பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, June 21, 2013

யோக சக்தி

    மகாகவி பாரதியாரின் அற்புதமான பாடல் இது. இதில் சில வரிகளை கோடிட்டுக் காண்பித்திருக்கிறேன். அவை எந்த நாளும் நம் மனதில் ஆழப்பதிந்திருக்கும் வரிகள். மகாகவி நம் காலத்தில் வாழ்ந்த தெய்வீகக் கவிஞர்.
     யோக சக்தி 
    வரங் கேட்டல்

    விண்ணும் மண்ணும் தனியாளும் - எங்கள்
          வீரை சக்தி நினதருளே - என்றன்
    கண்ணும் கருத்தும் எனக்கொண்டு - அன்பு
          கசிந்து கசிந்து கசிந்துருகி - நான்
    பண்ணும் பூசனை கள்எல்லாம் - வெறும்
          பாலை வனத்தில் இட்ட நீரோ, - உனக்
    கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ? - அறி
          வில்லா தகிலம் அளிப்பாயோ?

    நீயே சரணமென்று கூவி - என்றன்
          நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி
    தாயே! எனக்கு மிக நிதியும் -அறந்
          தன்னைக் காக்கு மொருதிறனும் - தரு
    வாயே என்றுபணிந் தேத்திப் - பல
          வாறா நினது புகழ்பாடி - வாய்
    ஓயே னாவதுண ராயோ? - நின
          துண்மை தவறுவதோ அழகோ?

    காளீ வலியசா முண்டி - ஓங்
          காரத் தலைவியென் னிராணி - பல
    நாளிங் கெனையலைக்க லாமோ, - உள்ளம்
          நாடும் பொருளடைதற் கன்றோ? - மலர்த்
    தாளில் விழுந்தபயங் கேட்டேன் - அது
          தாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம்
    நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு
          நீலியென் னியல்பறி யாயோ?

    தேடிச் சோறுநிதந் தின்று - பல
          சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
    வாடித் துன்பமிக உழன்று - பிறர்
          வாடப் பலசெயல்கள் செய்து - நரை
    கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
          கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
    வேடிக்கை மனிதரைப் போலே - நான்
          வீழ்வே னென்று நினைத் தாயோ? 


    நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
          நேரே இன்றெனக்குத் தருவாய்? - என்றன்
    முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
          மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
    என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
          கேதுங் கவலையறச் செய்து - மதி
    தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
          சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் 


    தோளை வலியுடைய தாக்கி - உடற்
          சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி
    வாளைக் கொண்டுபிளந் தாலும் - கட்டு
          மாறா வுடலுறுதி தந்து - சுடர்
    நாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி
          நண்ணித் திகழுமுகந் தந்து - மத
    வேளை வெல்லுமுறைகூறித் - தவ
          மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.

    எண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி
          யேறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில்
    பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்
          பல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை
    நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
          நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல
    பண்ணிற் கோடிவகை இன்பம் - நான்
          பாடத் திறனடைதல் வேண்டும். 


    கல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக்
          கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும்
    புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்
          போத்தைச் சிங்கவே றாக்கல் - மண்ணை
    வெல்லத் தினிப்புவரச் செய்தல் - என
          விந்தை தோன்றிட இந்நாட்டை - நான்
    தொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி
          சூழும் வீரமறி வாண்மை.

    கூடுந் திரவியத்தின் குவைகள் - திறல்
          கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை
    நாடும் படிக்குவினை செய்து - இந்த
          நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி
    சாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி
          தாயே! உனக்கரிய துண்டோ? - மதி
    மூடும் பொய்மையிரு ளெல்லாம் - எனை
          முற்றும் விட்டகல வேண்டும்.

    ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை
          அச்சம் போயொழிதல் வேண்டும் - பல
    பையச் சொல்லுவதிங் கென்னே! - முன்னைப்
          பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை
    உய்யக் கொண்டருள வேண்டும் - அடி
          உன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி
    வையத் தலைமையெனக் கருள்வாய் - அன்னை
          வாழி! நின்ன தருள் வாழி!

    ஓம் காளி! வலிய சாமுண்டீ!
    ஓங்காரத் தலைவி! என் இராணி! 

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

எந்த நாளும் நம் மனதில் ஆழப்பதிந்திருக்கும் வரிகள்.
பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

துரை செல்வராஜூ said...

//கலி சாடுந் திறன் எனக்குத் தருவாய் - அடி
தாயே! உனக்கரிய துண்டோ? // தமிழ்த் தாய் செய்த தவத்தின் பயன் தானே - மகாகவி பாரதியார்.

தி ஜானகி said...

கடவுளிடம் பாரதி கேட்கும் ஒவ்வொரு விஷயமும் அவரின் உயர்ந்த பண்புகளை பறைசாற்றுகிறது. திருவல்லிக்கேணி தாயாரையும் ஞாபக படுத்துகிறது..