பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, January 16, 2013

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி (17-1-2013)

                              தூய்மை, பொறுமை, விடாமுயற்சி (17-1-2013)

சுவாமிஜியின் உரைகளில் காணப்படும் மேலும் சில பொன்வரிகளை இப்போது பார்க்கலாம்.

1. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும் அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். தன்னுடைய சொந்த வசதிகளை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்திலும்கூட இடம் கிடைக்காது.

2. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்ப வந்து சேர்ந்துவிடும். வேறு எந்த சக்தியாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு முறை நீ அவற்றை இயங்கச் செய்துவிட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நினைவில் வைத்துக் கொண்டால் தீய செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத் தடுத்து நிறுத்தும்.

3. மனிதந்தானே பணத்தை உண்டு பண்ணுகிறான்? பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா? நீ உன்னுடைய எண்ணங்களையும் சொற்களையும் முற்றிலும் ஒன்றாக இருக்கும்படிச் செய்தால், அதைச் செய்ய உன்னால் இயலுமானால், பணம் தண்ணீரைப் போலத் தானாக உனது காலடியில் வந்து கொட்டும்.

4. இந்தப் பிரபஞ்சத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதைதான் மிகவும் கரடுமுரடாகவும் செங்குத்தாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் இத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கிறார்களே என்பதுதான் வியப்புக்கு உரிய விஷயம். பல பேர் தோல்வி அடைந்து விழுந்துவிட்டதில் ஆச்சரியமே இல்லை. ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்.

5. ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு, பிறகு கடைசியில் ஏற்றுக்கொள்ளப்படுதல். தனது காலத்தை விட்டு முற்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவான். எனவே எதிர்ப்பும் அடக்குமுறையும் வரவேற்கத் தக்கவையே. ஆனால் நாம் மட்டும் உறுதியாகவும், தூய்மையாகவும், கடவுளிடம் அளவு கடந்த நம்பிக்கை உடையவனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த இடையூறுகள் எல்லாம் மறைந்து போய்விடும்.

6. பாமரனை வாழ்க்கைப் போராட்டத்துக்குத் தகுதியுடையவனாக இருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான நல்லொழுக்கத்தையும், பிறருக்கு உதவக்கூடிய ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மனவுறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி -- அதைக் கல்வி எனச் சொல்வது பொறுத்தமுடையதா? எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வி.

7. வாழ்க்கையை நன்கு உருவாக்ககூடிய, மனிதனை மனிதனாக்கக்கூடிய, நல்லொழுக்கத்தை வளர்க்கக்கூடிய கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துகளைக் கிரகித்துக் கொண்டு, அவற்றை உன்னுடைய வாழ்க்கையிலும், நடத்தையிலும் பற்றி நிற்கச் செய்தால், ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாஅம் செய்திருப்பவனைவிட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.

8. ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை. பண்டைக் காலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மச்சரிய முறை இந்த நாளில் மறைந்து போய்விட்டதுதான் இதற்குக் காரணம். முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். பிறகு கட்டளையிடும் நிலைமை உனக்குத் தானாக வந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். அதன் பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்.

9. கல்வி, உண்மையான கல்வி, அது ஒன்றே இப்போதைய நமது தேவை. ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு நான் பயணம் செய்திருக்கிறேன். அங்கே சாதாரண ஏழை எளிய மக்களுக்குக் கூட கிடைத்திருக்கும் வாழ்க்கை வசதிகளையும், கல்வியையும் நான் கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நம் நாட்டு ஏழை எளிய மக்களின் பரிதாப நிலையை எண்ணி நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறுபாட்டிற்கு என்ன காரணம்? கல்வி என்பதுதான் எனக்குக் கிடைத்த விடை.

10. நமது தேசிய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அது, எதையெடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தையில்லாமல் இருப்பது. இந்த நோயை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள். மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும்.

11. எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ, அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.

12. மேலை நாட்டு அறிவியலோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மச்சரியமும் வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தெவைப் படுகின்றன. எல்லாவிதமான அறிவும் மனிதனுக்கு உள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் சொல்லுகிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியருடைய பணியாகும்.

13. மதம்தான் எல்லாவற்றுக்கும் உயிர்நாடி. சமய வாழ்க்கை சோறு போன்றது. மற்றவை எல்லாமே கறி, கூட்டு போன்றவை. கறி, கூட்டு வகைகளை மட்டும் உண்பதனால் உணவு உண்தகாக ஆகுமா? அப்படியே சோற்றை மட்டுமே சாப்பிடவும் கூடாது. இவற்றை ஒருசேற உண்பதே உணவு.

14. கற்பு நிலையிலிருந்து வழுவுவதுதான் ஒரு நாட்டின் அழிவிற்கு முதல் அறிகுறி என்பதை வரலாற்றில் நீ பார்க்கவில்லையா? கற்புத் தவறுதல் என்ற கேடு சமுதாயத்தில் நுழையும்பொழுது அந்த இனத்திற்கு முடிவுகாலம் நெருங்குவது தெளிவாகி விடுகிறது.

15. ஒரு கொள்கையை எடுத்துக் கொள். அதற்காகவே உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் நிச்சயம் வரும்.

1 comment:

Unknown said...

முதலில் நன்றியோடு (இறைவனாக இருந்த யாவருக்கும்) ஒழுக்கம்,
உயரிய சிந்தனை, உழைப்பில் உறுதிப் பாடு
இடைவிடாத முயற்சி, லட்சியத்தை அடைந்த தீருவேன் என்ற நம்பிக்கை
என்று எத்தனை யாகப் பொருட்களை உள்ளமென்னும் தீயில் இட்டுக் கொளுத்தி
வேள்வியை நடத்தச் சொல்கிறார் சுவாமிஜி!

அருமை!