பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, February 19, 2012

"இனியவை நாற்பது" (15)

15. பதினைந்தாம் இனிமை. 

அந்த இளைஞனுக்குத் திருமணமாகிவிட்டது. அவனுக்கு வாய்த்த மனைவி நல்ல அழகி அதோடு நல்ல குணவதியும் கூட. கணவனிடம் மாறாத அன்பும் பாசமும் வைத்திருந்தாள். ஆனால் அந்த இளைஞன் அவள் அளவுக்கு அவனுடைய மனைவியிடம் உண்மையாக நடந்து கொள்வதாகத் தெரியவில்லை. சற்று சபல புத்தியுள்ளவன். தெருவின் தன் மனைவியோடு நடந்து செல்லும்போதே எதிரில் வரும் அழகியை வெட்கமின்றி வெறித்துப் பார்த்துத் தன் சபலத்தை வெளிக்காட்டும் குணம் படைத்தவன். அவன் மனைவியோ இவன் செயலுக்கு வருந்தினாலும் கடிந்து கொள்வதில்லை. கடிந்து கொண்டால் அவனுக்குத் தன்மீது அன்பு குறைந்து விடுமோ எனும் ஐயப்பாடு. இப்படிப்பட்ட கணவனோடு வெளியில் போவதற்கே அவன் மனைவி ஒரு கட்டத்தில் தயக்கம் காட்ட ஆரம்பித்தாள். என்ன விஷயம் ஏன் இப்படி என்று அவள் தாய் கேட்டபோது அவள் சொன்ன செய்திதான் அதிர்ச்சியளிக்கும்படியாக இருந்தது. ஒரு முறை கடற்கரைக்குக் கூட்டிக் கொண்டு போகச் சொல்லி இவள் வற்புறுத்தியதால் வேண்டா வெறுப்போடு மனைவியை அழைத்துக் கொண்டு இளைஞன் கடற்கரைக்குப் போனான். போய் மணலில் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு சுண்டல் விற்றுக் கொண்டு வந்த சிறுவனிடம் இரு பொட்டணங்கள் சுண்டல் வாங்கிக் கொண்டனர். அந்த நேரம் பார்த்து இவர்களைப் போலவே ஒரு இளம் ஜோடி அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. ஏதோ வெறு திசையில் சற்று இவன் மனைவியின் கவனம் திரும்பியிருந்த நேரத்தில் எதிரில் வந்த ஜோடியில் பெண்ணிடம் இவன் ஏதோ தகாத வார்த்தை சொல்லியிருக்கிறான். உடனே அந்தப் பெண்ணின் கணவன் இவனை அடிக்காத குறையாகத் திட்டித் தீர்த்துவிட்டு, உன் மனைவியை நான் அப்படிப் பேசட்டுமா என்றதும் இவள் அவமானப்பட்டு தலைகுனிந்து வீடு திரும்பும் வரை பேசாமலேயே வந்து விட்டாள். பின்னரும் அவளது உறவு அவனிடம் முன்போல் இல்லாமல் போய்விட்டது. இத்தனைக்கும் காரணம் அந்த இளைஞனின் சபலம். வீண் வம்பு இழுத்து பிறன் மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதுதான் மிச்சம். அப்படி பிறன் மனை நோக்காத ஆண்மை மிக இனிமை அல்லவா? அதனால்தான் வள்ளுவர் பெருமானும் பிறன் மனை நோக்காமைக்கு 'பேராண்மை' என்று பெயர் சூட்டினார் போலும்.

அந்த ஆண்டில் பருவ மழை சரிவர பெய்யவில்லை. மாதந்தோறும் அவ்வப்போது பெய்யும் மழையும் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. எங்கும் பசுமை வற்றி காய்ந்து போய்க் கிடந்தது. ஊரில் விவசாயமும் மழை இல்லாமையால் முடங்கிப் போய் கிடந்தது. அந்த நிலையில் திடீரென்று வானம் கருத்து, இடி மின்னலுடன் பல மணி நேரம் மழை பெய்து பூமி குளிர்ந்து, எங்கும் மழை நீர் ஓடத் தொடங்கினால் அது எத்தனை இனிமை? நீரின்றி வாடும் பயிர்களுக்கு மழை பெய்தால் இனிமைதான் அல்லவா?

ஒரு மன்னனுக்கு யானைப் படை மிகவும் முக்கியமானது, பெருமையுடையதும் கூட என்பதை முன்பு ஒரு பாடலில் பார்த்தோம். அரண்மனையின் யானைக் கொட்டிலில் ஏராளமான யானைகள் கட்டப்பட்டு, அவற்றின் பிளிறல் கேட்டுக் கொண்டிருந்தால் மன்னனுக்கு இனிமைதான். இல்லையா?

இதோ பாடல்:--

"பிறன் மனை பின்னோக்காப் பீடு இனிதாற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
மற மன்னர் தங்கடையுள் மாமலை போல் யானை
மத முழக்கம் கேட்டல் இனிது."

இதன் பொருள்: பிறன் மனை நோக்கா பேராண்மை இனிது; நீர் இன்றி வாடித் துவளும் பயிர்களுக்கு மழை பெய்தால் இனிது; வீரமுள்ள மன்னனுடைய வாயிலில் யானைகளின் முழக்கம் இனிது.

வறன் = வறட்சி.

No comments: