பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, January 15, 2013

மன அழுத்தம்

                                மன அழுத்தமும் தற்கொலை முயற்சியும்

மன அழுத்தம் ஒவ்வொருத்தருக்கும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ஏற்படும் தற்காலிக மனோநிலை. இந்த மன அழுத்தத்தால் உலகம் முழுவதிலும் அதிகமானோர் துயருறுகிறார்கள். மிக அதிகமான தற்கொலைகள் நிகழ்வதும் இந்த மன அழுத்த நோயினால்தான். ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால், பத்து முதல் 20 பேர் வரை அதற்கான முயற்சியைச் செய்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. அமெரிக்கர்களில் 35 முதல் 49 வயது வரையிலானோர் இறப்புக்கு மூன்றாவது காரணமாக அமைவது தற்கொலை. முதல் இரண்டும் சர்க்கரை நோய், இரண்டாவது விபத்து.

மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? ஏமாற்றம். வாழ்க்கையில் நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம், எதிர்காலம் இருண்டுபோய்விட்டது, எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியவில்லை இதுபோன்ற நம்பிக்கை இழப்பின் காரணமாகவே இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. இவைகள் எல்லாம் மன நல பாதிப்பால் ஏற்படுபவை. மற்றொரு காரணம் உடல் நலம் சம்பந்தப் பட்டது. உடலில் ஊட்ட சக்தி குறைவு, சர்க்கரை நோய், ஒவ்வாமை இவைகள் காரணமாக இருக்கின்றன.

உலகப் புகழ் வாய்ந்த ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ, ஜூடி கார்லாண்ட் இவர்கள் முடிவுதான் நமக்குத் தெரியுமே. போதைப் பொருட்கள் உபயோகிப்போரும், மது அருந்துவோரும் histadelic எனும் இந்த மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். ஹெராயின், மெதாடோன் ஆகியவைகள் விரைவாக பாதிக்கப்பட காரணமாக இருக்கின்றன. தூக்கத்தில் நடக்கும் பழக்கமும் இவர்களுக்கு உண்டாகும். அதற்காக சக்தி மிகுந்த தூக்க மருந்துகளை இவர்கள் உட்கொள்ளத் துவங்குவார்கள். இப்படி உட்கொள்ளும் தூக்க மருந்துகள்கூட இவர்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணக்கூடும். மன அழுத்தம் குறைவதற்கு பதில் இவைகள் அந்த நிலையை அதிகப்படுத்தக் கூடும்.

மன அழுத்த நோய் உள்ளவர்களுக்கு தற்கொலை உணர்வு நிச்சயம் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் மனநோய் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறுவதே சிறந்தது. அப்படிப்பட்ட சிகிச்சை பலனளிப்பதற்கு அக்கறையோடு நடந்துகொள்ளும் சுற்றத்தார் அவசியம் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு எப்போதும் துணையாக ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையை சுற்றியிருக்கும் சுற்றத்தார் ஏற்படுத்த வேண்டும். குடிப் பழக்கமோ, மற்ற போதைப் பழக்கமோ இருந்தால் உடனடியாக விட்டுவிட வேண்டும். இந்த 21ஆம் நூற்றாண்டில் நமது சமூக அமைப்புகளும்கூட இவ்விதமான சூழ்நிலைகளை உருவாக்கிவிடுகின்றன.

சமயத்தின் மீது நம்பிக்கை வைத்து சமயச் சடங்குகள் இவற்றை முறையாக செய்து வந்த காலத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலை அதிகம் ஏற்பட்டதில்லை. மதம் என்றால் எதிரி என்று எண்ணி மதத்தின் பெயரால் செய்யும் நல்ல பல காரியங்களை கைவிட்டது ஒன்று, கூட்டுக் குடும்பமென்று இருந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக, நலிவுற்றபோது தோள் கொடுப்பவர்களாக பெரிய குடும்பம் ஒன்றாக இருந்த போது தன்னம்பிக்கை இருந்த நிலைமை மாறி தனித்து விடப்பட்டுவிட்டோமோ என்கிற பயம் மற்றொன்று இதுபோன்ற நிலைமைக்குத் தள்ளி விட்டுவிடுகிறது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரிய, நல்ல வழிகாட்டக்கூடிய நல்ல நண்பர் ஒருவர் கூட இருப்பது அவசியம். அவருடைய சொற்கள் நம்பிக்கைத் தருவனவாகவும், உற்சாகம் ஊட்டக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும். நண்பர் இல்லாவிட்டாலும் குடும்பத்தார் வேறு எவராகவும் கூட இருக்கலாம். எந்த பிரச்சினையானாலும், இந்த நண்பர் அல்லது உறவினர் இருக்கிறார், நமக்குச் சரியான வழிகாட்டுவார் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்டவருக்கு இருக்க வேண்டும்.

அது தவிர பாதிக்கப்பட்டவர் நம்பிக்கை இழக்கவும், வாழ்க்கையைக் காண பயப்படும்படியாகவும் ஆவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தால், அந்த பயம் எதனிடமிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடித்து அதை ஒதுக்கி விடவும் வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம், அல்லது ஏதாவதொரு செய்தி, டெல்லி கற்பழிப்பு போன்ற செயல்கள் மனத்தில் ஒரு பயத்தை, எதிர்ப்பை, வெறுப்பை உண்டாக்கியிருக்கலாம், இவற்றை உடனடியாக அவர் மனதிலிருந்து நீக்க முயற்சி செய்ய வேண்டும்.

மாறாக, நல்ல ஆக்க பூர்வமான சிந்தனைகள், இறைவழிபாடு, நற்சிந்தனைகளை ஊட்டக்கூடிய ஆன்மிக சொற்பொழிவுகள், இயற்கை வளம் மிகுந்த இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்தல் இவைகளுக்குப் பழக வேண்டும்.

எந்தக் காரணம் கொண்டும் தனிமையில் உட்கார்ந்து கொண்டு சென்றதையும், வருங்காலத்தின் கடுமையையும், இல்லாத கஷ்டங்களை நினைத்துப் புழுங்குதலும்கூடாது. இவை இந்த நோய் மேலும் அதிகரிக்கக் காரணங்களாக அமையும்.

எதிர்மறை எண்ணங்கள் எப்போதும் மனதை மட்டுமல்ல உடலையும் பாதிக்கக்கூடும். எதிலும் நல்லவைகளை, அதன் நற்பயன்களை மட்டும் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.

சமய நூல்கள் சொல்லும் நல்ல பல விஷயங்கள் நமக்குக் கோடிக் கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. மாணிக்கவாசகரின் திருவாசகம், வள்ளலாரின் அருட்பாக்கள், மகாகவி பாரதியின் தன்னம்பிக்கை தரும் பாடல்கள் போன்றவற்றில் மனத்தை ஈடுபடுத்த வேண்டும். மற்ற மதத்தார் அவரவர்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும் மத நூல்கள் அல்லது கதைகளைப் படித்தல் வேண்டும்.

தற்போதைய செய்தித்தாள், தொலைக்காட்சி இவற்றில் எடுத்ததும் இழவுச் செய்திகளைச் சொல்வதும் நல்ல மன நிலையை உருவாக்காது. தினமும் அங்கு கொலை, இங்கு விபத்து, இன்னொரு இடத்தில் கற்பழிப்பு என்று சொல்லிக் கொண்டே இருந்தால் நம்மைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் இவைகள்தான் நடக்கின்றது என்கிற எண்ணம் அவனுடைய எதிர்மறைச் சிந்தனைகளுக்குத் தீனி போட்டு அவனது மன பாரத்தை, மன அழுத்தத்தை அதிகப்படுத்தி விடும். மாறாக "ஜன்னல் கதவுகளைத் திறந்து விடுங்கள், தூய்மையான காற்று உள்ளே வரட்டும்" எனும் கருத்துக்கேற்ப ஆக்க பூர்வமான செய்திகளைக் கேட்கட்டும், படிக்கட்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், எம்.எஸ்.உதயமூர்த்தி போன்றவர்களின் கட்டுரைகளை, பேச்சுக்களைப் படிக்கட்டும்.

இப்படியொரு ஆரோக்கியமான சூழ்நிலையில், நல்ல சிந்தனை, நல்ல சூழ்நிலை, நல்ல நண்பர்கள், நல்ல உறவினர்கள், நம்பிக்கை தரும் செய்திகள், ஆக்கபூர்வமான புத்தகங்கள் இவைகள் எல்லாம் மருந்துகளைக் காட்டிலும் நல்ல மகத்துவத்தைத் தரக்கூடியவை. இவை போதாதென்றால் நல்ல மனநல மருத்துவரை அணுகி அவர் தரும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொண்டு வந்தால் நிச்சயம் இந்த மன அழுத்த நோய் நீங்கும், தற்கொலை எண்ணம் மறையும். அப்படி இருந்து மறைந்த பலர் பின்னர் பல மகோன்னத நிலைமைகளுக்குப் போயிருப்பதை நாம் பட்டியலிடலாம். மன உறுதி தேவை. அதற்கு என்ன செய்ய வேண்டும். மீண்டும் ஒருமுறை இந்தக் கட்டுரையை நன்கு படித்து மனத்தில் ஆழப் பதிந்து கொள்ள வேண்டும். வேறென்ன வேண்டும்?

(P.S. As I myself suffered from this Depression once and came out of it, I can very well say these advises to others.)



2 comments:

Shanti said...

மனஅழுத்தமுடைவர்கள் எந்த தவறையும் செய்வதற்கு சட்டத்திலும், சொந்த பந்தகளிடதிலும் அனுமதி உண்டா ? பொய், பித்தலாட்டம் ,மற்றவர்கள் அனைவரும் புத்தி இல்லாதவர்கள் என்று நினைத்தும் நிறைய அள்ளகைகள்ளை வைத்து நாடகமாடி சொந்த பந்தகளின் அன்றாட அலுவல்களை மறந்து அவர்களையே நினைக்க வைத்து, மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணும் கயவர்கள் தான் மன அழுத்தம் உடையவர்களா ? இவர்களால் பாதிகபடுவோரின் நிலை என்ன? அவர்களுக்கும் மணஅழுத்தம் வருமா? முடிவு தான் என்ன?

Unknown said...

மிகவும் அற்புதமான அவசியமானக் கட்டுரை!

மன அழுத்தத்தால் இருப்பவர்கள் தயவு செய்து அதை மற்றவர்களிடம் காண்பித்து கொள்ள வேண்டும்.
தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலானோர், ஊமைகளாக தனது உள்ளக் குமுறலை வெளியில்கொட்டாதவரகளாக இருப்பார்களோ என்ற சந்தேகமும் வருகிறது!

தங்களின் அடுத்தப் பதிவில் அதற்கு மருந்தாக சுவாமிஜி கூறியவைகள வரிசைப் படுத்தி இருக்கிறீர்கள்!

நான் சிறு வயதிலிருந்தே நினைப்பது உண்டு... நமக்குத் தீமையாக தோன்றும் அனுபவத்தின் உள்ளிருக்கும் நன்மையையும், காரண காரியமும் நமது சிற்றறிவுக்கு எப்படித் தெரியும் எல்லாவற்றிற்கும் மேலாக பேரறிவு ஓன்று இருக்கிறது இந்த உலகில் அதனின் அனுமதி இன்றி எதுவும் நடக்காது என்றால் இதுவும் அவனரியாது நடந்திருக்காது.


எதையும் இறைவன் தான் நடத்துகிறான் என்ற எண்ணம் எப்போதும் நம்மிடம் இருந்தால் நாம் அடைவதும், இழப்பதும் எதுவும் இல்லை என்பது நன்கு விளங்கும்.

பகிர்விற்கு நன்றிகள் ஐயா!