பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, December 1, 2013

ஐயாறப்பர் ஆலய வரலாறு

                                                    ஐயாறப்பர் ஆலய வரலாறு
 
தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள சிவத்தலம் திருவையாறு.  திருவையாற்றுக்கு பஞ்சநதம், பூலோக கைலாசம், ஜெப்பேசம், ஜீவன் முக்திபுரம் எனப் பல பெயர்கள் உண்டு. 'ஐ' என்றால் மேலான, உயர்வான என்றும் 'ஆறு' என்பதற்கு வழிகள், மார்க்கங்கள் என்றும் பொருள் உண்டு. இவற்றை மூலாதாரம், ஸ்வாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்கள் என்றும் சொல்லுகிறார்கள். இப்படிப் பலப்பல பெயர்க்காரணங்கள் கூறப்பட்டாலும், திருவையாறு எனும் பெயர் பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது.

வரலாற்றுச் செய்திகளின்படி இந்த ஆலயம் முதன்முதலில் கரிகால்பெருவளத்தான் எனும் புகழ்மிக்க சோழமன்னனால் கட்டப்பட்டது என்பது தெரிகிறது. அவனுடைய காலத்திற்குப் பிறகு பல்வேறு மன்னர்கள் குறிப்பாக பாண்டியர்கள், பல்லவர்கள், முத்தரையர்கள், நாயக்க மன்னர்கள், மராட்டிய அரசர்கள் என்று பலராலும் பல்வேறு காலகட்டத்தில் புதுப்பிக்கப்பட்டும், விரிவுபடுத்தப்பட்டும் வந்திருக்கிறது. 2009ம் ஆண்டு ஜுலை மாதம் இவ்வாலயத்தின் திருப்பணிக்கான தொடக்க பூஜைகள் தொடங்கி பலகோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு இப்போது பிப்ரவரி 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதற்கு முன்பு 1971இல் குடமுழுக்கு நடைபெற்றது, அதற்குப் பிறகு 42 ஆண்டுகள் கழிந்து இப்போது நடைபெறுகிறது.

சோழப்பேரரசன் கரிகால் பெருவளத்தான்
சோழப்பேரரசன் கரிகால்பெருவளத்தான் இந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது இவனது தேர் பூமியில் அழுந்தி நகரவில்லை. எவ்வளவு முயன்றும் பயனளிக்காத நிலையில் இந்த இடத்தில் ஏதோவொரு சக்தி ஈர்க்கிறதென்று உணர்ந்து, பூமியை அகழ்ந்து பார்த்தான். அங்கே சிவலிங்கம், சக்தி, ஆதிவிநாயகர், முருகன், சப்தகன்னியர், சண்டர், சூரியன் ஆகிய திருவுருவங்களும் யோகி ஒருவரின் சடைகள் பரந்து விரிந்து புதைந்து வேரூன்றி கிடப்பதையும் கண்டான். மேலும் அகழ்ந்து பார்க்க அங்கு நியமேசர் எனும் அகப்பேய்ச் சித்தர் நிஷ்டையில் இருப்பது கண்டு மெய்விதிர்ப்பெய்தி அவர் காலடியில் வீழ்ந்து வணங்கினான்.

அவர் கரிகாலன்பால் இரக்கம் கொண்டு, இங்கு தேவர்களும் நந்தீசரும் வழிபட்ட மகாலிங்கமும் மற்றைய மூர்த்தங்களும் இருக்கின்றன; இவற்றிற்கு ஓர் கோயில் எடுப்பாயாக எனக் கூறி எவராலும் வெல்ல முடியாத தண்டமொன்றையும் அளித்து, கோயில் கட்டுவதற்கான பொன் முதலான பொருட்கள் நந்தியின் குளம்படியில் கிடைக்குமெனவும் அருள் புரிந்தார். அவ்வாறே கரிகால் சோழன் சிறப்பாக ஆலயத் திருப்பணி செய்து, குடமுழுக்கு செய்து, நிவந்தங்களும் அளித்தான்.


திருப்பணி செய்த ஏனைய மன்னர்கள்

பிறகு கி.பி. 825-850 தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன், கி.பி. 982இல் வேங்கி நாட்டு விமலாதித்த தேவர், 1006இல் புகழ்மிக்க முதலாம் ராஜராஜ மன்னரின் (985-1014) மனைவியான ஒலோகமாதேவியார் "வடகைலாயம்" எனும் 'ஒலோகமாதேவீச்சரத்தை'யும் பின்னர் முதலாம் இராஜேந்திர சோழன் (1014-1042) மனைவியான பஞ்சவன்மாதேவியார் 'தென்கைலாயம்' கோயிலையும் அமைத்தார்.

கிருஷ்ணராஜ உடையாரால் இக்கோயிலின் திருச்சுற்று மாளிகை எடுக்கப்பெற்றது. பிறகு 1118-1135இல் இருந்த விக்கிரம சோழன் காலத்தில் மூன்று, நான்காம் திருச்சுற்றுகளும், மதில், கீழைக்கோபுரம் எடுக்கப்பட்டன. கி.பி. 1381இல் சடையவர்ம சுந்தர பாண்டியன் ஆட்சிக்காலத்தில், இக்கோயில் திருமண்டபத்தின் மதில் சீர்திருத்தம் பெற்றது. கி.பி. 1530இல் அச்சுதப்ப நாயக்க மன்னர் நின்றுபோன நூற்றுக்கால் மண்டபத்தை 144 தூண்களுடன் எழுப்பி முடித்தார்.

1971இல் திருக்கயிலாய பரம்பரை திருத்தருமையாதீனம் 25ஆவது குருமகா சந்நிதானம் கயிலைக் குருமணி ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களால் திருக்கோயில் முழுவதும் செப்பமிட்டுத் திருப்பணி முடிக்கப்பட்டது. 31-3-1971இல் திருக்குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பிறகு இப்போது நடைபெறுகிறது.

ஐயாறப்பர் ஆலயம் - கிழக்கு ராஜகோபுரம்.

ஐயாறப்பர் ஆலய இராஜ கோபுரம் வானளாவி உயர்ந்து ஊருக்கே அழகு செய்கிறது. ராஜகோபுரம் தவிர இங்கு மேலும் ஏழு கோபுரங்கள் உண்டு. இந்த கோபுரம் ஏழு நிலைகளை உடையது. இங்கு அதிக அளவில் சுதைச் சிற்பங்கள் இருக்கின்றன. இந்த கோபுரம் 16, 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.


விக்கிரம சோழன் கோபுரம்.
இரண்டாம் கோபுரம் விக்கிரம சோழன் கோபுரம். அழகிய வேலைப்பாடுகள் எதுவுமின்றி எளிமையாகத் தோன்றுகிறது. இரண்டாம் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் நின்று குரல் கொடுத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும். இங்கு வரும் பக்தர்கள் இங்கு நின்று 'ஐயாறப்பா" என்று குரல் கொடுக்க அது பலமுறை திரும்பத் திரும்ப எதிரொலிப்பதை இன்றும் கேட்கலாம். 'ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' எனும் வாகீசப்பெருமானின் வாக்கிற்கேற்ப இங்கு ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் வியப்பான செய்தி. இந்த ஆலயத்தின் சிறப்புக்களில் இதுவும் ஒன்று.

பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் முச்சத்தி மண்டபம் காணலாம். இங்கு மலைமகள் (துர்க்கை) அலைமகள் (இலக்குமி) கலைமகள் (சரஸ்வதி) ஆகியோர் மூன்று சக்திகளாக இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி எனும் முச்சக்தியாக வீற்றிருப்பதால் முச்சந்தி மண்டபம் எனப்பெயர் பெற்றது.

ஐயாறப்பர் - மூலஸ்தானம்.

ஐயாறப்பர் கருவறையில் திருக்காட்சியருளும் சிவலிங்க தரிசனம் மிகவும் சிறப்பானது. இவர் சுயம்புமூர்த்தியாக உருவானவர். புற்று மண்ணால் ஆனவர். முற்காலத்தில் மக்கள் கல், உலோகம் இவற்றைப் பயன்படுத்தத் துவங்குவதற்கு முன்பு மரம். புற்று இவற்றை வழிபட்டார்களாம். எனவே புற்றாலான இறைவனது உருவை வழிபடுவது மிகத் தொன்மையானது எனலாம். ஆகவே வரலாற்றில் மிக தொன்மையானது இந்த ஐயாறப்பர் மூலத்தானத்து சிவன். இவருக்கு வெள்ளிக் கவசமிட்டு தரிசனம் அளிக்கிறார். இந்த வெள்ளிக் கவசத்தில் பசுவின் உருவமும், அதன்மீது சூலமும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் காரணம் கொண்டே சுவாமிக்கு 'திரிசூலி' என்ற திருப்பெயர் உண்டு. இங்கு மூலவருக்கு, அபிஷேகம் கிடையாது. புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகின்றது. அபிஷேகமெல்லாம் ஆவுடையாருக்கு மட்டுமே.

முதல் பிரகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி மிகச் சிறப்புடைய மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள தக்ஷிணாமூர்த்திக்கு ஸ்ரீ ஹரிகுருசிவயோக தக்ஷிணாமூர்த்தி என்று பெயர். இந்தச் சுற்றிலேயே எல்லாப் பரிவார மூர்த்தங்களும், உமாமகேசர், சங்கரநாராயணர், பிரமதேவர் முதலிய மூர்த்தங்களும் உள்ளன. இந்த பிரகாரம் வலம் வருவதற்குரியதன்று. சிவபெருமான் சடாமுடி எங்கும் பரவியிருப்பதால் இந்த பிரகாரத்தை, அதாவது மூலஸ்தானத்தையடுத்த வெளிப்பிரகாரம் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியைத் தாண்டி செல்வதற்கில்லை. இவ்விடத்தை மிதிக்கக்கூடாது என்பதால் தக்ஷிணாமூர்த்தியைத் தரிசித்தவுடன் திரும்ப வந்துவிட வேண்டும்.

அறம்வளர்த்தநாயகி அம்மன் சந்நிதி.

அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலுக்கென்று ஒரு ராஜகோபுரமும், தனி வழியும் கீழவீதியிலிருந்து அமைக்கப் பட்டிருக்கிறது. இங்கு அன்னை அறம்வளர்த்தநாயகி அலங்கார கோலத்துடன் காட்சி தருகிறாள். அம்பாளுக்கு திரிபுரசுந்தரி, தர்மாம்பிகை எனும் திருப்பெயர்களும் வழங்கப்படுகிறது.

இந்த அறம்வளர்த்தநாயகி ஆலயத்தை செட்டிநாட்டிலுள்ள தேவகோட்டையைச் சேர்ந்த சேவுகன் செட்டியார் அவர்கள் இங்கிருந்த பழைய அம்மன் கோயிலை மாற்றி புதிதாக கருங்கல் தளியாக அமைத்துத் திருப்பணி செய்து கொடுத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆலயங்களின் சிறப்புக்குச் சிறிதும் குறைவில்லாமல் இந்த அம்மன் ஆலயம் கருங்கற்களால் கட்டப்பட்டு புகழ்பரப்பி நிற்கிறது.



1 comment:

இராஜராஜேஸ்வரி said...

ஐயாறப்பர் ஆலய வரலாறு

சிறப்பான தகவல்கள்..பாராட்டுக்கள்..!