பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, April 20, 2013

"சின்ன மேளம்"

      தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரைத் திருவிழாவையொட்டி
                       "சின்ன மேளம்" நாட்டியத் திருவிழா.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து வரலாற்றின் ஏடுகளில் புகழ் பெற்று விளங்கும் தஞ்சை பெரியகோயில் என வழங்கும் "ராஜராஜேச்சரம்" ஆலயத்தில் இவ்வாண்டு சித்திரை திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, தஞ்சை அரண்மனை தேவஸ்தானமும் Thanjavur Heritage Arts and Cultural Academy அமைப்பும் இணைந்து "சின்ன மேளம்" எனப்படும் நாட்டிய விழா நடைபெற்று வருகிறது.

கடந்த 7-4-2013 ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய இந்த விழா முதல் நாள் மாலை 6-05 மணிக்கு தஞ்சாவூர் தர்மராஜ், செந்தில்குமார் குழுவினரின் மங்களைசையுடன் இனிய ஆரம்பம் ஆகியது. தொடர்ந்து தஞ்சை இளவரசர் பாபாஜிராஜா போன்ஸ்லே துவக்கி வைத்த பிறகு, சென்னை கலா சாதனாலயா எனும் அமைப்பின் குரு திருமதி ரேவதி இராமச்சந்திரன் தனது மாணவிகளுடன் மிக அற்புதமான நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினார்.

8-4-2013 திங்கட்கிழமையன்று மாலை இரு நடன நிகழ்ச்சிகள். முதலில் 6 மணிக்கு புதுச்சேரி தானிய கனக மகாலக்ஷ்மியும் 7 மணிக்கு திருப்பதி செல்ல ஜெகதீஷ் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

9-4-2013 செவ்வாயன்று மாலை 7 மணிக்கு புது டில்லியிலிருந்து நிருத்ய பாரதி அமைப்பின் குரு திருமதி கனகா சுதாகர் தலைமையில் மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி ஏராளமாகக் கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

10-4-2013 புதன் அன்று சென்னை செல்வி சுகன்யா குமார் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் தொடர்ந்து 11-4-2013 வியாழன் அன்று சென்னை பரதாஞ்சலி அமைப்பின் குரு திருமதி அனிதா குஹா அவர்களின் மாணவியரின் மிக அற்புதமான நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நீண்ட அனுபவத்தின் முத்திரை அந்த நடனமணிகளின் ஆட்டத்தில் தெரிந்ததை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர்.

12-4-2013 வெள்ளிக்கிழமை இரு நிகழ்ச்சிகள். முதலில் இராமநாதபுரம் தியாகேசர் நாட்டியப் பள்ளி குரு திருமதி வேம்பு தியாகராஜசுந்தரம் அவர்களின் மாணவியரின் நடனமும், தொடர்ந்து சென்னை பவானி நாட்டியாலயா குரு திருமதி டி.பவானி அவர்களின் மாணவியரின் பரத நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

13-4-2013 சனிக்கிழமை சென்னை வாணி கலாலயா நுண்கலை நிலையத்தின் குரு திருமதி வாணி காயத்ரி பாலா குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது.

14-4-2013 ஞாயிறு தமிழ்ப் புத்தாணடையொட்டி இரு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலில் புதுச்சேரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரன் குழுவின் குரு திரு ஹெச்.சுவாமினாதன், திருமதி அனுராதா சுவாமிநாதன் ஆகியோரின் மாணவியரின் பரதம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ ப்ரசன்ன பரதனாட்டிய வித்யாலயா சென்னை தஞை நாட்டிய கலைக் கூடம் குரு திருமதி கீதா நவநீதன் குழுவினரின் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

15-4-2013 திங்கட்கிழமை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கலைத் துறையில் பணிபுரிபவரும், சித்ரா ஆர்ட்ஸ் அண்டு கல்சுரல் அகாதமியின் தலைவருமான திருமதி சின்னமனூர் சித்ரா அவர்களின் மாணவியர் தங்கள் குருவின் தலைமையில் மிக சிறப்பானதொரு நிகழ்ச்சியை அளித்தனர்.

16-4-2013 செவ்வாய் அன்று பெங்களூரு லக்ஷ்மி கலாலயம் திருமதி ரமா வேணுகோபாலன் அவர்களின் மாணவியர் சிறப்பானதொரு நிகழ்ச்சியை அளித்தனர்.

17-4-2013 புதன்கிழமை சென்னை சமர்ப்பண இசை நாட்டியப் பள்ளியின் குரு சுவாமிமலை திரு K.சுரேஷ் அவர்களின் குழுவினர் தஞ்சை நால்வரின் வாரிசும், பிரபலமான நட்டுவனார் கிட்டப்பா பிள்ளையின் பாடாந்திரத்தில் மிக அழகான நாட்டிய நிகழ்ச்சியை வழங்கினர். இளம் வயதில் மத்திய அரசின் விருதுகளையும், வேறு பல சிறப்புக்களையும் பெற்ற வித்வான் திரு கே.சுரேஷ் மிக அற்புதமாக நட்டுவாங்கம் செய்ய, அவரது மாணவியர் நடனமாடியதை தஞ்சை மக்கள் மறக்கமுடியாது.

18-4-2013 வியாழக் கிழமை சென்னையின் சிறப்பு மிகு கலைக் கேந்திரமாக விளங்கும் கலாக்ஷேத்ராவின் மாணவ மாணவியர் பரதக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலாக்ஷேத்ராவின் முத்திரை விளங்கும்படியான அவர்கள் நடன நிகழ்ச்சி பெரிதும் போற்றத்தக்கதாக அமைந்திருந்தது.

19-4-2013 வெள்ளிக்கிழமை சென்னை சாய் நாட்டியாலயா திருமதி திவ்யஸ்ரீ குழுவினரின் பரதம் நடந்தது. தொடர்ந்து சென்னை நூபுர்லயா ஸ்கூல் ஆஃப் பெர்பாமிங் ஆர்ட்ஸ் குரு திருமதி லலிதா கணபதி அவர்களின் மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

இன்று 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும் நிகழ்ச்சிகள் உண்டு. தஞ்சை மக்களுக்கு இத்தனை நீண்ட நாட்கள் நடன விருந்து அமைவது இந்த சின்ன மேளம் நிகழ்ச்சியில் மட்டுமே. இதனை மிகச் சிறப்பாக நிர்வகித்து நடத்திவரும் குரு திரு ஹேரம்பநாதன், அவருடைய குடும்பத்தார் பாராட்டுக் குரியவர்கள். பொதுமக்களும் கலை ஆர்வலர்களும் மிகப் பெருமளவில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு நல்கினால்தான் கலை வளரும். தஞ்சை கலைகளுக்குத் தலைமையகம் எனும் பெருமையும் நிலைத்து நிற்கும். இந்த நிகழ்ச்சிக்கு மெலட்டூர் பாகவத மேளாவைச் சேர்ந்த பரதம் மகாலிங்கம் அவர்களும், திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலிக் குழுத் தலைவரும், நடனக் கலைஞரும், தஞ்சை ப்ரஹன் நாட்டியாஞ்சலிக் குழு உறுப்பினருமான திரு சுப்பிரமணியம் போன்றவர்கள் தங்கள் முழு ஒத்துழைப்பையும் கொடுத்து வருகிறார்கள்.
கடந்த 7-4-2013 முதல் தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற்று வரும் "சின்ன மேளம்" விழாவைப் பற்றி எழுதியிருந்தேன். 19ஆம் தேதி வரையிலான நிகழ்ச்சிகள் அதில் இடம்பெற்றன. அதன் பின் நடந்தவைகளை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டி எழுதுகிறேன்.

20-4-2013 சனிக்கிழமை மாலை கோயம்பத்தூரிலிருந்து பக்தி நாட்டிய நிகேதன்அமைப்பின் குரு திருமதி கருணாசாகரி குழுவினர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கலாக்ஷேத்திரா பயிற்சியும், கருணாசாகரி அவர்களின் கற்பனைத் திறனும் உழைப்பும் அவருடைய நடன நிகழ்ச்சியில் வெளிப்பட்டன. அற்புதமான நிகழ்ச்சி என்று அனைவராலும் போற்றப்பட்டது இந்த நிகழ்ச்சி. ஒவ்வொரு நிகழ்ச்சியின் முன்பும், அந்த நடனம் பற்றிய விளக்கங்களை அளித்து அவரே உரையாற்றியது பாராட்டுக்குரியது. தொடர்ந்து சென்னை நிருத்திய சுதா நடனக் கலைக்கூடத்தின் குரு திருமதி சுதா விஜயகுமார் அவர்களும், அவருடைய மாணவிகளும் சிறப்பானதொரு நடன நிகழ்ச்சியை நடத்தினர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், யாருடைய நினைவாக இந்த விழா நடைபெறுகிறதோ, அந்த தஞ்சை நால்வர், தஞ்சை கிட்டப்பா பிள்ளை ஆகியோருடைய பாணியில் இவர்களுடைய நாட்டியம் அமைந்தது சிறப்பு. நன்றி கூறியபோது அமைப்பாளர் திரு ஹேரம்பநாதன் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் கலைஞர்களைப் பாராட்டிப் பேசினார்.
21-4-2013 ஞாயிறு அன்று சென்னை நாட்டியோபாசனா பள்ளியின் திருமதி பி.வசந்தி குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சென்னை பத்மஸ்ரீ நிருத்யாலயாவின் நிறுவனர் திருமதி சுஜாதா மோகன் அவர்களுடைய மாணவிகள் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் மிகச் சிறந்த நடனமனியாகத் திகழும் திருமதி பத்மா சுப்ரமண்யம் அவர்களுடைய மாணவியான திருமதி சுஜாதா மோகன், அவர்கள் பாணியில் மிக சிறப்பாக நடனமாடி ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தனர்.


விழா தொடர்ந்து 24-4-2013 வரை நடைபெறும். மற்ற நாட்களின் நிகழ்ச்சிகளும் அவ்வப்போது இதில் இணைக்கப்படும்.



No comments: