பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, January 18, 2013

சுவாமிஜியின் பொன்மொழிகள் (19-1-2013)

                                     சுவாமிஜியின் பொன்மொழிகள் (19-1-2013)

தொடர்ச்சி......

1. நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுகின்றவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உழல்பவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்கு கல்வி அறிவைப் புகட்டு. இந்த வழிகளில் நீ உன் சகோதரர்களாகிய மக்களுக்குத் தொண்டு செய்யத் தொடங்குவாயானால், நிச்சயம் உனக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கும்.

2. அந்த நாட்களில் நிலவிய தொண்டு மனப்பான்மை, கீழ்ப்படிதல், தன்னடக்கம் ஆகிய வீரனுக்குரிய பண்புகள் இன்று எங்கே போய்விட்டன? போருக்குச் செல்லும் வீரன் தன்னைத் தியாகம் செய்கிறானே அன்றி, தனது சொந்த நலனைக் கருதுவதில்லை. ஒருவன் பிறருடைய இதயங்களின் மீதும் வாழ்க்கையின் மீதும் அன்பு செலுத்த வேண்டுமானால் முதலில் கட்டளைக்கு உட்பட்டு முன்னேறிச் சென்று தன் உயிரையும் தர தயாராக இருத்தல் வேண்டும்.

3. கடவுளிடம் நம்பிக்கை வைத்திடுங்கள்; திட்டங்கள் எவையும் தேவையில்லை. அவற்றால் ஆகப்போவதும் எதுவும் இல்லை. துன்பத்தால் வாடுபவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள்; பிறகு உதவிக்காகக் கடவுளை நோக்குங்கள். உங்களுக்குத் தேவைப்படும் உதவி நிச்சயம் கிடைத்தே தீரும்.

4. இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை. வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக உன்னை உருவாக்கிக் கொள். முதலில் உலக மக்களின் துன்பங்களைக் குறித்து நீ வருந்து. வெறுப்புணர்ச்சியாலோ, பொறாமையாலோ, உன்னுடைய மனம் அலைக்கழிக்கப்படாமல் இருக்கிறதா என்று உன்னையே நீ கேட்டுக்கொள். நீ தூய்மை உள்ளவனாக இருந்தால் வலிமை உள்ளவனாக இருந்தால், நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாக ஆவாய்.

5. சுயநலமற்ற தன்மையே கடவுள். ஒருவன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து தங்கத்தாலான அரண்மனையில் வாழ்ந்த போதும் அறவே சுயநலம் இல்லாதவனாக இருக்கலாம். அப்போது அவன் கடவுளிடமே இருக்கிறான். மற்றொருவன் குடிசையில் வாழ்ந்து கந்தைத் துணியை உடுத்துபவனாக இருக்கலாம். அவனுக்கு உலகில் செல்வம் எதுவும் இல்லாமலிருக்கலாம். அப்படியிருந்தும் அவன் சுயநலம் உடையவனாக இருந்தால் அவன் லெளகீகத்தில் ஒரேயடியாக மூழ்கியவனே யாவான்.

6. இந்தியா அழிந்து விடுமா? அது அப்படி அழியுமானால், உலகிலிருந்து அனைத்து ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும். சமயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும். எல்லா உயர்ந்த லட்சியங்களும் மறைந்து போய்விடும். அவை இருந்த இடத்திலே காமமும், ஆடம்பரமும், ஆண் தெய்வமாகவும் பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்கு பூசாரியாக உட்கார்ந்து கொள்ளும்; வஞ்சகம், பலாத்காரம், போட்டி ஆகியவற்றையே அது தன்னுடைய பூசைக்கிரியை முறைகளாக வைத்துக் கொள்ளும். மனித ஆன்மாவையே அது பலி பீடத்தில் பலியாக்கி விடும். ஆனால்............ அப்படிப்பட்ட நிகழ்ச்சி என்றும் ஒருநாளும் நடக்கப் போவதில்லை.

7. உயர்ந்த பண்பு, ஒழுக்கம், ஆன்மிகம் ஆகிய எல்லாச் சிறந்த பெருமைகளுக்கும் பிறப்பளித்தவள் நமது இந்தியத் தாய். முனிவர்கள் பலர் வாழ்ந்த நாடு இந்த நாடு. கடவுளுக்குச் சமமான மகான்கள் இன்னமும் இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இந்தியாவா அழிந்து போய்விடும்? இல்லை.

8. மற்ற நாடுகளோடு முன்னேற்றத்தில் இந்தியாவின் முன்னேற்றம் ஒளி மங்கிக் காணப்படுவதற்கான காரணத்தை நீ சொல்ல முடியுமா? அவள் அறிவாற்றலில் குறைந்தவளா? அல்லது திறமையில் குறைந்தவளா/ அவளுடைய கலை, கணித அறிவு, தத்துவங்கள் ஆகியவற்றைப் பார். அவள் தன்னுடைய மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். இந்தியாவை இந்தப் பாதையிலே ஈடுபடுத்துங்கள், மற்றவை தாமாக வந்து சேரும்.

9. ஓர் அரக்கி தன்னுடைய உயிரை ஒரு சிறிய பறவையில் வைத்திருந்தாள், அந்தப் பறவை கொல்லப்பட்டாலன்றி தன்னை ஒருவராலுமே கொல்ல முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த அரக்கியின் கதையை நாம் குழந்தைகளாக இருந்தபோதிலிருந்து கேட்டிருக்கிறோம். ஒரு நாட்டின் வாழ்க்கையும், அதைப் போன்றதே ஆகும். நமது இந்த நாட்டின் உயிர்நாடி எங்கே இருக்கிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். அது "மதத்தில்"தான் இருக்கிறது. அதை ஒருவராலும் அழித்து விடமுடியாது.

10. ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல். என் அருமைக் குழந்தைகளே! முன்னேறிச் செல்லுங்கள். பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. எனது வீரக் குழந்தைகளே! நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கைக் கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்து நின்று பணியாற்றுங்கள்.

11. மிருக பலத்தால் அல்லாமல், ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப் போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக, அமைதி, அன்பு ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும்.

12. கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழுச்சி பெறட்டும். மீனவர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள் ஆகியோரின் குடிசைகளிலிருந்து புதிய இந்திய எழுச்சி பெறட்டும். பலசரக்குக் கடைகள், பலகாரக் கடைகளிலிருந்து அவள் தோன்றட்டும். தொழிற்சாலைகள், கடைவீதிகள், சந்தைகள் ஆகியவற்றிலிருந்தெல்லாம் புதிய இந்தியா எழுந்து நிற்கட்டும்.

13. செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகள் மிகவும் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவற்றை நிறைவேற்றி முடிப்பதற்கான வசதிக்ளோ இந்த நாட்டில் இல்லை. நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் பணி புரிவதற்கான கைகள்தாம் இல்லை. நம்மிடம் வேதாந்தக் கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய ஆற்றல் இல்லை.

14. எனது சகோதரர்களே! நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்திய நமது உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது. எழுமின்! எழுமின்! இந்த நமது தாயகத்து தேவி, தனது அழிவற்ற அரியணையின் மீது புத்திளமை பெற்றவளாக, முன்பு எப்போதையும்விட மகிமை கொண்டவளாக அமர்ந்திருப்பதைக் காணுங்கள்.

15. உங்களுடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுங்கள். நமக்குத் தேவை இரும்பைப் போன்ற தசைகளும், எஃகைப் போன்ற நரம்புகளுமே. காலமெல்லாம் அழுதது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள். இளைய தலைமுறையினரிடம்தான் என் நம்பிக்கை இருக்கிறது. ஓ! மாபெரும் வீரர்களே! கண்விழித்து எழுந்திருங்கள்! இனி உறக்கம் உங்களுக்குப் பொருந்தாது. விழித்தெழுங்கள்! எல்லாம் வல்ல ஆற்றல் படைத்தவர்கள் நீங்கள்! என் அறிவுரைகளால் நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள். உலகம் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளும்.

--ooOoo-

No comments: