பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, March 28, 2014

வாக்கினை அளியுங்கள்!



ஞான கணபதியே கல்வித்தாய் கலைமகளே
மோன முதல்வோனே முத்தமிழும் தந்தவனே
வினைகளைக் களைவோனே நின்பாதம் சரணமய்யா
அன்றாட அரசியலை நான்பாட அருளுமய்யா.

எங்கோ பிறந்தவர்கள் இங்கு வந்து ஆண்டார்கள்
அங்கவரை விரட்டிடவே பாட்டன்மார் முயன்றார்கள்
தங்கத் தலைவர்கள் தியாகங்கள் புரிந்தார்கள்
இங்கு நாம் சுதந்திரத்தை இனிதே பெற்றுவிட்டோம்.

தியாகங்கள் செய்தவர்கள் இருந்தவிடம் தெரியவில்லை
மாயவித்தை செய்பவர்கள் ஊரெங்கும் நிறைந்துவிட்டார்
ஓயாமல் பொய்யுரைத்து ஊர்பணத்தைக் கொள்ளையிட்டார்
பேயாட்சி செய்பவரை எத்தனைநாள் பொருத்திருப்போம்.

நிலக்கரியை எடுப்பதற்கு யார்யாரோ உரிமை பூண்டு
பலகோடிப் பணத்தையிங்கு கொள்ளை யடிப்பதற்கு
நல்லவர்போல் வேடம்பூண்ட ஒருதலைவர் வழிவகுத்தார்
வல்லவராம் அவர் ஊழல் சந்தி சிரிக்கிறது.

காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு
நாமெல்லாம் காத்திருக்க, டெல்லியில் சிலர்கூடி
நமையெல்லாம் எமாற்றி கொள்ளை அடித்தார்கள்
ஊமையாய் மக்களெல்லாம் பார்த்து நின்றார்கள்.

கார்கில் எனுமிடத்தில் பாகிஸ்தான் படையெடுத்து
பார்த்திருக்கும் போதே நம்நிலத்தைக் கவர்ந்தார்கள்
வீரர் பல்லோரைப் படுகொலையால் வீழ்த்தினார்கள்
தீரர் நம்மவர்கள் போராடி வென்றார்கள்.

காதல் குடும்பத்தோடு அவ்வீரர்கள் வசித்திருக்க
ஆதர்ஷ் குடியிருப்பை மும்பையில் கட்டினார்கள்
எதிலும் கொள்ளையிடும் கூட்டமொன்று உட்புகுந்து
அதிலும் பங்குபோட்டு கல்லா கட்டினார்கள்.

அரசியல் பிரமுகர்கள் உல்லாச பயணம் செல்ல
தரமான ஹெலிகாப்டர் வாங்குதற்கு முயன்றார்கள்
தரகர்கள் உட்புகுந்து அதிலும் கமிஷன் பெற்றார்
அரசாங்கம் பதில் சொல்ல இப்போதும் தயங்குகின்றார்.

தொலைபேசி காலம் போய் கைபேசி வந்தபோது
தொலைதொடர்பு அமைச்சர் செய்த தில்லுமுல்லு காரியத்தால்
வலைபோட்டு சிலர் மட்டும் ஆதாயம் அடைந்துவிட்டார்
தொலைதொடர்பில் இழப்பு மட்டும் பலலட்சம் கோடிகளாம்.

எங்குபோய் சொல்லுவது; யாரிடம்போய் கதறுவது?
இங்கு அரசியல்வாதி செய்யும் அறங்கெட்ட செயல்களெல்லாம்
எங்கு போய் முடிந்திடுமோ, நாட்டையே அழித்திடுமோ?
சங்கூதி சுதந்திரத்தை சுடுகாட்டுக்கு அனுப்பிடுமோ?

தயங்காதீர் நாட்டோரே! துணிந்து நிற்பீர் காலம் மாறும்
மயங்காதீர் அரசியலார் இனிப்பான சொற்கள் கேட்டு
இயக்கங்கள் பல இருந்தும் யாருமிங்கிக் கேட்பாரில்லை
பயமின்றி இவர்கள் தோற்க அளியுங்கள் உங்கள் வாக்கை!





Tuesday, March 25, 2014

தேர்தல் திருவிழா

தேர்தல் திருவிழா

நம்ம ஊர் மாரியம்மன் கோயில் திருவிழா கோடைகாலத்தில்தான் நடக்கும். அப்போது பள்ளிகளுக்கும் விடுமுறையாக இருப்பதால் திருவிழா விமரிசையாக நடைபெறும். குழந்தைகளுக்குக் கும்மாளம் தான். கோயில் இருக்குமிடம் அல்லோலப்படும். ஒரு பக்கம் அக்கம் பக்கத்து கிராம மக்கள் மாரியம்மனை தரிசிக்க தாரை தப்பட்டைகளோடு சீர் கொண்டு வருவது போல வரிசை வரிசையாக வந்து வழிபட்டுச் செல்வார்கள். தீமிதி உத்சவம் மிக விமரிசையாக நடைபெறும். கூட்டம் சொல்லி மாளாது. திருவிழா முடிந்து காப்பு அறுத்தபின் ஒருவாரம் ஊரே வெறிச்சோடியிருக்கும்.

நம்ம ஊர் தேர்தல் திருவிழாவும் அதைப் போலத்தான். காப்பு கட்டியாகிவிட்டது. இனிதான் களைகட்டத் தொடங்கும். ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் சீட் கொடுப்பது என்பது ஒரு சடங்கு. இதில் உனக்குக் கொடுத்தார்கள், எனக்குக் கொடுத்தார்கள் என்று மகிழ்ச்சி கொண்டாட்டம் ஒரு புறம், எனக்கு சீட் கொடுக்கவில்லை, உனக்கு இல்லை என்று புகார் பட்டியல். உடனே ஊடகங்களுக்குத் தீனி போட்டது போல, ஊரே பற்றி எரிவதைப் போல அவரைக் கேட்பதும், இவரைக் கேட்பதும், அபிப்பிராயங்களை அவரவர்கள் வாய்க்கு வந்தபடி எடுத்து வீசுவதும், அதிலும் ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் எங்கு பிணம் விழும், அங்கு போய் ஒப்பாரி வைக்கலாம் என்று அலைந்து கொண்டிருப்பார்கள்.

ஒரு கட்சி என்று இருந்தால் எத்தனை தொகுதிகளோ அத்தனை பேருக்குத்தான் சீட் கொடுப்பார்கள். எல்லோரும் எனக்கு உனக்கு என்று பெருமாள் கோயில் சுண்டலுக்கு அடித்துக் கொள்வது போல அடித்துக் கொண்டால் யாருக்கென்று கொடுப்பார்கள். நாற்பது சீட் என்றால், அனுமதி கொடுக்கப்பட்ட நாற்பது பேருக்கும் மகிழ்ச்சிதான், ஆனால் நானூறு பேருக்கு அதிர்ச்சிதான் என்ன செய்ய முடியும். இதை எதிர்பார்த்து தொடக்க முதலே அடிப்படை வேலைகளை செய்து தங்களைத் தகுதிக்கு ஆளாக்கிக் கொண்டிருக்க வேண்டும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய ஓடினால், என்ன ஆகும்? வீண் விளம்பரம், பேட்டி, பத்திரிகையில் படம், செய்தி, கட்சிக்காரர்களின் விரோதம், எதிர்கட்சிக்காரர்களின் தூண்டில், கட்சி மாறுதல்கள் இப்படி பல நாடகங்கள் அரங்கேறும்.

கட்சிக்காரர்கள் எதிர் கட்சியில் யாருக்கெல்லாம் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கிறார்களோ அங்கு போய் தூண்டில் போட்டுவிட்டு காத்திருப்பார்கள். அவர்கள் வீட்டு எருமை கன்னுக்குட்டி உடல்நிலை சரியில்லை என்றால் போதும் எதிர்கட்சிக்காரர்கள் த்சூ த்சூ கொட்டிக் கொண்டு அவரிடம் போய் குசலம் விசாரிப்பு. எல்லாம் அவரை கட்சிமாற வைக்கத்தான்.

ஒருவர் நான்கு முறை வென்றவராம். நாடாளுமன்றத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்தவராம். அவர் பேசவே திணறுகிறார். வயதோ எண்பது இருக்கும்போல் இருக்கிறது. அவருக்கும் ஆசை விடவில்லை. தனக்கு தான் கேட்ட இடம் கிடைக்கவில்லை என்று ஒரே கோபம். சிலருக்கு சீட்டே கொடுக்கவில்லை என்று கோபம். இவருக்கோ, தான் கேட்ட இடம் கொடுக்கவில்லை என்று மகா கோபம். சென்றமுறை இவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டிருந்தார். அப்புறம் போனால் போகிறது என்று மறுபடி கட்சியில் சேர்த்துக் கொண்டார்கள். போன முறை தேர்தல் வந்தது. இவரது மாநிலத்திலிருந்து கிழக்குக் கோடியில் வடகோடியில் கூர்க்காக்கள் நிறைந்த பகுதியில் சீட் ஒதுக்கினார்கள். வாயை மூடிக்கொண்டு அங்கு போய் நின்றார். கூர்க்காக்கள் அமைப்பு உதவியில் இவர் வென்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆகிவிட்டிருந்தார். அப்படி போன முறை கண்காணாத இடத்தில் நிற்க சம்மதித்தவருக்கு இப்போது சொந்த மாநிலத்திலேயே அவருடைய ஊர் இல்லாத மற்றொரு இடத்தில் சீட் கொடுத்ததில் அவருக்கு வந்ததே கோபம். போங்கடா, நீங்களும் உங்க கட்சியும். ஒருத்தனுக்கும் கொள்கையும் இல்லை, கோட்பாடும் இல்லை. (தயவு செய்து கோட்பாடு என்றால் என்ன என்பதை சற்று யாராவது விளக்கவும்) நான் தனி ஆளா சுயேச்சையா நிக்கறேன் பாருங்கடா என்று சொல்லி, "யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா போங்க, என் காலம் வெல்லும், வென்ற பின்னே வாங்கடா வாங்க" என்று பாடிக் கொண்டு அவருக்கு ஆதரவு அளிப்பவர்களோடு சென்று நாமினேஷன் பதிவு செய்து கொண்டார். நல்ல மனிதர்.

பதினெட்டு வயது நிரம்பியவர்கள்தான் அரசாங்க வேலைக்குப் போக முடியும். சில இடங்களில் 58, சில இடங்களில் 60 வயது ஆனால் அவர்களுக்கு பணி நிறைவு. வீட்டுக்குப் போக வேண்டும். சிலருக்கு ஓய்வூதியம் உண்டு சிலருக்கு அதுவும் கிடையாது. இவர்கள் முணுமுணுக்க முடியுமா, எனக்கு இன்னும் உடலில் வலு இருக்கிறது புத்தியில் திறமை இருக்கிறது நான் இன்னும் ஐந்தாறு வருஷம் வேலை செய்வேன்னு சொன்னா யாராவது கேட்பாங்களா. ஆனால் அது என்ன அரசியல் வாதிங்களுக்கு மட்டும் எந்த வயது வரம்பும் இல்லாம தொண்ணூறு நூறு வயசானாலும், பொக்கை வாயை 'ஆ'வென்று திறந்து கடைசி மூச்சி போகும் வரை பதவி, சம்பாத்தியம் என்று அலைய வேண்டும். இவர்களுக்கெல்லாம் வயது கட்டுப்பாடு கிடையாதா.

முன்பொரு முறை நெருக்கடி நிலை காலத்தில் ஒரு யோசனை செய்யப்பட்டது. ஐம்பது வயதான அரசு ஊழியர்களை ஒவ்வொரு வருஷமும், இவர் இன்னமும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறாரா, திறமையோடு இருக்கிறாரா, தூங்கி வழிகிறாரா என்று அறிய ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அவர்கள் சிபாரிசு செய்தால் வேலையில் தொடரலாம், இல்லையேல் வாலை சுருட்டிக் கொண்டு வீட்டுக்குத்தான் போகவேணும் என்று ஒரு யோசனை இருந்தது. யாரைப் பிடித்த நல்ல காலமோ நெருக்கடி நிலையும் நீங்கியது, அநியாயமாக ஐம்பது வயதில் ஓய்வு பெற்று வீட்டுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு மனைவியிடம் மொத்து வாங்குவது இல்லாமல் போனது. இல்லாவிட்டால், பாவம் பலரது கதி அதோகதிதான்.

நம்ம ஊர் மந்திரி ஒருத்தர் சொல்றார், நான் ஒண்ணும் தோல்விக்கு பயந்து போய் போட்டியிடாமல் இல்லை. என் மகனுக்கு ஒரு சான்ஸ் தரத்தான் அப்படி. இளைய தலைமுறைக்கு வாய்ப்பு தரவேண்டாமா அப்படியென்கிறார். நல்ல கருத்தாயிருக்குதேன்னு பார்த்தா, இவரைவிட கிழமெல்லாம் சீட்டுக்கு ஆலாப் பறக்குதே, இவர் மட்டும் என்ன சந்நியாசியா, இந்த வயசிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு இளைய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்க. இவர் இன்னொண்ணும் சொன்னார். இனிமே பதவியில இல்லாத மக்களுக்குச் சேவை செய்யப் போறேன்னு, இது நல்லா இருக்கே, இல்லையா? பல பேரு, அதிலும் ஊழல் பண்ணினாங்க, கோடி கோடியா பணத்தைச் சுருட்டினாங்க அப்படின்னு எல்லாம் சொல்றாங்க இல்ல அவுங்கல்லாம் இவரைப் போல பதவி வேணானுட்டு மக்களுக்கு சேவைசெய்ய போனா என்ன?

முன்னல்லாம் கட்சிக்காரங்க கோயில் கோயிலா போயி சாமிகிட்ட வேண்டிக்குவாங்க. அப்புறம் சில வருசத்துக்கு அப்பால, பெரிய பெரிய கிழமாகிப் போன தலைவர்கள் வீட்டுக்குப் போய் ஆசி வாங்கிட்டு வருவாங்க. அவுங்களும் வஞ்சனை இல்லாம எல்லாருக்கும் ஆசி தருவாங்க. இப்போ திடீர்னு புது டிரெண்டு உருவாயிடுச்சி. அது என்னான்னா மதுரைக்கு போயி எல்லாரும் கண்டுகிட்டு வராங்க. போயி பாத்துட்டு வந்தா ஏதோ பொகையலைக்கு ஆச்சுன்னு கிடைச்ச வரை ஆதாயம்னு எல்லாரும் இப்போ ஆதரவு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் நல்லாத்தான் இருக்கு.

நேத்து பாருங்க எனக்கு ஒரு டெலிபோன் காலு. அங்க யாரு நீங்கதானான்னாங்க. ஆமாம் நாந்தான்னேன். அவுங்க இன்ன கட்சி ஆபீசுலேர்ந்து பேசறோம், இங்க இன்னார் தேர்தல்ல நிக்கறாருல்ல, அவரு செஞ்ச சாதனைகளை சொல்றேன், கேட்டுட்டு அவருக்கே ஓட்டு போடுங்கன்னு ஒரு பெண் குரல். ஆகா அவரைப் பத்தி தெரியுங்க, ஓட்டு போட்டுடறேன்னு சொன்னேன். இதுவும் ஒரு புதுவழியாத்தான் தெரியுது.

எனக்கு ஒரு குறை இருக்குதுங்க. யாருகிட்ட சொன்னா அதுக்கு பலன் கிடைக்கும்னு தெரியல. இப்போல்லாம் தஞ்சாவூர்ல விரிவாக்கப் பகுதிகள்ள காலைல தண்ணியே வரமாட்டேங்குது, வந்தாலும், கொழந்த மூத்திரம் போல கொஞ்ச நேரம் சொட்டிட்டு நின்னு போவுது. போர் போட்ட பெரியமனுசங்களுக்கு கவலை இல்லை. நம்மைப் போல ரெண்டும் கெட்டான்கள், நகராட்சி தண்ணீரை எதிர்பார்த்து நிக்கறவங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரியல. யாராவது ஒருத்தர் இதுல கொஞ்சம் கவனம் செலுத்தி கொஞ்ச நேரம் தேவைக்கு தண்ணீர் விட்டா என்னங்க. அதுக்கும் இந்த தேர்தல்ல ஓட்டு போடறதுக்கும் சம்பந்தம் இல்ல, இதெல்லாம் நகராட்சி விவகாரம்னு எனக்கும் புரியத்தாங்க செய்யுது, இருந்தாலும் மனசு கேக்கல, சொல்லி வச்சேன். சரிங்க அப்புறம் மறுபடி பல செய்திகளோடு உங்களை சந்திக்கறேன். வணக்கம்.

Thursday, March 20, 2014

வேண்டாம் இவர்போல் ஒருவர்!


                                                  வேண்டாம் இவர்போல் ஒருவர்!


யார் ஆடினார், இனி யார் ஆடுவார்
பாராளும் தலைவர்களுள் இனி
யார் ஆடுவார் இவர்போல்  யார் ஆளுவார்?

இடியொன்று வீழ்ந்து மக்கள்
மடிந்தொழிந்து போனாலும்
கடுந்தவத்தில் ஆழ்ந்தவர்போல்
மூடிய கண்ணைத் திறக்கமாட்டார்.

கூடவே இருப்பவர்கள்
கோடி கோடியாய் சுருட்டினாலும்
கடைக் கண்ணாலும் பார்க்கமாட்டார்
மூடிய கண்ணைத் திறக்கமாட்டார்.

மீன்பிடிக்கப் போனவனை
அன்னியன் வந்து பிடித்துப் போனால்
மனம் நொந்து அவனை மீட்க
எண்ணமே கொள்ளமாட்டார்.

தான் பேசும் சொற்களெல்லாம்
தனக்கே கேட்காத இரகசியம்போல்
தனக்குள்ளே பேசுவது போல்
முனகுவதை நிறுத்தமாட்டார்.

பூனைபோல் கண்கள் மூடி
மோனத் தவத்தில் ஆழ்ந்து
ஆனவரை இங்கு எதையுமே காணாமல்
கனவுலகில் எப்போதும் உலவுவதை நிறுத்தமாட்டார்.

கண்ணெதிரே மக்கள் எல்லாம்
விண்ணதிர கோஷமிட்டால் அதை
மண்ணுக்குள் புதைத்துவிட்டு
தண்ணென்று அமர்ந்திருப்பார்.

பாரததேவி செய்த புண்ணியத்தால் அன்றோ
மாரத வீரன்போல மகானுபாவன் வந்தான்
வீரத் தலைவனிவன் மீண்டும் வந்தமர்ந்தால்
நரகமே வேறு வேண்டாம், நாமும் துறவு கொள்வோம்.










Friday, March 14, 2014

                   இந்திய பாராளுமன்ற வரலாற்று விவரங்கள்.

Year        Seats      Polled %   Cong.  CPI.  CPM.  Jansang    Janatha  Jan.Dal.                                                                                                                              /BJP                                                                                                                                                                             
-----------------------------------------------------------------------------------------------
1952       489         45.7%     364     16                    3
1957       493         47.7%     371     27                    4
1962       494         55.3%     361     29                  14
1967       520         61.2%     283     23     19         35
1971       518         55.3%     352     23     25         22
1977       542         60.5%     154       7     22                       295
1980       542         56.9%     353     11     36                         31
1984       542         63.6%     405       6     22            2           10
1989       543         62.0%     197     12     33          86                     142
1991       543         55.2%     232     14     35        120                       56
1996       543         57.9%     140     12     32        161                       46
1998       543         62.0%     141       9     32        182                         6
1999       543         60.0%     114       4     33        182
2004       543         58.1%     145     10     43        138
------------------------------------------------------------------------------------------------
% of votes poled by parties. 
Congress:                    1952: 45%               2004: 26.5%
Jan Sangh/BJP:          1952: 3.1%              2004: 22.2%

source: Election Commission of India. Reports of various Lok Sabha elections.

Saturday, March 1, 2014

பெண் சுதந்திரம்


                                  பெண் சுதந்திரம் எதுவரை?


பெண்ணுரிமை, ஆண் பெண் சமத்துவம் போன்ற கருத்துக்கள் பல வடிவங்களில் விவாதிக்கப்படுகின்றன. பெண்ணியம் என்பது ஆண்களுக்குச் சமமானது, எந்த விதத்திலும் பெண்கள் ஆண்களுக்குக் குறைந்தவர்கள் இல்லை என்பது போன்ற கருத்துக்கள் இன்று நிலைபெற்றுவிட்டது. இன்னும் சில நேரங்களில் நவீன யுகப் பெண்கள் மேடைகளில் முழங்கும் கருத்துக்களைக் கேட்கும்போது இந்த நாட்டில் இன்னமும் பெண்கள் கவணைகளில் அடைக்கப்பட்ட மாடுகள் போல அடைக்கப்பட்டிருக்கிறார்களோ, எந்தவித சுதந்திரமும் இவர்களுக்கு இல்லையோ என்றுகூட கவலை கொள்ள வைத்து விடுகிறது.

ஆனால் நாட்டு நடப்பைக் கூர்ந்து கவனித்தால் நிலைமை அப்படி அல்ல என்பதும், சில பெண்ணியத் தலைவர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் இப்படியெல்லாம் பேசுவதன் மூலம் தாங்கள் ஒரு சுதந்திரப் பறவைகள், பெண்களின் முன்னேற்றத்துக்காகத் தங்களைச் சர்வபரித்தியாகம் செய்து கொண்டவர்கள் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தவே இப்படிப் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது. இவர்கள் பேச்சில் இருக்கும் உண்மைகள் என்ன, இவர்கள் பேசும் சுதந்திரம் என்பது எதுவரை ஆண், பெண் பேதங்கள் எதிலெல்லாம் இருக்க வேண்டும் போன்ற கருத்துக்கள் வரையறை செய்யப்படவேண்டும்.

பெண் கல்வி வளர்ச்சியடைந்து உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், கம்ப்யூட்டர் யுகப் பெண்கள் ஆணுக்குப் பெண் சமம் என்பதில் மட்டுமல்ல, சில நேரங்களில் அவர்களைக் காட்டிலும் அதிக நாகரிகத்தில் முன்னேறியவர்கள் என்றும் காட்டிக் கொள்கிறார்கள். மென்பொருள் துறையில் பணியாற்றும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டைவிட்டு வெளிவந்து விடுதிகளில் அல்லது சிலர் கூடி ஒரு வீட்டை எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். விடுமுறை நாட்களில் ஆண் பெண் பேதமின்றி இவர்கள் ஓட்டல், சினிமா, பார்ட்டி என்றெல்லாம் சென்று தொட்டு விளையாடி பிறர் முகம் சுளிக்கும்படியும் நடந்து கொள்கிறார்கள். இந்த உண்மையை யாராவ்து சுட்டிக் காட்டினால் அவர்கள் 'பத்தாம் பசலிகள்', 'நாகரிகம் தெரியாதவர்கள்' என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.




இன்று தி நியு இந்தியன் எக்ஸ்பிரசில் ஒரு செய்தி. கோவையில் எட்டிமடை எனும் இடத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பயிலும் இரட்டையர்களான இரு மாணவர்கள் தங்கள் கல்லூரியில் ஜூனியர் வகுப்பில் படிக்கும் ஒரு கேரளத்துப் பெண்ணுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள். அவர்கள் வழக்கில் சொல்ல வேண்டுமானால், இவர்கள் மிகவும் சோஷலாக பழகி வந்திருக்கிறார்கள். இதைத் தவறு ஆண் பெண் பழக்கத்திலும் ஒரு எல்லைக்கோடு உண்டு என்று யாராவது சொன்னால் அவர்களை இவர்கள் நார் நாராகக் கிழித்துத் தொங்க விட்டுவிடுவார்கள். இந்த இரட்டையர்கள் அந்தப் பெண்ணுடன் ஒரு திரைப்படம் பார்க்க ஒன்றாக இன்னொரு பெண்ணுடனும் சென்றிருக்கிறார்கள். திரைப்படம் முடிந்த நிலையில் இன்னமும் பகல் பொழுது இருந்தமையால் அந்த இரட்டையர்கள் அந்த கேரளத்துப் பெண்ணை இடையர்பாளையம் எனுமிடத்திலுள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். இவர்கள்தான் சோஷலாகப் பழகுபவர்களாயிற்றே, இரண்டு இளைஞர்கள் ஒரு பெண்ணைத் தங்கள் வீட்டுக்குக் கூப்பிட்டது சரியா, அப்படிக் கூப்பிட்டவுடன் அந்தப் பெண் அவர்களுடன் போவது சரியா என்றெல்லாம் யாரும் கேள்விகள் கேட்டுவிடக் கூடாது, அது பெண்ணிய உரிமைகளுக்கு எதிரானது.

அந்தப் பெண்ணும் அவர்கள் அழைப்பை ஏற்று அவர்களுடன் இடையர்பாளையம் சென்று அவர்கள் வீட்டில் அந்த இளைஞர்கள் கொடுத்த பானத்தை அருந்தியிருக்கிறாள். இதில் கொடுமை என்னவென்றால், அந்த பானத்தில் மயக்க மாத்திரை கலக்கப்பட்டிருந்தது. அவள் நினைவு இழந்தாள், அவ்விருவரும் அந்தப் பெண்ணை மாற்றி மாற்றி அனுபவித்திருக்கிறார்கள், பின்னர் அவளுக்கு நினைவு திரும்பியதும் அவளை விடுதியில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அந்தப் பெண் என்ன செய்தாள் என்பது தெரியவில்லை. அவள் அதன்பின் துபாயில் இருக்கும் தங்கள் பெற்றோருக்குத் தகவல் கொடுத்து அவர்கள் வந்து போலீசில் புகார் கொடுத்து அந்த இருவரில் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். மற்றொருவன் தலைமறைவாகி யிருக்கிறான்.





இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் உண்டு. முதலில் பெண்ணிய உரிமைகள் பேசும் மாதரசிகள் இதுபோன்ற சோஷல் பழக்கங்களை ஆதரிக்கிறார்களா என்பதைச் சொல்ல வேண்டும். அவர்கள் விரும்பும் பெண் விடுதலை, அல்லது பெண்ணுரிமை என்பது எதுவரை என்பதை விளக்க வேண்டும். மகாகவி பாரதி பெண் விடுதலை பற்றி அதிகம் பேசுவான். அவன் கருத்து இதுபோன்ற சுதந்திரத்தை ஆதரிப்பது அல்ல. நேர்மையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத போக்கும், நேர்மை தவறாத, பாதை மாறாத பண்பும்தான் அவன் சொன்ன பெண் விடுதலை. இந்த கோவை சம்பவத்தில் நடந்தவைகளைக் கொண்டு பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் அனேகம்.




வயதில் தந்தை அல்லது தாத்தா போல இருந்தாலும், ஆண் ஆண்தான். அவனிடம் பழகும் இளம் பெண்கள் ஒரு எல்லைக்கோட்டைத் தாண்டுவது என்பது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆண் எந்த வயதினனாக இருந்தாலும் மனம் கோணலாக இருக்குமாயின் நிச்சயம் அவன் சமயம் வாய்க்கும்போது வக்கிரச் செயல்களில் இறங்குவான். அதுபோலவே நேர்மை எண்ணமும், பண்பாட்டில் நம்பிக்கையும் கொண்ட ஆண் இளம் வயதினனாக இருந்தாலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள், தனிமையில் ஒரு இளம் பெண்ணோடு இருக்கும் நிலையிலும் அவன் நிலை தடுமாற மாட்டான். எல்லா ஆண்களும் தவறு செய்பவர்கள் அல்ல, அது போலவே எல்லோருமே அயோக்கியர்களும் அல்ல. இந்த பேதத்தை இத்தனை காலம் பழகிய பின்னும் ஒரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியவில்லை, இரு ஆண்களுடன் சினிமாவுக்குப் போகிறாள், அவன் கூப்பிட்டவுடன் அவன் வீட்டுக்குப் போகிறாள் என்றால் அது பெண்களின் சுதந்திரப் போக்கைக் காட்டுகிறதா, பேதைத் தனத்தைக் காட்டுகிறதா. நெஞ்சு கொதிக்கிறது இந்த நிலைகெட்ட மனிதரை நினந்து விட்டால். பட்டது போதாதோ, பெண்ணிய சிந்தனையாளர்கள் நல்லது செய்யாமல் போனாலும் போகட்டும், பெண்களைத் தூண்டிவிட்டு நாகரிகம், முன்னேற்றம் எனும் பெயரால் பலிகடாக்கள் ஆக்காமல் இருக்கட்டும்.

தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,
28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு,
தஞ்சாவூர் 613007. # 9486741885


மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி

                  மகா சிவராத்திரியும் நாட்டியாஞ்சலி விழாவும்.


ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்தியை முன்னிட்டு பல சிவாலயங்களில் நாட்டியாஞ்சலி எனும் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. முதன் முதலில் சிதம்பரத்தில் தொடங்கிய இந்த விழா நாளாக ஆக பல சிவாலயங்களிலும் தொடங்கப்பட்டு வெகு சிறப்பாக நடைபெறுகிறது. சிதம்பரம் தவிர, தஞ்சாவூர் பெரிய கோயில், திருவையாறு ஐயாறப்பர் ஆலயம், கும்பகோணம் கும்பேசுவரர் ஆலயம், மாயுரம் மயூரநாதசுவாமி ஆலயம், திருநள்ளாறு, திருவாரூர், பந்தநல்லூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலும் இந்த நாட்டியாஞ்சலி விழா மிக சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த ஆண்டு முதல் திருநாவுக்கரசரோடு சம்பந்தமுள்ள திருவதிகை ஆலயத்திலும் தொடங்கப்பட்டு நடைபெற்றது.

இந்த நாட்டியாஞ்சலி எதற்காகச் செய்யப்படுகிறது என்பதைவிட இந்த விழா ஏற்படுத்தியிருக்கிற விழிப்புணர்வு, கலைகள் பற்றிய ஆர்வம், குழந்தைகள், பெண்கள் மத்தியில் உருவாகியிருக்கிற நாட்டிய ஆர்வம் இவை மகிழ்ச்சியளிக்கக்கூடியவைகளாக இருக்கின்றன. திருவையாற்றில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில் கடந்த 27ஆம் தேதி இரவு தஞ்சை திருமதி சுலக்ஷணாவின் ஆராதனா நாட்டியப் பள்ளியிலிருந்து எல்.கே.ஜி.படிக்கும் நிலா என்ற பெயருடைய குழந்தை தாளம் தப்பாமல் மலர்ந்த முகத்தோடு பெரிய பெண்களுக்கு இணையாக ஆடியது கண்டு திரண்டிருந்த மக்கட்கூட்டம் அந்தக் குழந்தைக்குக் கொடுத்த ஆர்ப்பரிப்புடன் கூடிய பாராட்டு மகிழ்ச்சியளிக்கக்கூடிய நிகழ்ச்சி. அது போலவே அதே வயதுடைய மற்றொரு குழந்தை சென்னை வேலம்மாள் கலாலயத்திலிருந்து வந்து ஆடிய காட்சியும் மறக்க முடியாத காட்சிகள். சின்ன குழந்தை ஆடுகிறது என்பதல்ல இங்கு, அது தன்னுடைய அபிநயங்களையும், காலில் போடும் தாளத்தையும் அத்தனை அழகாக கிரகித்துக் கொண்டு பாவத்துடன் ஆடிய காட்சியை எவரும் மறக்க மாட்டார்கள். இப்போது கலைகளின் மீது குறிப்பாக நாட்டியக் கலையில் ஏற்பட்டிருக்கிற ஆர்வம் மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது.

மிகவும் புகழ்பெற்ற நடன மணிகளிலிருந்து, அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் குச்சிபுடி, மோஹினியாட்டம் போன்ற ஆடல்களை இங்கு வந்து அவர்கள் ஆடும்போது இந்தக் கலையின் மேன்மையும், பெண்கள் குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிற கலை ஆர்வமும் புரிகிறது. இந்த ஆண்டு திருவையாற்றில் நடந்த ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி மூன்று நாட்களும் மிக சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


கொடுக்கப்பட்ட குறுகிய காலவெளியில் சிலர் நாட்டிய நாடகங்களையும் நடித்துக் காட்டினர். சென்னை ஸ்ரீ கிருஷ்ணா நாட்டியாலயாவின் திருமதி கலா சீனிவாசன் குழுவினர் நடித்த "பூசலார் நாயனார்" வரலாறும், பெங்களூரு திருமதி அம்பிலி தேவி குழுவினரின் "நந்தனார் சரித்திரமும்" மிக சிறப்பாக அமைந்திருந்தது. சென்னை வேலம்மாள் கலாலயத்திலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகள் வந்து கலந்து கொண்ட நடனங்கள் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டன.

இவர்கள் தவிர பிரான்சு நாட்டிலிருந்து வந்திருந்த சுவாதி இராகவன் என்பவரும், கோவையின் பெருமைக்குரிய லக்ஷ்மி மில்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த திருமதி ஜெயந்தி ராமச்சந்திரா அவர்களின் ஸ்ரீ சரண் அகாதமியிலிருந்து வந்த மாணவியர் மிக அற்புதமான நடனங்களை ஆடி மகிழ்வித்தனர். மும்பை காட்கோபரிலிருந்து செளந்தர்ய நாட்டிய கலாலயாவின் திருமதி பத்மினி ராதாகிருஷ்ணன் அவர்களின் மாணவியர் பெங்களூரு தீபா சசீந்திரன் அவர்களின் குச்சிபுடி நடனம், பெங்களூரு ஸ்வப்னா இராஜேந்திரகுமார் அவர்களின் மோகினி ஆட்டம் இவை சிறப்பாக அமைந்தன. தஞ்சைக்குப் பெருமை சேர்க்கும் திருமதி வடிவுதேவி அவர்களும், கடலூர் முனைவர் சுமதி சுந்தர் அவர்களின் மாணவிகளும் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

சென்னை சாய் நாட்டியாலயா திவ்யஸ்ரீ, பெங்களூரு வாசுதேவ் சந்தியா ஷெட்டி, சென்னை லலிதா கணபதி, கும்பகோணம் ஸ்ரீமதி நாட்டியாலயாவின் ஸ்ரீதரி, சென்னை முகப்பேர் இரா.காசிராமன், சென்னை ஹர்ஷிதா இவர்களோடு கும்பகோணம் கீதா அஷோக், வி.விஜயமாலதி, கவிதா விஜயகுமார் இவர்களும் பங்கு பெற்று சிறப்பித்தனர். மதுரை சற்குரு சங்கீத வித்யாசாலாவின் பாலா நந்தகுமாரின் மாணவியர், பண்ருட்டி சுரேஷ், நாமக்கல் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் விழாவின் சிறப்புக்குத் துணை புரிந்தனர்.

ஆக சிவராத்திரி என்றதும் இனி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், நடனக் கலைஞர்களும், குறிப்பாகப் புதிதாக கற்றுக் கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவிகளின் திறமைகளும்தான் நமக்கு நினைவுக்கு வரும். இப்போது புரிகிறது நம் முன்னோர்கள் கலையையும் கடவுளையும் ஒருங்கிணைத்துப் பார்த்து வந்ததன் சிறப்பு. நடனக் கலை பயிலும் மாணவியர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகளும் எதிர்காலமும் உண்டு என்பது தெளிவாகத் தெரிகிறது. சிவபெருமானே முதன் முதலாக இந்த நடனத்தை ஆடி உலகுக்குக் கொடுத்துச் சென்றதால் இது ஒரு தெய்வீகக் கலையாகவே மதிக்கப்பட்டு வருகிறது. வாழ்க கலை, வளர்க நடனக் கலை.