பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, January 25, 2013

(எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! (26-1-2013)

                             "உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்யவரான் நிபோதத"
        (எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! குறிக்கோளை எட்டும்வரை நில்லாது செலுங்கள்!)
                                                                     (26-1-2013)

ஸ்ரீ சுவாமிஜி எழுதியுள்ள மற்றொரு கடிதத்தின் ஒரு பகுதி.

"................... தொடர்ந்து விரிந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. குறுகுவது சாவு. சொந்த சுகங்களையே கவனித்துக் கொண்டு சோம்பேரியாகக் காலம் கழிக்கின்ற சுயநல மனிதனுக்கு நரகத்தில்கூட இடம் கிடையாது. தனக்கு நரகமே வாய்ப்பதானாலும், உயிர்களிடம் கருணை கொண்டு வேலை செய்பவனே ஸ்ரீ இராமகிருஷ்ணரின் புத்திரன்; மற்றவர்கள் அற்பர்கள். அனுகூலமான இந்த வேளையில் வரிந்து கட்டிக் கொண்டு, கிராமம் கிராமமாக, வீடுவீடாகச் சென்று, அவரது உபதேசத்தைப் பரப்புகின்றவனே என் சகோதரன், அவரது பிள்ளை. யாரால் இது முடியவில்லையோ அவர்கள் இங்கிருந்து மறைந்து போகட்டும்.

................. யார் இராமகிருஷ்ணரின் மகனோ அவன் தன்னலத்தை நாடமாட்டான்; ப்ராணாத்யயேsபி பரகல்யாண சிகீர்ஷவ: (உயிரைக் கொடுத்தாவது பிறருக்கு நன்மை செய்ய விரும்புவான்). சொந்த சுகத்தை விரும்பி, சோம்பல் வாழ்க்கையை நாடி, தனக்காக மற்ற அனைவரையும் பலியிடத் தயங்காதவர்கள் நம்மவர்கள் அல்ல; காலம் மிஞ்சிப் போவதற்குள் அவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறட்டும். ஸ்ரீராமகிருஷ்ணரின் குணநலனை, அவரது போதனையை, அவரது நெறியை நாற்புறமும் பரப்புங்கள். இதுவே சாதனை, இதுவே பஜனை, இதுவே மோக்ஷம். எழுந்திருங்கள், எழுந்திருங்கள், பேரலை புரண்டு வருகிறது. முன்னேறிச் செல்லுங்கள், முன்னேறிச் செல்லுங்கள். ஆணும் சரி, பெண்ணும் சரி சண்டாளர்வரை அனைவரும் அவரது நோக்கில் புனிதர்களே. முன்னேறிச் செல்லுங்கள், முன்னேறிச் செல்லுங்கள். பெயருக்கு இது நேரமல்ல, புகழுக்கு இது நேரமல்ல. முக்திக்கு இது நேரமல்ல. பக்திக்கு இது நேரமல்ல. இவற்றையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது, இந்தப் பிறவியில் அவரது மகத்தான குண மேம்பாட்டை, மகத்தான வாழ்க்கையை, மகத்தான சிந்தனைகளைப் பரப்புவோம். செய்ய வேண்டியது இது ஒன்றே, வேறு எதுவும் அல்ல.

எங்கெல்லாம் அவரது திருநாமம் போகிறதோ, அங்கெல்லாம் புழுபூச்சி வரை எல்லாம் தெய்வங்களாகி விடும்; ஏன், ஆகவே செய்கிறது. அதைப் பார்க்கிறீர்களே, பார்க்க வில்லையா? இது என்ன வெறும் குழந்தை விளையாட்டா, பொருளற்ற உளறலா, கேலிப் பேச்சா? உத்திஷ்டத; ஜாக்ரத -- எழுந்திருங்கள், விழித்திருங்கள், அவர் நமக்குப் பின்னால் உள்ளார். இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை. முன்னேறிச் செல்லுங்கள். இதை மட்டும் சொல்லிவிட விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை யார்யார் படிக்கிறார்களோ, அவர்களிடமெல்லாம் எனது சக்தி வரும். நம்பிக்கை வையுங்கள். முன்னேறிச் செல்லுங்கள். ஹரே! ஹரே! (தேவையற்ற) அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு விடுவார்கள். எச்சரிக்கை. அதோ அவர் வருகிறார். அவருக்கு, அவருக்கு அல்ல, அவருடைய குழந்தைகளுக்கு யார்யார் சேவை செய்ய ஆயத்தமாக உள்ளார்களோ, ஏழைகளாக, துன்பப்படுபவர்களாக, பாவிகளாக, உள்ளவர்களுக்கு, புழு பூச்சி வரையிலுள்ள உயிர்களுக்குச் சேவை செய்ய யார்யார் ஆயத்தமாக உள்ளார்களோ அவர்களிடம் அவர் உறைவார். அவர்களின் நாக்கில் கலைமகள் உறைவாள்; அவர்கலின் நெஞ்சில் மகா சக்தியான மகாமாயை வாசம் செய்வாள். நாத்திகர், நம்பிக்கையற்றவர், மனிதர்களுள் தாழ்ந்தவர், இன்ப நுகர்ச்சியில் திளைப்போர் -- இவர்கள் எல்லாம் எதற்காக நமது திருக்கூட்டத்தினுள் வந்து கலந்து கொள்கிறார்கள்? அவர்கள் நம்மை விட்டுப் போய்விடட்டும்.
உங்கள் நரேந்திரன்

No comments: