்சியோடும் வாழ வேதங்கள் ஓதப்படவேண்டும் எனும் எண்ணத்தில் எங்கும் வேத கோஷம் முழங்குவதற்காக இத்தனை ஊர்களை, தெருக்களை தானமாகக் கொடுத்து வந்திருக்கிறார் கோவிந்த தீட்சதர். அந்த இடங்களில் சிலவற்றில் இன்றும்கூட வேதபாடசாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக ஈச்சங்குடி பாடசாலையும் கும்பகோணம் ராஜா பாடசாலையும் சிறப்பானவைகள்.

"மக்கள் நலனும் வாழ்வும் அமைதியும் சதாசர்வ காலம் வேதகோஷம் முழங்குவதில்தான் இருக்கிறது" என்கிறது மனுஸ்மிருதி. வேதங்கள் ஓதப்படுவதோடு, இளைய பிரம்மச்சாரிகளுக்கு அதனைக் கொண்டு சேர்க்கவும் வேண்டும். அதற்காக வேத பாடசாலைகளை அவர் உருவாக்கிவைத்தார். கும்பகோணம் ராஜா பாடசாலை என்ற அமைப்பு இன்றும் உயிர்ப்போடு இயங்கி வருவதை நாம் அறிவோம். இந்த ராஜா பாடசாலையில் ரிக், யஜுர், சாம வேதங்களோடு, ஆகம சாஸ்திரமும் பயிற்றுவிக்கப் படுகிறது. இதுபோன்றதொரு பாடசாலை இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு வேதத்தை அத்யாயனம் செய்து முடிக்க எட்டு ஆண்டுகள் ஆகும். இந்த பாடசாலையில் படித்துப் பின் இசைத் துறையில் பிரபலமடைந்தவருள் ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் முக்கியமானவர்.

வேதம் படித்த ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் இசைத் துறையில் கர்நாடக சங்கீத மூவருள் ஒருவராக ஆனாரா என்று வியப்பாக இருக்கும். வியப்படைய வேண்டாம். காரணம் இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்த கோவிந்த தீட்சதர் இசையிலும் வல்லவர். "அத்வைத வித்யா ஆச்சார்ய" என்ற பட்டப்பெயரோடு விளங்கிய இவர் கர்நாடக சங்கீதத்தில் "சங்கீத சுதாநிதி" எனும் அற்புதமான இசை நூலையும் இயற்றியிருக்கிறார். அதுமட்டுமல்ல "திருவையாறு புராணம்" சம்ஸ்கிருத மொழியில் இருந்ததை ஒரு புலவரைக் கொண்டு இவர் தமிழில் மொழியாக்கம் செய்யச் செய்திருக்கிறார்.

கோவிந்த தீட்சதருடைய மூத்த மைந்தன் யக்ஞநாராயண தீட்சதர். இவர் வேத சாஸ்திரங்களில் படித்துத் தேர்ந்தவர் என்பதுகூட இவர் பல இலக்கியங்களையும் படைத்திருக்கிறார். அவை ரகுநாத நாயக்கர் மீதான "ரகுநாத பூபால விஜயம்", "ரகுநாத விலாஸ நாடகம்", "சாஹித்ய ரத்னாகரம்" ஆகியவை.

இவருடைய இளைய மைந்தன் வேங்கடமகி என்பார் பல இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். சம்ஸ்கிருத இலக்கியங்கள் தவிர இசைத் துறையில் "சதுர்தண்டி பிரகாசிகா" எனும் நூலையும் இயற்றியிருக்கிறார். இவருக்கும் பல மகா பண்டிதர்கள் சீடர்களாக இருந்திருக்கின்றனர்.

காஞ்சி மகாபெரியவருடைய தாயார் பிறந்த ஊர் ஈச்சங்குடி என்று முன்பு குறிப்பிட்டோம் அல்லவா? அது தவிர 1814 முதல்1857 வரை காஞ்சி மடத்து ஆச்சாரியாராக இருந்த மற்றொரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த தீட்சதர் வம்சத்தில் பிறந்தவர். கோவிந்த தீட்சதரின் இளைய மகன் என்று குறிப்பிட்ட வேங்கடமகி என்பவரின் பேரன் இந்த ஆச்சார்யார்.

புகழ்மிக்க கோவிந்த தீக்ஷதர் பற்றிய பாடல் ஒன்று திருவையாறு புராணம் எனும் நூலில் காணக் கிடைக்கின்றது. அது வருமாறு:-

"மலிபுனல் சூழ்சோணாடு தஞ்சையிற் காத்திடும் அரசர்
மதியமைச்சர் ஒலிமறைதேர் கோவிந்த தீட்சதராயன்
திருவாக்கு உடைமையாலே, கலியுகத்துச் சகராண்டு
மூவைஞ் நூற்றிருபதின்மேல் காணுமேழாய் பொலி
வருடத்தை யேரற்றுப் புராண வடமொழி தமிழாற் புகலுற்றேன்."

இத்தகு பெருமைமிகு அமைச்சர் கோவிந்த தீட்சதரின் சிலை அவருடைய துணைவியார் நாகம்மாள் உருவத்துடன் கல் சிற்பமாக பட்டீஸ்வரம் ஆலயத்தில் பார்க்கலாம். ராமேஸ்வரம் கோயிலிலும் இவர்கள் சிலையை நிறுவியிருக்கிறார்கள். கும்பகோணத்தையடுத்த பட்டீஸ்வரத்தில் மிக எளிய இல்லத்தில் வாழ்ந்த இவர் யோகநித்திரையில் இருக்கும்போதே உயிர் நீத்தார். இவருடைய இறுதி நாட்களில் இவர் மங்களாம்பிகா ஆலயஹ்தில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார் என்கின்றனர்.

இத்தகைய மதியூகியாகவும், நிர்வாகத் திறன் கொண்டவராகவும், தர்மத்தின்பால் பற்று கொண்டவராகவும் இருந்து நீண்ட நெடுங்காலம் தஞ்சை நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராக இருந்து பணியாற்றிய கோவிந்த தீட்சதரால் நாயக்கர் வம்சம் புகழ்பெற்றதா, நாயக்க மன்னர்கள் கொடுத்த வாய்ப்பினால் தீட்சதர் தன் திறமையை வெளிப்படுத்தினாரா என்பது பட்டிமன்றத்துக்குரிய தலைப்பாக இருக்கும். 

வல்லம்பிரகார யுத்தம்:

1579இல் மதுரையை ஆண்ட மன்னன் வீரப்ப நாயக்கர் தன்னை மிக அதீதமான வல்லமையுள்ள அரசன் என்று நினைத்துக் கொண்டு, தன்னை மன்னனாக ஆக்கிய விஜயநகர சாம்ராஜ்யத்தையே எதிர்த்துக் கொண்டார். விஜயநகர சாம்ராஜ்யத்திலிருந்து விடுபட்டு மதுரையைச் சுதந்திர நாடாக இவர் அறிவித்து விட்டார். தான் பார்த்து பிடித்து வைத்த ராஜா தன்னையே எதிர்க்க வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததைப் போல இவன் பாய்கிறானே என்று விஜயநகரப் பேரரசர் இரண்டாம் வேங்கடபதி ராயர் பெரும் படையுடன் வீரப்பநாயக்கரை எதிர்த்துப் போரிட வந்து சேர்ந்தார். வழக்கம் போல சக்கரவர்த்திக்கு அடங்கிய தஞ்சை மன்னன் அச்சுதப்ப நாயக்கர் தனது படையுடன் விஜயநகர படைகளோடு சேர்ந்து கொண்டார். இவ்விரு படைகளும் தஞ்சையை அடுத்த வல்லம் எனும் ஊருக்கருகில் மோதிக் கொண்டன. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியின் படையும், தஞ்சை படையும் எதிர்த்துப் போரிடுகையில் மதுரைப் படைகள் தாக்குப்பிடிக்க முடியுமா என்ன? வெற்றி விஜயநகர படைகளுக்கும், தஞ்சை படைகளுக்கும்தான். வீரப்ப நாயக்கர் தோல்வியடைந்தார். 

போர்களில் வெற்றிபெற்ற மன்னர்கள் தங்கள் வெற்றி சிறப்புக்களை உடனடியாக கல்வெட்டிலோ அல்லது செப்புத் தகடுகளிலோ பதித்து வைத்து விடுவது வழக்கம். இதற்கு மாறாக அச்சுதப்பர் எந்த கல்வெட்டிலும் இந்த வெற்றிச் செய்தியையும் பதித்து வைத்ததாகத் தெரியவில்லை. ஒருக்கால் இப்போதைய அரசியல் வாதிகளைப் போல இருந்திருந்தால் தஞ்சை ராஜ்யம் முழுவதும் வெற்றிவிழாக்களைக் கொண்டாடியிருப்பார். நல்ல காலம் அப்போது அப்படிப்பட்ட அரசியல் நிலைமை இல்லை.

அவர் தன் வெற்றியை பறைசாற்றிக் கொள்ளவில்லையே தவிர புதுக்கோட்டை செப்பேடுகளில் இந்த விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதிலும் ஒரு சிக்கல். அந்த செப்பேட்டில் குறிப்பிட்டுள்ள ஆண்டில் வேங்கடபதி ராயர் சக்கரவர்த்தியாக இல்லை, அவர் அதற்குப் பிறகுதான் ஆட்சிக்கு வந்தார், ஆகவே இதில் ஏதோ தவறு இருக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.

போர்த்துகீசியர்களுக்கு எதிரான போர்.

நாகப்பட்டினத்துக்கருகில் அச்சுதப்ப நாயக்கர் 'பரங்கியர்'களுடன் போரிட்டு வெற்றி பெற்றதாக "சாஹித்யரத்னாகரம்" எனும் நூலில் ராமபத்ராம்பா எழுதுகிறார். பரங்கியர்கள் என்று பொதுவாக நாம் ஐரோப்பிய வெள்ளை நிறத்தவர்களைக் குறிப்பது வழக்கம். இங்கு குறிப்பிடப்படும் 'பரங்கியர்' அனேகமாக அப்போது அங்கு வந்து குடியேறியிருந்த போர்த்துகீசியர்களைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இலங்கையில் குடியேறியிருந்த போர்த்துகீசியர்கள் மெல்ல நாகப்பட்டினத்திலும் வந்து குடியேறினார்கள். தென்னாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளெங்கும் இவர்கள் வந்து குடியேறிய காலம் அது. கள்ளிக்கோட்டை, கோவா போன்ற இடங்கள் நீண்ட நெடுங்காலம் இவர்கள் வசம் இருந்தது என்பது அனைவரும் அறிந்த செய்தி. இவர்களுடைய முக்கியப் பணி உள்ளூர் வாசிகளை மதமாற்றம் செய்வது. அவர்கள் எங்கு குடியேறுகிறார்களோ அந்தப் பகுதி மக்களை உடனடியாக மதமாற்றம் செய்து விடுவது என்பது இவர்கள் வழக்கம். அதுபோலவே இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் இவர்கள் மதமாற்ற நடவடிக்கைகளில் இறன்கியதை யாழ்ப்பாண மன்னர் எதிர்த்தார். ஆனால் இவர்கள் காரியத்தில் குறியாக இருந்த காரணத்தால் யாழ்ப்பாண மன்னர் இவர்கள் மீது போர் தொடுத்தார். அந்தப் போரில் தங்களுக்கு உதவ வேண்டுமென்று தஞ்சை மன்னரிடம் வேண்டுகோள் விடுத்தார் யாழ்ப்பாண மன்னர்.

இந்த நிகழ்ச்சி பற்றி சொல்லப்படும் காலகட்டத்தில், அதாவது 17ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் போர்த்துகீசியர்கள் நாகப்பட்டினம் அருகிலும் வந்து குடியேறியிருந்தார்கள், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தையும் எப்படியாவது தங்கள் வசம் கொண்டுவந்துவிட வேண்டும் என்று பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்த நேரம். அதற்கான படையெடுப்புகளையும் அவர்கள் முனைப்புடன் செய்து வந்தார்கள். இருந்த சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கையில் யாழ்ப்பாண மன்னர் இவர்களுடைய முயற்சிகளை முறியடிக்க இந்த யுத்தத்தில் உதவும்படி தஞ்சை அரசருக்குக் கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அச்சுதப்ப நாயக்கரும் தனது படைகளை அனுப்பி போர்த்துகீசியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றிருக்க வேண்டும். இவற்றுக்கு மேலும் வலுவூட்டும்படியான மற்றொரு செய்தி என்னவென்றால், அந்த சமயத்தில் தஞ்சை மன்னர் போர்த்துகீசியர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் அப்போது தரங்கம்பாடி பகுதியில் வந்து குடியேறியிருந்த டச்சுக்காரர்களோடு நட்புரிமை கொண்டிருந்தார் என்பதுதான். இருக்கலாம் ஒரு ஐரோப்பிய எதிரியை முறியடிக்க மற்றொரு ஐரோப்பிய எதிரியுடன் கைகோர்த்தது, பின்னரும் பிரிட்டிஷ் பிரெஞ்சுக்காரகளை வைத்து பகடையாடியதை வரலாற்றில் பார்க்கிறோமே.