பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, February 27, 2012

"இனியவை நாற்பது" (22)

22. இனிமை இருபத்தியிரண்டு.

மும்பையில் சிறுவயதிலேயே சென்று ஒரு வேலையைத் தேடிக் கொண்டு திரும்ப தமிழ்நாட்டுக்குத் தன் சொந்த ஊருக்குத் திரும்பியவர் அவர். மும்பை போவதற்கு முன்பு மிக மிக சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். நல்ல வேலையில் சேர்ந்து நன்றாக சம்பாதிக்கும் அவருக்கு நான், நீ என்று பெண் கொடுக்க உறவினர்கள் முன்வந்தனர். திருமணமாகி குழந்தைகளைப் பெற்று மிகவும் கெளரவமான நிலையில் வாழ்ந்து வந்தார் அவர். அவர் வேலை பார்த்த அலுவலகத்தில் ஏனைய ஊழியர்கள் அனேகம் பேர் இவரைக் காட்டிலும் வயதில் இளையவர்கள். அவர்கள் எல்லாம் இவரிடம் மிகவும் அன்பு பாராட்டுவார்கள். அவருடைய இளகிய குணத்தையும், அன்பையும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு அங்கு வேலை பார்த்த சில கடைநிலை ஊழியர்கள், தாங்கள் சீட்டாடவும் பணம் வேண்டுமென்பதற்காக பொய் சொல்லி, மருத்துவச் செலவுக்கு என்றும், சாப்பாட்டுச் செலவுக்கு என்றும் இவரிடம் பணம் கேட்பார்கள். இவரும் அவர்களுடைய பொய்யை நிஜம் என்று நம்பி தன் சக்திக்கு மேல் கடன் கொடுத்து விடுவார். கொடுத்ததைக் கேட்பது, கண்டிப்பாக இருப்பது என்பது இவரிடம் கிடையாது. அதன் பலனாக இவருக்கு வருவாய்க்கு மேல் கடன் ஏற்பட்டு கூட்டுறவு சங்கத்தில் கடன்பட்டு கஷ்டப்பட்டார். அப்போது அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சில நண்பர்கள் அவருக்கு தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும். பொய் சொல்லி பணம் பறிக்கும் சூதாடிகளுக்கும், குடிகாரர்களுக்கும் உதவி செய்வது நல்லதல்ல என்பதை எடுத்துரைத்தனர். அப்போதுதான் அவரும் புரிந்து கொண்டார் வருவாய்க்கு ஏற்பதான் வழங்க வேண்டும் என்பதை. அதுவே இனிமை என்பதும் புரிந்தது.

இவர் பணிபுரிந்து அலுவலகத்தில் இரு வேறு தொழிற்சங்கங்கள் இருந்தன. இவருக்கு தொழிற்சங்கத்தின் மீது அபிமானம் உண்டு. ஆனால் அரசியல் கட்சிகளின் அங்கமாக அவை இயங்குவதை அவர் ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே இவர் ஒரு சங்கத்தில் பட்டும் படாமலும் இருந்து வந்தார். அந்தச் சங்கம் ஒரு கட்சியாகவே நடத்தப்பட்டு வந்தது. அதில் உறுப்பினர் இல்லாதவர்களை ஒதுக்கி வைத்தார்கள். இடையூறுகளைக் கொடுத்தார்கள். அவர்களைப் பற்றி அவதூறு பரப்பினார்கள். இதையெல்லாம் கவனித்த நமது நண்பர் எந்த சங்கத்திலும் தீவிரமாக ஈடுபடாமல் ஒப்புக்கு இரு பக்கத்தினரும் சமாதானம் அடையும் வகையில் மிக சாமர்த்தியமாக ஒருதலை பட்சமாக எவர் பக்கமும் சாயாமல் இருந்து விட்டார். அவர்கள் இருவராலும் இவருக்கு எந்த பயனும் இல்லையென்றாலும் இவருக்குத் தொல்லை இல்லாமல் இருதந்தே இனிமையான அனுபவம் தானே.

மற்றவர்களைப் போல இவரும் ஆடம்பரமாகவும், வசதிகளைப் பெருக்கிக் கொண்டும் சுயநலத்தோடு வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவருடைய பிறவி குணம் அவரை அப்படி இருக்க விடவில்லை. தான் விரும்பியதையெல்லாம் அடைய வேண்டும் என்கிற வெறி அவரிடம் இல்லை. அவருடைய வீட்டிற்குச் சென்றால் ஆடம்பரப் பொருட்கள் எதையும் காணமுடியாது. மனைவின் கழுத்திலும் தாங்கமுடியாத தங்கத்தைக் காண முடியாது. எளிமை, நேர்மை அதுவே இனிமை என்பதை உணர்ந்து வாழ்ந்தவர் அந்த உத்தமர். அப்படியொருவார் வாழ்ந்தார், அது உண்மை.

"வருவாய் அறிந்து வழங்கல் இனிதே
ஒருவர் பாங்காகாத ஊக்கம் இனிதே
பெரு வகைத்தாயினும் பெட்டவை செய்யார்
திரிபின்றி வாழ்தல் இனிது."

இதன் பொருள்: தன்னுடைய வருவாய்க்குத் தகுந்தாற்போல பிறர்க்கு வழங்குவது இனிது; யார் பக்கத்திலும் சாய்ந்து ஒருதலை பட்சமாக நடக்காமல் இருப்பது இனிது; பெரும் பயன் விளைவிப்பதாயினும், தான் விரும்பியபடியெல்லாம் வாழாமல் தன் இயல்புக்கேற்ப எளிமையாக வாழ்தல் இனிது.


No comments: