பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 29, 2014

வீர சாவர்கர்

                விநாயக் தாமோதர் சாவர்கர்    
                                                                                                                                                
                               
வீர சாவர்கர் என்று அழைக்கப்படும் இந்த சுதந்திரப் போராட்ட வீரருடைய முழுப் பெயர் விநாயக் தாமோதர் சாவர்கர் என்பதாகும். இவரை சாதாரண சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொன்னால் போதாது, 'வீரர்' எனும் சொல்லுக்கு முழுக்க முழுக்க சொந்தக்காரர். இவருடைய பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, செய்த சாகசங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதற்கு முன்பாக அவரைப் பற்றிய ஒரு முழுமையான அறிமுகத்தைக் கொடுக்க வேண்டியது அவசியம். இன்றைய அரசியல் வாதிகள் 'மதவாதம்' என்று அரசியல் ஆதாயத்துக்காகப் பேசிவரும் அந்த சொல்லின் உண்மையான நேர்மையான பொருளில் இந்துத்துவத்தின் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தவர் சாவர்கர். 

இந்துத்துவம், மதவாதம் போன்ற சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லி இவர் போன்ற தலைவர்களை பூச்சாண்டி போல சித்தரித்து வரும் நமது நாட்டு அரசியல் வாதிகள் இவரைப் பற்றிய சரியான தகவல்களைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள அவர்கள் முயற்சி செய்யவில்லை, பெயரைக் கேட்டவுடனேயே இவரை மதவாதி, காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர் என்றெல்லாம் ஒரு தரப்பு வாதத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள். அதனால் அவருடைய சாகசம், வீரம் வெளிவராமல் போய்விட்டது.

முதலாவதாக அவர் இந்திய சமூக அமைப்பில் இந்துக்களுக்குள் சாதிய அமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. வெள்ளையர்கள் காலத்தில் பாதிரிமார்களின் பிரச்சாரம், சலுகைகள் பெற போல பல காரணங்களால் மதம் மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டுவரப்படவேண்டும் என்பதும் இவருடைய விருப்பம். இன்று பொழுது விடிந்தது முதல் அஸ்தமனம் வரை அரசியல்வாதிகள் ஓலமிடும் "ஹிந்துத்வா" எனும் சொல்லை உருவாக்கியவரே இவர்தான். அவர் இந்த சொல்லின் மூலம் சொல்ல வந்த கருத்தை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது. இனி இவரது வாழ்க்கை சாதனைகளுக்குள் நுழையுமுன்பாக அவரது பிறப்பு வளர்ப்பு பற்றி சிறிது பார்ப்போம்.

மராத்திய மொழி பேசும் மேலைக் கடற்கரைப் பிரதேசத்தில் நாசிக் எனும் புண்ணியத் தலத்துக்கருகில் உள்ள பாகூர் எனும் சிறிய கிராமத்தில் சித்பாவன் கொங்கண பிராமண குடும்பத்தில் தாமோதர் சாவர்கர் ராதாபாய் தம்பதியருக்கு 28-05-1883 அன்று இந்த பூமியில் அவதரித்தார். இவருக்கு இரு சகோதரர்கள் ஒரு சகோதரி. கணேஷ் சாவர்கர், நாராயண் சாவர்கர் என்போர் சகோதரர்கள், மைனா என்பவர் சகோதரி. 

இவருடைய பெற்றோர் காலமான பின் குடும்பத்தை இவருடைய மூத்த அண்ணன் பாபாராவ் என அழைக்கப்பட்ட கணேஷ் சாவர்கர்தான் கவனித்துக் கொண்டார். விநாயக் தாமோதர் சாவர்கருக்கு இவர் ஒரு ஆதர்ச சகோதரர். மாணவப் பருவத்திலேயே சவார்கர் (இவரை இனி சாவர்கர் என்றே குறிப்பிடுவோம்) இளஞர்களை ஒன்று திரட்டி "மித்ர மேளா" எனும் அமைப்பை உருவாக்கி நாட்டுப் பற்றை ஏற்படுத்தி வந்தார். பிரிட்டிஷ் அரசுக்கு மனுப்போட்டு சலுகை கேட்கும் மாதிரியில் அல்லாமல் சூரியனே அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து இந்திய சுதந்திரத்தைப் பெற புரட்சிப் பாதையை ஏற்றுக் கொண்ட அமைப்பு இது. 

அவர் நடவடிக்கைகள் எப்படி இருந்தபோதும், நமது கலாசாரம், பண்பாட்டுச் சூழல் காரணமாக 1901இல் அதாவது அவருடைய 18ஆம் வயதில் யமுனாபாய் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்தப் பெண்ணின் தந்தை ராமச்சந்திர திரயம்பக சிப்ளுங்கர் என்பார்தான் சாவர்கருடைய கல்லூரி படிப்புக்கு உதவி செய்தவர். 1902இல் இவர் புனேயில் இருந்த பிரசித்தமான ஃபர்கூசன் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் துவங்கினார். அப்போது மராத்திய மாநிலத்தில் பிரபலமான தலைவராக இருந்த பால கங்காதர திலகர், பிபின் சந்த்ர பால், லாலா லஜபதி ராய் (இவர்களை அந்தக் காலத்தில் லால், பால், பால் என்பர் (Lall, Paal, Baal) அந்த காலகட்டத்தில் லார்டு கர்சான் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தான். மத அடிப்படையில் பின்னாளில் பிரச்சனைகள் வருவதற்கு இந்தப் பிரிவினையும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. சுதேசி இயக்கமும், வங்கப் பிரிவினையும் மக்கள் மத்தியில் ஒரு பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்த சமயம் அது.

சுதேசிய இயக்கத்தில் அன்னிய துணி பகிஷ்கரிப்பு தலையாயதாக இருந்தது. 1905இல் இவர் அன்னிய துணிகளை தீயிலிட்டு எரித்து மிகப் பெரிய போராட்டமொன்றை நடத்தினார். இவரும் இவருடைய தோழர்களும் இணைந்து நடத்தும் போராட்டத்துக்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டது. அப்படிப்பட்ட அமைப்பு ஒன்றை தோற்றுவித்து அதற்கு "அபினவ பாரதம்" எனப் பெயரிட்டார். இப்படியெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தால் அன்றைய அரசாங்கம் சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா? இவரை கல்லூரியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லையே தவிர பட்டப் படிப்பு தேர்வு எழுத அனுமதித்தார்கள். பட்டம் பெற்ற இவரை லண்டன் மாநகருக்கு அனுப்பி சட்டம் பயில (பார் அட் லா) அனுப்பியவர் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா எனும் சுதேசித் தலைவராவார். 

ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மாவின் தாக்கம் காரணமாக சாவர்கரும் அவர் போன்ற பல இளைஞர்களும் ஒன்று சேர்ந்து "கரம் தள்" எனும் பெயரில், அதாவது "Army of Angry Youth" அமைப்பை ஏற்படுத்தினர். இந்தப் படைக்கு பால காங்காதர திலகரின் தலைமையேற்றார். இந்த காலகட்டத்தில்தான் இந்திய தேசிய காங்கிரசில் மிதவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தேசபக்தர்கள் இரு பிரிவினராக ஆனார்கள். இதில் திலகர் தீவிரவாதிகள் என அழைக்கப்பட்டவர்களின் தலைவராக விளங்கினார். இவர்களில் மிதவாதிகள் என அழைக்கப்பட்டவர்கள் காங்கிரசில் பெரும்பான்மையாக இருந்தார்கள். இவர்கள் பிரிட்டிஷாரிடம் இணக்கமாக நடந்து கொண்டு அவர்களிடம் கேட்டு சில சலுகைகளை பெறுவதுதான் சரியானதாக இருக்கும் என நம்பினார்கள். ஆனால் தீவிரவாதிகள் எனப்படுவோர் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தை ஒழித்து இந்திய பரிபூரண சுதந்திரத்தை அடைய வேண்டும் என போராடினர்.

இந்த நிலையில் 'கிரேஸ் இன்' எனப்படும் சட்டக்கல்லூரியில் சட்டம் பயில லண்டன் சென்ற சாவர்கர் அங்கிருந்த 'இந்தியா ஹவுஸ்' எனும் இல்லத்தில் தங்கினார். இந்த இந்தியா ஹவுஸ் தேசபக்தர் பண்டிட் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்குச் சொந்தமானது. இங்கிலாந்துக்குக் கல்வி பயில வருகின்ற இந்திய இளைஞர்களுக்கு தலைமையகமாகத் திகழ்ந்தது இந்த இந்தியா ஹவுஸ். அப்படி இங்கு வந்து தங்கி தீவிர தேசபக்தர்களாக விளங்கியவர்கள் ஏராளம். அவர்களில் வ.வெ.சு.ஐயர், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் போன்றோரையும் குறிப்பிடலாம். இங்கு வந்து தங்கியிருந்த காலத்தில் சாவர்கர் தேசபக்த இந்திய இளைஞர்களை ஒன்று திரட்டி Free India Society என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அவர்களுக்கு தேசபக்தியை ஊட்டி இந்தியா விரைவில் ஒரு மாபெரும் புரட்சியின் மூலம் சுதந்திரம் பெற பாடுபடத் தொடங்கினார்.

இந்த அமைப்பின் நோக்கம் குறித்து சாவர்க்கர் செய்த அறிவிப்பின் சாராம்சம் இதுதான். "சுதந்திரத்துக்காக பாடுபடும் இந்தியர்களாகிய நாம் குறிப்பிட்ட பிரிட்டிஷ் அதிகாரிகளையோ, அல்லது அவர்களது சட்டங்களையோ குறைகூறுவதில் பயன் இல்லை. அப்படி செய்து கொண்டிருந்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. எந்த அதிகாரியையோ அல்லது எந்தவொரு சட்டத்தையோ எதிர்ப்பது நம் நோக்கமல்ல. ஆனால் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு நம்மை நாமே ஆளக்கூடிய சுயாதிகாரம் பெற்று, நமக்குத் தேவையான சட்டங்களை நாமே உருவாக்கிக் கொள்ளும் இயக்கமே நமது இயக்கம். சுருங்கச் சொன்னால் நமது குறிக்கோள் "பரிபூரண சுயராஜ்யம்".

1857இல் வட இந்தியாவில் தொடங்கிய சிப்பாய் கலகம் என அழைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போரைப் போன்ற ஒரு சுதந்திரப் போர் மறுபடி உருவாக வேண்டுமென்பது அவர் விருப்பம். அதற்காக சாவர்கர் இந்தியா பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்ட வரலாறு குறித்த பல நூல்களைப் படித்தார். உலக நாடுகளில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு விடுதலைப் போர்களைப் பற்றியெல்லாம் படித்தார். அவற்றிலிருந்து அவர் பல கருத்துக்களை ஒருங்கிணைத்து "இந்திய முதல் சுதந்திரப் போர்" The History of the War of Indian Independence எனும் நூலை எழுதி வெளியிட்டார். 1857இல் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் படைகளில் இருந்த இந்திய சிப்பாய்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளின் அடக்குமுறைக்கு எதிராகக் கலகம் செய்ய அடிப்படை காரணங்கள் என்ன என்பதை இவர் விரிவாக ஆராய்ந்தார். இவர்தான் முதன் முதலாக 1857 சிப்பாய்கள் கலகம் என்றிருந்ததை முதல் இந்திய சுதந்திரப் போர் என்று பிரகடனப் படுத்தியவர். இவருடைய இந்த நூலை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு தடை செய்தது. இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்டு ஐரோப்பாவில் குடிபெயர்ந்த இந்தியர் மேடம் காமா அம்மையார் என்பார் இந்த நூலை ஐரோப்பாவில் பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வெளியிடும் உரிமையைப் பெற்றார். அப்படி உலகெங்கிலும் மக்கள் குறிப்பாக இந்திய இளைஞர்கள் வாங்கிப் படிக்கும் நூலாக இது திகழ்ந்த காரணத்தால் இந்திய விடுதலை உணர்வு உலகெங்கும் பரவியது. உலகத்தில் பல்வேறு நாடுகளிலும் வெடித்தெழுந்த புரட்சித் தீ எப்படி பரவியது, எந்தெந்த விதங்களில் புரட்சியாளர்கள் சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போரிட்டார்கள் என்பதையெல்லாம் சாவர்கர் படித்துத் தெரிந்து கொண்டார். அப்போது ரஷ்யா நாட்டில் நடைபெற்று வந்த புரட்சி இயக்கத்துத் தலைவர்களுடன் இவர் தொடர்பு கொண்டார். இரத்தப் புரட்சிக்கு இந்த முயற்சி துணை புரியும் விதத்தில் இவருக்கு வெடிகுண்டுகள் செய்யும் முறை கற்பிக்கப்பட்டது. இவர் கற்றுக் கொண்டு கொரில்லா போர்முறை எனப்படும் மறைந்திருக்கு தாக்கும் போர் தவிர வெடிகுண்டு தயாரிக்கும் முறைகளும் இந்திய இளைஞர்களுக்கு கையேடுகள் மூலம் விளக்கப்பட்டன.

1909ஆம் ஆண்டு மதன்லால் திங்க்ரா எனும் சாவர்கரின் நெருங்கிய நண்பரும் புரட்சிக்காரருமான தேசபக்தர் அப்போது பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சர் கர்ஸான் வாலி என்பவரை பொதுக்கூட்டமொன்றில் சுட்டுக் கொன்றார். இந்த அரசியல் கொலை இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசபக்தர் திங்க்ராவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் ஒரு புறம் வந்து குவிந்தாலும் எதிர்ப்புக் குரல்களும் ஏராளமாக எழுந்தன. இவற்றையெல்லாம் தைரியத்தோடு எதிர்கொண்ட சாவர்கர் திங்க்ராவின் இந்த செயலை மறைமுகமாக ஆதரித்தும், அவருக்கு எதிரான வழக்குக்காக நிதி சேர்த்தும் வரத் தொடங்கினார். இங்கிலாந்தில் வாழ்ந்த இந்தியர்களில் சிலர் திங்க்ராவின் இந்த செயலைக் கண்டிக்கும் விதமாக ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். அந்தக் கூட்டத்தில் அவர்களின் நோக்கத்தை எதிர்த்துக் குரல் எழுப்பியதோடு அவரது ஆதரவாளர்களுக்கும், திங்க்ராவின் செயலை எதிர்ப்பவர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை முற்றியது.

இந்த கொலை வழக்கு ரகசியமான ஓரிடத்தில் நடந்தது. அதன் முடிவில் திங்க்ராவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக இளைஞர்கள் உரக்க எதிர்க்குரல் எழுப்பி கண்டித்தனர். திங்க்ராவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து சாவர்க்கரும் எதிர்த்துப் பேசத் தொடங்கினார். மரண தண்டனை நிறைவேற்றிய பின்னர் திங்க்ராவின் உடலைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று சாவர்க்கர் போராடினார். திங்க்ராவின் தியாகத்தையும், தேசபக்தியையும், தீரத்தையும் பாராட்டி சாவர்க்கர் பேசத் தொடங்கினார். மாபெரும் தியாகி திங்க்ரா என்பதை உரத்த குரலில் உலகுக்கு எடுத்துரைத்தார் அவர். இந்தியா விடுதலை பெற வேண்டுமென்றால் இவரைப் போன்ற தியாகிகள் உருவாக வேண்டுமென்பதை எடுத்துரைத்தார் சாவர்கர்.


அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இவருடைய சகோதரர் கணேஷ் சாவர்கர் மிண்டோ மார்லி சீர்திருத்தத்துக்கு எதிராக ஒர் ஆயுதப் புரட்சியை 1909இல் தூண்டினார். இந்தப் போராட்டத்தில் சாவர்க்கருக்கும் தொடர்பு உண்டு என்று சொல்லி அவரையும் இதில் குற்றவாளியாக ஆக்க முயற்சி செய்தது பிரிட்டிஷ் அரசு. தான் பிரிட்டனில் இருந்தால் கைது செய்யப்பட்டு விடுவோம் என்பதை அறிந்த அவர் அப்போது பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் இருந்த மேடம் காமா இல்லத்துக்குக் குடிபெயர்ந்தார். பிரான்ஸ் நாட்டிற்குள் புகுந்து பிரிட்டிஷ் போலீசார் கைது செய்ய முடியாது என்று நம்பியிருந்த சாவர்கரை இந்திலாந்து போலீசார் பிரெஞ்சு போலீஸ் உதவியுடன் 1910ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாவர்கரை இந்தியா கொண்டு செல்ல பிரிட்டிஷ் போலீசார் ஏற்பாடு செய்து கப்பலில் ஏற்றி பயணம் செய்யத் தொடங்கினர். இந்தியாவுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு முன்பு எப்படியாவது அவர்களிடமிருந்து தப்பிவிட வேண்டுமென்று சாவர்கர் தன்னுடைய நண்பர்களின் உதவியோடு ஏற்பாடுகளைச் செய்தார். அதன்படி 1910 ஜூலை 8ஆம் தேதி கப்பல் மார்சேயில்ஸ் துறைமுகத்தை அடைந்த போது கப்பலின் கழிப்பறையிலிருந்த துவாரத்தின் மூலம் கடலுக்குள் குதித்து நீந்தி கரை சேர முயற்சி செய்தார். ஆனால் கரையில் காத்திருந்து இவரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர்கள் சற்று தாமதமாக வந்ததால் இவரை பிரெஞ்சு போலீசார் பிடித்து பிரிட்டிஷ் போலீசார் வசம் ஒப்படைத்து விட்டனர்.

பிரெஞ்சு நாட்டிற்குள் புகுந்து ஒருவரை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்தது சர்வதேச குற்றம் என்று பிரான்ஸ் எதிர்ப்பு தெரிவித்தது. பிரெஞ்சுக்காரர்கள் பிடித்து வைத்திருந்தால் அவர்களிடமிருந்து சாவர்கரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அரசியல் ரீதியாகக் கேட்டுத்தான் அவரை கைது செய்ய முடியுமே தவிர தங்கள் நாட்டின் சுயாதீனத்தில் குறுக்கீடு செய்தது தவறு என்று பிரெஞ்சு அரசு வாதிட்டது. இந்த பிரச்சனை சர்வ தேச உறவுகள் குறித்தது என்பதால் வழக்கு The Permanent Court of International Arbitration எனும் நீதிமன்றத்துக்கு 1910ஆம் ஆண்டு கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கில் 1911இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. உலக நாடுகள் மத்தியில் இதுபோன்றதொரு நிகழ்ச்சி நடைபெறாததாலும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வழக்கின் முடிவு பிரிதொரு நாட்டில் தஞ்சமடைவோரின் உரிமை பற்றியது என்பதாலும் நீதிமன்றத்தின் முடிவை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. 

நீதிமன்றம் தன் தீர்ப்பை அறிவித்தது. அதன் சாராம்சம் என்னவென்றால், பிரான்ஸ் இங்கிலாந்து ஆகிய இவ்விரு நாடுகளுக்கும் இந்தியாவுக்குக் கப்பலில் கொண்டு செல்லப்படும் சாவர்கர் மார்சேயில்ஸ் துறைமுகத்தில் தப்பிச் செல்லும் முயற்சி நடக்கும் என்பது தெரிந்திருந்ததாலும், அப்படி அவர் தப்பிச் செல்லும்போது பிடித்த பிரெஞ்சு போலீசாரிடமிருந்து பிரிட்டிஷ் போலீசார் பெற்றுக் கொண்டதில் எந்தவித மோசடியோ அல்லது கட்டாயமே இல்லாமல் நடந்தேறியதால் சாவர்கரை பிரிட்டிஷார் பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை என்பது தீர்ப்பு. இப்படியொரு தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் இன்னொன்றையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. அது, சாவர்கரை பிரெஞ்சு எல்லைக்குள் பிடித்து இந்திய ராணுவ போலீசார் வசம் ஒப்படைத்தது தவறான அணுகுமுறை என்றும் சொல்லியது.

இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட சாவர்கர் புனேயிலுள்ள எரவாடா சிறைக்குக் கொண்டு செல்லப் பட்டார். அங்கு விசாரணை என்ற பெயரால் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய நீதிமன்ற விவகாரங்களுக்குப் பின் சவார்கருக்கு 50 ஆண்டுகள் தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்டு 1911 ஜூலை 4ஆம் தேதி அந்தமான் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

அந்தமான் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட சாவர்கர் அங்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் பலர் அரசியல் கைதிகள் என்பதைத் தெரிந்து கொண்டார். அவர்கள் பல ஆண்டுகளாகக் கடின உடலுழைப்புக்கு ஆட்படுத்தப் பட்டிருப்பதையும் கண்டார். இவருக்கு முன்பாகவே அந்தமான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தனது சகோதரர் கணேஷ் சாவர்கரை பல ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு கண்டார். அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மிருகங்களிலும் மோசமாக சித்திரவதைப் படுத்தப்பட்டு சிரமப் பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். கைதிகள் அங்கு காலை ஐந்து மணிக்கெல்லாம் தூங்கி எழுந்துவிட வேண்டும். மரங்கள் வெட்டுதல், செக்கில் எண்ணெய் ஆட்டுதல் ஆகிய பணிகளில் காவலர்களின் கண்காணிப்போடு கடுமையாக உழைக்க வேண்டும். அவர்கள் பணி செய்யும்போதும், உணவு உண்ணும்போதும் மற்ற கைதிகளோடு பேச அனுமதிக்க மாட்டார்கள். சிறு தவறுகளுக்குக்கூட கடுமையான தண்டனை விதிக்கப்படுவார்கள். சித்திரவதை என்பது அங்கு சர்வ சாதாரணம். வெளி உலக தொடர்பு என்பது அறவே கிடையாது. மனைவி மக்களுக்கோ அல்லது உறவு நட்புக்கோ கடிதம் எழுத ஆண்டுக்கு ஒரேயொரு முறை மட்டும் அனுமதி தரப்படும். சாவர்கர் இப்படி அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது, நிலைமை இதுதான் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டமையால், இவைகள் பற்றியெல்லாம் அதிகம் கவலையோ வருத்தமோ பட்டுக் கொண்டு இராமல், இயந்திரத் தனமாக அவருக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை செய்து கொண்டு காலத்தை ஓட்டிவந்தார். 

சிறைக்குள் இருக்கும் அரசியல் கைதிகளில் பலரும் நன்கு கற்றுணர்ந்தவர்கள் என்பதால் அங்கு கைதிகளுக்கென்று ஒரு ஆரம்ப நிலை நூலகம் ஒன்றை சாவர்கர் முயற்சி எடுத்து அனுமதி பெற்று நடத்தத் தொடங்கினார். அந்த சிறையில் எழுதப் படிக்கத் தெரியாத நிலையில் இருந்த பல கைதிகளுக்குப் படிக்கவும் எழுதவும் பயிற்சிகளைக் கொடுக்கத் தொடங்கினார் சாவர்கர்.

இந்திய அரசியல் வானில் 1920 காலகட்டத்தில் தலைசிறந்த தலைவர்களாக விளங்கிய மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், பால கங்காதர திலகர் ஆகியோர் அந்தமான் சிறையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சாவர்கரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தனர். போராட்டம் குறித்த தன் நிலையிலிருந்து எந்த மாற்றத்தையும் விரும்பாத சாவர்கர் பிரிட்டிஷ் அரசு அவர்கள் சட்ட விதிமுறைகளின்படி தன் மீது குற்றம் சாட்டி விசாரித்துத் தண்டனை விதித்திருப்பதைக் குறிப்பிட்டு, அவர்கள் சட்டம் தன் நடவடிக்கைகளையெல்லாம் குற்றம் என்று கருதி தண்டனை கொடுத்திருக்கிறார்கள். தனக்கு வன்முறை மீது நம்பிக்கை இல்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இதுபோன்றதொரு அறிக்கையின் மூலம் தான் வன்முறையாளன் இல்லை என்பதை தெரிவித்தால் ஒருக்கால் தான் விடுதலை ஆகலாம் பின்னர் அரசியலில் ஈடுபடலாம் என்று ராஜதந்திரத்தோடு எண்ணினாரோ என்னவோ அவர் அப்படியொரு அறிக்கை வெளியிட்டார்.

சாவர்கருடைய நடவடிக்கை ராஜதந்திரமே என்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஒளரங்கசீப்புக்கு அதுபோன்றதொரு கடிதம் எழுதி தப்பித்துக் கொண்டதையும் ஜெயவந்த் ஜோக்ளேகர் எனும் வரலாற்றாசிரியர் எழுதியிருப்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

1921 மே மாதம் 2ஆம் தேதி சாவர்கரும் அவர் அண்ணன் கணேஷ் சாவர்கரும் அந்தமானிலிருந்து கொண்டு வந்து ரத்னகிரியில் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கிருந்து சில காலம் கழிந்தபின் மீண்டும் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டனர். இப்படி பல காலம் சிறைப் பறவையாக இருந்த பின்னர் 1924ஆம் வருஷம் ஜனவரி மாதம் 6ஆம் தேதி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து விடுதலை செய்யப்பட்டார். அந்தக் கட்டுப்பாடுகளாவன: ரத்னகிரி மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது; அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அரசியலில் பங்கு பெறக் கூடாது போன்றவையாகும். எனினும் ஆங்கில இந்திய அரசின் கொள்கை மாற்றம் காரணமாக 1937இல் மாகாண சுயாட்சி கொண்டு வந்தபோது இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன.

இந்துத்வா: புரட்சித் தீயில் புடம்போட்டெடுக்கப்பட்டு புரட்சியாளர் என்று ஊர், உலகமறிய பெயர் வாங்கிய சாவர்கர் தனது நீண்ட நெடிய கடுமையான சிறைவாச காலத்தில் அரசியல் மார்க்கத்திலிருந்து சற்றே ஒதுங்கி இந்து கலாசாரம், பண்பாடு, இந்துத்வம், இந்து தேசியம் போன்றவற்றில் கவனத்தைத் திருப்பினார். சிறையிலிருந்து விடுதலையாகி அவர் மீதிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட காலத்தில் இவரது கவனம் முழுவதும் இந்துத்துவத்திலும் அதன் மகோன்னதத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் திரும்பத் தொடங்கியது. அந்தமான் சிறையிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டு, ரத்னகிரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் இந்துத்துவத்தின் பால் கவனம் செலுத்தியபோது இவர் தன்னுடைய கோட்பாடுகளை எழுத்து வடிவில் கொண்டு வந்தார். அது "ஹிந்துத்வம் - ஹிந்து என்பவன் யார்?" என்பது. சிறையில் அவர் எழுதியதை ரகசியமாக வெளியே கொண்டு வந்து சாவர்கரின் ஆதரவாளர்கள் அவருடைய புனைபெயரான "மராட்டியன்" (Maharatta) எனும் பெயரால் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டனர். அவருடைய இந்த ஆழ்ந்தறிந்த தெளிந்த கருத்தோட்டத்தில் ஹிந்துக்களின் அரசியல் சமூக விழிப்புணர்வு குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது. 

அவருடைய இந்த புதிய கண்ணோட்டத்தின்படி "ஹிந்து" என்பவன் பாரதவர்ஷத்தில் வாழ்கின்ற தேசபக்தி மிக்க குடிமகன். அப்படிப்பட்டவன் மதம் சார்ந்த அடையாளத்துக்கும் அப்பால் தேசம், தேசியம், தேசபக்தி இவற்றால் அடையாளம் காணப்படுபவன். பாரதவர்ஷம் எனப்படும் நமது பாரத தேசத்தில் வாழும் அனைவரும் சமமானவர்கள் என்றும் இந்த சமூகத்தில் வாழும் இந்து சமூகத்தினர் அனைவருக்குள்ளும் ஒற்றுமை நிலைத்திடல் அவசியம் என்றும் வரையறுக்கப்பட்டது. இந்திய தேசத்தில் உள்ள இந்துமதம், ஜைனமதம், சீக்கிய மதம், புத்தமதம் அனைத்தும் ஒன்றே, சமமானதே என்பதை உறுதி செய்தது. சாவர்கருடைய நிலையான கருத்தாக "ஹிந்து ராஷ்ட்ரா" (Hindu Nation) அகண்ட பாரதம் (United India) என்கிற குறிக்கோள் விளக்கப்பட்டது. இந்த அகண்ட பாரதம் எனும் சொல்லை வைத்து இப்போதெல்லாம் சில அரசியல் வாதிகள் சாவர்கரின் கருத்தை இன்னதென்று அறியாமலும் புரிந்து கொள்ளாமலும், அவர்களுக்குப் புரிந்த வகையில் 'அகண்ட" எனும் சொல்லுக்கு அக்கம்பக்கத்து நாடுகளை உள்ளடக்கிய என்பது போல பேசிவரும் வேடிக்கையை பார்க்க முடிகிறது. அவர் சொல்லும் அகண்ட பாரதம் என்பது பிரிவினை இல்லாத ஒற்றுமையான மாபெரும் பாரத தேசம் என்பதாகும். இதை யாராவது சற்று இன்றைய அரசியல் வாதிகளுக்குக் குறிப்பாக தமிழக அரசியல் வாதிகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும். அது மட்டுமல்ல சாவர்கர் சொல்லும் "ஹிந்து இனம்" என்பதில் திராவிடன் என்றோ ஆரியன் என்றோ இனப் பிரிவினைகள் கிடையாது அனைவருமே பாரதியர்கள், இந்தியர்கள் என்பதுதான் என்பது மிக உயர்ந்த கொள்கை. இதனை கொச்சைப் படுத்தி பேசுவோர்களை என்னவென்று சொல்வது? இந்தக் கருத்தை வலியுறுத்தும் அவரது பேச்சின் வரிகள் இதோ அப்படியே ஆங்கிலத்தில்: "that people who live as children of a common motherland, adoring a common holyland" இதன்படி பாரத புண்ணிய பூமியில் வாழும் எவரும் எந்தப் பிரிவினரும் பாரதமாதாவின் புத்திரர்கள் என்பதை இல்லை என மறுத்தல் முடியுமா?

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் இலை, செடி, கொடிகளைப் போலவும், ஆட்டு மந்தையில் ஓட்டிச் செல்லப்படும் ஆட்டுக் கூட்டத்தைப் போலவும் 'சாய்ந்தா சாயுற பக்கம் சாயுற செம்மறி ஆடுகளாக" அல்லாமல் சுயமாக சிந்தித்து, ஆழ்ந்து கிடக்கும் ஒளி பொருந்திய உண்மையை உலகுக்கு எடுத்துக் காட்டினால் சமுதாயம் அதனை அத்தனை எளிதில் புரிந்து கொள்ளுமா என்ன? அதிலும் வக்கிர எண்ணங்களும், கோணல் புத்தியும் கொண்டு எதிலும் பிரிவினை, எல்லாவற்றிலும் பிரிவினை, ஏற்றத் தாழ்வு என்று நினைப்பவர்கள் அத்தனை எளிதில் உண்மையைப் புரிந்து கொள்வார்களா என்ன? மாட்டார்கள்! அதனால்தான் மெத்தப் படித்த மேதாவிகளும், வெள்ளைக்காரன் அடிவருடிகளாக விளங்கிய சில சரித்திராசிரியர்களும், வக்கிர எண்ணங்களுடைய இந்திய அரசியல் வாதிகளும் பலரும் பலவிதமாக இவருடைய நோக்கங்களை விமர்சித்தார்கள். முதலில் நாம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு அரசியல் வாதிகளால் 'மதவாதி' என்று முத்திரையிடப்பட்ட சாவர்கர் உண்மையில் ஒரு நாத்திகன். இதை அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார். அவர் கண்ணோட்டத்தில் "ஹிந்து" என்பவன் மத அடிப்படையில் அப்படி அழைக்கப்படுவது இல்லை. கலாசார, பண்பாட்டு, அரசியல் அடையாளத்தின் முத்திரையே ஹிந்து எனும் சொல். அவர் கருத்துப்படி ஒருவன் ஹிந்துவோ, சீக்கியனோ, ஜெயினனோ, புத்தமதத்தவனோ அவன் பிறந்த இந்த பாரத புண்ணிய பூமியின் உண்மையான புதல்வனாக இருத்தல் வேண்டும். இந்த பாரத புண்ணிய பூமியே புனிதத் தலம். இந்த கொள்கையை வேற்று மதத்தவர் சிலர் ஏற்றுக் கொள்வதில்லை. பிற்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அந்தந்த மதங்கள் தோன்றிய இடங்களே அவர்களது புனிதத் தலங்களாக அவர்கள் கருதினார்கள். ஆனால் அவர்களிலும் பெரும்பான்மையானவர்கள் அவரவர் பிறந்த மண்ணே புனித மண் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

1924 ஜனவரி 6இல் சிறையிலிருந்து வெளிவந்த சாவார்கர் தனது நோக்கங்களை நிறைவேற்ற ரத்னகிரி இந்து சபா எனும் அமைப்பைத் தோற்றுவிக்க உதவி செய்தார். சமூக, கலாசார மறுமலர்ச்சிக்கு பாடுபடும் இயக்கமாக இது விளங்கியது. சாவார்கர் இந்தியாவில் இந்தி மொழியை பொதுமொழியாக பயன்படுத்த பிரசாரம் செய்தார். ஜாதி வேற்றுமைகளை அறவே அகற்றிட வேண்டுமென்றார், தீண்டாமை என்ற கொடுமையை இல்லாமல் செய்ய உறுதியேற்றார். இவர் தன்னுடைய அந்தமான் சிறைவாசம் உட்பட பல விஷயங்களைப் பற்றி எழுதி வெளியிட்டிருக்கிறார்.

இந்துமகா சபா. இந்திய சுதந்திரம் நெருங்கி வந்து கொண்டிருந்த சமயத்தில் இந்திய பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை வலுப்பெற்றது. முகமதலி ஜின்னா தலைமையில் இஸ்லாமியர்களுக்கான தனி நாடாக பாகிஸ்தான் உருவாக கோரிக்கை வலுப்பெற்றெழுந்தது. இந்த காலகட்டத்தில் சவார்கர் மும்பைக்குக் குடி பெயர்ந்தார். 1937இல் இவர் அங்கு இந்து மகாசபாவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943ஆம் ஆண்டு வரையிலும் அவர் அந்தப் பதவியில் தொடர்ந்து இருந்து வந்தார். 1937இல் மாகாண சுயாட்சி அறிவிக்கப்பட்ட போது மாகாண ஆட்சி மன்றத்துக்குத் தேர்தல்கள் நடந்தன. அது முதல் இந்திய பிரிவினை வாதம் தீவிரமடையத் தொடங்கியது. ஒன்றுபட்ட இந்தியாவில் அரசியல் கட்சியாக விளங்கிய காங்கிரஸ் பதவிக்கு வந்தால் அது "இந்து ராஜ்யம்" என வர்ணிக்கப்பட்டது. 1939 டிசம்பர் 22ஆம் தேதியை முகமதலி ஜின்னா 'பிரிவினை நாள்" (Day of Deliverance) என அனுசரித்தார்.

1939இல் இரண்டாம் உலகப் போர் பிரகடனம் செய்யப்பட்டபோது யுத்தத்தில் இந்தியாவும் இணைவதாக கவர்னர் ஜெனரல் அறிவிப்பு செய்ததை எதிர்த்து 1937இல் பதவிக்கு வந்த மாகாண காங்கிரஸ் அரசுகள் உட்பட அனைவரும் ராஜிநாமா செய்தனர். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது சவார்கர் யுத்த முயற்சிகளுக்கு பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவு கொடுத்ததோடு, இந்துக்கள் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற வலியுறுத்தினார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, படேல் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆகஸ்ட் 1942இல் "வெள்ளையனே வெளியேறு" எனும் போராட்டத்தை அறிவித்த மறுகணம் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. சவார்கர் இந்தப் போராட்டத்தை எதிர்த்தார். இந்துக்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு தரவேண்டுமென்றும், ராணுவத்தில் சேர்ந்து அனைவரும் ராணுவப் பயிற்சி பெற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். யுத்தக் கலையில் நமக்கு அனுபவம் வேண்டுமென்றார் அவர். 1944இல் மகாத்மா காந்தியும் முகமதலி ஜின்னாவும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துவதை சவார்கர் எதிர்த்தார். இப்படியொரு சமாதானப் பேச்சை இவர் விரும்பவில்லை. அதை "Appeasement" என்றார். நாட்டுப் பிரிவினைக் கொள்கையை எதிர்த்துத் தன் கருத்தை பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்தார். இந்து மகாசபாவின் துணைத் தலவராக விளங்கிய டாக்டர் ஷ்யாமா ப்ரசாத் முகர்ஜி 'அகண்ட பாரதக்' கொள்கைக்கெதிராக தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார்.

1940இல் முஸ்லீம் லீக் இரு நாடுகள் கோட்பாட்டின்படி இந்திய பாகிஸ்தான் பிரிவினையை வலியுறுத்தி லாகூர் தீர்மானத்தை நிறைவேற்றியது. இது குறித்து பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் சவார்கருடைய நிலைப்பாட்டை தன்னுடைய நூலான "பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை" யில் விரிவாக எழுதியிருக்கிறார். அந்தப் பகுதி இதோ அப்படியே.

"Mr. Savarkar... insists that, although there are two nations in India, India shall not be divided into two parts, one for Muslims and the other for the Hindus; that the two nations shall dwell in one country and shall live under the mantle of one single constitution;.... In the struggle for political power between the two nations the rule of the game which Mr. Savarkar prescribes is to be one man one vote, be the man Hindu or Muslim. In his scheme a Muslim is to have no advantage which a Hindu does not have. Minority is to be no justification for privilege and majority is to be no ground for penalty. The State will guarantee the Muslims any defined measure of political power in the form of Muslim religion and Muslim culture. But the State will not guarantee secured seats in the Legislature or in the Administration and, if such guarantee is insisted upon by the Muslims, such guaranteed quota is not to exceed their proportion to the general population.


இஸ்ரேல் உருவாக ஆதரவு: 1947 டிசம்பர் 19ஆம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் அவர் பாலஸ்தீனப் பகுதியில் யூதர்களுக்கென்று தனிநாடு ஒன்று அமைவதில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளியிட்டார். எகிப்தியர்களின் மேலாண்மையிலிருந்து யூதர்களை மோசஸ் விடுவித்துக் கொணர்ந்த செயலுடன் இதனை ஒப்பிட்டார். நியாயப்படி யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியர்த்தப்பட வேண்டியதின் அவசியம் குறித்தும் அவர் குறிப்பிட்டார். அந்த பூமிதான் யூதர்களின் புனித பூமி, தாயகம் என்றார் அவர். இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் யூதர்களுக்கென்று இஸ்ரேல் எனும் தனிநாடு உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்ததை அவர் குறை கூறினார். அதையும் கூட இஸ்லாமியர்களைத் திருப்தி படுத்தும் நோக்கத்தோடுதான் இப்படிப்பட்ட முடிவை இந்தியா எடுத்தது என்றும் சொன்னார்.

வீர சவார்கர் பல்லாயிரம் பக்கங்கள் எழுதிக் குவித்திருக்கிறார். மராத்திய மொழியில் பல நூல்களை எழுதினாலும், 1857 இந்திய முதல் சுதந்திரப் போர் எனும் நூல் மிகவும் பிரபலமானது. இவர் ஒரு கவிஞரும் கூட. இவருடைய நூல்களை பட்டியலிட்டால் அது வளரும் ஆகவே அவர் நூல்களைத் தேடிப்பிடித்து படிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். 

மகாத்மா காந்தி கொலை வழக்கு: 1948 ஜனவரி 30, இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் துக்ககரமான நாள். இந்திய மக்களுக்காகவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும், மனித இன ஒற்றுமைக்காகவும் அயராது பாடுபட்ட மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்காக ரகசியமாக திட்டமிட்டு செயல்படுத்திய நாதுராம் கோட்சேயும் அவரது தோழர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். நாதுராம் கோட்சே இந்து மகாசபையின் உறுப்பினர். ஒரு மராத்திய தினசரி இதழுக்கும் ஆசிரியர். இந்த பத்திரிகையை நடத்திய கம்பெனியில் முன்னாள் இந்துமகா சபாவின் தலைவர் எனும் முறையில் சவார்கர் 15000 ரூபாயை முதலீடு செய்திருந்தார். 1948 பிப்ரவரி 5ஆம் தேதி, அதாவது காந்தி கொலையுண்ட ஆறு நாட்களில் இவர் கைது செய்யப்பட்டார். சிவாஜி பார்க் பகுதியிலிருந்த இவர் வீட்டில் கைது செய்யப்பட்டு ஆர்தர் சாலை சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

இவர் மீது கொலைக் குற்றம், கொலை செய்ய சதி செய்தல், குற்றத்துக்குத் துணை போவது போன்ற பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மகாத்மாவின் கொலை நடைபெற்ற ஓரிரு நாட்களுக்குள் (7-2-1948) நடந்த ஒரு கூட்டத்தில் இவர் பேசுகையில் மகாத்மாவின் கொலை சொந்த சகோதரனையே கொலை செய்வது போன்ற குற்றம், இந்த நிகழ்வால் இந்திய நாட்டுக்கே ஆபத்தாக முடியலாம் என்று பேசியிருந்தார்.

கோட்சே வாக்குமூலம்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நாதுராம் கோட்சே மகாத்மாவின் கொலைக்குத் தான் மட்டுமே முழுப் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். திட்டமிடுதல் முதல் நடத்தி முடித்த வரைக்கும் அனைத்தும் தனது ஏற்பாடு என்றார். ஆனால் அப்ரூவராக மாறிய பட்கே என்பவர் சொன்ன செய்தியில் கோட்சே 1948 ஜனவரி 17ஆம் தேதி வீர சவார்கரைச் சென்று கண்டு வந்தார் என்று சொன்னார். அவர் கூற்றுப்படி பட்கேயும் சங்கர் என்பவரும் சவார்கர் வீட்டு வாசலில் காத்திருந்ததாகவும், நாதுராம் கோட்சேயும் ஆப்தேயும் உள்ளே சென்றனர் எனக் கூறப்பட்டது. எனினும் அவருடைய வாக்குமூலம் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவருடைய சாட்சிக்கு வேறு எவருடைய சாட்சியோ வாக்குமூலமோ கிடையாது என்பதால் இவருடைய கூற்று நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதோடு சவார்கரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இறுதி நாட்களும் இறப்பும்: மகாத்மா காந்தி கொலையுண்டதை அடுத்து மும்பை தாதரில் இருந்த சவார்கரின் வீடு கல்வீசித் தாக்குதலுக்கு உள்ளானது. மகாத்மா காந்தி கொலைவழக்கிலிருந்து சவார்கர் விடுதலை செய்யப்பட்டு விட்ட பிறகும் காங்கிரஸ் அரசு இவரை இந்துத்வா பேச்சுக்காக கைது செய்து சிறையிலிட்டனர். இனி அரசியலில் ஈடுபடுவதில்லை என்று இவரிடம் எழுதி வாங்கிக் கொண்ட பிறகு இவரை விடுதலை செய்தனர். அரசியலில் ஈடுபடவில்லை என்று எழுதி கொடுத்திருந்த போதும் சமூக, கலாசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். ஹிந்துத்வா அவரது பேச்சுக்களில் முன்னிலை பெற்றது. அரசியல் பேசுவதில்லை என்ற தடை நீக்கப்பட்ட பின்னர் அவர் மீண்டும் அரசியலில் பங்கு பெறத் தொடங்கினார். எனினும் அவரது உடல் நலம் ஒத்துழைக்காததால் அவரால் அதிகம் பங்கு பெற இயலவில்லை.

சண்டமாருத அரசியல் வாழ்விற்குப் பிறகு ஓய்ந்து, உடல்நலம் கெட்டு படுத்திருந்த காலத்தில் இவரது ஆதரவாளர்கள் இவருக்குப் பலவிதங்களிலும் உதவிகளைச் செய்து வந்தனர். 1966 பிப்ரவரி 2இல் தனது 83ஆம் வயதில் இவர் காலமானபோது இவருடைய இறுதிச் சடங்கில் சுமார் இரண்டாயிரம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். சவார்கர் இறந்த பிற்பாடு அவரை பாராட்டும் எந்த விழா அல்லது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொண்டதில்லை, கலந்து கொள்ளக்கூடாது என்று அவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப் பட்டிருந்தது. முதல் சுதந்திரப் போரான 1857 சிப்பாய் போராட்ட நூற்றாண்டு விழா டெல்லியில் நடந்த போது ஜவஹர்லால் நேரு சவார்க்கருடன் ஒரே மேடையை பகிர்ந்து கொள்ள மறுத்து விட்டார். ஆனால் நேருவின் மறைவுக்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரி பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் இவருக்கு மாதாந்திர தியாகிகள் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

1963 நவம்பர் 8இல் இவர் மனைவி யமுனா காலமானார். 1966 பிப்ரவரி 1இல் சவார்கர் மருந்து உண்பதை மறுத்தார், உணவையும் நீரையும்கூட மறுத்து ஆத்மார்ப்பணம் செய்து கொண்டார். கடைசியாக அவர் எழுதிய கட்டுரையில் சொன்ன கருத்து; ஒருவருடைய வாழ்க்கைக் குறிக்கோள் முடிந்துவிட்ட பின்னர் அவரால் சமுதாயத்துக்கு உழைக்க முடியாத நிலையில் இறப்பு வருமட்டும் காத்திருத்தலின் தன்னுடைய பிராணனை தியாகம் செய்துவிடுவதுதான் பொருத்தமானது என்றார்.

இவருக்கு விஷ்வாஸ் எனும் மகனும் ப்ரபா சிப்ளங்கர் எனும் மகளும் உண்டு. மூத்த மகன் ஒருவர் பிரபாகர் இளம் வயதிலேயே இறந்து விட்டார். இவர் வாழ்ந்த இல்லம், இவர் விட்டுச் சென்ற பொருட்கள் அனைத்தும் இப்போது மக்களுக்குக் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றன. வாழ்வின் போதும், வாழ்வுக்குப் பின்னரும் பிரச்சினைக்குரியவராகவே இருந்து மாண்டு போன தியாகசீலர் வீர சவார்கர். அவரை அவரவரும் எடைபோட்டுக் கொள்வதே சரியாக இருக்கும்.




















Sunday, July 27, 2014

பாரதியின் புதுச்சேரி நண்பர் 'வெல்லச்சு' செட்டியார்



பாரதியின் புதுச்சேரி நண்பர் 'வெல்லச்சு' செட்டியார்

பாரதி புதுவையில் வாழ்ந்த நாட்கள் பயனுள்ள நாட்கள். பாரதியின் கவிதா வளம் பெருக்கெடுத்த நாட்கள். நண்பர்கள் குழாம் மிக அதிகமாக இருந்த நாட்கள். அவர் முகம் பார்த்து உதவி செய்ய காத்திருந்த அன்பர்கள் அதிகம் இருந்த நாட்கள் அவை. பாரதி வாழ்ந்த உலகம் தனியானது. ஆனால் தினப்படி வாழ்க்கைக்கு அவருக்குப் பணம் தேவைப்பட்டது. அதைப் பற்றி சிறிதுகூட சிந்தனையில்லாமல் தனது கற்பனா உலகில் சஞ்சரித்து வந்த நாட்கள் அவை.

அப்படிப்பட்ட காலங்களில் அவர் கேட்காமலே அவருக்கு உதவி செய்ய நண்பர்கள் காத்திருந்தார்கள். ஈஸ்வரன் தர்மராஜா வீதியில் குடியிருந்தபோது அண்டை வீட்டில் இருந்த பெருந்தனக்காரர் பொன்னு முருகேசம் பிள்ளை, பாரதிக்குத் தேவை என்ன என்பதை உணர்ந்து அவரும் அறியாமல் அவர் வீட்டில் கொண்டு சேர்க்கும் வள்ளலாக இருந்திருக்கிறார். அவர் மனைவியோ, பாரதி வீட்டில் எப்போதெல்லாம் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஒருவரும் அறியாமல் மறைத்துப் பாத்திரத்தில் எடுத்து வந்து வைத்துவிட்டுப் போகும் வள்ளன்மை வாய்ந்தவர். இப்படிப் பலர்.

புதுவையை அடுத்த முத்தியால்பேட்டை எனும் இடத்தில் வசித்து வந்த அன்பர் வெ.கிருஷ்ணசாமி செட்டியார்தான் அந்த வள்ளல். இப்படி அவர் பெயரை சொன்னால் உங்களுக்குத் தெரியாமல் போகலாம், அவருக்கு பாரதி வைத்த செல்லப் பெயர் கொண்டு எழுதினால் ஒருக்கால் புரியலாம். இவரை 'வெல்லச்சு'ச் செட்டியார் என்றுதான் அழைப்பார் பாரதியார். இவருக்கு ஏன் இந்தப் பெயர் ஏற்பட்டது?

இவர் சற்று குள்ளமானவர். உடல் நல்ல பருமனான கெட்டியான சரீரம். அவர் உடலாலோ, அல்லது மனத்தாலோ சோர்வாக இருந்து யாரும் பார்த்ததில்லை. அவருடைய தோற்றம் குறித்தும், இனிமையான உள்ளம் குறித்தும் 'வெல்லச்சு' என்ற செல்லப் பெயரை பாரதி வைத்திருக்கலாம்.

இவர் நெசவுத் தொழில் செய்து வந்தவர். தொழிலும் நன்றாக இருந்தது, அதோடு நிலபுலன்களும் இவருக்கு ஓரளவுக்கு உண்டு. துணி வியாபாரத்தில் இவருக்கு நல்ல லாபம் கிடைத்து வந்தது. பாரதியாரிடம் பக்தி கலந்த நட்பு இருந்தது இவருக்கு. அடிக்கடி இவர் பாரதியாரின் இல்லத்துக்கு வந்து விடுவார். அங்கு பாரதியார் யாருடனாவது பேசிக் கொண்டிருந்தாலும், இவர் பாட்டிலும் அமைதியாகக் கேட்டுக் கொண்டு அங்கு அமர்ந்திருப்பார். வீட்டுக்கு வந்தவுடன் பாரதியாரைப் பார்த்து "சுவாமி" என்று அழைத்துவிட்டு அமர்ந்தாரானால் அப்புறம் அவர் வாயைத் திறக்க மாட்டார். அமைதியின் திருவுருவமாக உட்கார்ந்திருப்பார்.

அவரைக் கண்டால் பாரதிக்கு மிகவும் பிடிக்கும். தாம் இயற்றிய புதுப் பாடல்களை 'வெல்லச்சு' செட்டியாருக்குப் பாடிக் காண்பிப்பார். பாரதி எத்தனைக்கெத்தனை ஆர்வத்தோடு புதிய பாடல்களைப் பாடிக் காட்டுகிறாரோ அந்த அளவுக்கு அவர் புரிந்து கொண்டதாகவோ, ரசித்ததாகவோ அவருடைய முக பாகம் காட்டாது. அது 1910-11 ஆம் வருடம். அப்போது செட்டியாருக்கு வயது 20 இருக்கலாம்.

இது என்ன இந்த மனிதர், ரசனை என்பதே இல்லாத இந்த வெல்லச்சு செட்டியாருக்குப் போய் இவ்வளவு அன்போடு தனது பாடல்களைப் பாடிக் காட்டுகிறாரே, அவர் இதனை ரசிக்கிறாரா இல்லையா என்பதுகூட தெரியவில்லையே என்று, கூடஇருந்த அன்பர்கள் நினைப்பார்கள். ஆனால் பாரதியார் ஏதாவது நகைச்சுவையாகச் சொன்னார் அனைவருக்கும் முந்தி வெல்லச்சு செட்டியார்தன் முதலில் உரத்த குரலில் சிரிப்பார். ஏதாவது சோக ரசமான நிகழ்வை பாரதி சொன்னால், இவர் அழுதுவிடுவாரோ எனும்படி முகத்தை சோகமாக வைத்திருப்பார். அத்தனை ரசிகர்.

இவர் தோற்றத்தைப் பார்த்து இவரை எடை போட வேண்டாம், எந்தப் புற்றில் என்ன பாம்பு இருக்கிறதோ யார் கண்டது என்பார் பாரதியார். நண்பர்கள் கூடியிருக்கிற நேரங்களில் பாரதியார் பல கதைகளைச் சொல்லுவார். அந்தக் கதைகளுக்கிடையே அவரைக் கிண்டல் அடித்தும், கேலியாகவும் பாரதியார் மறைமுகமாகக் குறிப்பிடுவார். பாரதி சொல்லும் கதைகளில் கேலி அதிகம் இருக்கும். ஒரு முறை பாரதி சொன்ன கதை இது:

"காட்டுப் பாதையொன்றில் இரண்டு பேர் போய்க்கொண்டிருந்தார்கள். ஒருவர் குடியானவன், மற்றவர் செட்டியார். அந்தப் பகுதிகளில் திருடர்கள் அதிகம். வழிப்பறி நடப்பது வழக்கம். பகல் பொழுது கழிந்து இருள் கவிவதற்குள் காட்டைக் கடந்து விட வேண்டுமென்று வேகமாக நடந்தார்கள். ஆனால் முடியவில்லை. பொழுது நன்றாக இருண்டு விட்டது. இந்த இடத்தில் பாரதியார் கதையை நிறுத்திவிட்டு வெல்லச்சு செட்டியாரைப் பார்த்துக் கேட்பார், "என்ன செட்டியாரே! கதை ஒழுங்காகச் சொல்ல வேண்டுமானால் இந்த இடத்தில் திருடர்கள் வரலாமா அல்லது இன்னும் கொஞ்சம் தூரம் நடந்த பிறகு வ்ரலாமா?" என்பார்.

அதற்கு செட்டியார் சொல்லுவார், "எந்த சமயத்தில் வந்தால் என்ன? நான் பாரதியாரோடு வழிப்பயணம் செய்கிறவன். எனக்கு என்ன பயம்?" என்பார். "அச்சா, அப்படிச் சொல்லப்பா, என் தங்கமே!~" என்று பாரதியார் விழுந்து விழுந்து சிரிப்பாராம். கூட இருந்தவர்களும் சிரிப்பில் கலந்து கொள்வார்களாம்.

திருடர்கள் வழிப்பயணம் வந்து கொண்டிருந்த குடியானவனை நன்கு அடித்து, அவனிடமிருந்தவைகளைப் பிடுங்கிக் கொண்டார்களாம். கூட பயணம் செய்துகொண்டிருந்த செட்டியார் பார்த்தார், மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு ஓசைப்படாமல் கீழே படுத்துக் கொண்டுவிட்டாராம். திருடர்கள் கீழே விழுந்து கிடக்கும் செட்டியாரைக் குச்சியால் தட்டிப் பார்த்துவிட்டு, "அட! கட்டை கிடக்கிறது" என்றார்களாம்.

உடனே கீழே கடந்த செட்டியார் ரோஷத்தோடு எழுந்து, "உங்க வீட்டுக் கட்டை பத்து ரூபாய் பணத்தை மடியில் கட்டுக்கொண்டுதான் விழுந்து கிடக்குமோ?" என்றாராம். உடனே பாரதியார் கதையை நிறுத்திவிட்டு வெல்லச்சு செட்டியாரைப் பார்த்து, "என்ன செட்டியாரே, கதை சரிதானே?" என்பாராம். உடனே செட்டியார், "கதை எப்படியிருந்தால் என்ன, அதுதான் முடிந்து விட்டதே" என்று சொல்லிக் கொண்டே மடியிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து பாரதியாரிடம் கொடுத்து விடுவாராம்.

பாரதியார் உரக்கச் சிரித்துக் கொண்டே, "கதையில் பணம் பிடுங்கியது திருடர்கள், இங்கே நான் பகல் கொள்ளைக்காரன்" என்பாராம். செட்டியாரும் பாரதியார் சிரிப்பதைப் பார்த்து மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருப்பாராம். அவரைப் போல பாரதியாரிடம் பக்தி பாராட்டியவர்கள் வேறு யாரும் கிடையாது என்பார்கள்.

வெல்லச்சு செட்டியார் பாரதி சொன்ன கதை, வெறும் கதை மட்டுமல்ல, அவருடைய தேவையைக் குறிப்பாகச் சொன்னது என்பதை புரிந்துகொண்டு மடியில் இருந்த பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தது என்பார்கள் நண்பர்கள். மால நேரங்களில் நண்பர்கள் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருக்கும் போது அனைவருக்கும் சிற்றுண்டி வழங்க வேண்டுமென்பது பாரதியாரின் ஆசை. அத்தகைய சந்தர்ப்பங்களில் கிருஷ்ணசாமி செட்டியார் அங்கு இருப்பார். அப்போது பாரதி தன்னிடம் உள்ள ஒரு செல்லாத காசை எடுத்துக் காட்டி, "இது செல்லுமா பாருங்கள்" என்பாராம். நண்பர்கள் செல்லாது என்று சொல்வார்கள். உடனே பாரதி, அதனால் என்ன செல்லும் செல்லாததற்கு செட்டியார் இருக்கிறாரே என்று அவரைக் கை காட்டிவிடுவாராம். குறிப்பறிந்து செயல்படும் செட்டியார் சும்மா இருப்பாரா, பாரதியிடம் இருக்கும் பணத்தைக் கொடுத்து விடுவார். இது நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை. அப்போது பாரதியாருக்கு அமைந்த நண்பர்கள் அப்படி. இன்று! பெருமூச்சுதான் வரும்.


தலைவர் ம.பொ.சி. பட்ட கல்லடி


1953-54இல் ராஜாஜி கொண்டு வந்த ஆரம்பக் கல்வி சீர்திருத்தத் திட்டமும் தலைவர் ம.பொ.சி. பட்ட கல்லடியும்.

சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சி. ஒரு காந்தியவாதி. தோற்றத்தால், அணியும் வெண்ணிற கதராடையால், இணைந்திருந்த அரசியல் கட்சியால் மட்டுமல்ல, நடத்தையால், நேர்மையால், சிந்தனையால் அவர் ஒரு சுத்த சுயம்பிரகாச காந்தியவாதி. புத்தகங்களில் படித்தோ, பிறர் சொல்லிக் கேட்டோ நான் இந்த முடிவுக்கு வரவில்லை. அந்த மகானை (நான் அப்படித்தான் மதிக்கிறேன்) நேரடியாகப் பார்த்ததாலும், அவர் உரைகளைக் கேட்டதாலும், அவருடைய பத்திரிகைகளுக்கு முகவராக இருந்து நானும் படித்து, கடைகள் மூலமாக பொதுமக்கள் வாங்கும்படி செய்ததாலும், தமிழரசுக்கழகம் சேலம் மகாநாட்டுக்குப் போய் அதன் பின்னர் பல விழாக்கள் பாரதி விழாக்கள் உட்பட பலவற்றில் பங்கு கொண்டதாலும், அவருடன் ஓரளவு பழக்கமிருந்ததாலும், அவரை மிஞ்சிய ஒரு தலைவரை நான் இன்றுவரை காணவில்லை என்றே உறுதி கூறுவேன். அப்படிப்பட்ட பெரும் தலைவர் வாழ்வில் சந்தித்த போராட்டங்கள் பலப்பல. ஆனால் பொது மேடையில் அவர் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கொடுமையானது, வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அந்த நிகழ்ச்சி பற்றி இங்கு சொல்ல விரும்புகிறேன்.

ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது 1953-54இல் ஆரம்பக் கல்வியில் பள்ளிக்கூடம் போகாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான சிறுவர் சிறுமிகளைச் சேர்க்க வேண்டுமென்கிற ஆவலில், போதுமான பள்ளிகள் இல்லாததால் ஷிஃப்ட் முறையில் வகுப்புகளை நடத்தி இரு மடங்கு மாணவர்களைப் படிக்க வைக்கலாம் என்ற எண்ணத்தில் ஒரு மாற்றுக் கல்வித் திட்டம் கொண்டு வந்தார். இந்த கட்டுரையின் நோக்கம் அந்தத் திட்டம் சரியா, தவறா அல்லது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதா, அல்லது அதனைக் கொண்டுவந்தவர் யார் என்பதால் அப்படிப்பட்ட எண்ணம் பரப்பப்பட்டதா என்ற விவாதத்திற்குள் புகுவதற்காகவோ அல்லது அந்தக் கல்வித் திட்டம் பற்றி அபிப்பிராயம் சொல்லவோ அல்ல. ம.பொ.சி. எப்படி பாதிக்கப்பட்டார் என்பதை மட்டும் அவர் எழுதிய கட்டுரையை அடியொற்றி இந்தக் கட்டுரையில் கொடுக்க முயன்றிருக்கிறேன்.

வடவெல்லை, தெற்கெல்லை போராட்டங்களில் ஈடுபட்டிருந்த போதே மற்றொரு போராட்டத்திலும் ஈடுபட வேண்டிய அவசியம் ம.பொ.சிக்கு ஏற்பட்டது. ராஜாஜி கொண்டு வந்த 'ஆரம்பக் கல்வி சீர்திருத்தத் திட்டத்'திற்கு ஏற்பட்ட எதிர்ப்பை முறியடிக்கும் போராட்டமாகும் என்கிறார் அவர்.

அடிப்படையில் காங்கிரஸ்காரனாக இருந்த அவர், காங்கிரஸ் அரசு கொண்டு வரும் எந்தத் திட்டத்தையும் ஆதரிக்கக் கடமைப் பட்டவர். ஆதரிக்க மறுப்பதோ, எதிர்ப்பதோ கட்சிக் கட்டுப்பாட்டைக் குலைக்கும் துரோகச் செயல் என்பது அவர் எண்ணம். முதல்வர் ராஜாஜியிடம் தமிழ்நாடு காங்கிரசுக்கு - அதன் தலைவர் காமராஜருக்கு நல்லெண்ணம் இருக்கவில்லை என்பது ம.பொ.சியின் கருத்து. ஆகையால் ராஜாஜி கொண்டு வந்த ஆரம்பக் கல்விச் சீர்திருத்தத் திட்டத்தை எதிர்த்து எழுந்த போராட்டத்தை முறியடித்து காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்ற தமிழ்நாடு காங்கிரஸ் முன்வரவில்லை என்கிறார். அந்தப் பணியைத் தான் ஏற்றுக் கொண்டு தமிழரசுக் கழகம் சார்பில் போராட வேண்டியிருந்தது என்பது ஐயாவின் கருத்து. அதுமட்டுமல்லாமல் ராஜாஜியுடன் அவருக்கிருந்த நட்பும் மரியாதையும் கூட அவரை இந்தப் பணியில் ஈடுபடத் தூண்டியது என்கிறார்.

இது குறித்து ம.பொ.சி. "எனது போராட்டம்" நூலில் எழுதியுள்ளதை அப்படியே தருகிறேன்.

"ராஜாஜி கல்வித் திட்டம் 1953-54ஆம் கல்வியாண்டில் நடைமுறைக்கு வந்தது. சட்டமன்றத்தின் - சட்டமன்றக் காங்கிரஸ் கட்சியின் - நாட்டிலுள்ள கல்வி நிபுணர்களின் கருத்தை அறியாமலே தமது திட்டத்தைச் செயல்படுத்த ராஜாஜி முயன்றார். இது எதேச்சதிகாரப் போக்காக காங்கிரசுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த அவருடைய எதிரிகளால் கருதப்பட்டது.

ராஜாஜியின் திட்டத்தில் புதுமையோ, புரட்சியோ ஒன்றுமில்லை. வெறும் 'ஷிஃப்ட் முறை' அவ்வளவுதான். ஆரம்பப் பள்ளிகளில் கல்வி பயிற்றுவிக்கும் நேரம் 6 மணியாக இருந்ததை 3 மணியாகக் குறைத்தார். மீதமுள்ள 3 மணி நேரத்தில் குழந்தைகள் பெற்றோர் செய்யும் தொழிலில் பங்கு கொள்ளவும் அதிலே பயிற்சி பெறவும் வாய்ப்பு தரப்படுவதாக முதல்வரால் சொல்லப்பட்டது.

'ஒருவேளை பள்ளிப் படிப்பு' என்ற ராஜாஜி திட்டத்தால் அதிகப்படியாக 45 லட்சம் குழந்தைகள் கல்வி பயில வசதி கிடைக்குமென்றும் அறிவிக்கப்பட்டது. அது உண்மைதான்.

அரசியல் சட்டத்தில் 1960ஆம் ஆண்டுக்குள் -- அதாவது, சட்டம் நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டு நிறைவு பெறுவதற்குள் 14 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் அனைவரையும் பள்ளிகளுக்குக் கொண்டு வந்து விடவேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இதை நிறைவேற்றும் பொறுப்பு அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குள் முதல்வர் பதவி ஏற்ற ராஜாஜியுடையதாக இருந்தது என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

பள்ளிக்கு வரவேண்டிய பருவத்திலுள்ள அவ்வளவு பிள்ளைகளுக்கும் கட்டாயமாகவும் இலவசமாகவும் கல்வி தருவதென்பது சாதாரண விஷயமல்ல. பெரும் செலவுக்குரிய பொறுப்பாகும். முழு நேரக் கல்வி முறைப்படி இதனை நிறைவேற்றுவதானால், ஆயிரக்கணக்கில் புதிய பள்ளிகள் நிறுவி, பதினாயிரக்கணக்கில் புதிதாக ஆசிரியர்களை நியமித்தாக வேண்டும். ஏழ்மை மிகுந்த நம் நாட்டில் அது சாத்தியமன்று. அதனால் "அரை நாள் கல்வி" மூலமாகத்தான் அனைவருக்கும் கட்டாயக் கல்வி தர முடியும் என்று அரசு கருதியது.

ராஜாஜி புகுதிய கல்வித் திட்டத்தில் அதுவரை போதிக்கப்பட்டு வந்த பாடங்களில் எதுவும் குறைக்கப்படவோ, கைவிடப்படவோ இல்லையென்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தமது திட்டத்தில் இல்லாத ஒன்றை தமது பேச்சிலே ராஜாஜி வற்புறுத்தி வந்தார். ஆம்! அப்பன் தொழிலை மகன் செய்ய எனது திட்டம் வழி செய்கிறது என்று அவர் பேசி வந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு ராஜாஜி திட்டத்திற்குக் "குலக் கல்வித் திட்டம்" என்று பெயர் தந்தது தி.மு.க.

உண்மையிலேயே, சலவைத் தொழிலாளி மகன் சலவைத் தொழில்தான் செய்ய வேண்டும், க்ஷவரத் தொழிலாளி மகன் க்ஷவரத் தொழில்தான் செய்ய வேண்டும்; தோட்டியின் மகன் தோட்டித் தொழில்தான் செய்ய வேண்டும் என்ற கருத்தை இந்த இருபதாம் நூற்றாண்டில் ஏற்க முடியாதுதானே! அதையும் ஒரு பிராமணர் சொன்னதால் சாதிப் போர் மூண்டது.

"அரை வேளைக் கல்வி" என்பது மலேசியா முழுவதிலும் நடைமுறையிலிருப்பதனை நான் 1964இல் அந்த நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது நேரில் கண்டேன். கேரளத்திலும் அரை நாள் கல்வி முறை அமலில் இருக்கிறது. தமிழ் நாட்டிலும் தனியார் பள்ளிகள் சிலவற்றில் இது கடைப்பிடிக்கப் படுகின்றது.

என்ன செய்யப்படுகிறது என்பதைவிட, யாரல் செய்யப் படுகிறது என்பதற்கே முதன்மை தரப்பட்டது. அதனால், வகுப்புவாத அரசியல் நோக்குடன் ராஜாஜியின் கல்வித் திட்டம் தி.மு.க.வால் எதிர்க்கப்பட்டது. கொஞ்சம் தாமதித்து தி.க.வும் புதிய கல்வித் திட்டத்தை எதிர்க்கத் தொடங்கியது. தி.மு.க. ஜூலை 14இல் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. அதனால் மாநில முழுவதிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியிலும், டால்மியாபுரத்திலும் ரயில் நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கெதிராக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் விளைவாக 9 பேர் உயிர் இழந்தனர்.

இந்த நிலையில் கல்வித் திட்ட எதிர்ப்பானது பிராமண எதிர்ப்பாக, காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியாக மாறியது. ஆரம்ப கட்டத்தில் இவ்வளவையும் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தது தமிழ்நாடு காங்கிரஸ். ஒரு கட்டத்தில் கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பேசவும் முற்பட்டார் திரு காமராஜ். தூத்துக்குடி, டால்மியாபுரம் துப்பாக்கிச் சூடுகளினால் பொதுமக்கள் அனுதாபம் தி.மு.க. பக்கம் திரும்பியது. அந்த நேரம் பார்த்துப் புதிய கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பேசினார் காமராஜ்; கல்வித் திட்டம் சரியா தவறா என்பதில் அவருக்குக் கவலையில்லை. ராஜாஜி ஆட்சியை வெளியேற்றி, தான் அதிகாரத்திற்கு வர அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். ("எனது போராட்டம்" பக்கம் 392)

ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ஆதரித்துத் தமிழரசுக் கழகச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. மாநிலமெங்கணும் மாநாடுகளும் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடத்திக் கல்வித் திட்டத்துக்கு ஆதரவளித்துப் பிரச்சாரப் போர் நிகழ்த்தியது.

மாயவரத்திலே 6-9-1957 அன்று தாலுகா தமிழரசு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் முடிவில் ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ஆதரித்துத் தனிச் சொற்பொழிவு நிகழ்த்தினேன். மாநாட்டிலே ஒரு சாரார் திட்டமிட்ட முறையில் எனக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். அதனைச் சமாளித்து, மாநாட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டு, மாநாட்டுப் பந்தலில் இருந்து வெளியேறினேன்.

நான் தங்கியிருந்த இடத்திற்குக் கழக முன்னணித் தோழர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். கூட்டம் அதிகரிக்கவே ஊர்வலம் போல் ஆகிவிட்டது. வழியில் இருள் சூழ்ந்த ஒரு சாலை வழியாகச் சென்றபோது ஒரு கும்பல் என் கண்ணில் மண்ணை வாரிக் கொட்டியது. அந்த நேரத்தில் யாரோ ஒருவன் கூர்பொருந்திய இரும்புக் கத்தியொன்றால் எனது நெற்றியின் வலப்புறத்தில் வெட்டினான். உடனே, காயம்பட்ட இடத்திலிருந்து ரத்தம் கொட்டியது. பின்னர், பெரிய கலவரம் நடந்தது. நான் விரைவாக டாக்டரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு வெட்டுக் காயத்திற்குக் கட்டுப் போட்டுக் கொண்டு ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அன்று இரவே ரயில் ஏறிச் சென்னை திரும்பினேன்.

மறுநாள் காலை சென்னை போலீஸ் டெபுடி கமிஷனர் ஒருவர் என்னை அணுகி, "தாங்கள் மயவரத்தில் தாக்கப்பட்டது இரவே முதலமைச்சருக்குத் தெரிந்து விட்டது. தங்களை விசாரித்துவிட்டு தகவல் தரச் சொன்னார்" என்றார். நான், "நல்ல வேளையாக, காயம் சொற்பம்தான், அபாயம் ஒன்றுமில்லை என்று முதல் அமைச்சருக்குச் சொல்லுங்கள்" என்றேன்.

அவர் போன சிறிது நேரத்திற்குள் மற்றொரு போலீஸ் சி.ஐ.டி. அதிகாரி வந்து என்னை அழைத்துக் கொண்டு போய் ராயப்பேட்டை மருத்துவ மனையில் சேர்த்தார். அங்கு 6 நாட்கள் தங்கிச் சிகிச்சை பெற்றேன். காயம் ஆழமானதுதான். டாக்டர் ஏ.எஸ்.ராமகிருஷ்ணன் காயம்பட்ட இடத்தில் தையல் போட்டார்.

"கிராமணியாருக்கு வயது நூறு" என்று தலைப்பிட்டு "கல்கி" 20-9-1953 இதழில் எழுதப்பட்ட நீண்ட தலையங்கத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு:

"தமிழ்மொழி சொல்வளம் மிகுந்த, ஆற்றல் நிறைந்த மொழி. ஆயினும் ஸ்ரீ ம.பொ.சிவஞான கிராமணியாரைத் தாக்கி காயப்படுத்திய கயவர்களின் செயலைக் கண்டிப்பதற்கு வேண்டிய ஆற்றல் உள்ள சொற்கள் தமிழ்லே கூட இல்லை என்றே சொல்ல வேண்டும்.

திரு ம.பொ.சிவஞானம் பாட்டாளி வர்க்கத்தில் பிறந்து பாட்டாளியாக இருந்து பாடுபட்டு வாழ்ந்தவர். தமது அறிவினாலும், ஆற்றலினாலும், ஒழுக்கத்தினாலும் உறுதியுள்ள உழைப்பினாலும் அரசியல் தலைவராக உயர்ந்தவர். தெய்வத் தமிழ் மொழியைத் தமது சொந்த முயற்சியினால் கற்று வளர்ந்து, பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ச்சி அறிவுடன் கற்றுத் தேர்ந்து, புலவர்களும் பாராட்டக் கூடிய தமிழ்ப் புலமை பெற்றவர். பிரசங்க மேடைகளில் இணையற்ற வன்மையுடன் தமிழைக் கையாளும் திறமை பெற்றவர். அரசியல் வாழ்க்கையில் புகுந்தது முதல் தமக்கென எதையும் வேண்டாது பொதுமக்களுக்கே ஓயாது உழைத்துப் பாடுபட்டு வருகிறவர்.

உழைப்பினாலும் ஊக்கத்தினாலும் தொண்டினாலும் தியாகத்தினாலும் உயர்ந்த ம.பொ.சி.யைப் பற்றித் தமிழ் நாட்டில் தமிழரகப் பிறந்த ஒவ்வொருவரும் பெருமை கொண்டு தோள்கள் பூரிக்க வேண்டும்.

அதற்கு மாறாக, அவரைக் கூட்டத்திலேயிருந்து கோழைத்தனமாகத் தாக்க முற்பட்டவர்களைப் பற்றித் தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

இத்தகைய கொடிய தாக்குதலுக்கு உள்ளாகிப் பிழைத்தெழுந்த திரு ம.பொ.சிவஞான கிராமணியார் இறைவன் அருளினால் நூறு ஆண்டுகள் நோய் நொடி இன்றி வாழ்ந்து தமிழகத்துக்குப் பணி செய்வார் என்று நம்புகிறோம்.

திரு ம.பொ.சியின் நெற்றிக் காயத்திலிருந்து கொட்டிய ஒவ்வொரு இரத்தத் துளியிலிருந்தும் நூறு நூறு இளம் சிவஞானங்கள் தோன்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

மாயவரம் நகரமும் அதன் சுற்றுப் புறங்களிலுள்ள கிராமங்களும் தேசபக்திக்கும், தமிழ்ப் பற்றுக்கும் பெயர் போனவை. ஒரு சில கயவர்களின் செயலால் மாயவரத்தின் நற்பெயருக்கு இப்போது மாசு நேர்ந்திருக்கிறது.

மறுமுறை திரு ம.பொ.சி. மாயவரத்திற்கு விஜயம் செய்யும்போது மாயவரம் நகரிலும் சுற்றுப்புற கிராமங்களிலுமுள்ள தமிழ்ப் பெருமக்கள் திரண்டு வந்து அவருக்கு மகத்தான மாபெரும் வரவேற்பு அளித்து மாயவரத்துக்கு நேர்ந்த மாசினைத் துடைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.' (கல்கி 20-9-1953)

மாயவரத்தில் நான் தாக்கப்பட்ட செய்தி மறுநாள் தமிழ் ஆங்கில நாளிதழ்களிலே பிரதான இடத்தில் பெரிய தலைப்புக்களுடன் பிரசுரிக்கப்பட்டது. அந்த வாரத்திலே தமிழ்நாடு முழுவதும் தமிழரசுக் கழகம், காங்கிரஸ் சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. சென்னைக் கடற்கரையிலும் மாபெரும் கூட்டம் நடைபெற்றது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் மதுரையில் மாணவர் கூட்டம் ஒன்றில் விம்மியழுத வண்ணம் தமது வேதனையை வெளிப்படுத்திப் பேசியது வருமாறு.

"தமிழகத்தின் தந்தை தாக்கப்பட்டிருக்கிறார். தமிழர் தலைவர் தாக்கப்பட்டிருக்கிறார். ஆம், தமிழ் மொழியே தாக்கப்பட்டிருக்கிறது. சொல்லால் ம.பொ.சியை வெல்ல முடியாதவர்கள் கல்லால் வெல்ல கனவு காண்கிறார்கள்."

நாரண துரைக்கண்ணன் ஆசிரியராக இருந்த 'பிரசண்ட விகடன்', தி.க.நாளிதழான 'விடுதலை ஆகியவைகளும் மாயவரம் நிகழ்ச்சி பற்றி எழுதியது. திரு காமராஜ் கோஷ்டியிலிருந்த திரு எஸ்.எஸ்.மாரிசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'பேரிகை' வாரைதழிலும், 'விடுதலை' இதழிலும் காங்கிரசில் இருக்கும் ஒரு குழுவினர்தான் இதற்குக் காரணம் என்று எழுதின.

மாயவரம் தாக்குதல் நடந்த ஒரு மாதம் கழிந்த பின் 11-10-1953 அன்று மீண்டும் அதே மாயவரத்தில் தமிழரசுக் கழகம் சார்பில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் ம.பொ.சி. பேசினார். இந்தக் கூட்டத்துக்குப் போகவேண்டாமென்று ம.பொ.சியை ராஜாஜி தடுத்தார். அதையும் மீறி ம.பொ.சி. மாயவரம் கூட்டத்துக்கு வந்து பேசினார். நகர்மன்ற உறுப்பினர் ஏ.எம்.இஸ்மாயில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். தலைக் காயம் ஆறிவிட்ட போதும், அடிபட்ட தன்மான உணர்ச்சி காரணமாக மாயவரத்தில் திரும்பவும் வந்து பேசினார் ம.பொ.சி. மக்கள் வெள்ளம் போல் கூடியிருந்தனர். கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

மாயவரம் திராவிட இயக்கத் தோழர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து மாஜிஸ்டிரேட் முன் நிறுத்தப்பட்டனர். வழக்கில் ம.பொ.சி.யும் ஒரு சாட்சியாக விசாரிக்கப் பட்டார். அப்போது ம.பொ.சி. மாஜிஸ்டிரேட்டிடம் "குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்வதையே நான் விரும்புகிறேன்" என்றார். அதற்கு மாஜிஸ்டிரேட் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டால் தாம் யோசிப்பதாகக் கூறினார். ஆனால் குற்றவாளிகள் மன்னிப்புக் கேட்க மறுத்து எதிர் வழக்காடினர். விசாரணையின் முடிவில் அவர்களில் மூன்று பேருக்கு 6 வாரக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இருவர் விடுதலை பெற்றனர்.

ராஜாஜியின் கல்வித் திட்டத்திற்கு சட்டமன்றக் காங்கிரஸ் கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. திட்டத்தைக் கைவிடுமாறு அவர் வற்புறுத்தப் பட்டார். அப்படி வற்புறுத்தியவர்களில் ம.பொ.சியும் ஒருவர். ராஜாஜி ஆட்சி நீடிக்க வேண்டுமென்கிற ஆர்வத்தாலேயே தான் அப்படிச் செய்ததாக அவர் கூறினார். ஆனால் ராஜாஜி, கல்வித் திட்டத்தைக் கைவிட மறுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இதுவும் நம் தமிழ்நாட்டு வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட நிகழ்ச்சி, இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி என்பதால் இதனை விரிவாக இங்கு கொடுத்திருக்கிறேன்.



Tuesday, July 22, 2014

அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்.



அரசியல் கட்சிகள் சில திட்டமிட்டே தொடங்கப்படுகின்றன. ஏதாவது ஒரு துறையில் புகழ்பெற்று மேலும் வளர்ச்சி பெற அந்தத் துறையில் வாய்ப்புகள் இல்லையென்றால், அப்படிப்பட்ட நபர்கள் தேர்ந்தெடுப்பது அரசியல். அதிலும் முந்தைய துறையில் கணிசமான செல்வாக்கு ஏற்பட்டு இவரைப் பின்பற்றுவோர் அதிகம் இருந்தால் நிச்சயம் ஒரு புது கட்சி துவங்கிவிடும். சில நேரங்களில் ஒரு கட்சியில் இருந்து கொண்டே அங்கு மேலும் உயர் பதவிக்கு வழியில்லாத இரண்டாம் தர அல்லது மூன்றாம் தர தலைவர்கள் தாங்களே தலைவர்களாக ஆகவேண்டுமென்ற எண்ணத்தில் ஏதாவதொரு சாக்கை வைத்துக் கொண்டு புதிய கட்சி துவங்குவார்கள். இருக்கும் கட்சிகள் எதிலும் விருப்பமோ, ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாமல், தனது சொந்த செல்வாக்கினால் பின்பற்ற சிலர் கிடைத்து விட்டால் புதிய கட்சிகள் துவங்கப்படுகின்றன. இப்போதெல்லாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சாதி, மத, இன, மொழி அடிப்படையில் சிறு சிறு கட்சிகள் தோன்றி பெரிய கட்சிகளோடு தேர்தல் பேரம் பேசி அதில் கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அத்தோடு ஒதுங்கிவிடும் கட்சிகளும் உண்டு.

டெல்லியில் அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியபோது இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளிடம் நம்பிக்கை இழந்த, ஊழலைக் கண்டு மலைத்துப் போய், இவைகளை இந்த நாட்டைவிட்டு ஒழிக்கவே முடியாது எனும் நிலையில் செயலற்றுப் போய் இருந்த மக்கள் இந்த போராட்டத்தைக் கண்டு நம்பிக்கை அடைந்தார்கள். இதோ ஒரு காந்தியத் தொண்டர், இவர் உண்மையாகவே ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர், இவரை ஊக்கப்படுத்தினால் ஓரளவுக்காவது ஊழல் தடுக்கப்படும் என்று நடுத்தர, ஏழை, எளிய, ஊழைப்பாளி மக்கள், மாணவர்கள் நம்பினர். அதன் பயனாய் மக்கட் கூட்டம் பெருமளவில் அவரைப் பின்பற்றத் தொடங்கியது. அவரும் தன்னைப் பின்பற்றும் தொண்டர்களிடம் தன்னால் போராட முடியும், தனக்கு மன வலிமையோடு உடல் வலிமையும் இருக்கிறது என்பதைக் காட்ட ஊர்வலம் நடத்தி அதில் ஓடவும் செய்து காட்டினார். எப்போதுமே இவரைப் போன்ற ஒருவருக்கு செல்வாக்குப் பெருகுகிறது என்றதும், எதிர்காலத்தில் நல்ல அறுவடை கிடைக்கும் என்ற எண்ணத்தில் பல சுயநலப் பேர்வழிகள் இவரோடு கைகோத்துக் கொள்வது எப்போதும் நடப்பதுதான். அதுபோலத்தான் இவர் போராட்டங்களில் பங்குகொண்ட கேஜ்ரிவால் அண்ணாவோடு இருந்து பின்னர் தனிக்கடை வைத்து வியாபாரம் தொடங்கினார். அரசியல் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கிய நேரத்தில்தான் டெல்லி தேர்தல் வந்தது. தேர்தல் களத்தில் குதித்துத்தான் பார்ப்போம், கிடைத்ததைப் பீராய்ந்து கொண்டு முடிந்தால் அரசியல் இல்லையேல் இருக்கவே இருக்கிறது பொதுத் தொண்டு எனும் பெயரில் மீண்டும் போராட்டங்கள் என்று ஆம் ஆத்மி எனும் பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார், டெல்லி தேர்தலிலும் போட்டியிட்டார்.

தேர்தல் தொடங்கிய நேரத்தில் டெல்லியில் பாஜகவா காங்கிரசா என்றுதான் தொடங்கியது. போகப்போக மூன்றாவதாக வந்து கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சி திடீரென்று முன்னேறத் தொடங்கியது. ஊடகங்கள் அனைத்துமே ஒருமுகமாக ஆம் ஆத்மி இந்த தேர்தலில் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டப்போகிறது என்று ஆரூடம் சொல்லின. மற்ற கட்சியினர் எகத்தாளமாக சிரித்து ஆம் ஆதிமியாவது ஆட்சிக்கு வருவதாவது, இதெல்லாம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் என்று அதை பொருட்படுத்தாமல் ஒதுக்கினர். ஆனால் அந்த அதிசயம் நடந்தது. ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைப் பெற்று இரண்டாமிடம் பெற்றுவிட்டது. பாஜகவுக்கும் பெரும்பான்மை இல்லை. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் அரசியல் கட்சிகள் என்ன செய்வார்கள், குதிரை பேரம் நடத்துவார்கள். அல்லது மற்ற கட்சிகளிலிருந்து ஆட்களை இழுத்துக் கொள்வார்கள். எப்படியாவது ஆட்சி அமைப்பதில் ஊக்கம் காட்டுவார்கள். டெல்லி அரசியலில் இப்போது ஒரு அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியா எனக்கு வேண்டாம், உனக்கு வேண்டாம் என்று சொல்கிறார்கள். அதற்கும் காரணம் இருக்கிறது. திருவிளையாடல் திரைப்படத்தில் சிவபெருமான் தருமியிடம் கேள்விகளை நீ கேட்கிறாயா, நான் கேட்கட்டுமா என்பார், தருமி வேண்டாம் வேண்டாம் எனக்குக் கேட்கத்தான் தெரியும், நானே கேட்கிறேன் என்பார். அதைப்போல அரவிந்த் கேஜ்ரிவால் எதிரணியில் இருந்து கேள்விதான் கேட்பேன், ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டால் தான் சுட்டிக் காட்டிய தவறுகளைத் திருத்தவும், ஊழல் இல்லாமல் ஆட்சி புரியவும் இப்போது இருக்கின்ற அதிகார அமைப்பை வைத்துக் கொண்டு நடத்திக் காட்ட முடியுமா என்கிற அச்சம் அவருக்கு இருப்பதால் ஆட்சி செய்ய ஒப்பவில்லை.

இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மற்ற நாடுகளில் எப்படித் தோன்றின, எப்படி வளர்ச்சியடைந்தன எனும் விஷயத்தையும் சற்று பார்க்கலாமல்லவா? கி.பி. 1600க்கு முன்பு வரை இப்போது இருப்பதைப் போன்ற அரசியல் அமைப்புகள், கட்சிகள் எல்லாம் இருக்கவில்லை. ஜனநாயகம் எனும் கருத்து கிரேக்கத்தில்தான் உதயமானது. அங்குகூட இப்போதைய அமைப்பில் கட்சிகள் எதுவும் அப்போதும் இல்லை. அங்கு செனட் எனும் அமைப்பும் அதில் பிரிவுகளும் இருந்திருக்கின்றன. சாதாரண பொது மக்களின் பிரதிநிதிகள் அதில் அங்கம் வகித்திருக்கின்றனர். செல்வச் சீமான்களுக்கும் பிரதிநிதிகள் அந்த அவையில் இருந்தனர். வணிகர்கள் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தனர். இப்படி வெவ்வேறு குழுவினராக இவர்கள் செயல்பட்டது ஓரளவுக்கு இப்போதைய ஆளும் கட்சி எதிர்கட்சி போலத்தான் அமைந்திருந்தது.

ரோமாபுரியின் வீட்சிக்குப் பிறகு ஐரோப்பா அரசியல் கூச்சல் இல்லாமல் அமைதியாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் 1678க்குப் பிறகு இங்கிலாந்தில் மறுபடி இந்த அரசியல் பிரிவுகள் தோன்றின. அது என்ன 1678ஆம் வருஷம் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? ஆம்! அந்த ஆண்டில் இங்கிலாந்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. ரோமன் கேதலிக்கர்கள் இரண்டாம் சார்லஸ் மன்னனைத் தீர்த்துக் கட்டிவிட்டு அவர்கள் பிரிவைச் சேர்ந்த சார்லசின் தம்பி டியூக் ஆப் யார்க் ஜேம்ஸை அரசனாக்க முயல்வதாக ஒரு பரபரப்புச் செய்தி உலவியது. அப்படி அவர்கள் எதையும் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாதபோதும் இங்கிலாந்து பாராளுமன்றம் எல்லா ரோமன் கேதலிக்கர்களையும் ஒதுக்கிவிட்டு டியூக் ஆப் யார்க் ஜேம்சை அரசு கட்டிலுக்கு உரிமையில்லாதவராகவும் ஆக்கிவிட்டார்கள். அரசர் இரண்டாம் சார்லசுக்கோ இங்கிலாந்து நாடாளுமன்றம் அரச வம்சத்தாரின் விவகாரங்களில் தலையிடுவதாகக் கருதி நாடாளுமன்றத்தையே கலைத்து விட்டார். இப்போது 'செகூலர்' எனும் சொல் இந்திய அரசியலில் அதிகமாக ஈடுபடுகிறதல்லவா? பாஜக என்றால் மதவாதிகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ஜனதாதள் போன்றவர்கள் செகூலரிஸ்ட் என்கின்றனர். மதமே அரசியலை நிர்ணயிப்பதற்கும், ஒரு மதத்தில் இருப்பவர்கள் அரசியலில் வருவதற்கும் வித்தியாசமில்லையா என்ன? நம் செகூலரிஸ்டுகள் ஒருவன் 'இந்து' என்று சொல்லிவிட்டாலே அவன் மதவாதி. ஆட்சிபுரிபவன் ஒரு அவன் மதப் பண்டிகையைக் கொண்டாடிவிட்டாலே அவன் மதவாதி. அப்படியில்லாமல் இந்து பண்டிகைகள் எல்லாவற்றையும் குறைசொல்லி எதிர்த்துவிட்டு, மற்றெல்லா மதங்களின் பண்டிகைகளிலும் கலந்து கொள்பவந்தான் செகூலரிஸ்ட். இந்த செகூலரிசம் ஏற்பட்டது இங்கிலாந்தில் நடந்ததுதான், இங்கு நடப்பது கேலிக்கூத்து.

இங்கிலாந்து மக்கள் இரு பிரிவாக பிரிந்தனர். ஒரு பிரிவு சார்லஸ் மன்னனுக்கு ஆதரவாகவும், மற்றொரு பிரிவு அவருக்கு எதிராகவும் திரும்பினர். புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கும்படி கேட்ட எதிர் பிரிவினர் 'பெட்டிஷனர்கள்' எனப்பட்டனர். மன்னனுடைய ஆதரவாளர்கள் அரசனுடைய கட்டளைக்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்ததனால் 'எதிர்ப்பாளர்கள்' "Abhorrers" என வழங்கினர். ராஜாவின் கட்டளையை மாற்ற நினைப்பவர்களை இவர்கள் எதிர்த்தார்கள். இப்படி இவர்கள் எதிரெதிராக இருவேறு கட்சியினராகப் பிரிந்தனர். பிறகு ராஜாவின் ஆதரவாளர்கள் "Tories" என வழங்கப்பட்டனர். இந்த சொல் புராட்டஸ்டண்ட் ஆட்சியை எதிர்க்கும் அயர்லாந்து ரோமன் கேதலிக்கர்களைக் குறிக்கும். இந்த பழைய பெயர்கள் புதிய சொற்களைத் தாங்கி வரத் தொடங்கின.

அரசருக்கு சர்வ வல்லமையுள்ள அதிகாரங்கள் இருக்கவேண்டுமென்பது 'டோரிக்களின்' விருப்பம். இன்னொரு கட்சியினருக்கு சாதாரண மக்களின் செல்வாக்கு ஆட்சியில் இருக்கவேண்டுமென்பது. இவ்விரண்டு கட்சிகளும்தான் இங்கிலாந்தில் இருவேறு கட்சிகளாக உருவெடுத்தன. இப்போது இங்கிலாந்தில் டோரி என்பது கன்சர்வேடிவ் கட்சியாகவும், மற்றொரு கட்சி லேபர் கட்சியாகவும் இருந்து வருகின்றன.

பின்னாளில் உருவான ஐக்கிய அமெர்க்க நாட்டிலும் இருவேறு கட்சிகள் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்று உருவாகி ஆளத் தொடங்கின. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இவ்விரு பெரிய கட்சிகள் தவிர ஓரிரண்டு குட்டிக் கட்சிகளும் உண்டு. ஆனால் இந்தியாவில் அப்படி இரு கட்சி என்பது இல்லாமல் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக ஆகி பல்வேறு கட்சிகள், தேர்தல் என்று வந்தால் இந்த குட்டிக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய கட்சியோடு கூட்டணி அமைத்து முற்போக்கு கூட்டணி, ஜனநாயகக் கூட்டணி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டு தேர்தல் முடிந்தபின்னர் அவரவர் கட்சியை வைத்துக் கொண்டு போராட்டம், அது இது என்று காலத்தை நடத்துகின்றனர்.

எத்தனை கட்சிகள் இருக்கின்றனவோ, அத்தனை கட்சிகளுக்கும் கொள்கை என்று ஒரு விளக்கப் புத்தகம் உண்டு. அந்த கொள்கைகளைத்தான் அவர்கள் கடைபிடிக்கிறார்களா என்றெல்லாம் பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு நாம் பார்க்கக் கூடாது. அந்தந்த சமயத்தில் எது சாத்தியமாகிறதோ, பெரிய கட்சிகள் செய்வதை ஏற்றுக் கொள்வதோ அல்லது எதிர்ப்பதோ அதெல்லாம் அவரவர் சேர்ந்த கூட்டணிகளைப் பொறுத்து அமையும். இந்த சமரசத்துக்குக் "கூட்டணி தர்மம்" என்று பெயர். பிரதமர் ஒரு திட்டத்தை முன்மொழிந்து செயல்படுவார். அவர் கூட்டணியில் இருக்கும் இன்னொரு கட்சிக்கு அதன் கொள்கைப் பிரகடனத்தின்படி ஏற்புடையது இல்லாவிட்டாலும் கூட்டணி தர்மத்துக்காக அதை ஏற்றுக் கொள்வர். இது பரஸ்பரம் இரு கட்சிக்கும் பொருந்தும்.

இந்திய அரசியல் எங்கே போகிறது? மக்கள்தான் சிந்தித்து இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

கோவிந்த தீட்சதர்.

அமைச்சர் கோவிந்த தீட்சதர்.

தஞ்சை நாயக்க மன்னர்களின் காலத்தில் சேவப்ப நாயக்கரின் கடைசி நாட்கள் தொடங்கி அச்சுதப்ப நாயக்கர் காலம் முழுவதும் இருந்து பிறகு ரகுநாத நாயக்கர் காலம் வரை அவர்கள் ஆட்சியில் அமைச்சராகவும், ராஜகுருவாகவும் இருந்து வழிகாட்டி, நல்ல பல காரியங்களை மக்கள் நலனுக்காக செய்தவர் கோவிந்த தீட்சதர். சோழ நாட்டின் தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இவர் பெயரை இன்றும் சொல்லக்கூடிய எத்தனை இடங்கள்? ஐயன் கடைத் தெரு, ஐயன்பேட்டை, ஐயன் வாய்க்கால், ஐயன் குளம் இதுபோன்ற இடங்களில் ஐயன் என்பது இவரைக் குறிக்கும் சொல். இவர் அந்த காலத்தில் செய்த செயற்கரிய சாதனைகளின் சரித்திரச் சான்றுகள் இவை.

ஒரு மன்னன் தன் குடிமக்களுக்கு என்னவெல்லாம் செய்து தரவேண்டும், தான் சுகபோகங்களோடு வாழ்க்கை நடத்துவதும், எதிரிகளோடு போர் புரிந்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலியிடுவதும், தன் மக்கள், தன் சுற்றம் இவர்களின் நல்வாழ்வை மட்டும் பேணிப் பாதுகாப்பது மட்டும் ஆட்சி அல்ல. பின் என்ன செய்ய வேண்டும்? மக்கள் பயன்பாட்டுக்கான தர்ம காரியங்களைச் செய்வது, கல்விக்காக, உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காக, ஒரு இடம் விட்டு வேறொரு இடம் பயணம் செய்ய நல்ல சாலைகளை அமைப்பதற்காக, நீர் நிலைகளை நல்ல முறையில் பேணி பாதுகாக்கவும், புதிய நீர் நிலைகளை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுத்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது ஒரு அரசின் தலையாய பணி அல்லவா? அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் செய்து தந்தவர் இந்த கன்னடத்து பிராமண அமைச்சர். எழுபத்தைந்து ஆண்டுகள் இவர் அமைச்சராக மூன்று மன்னர்கள் காலத்தில் இருந்து தொண்டாற்றியவர் கோவிந்த தீட்சதர்.

இதில் என்ன புதுமை இருக்கிறது. வரலாற்றுப் பாடங்களைப் படிக்கும்போது எல்லா மன்னர்களுமே செய்த பணிகள் எவை என்பதைக் குறிப்பிடுகையில், அவர்கள் சாலைகளைப் போட்டார், வழிநெடுக மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார் என்றுதானே எழுதுகிறார்கள் என்று சொல்வதும் புரிகிறது. ஆனால் இவர் சாதனை அவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை. காலத்தால் அழிக்கமுடியாத அரிய பல செயல்பாடுகள் இவர் செய்திருக்கும் சாதனை. கும்பகோணம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது மகாமகம். கும்பேஸ்வரன் கோயிலின் இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த விழாவில் மக்கள் மூழ்கி எழும் மகாமகக் குளத்தைப் பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டாவது இருப்பீர்கள். அந்த மாபெரும் குளத்தையும், சுற்றிலும் படிக்கட்டுகளையும், அதனைச் சுற்றி பதினாறு சிவலிங்கங்கள் அதற்குரிய மண்டபங்கள் இவை அத்தனையையும் கட்டிமுடித்தவர் இந்த கோவிந்த தீட்சதர்.

இவரது இந்த சாதனையைப் பாராட்டி நாயக்க மன்னர் ஒருவர் இவருக்கு துலாபாரம் செய்து தராசில் ஒரு தட்டில் இவரை உட்காரவைத்து மற்றொரு தட்டில் பொன்னை அள்ளிக் கொட்டி இவருக்கு அளித்தாராம். அந்த சிலையை மகாமகக் குளக் கரையிலுள்ள ஒரு மண்டபத்தில் இப்போதும் பார்க்கலாம்.

கும்பகோணம் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்திருப்பது, குறிப்பாக பெரிய கடைத்தெருவுக்கு மிக அருகில் அமைந்துள்ளது இராமசாமி கோயில். இதனைக் கட்டியவர் கோவிந்த தீட்சதர். இந்த கோயிலின் சிறப்பு என்ன தெரியுமா? இங்கு இராமாயணக் காட்சிகள் அனைத்தையும் பிரகாரச் சுவற்றில் வண்ணத்தில் தீட்டிவைத்தது இவரது சாதனை. கும்பகோணத்தில் மங்களாம்பிகா அம்மன் கோயில், பட்டீஸ்வரம் தேனு புரீஸ்வரர் கோயில், பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை ஆலயம் இவைகள் அனைத்துமே இவரது அர்ப்பணிப்புகள்.

புதிதாக உருவாக்கிய கோயில்கள் தவிர, மிகப் பழமையான சில கோயில்களை இவர் புதுப்பித்துக் கட்டியிருக்கிறார். அவை விருத்தாச்சலம், திருவண்ணாமலை, சிதம்பரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள புகழ்மிக்க ஆலயங்கள்.

காவிரி ஒரு புனித நதி. கரையெங்கும் காவிரித்துப் புகழ் பரப்பி ஓடும் ஜீவநதி. அந்த காவிரியின் கரையெங்கும் படித்துறைகள். புனிதத் தலங்களில் புஷ்ய மண்டபங்கள், அவை திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை என்று இன்றும் மக்கள் பயன்பாட்டுக்குக் காணக்கிடைப்பவை. மயிலாடுதுறையிலும், திருவிடைமருதூரிலும் மகாதானத் தெரு என்ற பெயரில் ஒரு தெரு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். மகாதானம் என்றால் என்ன? வேத விற்பன்னர்களுக்குத் தானமாக வீடுகளைக் கட்டிக் கொடுத்து புகழ்மிக்கத் தலங்களான இந்த ஊர்களில் மக்கள் நன்மைக்காக யாகங்களை செய்துவர வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட வீதிகள் இவை. இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இவர் சில ஊர்களை முழுவதும் தானமாகக் கொடுத்திருந்தார், அவை மூவலூர், தேப்பெருமநல்லூர், சூலமங்கலம், ஊத்துக்காடு, சாலியமங்கலம் முதலியவை.

தெருக்கள் மட்டுமா இவர் மகா தானமாகக் கொடுத்தவை, அல்ல, சில ஊர்களும் கூட இதில் அடங்கும். குறிப்பாக திருவையாறு கும்பகோணம் சாலையில் உள்ள ஈச்சங்குடி, கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள வரகூர், கந்தமங்கலம் ஆகிய ஊர்கள் இதே காரணங்களுக்காக உருவாக்கப்பட்டு மகா தானமாக அளிக்கப்பட்டவை. இங்கு குறிப்பிடும் ஈச்சங்குடி கிராமத்தில்தான் காஞ்சி பரமாச்சாரியார் என வழங்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமியின் தாயார் அவதரித்தார். எங்கும் எப்போதும் மக்கள் வளத்தோடும், மனமகிழ்ச்சியோடும் வாழ வேதங்கள் ஓதப்படவேண்டும் எனும் எண்ணத்தில் எங்கும் வேத கோஷம் முழங்குவதற்காக இத்தனை ஊர்களை, தெருக்களை தானமாகக் கொடுத்து வந்திருக்கிறார் கோவிந்த தீட்சதர்.

"மக்கள் நலனும் வாழ்வும் அமைதியும் சதாசர்வ காலம் வேதகோஷம் முழங்குவதில்தான் இருக்கிறது" என்கிறது மனுஸ்மிருதி. வேதங்கள் ஓதப்படுவதோடு, இளைய பிரம்மச்சாரிகளுக்கு அதனைக் கொண்டு சேர்க்கவும் வேண்டும். அதற்காக வேத பாடசாலைகளையும் அவர் உருவாக்கிவைத்தார். கும்பகோணம் ராஜா பாடசாலை என்ற அமைப்பு இன்றும் உயிர்ப்போடு இயங்கி வருவதை நாம் அறிவோம். இந்த ராஜா பாடசாலையில் ரிக், யஜுர், சாம வேதங்களோடு, ஆகம சாஸ்திரமும் பயிற்றுவிக்கப் படுகிறது. இதுபோன்றதொரு பாடசாலை இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு வேதத்தை அத்யாயனம் செய்து முடிக்க எட்டு ஆண்டுகள் ஆகும். இந்த பாடசாலையில் படித்துப் பின் இசைத் துறையில் பிரபலமடைந்தவருள் ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் முக்கியமானவர்.

வேதம் படித்த ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் இசைத் துறையில் கர்நாடக சங்கீத மூவருள் ஒருவராக ஆனாரா என்று வியப்பாக இருக்கும். வியப்படைய வேண்டாம். காரணம் இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்த கோவிந்த தீட்சதர் இசையிலும் வல்லவர். "அத்வைத வித்யா ஆச்சார்ய" என்ற பட்டப்பெயரோடு விளங்கிய இவர் கர்நாடக சங்கீதத்தில் "சங்கீத சுதாநிதி" எனும் அற்புதமான இசை நூலையும் இயற்றியிருக்கிறார். அதுமட்டுமல்ல "திருவையாறு புராணம்" சம்ஸ்கிருத மொழியில் இருந்ததை ஒரு புலவரைக் கொண்டு இவர் தமிழில் மொழியாக்கம் செய்யச் செய்திருக்கிறார்.

கோவிந்த தீட்சதருடைய மூத்த மைந்தன் யக்ஞநாராயண தீட்சதர். இவர் வேத சாஸ்திரங்களில் படித்துத் தேர்ந்தவர் என்பதுகூட இவர் பல இலக்கியங்களையும் படைத்திருக்கிறார். அவை ரகுநாத நாயக்கர் மீதான "ரகுநாத பூபால விஜயம்", "ரகுநாத விலாஸ நாடகம்", "சாஹித்ய ரத்னாகரம்" ஆகியவை.

இவருடைய இளைய மைந்தன் வேங்கடமகி என்பார் பல இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். சம்ஸ்கிருத இலக்கியங்கள் தவிர இசைத் துறையில் "சதுர்தண்டி பிரகாசிகா" எனும் நூலையும் இயற்றியிருக்கிறார். இவருக்கும் பல மகா பண்டிதர்கள் சீடர்களாக இருந்திருக்கின்றனர்.

காஞ்சி மகாபெரியவருடைய தாயார் பிறந்த ஊர் ஈச்சங்குடி என்று முன்பு குறிப்பிட்டோம் அல்லவா? அது தவிர 1814 முதல்1857 வரை காஞ்சி மடத்து ஆச்சாரியாராக இருந்த மற்றொரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த தீட்சதர் வம்சத்தில் பிறந்தவர். கோவிந்த தீட்சதரின் இளைய மகன் என்று குறிப்பிட்ட வேங்கடமகி என்பவரின் பேரன் இந்த ஆச்சார்யார்.

இத்தகு பெருமைமிகு அமைச்சர் கோவிந்த தீட்சதரின் சிலை அவருடைய துணைவியார் நாகம்மாள் உருவத்துடன் கல் சிற்பமாக பட்டீஸ்வரம் ஆலயத்தில் பார்க்கலாம். ராமேஸ்வரம் கோயிலிலும் இவர்கள் சிலையை நிறுவியிருக்கிறார்கள். கும்பகோணத்தையடுத்த பட்டீஸ்வரத்தில் மிக எளிய இல்லத்தில் வாழ்ந்த இவர் யோகநித்திரையில் இருக்கும்போதே உயிர் நீத்தார்.

இத்தகைய மதியூகியாகவும், நிர்வாகத் திறன் கொண்டவராகவும், தர்மத்தின்பால் பற்று கொண்டவராகவும் இருந்து நீண்ட நெடுங்காலம் தஞ்சை நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராக இருந்து பணியாற்றிய கோவிந்த தீட்சதரால் நாயக்கர் வம்சம் புகழ்பெற்றதா, நாயக்க மன்னர்கள் கொடுத்த வாய்ப்பினால் தீட்சதர் தன் திறமையை வெளிப்படுத்தினாரா என்பது பட்டிமன்றத்துக்குரிய தலைப்பாக இருக்கும்.























பக்தி



இன்று மக்கள் மத்தியில் கடவுள் பக்தி தழைத்து வளர்ந்திருப்பதைக் காண முடிகிறது. ஈ காக்கை வராத ஆலயங்களில் கூட மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. சிவாலயங்களில் பிரதோஷ வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். பிரார்த்தனைத் தலங்கள் என்ற பெயர்பெற்ற ஆலயங்களில் ஆண்டு முழுவதும் மக்கட் கூட்டம். என்ன ஆயிற்று மக்களுக்கு திடீரென்று, புரியவில்லை. நாத்திகப் பிரச்சாரம் உச்ச கட்டத்தில் இருந்த காலமும் ஒன்று உண்டு. இராமன் விக்கிரகத்தை அவமதிப்பு செய்ததையும், விநாயகர் உருவ பொம்மைகள் உடைக்கப்பட்டதையும் கண்ணால் பார்த்தவர்கள் நாம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதரையும் சிதம்பரம் நடராஜரையும் பீரங்கியால் பிளக்கும் நாள் எந்நாளோ என்று கோஷமிட்ட காலமும் உண்டு. இத்தனை பேர் ஒன்றுகூடி செய்த நாத்திகப் பிரச்சாரம் என்னவாயிற்று. ஒரு தலைமுறை இந்த விஷமப் பிரச்சாரத்தால் மனம் மாறி நடக்கத் தொடங்கினாலும், அவர்களுக்கென்று தலைவலி கால்வலி வந்த நேரத்தில் கோயிலையும் கடவுளையும் இவர்கள் நினைக்கத் தொடங்கியது ஒரு புறம்; வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், சோதனைகள் இவற்றால் பனம் பதைபதைத்து ஜோசியர்களிடம் சென்று ஜாதகத்தைக் காட்டி பரிகாரம் கேட்கத் தொடங்கிய போது இந்த மாற்றம் ஏற்படத் தொடங்கியது. எப்படி? ஜோசியர்கள் சொன்னார்கள் உங்கள் ஜாதகப்படி இன்ன தோஷம் உங்களை வாட்டுகிறது, அதற்குப் பரிகாரம் வேண்டுமானால் இந்த ஊரில் உள்ள இந்த கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தவுடன் தொடங்கியது அதிர்ஷ்டம் ஆள் வராத கோயில்களுக்கு எல்லாம்.

எங்கோ ஒரு கோடியில் கேட்பாரற்று தூங்கிக் கிடந்த ஆலயம் விழித்தெழுந்தது. பூஜை செய்ய ஆளில்லாமல் இருந்த இடத்தில் பசையோடு வாழ வழிவகுத்துக் கொடுத்தது பரிகாரம் தேடி வந்த மக்கட்கூட்டம். பக்தி என்பது தனக்கு என்றில்லாமல் 'இவ்வுலக மாந்தரெல்லாம் இடரின்றி வாழட்டும்; மாதம் மும்மாரி பொழியட்டும்; பயிர்கள் விளைந்து நாடு வளமாக ஆகட்டும்; இன்னல்கள் தீர்ந்து மக்கள் அமைதியாக வாழட்டும்' என்று வேண்டுவது பக்தி என்று ஆன்றோர்கள் சொல்லி வைத்தார்கள். ஆனால் .......

மாறாக என் மனைவியின் மாமா பிள்ளைக்கு வந்த வயிற்றுவலி தீரட்டும், என் வருமானம் அதிகமாக ஆகட்டும், வியாபாரத்தில் எனக்குப் போட்டியாக வளர்ந்து வரும் எதிரி வீழ்ச்சி அடையட்டும் என்றெல்லாம் மனதில் நினைத்து கோயில் கோயிலாகப் போனால் அதன் பேர் பக்தியா?

ஒரு கோயிலுக்குப் போயிருந்தேன். ஆண்டு முழுவதும் பிரார்த்தனை செய்துகொண்டு அங்கு வந்து முடி இறக்கி மொட்டை போட்டுக் கொள்வோரும், ஓராண்டு ஆன குழந்தைக்கு காது குத்தி மொட்டை போடுவோரும், மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வோருமாக அந்தக் கோயில் திமிலோகப் பட்டுக் கொண்டிருக்கும். விசேஷ தினங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கோயிலுக்குள் நுழைவதே சிரமம். அப்படிப்பட்ட கோயிலுக்கு ஒரு விசேஷ நாளில் சென்று விட்டேன். அங்குள்ள புஷ்கரணியின் நான்கு புறமும் மக்கட்கூட்டம். அத்தனை பேரும் இறங்கி முழுகி கால் நனைக்கக்கூட இடமின்றி அடைத்துக் கொண்டு நின்றனர். பரவாயில்லை தமிழகம் பண்டைய காலம்போல பக்தி பரவசத்தால் பரவிக் கிடக்கிறது என்று மனம் குதூகலித்தது.

சந்நிதி நோக்கிப் போனேன். உள்ளே மூச்சு முட்டக் கூட்ட நெரிசல். நெருக்கியடித்துக் கொண்டு கூட்டத்தினூடே உள்ளே புகுந்து கிடைத்த இடைவெளியில் சுவாமி தரிசனம் செய்துகொண்டேன். தீபாராதனைத் தட்டில் எரிந்து கொண்டிருக்கும் கற்பூரத்தோடு குருக்கள் வெளியே வந்து பக்தர்களுக்குக் காட்டி கையில் திருநீற்றையும் கொடுத்துக் கொண்டு வந்தார். வெறுங்கையோடு கும்பிடுவோருக்கு ஒரு சிட்டிகை விபூதி கையில் விழுந்தது. சில்லரை போட்டு கும்பிடுவோருக்கு சற்று அதிகமான திருநீறு. கரன்சி நோட்டு விழுந்தால் பொட்டலமாக கட்டி வைத்த திருநீற்றோடு ஒரு சிறு தொடுத்த புஷ்பமும் கையில் விழுந்தது. நல்ல பக்தி வியாபாரம் என்று நினைத்தேன்.

என் அருகில் கற்பூரத் தட்டு வருவதற்காகக் காத்திருந்தேன். அப்போது திடுதிப்பென்று சிலர் முண்டி அடித்து என்னை ஒரு எக்கு எக்கித் தள்ளிவிட்டுத் தங்கள் கைகளை நீட்டி திருநீறு வாங்கிக் கொள்ள முண்டியடித்து வந்தனர். நான் பின்னுக்குத் தள்ளப் பட்டேன். பின்னே என்ன இன்றைய வழக்கப்படி பக்தி செய்யத் தெரியாத எனக்கு பகவான் வேறு என்ன தருவார் என்று திரும்ப வந்துவிட்டேன். சரி, அடுத்த தீபாராதனையாவது பார்த்துவிட்டுப் போகலாம் என்று சற்று கூட்டத்திலிருந்து ஒதுங்கி ஒரு ஓரமாக நின்று கொண்டேன். தீபாராதனை சமயம் சுவாமியும் தெரியவில்லை, சந்நிதியும் தெரியவில்லை, மக்கள் முண்டியடித்துக் கொண்டு சாமியை வேறு யாரேனும் கொண்டு சென்றுவிடுவார்களோ, அவர் தங்களுக்கு மட்டுமே என்ற எண்ணத்தில் பம்மிக் கொண்டு அடைத்துக் கொண்டு நின்றனர். போகட்டும் மக்கள் பய பக்தியோடு சுகமாக வாழட்டும், ஆண்டவனின் கருணா கடாட்சம் அவர்களுக்கே கிடைக்கட்டும், 'சர்வே ஜனஹா சுஹினோ பவந்து: என்று ஆசீர்வதித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு பேருந்தைப் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

வீடு வந்து சேர்ந்ததும் அடுத்த வீட்டுக் காரர் கேட்டார், என்ன சார், புண்ணிய ஸ்தல யாத்திரை போனீங்களே சுவாமி தரிசனம் எல்லாம் நன்றாக ஆச்சா? என்றார். ஆமாம் ஆச்சு ஆச்சு. அதெல்லாம் விடுங்க, எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்த விஷயம் என்ன தெரியுமா? மக்கள் கிட்டே பக்தி அதிகமாயிடுச்சிங்க, அடே அப்பா, அந்த பக்தி பரவசத்தைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கணும். ஒரு முறை நீங்களும் போயி பார்த்து அந்த கோலாகலத்தை அனுபவிச்சிட்டு வாங்க அப்பதான் தெரியும், என்னால் வார்த்தைகளால சொல்ல முடியலை என்றேன். அவரும் திருப்தியாகத் தலை அசைத்துவிட்டு, சரி சரி, போயிட்டு வரேன் என்று சொல்லி புறப்பட்டு விட்டார்.

பாரதி லீலை


பாரதி லீலை
சக்திதாசன் சுப்பிரமணியன் எழுதியுள்ள இந்த நூலிலிருந்து சில பகுதிகளை பாரதி அன்பர்கள் படிப்பதற்கென்று கீழே கொடுக்கிறேன். 1938இல் வெளிவந்த இந்த நூலின் சிறப்பை இதனைப் படிக்கும்போதே தெரியவரும். 

எழுதியவர்: சக்திதாசன் சுப்ரமணியன், துணை ஆசிரியர் "நவசக்தி"
வெளியீடு: 1-7-1938. நாட்டுடமையாக்கப்பட்ட நூல்.


அன்னை

அன்னை வடிவமடா - இவள்
ஆதிபராசக்தி தேவியடா - இவள்
இன்னருள் வேண்டுமடா - பின்னர்
யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா.

ஈசுவரன் தருமராஜா கோயில் தெரு என்று புதுச்சேரியிலே ஒரு தெரு இருக்கிறது. அந்தத் தெருவிலே ஒரு வீடு. வீட்டின் மாடியிலே திறந்த வெளியிலே ஒருவர் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கிறார்; ஆகாயத்தை அண்ணாந்து நோக்கியபடியே இருக்கிறார்; ஆகாயத்தை அப்படியே விழுங்கி விடுகிறவர் போலே பார்க்கிறாரே! அவர் யார்? அவர்தான் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்.

இரவு மணி பத்து. எங்கே பார்த்தாலும் ஒரே இருள். இயற்கைத் தேவி "இருளாயி"யுடன் கூத்தாடுகிறாள்; இருட்டு; இருட்டு; மையிருட்டு; அந்த மையிருட்டு நேரத்திலே மாடியிலே திறந்த வெளியிலே உட்கார்ந்திருக்கிறார் பாரதியார். அவருடன்கூட வேறு ஒருவரும் இருக்கிறார். திடீரென்று துள்ளிக் குதிக்கிறார் பாரதியார்.

"அடே! சங்கரா! இந்த இருளைப் பாரடா! இதுதான் பராசக்தி. இந்த இருளிலே மகாகாளி ஒரு பெண் மாதிரிக் காட்சி தருகிறாள் பார். இந்த மையிருட்டுத்தான் மகாகாளி. அவளைப் பார்த்துப் பிரார்த்தனை செய்" என்று ஆவேசம் வந்தவர் போலக் கூறுகிறார்.

தரையிலே மண்டியிட்டு உட்கார்ந்து ஆகாயத்தை அண்ணாந்து நோக்கிவிட்டார். அவ்வளவுதான்! அவர் மெய்மறந்து அந்த இருளிலே ஈடுபட்டார். அப்பொழுது ஓர் அழகான பாட்டுப் பிறந்தது.

"பின்னோ ரிராவினிலே - கரும்
பெண்மை உஅழகொன்று வந்தது கண்முன்பு
கன்னி வடிவ மென்றே - களி
கொண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா! - இவள்
ஆதி பராசக்தி தேவியடா! - இவள்
இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா!

செல்வங்கள் பொங்கிவரும் - நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்
அல்லும் பகலுமிங்கே - இவை
அத்தனை கோடி பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை - இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை - நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடுவோமடா!"

இதுதான் அந்தப் பாட்டு. "மூன்று காதல்" என்ற தலைப்பின் கீழே ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார் பாரதியார். முதலாவது 'சரஸ்வதி காதல்'; இரண்டாவது 'லக்ஷ்மி காதல்'; மூன்றாவது 'காளி காதல்'.

இந்த மூன்று விதமான காதல் பாட்டுகளும் பாரதியாரின் வாழ்வு எப்படிப் பண்பட்டு எதிலே போய் முடிந்தது என்பதைக் காட்டுகின்றன.

இந்த அழகான பாட்டில் அந்தக் காளி காதல்தான் மிகவும் சிறந்தது. 'கன்னி வடிவமென்றே களி கொண்டு சற்றே அருகிற் சென்று பார்க்கையில்' என்னும் அடிவரை தாழ்ந்த குரலில் பாடவேண்டும். பாடிய பிறகு 'அன்னை வடிவமடா! இவள் ஆதிபராசக்தி தேவியடா! இவள் இன்னருள் வேண்டுமடா! பின்னர் யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா' என்ற வரிகளையெல்லாம் உயர்ந்த ஸ்தாயியில் குரலை உயர்த்திப் பிடித்துப் பாடினால் அற்புத ரஸம் அப்படியே 'கல கல' வென்று உதிரும்.

பராசக்தி நினைவு பாரதியாரின் நெஞ்சில் எவ்வளவு தூரம் வேரூன்றியிருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் போதாதா?

3. பிழைத்த தென்னந்தோப்பு
"வறியவ னுடைமை - அதனை
வாயு பொடிக்க வில்லை."

ஊருக்கு வெளியே ஒரு சிறு தென்னந்தோப்பு. அத்தோப்பின் நடுவிலே ஒரு மடு. பாரதியார் தம் மனைவி மக்களுடன் அடிக்கடி அந்தத் தோப்புக்குச் செல்வார். காலையிலே எழுந்திருந்து பாரதியார் தோப்புக்குப் போய்விடுவார். சாதம் பிசைந்து எடுத்துக் கொண்டு அவர் மனைவியாரும் குழந்தைகளுடன் அந்தத் தோப்புக்குப் போவார். காலையிலே சென்ற பாரதியார் பதினொரு மணிவரை அந்த மடுக்கரையில் உட்கார்ந்து ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார். பதினொரு மணியானதும், எழுதுவதை நிறுத்திவிட்டு அந்த மடுவிலே இறங்கி நீராடுவார்; சூரியனைப் பார்த்துக் கொண்டே அரைமணி நேரம் இடுப்பளவு ஜலத்தில் நின்றுகொண்டு வேத மந்திரங்களை ஜெபிப்பார். ஸ்நானம் முடிந்தபின் சாப்பிட்டுவிட்டு மரநிழலில் இளைப்பாறுவார்; மறுபடியும் ஏதாவது எழுதுவார். சாயங்காலம் எல்லாருமாகத் திரும்பி வீடு சேர்வர். அந்தத் தோப்பு முத்தியாலுப்பேட்டை வெல்லச்சு செட்டியார் என்ற கிருஷ்ணசாமி செட்டியாருடையது.

பாரதியார் உல்லாசமாகக் காலங் கழிக்கவேண்டு மென்பதற்காகச் செட்டியார் அந்தத் தோப்பைப் பாரதியார் உபயோகித்துக் கொள்ள அனுமதித்திருந்தார். பாரதியார் குயில்பாட்டுப் பாடியதும் இந்தத் தோப்பில்தான். நிற்க

புயல் அடித்த மறுநாள் காலை பாரதியார் தமது தோப்பினைப் பார்க்கச் சென்றார். போய்ப் பார்த்தால் பக்கத்துத் தோப்புகளில் எல்லாம் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்து கிடந்தன. ஏராளமான சேதம். ஆனால் பாரதியாரின் தோப்பிலோ ஒரு மரங்கூட முறிந்து விழவில்லை. அதைக் கண்டவுடனே பாரதியாருக்கு ஆனந்தம் பொங்கியது. ஏழையாகிய பாரதியாருக்கு எவ்வித நஷ்டமும் அளிக்கக் கூடாதென்றே கடவுள் அந்தத் தோப்பில் சேதம் விளைக்கவில்லை யென்று நினைத்தார்.

உடனே கடவுளின் கருணையை வியந்து "பிழைத்த தென்னந்தோப்பு" என்ற தலைப்புள்ள பாட்டைப் பாடினார்.

பிழைத்த தென்னந்தோப்பு
வயலிடை யினிலே - செழுநீர்
மடுக் கரையினிலே
அயலெவரு மில்லை - தனியே
ஆறுதல் கொள்ள வந்தேன்.

காற்றடித்ததிலே - மரங்கள்
கணக்கிடத் தகுமோ?
நாற்றினைப் போலே - சிதறி
நாடெங்கும் வீழ்ந்தனவே!

சிறிய திட்டையிலே - உளதோர்
தென்னஞ் சிறுதோப்பு
வறியவ நுடைமை - அதனை
வாயு பொடிக்கவில்லை.

வீழ்ந்தன சிலவாம் - மரங்கள்
மீந்தன பலவாம்
வாழ்ந்திருக்க வென்றே - அதனை
வாயு பொறுத்து விட்டான்.

தனிமை கண்டதுண்டு - அதிலே
ஸார மிருக்குதம்மா!
பனிதொலைக்கும் வெயில் - அதுதேம்
பாகு மதுரமன்றோ?

இரவி நின்றது காண் - விண்ணிலே
இன்ப வொளித் திரளாய்
பரவி யங்கணுமே - கதிர்கள்
பாடிக் களித்தனவே.

நின்ற மரத்திடையே - சிறிதோர்
நிழலினி லிருந்தேன்
என்றுங் கவிதையிலே - நிலையாம்
இன்ப மறிந்து கொண்டேன்.

வாழ்க பராசக்தீ - நினையே
வாழ்த்திடுவார் வாழ்வார்
வாழ்க பராசக்தீ - இதையென்
வாக்கு மறவாதே.

பாரத ஸமுதாயம் வாழ்கவே!

"தனி யொருவனுக்கு உணவிலை யெனின்
ஜகத்தினை அழித்திடுவோம்"

ஸ்வர்க்கவாசி ஸ்ரீயுத வ.வெ.சு.ஐயர் தலைமையில் சென்னை கடற்கரையில் ஒத்துழையாமைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திலே பாடுமாறு ஸ்ரீயுத ஐயர் பாரதியாரைக் கேட்டுக் கொண்டார். அப்பொழுது பாரதியார் "பாரத ஸமுதாயம் வாழ்கவே" என்ற பாட்டைப் பாடினார்; அதன்பின் "அல்லா! அல்லா!" என்ற பாட்டுப் பாடினார். பாட்டைக் கேட்ட மக்கள் பரவசமானார்கள். அந்த நாளையிலே மின்சார விளக்குகள் கிடையாது. கியாஸ் லைட் உண்டு. கியாஸ் லைட் கண்டிராக்டரான முஸ்லிம் ஒருவருக்குப் பாரஹியாரின் அல்லாப் பாட்டைக் கேட்டதும் அளவற்ற ஆனந்தம் பொங்கிவிட்டது. உடனே அவர் ஓடிப்போய் சோடா வாங்கி வந்து பாரதியாருக்குக் கொடுத்துச் சாப்பிடச் செய்து விசிறிக்கொண்டு பாரதியாரின் ஆசுவாஸத்தைத் தணித்தார். அதுவே கடைசி முறையாகப் பாரதியார் பொதுக் கூட்டத்திலே தலைகாட்டியதாகும். அதன்பின் அவரது காலம் அருகி விட்டது.

ஸம்ஸார ஸாகரம்.

"ஸம்ஸாரம் என்கிற இந்த மரம் விஷ வித்திலிருந்து முளைக்கிறது. பல வகையான கர்மங்களும் இம்மரத்தின் பல்வேறு கிளைகள்; எண்ணங்கள் இலைகள்; காமமே மலர். இந்த மாதிரியான துயர்க்கடலில் பாபியாகிய யான் தவிக்கிறேன்." - சங்கர பகவத்பாதர்.

தாம் ஓர் இராணுவ வீரர் என்ற எண்ணம் பாரதியாருக்கு எப்பொழுதுமே உண்டு. சட்டையின் புஜம் இரண்டிலும் இரண்டு பெரிய 'சேப்டி பின்' குத்திக் கொண்டிருப்பார். மார்புப் பக்கத்திலே சட்டையில் ஒரு பெரிய பின் குத்திக் கொள்வார். இந்த மாதிரி அலங்காரம் செய்து கொள்வதிலே அவருக்கு ஆனந்தம்.

ஒரு நாள் ஆபீஸ் இல்லை. காலை நேரம். பாரதியார் வீட்டிலேயிருந்தார். அப்பொழுது அவர் துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டில் வசித்தார். அன்று அவரைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். நண்பரும் பாரதியாரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரது மனைவியார் வந்தார்; "இந்த மாதிரி வீணாகச் சட்டையிலே 'பின்'னைக் குத்தித் துணியை வீணாக்கலாமா? எத்தனை தரம் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறீர்களே" என்று சொல்லிக் கொண்டு வந்து பின்னை எறிந்து விட்டுப் போனார்.

உடனே பாரதியாரின் முகம் சுண்டிப்போயிற்று. 'ஏதடா! மூன்றாவது மனுஷர் எதிரிலே நமது மனைவி நம்மை இகழ்கிறாளே' என்ற எண்ணமோ தெரியவில்லை. தம் குழந்தையான பாப்பாவைக் கூப்பிட்டார். "பாப்பா! (சகுந்தலா) பாப்பா! அம்மாகிட்ட போயி சட்டையைத் துவைக்க வேண்டாமென்று சொல்லு' என்று உத்தரவு போட்டார்; அப்படியும் அவர் மனம் நிம்மதி யடையவில்லை; "தம்பீ! சிறிது நேரம் இங்கேயே
உட்கார்ந்திரு. இதோ வந்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டுப் பக்கத்து அறைக்குள் போனார்; போய், சிறு குழந்தை மாதிரி 'விம்மி விம்மி' அழுதார்; அரைமணி நேரம் அந்த மாதிரி அழுத பின்பு கண்ணைத் துடைத்துக் கொண்டு நண்பர் இருக்குமிடத்துக்கு வந்தார். "தம்பீ! ஸம்ஸாரம் பண்ணுவதென்றால் ஸாமானியமா? எவ்வளவோ கஷ்டம்" என்று கூறினார். கவிஞர் மனம் எவ்வளவு இளகியது என்பதை இதிலிருந்து அறியலாம்.

இயற்கையில் ஆனந்தம்!

பாரதியார் "சுதேசமித்திரன்" உதவியாசிரியராயிருந்த பொழுது அப்பத்திரிகாலயம் சென்னை ஜார்ஜ் டவுன், எர்ரபாலு செட்டித் தெருவில் இருந்தது. திருவல்லிக்கேனியிலிருந்து பட்டணம் போய் வருவதற்கும் இடைவேளைச் சிற்றுண்டிக்குமாக அவரது மனைவியார் நம் பாரதியாரிடம் காசு கொடுப்பார். கவிஞர் பணத்தை வாங்கிக் கொண்டு தெருகோடிக்கு வருவார்; வந்ததும் அந்தக் காசைக் கண்டபடி வீணாகச் செலவழிப்பார்; கைக்காசு செலவழிந்து போம். உடனே தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு நடையைக் கட்டிவிடுவார். திருவல்லிக்கேணியிலிருந்து நடந்தே ஆபீஸ் போவார்; சிற்றுண்டு யருந்தும் பொழுது யாராவது அவரைக் கூப்பிட்டு மனமுவந்து கொடுத்தால் வாங்கிச் சந்தோஷமாகத் தின்பார்; இல்லாவிடில் பட்டினிதான்!

மாலை நேரத்திலே சூரியன் மலைவாயில் வீழுங்காட்சியைக் காண்பதென்றால் அவருக்கு மிக்க ஆனந்தம். ஆபீஸின் வெளிப்புறத்திலே ஒரு தாழ்வாரம். அதிலே நின்றுகொண்டு சூரியாஸ்தமனமாகும் காட்சியை அவர் கவனித்துக் கொண்டேயிருப்பார்; அதிலேயே மெய்ம்மறந்து ஈடுபட்டுவிடுவார். யார் கூப்பிட்டாலும் காதில் விழாது. எவ்வளவு சப்தம் போட்டாலும் அவரது கவனத்தைத் திருப்பவே முடியாது. அவ்வளவு தூரம் மெய்ம்மறந்து அந்த மாலைக் காட்சியிலே அவர் ஈடுபட்டு விடுவார்.

பாரதியாருக்குப் பூமாலையில் அபாரமான பிரியம். அரளிப்பூ முதலிய சிவப்புப் பூக்களையெல்லாம் தொடுத்து ஒரு மாலையாகக் கழுத்திலே போட்டுக் கொள்வதில் அவருக்கு அளவுக்கு மிஞ்சிய ஆசை.

மனை மாண்பு.
"காக்கை குருவி எங்கள் ஜாதி"

பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். சிற்றுண்டிக்காக கொடுக்கும் காசைக் கண்டபடி செலவழித்துவிட்டுப் பட்டினி கிடப்பார் பாரதியார் என்பது அவரது மனைவிக்குத் தெரியும். ஆகவே அந்த அம்மணி என்ன செய்வாரென்று கேட்டால் கணவர் வரும் வேளையில் ஏதாவது சிற்றுண்டி செய்து வைத்துக் கொண்டு காத்திருப்பார். பாரதியார் வீடு வந்ததும் செல்லம்மாள் அதை அன்புடன் கொண்டு வந்து கொடுப்பார். 'ஏதடா! நாள் முழுதும் பட்டினி கிடந்தோமே! இதை அப்படியே தின்றுவிடுவோம்' என்ற எண்ணம் பாரதிக்குத் தோன்றுவதேயில்லை. அந்தச் சிற்றுண்டியை எடுத்துக் குருவிக்குக் கொஞ்சம் போடுவார்; பூனைக்குக் கொஞ்சம்; காக்காய்க்குக் கொஞ்சம் போக மீதியைத் தின்பார். என்ன மனுஷர்!

தேம்பி அழுதார்.

"இன்றைக்கு எங்கள் வீட்டில் ஸொஜ்ஜி பண்ணியிருக்கிறாள். நீயும் வா! நான் காலையிலே தின்றேன்; ரொம்ப ருசியாயிருந்தது" என்று சொல்லி பாரதியார் ஒரு நண்பரைத் தமது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார்; வந்து அவரை ஓரிடத்தில் அமர்த்தி உள்ளே போய்ப் பார்த்தார்; ஸொஜ்ஜி வழக்கமாக வைக்கப்படும் இடத்திலே தேடினார். அங்கே 'ஸொஜ்ஜி' இல்லை. உடனே பாரதியார் நண்பர் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார். "தம்பீ! நீ தங்கக் கம்பியென்றால் தங்கக் கம்பி. பத்தரை மாத்துத் தங்கம். நீ 'ஸொஜ்ஜி' சாப்பிட வேந்துமென்று உன்னை அழைத்து வந்தேன்; ஸொஜ்ஜி இல்லை; ஆய்விட்டது போலிருக்கிறது" என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழுதார் பாரதியார். "அதனால் என்ன? பாதகமில்லை. ஆய்விட்டது போலிருக்கிறது. இன்னொரு நாள் தின்றால் போகிறது. நீங்கள் ஏன் வருத்தப் படுகிறீர்கள்" என்று நண்பர் தேறுதல் கூறினார்.

இருந்தாலும் பாரதியார் மேலும் மேலும் அழ ஆரம்பித்தார். பின்னர் மறுபடியும் சென்று தேடிய பொழுது 'ஸொஜ்ஜி' கிண்ணம் கிடைத்தது. உடனே சிறு குழந்தையைப் போலே துள்ளிக் குதித்தார் பாரதியார். அவர் முகத்திலே சந்தோஷம் தாண்டவமாடிற்று.

பாரதியார் கள்ளங்கபடமற்ற உள்ளமுடையவர். குழந்தை போன்ற மனம் உடையவர்.

தோழமை

"தோழனுடன் சம்பாஷிப்பதைக் காட்டிலும் பெரிய இன்பம் வேறில்லை" - சுகிர்லாபம்.

பாரதியாருக்கு நண்பர்களிடத்திலே அபாரமான பிரியம். ஒரு சமயத்திலே தேனாம்பேட்டையிலே ஒரு நண்பர் பிரசங்கமொன்றுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார். அது சரியான வெயில் காலம். பிரசங்கம் ஐந்து மணிக்கு ஆரம்பம்.

பாரதியார் என்ன செய்தார்! நடு வெயிலில் ஒரு ரிக்ஷா வைத்துக் கொண்டு பகல் சுமார் ஒரு மணிக்குத் தம் நண்பர் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தார்.

"என்ன! இந்த வெயிலில் புறப்பட்டு வந்தீர்கள்?" என்று விசாரித்தார் நண்பர்.

"தம்பீ! நீ பஞ்சதந்திரக் கதை வாசித்திருக்கிறாயா? 'மித்திரனைவிடச் சிறந்தவன் வேறில்லை; மித்திரனுடன் அளவளாவுவதே இன்பம்' என்று அதிலே சொல்லப்பட்டிருக்கிறதே! தெரியுமா? நீ நல்ல பிள்ளை, அதனால்தான் வந்தேன்" என்றார் பாரதியார்.

பிறகு இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

பாரதி பட்டம் பெற்றது.

எட்டயபுரம் ஜோதிஷ வித்துவான் ஸ்ரீமான் குருகுஹதாஸப் பிள்ளை அவர்கள் வீட்டில்தான் பாரதியார் அடிக்கடி சல்லாபம் செய்து கொண்டிருப்பார். 1896-ம் வருஷத்திலே அவர் திருநெல்வேலி ஸென்ட்ரல் ஹிந்து காலேஜில் மெட்ரிகுலேஷன் வகுப்பில் வாசித்துக் கொண்டிருந்தார். அவர் ஸெலக்ஷன் பரீக்ஷையில் தேறவில்லை. அவ்வருஷம் இறுதியிலே, அதாவது 1896ம் வருஷம் நவம்பர் மாதக் கடைசியிலே ஒரு நாள் பாரதியார் எட்டயபுரம் குருகுஹதாஸப் பிள்ளையவர்கள் வீட்டிலிருந்தார். அப்பொழுது விருதை சிவஞான யோகியார் என்பவரும் அங்கே யிருந்தார். அவர், நம் பாரதியார் ஸெலக்ஷன் பரீக்ஷையில் தோல்வியுற்றது பற்றி ஏளனம் செய்தார்.

"என்ன! வாய்ப் பேச்சுதான்! பரீக்ஷை தேற முடியவில்லையே" என்றார் அவர்.

"பரீக்ஷை தேறிப்பட்டம் பெறுவதற்காக நான் படிக்கவில்லையே!" என்று பாரதியார் பதில் கூறினார். அந்த வகையிலே நடந்த விவாதத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுமாறு விருதை சிவஞான யோகியார் பாரதியாருக்குச் சவால் விடுத்தார். உடனே அன்றைய மாலையே பொதுக் கூட்டத்தில் "கல்வியின் திறன்" என்பது பற்றிப் பேசப் போவதாக பாரதியார் கூறிச் சென்றார். குறித்த நேரத்தில் கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்திலே பதினாலு வயது சென்ற நம் பாரதியார் கேட்போர் வியக்கத்தக்க விதமாகப் பேசினார். அன்றைய தினம் தான் குருகுஹதாஸப் பிள்ளை வீட்டில் விருதை சிவஞான யோகியாரால் "பாரதி" என்ற பட்டம் சுப்பிரமணிய பாரதியாருக்குச் சூட்டப்பட்டது.

உலாமடல்

சுமார் 250 வருஷங்களுக்கு முன்பு எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக, கடிகை முத்துப் புலவர் என்று ஒருவர் இருந்தார். பெத்தண்ண தளவாய், உமறு புலவர், ஆகியவர்கள் அவரது சிஷ்யர்கள். பெத்தண்ண தளவாய் எட்டயபுரத்தவர் மீது ஓர் "உலாமடல்" பாடியிருக்கிறார். அந்த உலா மடல் மிக்க சொல் நயம் பொருள் நயம் சிறந்து விளங்குவது; அந்த மாதிரி யாராலும் பாடமுடியாது என்று புகழப்படுவது. இவ்வாறு பலரும் அந்த உலாமடலைப் புகழக் கேட்ட பாரதியார் சுமார் 200 வரிகள் அதே மாதிரி ஓர் அழகான "உலாமடல்" பாடினார். பாடி, அதைச் சபையோர்முன் படித்துக் காண்பித்தார். அது மிகவும் நன்றாயிருந்தது. ஆனால் சில புலவர்கள் பொறாமை மிகுதியினாலே ராஜ சபையில் புகுத்த மனமில்லாதிருந்தது கண்டு பாரதியாருக்குக் கோபம் வந்தது. அவர்கள் முன்னிலையிலேயே அதைக் கிழித்தெறிந்து போட்டு வந்தார்.

'அன்று அங்கே; இன்று இங்கே'

படிப்பெல்லாம் முடிந்த பிறகு பாரதியார் எட்டயபுரம் சமஸ்தானத்திலேயே உத்தியோகம் வகித்து வந்தார். அப்படியிருக்கும் நாளில் அவருக்கும் சமஸ்தான மன்னருக்கும் ஏதோ மனஸ்தாபம் நிகழ்ந்தது. அதனாலே மன்னர் சமஸ்தான உத்தியோகத்திலிருந்து அவரை விலக்கி விட்டார். அன்றிரவு ஒரு தெருவிலே தீப்பற்றிக் கொண்டது. அவ்விடத்திலே பாரதி அன்பர் பலரும் கூடியிருந்தனர். பாரதியும் ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு அங்கே போயிருந்தார்.

"இது என்ன இப்படி நெருப்புப் பற்றிக் கொண்டதே!" என்று ஒருவர் கேட்டார்.

உடனே பாரதியார் சொன்னார்: "அன்று இராவணன் ஒரு கவியை (குரங்கை) இம்சித்தான். அதன் பயனாக அங்கே (இலங்கையில்) தீ மூண்டது. இன்று எட்டயபுரம் சமஸ்தானாதிபதி ஒரு கவியை (தன்னை) இம்சித்தார். இதோ இங்கே நெருப்புப் பிடித்துக் கொண்டது."

சுண்டைக்காய் பூமி

மன்னருடன் கொண்ட மனஸ்தாபத்தால் பாரதியார் உத்தியோகத்திலிருந்து விலகினார் என்ற செய்தி பாரதி நண்பர்களுக்குத் தெரிந்தது. அவர்கள் சும்மா யிருப்பார்களா? எப்படியாவது பாரதியை மறுபடியும் சமஸ்தான ஊழியத்தில் நுழைக்க வேண்டிய முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் "மதியாதார் தலைவாயில் மிதிக்க வேண்டாம்" என்ற இறுமாப்புக் கொண்டவரன்றோ நம் பாரதியார்?

"எட்டயபுரம் ராஜா சுண்டைக்கா யளவு பூமியை வைத்துக் கொண்டிருக்கிறார். உலகம் மிகப் பெரியது. அதிலே எனக்கு இடமிருக்கிறதென்று சொல்" என்று கூறி பாரதியா சமஸ்தானத்திலே வேலை செய்ய மறுத்தார்.

கருங்குரங்கு கட்டவிழப் பெற்றது

இப்பொழுது ரிடயர்டு ஜில்லா ரிஜிஸ்தரராயிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பிள்ளை அவர்கள் தென்காசியிலே ஸப் ரிஜிஸ்தரராயிருக்கும் காலத்தில் ஒரு சமயம் பாரதியார் அவர் வீட்டில் தங்கியிருந்தார். அது 1921ம் வருஷம். ஸ்ரீ பிள்ளையவர்கள் வீட்டில் ஒரு கருங்குரங்கு கட்டப்பட்டிருந்தது. அதைக் கண்டவுடன் பாரதியாருக்கு அதனிடத்திலே இரக்கம் தோன்றிவிட்டது. குரங்கு பந்தத்திலிருப்பதை அவரால் சகிக்க முடியவில்லை. உடனே அதற்குய் ஏதோ தாம் உபதேசம் செய்யப் போவதாகச் சொல்லிவிட்டு அதன் காதில் என்னவோ ஓதினார்; பிறகு அவர்களைப் பார்த்துச் சொன்னார்:

"ஐயா! இப்பொழுது நம்மிடையே பேசப்படுகிற ஆதி திராவிடர்களுக்கும் பாவியான இந்த அனாதி திராவிடனைக் கட்டவிழ்த்துவிட்டுப் பார்த்தீர்களானால் அவனது குறும்பு யாவும் அடங்கிச் சாதுவாயிருப்பான்" என்றார். உடனே கட்டவிழ்த்து விடப்பட்டது. பாரதியார் சொன்னபடியே சாதுவாய்த் திகழ்ந்தது விடுதலை அடைந்த அந்தக் கருங்குரங்கு.

பெரியோர் மொழி

'இரவி யெழுந்தது முதல் எற்படுவரை
இவ்வுலகு நின் புகழ் கேட்பதாக" -- மெக்காலே.

லக்ஷமண சிங் தேவோ என்பவர் ஒரு பெயவர்; ஆரிய சமாஜி; நேபிள்ஸ், ரோம் ஆகிய பல இடங்கள் சுற்றியவர். ஆப்பிரிக்காவில் வசித்திருந்தார். போயர் யுத்தத்தின் போது அங்கிருந்து புறப்பட்டுக் கொழும்பு மார்க்கமாக எட்டயபுரம் வந்தவர். அவரது இயற்பெயர் இன்னதென்பது யாருக்கும் தெரியாது. 1899 முதல் 1902 வரை அவர் எட்டயபுரத்தில் வசித்து வந்தார். அவர் தாடி வளர்த்திருப்பார். பாரதியார் அவரை 'மிஸ்டர் பார்பா' என்று கூப்பிடுவார். 'பார்பா' என்றால் தாடி என்று பொருள். அங்கே அளவளாவிக் கொண்டிருந்த பாரதியாரைப் பார்த்ததும் "இவர் இன்னும் சில காலத்திற்கெல்லாம் சர்க்கார் தொல்லைக்கு ஆற்றாது அஞ்ஞாதவாசம் செய்வார். அதன் பின்பு இவரது புகழ் மிக்கோங்கும்" என்றார் லக்ஷ்மண் சிங். அவ்வாறு சொல்லக் காரணம் என்னவென்று விசாரிக்கப் பட்டது.

"என்னவோ எனக்குத் தோன்றியதைக் கூறினேன்" என்றார் லக்ஷ்மண் சிங். ஆனால் பிற்காலத்திலேதான் அது உண்மையாகி விட்டதே!

"ஷெல்லியின் கில்டு"

ஆங்கிலக் கவிஞர்களாகிய ஷெல்லி, பைரன் ஆகிய இருவரது நூல்கள் மீதும் பாரதிக்கு எல்லையற்ற பற்று. சதாகாலமும் 'ஷெல்லி'யைக் கையிலேயே வைத்துக் கொண்டிருப்பார்.

1902ம் வருஷம் எட்டயபுரத்திலே பெருமாள் கோவில் சந்நிதித் தெருவிலே பாரதி ஒரு சங்கம் ஸ்தாபித்தார். அதற்கு "ஷெல்லியின் கில்டு" (Shellian Guild) என்று பெயர். பின்காலத்திலே பாரதியாரின் "இந்தியா" பத்திரிகையில் உதவி ஆசிரியராகவிருந்த எட்டயபுரம் ஸ்ரீமான் பி.பி.சுப்பையா என்பவர் அந்தச் சங்கத்திலே ஓர் அங்கத்தவர். இப்பொழுது பழனி தாலுக்கா ஆபீஸ் தலைமை குமாஸ்தாவாயிருக்கும் எட்டயபுரம் அ.கைலாசம் பிள்ளை என்பவரும் அதிலே ஓர் உறுப்பினர்.

அந்தச் சங்கத்திலே பாரதியார் ஷெல்லியின் கவிதா ரஸங்களையும், பைரனின் தேசிய கீதங்களையும் படித்துக் காண்பிப்பார்.

மூடசிகாமணிகள் நக்ஷத்திரமாலை

எட்டயபுரம் சமஸ்தானாதிபதியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டதனாலே பாரதியார் அவ்வூரை விட்டுக் கிளம்பினார். கிளம்பி மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தமிழ்ப் பணித ஊழியம் புரிந்தார். அது 1904ம் வருஷத்திய நிகழ்ச்சி.

அப்பொழுது பாரதியார் ஒரு நூல் இயற்றினார். அதற்கு "மூடசிகாமணிகள் நக்ஷத்திர மாலை" என்று பெயர். நக்ஷத்திரங்கள் மொத்தம் இருபத்தேழு அல்லவா? அதே மாதிரி இருபத்தேழு விருத்தப் பாக்களாலே அந்நூலை யாத்தார்; அதிலே சிற்சிலரது பெயரைக் குறிப்பிட்டே திட்டிப் பாடியிருந்தார்.

மதுரை கந்தசாமிக் கவிராயர் முதலிய வேறு பல புலவர்களிடம் அவர் அந்த நக்ஷத்திர மாலையை வாசித்துக் காண்பித்தார். மதுரை சங்கப்பா என்பவர் ஒரு கிழப் பிராமணர்; வேதாந்தி. அத நக்ஷத்திர மாலையை வாசித்துக் காண்பிக்க வேண்டுமென்று அவர் பாரதியாரைக் கேட்டுக் கொண்டார். பாரதியாரும் அதற்கு இணங்கினார். மதுரை 'பேரையூர் பங்களா'வில் அது படிக்கப்பட்டது. பெரியவர் அதை நன்றாகக் கேட்டார். "நூலிலே கூறப்பட்டிருந்த விஷயங்கள் யாவும் உண்மையே. ஆனாலும் உன்னைப் போன்றவருடைய வாழ்வுக்கு இதனாலே இடையூறுண்டாகும். ஆனதினாலே இதைக் கிழித்தெறி" என்று பாரதியாரிடம் கூறினார் அப்பெரியார். பெரியவரது சொல்லை மதித்துப் பாரதியாரும் அந்த நூலைக் கிழித்துப் போட்டார்.

பாதிரியார் பாராட்டு

"விளையும் பயிர் முளையிலே தெரியும்"

திருநெல்வேலி ஜில்லாவில் 'நாஸரெத்' என்று ஓர் ஊர் இருக்கிறது. அந்த ஊரிலே ஒரு பாதிரியார் வசித்து வந்தார். அவர் பெயர் ரெவரண்டு ஏ.கானன் மெகாஷியஸ் என்பது. அவர் அக்காலத்தில் இருந்த 'பிரைமரி போர்டு' தலைவராயிருந்தார். அந்தப் பிரைமரி பரீக்ஷை எழுதி சர்டிபிகேட் வாங்குவது ஒரு பெரிய கெளரவம் என்று அக்காலத்திய இளைஞர்கள் எண்ணினார்கள். ஆதலினாலே ஏராளமான பேர்கள் அப்பரீக்ஷைக்குப் போவதுண்டு. பாரதிக்கும் அந்தப் பரீக்ஷை பாஸ் செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.

அப்பொழுது எட்டயபுரத்தில் ஏ.வி.ஸ்கூல் என்று ஒரு பள்ளிக்கூட மிருந்தது. சங்கர ஐயர் என்பவர் அந்தப் பள்ளிக்கூடத்தின் எட்மாஸ்டர். அவரிடம் பாரதியார் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரும் பாரதியாரின் விருப்பத்துக் கிணங்கிச் சில மாணவர்களுடன் பாரதியாரையும் பரீக்ஷைக்கு அனுப்பினார்.

அந்த வருஷத்திலே சுமார் இருநூறு பேர் அந்தப் பரீக்ஷைக்குச் சென்றனர். எல்லாரும் சாத்தூரில் மேற்பட் பாதிரியார் முன் ஆஜரானார். ஒவ்வொருவரையும் தமக்குத் தெரிந்த ஓர் இங்கிலீஷ் பாட்டைப் பாடுமாறு பாதிரியார் கேட்டார். பாரதியார் 'டுவிங்கில் டுவிங்கில் லிட்டில் ஸ்டார்' என்ற இங்கிலீஷ் கவியை மிகுந்த உற்சாகத்துடனும், ரஸாபாவத்துடனும் அபிநய பூர்வமாகப் பாடிக் காட்டினார். அது கண்டு பாதிரியார் அடங்கா மகிழ்ச்சி கொண்டார். சங்கரய்யர் என்பவரிடம் "இந்தச் சிறுவன் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் உடனே லண்டனிலுள்ள ஏதாவதொரு சர்வகலாசாலைக்கு இவனை அனுப்புமாறு இவன் தந்தையிடம் சொல்லுங்கள்" என்று கூறினார்.

இளமையிலேயே பாரதியார் பாட்டிலும் கவிதையிலும் எவ்வளவு தூரம் ஈடுபட்டிருந்தார் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு.

பாரதியாரும் ஸங்கீதமும்

1899 -1902 ஆகிய வருஷங்களில் முத்துசாமி தீக்ஷிதர் அவர்களின் தம்பியார் குமாரர் சுப்பராம தீக்ஷிதர் என்பார் 'ஸங்கீத ஸம்பிரதாய ப்ரதர்ஸினி' என்றதோர் அரிய ஸங்கீத நூலை இயற்றிக் கொண்டிருந்தார். எட்டயபுரம் மன்னர் அதற்கு வேண்டிய பொருளுதவி புரிந்து வந்தார். அந்தச் சமயத்திலே சென்னை சீப் செக்ரிடேரியட் ஆபீஸ் மானேஜராயிருந்தவரும் ' பிராசீன கானம்' (Oriental Music in European Staff Notation) என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஏ.எம். சின்னசாமி முதலியார் எம்.ஏ. யும் அங்கே இது சம்பந்தமாக வந்திருந்தார். 72 மேளங்களின் தாரதம்யங்கள் பற்றி அங்கே சர்ச்சை நடைபெறும். சின்னசாமி முதலியாரவர்களின் இடைவிடாத நண்பராயிருந்து அவ்வப்போது அவருக்கு வேண்டிய உதவிகளைப் புரிந்தவர் எட்டயபுரம் ஸ்ரீ குருகுஹதாஸப் பிள்ளை அவர்களாவர். அவர்களுடனே பாரதியாரும் மேற்பட் சங்கீத விவாதம் நடக்குமிடத்துக்குச் செல்வார்; சென்று ராக லக்ஷணங்கள் அவற்றின் சஞ்சாரங்கள் முதலியவைகளைத் தெளிந்து அப்யஸிப்பார்.

இவ்விதமாக பாரதி ஸங்கீதத்தில் விற்பன்னரானார். ஸ்ரீ சுப்பராம தீக்ஷதர் பேரிலே பாரதி ஒரு சரம கவி பாடியிருக்கிறார். பின்னே 1908ல் பாரதி எட்டயபுரம் போயிருந்தார். அப்பொழுது ஸ்ரீ சுப்பராம தீக்ஷிதர் அவர்களது வீட்டுக்குப் போனார். 'ஸங்கீத ஜோதி மறைந்ததே' என்று வாய்விட்டுக் கூறினார். பாரதியும் தீக்ஷதரும் முன்பு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த இடத்தைப் பத்து நிமிஷம் உற்று நோக்கினார்; கலகலவென்று கண்ணீர் உகுத்தார். அவ்விடத்தை வீழ்ந்து நமஸ்கரித்து விட்டுப் போய்விட்டார்.

பூ மழை பொழிந்தார்

சுதேசிக் கப்பல் ஓட்டிய தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளை கைது செய்யப்பட்டு ரிமாண்டில் இருந்த பொழுது பாரதியார் அரசாங்கத்தின் உத்தரவு பெற்று அவரைப் பார்க்கச் சென்றார். சிறையிலே தமிழ் நாட்டுத் தேசபக்தர் அடைபட்டுக் கிடந்தார். பாரதியார் அவரைப் பார்க்கப் போகும் பொழுது ஒரு கூடை நிறையப் பூ வாங்கிக் கொண்டு போயிருந்தார். அந்தக் கூடை பூவையும் சிதம்பரம் பிள்ளை மீது வர்ஷித்து ஆனந்த பாஷ்பம் பொழிந்தார் பாரதியார்.

எட்டயபுரத்திலே இருக்கும் பொழுது பாரதியாருக்கும் சிதம்பரம் பிள்ளைக்கும் அவ்வளவாக மனப்பிடித்தம் கிடையாது. சூரத் காங்கிரசின் போதுதான் இருவருக்கும் அத்தியந்த ஸ்நேகம் உண்டாயிற்று.

குவலயானந்த மொழிபெயர்ப்பு.

ஸம்ஸ்க்ருதத்திலே 'குவலயானந்தம்' என்று ஒரு நூல் இருக்கிறது. அதை ஸ்ரீ சங்கர சாஸ்திரிகள் என்பார் தமிழில் மொழி பெயர்த்தார். எட்டயபுரம் மீனாட்சிசுந்தரக் கவிராயர் அதைப் பாட்டாகப் பாடினார். எட்டயபுரம் சின்ன ராஜாவால் அது அச்சிடப்பட்டது. அப்பொழுது பாரதியார் எட்டயபுரத்திலிருந்தார். தமிழ்மொழி பெயர்ப்பிலே அணி நயத்திலே சில குற்றங்கள் இருப்பதாகவும் மூல நூலிலே அவ்விதம் இருந்திருக்க முடியாதென்றும் பாரதி சாதித்தார். சாதித்த பிறகு அதை மெய்ப்பித்தும் காட்டினார்.

உண்மையில் மூல நூலிலே அக்குற்றம் இல்லை. அப்பொழுது பாரதிக்கு அவ்வளவாக ஸம்ஸ்கிருதம் தெரியாது. இம்மாதிரி நூல் இயற்றுவது பெரிய காரியமில்லை யென்றும் அம்மாதிரி நூல் இயற்றித் தருமாறு தம்மைச் சமஸ்தானம் கேட்டுக் கொண்டால் தாம் இயற்றித்தரச் சித்தமாயிருப்பதாகவும் கூறினார்.











































Sunday, July 20, 2014

ஸ்ரீவீரமாசக்தி பத்ரகாளியம்மன் துதி


                                                                           உ
                பாபநாசம் தாலுகா, அரையபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்
          அருள்மிகு ஸ்ரீவீரமாசக்தி
பத்ரகாளியம்ன் துதி
                                 ==========

                                         ஆக்கம்: தஞ்சை வெ.கோபாலன்,
                             இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.

                                                                      காப்பு
                                 புன்னைநல்லூர் மாரியம்மா, சமயபுரத் தாயே!
                                சென்னையின் வேற்காட்டில் வாழுகின்ற மாரி!
                                கன்யாகுமரி வாழ் கன்னித்தாய் குமரி
                                பன்னாரி அம்மா, பகவதியம்மன் தாயே,
                                ஊர்மக்கள் போற்றுகின்ற உக்ரகாளி அம்மா
                                உறையூரை ஆளுகின்ற வெக்காளி அம்மா
                                கருவூரில் குடிகொண்ட மாரியம்மா தாயே
                                அரையபுரம் வாழ்கின்ற அருள்சக்தி காளி!
                                நின்னைச் சரணடைந்த அடியார்கள் எல்லாம்
                                பணிந்து நிற்கின்றார், அருள் செய்வாயம்மா!

                                                           பாயிரம்
                     அண்டமெலாம் படைத்தவளை அன்பருள்ளம் வாழ்பவளை
                     எண்ணமெலாம் உணர்ந்தவளை இரங்கியருள் புரிபவளை
                     கண்ணாரக் கண்டு உளமார வணங்கி மனதாரப் புகழ்ந்து
                     தொண்டடிமை செய்து வணங்குகின்றோம் பணிந்து.

                                                              நூல்

                     நீயே சரணமென கூவி அழைத்திடுவோம்
                     தாயே எமக்குறுதி தந்து காத்திடுவாய்
                     வாயால் தாய்புகழை அனவரதம் பேசிடுவோம்
                     ஓயாமல் உனதருளை அள்ளித் தந்திடுவாய்.                                        1.

                    காளீ! வீரமாசக்தி எங்கள் பத்ரகாளியம்மா
                    நாளும் நின்மலர்த்தாள் நாடிப் பணிகின்றோம்
                   தாளில் வணங்கி அபயம் வேண்டுகின்றோம் 
                   ஒளிகண்டு மலர்கின்ற மலர்போல அருள்புரிவாய்.                               2.

                   எண்ணுகின்ற காரியங்கள் இனிதே முடித்திடுவாய்
                   பண்ணுகின்ற பணிகளிலே வெற்றியைத் தந்திடுவாய்
                   துணையாக அம்மையே எப்போதும் இருந்திடுவாய்
                   நண்ணுகின்ற செயலனைத்தும் நின்னுடை செயலன்றோ?                 3.

                  எண்ணிலா நன்மைகளைக் கணக்கின்றி தந்துவிடு
                  விண்ணவர் போலநாங்கள் வாழ்ந்திட வரம்தந்து 
                  மண்ணிலே ஈடெவரும் இல்லையெனும் நிலையடைந்து
                  வண்மையும் வளமையும் வழங்கி அருள்செய்வாய்.                               4.

                  தானமும் தவமும் கல்வியும் தான்தருவாய்
                  வானத்துத் தாரகைபோல் வாழ்க்கையைத் தந்திடுவாய்
                  மானத்தொடு வீரமும் மாண்பும் மிகத்தந்து
                 ஞானக் குழந்தைகளாய் வாழும்வகை செய்திடுவாய்.                            5.

                  பூதங்கள் ஐந்தும் ஒன்றாய் சேர்ந்ததுபோல்
                 போதமாகி நின்றாய், பொறிகளைநீ கடந்தாய்
                 தீதனைத்தும் நீக்கி தெய்வஅருள் தருவாய்
                 வேதங்கள் உன்னுருவில் என்றும் நிலைத்திருக்கும்.                              6.

                 காலத்தைக் கடந்தவள் நீ, கடிதினில் வந்திடுவாய்
                 மாலவனின் தங்கையே எம் மனதினுள் புகுந்திடுவாய்
                 எல்லாத் திசைகளிலும் அண்டங்கள் அனைத்தினிலும்
                 செல்லும் திக்கனைத்தும் நின்புகழே நிலைத்திருக்கும்.                         7 .

                 நீயே சரணமென நித்தநித்தம் கூவிடுவோம்
                தாயே எங்களுக்கு நெஞ்சினில் உரம் தருவாய்
                ஓயோம் ஒருபொழுதும் நின்புகழைப் பேசாமல்
                பேய்மனம் கொண்டோர்க்கும் நற்கதியைத் தந்திடுவாய்.                    8.

                சித்தத்தில் துணிவுகொண்டு சிந்தையில் அன்புகொண்டு
                எத்திசையும் புகழ்மணக்க சீர்கொண்டு செல்வம்சேர
                இத்தரையில் வாழ்ந்திருக்கும் இனிதான நாட்களெல்லாம்
                புத்தியில் நினைவைத்து புகழோடு வாழ்ந்திருப்போம்.                         9.

                மையுற்ற கண்களும் பொன்னணி கலன்களும்
                செய்கின்ற தீமைகளை உலகுக்குக் காட்டி
                பொய்யுறு வாழ்க்கையை அண்டாமல் ஓட்டி
                ஐயுறவின்றியே வாழ்வளிப்பாய் தாயே!                                               10.

                கோதுடையார் உறவில் மயங்கியே களித்து
                காதலும் இன்பமும் கணந்தோறும் வளர்த்து
                எதுவும் இவ்வுலகில் இயல்பென நினைத்து
                பூதலத்து வாழ்வின் இன்பத்தில் திளைத்து                                           11.

                இன்பமும் துன்பமும் உணர்விடை வைத்து
                முன்னும் பின்னும் துயர்களைக் கொடுத்து
                துன்பம் நீங்கிட நினதடி பணிந்து
                அன்பில் ஒன்றி நின்னையே சார்ந்தோம்.                                             12.

                தீது நேரிடினும் அச்சம் எமக்கில்லை
                எதுவும் நடப்பதிங்கு நின்றன் செயலாலன்றோ
               ஆதரித்து இங்கு அருள்புரிய வேண்டுகின்றோம் 
               போத நல்லருளை எப்போதும் தருவாயே!                                            13.

               வேத மந்திரங்கள் எண்திசையும் ஒலிக்க
               மாதவன் கண்ணனின் குழலிசையில் மிதக்க
               சாதகப் பறவைகள் விண்ணில் பறக்க
               ஓதுவோம் நின்புகழ் நாவென்றும் இனிக்க.                                         14.

               காவி அணிந்திட்ட துறவுநிலை வேண்டா
               பாவித்துத் தலைமேல் கற்றை முடிவேண்டா
              ஆவிக்கு உற்றதோர் கருணையொன்றே போதும்
               பாவிகள் எம்மைக் கரையில் சேர்த்திடு.                                               15.

               தவமென்று பிரிதொரு சாதனையும் வேண்டா
               சிவத்தை மனத்திலேற்றி சிந்தையை நேராக்கி
               தவத்துக்கு அன்னையே நின்னையே துணைகொண்டு
               பவமே துலங்கிட பேரருள் தருவாய்.                                                    16.

               சக்தியென்ற நின்பெயரை நித்தநித்தம் ஓதுவதால்
               சக்திதந்து எம்மனத்தில் உறுதிபட நின்றிருப்பாய்
               சக்தியின் சந்நிதியில் மனமுருக வேண்டிநின்றால்
               சக்திநீ பராசக்தி என்றும் துணையிருப்பாய்.                                       17.

               நலம்புரியும் சக்தீ, அரையபுரம் காளீ
              வலம்வந்தோம் நின்னை சரணடைந்தோம் நின்னை
              விலக்கிடுவாய் மக்கள் துன்பங்கள் எல்லாம்
              புலப்படுவாய் கண்ணில் பாமரராம் எமக்கு.                                        18.

              உயிரோடு உணர்வையும் ஓங்கி வளர்த்திடுவாய்
              பயிர்களை வளர்ப்பதுபோல் பத்ரகாளீ நீயும்
              வயிரம்போல் உடலையும், வண்ணமுறு மனத்தையும்
              பாவித்து நலம்புரிவாய் அன்னையே தினமும்.                                   19.

              உலகினைக் காத்திட ஆதவனாய்த் திரிவாய்
              மலையிலும் மண்ணிலும் மாரியாய் உதிர்வாய்
              நலங்கள் அனைத்தையும் நல்கிடும் காளீ
              குலத்தொடு மாண்பையும் கொடுத்திடு தாயே.                                  20.

              அன்புறு சோதியாய் அருள்தரும் காளியாய்
              இன்பமே என்றும் இருந்திடச் செய்வாய்
              பன்பலிநீக்கி பயனுறு செயல்கள் ஊக்கி
              மின்படு சக்தியாய்நீ மாநிலம்தனைக் காப்பாய்.                                21.

              நயம்படு செயல்களை செய்துனை வணங்கி
              தயங்கிடா மனமும் திடங்கொண்ட பணிவும்
              தயவுடன் நின்னை பணிந்தெழும் எம்மை
              வியப்புறு வண்ணம் காத்திடல் நின்கடன்.                                        22.

              நினைக்கும் பொழுதினில் நின்னுரு தோன்றவும்
             ஊனினை உருக்கிநின் மாமலரடி பணியவும்
             தானெனும் அகந்தையை அகழ்ந்தே எடுக்கவும்
             தேனென ஒழுகும்நின் திருவருள் அருந்துவோம்.                               23.

             விட்டில்பூச்சிகள் விளக்கிடை வீழ்தல் போல்
              மட்டில் கேடுகள் விளைக்கும் செயல்களை
             கூட்டியெம் வாழ்க்கையை துயர் கடலாக்கி
             வாட்டும் நிலைமையை மாற்றிட விழைகிறோம்.                              24.

              வல்லவர் வெல்லவும் வண்மைகள் பெருகவும்
              நல்லவராக நாநிலத்து மக்கள் வாழவும்
              வல்லமை மிக்க வீரமாசக்தி பத்ரகாளீ
              நல்லருள் புரிவாய், நலங்களை அருள்வாய்.                                      25.

                                                              நூற்பயன்

            நலம் தருவாள், குணம் தருவாள், நீண்ட வாழ்வருள்வாள்!
            பலம் தருவாள், கல்வியும் செல்வமும் கணக்கின்றி தான்தருவாள்!
            நல்லோர் துணை தருவாள், கருணை மழை பொழிவாள்!
            வல்லமைமிக்க அரையபுரம் காளி வீரமாசக்தியை வணங்குவோர்க்கே!