பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, October 1, 2012

அண்ணலே எங்கள் ஆருயிரே!

2-10-2012

இன்று காந்தி ஜயந்தி. மகாத்மா பிறந்த நாளான இன்று, கடந்த ஒரு வார காலமாக எழுதிவந்த மகாத்மா பற்றிய கட்டுரை  திரு ஆலாசியம் எழுதிய கவிதையுடன் நிறைவு பெறுகிறது.

அண்ணலே எங்கள் ஆருயிரே!
ஆன்மீகச் செம்மலே அனைத்துயிரும் 
இன்பம் பெறவேண்டிய; உமக்கு 
ஈடிணையில்லை, கருணைப் பெருங்கடலே! 
உண்மையான வாழ்வதை வாழ்ந்து 
ஊருக்கு உழைத்த உத்தமரே!

எளிமையின் சிகரமான நீவீரே! 
ஏழைகளின் வாழ்விற்கு ஒளிவிளக்கே! 
ஐம்புலனும் அடக்கி அண்டம்படைத்த 
ஒப்பில்லானை ஒருபோதும் மறவாது
ஓதியுணர்வாயுனை அதுவே மனிதவாழ்வின் 
ஒளடதமான உண்மை பேறு
அஃதே உயிரின் லட்சியமென்றும்...

கல்லாமை, களவு கொல்லாமை
கடுஞ்சொல் சொல்லாமை 
பொல்லாத மது கொள்ளாமை 
பொய்யரை புண்பட வையாமை
புலையரோடு போல்லாதவரையும் 
போருக்கு வரும் மூர்க்கரையும் வெஃகாமை...

தீண்டாமை வேண்டாமே அத்தீதுறு
தீயினும் கொடியதே அதை 
தெய்வமும் மன்னிக்காது அதனாலே
அரியின் புதல்வர்கள் அவரே 
நமது சகோதரர்கள் என்றெண்ணி
சரிநிகர் சமானமாய் வாழ்வதே
சரியான வாழும்முறை யென்றே
வாழும் யாவருக்கும் பறைசாற்றி 
வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தீரே!

எதிரி என்பதேது அஹிம்சைக்கு
இரங்கா இதயமது ஏது?
உண்மை ஒருபோதும் சாகாது அதனாலே 
உண்மைக்காக உண்மையாய் உறுதியோடு 
உழைப்பீரே என்றே உலகம் 
உய்ய உயர்வழி கூரிய
உத்தமரே உமது உன்னத 
கொள்கையை உலகம் மறந்திடுமோ?
இனியும் அணுவாயுதம் வேண்டிடுமோ?

எறும்புக்கும் இரங்கிய ஏந்தலே!
உந்தன் இதயம் துளைத்த 
அந்த குண்டும் அல்லவா 
கதறி அழுது இருக்கும்...
ஆட்டுக்கு பரிந்துப்பேசிய ஐயரே!
ஐயகோ உம்மையும் காவுகொடுக்க
எத்தனைக் கொடிய மனமிருக்கணும்?

மகாத்மாவே உம்மைத் தாங்கிய
அந்த உடலிலிருந்து சிதறிய 
ஒவ்வொரு துளி குருதியும் 
ஒவ்வொரு மகாத்மாவாக இப்புவியில்
அவதரிக்காதோ என்ற நம்பிக்கையிலே 
உமது பிறந்தநாளை இங்கே
உலக அகிம்சை தினமாக
கொண்டாடும் எங்களை ஆசீர்வதிப்பீர்! 

இந்த அண்டம் உள்ளவரை 
அண்ணலே உமது நினைவும்
அவதார நோக்கமான அஹிம்சையும்
எங்கும் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும்.

ஆலாசியம்

No comments: