பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, September 23, 2013

நவராத்திரி


நவராத்திரி
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் அமாவாசை முடிந்தவுடன் அடுத்த முதல் நாளான பிரதமை தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறுவது நவராத்திரி. மனித வாழ்க்கைக்கு முக்கிய தேவையான வீரம், செல்வம், கல்வி ஆகியவற்றுக்கு உரிய கடவுளர்களான துர்கா (சக்தி), லட்சுமி, சரஸ்வதி ஆகியவர்களை வணங்கும் முகத்தான் இவை கொண்டாடப் படுகிறது. பூஜையின் போதுகூட அம்மனை "துர்கா லக்ஷ்மி சரஸ்வதி" என்று மூவர் பெயரையும் சேர்த்தே சொல்லிதான் பூஜை செய்வர். மன்னன் கொலுவீற்றிருந்தான் என்று சொல்வார்கள் அல்லவா அதுபோல புழு பூச்சி முதல் இறைவன் வரை சகல ஜீவராசிகளும் கொலுவிருந்து தேவியரை நினைவு படுத்தும் நாட்கள் இவை.

இந்த ஒன்பது நாளில் முதல் மூன்று நாட்களும் தீமையை அழித்து நன்மையைக் கொடுக்கும் துர்காபரமேஸ்வரியை வணங்குமுகத்தான் கொண்டாடப்படுகிறது. தேவி பாகவதத்தில் சொல்லப்பட்ட அசுரர்களான சும்பன், நிசும்பன், மஹிஷாசுரன், மதுகைடபன், தும்ரலோசனன், ரக்தபீஜன் போன்ற அசுரர்களை வதம் செய்து துர்கா பரமேஸ்வரி, மஹிஷாசுரமர்த்தனியாகத் தன் வீரத்தைக் காட்டிய நாட்களாகக் கருதி வழிபடுகிறோம். துர்க்கையை க்ரியா சக்தி எனவும், லக்ஷ்மியை இச்சா சக்தி எனவும், சரஸ்வதியை ஞான சக்தி எனவும் வழிபடுவது வழக்கம். சில ஆலயங்களில் முச்சத்தி அம்பிகை சந்நிதிகள் உண்டு (திருவையாற்றிலும் இருக்கிறது)

அடுத்த மூன்று நாட்களையும் செல்வத்துக்கும், மங்களகரமான செயல்களுக்கும் காரணமான இலட்சுமி தேவியைக் கொண்டாடுகிறோம். கடைசி மூன்று நாட்களையும் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபட்டு கடைசியில் விஜயதசமி நாளை அக்ஷராப்பியாசம் எனும் கல்வி தொடங்கும் நாளாகக் கருதி வழிபடுகிறோம். சரஸ்வதி கலைகளுக்கு அதிபதி என்பதால் இந்த ஒன்பது நாட்களும் கொலுவைக் காணவரும் அண்டை அயல் பெண்கள், குழந்தைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் பாடல்களைப் பாடுகிறார்கள். கொலு பொம்மைகளில் பல அரிய காட்சிகளை உருவாக்கி, திருமண ஊர்வலம், இந்திர சபை, முருகன் கொலுவீற்றிருத்தல், நம் நாளில் பிரபலமான கிரிக்கெட் ஆட்டம் முதல் பல பொம்மைக் காட்சிகளையும் மின் விளக்குகளால் அலங்கரித்து, அழகிய கோலமிட்டு அலங்காரம் செய்கிறார்கள்.

இந்த மூன்று தெய்வங்களுமே பெண் தெய்வங்களான படியால் இந்த விழா பெண்கள் கொண்டாடும் விழாவாகவே நடத்தப் படுகிறது. இந்த ஒன்பது நாட்களையும் பெண்கள் தவமிருக்கும் நாட்கள் என்பர். இந்த நாட்களில் இந்த மூன்று தெய்வங்களுக்கும் சிறப்பான பூஜைகள் செய்யப்படும். பூமியில் உயிரினங்களின் படைப்பு அனைத்துமே கடவுளின் செயல் என்பதைக் குறிக்கும் வகையில் பிறப்பையும், அது படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்து மனிதன் தெய்வ கதிக்குச் செல்வதைக் குறிக்கும் வகையில் பொம்மைகள் அடுக்கி வைத்து அண்டை அயலாரை அழைத்துப் பாடி மகிழ்ந்து, வருவோர்க்கு சுண்டல் முதலானவற்றைப் பிரசாதமாக வழங்கி வருகிறோம்.

கொலு வைப்பதிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. முதல் மூன்று படிகளில் மரம் செடி கொடிகள், ஊர்வன, பறப்பன, மிருகங்கள் போன்ற பொம்மைகள், அடுத்த மூன்றில் மனித உருவங்கள், கடைசி மேல் மூன்று படிவங்களில், அவதாரங்கள், தெய்வங்கள் படிமங்கள் வைக்கப்படுகின்றன. அதாவது மாணிக்கவாசக சுவாமிகள் சொன்னதைப் போல பிறவிகள் புல்லாய், செடிகளாய், தாவரங்களாய், பறவை, மிருகங்கள், மனிதர்கள் என்று படிப்படியாய் போய் தெய்வ நிலைக்கு உயரவேண்டுமென்பதைக் குறிப்பதாகும்.

பத்தாம் நாள் விஜயதசமி. மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் ஓராண்டு காலம் அக்ஞாத வாசம் புரிய விராட தேசத்தில் மாறுவேஷத்தில் ஐவரும் வெவ்வேறு பணிகளில் அரண்மனையில் வேலைக்கு அமர்கிறார்கள். தருமன் அரசனுடன் சொக்கட்டான் ஆடும் நண்பனாக, பீமன் சமையற்காரனாக, அர்ஜுனன் அலியாக ராஜகுமாரிக்கு நடனம் சொல்லிக் கொடுப்பவனாக, நகுலன் குதிரை லாயத்திலும், சகாதேவன் மாட்டுத் தொழுவத்திலும், திரெளபதி ராணியின் தோழியாக பணிக்கு அமர்கிறார்கள். அப்படி மாறுவேஷம் பூணுவதற்கு முன்பாக அர்ஜுனனும் மற்றவர்களும் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்துப் பொந்தில் சுடுகாட்டுக்கருகில் மறைத்து வைத்துவிடுகிறார்கள். பிறகு துரியோதனாதியர் விராட ராஜன் மீது படையெடுத்து வரும்போது அந்த ராஜகுமாரனுடன் அலியாக இருக்கும் அர்ஜுனன் போருக்குப் போகிறான். மரப் பொந்திலிருந்து அவனுடைய காண்டீபம் எனும் வில்லை எடுத்துப் போர் புரிகிறான். அப்படி எடுத்த நாள்தான் விஜயதசமி. அந்த விஜயதசமியில் தொடங்கும் செயல் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை.

கொலு வைப்பது என்பது தமிழகத்தில் கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வந்திருப்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. விஜயநகர சாம்ராஜ்யம் தென்னகம் எங்கும் பரவியபோது நாயக்கர்கள் ஆட்சி எங்கும் பரவிய காலம். அவர்கள் காலத்தில் கொலு வைக்கும் பழக்கம் இங்கு பரவியிருக்கிறது. அரச வம்சத்தாரில் மைசூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது.

நவராத்திரி கொலு படிகள் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப்படையில் வைப்பார்கள். காரணம் இது ஒன்பது எனும் ஒற்றைப்படை நாட்கள் விழா. இந்த விழா சக்தி வழிபாட்டைக் குறிப்பதாகும். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய இவை மூன்றில் இச்சா சக்தி என்பது ஆன்ம உணர்வும், இறை உணர்வையும் வளர்க்கவும், கிரியா சக்தி வாழ்நாளில் தர்மங்களைச் செய்து பிறர் வாழ நன்மைகள் செய்யவும், ஞான சக்தி கல்வி கற்கவும், ஞானத்தை வளர்த்துக் கொள்ளவும் பயன்படும் விழா.

தத்துவார்த்தக் கருத்துக்களோடு, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் உத்சாகம் தரும் பண்டிகை இது. உறவினரும், நட்பும் கலந்து ஒருவர் இல்லம் ஒருவர் சென்று உறவாடவும் இந்த பண்டிகை இடம் தருகிறது. பழைய நாட்களில் புனிதம் அதிகம் இருந்தது. தற்போதைய நாகரிக வளர்ச்சியில் ஆடம்பரமும் செல்வச் செறுக்கும் வெளிப்படுகிறது. புனிதமும், பக்தியும் நிலவ வேண்டிய சூழ்நிலைகளுக்கு பதிலாக ஆடம்பர கொண்டாட்டங்களாக மாறி வருவது இதன் உண்மையான ஆன்மிக நோக்கத்தைச் சிதற அடித்துவிடுமோ என்கிற அச்சமும் நமக்கு ஏற்படுகிறது.ஆயினும் பெண் குழந்தைகள் விரும்பி கலந்து கொள்ளும் விழா இந்த நவராத்திரி விழா.

5 comments:

துரை செல்வராஜூ said...

மங்கலகரமான நவராத்திரியைப் பற்றிய தகவல்கள் அற்புதம்!.. நன்றி ஐயா!..

லக்ஷ்மி ரவி said...

நல்ல கருத்துச் செறிவோடு கூடிய ஆன்மீகக் கட்டுரை இது. நன்றியும், பாராட்டுக்களும்.

லக்ஷ்மி ரவி said...

நல்ல கருத்துச் செறிவோடு கூடிய ஆன்மீகக் கட்டுரை இது. நன்றியும், பாராட்டுக்களும்.

லக்ஷ்மி ரவி said...

நல்ல கருத்துச் செறிவோடு கூடிய ஆன்மீகக் கட்டுரை இது. நன்றியும், பாராட்டுக்களும்.

லக்ஷ்மி ரவி said...

நல்ல கருத்துச் செறிவோடு கூடிய கட்டுரை!