பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, May 14, 2013

சிரிக்கவும் சிந்திக்கவும் இந்தப் படங்கள்.

1. 
பையன் இன்றைய அரசியலையும், மத்தியில் அமைச்சர்கள் ராஜிநாமா செய்ய வைப்பதும், அதற்கு அவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதும், எண்ணற்ற ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் எதற்கும் மனம் கலங்காமல் சுகவாழ்வு வாழ்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் அல்லவா? அவனிடம் போய் ஆங்கில இலக்கணத்தில் கேள்வி கேட்டால் அவன் என்ன பதில் சொல்லுவான். இலக்கணத்தோடு நம் நாட்டு நிலைமையை அழகாகச் சொல்லிவிட்டான். ஐயா! ஆசிரியரே, அவனை அடிக்காதீர்கள். பாராட்டுங்கள்.

2.

"போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்" என்று சொல்லி ஏற்றது இது என்று தீர்மானித்துவிட்டால் அந்த வழியில் துணிந்து செல்லுவதே தன் வழி என்றார் கவிஞர் கண்ணதாசன். போற்றலும், தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்று எல்லாம் இறைவனுக்கே என்ற பக்திமான்களுடைய கருத்தும் இங்கே காட்டப் படுகிறது. என்னைத் தூற்றுபவர்கள் தூற்றட்டும் அவர்களுக்குப் பதில் சொல்லி என் நேரத்தையும், மனத் திண்மையையும் கெடுத்துக் கொள்ளாமல், என் மீது அன்பு செலுத்துவோர் மீது அன்பு செலுத்தும் உள்ளத்தை இறைவா எனக்குக் கொடு எனச் சொல்லும் இந்த வரிகள் என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விட்டன.

3.


"சென்றதினி மீளாது மூடரே! நீர்
 எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
 கொன்றழிக்குங் கவலை யெனும் குழியில் வீழ்ந்து
 குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா
 இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
 எண்ணமதைத் திண்ணமுறை விசைத்துக் கொண்டு
 தின்று, விளையாடி, இன்புற்றிருந்து வாழ்வீர்!
 தீமையெலாம் அழிந்து போம், திரும்பி வாரா!"

மகாகவி பாரதியாரின் இந்த வரிகள் எத்தனை உண்மையான, சத்தியமான வாக்கு. உலகத்து மேதைகள் அனைவருமே ஒன்றுபோல சிந்திப்பார்கள் போலிருக்கிறது. இதே கருத்துதான் இந்த படத்திலும், சுய முன்னேற்றத்துக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?

4.

நீங்கள் பிறரிடம் காட்டும் அன்பு விலை மதிப்பில்லாதது, அளவிடற்கரியது. அந்த அன்பை புரிந்து கொள்ளாத, அல்லது ஆதாயத்துக்காக உங்கள் அன்பைப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. உங்கள் அன்பைப் புரிந்து கொள்ளாமல் மனதைத் துன்பப் படுத்துபவர்களை உங்களால் திரும்பப் புண்படுத்த முடியாது. மறந்து விடுங்கள்! அவர்களை விட்டுக் காத தூரம் போய்விடுங்கள். திரும்பவும் அவர்கள் முகங்களில் முழிக்க விரும்பாதீர்கள். அது ஒன்றே நல்ல மருந்து.

5. 

முதல் நான்கு படங்களையும் மிகவும் சீரியசாக அணுகினோமல்லவா? அதே சீரியஸ்னஸோடு முடித்தால் மனம் சிரமப்படும். ஆகையால் ஒரு சின்ன மாறுதலுக்காக, ஆறுதலுக்காக என்றுகூட சொல்லலாம், இந்த கடைசி படத்தின் கருத்தை நகைச்சுவையோடு பார்க்கலாம். திருமணங்களில் மணமகன், மணமகளின் கரங்களைப் பிடித்துக் கொள்கிறான். சிலர் பெண்ணின் கை விரல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்துத் தன் கைக்குள் வைத்துப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்றும் உபதேசம் செய்வார்கள். அதாவது பெண்ணை வாழ்நாள் முழுவதும் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்வதாக அவன் நினைத்துக் கொள்கிறான். ஆனால் இந்தப் படம் என்ன சொல்கிறது? குத்துச் சண்டை அல்லது குஸ்தி போடுமுன்பு இருவரும் ஒருவர் கையை ஒருவர் குலுக்குவது போல பிடிக்கிறதைப் பார்த்திருக்கிறோமல்லவா, அதைப் போலத்தான் வாழ்வின் பின்னால் வரப்போகும் குஸ்திகளுக்கு முன்னதாகக் கையைக் குலுக்கிறார்கள் என்கிறது இந்தப் படம். நல்ல நகைச்சுவை.

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

சிரிக்கவும் சிந்திக்கவும் ஏற்றபடங்கள் அருமை..! பாராட்டுக்கள்..!

துரை செல்வராஜூ said...

முதல் படத்துக்கு ... வாத்தியாருக்கு வீட்டில் என்ன பிரச்னையோ?...
ஐந்தாம் படத்துக்கு... பின்னொரு சமயத்தில் பிடிக்காமல் ஓடி விடக் கூடாது என்றும் இருக்கலாம்!... 2,3,4 படங்களின் கருத்துக்கள் நம் மண்ணில் பிறந்த மகான்களின் கருத்துக்களுடன் ஒட்டியவை. அதனால் அவைகளுக்கு வணக்கம்!...