பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, June 1, 2013

இலங்கைத் தமிழர்

                                                                 இலங்கைத் தமிழர்

கவி கா.மு.ஷெரீப் நமக்கெல்லாம் தெரிந்த நல்ல கவிஞர். இப்போது இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து அனைவரும் பேசுகின்றனர். இது என்னவோ இப்போதுதான் ஏற்பட்டது போன்ற தோற்றம் இதனால் ஏற்படலாம். அன்று இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆபத்து நேர்ந்தபோது மனம் கொதித்து கவி கா.மு.ஷெரீப் எழுதினார். அதன்பின்னர் பாரம்பரிய யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு நடந்தவற்றை அவர் இருந்து பார்த்திருந்தால் எப்படிக் கொதித்திருப்பார்? 1954இல் கவிஞர் கா.மு.ஷெரீப் எழுதியுள்ள இந்தக் கவிதை சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சி. அவர்கள் ஆசிரியராக இருந்த "தமிழன் குரல்" இதழில் வெளியானது. இப்போது இதைப் படித்தாலும் வரலாறு இன்னமும் மாறவில்லை என்பது தெரிகிறது. இனி கவிதையைப் படியுங்கள். ஐயா ம.பொ.சி. அவர்களின் பேத்தி தி.பரமேஸ்வரி தொகுத்து, சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ம.பொ.சியின் "தமிழன் குரல்" இதழ் தொகுப்பு எனும் நூலிலிருந்து.

                                                             என்ன செய்குவீர்?
                                                           கவி கா.மு. ஷெரீப்

இலங்கைவிட்டு தமிழரெல்லாம் திரும்பப் போகிறார்!
ஏதுமற்ற அகதிகளாய்த் திரும்பப் போகிறார்!
பலமிருந்த வரையில் லங்கை நாட்டுக்குழைத்து
பஞ்சையராய் பராரியராய்த் திரும்பப் போகிறார்!

விலங்கு வாழும் காடுகளை வெட்டி திருத்தி
வருவாயுள்ள தோட்டங்களாய் மாற்றி யமைத்து
எலும்பொடிந்த ஏழையராய் திரும்பப் போகிறார்!
ஏக்கத்துடன் இந்தியா வந்தடையப் போகிறார்!

அட்டைக் கடியால் ரெத்தம் செத்த சோகை உடம்பு
அன்னியர்க்கே பாடுபட்டு வறுமை மிகுந்த
குட்டை மனத்து சிங்களத்தார் கொடுமையினால்
குடியிருப்பு உரிமையிழந்து திரும்பப் போகிறார்!

ஊரிருந்தும் வீடுயில்லா ஓட்டாண்டியாக
உறவிருந்தும் அறியமுடியா அன்னியராக
சீரழிந்த குடும்பத்தோடு நெடுநாள் கழித்து
சிங்களத்தான் துரத்தியதால் திரும்பப் போகிறார்!

தோட்டம் புதுக்கி சிங்களத்தை வளப்படுத்திய
திறமை மிக்க தொழிலினத்தை வெளியிலனுப்புறார்!
ஆட்டம் போடும் கொத்தலைக்கு அறிவுறுத்துறோம்
அநீதி செய்த ஆட்சி நீண்டு வாழ்ந்ததேயில்லை.

இந்தியாவை ஆளுகின்ற தலைவர்மார்களே
இலங்கை செய்யும் கொடுமை போக்க என்ன செய்குவீர்
சந்தியிலே வருபவர்கள் திரிந்தலைவதோ?
சர்க்காரவர் குறை துடைக்க வழிவகுக்குமோ?

1 comment:

துரை செல்வராஜூ said...

மிகவும் வேதனையாக இருக்கின்றது. நல்லோர் பலர் காலகாலமாகக் குரல் கொடுத்தும் கேட்பார் செவிகள் கேடாகப் போயினவே!...