பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, July 29, 2013

இரண்டாம் ராஜாதிராஜ சோழன் (1163 முதல் 1178 வரை)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)


இரண்டாம் ராஜாதிராஜ சோழன் (1163 முதல் 1178 வரை)

இரண்டாம் ராஜராஜனுக்குப் பிறகு "ராஜகேசரி" எனும் பட்டத்துடன் அரசப் பதவிக்கு வந்தவன் இந்த இரண்டாம் ராஜாதிராஜன். இவனுடைய தலைநகரமும் கங்கைகொண்ட சோழபுரம் தான். இவனும் விக்கிரம சோழனுடைய மகன் தான். இவன் இரண்டாம் ராஜராஜனுடைய மகன் அல்ல, அவனுடைய சகோதரியின் மகன். ராஜராஜன் II இவனைத் தன் வாரிசாக நியமித்ததற்கு ஒரு காரணம் உண்டு. அது ராஜராஜன் IIக்கு மகன் கிடையாது.

இவன் பதவியேற்றுக் கொண்ட காலத்தில் பாண்டியர் தேசத்தில் வாரிசுரிமைப் போர் தொடங்கியது. இலங்கையிலும் கலகம் ஏற்பட்டதால் சோழர்களுக்கு ஒரு சோதனையான காலமாக இருந்தது. இதன் காரணமாக பாண்டியர்களின் கை ஓங்கி சோழர்கள் வலிமை இழக்கத் தொடங்கினர்.

முதலாம் குலோத்துங்கனின் பாண்டிய படையெடுப்புக்குப் பிறகு, பாண்டிய நாட்டை பாண்டியர்களே ஆளும்படியாக சோழர்கள் அனுமதித்திருந்தார்கள். சோழர்கள் மேம்போக்காக மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். சில பாண்டிய மன்னர்கள் சோழர்களுக்கு அணுக்கமாக இருந்திருக்கின்றனர். குறிப்பாக பராந்தக பாண்டியன் சோழர்களோடு சேர்ந்து கொண்டு கலிங்கத்தில் போர் புரிந்திருக்கிறான். முதலாம் குலோத்துங்கன் காலத்துக்குப் பிறகு பாண்டியர்கள் சோழர் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு சுயமாக நாட்டை ஆளமுற்பட்டனர். குலோத்துங்கன் காலத்துக்குப் பிறகு சோழர்கள் பற்றிய கல்வெட்டு எதுவும் பாண்டிய நாட்டில் இல்லை.

கி.பி.1166இல் மதுரை பாண்டியர்களான பராக்கிரம பாண்டியனுக்கும் குலசேகரனுக்கும் வாரிசு உரிமைப் போர் உருவானது. குலசேகரன் மதுரையைத் தாக்கினான். உடனே பாண்டியன் இலங்கை அரசன் பராக்கிரமபாகுவின் உதவியை நாடினான். இலங்கையின் உதவி பாண்டியருக்குக் கிடைக்குமுன்பாகவே குலசேகரன் மதுரையைத் தாக்கி பராக்கிரம பாண்டியனையும் கொன்று, அவன் மனைவி குழந்தைகளில் சிலரையும் கொன்றுவிட்டான். இதையறிந்த இலங்கை அரசன் தன்னுடைய படைகளுக்கு மதுரையைப் பிடித்துக்கொண்டு பராக்கிரம பாண்டியனையும் அவன் குடும்பத்தாரையும் கொன்ற குலசேகரனைத் தோற்கடித்து இறந்து போன பராக்கிரம பாண்டியனுடைய ஒரு மகனை அரச பீடத்தில் அமர்த்த வேண்டுமென்று உத்தரவிட்டான்.

இலங்கை அரசனுடைய எதிர்ப்பை குலசேகரன் தீரத்துடன் எதிர் கொண்டான். பாண்டியனின் வீரமிகுந்த போராட்டத்தை சமாளிக்க பராக்கிரமபாகு இலங்கையிலிருந்து மேலும் படைகளை வரவழைத்தான். இலங்கையின் தாக்குதலை தாங்கமுடியாமல் குலசேகரன் சோழ மன்னன் இரண்டாம் ராஜாதிராஜனுக்கு படைகளை அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்தான். அவன் கோரிக்கையையேற்று சோழ மன்னனும் பெரும் படையொன்றை பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்தான். இறுதியில் குலசேகரன் பலத்த எதிர்ப்புக்கிடையில் தோல்வியைச் சந்தித்தான்.

இலங்கைப் படைகள் பராக்கிரம பாண்டியனின் மகனான வீரபாண்டியன் என்பவனை அரச பதவியில் அமர்த்தினர். இருந்த போதிலும் இலங்கைப் படைகளுக்கும் சோழர் படைகளுக்கும் போர் தொடர்ந்து நடந்தது. இறுதியில் சோழர் படை வெற்றி பெற்று இலங்கை சிங்களப் படைகளை துரத்தியடித்துவிட்டது. மிகக் கடுமையாக நடந்த இந்த சிங்கள சோழர் போரில் சோழர் படைத் தளபதி அண்ணன் பல்லவராயன் என்பவன் இரண்டு சிங்கள படைத் தளபதிகளின் தலையை வெட்டி வீழ்த்தினான். அந்த சிங்களப் படைத் தளபதிகளின் பெயர்கள் லங்காபுரி தண்டநாயகன், ஜெகதிவச தண்டநாயகன் என்பது. இந்தப் போரின் இறுதியில் சோழர்கள் குலசேகரனைப் பாண்டிய மன்னனாக முடிசூட்டி வைத்தனர். அந்த சமயத்தில் சிங்கள தளபதிகள் இருவரின் தலைகளும் கோட்டையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மதுரையில் சோழர் படைகளிடம் தோற்ற சிங்களப் படைகளின் வெறி அடங்கவில்லை. இலங்கை சிங்கள அரசன் பராக்கிரமபாகு சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோழர்கள் இலங்கையில் இந்த பராக்கிரமபாகுவுக்கு எதிரியான ஸ்ரீவல்லபன் என்பவனை இலங்கை அரசுக்கு உரிமை கோரி போராடும்படி தூண்டினார்கள். அந்த ஸ்ரீவல்லபன் சோழர்களின் படை உதவியுடன் ஒரு மிகப் பெரிய கப்பற்படையோடு இலங்கை சென்றான். அங்கு சிங்களர்களின் பல இடங்களை ஸ்ரீவல்லபன் தலைமையிலான சோழர்படை தூள் தூளாக்கியது. பாண்டியர்களின் பிரச்சனையில் தலையிட்டதன் பலனாக தன் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பை நினைத்து வருந்திய இலங்கை அரசன் பராக்கிரமபாகு பாண்டிய நாட்டுக்கு குலசேகரனை அரசனாக ஒப்புக் கொண்டான். அது மட்டுமல்லாமல் சோழர்களுக்கு எதிராக குலசேகரனோடு ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டான்.

தாங்கள் பார்த்து பாண்டிய நாட்டுக்கு அரசனாக குலசேகரனை உட்காரவைத்த நன்றியை மறந்து அந்த குலசேகரன் பராக்கிரமபாகுவுடன் தங்களுக்கு எதிராக ஒப்பந்தம் செய்து கொண்டது கண்டு சோழர்களுக்கு ஆத்திரம். இவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென்கிற வேகத்துடன் பாண்டியன் குலசேகரன் மீது படையெடுத்துச் சென்று அவனைத் தோற்கடித்து விட்டு முன்பு இலங்கை படையினரால் முடிசூட்டப்பட்ட வீரபாண்டியனை மீண்டும் பாண்டிய அரசனாக உட்கார வைத்தார்கள். நன்றி மறந்த குலசேகரன் காட்டுக்குள் ஒடி ஒளிந்து கொண்டான்.

சோழ நாட்டில் வலுவான தலைமை முன்பு போல இல்லாமல் இருந்ததால் அவர்களுக்குக் கீழிருந்த சிற்றரசர்கள் சோழ நாட்டை பலவீனப்படுத்தினர். சிற்றரசர்கள் சோழப் பேரரசனுக்கு நெருக்கடி கொடுத்த வண்ணமிருந்தனர். தங்களுக்குக் கீழிருந்த சிற்றரசர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் சோழ மன்னன் நிர்வாகத்தை நடத்த திணரவேண்டியிருந்தது. இப்படி இந்த சிற்றரசர்களின் துரோகத்தின் பயனாக சோழப் பேரரசு தனது கம்பீரத்தை இழந்து கொண்டிருந்தது. நிர்வாகம் சீர்கேடடையத் தொடங்கியது. சோழப் பேரரசர் மீது நெருக்கடியைக் கொடுத்து சிற்றரசர்கள் தங்கள் கோரிக்கைகளை நிலைநாட்டத் தொடங்கி மொத்த சோழ சாம்ராஜ்யத்தையும் பலவீனப்படுத்தி விட்டனர்.

இந்த சோழ மன்னன் இரண்டாம் ராஜாதிராஜன் தன் காலத்திலேயே தனது மகனான மூன்றாம் குலோத்துங்கனை ராஜாங்க காரியங்களைக் கவனிக்க வைத்தான். தந்தை காலத்திலேயே ஆட்சியைப் பற்றி இந்த மூன்றாம் குலோத்துங்கன் கற்றுக் கொள்ள முடிந்தது. மகனிடம் பொறுப்பை ஒப்படைத்து ஓய்வில் இருந்த மன்னன் ராஜாதிராஜன் தோட்டக்கலையில் ஆர்வமுடையவனாக இருந்தான். தனது அரண்மனையில் அழகிய பூந்தோட்டங்களை அமைத்து அழகு பார்த்தான். 1182இல் அவன் காலமான பிறகு மூன்றாம் குலோத்துங்கன் அரச பதவியைத் தனித்து வகிக்கத் தொடங்கினான்.

1 comment:

துரை செல்வராஜூ said...

வேரோடி விழுது கொண்டு விரிந்திருந்த ஆலடியில் - அடிதொட்டுக் குடி கொண்டு வேரடியில் புற்றெடுத்த சிறுகறையான் வீறு கொண்டு வீழ்த்திடவும் நின்றதே! பெருங்குடியாம் சோழருக்கும் சாயுங்காலம் ஆனதே!..