பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, July 22, 2013

முதலாம் குலோத்துங்கன் (1070 முதல் 1120 வரை)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)




முதலாம் குலோத்துங்கன் (1070 முதல் 1120 வரை)

கடந்த சில பதிவுகளில் ராஜேந்திர சோழன் தொடங்கி அதிராஜேந்திரன் வரையிலான சோழ மன்னர்களின் வரலாற்றுச் சுருக்கத்தைப் பார்த்தீர்கள். கடைச் சோழர்கள் எனப் பெயரிடப்பட்டுள்ள விஜயாலயன் பரம்பரை இந்த அதிராஜேந்திரனின் மரணத்தோடு முடிவடைந்து விடுகிறது. பின்னர் பதவிக்கு வந்த முதலாம் குலோத்துங்கன் சோழர்களின் பெண்வழி வாரிசாக வேங்கிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இனி இந்த முதலாம் குலோத்துங்கன் பற்றி பார்ப்போம். சென்ற பதிவில் அதிராஜேந்திரன் பதவிக்கு வந்து ஒருசில மாதங்களுக்குள் கொல்லப்படுகிறான் என்பதையும், அவனைத் தொடர்ந்து வேங்கிநாட்டுச் சாளுக்கிய இளவரசனும், சோழர்களின் பெண்வழி வாரிசுமான குலோத்துங்கன் பதவிக்கு வந்ததையும் பார்த்தோம். இறந்துபோன அதிராஜேந்திரனுக்கு ஆதரவாக மேலைச் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் படையெடுத்து காஞ்சிபுரத்துக்கும், கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வந்து அதிராஜேந்திரனுக்குத் துணை புரிந்த வரலாற்றையும் பார்த்தொம். இனி முதலாம் குலோத்துங்கன்.

இவனை "ராஜகேசரி" எனும் பட்டப்பெயரோடு அழைக்கிறார்கள். இந்த மன்னன் தன்னுடைய தலைநகரை திருவாரூருக்கு மாற்றிக் கொள்கிறான். கங்கைகொண்ட சோழபுரத்து சோழர்கள் அனைவரும் விஜயாலய பரம்பரையினர். கடைசி விஜயாலயன் பரம்பரை மன்னன் அதிராஜேந்திரனுக்கு ஆதரவாக வந்த விக்கிரமாதித்தன் குலோத்துங்கனோடு போரிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தை விட்டு விரட்டிவிட்ட பின்னர் இவன் திருவாரூரில் தன் தலைநகரை அமைத்துக் கொண்டிருக்கலாம்.

குலோத்துங்கனுடைய மனைவிமார்கள் மதுராந்தகி, தியாகவல்லி, ஏழிசைவல்லபி, சோழக்குலவல்லியார் ஆகியோராவர். மிக அற்புதமான பெயர்கள். இவனுடைய பிள்ளைகள் ராஜராஜ மும்முடிச் சோழன், ராஜராஜ சோடகங்கன், விக்கிரம சோழன், மேலும் நான்கு பேர்.

ராஜகேசரிவர்மன் அபய குலோத்துங்க சோழன் என்பது இவனது முழுப் பெயர். சோழ அரசர்களில் மிகவும் பிரபலமான அரசன் இந்த குலோத்துங்கன். குலத்தை முன்னிலைப் படுத்தியவன் எனும் பொருளில் இந்த குலோத்துங்கன் எனும் பெயர் அமைந்திருக்கிறது. இந்த குலோத்துங்க மன்னன் பற்றிய விவரங்கள் வரலாற்றில் சற்று குழப்பமாகவே கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் பல ஊர்களில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படும் விவரங்களின்படி இந்த குலோத்துங்கன் பட்டத்துக்கு வந்தபோது சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதிராஜேந்திரன் வரலாற்றை எழுதும்போதுகூட அவன் மரணத்துக்குப் பின் நடந்த சில குழப்பங்கள் பற்றி கூறப்பட்டிருக்கிறது. அதிராஜேந்திரன் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே கொல்லப்பட்டிருக்கிறான். அதையடுத்து இந்த குலோத்துங்கன் பதவிக்கு வருகிறான். இடையில் நடந்தவை என்ன? இந்த குலோத்துங்கன் யார்? எங்கிருந்து வந்தான் போன்ற கேள்விகள் எழத்தானே செய்கிறது. இவனைப் பற்றிய கல்வெட்டுக்களில் இவனை 'பரிதிகுலம்' அதாவது சூரிய வம்சம் என்கிறது. தமிழிலக்கியங்களிலும் இவனைப் பற்றி குறிப்பிடுகையில் அனபாயன் என்றும் முதலாம் குலோத்துங்கன் என்றும் கூறுகிறார்கள்.

சில கல்வெட்டுக்கள் கூறும் தகவல்களின்படி இந்த குலோத்துங்கனுக்கு பட்டம் சூட்டப்பட்டது தில்லை சிதம்பரத்தில் என்பது தெரிகிறது. எது எப்படியோ விஜயாலய வம்சத்து அதிராஜேந்திரனது மரணத்துக்குப் பிறகு இந்த குலோத்துங்கன் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டு சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கிறான். வரலாற்றின் இந்தப் பகுதி குறித்து சரியான உண்மைகளை வெளிக் கொண்டு வரும்போது இவனுடைய பூர்வோத்திரம் பற்றி பார்க்கலாம். யூகங்களும் ஹேஷ்யங்களும் இந்த கேள்விகளுக்கு விடை தராது.

குலோத்துங்கன் பதவிக்கு வந்த சூழ்நிலை குழப்பமான சூழ்நிலை. நாட்டில் கலவரம் நடந்து முடிந்திருந்தது. அவன் குழப்பத்தை அடக்கி தன் ராஜ்யாதிகாரத்தை உறுதி செய்து கொள்வதற்காக சில யுத்தங்களை செய்ய வேண்டியிருந்தது. உள்நாட்டில் அதிராஜேந்திரனின் மரணமும், அதையடுத்து நிகழ்ந்த கிளர்ச்சிகளும், அதே நேரத்தில் இலங்கையில் பிரச்சனை ஏற்பட்டு அதை அடக்க நேர்ந்த விதமும் அவனது முதல் சில ஆண்டுகள் போர்க்களமாகவே இருந்திருக்கிறது.

சோழர்கள் ராஜராஜ சோழன் காலம் முதல் கீழைச் சாளுக்கியர்களுடன் திருமண உறவு வைத்துக் கொண்டு ராஜராஜனின் மகள் குந்தவையை விமலாதித்தனுக்கும், பின்னர் விமலாதித்தன் மகனான ராஜராஜ நரேந்திரனுக்கு ராஜேந்திர சோழன் தன் மகளான அம்மங்காதேவியை மணமுடித்தும் உறவினை பலப் படுத்திக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் மேலைச் சாளுக்கியர்களுடன் சோழர்கள் போரில் ஈடுபட்டனர். வேங்கியின் தாயதிப் போட்டியில் தம்பிக்கு சோழர்களும், அண்ணனுக்கு சாளுக்கியர்களும் உதவி செய்து போரைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மேலைச் சாளுக்கியர்களுடன் சுமுக உறவு கொள்வதற்காக வீரராஜேந்திரன் தன் மகளை சாளுக்கியன் விக்கிரமாதித்தனுக்குத் திருமணம் செய்து கொண்ட பின்னர் அவர்களுடன் சோழர்களுக்கு நல்ல உறவு அமைந்தது. அதிராஜேந்திரன் இறந்தான் என்றதும் சாளுக்கிய விக்கிரமாதித்தன் படையெடுத்து வந்து காஞ்சியில் கலகத்தை அடக்கிவிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்து தங்கினான். அப்போது அங்கு வந்து சோழனாக முடிசூட்டிக் கொண்டிருந்த குலோத்துங்கனைப் போரிட்டு விரட்டிவிட அவன் தன் தலைநகரை திருவாரூருக்கு மாற்றிக் கொண்டான். அப்போதும் மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தனுக்கும் கீழைச் சாளுக்கிய வேங்கி இளவரசன் குலோத்துங்கனுக்கும் மோதல் இருந்து கொண்டுதான் இருந்தது.

சாளுக்கிய (4ஆம்) விக்கிரமாதித்தனுடன் போர்.

மேலைச் சாளுக்கியர்களும் சோழ மன்னர்களும் ராஜராஜன், ராஜேந்திரன் காலத்திலிருந்து போரிட்டுக் கொண்டு இருந்திருக்கின்றனர். சாளுக்கிய மன்னர்கள் தைலபன், சத்தியாஸ்ரயன், ஜெயசிம்மா, சோமேஸ்வரா என்று அடுத்தடுத்து எல்லா சாளுக்கியர்களும் சோழர்களிடம் போரில் தோற்றுப் போயிருக்கின்றனர். வீரராஜேந்திர சோழன் காலத்தில் இந்தச் சாளுக்கியர்கள் பலமுறை தோற்று ஓடியிருக்கின்றனர். இவற்றில் பெரும்பாலான போர்களில் தோற்றதுமில்லாமல் சாளுக்கியர்கள் போர்க்களத்திலிருந்து விரைந்து ஓடவும், சோழர்கள் விரட்டிக் கொண்டு ஓடவுமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் சோழர்கள் சாளுக்கிய தலைநகரைப் பிடித்து கொள்வதும், அவர்களைக் கப்பம் கட்ட வைப்பதும் வழக்கமாக இருந்து கொண்டிருந்தது.

மேலைச் சாளுக்கியர்களான முதலாம் சோமேஸ்வரன் அவனுடைய பிள்ளைகள் ஆறாம் விக்கிரமாதித்தன் இரண்டாம் சோமேஸ்வரன் ஆகியோர் சாளுக்கியப் படைகளுக்குத் தலைமை தாங்கி குலோத்துங்கனுடன் போரிட்டனர். அந்தப் போரில் வென்ற குலோத்துங்கன் "விருதுராஜ பயங்கர" எனும் பட்டத்தைப் பெற்றான். இதன் பொருள் விருதுராஜன் எனப்படும் விக்கிரமாதித்தனை போரில் அச்சம்கொள்ளச் செய்தவன் என்பது. குலோத்துங்கன் காலத்தில் எல்லா போர்களிலுமே சோழர்கள் சாளுக்கியர்களை வென்றிருக்கிறார்கள். ஆனால் ஒரேயொரு முறை 1118இல் குலோத்துங்கன் உடல்நலம் குன்றியிருந்த நேரத்தில் வேங்கியை விக்கிரமாதித்தனிடம் தோற்றிருக்கிறான். உடல்நலம் சரியில்லாத குலோத்துங்கன் தன்னுடைய அபிமான மகனான விக்கிரம சோழனை அழைத்து சோழ சாம்ராஜ்யத்து மன்னனாக முடிசூட்டினான். தன்னுடைய முடிசூட்டு விழாவுக்காக விக்கிரம சோழன் தாய்நாடு திரும்பிய நேரத்தில் சாளுக்கியர்கள் வேங்கியைத் தாக்கிப் பிடித்துக் கொண்டனர். இப்படி இவர்கள் வேங்கியைத் தங்கள் வசம் நான்கு ஆண்டுகள் வைத்திருந்தனர். தன்னுடைய நிலைமையை வலுப்படுத்திக் கொண்ட விக்கிரம சோழன் 1125-26இல் அப்போது வயது முதிர்ந்திருந்த விக்கிரமாதித்தனைத் தோற்கடித்துவிட்டு மீண்டும் வேங்கியைப் பிடித்துக் கொண்டான்.

ஆக, குலோத்துங்கன் சோழநாட்டையும் வேங்கியையும் ஒருங்கிணைக்க செய்த முயற்சிகளுக்கு சாளுக்கியன் விக்கிரமாதித்தன் முட்டுக்கட்டையாக இருந்தான். குலோத்துங்கன் ராஜேந்திரன் வம்சத்தாரின் பெண்வழி வாரிசுகள் என்பதாலும், சோழநாட்டை இவர் அதிராஜேந்திரனுக்குப் பிறகு ஆளத் துவங்கியதாலும் இவ்விரு நாடுகளையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டான் குலோத்துங்கன். 1075இல் இதனை எதிர்த்து விக்கிரமாதித்தன் வேங்கியின் மீது படையெடுத்து வந்தான்.

சாளுக்கியப் படைகள் சோழ நாட்டினுள் புகுந்து அதன் படைகளை கோலாரில் எதிர்கொண்டது. அங்கு சாளுக்கியர்களை எதிர்த்துப் போர் புரிந்து சோழப் படைகள் அவர்களை துங்கபத்திரைக் கரைவரை ஓடஓட விரட்டியடித்து வெற்றி பெற்றது.

ஈழத்தில் யுத்தம்.

குலோத்துங்கன் விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து கொண்டிருந்த நேரத்தில் விஜயபாகு என்பவன் இலங்கை முழுவதுக்கும் தன்னை அரசனாகப் பிரகடனப் படுத்திக் கொண்டான். 1070இல் இலங்கையில் இருந்த சோழர் படைகளை இவன் ரோஹண எனுமிடத்தில் தாக்கி வெற்றி பெற்றான். இந்த வெற்றியை யடுத்து தைரியம் கொண்டு விஜயபாகு அனுராதபுரத்துக்கு அருகிலிருந்த பகுதிகளையும் பறித்துக் கொண்டான். குலோத்துங்கன் ஒரு பெரும் படையை இலங்கைக்கு அனுப்பு அங்கு குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த விஜயபாகுவை ஒரு கடுமையான போரில் தோற்கடித்தான்.

இந்த இலங்கைப் போரின்போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம். சோழர்களின் எதிரிகளான சாளுக்கியர்களுக்கு உதவி செய்வதற்காக இலங்கையின் சிங்களப் படையொன்று ரகசியமாக சாளுக்கிய நாட்டுக்குச் சென்றது. அதை வழிமறித்த சோழப்படையினர் அவர்களைப் பிடித்து மொட்டையடித்து பெண்களுக்கான உடைகளை அணிவித்து அவமானப்படுத்தி ஊருக்குத் திரும்ப அனுப்பினர். சோழர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்றால் அந்த சிங்கள ராணுவம் தமிழ் வணிகர்களின் கப்பலை வழிமறித்து கொள்ளையடித்ததற்கு பதிலாக இப்படிச் செய்தனுப்பினர். சிங்களர்கள் தமிழ்ப் பிரதேசங்களிலும் புகுந்து கொள்ளையடித்து சோழர்களுக்குச் சவால் விடுத்தனர்.

பாண்டியர்களுடனான யுத்தம்.

சாளுக்கிய விக்கிரமாதித்தனை போரில் தோற்கடித்த பின் குலோத்துங்கன் பாண்டியர்களின் பக்கம் திரும்பினான். சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் காலம் காலமாய் மோதல் இருந்து கொண்டிருந்தது. சோழ நாட்டில் அதிராஜேந்திரன் கொலையுண்ட பின்னர் குலோத்துங்கன் வேங்கியிலிருந்து இங்கு வந்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துக் கொண்டபோது சிறிது காலம் சோழநாடு குழப்பத்தில் இருந்தது. அந்த நேரம் பார்த்து பாண்டியர்கள் சோழர்களுக்கு எதிராகக் கலகம் செய்து தங்களது சுய உரிமையை மீட்டுக்கொள்ள போராடினர்.

இதனை குலோத்துங்கன் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. பாண்டிய நாட்டை இழப்பது தனக்கு நல்லதல்ல என்றுணர்ந்த குலோத்துங்கன் கலகம் செய்யும் பாண்டியர்களையும், அதனையடுத்த சேரநாட்டு (கேரள) பிரதேசங்கள் மீதும் படையெடுத்துச் சென்று அவர்களை அடக்கினான். இது குறித்த செய்தியொன்று சொல்வதாவது: குலோத்துங்க மன்னன் தன்னுடைய வலுவான படைகளைக் கொண்டு சேரர்களையும் பாண்டியர்களையும் போரில் வென்று கொற்கை துறைமுகத்தையும் எரித்தான். இந்த வெற்றியைக் குறிக்க சஹாயகிரி எனுமிடத்தில் ஒரு வெற்றித்தூண் எழுப்பினான்.

வேங்கி நாடு.

இப்படி குலோத்துங்கன் இலங்கையிலும், பாண்டிய சேர நாடுகளிலும் போரிட்டுக் கொண்டிருக்கும்போது யட்சகன்னரதேவன் எனும் திரிபுரா ராஜன் வேங்கியின் மீது படையெடுத்து வந்தான். இதை படையெடுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் கொள்ளையடிக்க வந்ததாகச் சொல்லலாம். விஜயதேவன் இந்த படையெடுப்பை முறியடித்தான். இப்படி வேங்கி நாடு சோழர்களின் நேரடி ஆதிக்கத்தில் விஜயதேவனால் நடத்தப்பட்டது. அவன் இறந்த பின்னர் குலோத்துங்கனின் மகன் ராஜராஜ மும்முடிச் சோழனே 1076இல் வேங்கியின் சோழப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான். ஆனால் அவன் ஓராண்டுக்கு மேல் அங்கு தாக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் அவன் தம்பியான வீரசோழன் என்பான் ராஜப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு அந்தப் பதவியில் 1084 வரை இருந்து வந்தான். இந்த வீரசோழனுக்குப் பிறகு அவனுடைய இன்னொரு தம்பி ராஜராஜ சோடகங்கா என்பவன் ஐந்தாண்டுகள் பதவி வகித்தான். அவனுக்குப் பின் விக்கிரம சோழனுக்கு இந்தப் பதவி கிடைத்தது.

வெளிநாட்டுத் தொடர்புகள்.

குலோத்துங்க சோழன் சீன நாட்டுக்கு ஒரு தூதரை 1077இல் அனுப்பி வைத்தான். சீனாவுடனான இந்த அரசியல் உறவு சோழர்களுக்கு ஆதாயம் அளித்தது. சீன உறவு ஏராளமான செல்வத்தை சோழர்களுக்குக் கிடைக்கச் செய்தது.

1063இல் குலோத்துங்கனின் இளமைப் பருவத்தில் இப்போதைய மலேயா தீபகர்ப்பத்தை ஸ்ரீவிஜய நாடு என்றிருந்த இடத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான். சோழர் படைகள் ஸ்ரீவிஜயத்திலும் காம்போஜிலும் தங்க வைக்கப்பட்டிருந்தது. குலோத்துங்கன் காலத்தில் சோழர்கள் காம்போஜம் என்கிற இப்போதைய கம்போடியாவோடு தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர். பர்மிய மன்னர்களும் சோழர்களுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தனர்.

குலோத்துங்கனின் சோழ சாம்ராஜ்யம்.

குலோத்துங்கன் காலத்தில் சோழசாம்ராஜ்யம் கடல்கடந்தும், உள்நாட்டில் வடக்கே வேங்கி, கலிங்கம் உட்பட வெகு தூரமும் தெற்கே சேர, பாண்டிய நாடுகளை உள்ளடக்கியும் பெரிதாக விளங்கியது. சில வரலாற்று ஏடுகளின்படி குலோத்துங்கன் தன் இறுதிக் காலத்தில் கங்கவாடி நாட்டை ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனனிடம் இழந்தான் எனத் தெரிகிறது. கால வெள்ளத்தில் வேங்கி நாட்டின் பல பகுதிகளையும் சிறுகச் சிறுக மேலைச் சாளுக்கியர்களிடம் இழந்தான். ஹொய்சாளர்கள் சோழர்களை வெற்றி கொண்டதால் தைரியமடைந்த விக்கிரமாதித்தன் வேங்கியின் மீது 1118இல் படையெடுத்தான். தனக்கு வயதாகி விட்ட காரணத்தால் குலோத்துங்கன் தனது மகனான விக்கிரம சோழனிடம் பொறுப்பைக் கொடுத்தான். அப்படியிருந்தும் வேங்கி விக்கிரமாதித்தன் வசம் போய்விட்டது. அதன் ஆட்சியும் அவன் இறக்கும் வரை அதாவது 1126 வரை அவன் வசம்தான் இருந்தது. சோழர்களின் இந்தப் பின்னடைவு தற்காலிகமானதுதான். விக்கிரமாதித்தனுடைய இறப்புக்குப் பிறகு மீண்டும் வேங்கியை விக்கிரம சோழன் பிடித்துக் கொண்டான். 1124-25இல் சாளுக்கியர்களுடன் நடந்த போரில் வெற்றி பெற்று வேங்கியை மீட்டபின் அது மூன்றாம் குலோத்துங்கன் காலமாகிய 1176-1218 வரை சோழர் வசம் இருந்திருக்கிறது.

ஆக, குலோத்துங்கனின் சாம்ராஜ்யத்தின் எல்லை அவன் பதவியேற்ற காலத்தைவிட அவன் இறக்கும் சமயம் சற்று குறைந்துதான் போயிருந்தது.

குலோத்துங்கனைப் பற்றி....

மாமன்னன் ராஜேந்திர சோழனின் மகளான மதுராந்தகி எனும் பெண்ணைத்தான் குலோத்துங்கன் திருமணம் செய்து கொண்டான். இந்த தம்பதியருக்கு ஏழு பிள்ளைகள், அவர்களில் விக்கிரம சோழன் என்பாந்தான் குலோத்துங்கனுக்குப் பிறகு அரசுரிமை பெற்றான். அவன் குலோத்துங்கனின் மூத்த மகன் அல்ல, நான்காவது மகன் என்பது கவனிக்கத் தக்கது. மதுராந்தகி 1110இல் இறந்து போனாள். பின்னர் தியாகவல்லி என்பவரைத் திருமணம் செய்து கொள்கிறான். கலிங்கத்துப்பரணி எனும் காப்பியம் இந்த தியாகவல்லியை ஏழிசைவல்லபி என குறிப்பிடுகிறது. அவளை "ஏழுலகுடையாள்" என்றும் சொல்கிறார்கள். இந்த தியாகவல்லி மன்னருக்கு இணையாக அதிகாரம் கொண்டவராக இருந்திருக்கிறார்.

இவர்களைத் தவிர சோழகுலவல்லி என ஒரு ராணியும் இருந்ததாகத் தெரிகிறது. இலங்கை மன்னனாகிய விக்கிரமபாகுவின் மகள் ஒருத்தியையும் குலோத்துங்கன் 1088இல் திருமணம் செய்து கொண்டார். இவைகள் எல்லாம் இரு நாட்டுக்குமிடையே ஒற்றுமையை நிலவச் செய்வதற்காகச் செய்து கொண்ட திருமணங்களாக இருத்தல் வேண்டும். இந்தத் திருமணத்தின் மூலம் சிங்கள அரசன் பாண்டியர்களுடன் சேர்ந்து கொண்டு சோழர்களை எதிர்ப்பது நின்று போனது. இலங்கை சிங்கள அரசனுக்கும் அச்சமின்றி அதிக அதிகாரத்தோடு ஆட்சி புரியவும் முடிந்தது.

மத்திய இந்தியாவில் ஆண்ட மன்னர்களோடு குலோத்துங்கன் நல்ல உறவு வைத்திருந்தான். அவர்கள் அங்கு சூரியபகவானுக்கு எழுப்பியிருந்த கலைநயம் மிக்கப் பல கோயில்களைக் கண்ட குலோத்துங்கன் அதுபோல சோழ நாட்டிலும் பல ஆலயங்களை எழுப்பினான். சூரியனுக்கென்று தமிழகத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்கள் இவன் காலத்தில் கட்டப்பட்டவை. 1113இல் மேலக்கடம்பூரில் தன்னுடைய பட்டமேற்ற 43ஆம் ஆண்டில் அரிய பல சிற்ப வேலைகள் அமைந்த கோயிலை அமைத்தான். இந்தக் கோயிலின் மூலத்தானம் ஒரு தேரைப் போல அமைப்பில் கட்டப்பட்டது. இவை தவிர சோழ நாட்டில் பற்பல ஆலயங்களை எழுப்பி தன் பெயர் நிலைக்கும்படி செய்துவைத்தான் முதலாம் குலோத்துங்கன். விஜயாலயன் சோழ வம்சத்தில் தந்தை வழியில் அல்லாமல் பெண் வழியில் வந்த முதலாம் அரசன் குலோத்துங்கன். அதிராஜேந்திரனின் மரணத்துக்குப் பிறகு பதவியேற்ற குலோத்துங்கன் 1121 வரை சோழநாட்டை ஆண்டான். இவனைத் தொடர்ந்து இவனது நான்காவது மகன் விக்கிரம சோழன் பதவிக்கு வந்தான்.













1 comment:

துரை செல்வராஜூ said...

முதலாம் குலோத்துங்கனின் நற்செயல்களைப் படிக்கும் போது மனம் பரவசமாகின்றது. சிங்களப்படையினர் தமிழ் வணிகர்களின் கப்பலை வழிமறித்து கொள்ளையடித்தது - குருதியில் தோய்ந்த பண்பு போலும்!..