பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, January 23, 2013

ஐயாறப்பர் ஆலய குடமுழுக்கு விழா

 திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர்  ஆல  குடமுழுக்கு விழா

முழுமுதற் கடவுளான சிவபெருமான் சிறப்பாக எழுந்தருளியுள்ள இடமாக திருக்கயிலாய மலை கருதப்படுகிறது. இந்தத் திருக்கையிலாயம் சென்று இறைவனை தரிசிப்பது இயலாய காரியமானதால் அவன் நாட்டின் பல பகுதிகளிலும் ஆலயங்களில் குடிகொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட சிவாலயங்களில் தென்னாட்டில் தேவாரத் திருத்தலங்களாக அமைந்தவை 276, அவற்றில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 63 தலங்களில் 51ஆவது தலமாக அமைந்ததுதான் திருவையாறு.

இத்தலம் திரு ஐயாறு எனப் பெயர் பெறக் காரணம் என்ன? சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கையாறு, பாலாறு, நந்திவாய்நுரை இவை ஐந்தும் இங்கே கலப்பதால் இத்தலம் "பஞ்சநதம்" எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள ஐயாறப்பருக்கு செம்பொற்ஜோதி, செப்பேசர், கயிலைநாதர், பிராணதார்த்திஹரர் எனும் பெயர்களும் உண்டு. இவை தவிர திருவையாறுடைய மகாதேவர் என்றும் இறைவியை உலகுடைய நாச்சியார் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஐயாறப்பர் லிங்கத் திருமேனி சுயம்புவானதால் இங்கு புனுகு சட்டம் மட்டுமே சார்த்தப்படும், இவருக்குத் தீண்டாத்திருமேனி நாதர் என்னும் பெயரும் உண்டு.

இங்கு ஐயாறப்பருக்கு பூஜை செய்து வந்த ஒரு ஆதிசைவர் காசி சென்று திரும்பிவர காலதாமதம் ஆனதால், சிவபெருமானே அந்த சிவாச்சாரியார் உருவில் வந்து தன்னைத்தானே பூசித்த வரலாறு சிற்ப்பு வாய்ந்தது. சப்தஸ்தான திருவிழாவின் போது இங்கு 'தன்னைத் தானே பூஜித்த' வரலாறு ஐந்தாம் நாள் விழாவாகக் கொண்டாடப் படுகிறது.

திருக்கடவூரில் மார்க்கண்டனின் உயிரைக் காக்க சிவபெருமான் காலனை உதைத்த வரலாறு நமக்கெல்லாம் தெரியும். அதுபோலவே இந்தத் தலத்தில் சுசரிதன் எனும் அந்தணச் சிறுவனின் உயிரைக் காக்க சிவபெருமான் தன் தென்வாயில் காப்போனான ஆட்கொண்டாரைக் கொண்டு எமனை தண்டித்த வரலாறும் இங்கு உண்டு. எனவே இவ்வாலயத்தில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளை இறைவன் சந்நிதியில் செய்து கொள்வது சிறப்பு. இங்கு ஆட்கொண்டாருக்குத் தெற்கு வாயிலில் ஒரு சந்நிதி உண்டு. இங்கு எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் குங்கிலியக் குண்டம் இருக்கிறது. மக்கள் இங்கு குங்கிலியம் வாங்கி இடுகிறார்கள்.

தேவார மூவரில் திருநாவுக்கரசருக்கு ஒரு முறை கைலாய மலைக்குச் சென்று சிவனை தரிசிக்கும் ஆவல் ஏற்பட்டது. திருநாவுக்கரசர் மேலும் பல காலம் தமிழ் பேசும் நல்லுலகில் இருந்து பல பாடல்களைப் பாடவேண்டும் எனக் கருதினாரோ என்னவோ, அவரை வழியிலேயே தடுத்து நிறுத்தி, இந்தப் பூதவுடலுடன் கயிலை செய்வது சாத்தியமில்லை என்று சொன்னர். அதற்கு அப்பர் "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்" என மறுத்தார். அதற்கு ஒரு முனிவர் வடிவம் தாங்கி வந்திருந்த சிவபெருமான் அப்பரிடம் ஆங்கிருந்த ஒரு பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் காண்பாயாக!" எனப் பணித்தார். அவ்வண்ணமே பொய்கையில் மூழ்கிய அப்பர், திருவையாற்றில் ஒரு நீர்நிலையில் எழுந்திருக்க அங்கே சிவன் பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி கயிலை காட்சி அருளினார். ஆடி அமாவாசை தினத்தில் இங்கு நடைபெறும் கயிலைக் காட்சித் திருவிழா மிகவும் புகழுடையதாகும். அதனால்தான் திருவையாற்றைத் தென் கயிலாயம் என அழைக்கின்றனர். 

சப்தஸ்தானத் தலங்கள் என வழங்கப்படும் ஏழூர்களாவன; திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதியகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துறுத்தி, திருநெய்த்தானம் ஆகியவை அவை. இவற்றில் முதல் தலமான இவ்வூரில் சித்திரை மாதம் பெளர்ணமி விசாகத்தில் "ஸப்த ஸ்தானப் பெருவிழா" நடைபெறுகிறது. இவ்வேழூர் இறைவனும் அம்மையப்பராகக் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருளி அருள்புரியும் காட்சியை ஆயிரக்கணக்கானோர் ஒவ்வோராண்டும் கண்டு களிக்கின்றனர். இவ்வூருக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. அது, "அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே" என்கிற திருமுறை வாக்கின்படி இங்கு அம்பிகை தர்மசம்வர்த்தினி அரியின் அம்சமாகக் கருதப்படுதலால் இங்கு திருமாலுக்கென்று தனி ஆலயம் எதுவும் இல்லை.

தக்ஷிணாமூர்த்தி தனது பதினெண் பேதவுருவங்களில் இங்கு ஸ்ரீஹரிகுரு சிவயோக தக்ஷிணாமூர்த்தி வடிவில் காட்சியளிக்கிறார். எப்போதும் வேலேந்திய கரத்தோடு காணப்படும் முருகன் இங்கு வில்லேந்திய முருகனாகக் காட்சி தருகிறார். இவ்வாலயத்திலுள்ள செபேச மண்டபம் காசிக்கு நிகராகக் கருதப்படுகிறது. இங்கு அமர்ந்து பஞ்சாக்ஷரம் ஜெபம் செய்வோருக்கு நல்வினைப் பயன்கள் கிடைக்குமென்பது உறுதி.

இவ்வாலயத்தின் மூலத்தானம் அமைந்திருக்கும் ஐயாறப்பர் சந்நிதி அகப்பேய்சித்தர் சித்தம் கொண்டு ஸ்தாபித்ததாகத் தலவரலாறு கூறுகிறது. மூலத்தான விமானத்தின் மேல் பகுதியில் காணப்படும் பல்வகைச் சித்தர்களின் திருவுருவங்கள் இதற்குச் சான்று பகர்கின்றனர். இது தவிர ராஜராஜ சோழனின் பத்தினியான ஓலோக மாதேவியாலும், ராஜேந்திர சோழனின் பத்தினியான பஞ்சவன்மா தேவியாலும் இங்கு வட கைலாயம், தென் கைலாயம் என இரு ஆலயங்களை நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றன.

சுமார் பதினைந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவ்வாலயம் 70க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களைக் கொண்டிருக்கிறது. பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் காலங்களில் இவை வெட்டப்பட்டவை. மூலத்தானம் பல்லவர்களாலும், மூன்றாம் திருச்சுற்று விக்கிரம சோழனாலும் எழுப்பபெற்றமை தெரிகிறது. மேலை கோபுரம், முதல் சுற்று, நடை, திருமாளிகை பத்தி, சூரிய புஷ்கரணி, தென்கோபுரம் ஆகியவை பின்னாளில் அறம் காக்கும் மரபுடையோரால் கட்டப்பட்டவை.

முதல் இராஜராஜ சோழன் காலத்தில் இத்தலத்துக்கு "பொய்கை நாட்டுத் திருவையாறு" எனப் பெயர் வழங்கியது. இப்போது நினைத்தால் அதிசயிக்க வகையில் அந்நாளில் நிர்வாகத் துறையில் இவ்வாலய நிர்வாகப் பொறுப்பில் இருந்த பெண் அதிகாரியை "அதிகாரிச்சி" எனும் சொல்லால் அழைத்திருக்கின்றனர். அபிஷேகம் செய்யப்பட்ட நீரை அகற்றும் பணி செய்வோரை "நிர்மால்ய நீர் போக்குவான்" என அழைத்தனர். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் கோவிந்த தீக்ஷதர் வழிகாட்டுதலில் இங்கு காவிரிக் கரையில் பல படித்துறைகள் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட படித்துறைகளில் புஷ்யமண்டபப் படித்துறை சிறப்பு வாய்ந்தது. 

திருநாவுக்கரசர் ஐயாறப்பரைப் பாடும்போது "ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே" எனக் குறிப்பிடுகிறார். அப்பரின் இந்த வாக்கியத்தை மெய்ப்பிப்பது போல இவ்வாலயத்தின் மேலைப் பிரகாரத்தில் நின்று குரல் கொடுத்தால் அவ்வொலி ஏழு முறை எதிரொலிக்கும் அதிசயமும் இங்கே இருக்கிறது. கரிகால் சோழனின் தேர் இங்கு அழுந்த அங்கு தவத்திலிருந்த அகப்பேய்சித்தர் உணர்த்தியபடி இவ்வாலயம் எழுப்பப் பட்டதாகத் தல வரலாறு சொல்கிறது. 1937இல் ஒரு முறை இவ்வாலய கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. அதன்பின் 31-3-1971இல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் 41ஆண்டுகள் கழிந்து இப்போது அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நாளது பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. 

இங்கு கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு தர்மசம்வர்த்தினி அம்பாள் சந்நிதிக்கு 1937 தொடங்கி இன்றுவரை கும்பாபிஷேகம் செய்யும் பொறுப்பை தேவகோட்டை உ.ராம.மெ.சுப.சின்ன சேவுகங் செட்டியார் குடும்ப்த்தினர் பொறுப்பேற்றுக்கொண்டு சிறப்பாக செய்து வருகின்றனர். 

இவ்வரிய கும்பாபிஷேக நிகழ்ச்சி நந்தன வருஷம் தை மாதம் 25ஆம் நாளுக்குச் சரியான 2013ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி வியாழன் மூல நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் காலை 8.40க்கு மேல் 10-40க்குள் மீன லக்னத்தில் நடைபெறவிருக்கிறது. அன்பர்கள் எல்லோருக்கும் ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகி அருள் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன். 





No comments: