பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, December 9, 2011

சிறுகதை.
லஞ்சமா வேணும்? இந்தா நல்ல பாம்பு!!
எழுதியவர்: கருக்காபட்டி கருப்புச்சாமி

லஞ்சம்னு சொன்னா பிறந்த புள்ளைக்குக்கூட தெரியுமே! அத்தனை விளம்பரம். 

காலைல பத்திரிகையை பிரிச்சி எழுத்துக்கூட்டி படிக்கும் பள்ளிக்கூட புள்ளை அவன் அம்மாகிட்ட கேக்கறான், 'ஆத்தா! லஞ்சம்னா என்ன?'. 

'லஞ்சம்னா ஒழுங்கா வாங்கற கூலிக்கு செய்ய வேண்டிய வேலைங்களுக்கு நம்ம போல ஏழைங்க கிட்டே கூட கை நீட்டி அநியாயமா அதிகாரப் பிச்சை கேக்கறத்துக்குப் பேருதாண்டா லஞ்சம்' என்கிறாள் அந்த அம்மா. 

'லஞ்சம் யாரும்மா வாங்குவாங்க?' என்கிறான் அந்த கிராமத்துப் பையன். 

அம்மாக்காரிக்குக் கோபம் வருகிறது. 'தனக்குனு இருக்கறவ போறாதுன்னு அடுத்தவள சாடையா பாக்கறாங்களே பொறம்போக்கு பசங்க, அவங்க மாதிரிதான் வாங்கற சம்பளம் தவிர இதைப் போல கை நீட்டி ஏழை பாழைங்ககிட்டே கூட அடாவடியா வாங்கற பணத்துக்குத்தான் பேரு லஞ்சம்' என்கிறாள் அவள். 

"அப்படீன்னா, இவன் பொண்டாட்டியையும் மத்தவங்கள்ளாம் கூட அப்படித்தானேம்மா பாத்து ஜொள்ளு விடுவாங்க?"

"அதுக்கெல்லாம் மான அவமானம் பாக்காத கபோதிங்கதாண்டா தம்பி இதைப் போல லஞ்சம் கேட்டுப் புடுங்கித் திங்கற பசங்க"

'ஏம்மா! பஸ் ஸ்டாண்டிலே பஸ் ஏறறவன் கிட்டே பாக்கெட்ல கைவிட்டு பர்சை எடுக்கறானே பிக்பாக்கெட், அவனைப் போலங்கிறியா?'

'இல்லடா, அவனைவிட கேவலமானவன்டா இவன். அவனாவது மாட்டிக்கிட்டா தர்ம ஒதை வாங்கறான். இவன் நாற்காலில ஒக்காந்துகிட்டு அதிகாரமா பணத்தைக் கொண்டா, இல்லன்னா வேலை நடக்காது போடாம்பான்' என்கிறாள் தாய்.

இப்படியொரு விவாதம் நடப்பது சாதாரண ஏழை குடிசையில். அங்கு வாழற ஏழைங்கதான் அடிக்கடி ஏதாவது காரியம் ஆவணும்னா கவர்மெண்டு ஆபீஸ் அது இதுன்னு அலையராங்க. அவுங்க வேலைக்குப் போனாத்தான் கூலி. ஆனா, அந்த வேலையை வுட்டுட்டு தினம் தினம் ராஜாங்க ஆபீசிலே போயி நின்னு வேணுங்கற வேலைக்கு மனுப்போட்டா, அலட்சியமா, போயிட்டு வான்னு விரட்டி விடுவாங்க. கிட்டி முட்டி ஏதாவது பெரிய மனுசங்க யாரையாவது சிபாரிசுக்குக் கூட்டிட்டு போனோ, எங்களை கவனிக்காம எப்படிங்க? என்று சாடைகாட்டிப் பேசுவாங்க. என்ன செய்யறது?

நம்ம ஊர்லதான் இப்பிடின்னு நெனைக்காதீங்க. உத்தரப் பிரதேசம் இருக்குல்ல. வடக்க, பெரிய மானிலங்கறாங்களே, அங்க. பஸ்தர்ங்கற பகுதி. அது ரொம்ப பின் தங்கிய பகுதி. காட்டுவாசிங்க மலைப்பிரதேச சனங்க வாழற ஊருங்க. அங்க ஒருத்தருக்கு என்ன வேலைன்னா, எங்கயாவது பாம்பு வந்திடிச்சின்னா அவருக்குச் சொல்லிவிட்டா போதும். அவரு வந்து பாம்பை புடிச்சிகிட்டு போயி கூடைல அடைச்சி வச்சிடுவாறு. கொல்ல மாட்டாரு. அவரு குடிசை முழுதும் ஒரே பாம்புக் கூடையா போச்சு. என்ன செய்வாரு? வேற வழியில்ல. கொஞ்சம் நிலம் கெடச்சா அதில ஒரு கொட்டகை போட்டு பாம்பு கூடைங்களை வச்சுடலாம்னு முடிவு பண்ணாரு. உடனே அவரு அரசாங்கத்துக்கு ஒரு மனு போட்டாரு.

ஒண்ணும் பிரயோசனமில்ல. டில்லி ராஜாங்கத்துக்கு எழுதினாரு. கெணத்துல போட்ட கல்லுதான். இப்பதான் எங்க பாத்தாலும் சனங்க ஆட்சி, சனாதிபதின்னா சனங்க தேர்வு செஞ்சு அனுப்பின பெரிய தலைவரு அப்படீங்க்கறாங்களேன்னு அவுகளுக்கு ஒரு கடிதாசி தட்டி வுட்டாரு. அவுரு என்ன நெனைச்சுக்கிட்டிருக்காருன்னா பெரிய தலைவரு சனாதிபதி உடனே, நம்ம சனங்கள்ளே ஒருத்தனுக்குக் கொஞ்சமா எடம் வேணுமாம், தந்துட்டா அவன் மத்தவங்களுக்கு ஒதவியா பாம்பை புடிச்சிகிட்டு இருந்துடுவான்னு அந்த ஊரு ஆபீசுக்கு உத்தரவு போட்டிருவாருன்னு நம்பிகிட்டு தினம் அந்த ஆபீசுக்குப் போயி நிப்பான்.

இவனைப் பாத்ததுமே அவுக அல்லாம் சிரிப்பாங்க. போடா பொசைகெட்ட பயலே. கொடுக்கறதை கொடுத்தா நெலம் என்னடா, என்ன வேணா கிடைக்கும்டா, பணத்தை எடுத்து வீசாம சுளுவா நெலம் மட்டும் கிடைக்குனு பாக்கறியே, எங்களை என்னடா நெனச்சே. மாங்கா மடையங்களா இங்கே அதிகாரிங்களா குந்திக்கினு இருக்கோம். போடா பணம் கொண்டா, நிலம் தரோம் என்றார்கள்.

இவன் நம்மைப் போல நெளிவு சுளிவு தெரிந்த நகரத்து வாசியா என்ன? காரியம் ஆகணும்னா இதெல்லாம் ஜகஜம்னு கொடுத்துட்டு வரதுக்கு. அடம் புடிச்சான். இல்ல இல்ல, எங்க சனாதிபதிகிட்டேந்து நிச்சயம் உத்தரவு வரும்னு காத்து காத்து வயசுதான் ஏறிப்போச்சு. பாத்துப் பாத்து அலுத்துப் போயி ஒரு நாள் என்ன செஞ்சான். பாம்புப் பெட்டியெல்லாத்தையும் எடுத்துக்கிட்டான். கூட தொணைக்கு ஒருத்தனைக் கூட்டிக்கிட்டான். நேரே அந்த ஆபீசுக்குப் போனான். அவுங்க கிட்டே போயி நின்னான். அவுங்களும் வழக்கம் போல சிரிச்சாங்க.

'வாடாலே! வந்தியா? பணம் கொணந்திருக்கியா, இல்லாட்டி வந்த வழியப் பாத்து போயிட்டேயிரு!' இன்னாங்க.

'சனாதிபதி உத்தரவு எதுவும் அனுப்பலீங்களான்னு கேட்டான். ஹி ஹி ஹி ன்னு சிரிச்சாங்க.'

பார்த்தான் நம்ம ஹீரோ. பரம ஏழைக்கு இழக்க என்னா இருக்கு? மேலே ஆகாயம், கீழே பூமி. வந்தா மலை, போனா மசிரு. எடுத்தான் பாம்புப் பெட்டிங்களை. திறந்து அத்தனை பாம்புங்களையும் அபீசுக்குள் விட்டான். அதுங்க வளைஞ்சு நெளிஞ்சு உள்ளே ஓடிச்சுங்களா, அவ்வளவுதான், நாக்காலில ஒக்காந்துகிட்டு டீ குடிச்சுகினு இருந்தவங்க, வெத்திலை பாக்கு போட்டுகிட்டிருந்தவனுங்க, அரட்டை அடிச்சுகிட்டிருந்தவனுங்க அத்தனை பேரும், ஆ, ஊன்னு கத்திகிட்டு மேசை மேல ஏறி நின்னுகிட்டாங்க. ஆபீசே அலறி உதற ஆரம்பிடிச்சு.

நம்ம ஹீரோ ஹக்குல் என்கிற ஆள் என்ன செஞ்சான் தெரியுமில்ல. அவன் பாட்டுக்கு போங்கடா போக்கத்தவங்களா, நீங்களாச்சு, பாம்புங்களாச்சுன்னு ஊருக்குக் கிளம்பிட்டான். ஆபீசருங்க காட்டுலாகாவுக்கு போன் போட்டு சொல்லி, அவுங்க வந்து பாம்பை புடிச்ச பொறவுதான் இவுனுவளுக்கு மூச்சே வந்ததாம். அதோட இல்ல, இண்டு இடுக்கு மேசை மேல கீழேன்னு எல்லா இடத்தையும் துருவித் துருவிப் பாத்துட்டு காலை தரையிலே வைக்காம மேலே தூக்கிக்கிட்டே ஒக்காந்திருந்தாங்களாம். எப்படி இருக்கு? இந்த வைத்தியம். 

அப்பறம் அந்த ஹக்குலை கைது பண்ணி உள்ள தள்ளிட்டாங்களாம். ஆனா, லஞ்சம் கேட்டு அந்த ஏழையை அலையவிட்டவங்கள என்ன பண்ணினாங்களாம். அதை பெரிய மனுசங்க கிட்டதான் கேக்கணும், என்ன ஆச்சுன்னு தெரியல இல்லன்னா அண்ணா ஹசாரேன்னு ஒருத்தர் ஏதோ போராடறாத சொல்றாங்களே, அவுருகிட்டதான் கேக்கணும்.

2 comments:

R.Srishobana said...

ஐயா அழுத்தமான கருவை மிகவும் யதார்த்தமாக தந்தவருக்கும் வெளியிட்ட தங்களுக்கும் என் நன்றிகள்.உண்மையில் கதையின் ஹீரோவைப் போன்று அனைவரும் பொங்கி எழுந்தால் லஞ்சம்,ஊழல் என்ற வார்த்தைகள் எல்லாம் நம் அகராதியை விட்டே மறைந்தோடிவிடும்...
இன்றைய இந்தியாவில் மற்றொரு சுதந்திரப் போராட்டத்திற்க்கான அவசியத்தையும்,சாமானிய மக்களின் அவலங்களை எல்லாம் போக்குவதற்க்கான காலம் வந்தடைந்து விட்டதையே இது போன்ற சம்பவங்கள் பறைசாற்றுகின்றன என்று எண்ணுகின்றேன்.

Unknown said...

ஹா...ஹா...ஹா... நல்லக் கதை. ஆனால் பாம்பு அல்ல அட்டையாய் ரத்தத்தை உறிஞ்சும் இந்த மனித மிருகங்களை மாற்றத்தான் இன்னும் ஒரு மகான் மீண்டும் இனியாவது பிறப்பானா!?

லஞ்சம் (கையூட்டு) வாங்குபவன் எவ்வளவு கேவலமானவன் என்பதை தோலுரித்துக் காட்டிய கதாசிரியருக்குப் பாராட்டுக்கள். படித்த இளைஞர்கள் (அதிலும் பெண்கள் சமபாதியாவது இருக்க வேண்டும்) கையில் எப்போது அரசு குடிகொள்கிறதோ அப்போது இந்தப் பெருச்சாளிகை விழுங்க பெரும் பாம்புகள் படையெடுக்கும்... அது மிகவிரைவில் நடக்கும் என்றே நம்புவோம்.

அருமையானப் பதிவு... பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!