பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 17, 2013

காலி நாற்காலி


நடுக்கூடத்தில் காட்சி தரும்
அந்த காலி நாற்காலியைப்
பார்க்கும்தோறும் பார்க்கும்தோறும்
நெஞ்சு வலிக்கிறதே ஏன்?

அதில் எப்போதும் உட்கார்ந்திருந்த
என் தந்தையைப் பார்த்த பொழுதெல்லாம்
அடிமனத்தில் ஆத்திரமும்
கோபமும் கொப்பளித்ததே ஏன்?

எல்கேஜியில் சேர்த்துவிட்டு என்னைப்
பள்ளியில் கொண்டு விட்டவுடன்
தந்தை வீடு திரும்புமுன்னே
வீட்டுக்கு ஓடிவந்தேனே அதனாலா/

ஒரே ஒரு மாதத்தில் மட்டும்
மூன்று பள்ளிகளுக்கு மாறியபோதும்
மனம் தளராமல் என்னை
பள்ளிக்கு அனுப்பிவந்தானே அதனாலா?

கால்வலிக்க நான் நடக்கக்கூடாதென்று
தெருவோர மேடையருகே என்னை
உட்காரச் சொல்லிவிட்டு அங்கு
தானே வந்து அழைத்துச் சென்றானே அதனாலா/

படிக்கும் பருவத்தில் நான்
கேட்டதெல்லாம் வாங்கித் தந்து
விளையாடவிட்டு என்ன
குறையின்றி வளர்த்தானே அதனாலா?

என் அப்பன் எனக்கு இன்னம்
திருமணப் பேச்சை எடுக்கவில்லையென்று
நண்பர்கள் குழாத்திடம் முறையிட்ட பின்னர்
எனக்குத் திருமணம் செய்வித்த காரணத்தாலா?

வேலைக்குச் சென்ற பின்னர்
ஒவ்வொரு வேலையையும் விட்டுவிட்டு
வீட்டுக்கு ஓடிவந்து நின்றபோதும்
வருந்தாமல் என்போக்கில் விட்டதாலா?

தனிமையிலே வெளியூரில் நான்
வேலைக்குப் போகும் நிலைமை கண்டு
சோற்றுக்கு வழிசெய்ய என் தாயையும் எங்கூட
வெளியூர் அனுப்பி வைத்த காரணமா?

மனம் சோர்ந்து, உடல் வருந்தி
ஆதரவு நாடி நானும் அடிக்கடி ஓடிவந்து
அடைக்கலம் ஆனபோது ஆறுதல் கூறி
என்னை மனம் தேற வைத்ததாலா?

ஊரார் ஒன்றுகூடி என்மீது குறை சொல்ல
அவர்களை எதிர்கொண்டு என்பக்கம் நின்றுபேசி
மனத்தில் தெளிவு பெற ஆதரவு தந்து என்னை
ஊக்கம் கொடுத்து ஆதரித்த காரணமா?

தேவைப் பட்ட காலமெல்லாம்
தேவைப்பட்ட உதவிகளை
முகம் சுளித்து மறுத்திடாமல் மனமுவந்து
செய்து வந்த காரணமா?

பாசத்தை உணர்ந்திடாமல் நான்
மனம் வருந்தி நின்ற போது
தான் வருந்தி அன்புகாட்டி
துணையாக இருந்ததாலா?

ஏன், இன்று எனது மனம்
அந்த காலி நாற்காலியைப் பார்த்து
மரித்துப் போன என் தந்தைக்காக
உடல் குலுங்க அழுகின்றது?


Alasiam Govindhasamy commented on your photo.
Govindhasamy wrote: "அருமையான உணர்வுகளை அள்ளித் தெளித்தக் கவிதை ஐயா! அதன் கடைசிப் பகுதியில் இந்த வரிகளையும் சேர்த்துப் படிப்போமே!

 நெஞ்சிலே பல்லக்கு தந்த தெய்வத்தை 
அஞ்சுலே உணரவில்லை அதன் அடியொற்றி 
தஞ்சமென வந்த போதெல்லாம் கடலை 
விஞ்சும் அன்பைப் பொழிந்த கருணாமூர்த்தியியை இழந்து 
எஞ்சி நிற்கும் நாற்காலியே எந்தை 
கொஞ்சிப் பேசிய அந்த நாட்களை
மிஞ்சிய வாழ்வில் நினைக்கையில் உன்னைப்போல்
 செஞ்சுவைத்த மெளனமாக இருக்க முடியவில்லையே!"

1 comment:

Shanti said...

அருமையான கவிதை . படிக்கும்போதே மனம் கனத்து கண்ணீர் வருகின்றது .நன்றி.