பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, April 9, 2013

பாரதி பயிலகம் வலைப்பூ: "பாலியல் அறிவு"

பாரதி பயிலகம் வலைப்பூ: "பாலியல் அறிவு"

KMR.Krishnan KMR.Krishnan
20:04 (16 hours ago)
to me
அக் கட்டுரையைப் படித்தேன்.

தவறாமல் உங்கள் பதிவுகளைப் படித்துவருகிறேன். உங்கள் பதிவுகள் இளைய சமுதாயத்தினருக்கு நல்ல அறிமுகம்தான். என்னைப் போன்ற பிறந்தது முதல், ஆன்மீக, தேசிய, இலக்கிய, பாரதி இலக்கியச் சூழலில் வளர்ந்த 'பெரிசு'களுக்கு ஒரு மீள்வாசிப்பு அனுபவம் தான்.தங்கள் பணி மேலும் சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன். பதிவுலகில் தாங்கள் இன்று பெற்றுள்ள மதிப்பான இடத்திற்கு அடியேனின் பங்களிப்பும் உண்டு என்று இரும்பூது எய்துகிறேன்.பல வலை தளங்களிலும் தங்களுடைய படைப்புக்கள் சுட்டப்படுகின்ற‌ன.

இப்போது அக்கட்டுரையைப்பற்றி.படங்களைப் பற்றி முதலில். வெளியிட்டு இருக்க வேண்டாம் அந்த ஆபாசப் படங்களை.அவர்கள் எல்லோரும் மாடல் அழகிகள். எல்லாப் பெண்களும் அதுபோல ஆடை அணிவதில்லை.மாடல் தொழில் செயபவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கைதான். சினிமாவில் ஆடை குறைப்புச் செய்வதைப் போல எந்தப் பெண்ணும் நடைமுறை வாழ்க்கையில் செய்வதில்லை. எம் ஜி ஆர் படத்தில் 'கிளப் டான்ஸ்' காட்சிகளைக் காட்டிவிட்டு, அதனை எம் ஜி ஆர் கணிடிப்பது போலக் காட்டுவார்கள். அதைப் போன்ற 'டெக்னிக்'தான் இங்கே வெளியாகியுள்ள படங்கள். வருத்தமாக இருக்கிறது.

இதுபோல சினிமா, விளம்பரங்களில், மேலும் வலைதளம், நீலப்பட குறுந்தட்டுக்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு காம‌ உணர்வு மிகுந்து,கிளர்ச்சி அடைந்து(குடிபோதையில்) அதற்கு வடிகால் தேடி அலையும் விருதாப் பயல்களின் வெறிச் செயலை, பெண்கள் கவர்ச்சி காட்டுவதால் தான் அப்படி விருதாக்கள் நடப்பதாக கட்டுரையாளர் சொல்வது ஏற்புடையதல்ல.

பெண்களுக்கு அறிவுறை கூறும் கட்டுரையாளர் ஆண்களுக்கு என்ன அறிவுரை கூறியுள்ளார்? பெண்கள் அடக்க ஒடுக்கமாக, கிட்டத்தட்ட முஸ்லிம் பெண்களைப் போல பர்தா அணிந்து நடமடினால் ஒழுக்கமாக ஆண்கள் இருப்பார்கள் என்று உத்திரவாதம் அளிக்க முடியுமா?

எளியாரை வலியார் வாட்டுவது மிருகபுத்தி. பெண் உடலால் வலுவற்றவள்.
உடலால் வலுவான ஆண் வலுவற்ற பெண்ணை வாட்டுகிறான்.'வலுவற்றதை
வாட்டக் கூடாது; வீரம் எனில் அதனை தனக்கு சமமானவர்களிடம் காட்டவேண்டும்' என்று ஆணுக்கு கட்டுரையாளர் ஏன் கூறவில்லை?

என் மூத்த பெண் +2 படிக்கும் போது அதிக மதிப்பெண் பெறுவதற்காக காலை மாலை டியூஷன் போய் வந்தாள். ஒருநாள் இரவு 7.30 மணியளவில் அவளுடைய சைக்கிளைப் பின் தொடர்ந்த ஒரு விடலை அவளை மார்பில் தொட்டுவிட்டான். அவள் அவனை சைக்கிளோடு கீழே தள்ளி நான்கு மிதி மிதித்து விட்டாள். தப்பி ஓடி விட்டான். வீட்டில் வந்து சொன்னதற்கு வீட்டுப் பெண்கள் அவளைக் கண்டித்ததுடன், டியூஷன் செல்வதைத் தடை செய்துவிட்டனர்.அவனால் அவளுக்கு ஆபத்து வரலாம் என்று பயந்து பயந்து வாழ்ந்தோம். விளைவு? அவள் தொழிற்கல்விக்குச் செல்ல முடியவில்லை. ஒரு விடலையினால் அவள் முன்னேற்ற‌ம் தடைப்பட்டது. இதில் பெண் செய்த தவறென்ன?

என் இரணடாவது பெண் ஒரு குழந்தை வயது விளையாட்டுத் தோழனிடம் சகஜமாகப் பேசிப் பழகியதை ஒருதலைக் காதலாக பாவித்துக் கொண்டு அவளை வெளியில் வரமுடியாமல் தொந்திரவு செய்தான்.அவளுடைய படிப்பும் பாதிக்கப்பட்டது.

என் மூன்றாவது பெண் 'விப்ரோ'வில் சேர்ந்த பின்னர் பலருக்கும் மின் அஞ்சல் மூலம் கம்பெனிகளில் வேலை வாய்ப்பு பற்றிச் சொல்லி வந்தாள். அதில் நாலில் இரண்டு ஆண்கள் காத‌லுக்கு அழைத்தனர்.முகத்தைக்கூடப் பார்த்திராதவர்கள் எந்தக் கவர்ச்சியால்  காதல் வசப்பட்டனர்?

இன்று தன்னிடம் படிக்கும் சிறுமிகளிடம் சில் விஷமம் செய்யும் முதிர்ந்த ஆசிரிய ஆண்கள் சிறுமிகளின் கவர்ச்சியால்தான் அப்படிச் செய்கின்றன‌ரோ?

பொதுவாக ஆண் காமத்தில் வக்கிரமான சேர்க்கைகளை விரும்புகிறான். ஒரு நாகரிகமான, கலாச்சாரக் குடும்பத்தில் வந்த மனைவி அவனுடைய வக்கிரங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறாள். அப்போது அவன் வெளியில் சென்று பொறுக்கி போல நடந்து கொள்கிறான். சொல்லப் போனால் இளைஞர்களைவிட முதியவர்களே அதிக வக்கிரங்களுக்கு ஆட்பட்டவர்கள்.

'சேலை மீது முள் விழுந்தாலும், முள் மீது சேலை விழுந்தாலும் சேலைக்கு மட்டுமே பாதிப்பு'; 'பெண்பிள்ளை சிரிச்சா போச்சு;புகையில விரிச்சா போச்சு';'தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை';'கல்லானுலும் கணவன் புல்லானாலும் புருஷன்' இவைப் போன்ற பத்தாம்பசலிப் பழ மொழிகளின் தாக்கத்தால் கட்டுரையாளர் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆண்களுக்கு அறிவுரை தேவை. ஆண் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்ற மனோபாவத்தில் வளர்க்கப்படுகிறான்.'உனக்கென்னடா, நீ
ஆண்பிள்ளை"என்று சொல்லி சொல்லி வளர்க்கப்படும் ஆண், விடலைப் பருவத்தில் ஊர்சுற்றியாக, தறுதலையாக, பொறுப்பற்றவனாக, பொறுக்கியாக வடிவெடுக்கிறான்.

பெண்களூக்கு வேண்டிய அளவு அறிவுரை சொல்லியாயிற்று. இனி ஆண்களுக்குச் சொல்லத் துவங்குவோம். ஆமாம் அவர்களுக்கான  அறிவுரைகள் இன்னும் துவங்கப்படவில்லை. நீங்களாவது துவங்குங்கள்.

நன்றி வணக்கம்.

கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

2 comments:

Thanjavooraan said...

உங்கள் வாதத்தில் உள்ள அழுத்தத்தை உணர்கிறேன். பழி முழுவதையும் பெண்கள் உடைகள் மீதும், அவர்கள் செயல்பாடுகள் மீதும் சுமத்தமுடியாது என்பதையும் உணர்கிறேன். ஆனால் ஆண்கள் அவர்கள் கிழபாடுகளானாலும், விடலைகள் ஆனாலும் வக்கிர எண்ணங்கள் யாருக்கு ஏற்படுகிறது என்றால் முறையான கட்டுப்பாடுகளுடன் வளராத, தாந்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் ஆண்களுக்குத்தான் வக்கிரங்கள் தோன்றுகின்றன. கட்டுப்பாடான குடும்ப சூழ்நிலையில் வளரும் ஆண்கள் இதுபோன்ற வக்கிரங்களைச் செய்யத் துணிவதில்லை. மாறாக எதையும் செய்யலாம், யாரும் கேட்க முடியாது, அப்படிக் கேட்பவர்களை எதிர்த்து நின்றால் அவர்கள் 'நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கி விடுவார்கள் எனும் திமிரில் நடந்து கொள்ளும், உங்கள் வர்ணனைப் படி 'பொறுக்கி'கள், அவர்கள் சிறுவயதோ, கிழவனோ துணிந்து செய்கிறார்கள். அதிலும் ஆசிரியர்களாக இருந்து கொண்டு மாணவிகளிடம் தவறாக நடப்பதை மன்னிக்கவே முடியாது. பழைய நாட்களில் ஆசிரியர்கள் தாய் தந்தையரைவிட ஒரு படி அதிகமாகவே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கொடுத்தனர். இப்போதுதான் இந்த அவல நிலைமை. ஆசிரியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவைப்படுகிறது. உங்கள் கருத்து எதிர்ப்புக் குரலாக அமைந்த போதிலும், அதில் பொதிந்திருக்கும் அக்கறை உணர்வுக்காக நன்றி கூறுகிறேன்.

Unknown said...

கிருஷ்ணன் சார் கூறியது போல காலம் போய் கொண்டிருப்பது பெரும் வேதனைக் குரியதே...
இது போன்று உடைகளை உடுத்தி திரியும் மேலை நாடுகளில் இருக்கும் ஆண்கள் கூட இந்தளவிற்கு மோசமானவர்களாக இருப்பதில்லை அவர்கள் சிறுவயதிலிருந்தே பார்த்துப் பழகியதும் ஒருக் காரணமோ என்றும் தெரியவில்லை.

இது போன்ற உடை உடுத்தி இந்தியத் தெருவில் பெண்கள் திரியப் போகும் காலம் வெகு தூரத்திலில்லை என்றும் கூறலாம்...

நான் எனது பின்னூட்டத்தை எழுதியப் பின்பு தான் கிருஷ்ணன் சாரின் என்னத்தைப் படித்து பார்க்கிறேன். அவரும் கிட்ட தட்ட எனது என்னத்தை கூறி இருக்கிறார் என்றே சொல்லலாம். ஆண் பிள்ளைகளையும் அறிவுரை சொல்லி வளர்ப்பது பெற்றோரின் கடமையே. இப்படி அரைகுறையாக வந்தால் கூட ஆட்டங் காணாத மன நிலையில் இருக்கத் தெரிந்த ஆண்மகனே என்றும் ஒரு சிறந்த வாழ்வை வாழ முடியும்.

மீண்டும் சொல்வேன், பிள்ளைகளை சரியாக வளர்க்கப் படும் வரை இந்த கொடுமைகள் தொடரும்.

அரசாங்கமும், திரைப்படம், மற்றும் தொலைக் காட்சி நிகழ்சிகளில் அக்கறை செலுத்த வேண்டும். பள்ளியும் ஆசிரியர்களும் சரியானதொரு முறையில் அமைய பாடுபட வேண்டும். அதற்கு சரியான ஆட்சியாளர்கள் பதவிக்கு வர வேண்டும். போட்டி இடுபவர்களை தேர்தல் ஆணையம் பலத் தேர்வுகளை நடத்தி.. தகுதிச் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

அரசும் பெற்றோரும் சரியான முறையில் செயல் படாத வரையில் இவைகள் மேலும் மேலும் மோசமாகத் தான் போகும்.

நன்றி!