பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, April 11, 2012

வேற்று கிரகத்து மனிதர்களின் வருகை


வேற்று கிரகத்து மனிதர்களின் வருகை

"தினமணி" 12-4-2012 வியாழக்கிழமை இதழில் "ஒடிசா வந்தனர் வேற்று கிரக மனிதர்கள்!" என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதில் 'மறக்கப்பட்ட 1947 மே 31 சம்பவம்' என்று குறிப்பிட்டு கொல்கத்தாவிலிருந்து இந்த கட்டுரை வெளியாகியிருக்கிறது. ஆர்வத்தைத் தூண்டக்கூடிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள். நன்றி: "தினமணி".

கொல்கத்தா, ஏப் 11: 

வேற்று கிரகங்களில் மனிதர்கள் வசிக்கின்றனர், நம்மைவிட நாகரிகமும் அறிவியல் முன்னேற்றமும் உள்ள அவர்கள் ஓசையே இல்லாத வான ஊர்திகளில் வந்து பூமியில் இறங்கி சுற்றிப் பார்த்துவிட்ட்ச் செல்கின்றனர் என்றெல்லாம் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் அடிக்கடி பேசியும் எழுதியும் வருகின்றனர். 

ஆனால் திட்டவட்டமான நிரூபணங்கள் இல்லாததால் இவற்றையெல்லாம் கற்பனை என்றோ, கனவுகளின் வெளிப்பாடு என்றோ இதுவரை கூறி வருகிறார்கள்.

அதே வேளையில் இது சாத்தியம் இல்லை என்று எவராலும் கூற முடிவதில்லை. இந்தியாவைப் பிற நாடுகள் பார்த்த பார்வையைவிட இந்தியர்களான நம்முடைய பார்வையே அவநம்பிக்கையுடனும் அவமதிப்புடனும் இன்னமும் தொடர்வதால் இங்குள்ளவர்களின் கூற்று எதுவும் நம்பப்படுவதில்லை. 

அப்படித்தான் நாடு சுதந்திர அடைவதற்கு முன்னால் ஒடிசா (அப்போது ஒரிஸ்ஸா) மாநிலத்துக்குச் சில வேற்றுக்கிரக மனிதர்கள் வந்ததும் அங்கிருந்த ஒடிசா வாசிகளைத் தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சுற்றிக் காண்பித்ததும் நம்பப்படாததுடன் இகழ்ச்சியாகப் பேசப்பட்டது.

ஆனால் கிராமப்புறக்கலைஞர் ஒருவர் அதை பனையோலைச் சுவடியில் சித்திரமாகவே பதிவு செய்து குறிப்புகளும் எழுதியிருக்கிறார். நல்ல வேளையாக அது இன்னமும் அழிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது.

வேற்று கிரக வாசிகள்:

ஒடிசா மாநிலத்தின் நயாகர் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதியில் வேற்று கிரகவாசிகள் தங்களுடைய விசித்திரமான விண்கலத்துடன் 1947-ம் ஆண்டு மே 31ஆம் தேதி வந்து இறங்கினர். தீரமிக்க 2 இளைஞர்கள் அஞ்சி ஓடாமல் அந்த விண்கலத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளே இருந்தவர்கள் அந்த இரு இளைஞர்களையும் அழைத்து தங்களுடைய விண்கலத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். அவர்களையும் ஏற்றிக்கொண்டு விண்ணில் ஒரு சுற்று சுற்றி வந்தனர், பிறகு அவர்களை அந்த இடத்திலேஏ இறக்கிவிட்டுப் போய்விட்டனர்.

அவ்விரு இளைஞர்களும் அதை அக்கிராம வாசிகளிடம் தெரிவித்தனர். அதை யாரும் நம்பவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் 'பட்ட சித்திரக்காரர்' என்று அழைக்கப்படும் ஓவியரிடம் தங்கள் அனுபவத்தை அப்படியே விவரித்தனர். அவர் அதை அப்படியே கேட்டு ஓலைச்சுவடியில் சித்திரமாக வரைந்து வைத்துள்ளார்.

அந்தச் செய்தி பத்திரிகைகளில் வரவில்லை. ஆனால் ஒசியா வார இதழ் ஒன்று ஜுன் 15-ம் தேதி அச்செய்தியை ஒற்றைப் பத்திச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதுவும் எப்படி என்றால், கிராமவாசிகளின் அதீத கற்பனை என்ற காட்டமான விமர்சனத்தோடு.

இந்தச் செய்தி உண்மையாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையே இல்லாமல் அச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

எந்திர புருஷர்கள்:

கிராமவாசிகள் கூறக் கேட்டவர் வரைந்த சித்திரத்தில் வேற்றுக் கிரக மனிதர்கள் எந்திர புருஷர்களாக வரையப் பட்டுள்ளனர். அவர்களுடைய தலையில் அரைவட்ட வடிவில் சாதனங்கள் இருக்கின்றன. விண்வெளி வீரர்கள் அணிவதைப் போன்ற ஆடையையே அவர்கள் அணிந்துள்ளனர். கைகள் கூரான கத்தியைப் போல இருந்தன. ஆனால் அவர்கள் கையை உயர்த்தியிருந்த விதம் வாழ்த்து கூறுவது போலவே, ஆசிர்வதிப்பது போலவோ இருந்தது.

சிலருடைய கைகள் வட்ட வடிவில் பந்து போல உருண்டு இருந்தது. சிலருடைய கைகளில் 5 விரல்கள் இருந்தன.

இந்த விண்கலத்தையும் விண்வெளி மனிதர்களையும் பார்த்தவர்கள் சமீபத்தில்தான் இறந்தனர். ஆனால் அவர்கள் உயிரோடு இருந்த வரையில் அவர்கள் கூறுவதைப் பொறுமையோடு கேட்டு பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்கெல்லாம் அமெரிக்காவின் நியு மெக்சிகோ மாநிலத்தில் ரோஸ்வெல் என்ற இடத்தில் வேற்று கிரக மனிதர்கலின் கலம் ஒன்று பூமியில் வேகமாக வந்து மோதி சிதறியதாகப் பதிவாகியிருக்கிறது.

இப்போதும்கூட இதை நம்புகிறார்களோ இல்லையோ இதையும் வியாபார தந்திரத்தோடு சில நினைவுப் பொருள்களைத் தயாரித்து புரியில் விற்றுக் கொண்டிருக்கின்றனர்.

விண்வெளியியல் விஞ்ஞானிகள் அவ்விருவரைக் கேட்டு பதிவு செய்திருந்தால் வேற்று கிரகவாசிகள் பூமியில் உள்ளவர்களுடன் நேருக்கு நேர் "முதலில் சந்தித்த" வரலாற்று உண்மை வெளிவந்திருக்கக் கூடும்.

2 comments:

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
மிகவும் வித்தியாசமான தகவலை தந்துள்ளீர்கள் ஐயா...வேற்று கிரகவாசிகள் உண்மையில் இல்லை என்றே நான் ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன்...பின்னர் சில தகவல்களை படித்த பின்பு எனக்கும் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது...மெக்சிகோவில் உள்ள சில புராதண கட்டிடங்களையும் கட்டிக் கொடுத்தது வேற்றுகிரகவாசிகள் தான் என்றும் அதற்கு பதிலாக அந்நாட்டு மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "விமானம் தளம்" அமைத்துக் கொடுத்தனர் என்றும் படித்தேன்...

தங்களுக்கும் வேற்றுகிரக மனிதர்கள் குறித்த‌ உண்மை என்ற நம்பிக்கை உள்ளதா?இது குறித்து தங்களுடைய கருத்தையும் அறிய விரும்புகின்றேன்...நன்றி ஐயா...

thanusu said...

வேற்று கிரகத்து மனிதர்களின் வருகை , நல்லதொரு பகிர்வு.அத்துடன் அதுக்காக இணைக்கப்பட்ட படங்களும் நல்லதொரு தெரிவு.

நல்லதொரு ஆக்கம் நன்றிகள் அய்யா.