பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, January 21, 2013

இந்திய வாழ்க்கையில் மதத்தின் இடம் (22-1-2013)


                                     இந்திய வாழ்க்கையில் மதத்தின் இடம் (22-1-2013)

நமது இந்த பெருமைமிக்க நாட்டின் அடித்தளமாகவும், முதுகெலும்பாகவும் உயிர் நிைலையாகவும் இருப்பது மதம், மதம் மட்டுமே. மற்றவர்கள் அரசியலைப் பற்றிப் பேசட்டும், வியாபாரத்தின் மூலம் குவிகின்ற அளவற்ற செல்வத்தின் பெருமையைப் பேசட்டும், பரவி வருகின்ற வாணிப வளத்தைப் பற்றிப் பேசட்டும், சுதந்திரத்தின் சிறப்பினைப் பற்றி பேசட்டும். இவைகளை எல்லாம் இந்துவின் மனம் புரிந்து கொள்ளாது, புரிந்து கொள்ளவும் விரும்பாது. ஆன்மிகம், மதம், இறைவன், ஆன்மா, எல்லையற்ற பரம்பொருள், முக்தி -- இவை பற்றியெல்லாம் பேசிப் பாருங்கள். பிற நாடுகளின் சிறந்த தத்துவ ஆசிரியர்கள் என்று கூறப்படுபவர்களைவிட நம் நாட்டில் உள்ள சாதாரண விவசாயி இவற்றைப் பற்றி அதிகமாக அறிந்திருப்பான். இது உறுதி.........
நாம் இந்த உலகிற்குப் போதிக்க வேண்டியவை சில உள்ளன. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு காலம் கொடுமையிலும் அன்னிய ஆதிக்கத்திலும் அவர்களின் தண்டனைகளுக்கு ஆட்பட்டும் இந்த நாடு அழியாமல் இருப்பதற்குரிய ஒரே காரணம், இந்த உலகத்திற்குப் போதிக்க வேண்டியதை அது பெற்றிருப்பதுதான். இந்த நாடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் அது கடவுளையும், மதம் மற்றும் ஆன்மிகக் கருவூலங்களையும் கைவிடாமல் கைக்கொண்டிருக்கிறது.

நான் கீழை மற்றும் மேலை நாடுகளில் பல்வேறு இன மக்களிடையே பயணம் செய்து, இந்த உலகத்தைக் கொஞ்சம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மகத்தான குறிக்கோள் இருப்பதை நான் கண்டேன். அதுவே அந்த இனத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. இந்தத் தேசியப் பின்னணி சில நாடுகளில் அரசியலாக இருக்கிறது, சில நாடுகளில் சமுதாய கலாச்சாரமாக உள்ளது, மற்றும் சில நாடுகளில் அறிவுக் கலாச்சாரமாக உள்ளது. ஆனால் நமது தாய் நாட்டின், அடிப்படையாகவும், முதுகெலும்பாகவும் அதன் தேசிய வாழ்க்கை முழுவதும் கட்டப்படுவதற்கான உறுதியான அடித்தளப் பாறையாகவும் மதம் மட்டுமே உள்ளது.

ரோமாபுரையைப் பாருங்கள்! ஏகாதிபத்தியமும் நாடு பிடித்தலும் அதன் குறிக்கோளாக இருந்தது. அந்தக் குறிக்கோள் பின்னடைவு ஆனதும், அந்த சாம்ராஜ்யமே சிதறிச் சின்னா பின்னப்பட்டு மறைந்து ஒழிந்தது. கிரேக்கம் நிலைநாட்ட விரும்பிய குறிக்கோள் அறிவு. அந்த அறிவு தாக்கப்பட்ட அளவில் அந்த நாடும் அழிந்தது. இதுபோலவே பிற்காலத்தில் ஸ்பெயின் முதலான நாடுகளும் அழிந்தன. ஒவ்வொரு நாடும் உலகிற்காக ஒரு நோக்கத்தை முன்வைத்தே செயல்பட்டது. அந்த நோக்கம் பாதிக்கப் பெறாத வரையில் அந்த நாடு எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அவற்றைத் தாக்குப் பிடித்து வாழ்ந்தது. நோக்கம் அழிந்தபோது அந்த நாடு வீழ்ச்சியுற்றது.

இந்திய நாட்டின் இத்தகைய ஆதார சக்தி இன்றுவரை பாதிக்கப் படாமல் இருக்கிறது. இந்தியர்களும் அதை விடாமல் பற்றிக் கொண்டுள்ளனர். பல்வேறு மூடக் கொள்கைகளின் நடுவிலேயும் அந்த ஆதார சக்தி வலிமையுடன் விளங்குகிறது. பயங்கரமான மூட நம்பிக்கைகள் அவர்களிடம் காணப்படுகின்றன. அவற்றுள் சில குலை நடுங்கச் செய்பவை. அதனால் என்ன? தேசிய உயிர்துடிப்பு, அதன் நோக்கம், பணி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ..........

இறைவன் - இறைவனை மட்டுமே இந்தியா உடும்புப்பிடியாகப் பற்றிக் கொண்டிருக்கிறது. எனவே நம்பிக்கைக்கு இன்னமும் இடமிருக்கிறது.

ஓர் இந்து, நீரைப் பருகுவதுகூட மத உணர்வுடன்தான்; தூங்குவது மத உணர்வுடன்தான், நடப்பது மத உணர்வுடன்தான்; திருமணம் செய்வதும் மத உணர்வுடன்தான், திருடுவதானால் கூட மத உணர்வுடன்தான்............ இதிலிருந்து அந்த இனத்தின் உயிர்நாடி எதுவென்று தெரிகிறது அல்லவா? அந்த இனத்தின் குறிக்கோள் மதம் தான். இதுவரை அந்தக் குறிக்கோளை யாரும் தாக்காததால், அந்த இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

வாழ்க்கையின் மற்ற பிரச்சினைகள் எல்லாம் அந்தக் குறிக்கோளுக்கு அடுத்த படியிலேயே வைக்கப்பட வேண்டும். சங்கீதத்தில் தாள லயங்களின் இடத்தைப் போன்றதே அது. அரசியலையே நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு நாடு இருக்கலாம். அங்கே மதம் முதலான மற்றவையெல்லாம் அந்த இலட்சியத்துக்கு அடுத்தபடியாகத்தான் அமைய வேண்டும். ஆனால் இந்திய நாட்டின் மகத்தான வாழ்க்கை இலட்சியம் ஆன்மீகமும் தியாகமும்தான். அவர்களுடைய அடிப்படை முழக்கம், 'இந்த உலகமே வெறுமை, மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலைத்திடும் மாயை' என்பதுதான். 

No comments: