பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, November 19, 2011

நூற்றாண்டு விழா காணும் ஒரு துவக்கப் பள்ளி.


நூற்றாண்டு விழா காணும் ஒரு துவக்கப் பள்ளி.

திருவையாறு ஊரை அனைவரும் அறிவர். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்து ஆயிரக்கணக்கான சாகித்யங்களை இயற்றி இசை மழை பொழிந்த மண். இசையும், நாட்டியமும் திருஞானசம்பந்தர் காலத்திலேயே முழங்கி வந்த அற்புதமான வளம் கொழிக்கும் பூமி. காவிரி பாய்ந்து பச்சை வயல்களையும் பொழில்களையும் இருபுறமும் பரப்பிச் செல்லும் எழில் பிரதேசம். நந்தி அவதரித்த ஊர். திருமழபாடியில் திருமணம் முடிந்து ஏழூர் பயணம் செய்யும் நந்தியும் ஐயாறப்பனும் சப்தஸ்தானம் செல்லும் விழா நகரம். 

அந்த புண்ணிய க்ஷேத்திரத்தில் திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி அளித்த குளமொன்று இருக்கிறது. கோயிலின் மேற்புறம் உள்ள மேட்டுத் தெருவில் அந்த குளமும் எதிரில் ஒரு வினாயகர் ஆலயமும் இருக்கிறது. அதே தெருவில் "சரஸ்வதி அம்பாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி" யொன்று இருக்கிறது.

இந்த சரஸ்வதி அம்பாள் தொடக்கப் பள்ளி 1912இல் துவங்கப் பட்டது. அதனைத் தொடங்கியவர் பிரணதார்த்திஹர ஐயர் என்பவர். கிராமம் கிராமமாகச் சென்று வீடுதேடி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டி, இலவசமாகக் கல்வி பயிற்று வந்தார். அந்தப் பணி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மிகவும் ஏழை பின் தங்கிய பிள்ளைகளை வீடுதேடிச் சென்று அழைத்து வந்து உயர்தர கல்வியைப் புகட்டி வரும் அரும் பணியை இந்தப் பள்ளி இப்போதும் செய்து வருகிறது. 1929இல் இந்தப் பள்ளியைத் துவக்கிய பிரணதார்த்திஹர ஐயர் ஹரிஜனப் பிள்ளைகளை வீடு தேடிச் சென்று அழைத்து வந்து பள்ளியில் சேர்த்த வரலாற்று ஆவணங்கள் இருக்கின்றன. அவை நூற்றாண்டு கண்காட்சியில் வைக்கப்பட விருக்கின்றன.

2012 பிப்ரவரி மாதம் இந்தப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகளை இதன் தாளாளர் திரு கணேசன் அவர்களும் தலைமை ஆசிரியர் திரு பஞ்சநதம் அவர்களும் மற்ற ஆசிரியர்களும் செய்து வருகிறார்கள். திருவையாற்றைச் சேர்ந்த அன்பர்களும், இந்த பள்ளியின் பழைய மாணவர்களும் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு கடந்த நுற்றாண்டில் இந்தப் பள்ளி செய்திருக்கும் சேவைக்கு நன்றி செலுத்தும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம். தொடர்புக்கு:- திரு வி.பஞ்சநதம், தலைமை ஆசிரியர், சரஸ்வதி அம்பாள் உதவிபெறும் துவக்கப் பள்ளி, மேட்டுத் தெரு, திருவையாறு 613202.

இஙஙனம்,
பாரதி இயக்கம், திருவையாறு.

Wednesday, November 16, 2011

சிவகங்கை மருது பாண்டியர்


சிவகங்கை மருதிருவர்

மருது பாண்டியர்களின் வரலாறு பெரிது. அதனை முழுமையாக பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இப்போது அவர்கள் வரலாற்றில் ஒரு சிறு துளி மட்டும் இங்கே ...

1801ஆம் வருஷம் ஒரு அறிவிப்பு வெளியாகிறது. அந்த அறிவிப்பு கூறும் செய்தி மிக நீண்டது. அதில் ஒரு பகுதி மட்டும் இதோ: --

"....நாவலந்தீவு எனப்படும் இந்த நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் இந்த அறிவிப்பு கொடுக்கப் படுகிறது. .... பரங்கியர்களின் அந்தரங்கத்தை அறியாத நீங்கள் எங்களுடன் ஒத்துப் போக மறுக்கிறீர்கள். உங்களிடையே ஒற்றுமை இல்லை ... இழிகுலத்தவர் பரங்கியர்களுடன் இணைந்து இந்த நாட்டை அடிமைப் படுத்தியுள்ளது நாமறிந்த விஷயம். ஆகையால் நீங்கள் பரங்கிகளை எங்கு கண்டாலும் அவர்களை அழித்து ஒழியுங்கள் .... "

இப்படி போகிறது அந்த அறிவிப்பு. இந்த அறிக்கையின் பிரதிகள் அப்போது இந்த பாரத புண்ணிய பூமியில் நாடு பிடித்துக் கொண்டிருந்த வெள்ளை கும்பினியாரின் கைகளுக்கும் போய்ச் சேர்ந்தது. இதைப் படித்த வெள்ளை அதிகாரிகளுக்குக் கோபம் தலைக்கேறியது. அறிக்கையின் நகல்களைக் கிழித்தெறிந்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். யார் வெளியிட்ட அறிக்கை இது? இதனை வெளியிட்டவர்களையும் இந்த அறிக்கையைக் கிழித்தெறிந்தது போல கிழித்தெறிய வேண்டுமென துடித்தனர். வெறிகொண்டு அலைந்தனர். எங்கேயோ ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து இங்கு வாணிபம் செய்ய வந்த ஒரு சிறு கூட்டம், தாங்களாக மட்டும் இந்த மண்ணுக்கு உரிய மாவீரர்களை அழித்து விடுவது என்பது சாத்தியமா என்ன? முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் இங்கேயே பிறந்து, இங்கேயே வளர்ந்து, இந்த மண்ணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய சில கருங்காலிகள் தங்கள் உடன் பிறந்தவர்களையே காட்டிக் கொடுத்து, அன்னியன் இடும் பிச்சைக்கு ஆலாய் பறந்து கொண்டிருக்கிறார்களே! என்ன செய்வது. இல்லாவிட்டால் வீரம் செறிந்த கட்டபொம்மனைத் தூக்கில் போட முடியுமா? நூற்றுக் கணக்கான ஆண்டுகள் இங்கு வந்து நம்மை கட்டியாள முடியுமா?

சரி! அந்த அறிக்கையை வெளியிட்டவர்கள்தான் யார்? வேறு யார்? சிவகங்கைச் சீமையின் சிறுத்தைகளான மருது சகோதரர்கள்தான் அவர்கள். சிவகங்கைச் சீவையின் வரலாற்றைப் படித்தால் தான் இந்த வீரம் செறிந்த பாளையக்காரர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். மருதுபாண்டியர் என்றும், மருதரசர் என்றும் மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட இந்த சகோதரர்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய சாதனை படைத்தவர்கள்.

காட்டில் அலைந்து திரியும் புலிகளையும், சிறுத்தைகளையும்கூட எதிர்த்து நின்று போரிட்டு வெற்றி பெறும் ஆற்றல் படைத்தவர் பெரிய மருது. அந்தக் காலத்தில் ஆற்காட்டு நவாப் வெள்ளியில் தடித்த நாணயமொன்றை வெளியிட்டிருந்தார்கள். அந்த கனத்த நாணயத்தைத் தனது விரல்களுக்கிடையில் வைத்து விரலால் வளைத்து ஒடித்துவிடும் எஃகு போன்ற பலமுடைய மாவீரன் அவர்.

தேக்கு மரத்தில் இழைத்துச் செதுக்கிய அற்புத சிற்பம் போல உடலமைப்பு கொண்ட மாவீரன் சின்ன மருது. உடல் பலத்தால் மட்டுமல்ல, தோற்றத்தாலும் மற்றவர்கள் பார்த்து வியக்கும் வண்ணம் இருந்தவன். அறிவிலே சிறந்தவன்; சாணக்கியனுக்கு நிகரானவன்.

பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர் கட்டபொம்மு நாயக்கர் 1799 ஜூன் மாதம் 5ஆம் தேதி சிவகங்கை சீமைக்கு வந்து சேர்ந்தார். தனது பாளையத்தில் வெள்ளைக்காரன் ஆக்கிரமித்துக் கொண்டு மக்களைக் கசக்கிப் பிழிந்து ஆற்காட்டு நவாப் கொடுத்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களிடம் வரிவசூல் செய்வதையும், தென்னக பாளையக் காரர்களைத் தங்கள் எடுபிடிகளைப் போல நடத்திக் கொண்டு அவர்களை அவமரியாதை செய்து கேவலப்படுத்தி வருவதையும், பொருள்களை விற்க வந்த இந்த கும்பல் நாடுபிடிக்கக் கடந்து அலைவதையும் சொல்லி வருத்தப் பட்டார் கட்டபொம்மு நாயக்கர். 

கட்டபொம்மு நாயக்கரைவிட பெரிய மருது பன்னிரெண்டு வயது மூத்தவர். தன்னுடைய இளைய சகோதரனைப் போன்ற கட்டபொம்மு நாயக்கர் தனது பாளையத்திலிருந்து விரட்டப்பட்டு இங்கு வந்து சரண் புக காரணமாயிருந்த வெள்ளைக் கும்பினியாரை பழிவாங்கத் துடித்தார் பெரிய மருது. தன்னை நாடி உயிர் பிழைக்கத் தஞ்சம் புகுந்துவிட்ட கட்டபொம்மனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார். தன்னோடு தங்கிக் கொள்ளவும் அனுமதியளித்தார். சமயம் நேரும்போது பழிக்குப் பழி வாங்கிட உறுதியளித்தார்.

1801ஆம் வருஷம் மருதுபாண்டியர் கமுதி கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார். ஆங்கிலப் படைக்கு கர்னல் அக்னியூ என்பவன் தலைமை தாங்கி வந்தான். அவன் தன்னுடைய படைகளை மட்டும் கொண்டு போர் புரிந்து தோல்வியடைந்த பின் எதிரிகளைத் துரோகிகளாக மாற்றி, பிரித்தாளும் வழக்கமான ஆங்கில பாணியைப் பின்பற்றி அங்கிருந்த மற்ற பாளையக்காரர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி தன் பக்கம் இழுத்துக் கொண்டான். தென்பாண்டிச் சீமையின் வீர மறவர்களுக்குள் பிரிவினை நேர்ந்தது. புதுக்கோட்டை தொண்டைமான் அரசர் தன் பங்குக்கு ஆங்கிலக் கம்பெனியாருக்கு உதவவும் முன்வந்தனர்.

காளையார்கோயில். மருதிருவரின் மானம் காக்கும் கோட்டை. கானப்பேரெழில் என்பது அதன் பழைய பெயர். அந்த காளையார்கோயில் கோட்டையை நாற்புறமும் கம்பெனியாரின் வெள்ளைக்காரப் படையும் தோழமையுடன் சேர்ந்துகொண்ட மற்ற துணைப் படைகளும் சூழ்ந்து கொண்டன. கிழக்கிலிருந்து கர்னல் பிளாக்பர்ன் என்பவன் தலைமையில் ஒரு படை. மேற்கு திசையிலிருந்து கர்னல் அக்னியுவின் தலைமையில் ஒரு படையும், தெற்கிலிருந்து மெக்காலே என்பவன் தலைமையில் ஒரு படையும் காளையார்கோயிலைத் தாக்கின. 

மருதுவின் படை வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆங்கில கம்பெனியாரின் படைகளை எதிர்த்து நின்றனர். கடுமையான போர். பாண்டிய நாடு கண்டிராத கடுமையான பீரங்கித் தாக்குதல். அந்தப் போரின் இறுதியில் கம்பெனியார் படைகள் வென்றன. மருது சகோதரர்கள் தப்பி ஓடி காடுகளில் தஞ்சம் புகுந்தனர். 1801ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முதல் தேதி காளையார்கோயில் கோட்டை ஆங்கிலேயர் வசம் போனது. 

தப்பி ஓடிவிட்ட மருது சகோதரர்களைப் பிடித்துக் கொடுத்தால் ஏராளமான பரிசுகள் தரப்படும் என்று கும்பினியார் முரசு கொட்டி அறிவிப்பு செய்தனர். அன்னியன் தரும் பிச்சைப் பரிசுக்கு ஆசைப்பட்டு இந்த புண்ணிய மண்ணில் பிறந்த துரோகிகள் பலரும் நாயாய் அலைந்தனர் அந்த வீரத் திருமக்களைப் பிடித்துக் கொடுப்பதற்காக. துரோகிகளின் முயற்சிகள் பயன் அளிக்கவில்லை. மருதிருவரைப் பிடிக்க இவர்களால் ஆகவில்லை. 

வீரம் செறிந்த இந்த மாவீரர்களைப் பிடிக்க வேண்டுமானால் ஏதாவது தந்திரம் செய்து ஏமாற்றிப் பிடித்தால்தான் உண்டு என்பதை கும்பெனியார் உணர்ந்தனர். ஆட்கள் தேடி அலைந்தும் பிடிக்க முடியாத இந்த வீரர்களை பிடிக்க ஒரு உத்தியைக் கையாண்டனர். யானைகளைப் பிடிக்க பள்ளம் தோண்டி விழவைத்துப் பிடிக்கலாம், மனிதர்களைப் பிடிக்க முகஸ்துதி செய்து பிடிக்கலாம் என்றாலும் மருது சகோதரர் போன்ற வீரர்களைப் பிடிக்க என்ன செய்யலாம்?

அவர்கள் உயிரினும் மேலாக நினைக்கும் ஆலயங்களை இடிப்பதாகச் சொன்னால், தானாக அந்த சிறுத்தைகள் மறைவிடம் விட்டு வெளிவந்து அந்த ஆலயங்களைக் காக்கப் போராடும் என்பதனை யாரோ சொல்லி அறிந்து கொண்டனர் வெள்ளையர்கள். ஒரு அறிவிப்பு வெளியானது. "மருது சகோதரர்கள் வந்து உடனடியாக ஆங்கிலப் படையிடம் சரண் அடையாவிட்டால், அவர்களது காளையார் கோயில் ஆலயம் இடித்துத் தரைமட்டமாக்கப்படும்" என்பது அந்த அறிக்கை.

தாங்கள் ஒவ்வொரு செங்கல்லாய் எடுத்து வைத்து கட்டிய, தங்கள் உயிரினும் மேலான காளையார்கோயில் இடிபடுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை மருது சகோதரர்களால். தங்கள் உயிர் போனாலும் கவலை இல்லை தங்கள் நினைவைப் போற்றக் காலம் காலமாய் இருக்கப் போகும் அந்த ஆலயத்தைக் காப்பாற்றியே தீரவேண்டுமென்று முடிவு செய்தனர். மறைவிலிருந்து வெளிப்பட்டார் பெரிய மருது. வெள்ளையனின் சூழ்ச்சியால் பிடிபட்டார். விரட்டிச் சென்று காட்டில் இருந்த சின்ன மருதையும் பிடித்துக் கொணர்ந்தனர் வெள்ளைக் கும்பினியார்.

பிடித்துவிட்ட பின் விசாரணை செய்ய வேண்டுமே! ஒரு நாயைக் கொல்வதானாலும் விசாரணை செய்துதான் கொல்வோம் என்று மார்தட்டிக் கொண்ட வெள்ளையன் பெயருக்குக்கூட ஒரு விசாரணை இல்லாமல் மருது சகோதரர்களை திருப்பத்தூர் கோட்டையில் 1801 அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிட்டனர். பெரிய மருது தன் உயிரினும் மேலாகக் கருதிய காளையார்கோயிலின் முன்பு தனது உடல் சமாதி வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது.

ஒரு நாட்டை வீரத்தால் ஜெயிக்கலாம். துரோகத்தால் ஜெயிப்பது என்றால்? துரோகத்தால் அடிமைப்பட்ட நாடுகள் ஏராளம் ஏராளம். அதிலிருந்து பாரத நாடு மட்டும் தப்புமா என்ன? எந்த நாளும் துரோகம் இங்கு கோலோச்சிக் கொண்டுதான் இருந்தது, இருக்கிறது, இருக்கும். மண்ணோடு மண்ணாகிப் போன தியாக மன்னர்களும், தேசபக்தர்களும், வீராதி வீரர்களும் நம் மக்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அன்னிய பக்தியும், அன்னியனுக்கு கால்கழுவும் புத்தியும் இல்லாமல் நம் பெருமை, நம் தன்மானம் இவற்றால் உயர முடியும். உலகத்துக்கு வழிகாட்ட முடியும். செய்ய முடியுமா? முடியும், நிச்சயம் முடியும். இளைய தலைமுறை உரக்க சபதம் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால்! வாழ்க பாரதம்!

Tuesday, November 15, 2011

நேரு எனும் மாமேதை!


என்.வி.சுப்பராமன், 12/1045, ஜீவன் பீமா நகர்                                     சென்னை 600101   
                        
               நேரு எனும் மாமேதை!

நேரு எனும் மாமேதை
    பாரதத்தில் வந்துதித்தான்
மேரு மலை போன்ற அவன்-காந்திக்குச்
    சாரதியாய் நின்றுழைத்தான்!

பாரதத்தின் விடுதலைக்குப்
    பாடுபட்ட பெருந் தலைவன்
பாரதத்தின் பிரதமராய்
     பலகாலம் பணிபுரிந்தோன்!

பாழ்பட்டு நின்ற பாரதத்தின்
     வேரறுந்த பொருள்நிலையை
தோள் தந்தே அவன் நிறுத்தி வைத்தான்
     பெரும் சோசலிசத் தத்துவத்தால்!
      
அணைகளும் ஆலைகளும்
      ஆயிரமாய்க் கட்டி வைத்தான்
அழகான கல்விக் கூடங்களை
      ஆலயமாய்ச் செதுக்கி வைத்தான்!

கல்வி அளித்தான் குழந்தைகள்
      கனவில் நிறைந்தான்
கண்கள் திறந்தான் சாசா நேரு என
      நினைவில் மலர்ந்தான்!

அண்ணல் காந்தியின் அடிச்சுவட்டில்
      அருமையாக நடந்து சென்றான்
மண்ணில் பாரதம் உயர்ந்திடவே
      அல்லும் பகலும் உழைத்திட்டான்!

பாரில் உயர்ந்த ஆலைகளே
      ஆலயம் என்றே போற்றிநின்றான்
பண்பில் உயர்ந்த மனிதர்களே
      ஆண்டவன் என்றே புகழ்ந்திட்டான்!

பாரதந் தன்னைப் பாரோர்கள்
      வியக்குமாறு வளர்த்திட்டான்
யாரிதற்கெல்லாம் வேரென்றால்
      நேரு எனும்மா மேதைதான்!                  

Monday, November 14, 2011

பூலித்தேவன்


'நெற்கட்டும்செவ்வல்' பூலித்தேவன்

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார் அவர்கள், வரலாற்றிலும் மறைக்கப்பட்டு, மக்களாலும் மறக்கப்பட்ட சில சுதந்திரப் போர் வீரர்களை வெளிச்சத்துக் கொண்டு வந்தார். அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோராவர். அப்படி அவர் இந்த சுதந்திரப் போர் வீரர்களை பல இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளுக்குமிடையே பரப்பி வந்த நேரத்தில் என்ன காரணத்தினாலோ தமிழ் எழுத்தாளரும், கல்கண்டு பத்திரிகை ஆசிரியருமான தமிழ்வாணன் அவர்கள் கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்று எழுதி வரலானார். ஒரு காலகட்டத்தில் ம.பொ.சி. ஒருபுறம் கட்டபொம்மனை உயர்த்தி எழுத, தமிழ்வாணன் கட்டபொம்மனை கொள்ளக்காரன் என்று எழுதியதோடு, தென் தமிழ்நாட்டில் சுதந்திரக் குரல் எழுப்பிய முதல் பாளையக்காரன் "நெய்க்கட்டான்சேவல் பூலித்தேவன்" என்றே வலியுறுத்தி எழுதி வந்தார். ஆனால் நாளடைவில் சிலம்புச் செல்வரின் குரல்தான் ஓங்கி ஒலித்தது, ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்வாணன் தூக்கிப் பிடித்த புலித்தேவனும் சுதந்திர வேகம் கொண்டவர்தான்; அதிலொன்றும் மறுப்பு இல்லை. ஆனால் கட்டபொம்மன் வரலாற்றில் அவருடைய அமைச்சர் தானாவதி பிள்ளை செய்த ஒரு காரியம், கட்டபொம்மனுக்குக் கொள்ளைக்காரன் என்ற அவப் பெயரை ஆங்கிலக் கும்பினியார் கொடுத்து விட்டனர். அதுவும் சிலர் நெஞ்சில் நிலைத்து விட்டது. என்றாலும் இருள் ஒரு நாள் அகலும், ஒளி அன்று உண்மையை விளக்கும் என்பது சரியாகிவிட்டது.

சரி, இப்போது நெய்க்கட்டான்சேவல் பூலித்தேவன் என அழைக்கப்படும் வீரன் பற்றிய சில செய்திகளைப் பார்க்கலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயிலுக்கு வடமேற்கில் ஆவுடையார்புரம் எனும் பெயருடைய "நெற்கட்டும் செவ்வல்" எனும் பாளையம் இருக்கிறது. இந்த பாளையத்தின் அதிபதியாக, அதாவது பாளையக்காரராக சித்திரபுத்திர தேவர் என்பவர் இருந்தார். இவரது மனைவியின் பெயர் சிவஞான நாச்சியார். இந்த பாளையக்காரருக்கு 1715இல் ஒரு வீர மகன் பிறந்தான். அந்த மகன் தான் நாம் இப்போது பார்க்கப் போகும் பூலித்தேவன்.

பாளையக்காரரின் மகன் அல்லவா? வீரம் செறிந்த நெல்லை மண்ணில் பிறந்த இந்தக் குழந்தை சிறு வயதிலேயே போர்ப் பயிற்சிகள் அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். வீர விளையாட்டுக்களிலும், வேட்டையாடுவதிலும் ஆர்வமுடைய இந்த பூலித்தேவன் ஒரு முறை காட்டிலிலுருந்து தப்பிவந்து கிராமங்களுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த புலியொன்றைத் தன் கட்டாரியால் குத்திக் கொன்றாராம். அந்தப் பகுதி மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாதலின், இந்தச் செய்தியைக் கேள்விப் பட்ட நாயக்க அரசர் இந்த வீரனை அழைத்து அவனுக்கு "வடக்கத்தான் பூலித்தேவன்" என்று பட்டமளித்தாராம். அன்று முதல் இவனை பூலித்தேவன் என்றும், புலித்தேவன் என்றும் ஏதோ வாயில் நுழைந்த வகையில் மக்கள் புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்கள்.

இதே வலைத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிற தஞ்சை மராத்தியர் வரலாற்றைப் படித்தவர்களுக்கு நாம் இப்போது சொல்லப்போகிற செய்தி தெரிந்திருக்கும். அதாவது ஆற்காட்டு நவாப் முகமது அலியின் அண்ணன் மாபூஸ்கான், தளபது யூசூப்கான் ஆகியோர் அவர்களது எஜமானர்களான கிழக்கிந்திய கம்பெனியின் தளபது கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான் என்பவனின் ஆணைப்படி தென் தமிழ்நாட்டு பாளையக் காரர்களிடமிருந்தெல்லாம் கிஸ்தி வசூல் செய்வதற்காக தென்னகம் நோக்கி படையெடுத்து வந்தார்கள். இது நடந்தது 1755ஆம் ஆண்டில். அதுவரை டில்லி பாதுஷாவுக்குக் கட்டுப்பட்ட, நிஜாமும், நிஜாமின் கீழ் பணியாற்றிய ஆற்காடு நவாபும், ஆங்கிலேய கம்பெனியாரிடம் வாங்கிய கடனுக்காக நேரடியாக தென் தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்துகொண்டு தங்கள் கடனை நேர் செய்துகொள்ள அனுமதி அளித்தனர். அதன் பலனாக அந்த ஆற்காட்டுப் படை முதன் முதல் தென்கோடி தமிழ்ப் பிரதேசத்துக்குள் படையெடுத்து நுழைந்தது. அவர்களிடம் வரிவசூல் செய்துகொள்வது, இல்லையேல், அவர்களது நாட்டை கபளீகரம் செய்துகொள்வது என்பது அவர்களது நோக்கம்.

மக்கள் வரிப்பணத்தை வசூல் செய்துகொண்டு ஆடம்பர வாழ்க்கையில் சுகபோகமாக இருந்த சில பாளையக்காரர்கள், ஆற்காட்டுப் படைக்கும், ஆங்கில கம்பெனியார் படைக்கும் பயந்துகொண்டு கேட்ட கிஸ்தியை அவர்களுக்குக் காணிக்கையாக்கி பணிந்து போயினர். இந்த மதார்ப்பில் ஆங்கில கம்பெனிப் படை நெற்கட்டும் செவ்வலைச் சென்றடைந்தது மாபூஸ்கான் தலைமையில். பாளையக்காரர் புலித்தேவனுக்குத் தகவல் கிடைத்ததும் கொதித்தெழுந்தார். "வரி, கிஸ்தி என்று எவனாவது என் ஆட்சிக்குரிய நிலத்தில் கால்வைத்தால் அவன் திரும்ப மாட்டான்" என்று உறுமினார். "வரியாவது, வட்டியாவது? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? வரி என்ற பெயரில் ஒரு மணி நெல்கூட இவர்களுக்குத் தரமுடியாது" என்று கர்ஜித்தார் பூலித்தேவர். 

தன்னுடைய படைகளை ஒன்று திரட்டினார். தனது மண்ணில் நுழைந்துவிட்ட அந்நியப் படையை எதிர்கொண்டு இவரே போய் அவர்களை வெறிகொண்டு தாக்கித் தோற்கடித்தார். கம்பெனிப் படைகளும், மாபூஸ்கான் படைகளும் தாங்கள் கொண்டு வந்த பீரங்கிகளையும், வெடி மருந்துகளையும் போட்டது போட்டபடி போர்க்களத்தைவிட்டு ஓட்டமெடுத்தனர். 

ஒடிப்போன மாபூஸ்கான் தன் எஜமானன் அலெக்சாண்டர் ஹெரானிடம் போய் புகார் செய்தான். ஆத்திர மடைந்த அந்த ஆங்கில கர்னல் தன்னுடைய படைகளை அழைத்துக் கொண்டு மீண்டும் பூலித்தேவனை எதிர்க்க வந்து சேர்ந்தான். என்னதான் நவீன எந்திரங்களையும், ஆயுதங்களையும் பயன்படுத்தினாலும் பூலித்தேவனின் வீரமிக்க வீரகளின் சாதாரண கத்தி ஈட்டிகளின் முன்பாக நிற்க முடியவில்லை. தோற்றுப் போன ஹெரான் சமாதானம் பேசினான். என்னவென்று? தான் தன்னுடைய மேலதிகாரிகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். வெறும் இருபதினாயிரம் ரூபாயைக் கப்பமாகக் கட்டிவிட்டால் அதை வாங்கிக் கொண்டு தான் திரும்பிப் போய்விடுவதாக அவன் கூறினான். இந்த மண்ணில் வாழ்வோர் தமிழர். உழைப்பவர் தமிழர். அந்த உழைப்பை எந்தவொரு அன்னியனும் திருடிச் செல்ல தமிழ் வீரர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று பதில் சொன்னார் பூலித்தேவன். தோல்வியில் துவண்டு போய் ஹெரான் ஆற்காட்டுப் படைகளுடன் மதுரைக்குத் திரும்பிச் சென்றான்.

1756ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் திருநெல்வேலியில் மாபூஸ்கானுக்கும் பூலித்தேவருக்கும் ஒரு கடுமையான சண்டை நடந்தது. அதில் பூலித்தேவரின் நெருங்கிய தோழனொருவன் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டான். நண்பனின் மரணம் பூலித்தேவரைச் சோர்வடைய வைத்துவிட்டது. தோல்வியால் துவண்டு ஊர் திரும்பினார் பூலித்தேவர்.

அதன் பிறகு 1766இல் காப்டன் பெரிட்சன் எனும் ஆங்கில தளபதி வாசுதேவநல்லூரைத் தாக்கினான். அங்கு நடந்த போரிலும் ஆங்கில கம்பெனிப் படை தோல்வியடைந்தது. பூலித்தேவனை அடக்க என்ன வழி என்று கம்பெனியார் ஆலோசனை நடத்தினர். அவனைத் தனிமைப் படுத்தி, அவனைச் சுற்றி இருக்கும் பாளையங்களைத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டால் அவனை அடக்கிவிடலாம் என்று திட்டமிட்டனர். 

1767இல் டொனால்டு காம்ப்பெல் எனும் ஆங்கில தளபதியின் தலைமையில் மேஜர் பிளிண்ட், கேப்டன் ஹார்பர் ஆகியோர் ஒரு பெரும் படையுடன் வந்து வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கத் தொடங்கினார். பீரங்கி குண்டுகள் தாக்கி சேதமடைந்த கோட்டைச் சுவர்களை, பூலித்தேவனின் ஆட்கள் உடனுக்குடன் களிமண், வைக்கோல் கொண்டு அடைத்து சீர் செய்தனர். அவசரத்துக்கு மண்ணும், வைக்கோலும் கிடைக்காத நேரத்தில் வீரர்கள் தங்கள் உடலையே அந்த இடிபாடுகளில் வைத்து அடைத்தனர். ஒரு வாரகாலம் போர் நடைபெற்றது. அது நல்ல மழைக் காலம் பூலித்தேவர் மலைப் பகுதிகளுக்குச் சென்று மறைவாக ஒளிந்து கொண்டார்.

எப்போதுமே இவர்களுக்கு ஒரு துரோகி கிடைத்துவிடுவான் அல்லவா? அப்படிப்பட்ட ஒரு துரோகி பூலித்தேவன் பதுங்கி இருக்கும் இடத்தை ஆங்கில கும்பெனியாரிடம் காட்டிக் கொடுத்துவிட்டான். கட்டபொம்மனுக்கு எட்டப்பனைப் போல, இவருக்கும் ஒரு குட்டப்பன் வந்து சேர்ந்தான். சதிசெய்து, சூதால் பூலித்தேவன் கைது செய்யப்பட்டு கும்பெனியாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

போகும் வழியில் தங்கள் குலதெய்வமான சங்கரன்கோயிலுக்குச் சென்று வழிபட ஆங்கிலேயர்களிடம் அனுமதி பெற்று கோயிலினுள் நுழைந்தார் பூலித்தேவர். போனவர் போனவர்தான். அவர் எங்கு போனார், என்ன ஆனார் என்பது யாருக்குமே தெரியவில்லை. அந்த மர்மம் இன்றுவரை தெரியவில்லை என்கின்றனர் பூலித்தேவனின் வரலாற்றை உணர்ந்தவர்கள். வாழ்க பூலித்தேவன் புகழ்.



Thursday, November 10, 2011

நாஞ்சில் நாட்டில் நிலவி வந்த ஒரு சமுதாய வாழ்க்கை முறை


"நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்"

நாஞ்சில் நாட்டில் நிலவி வந்த ஒரு சமுதாய வாழ்க்கை முறையை அறிந்திராதவர்களுக்கு இது என்ன புதிதாக இருக்கிறதே என்ற வியப்பு ஏற்படலாம், நாஞ்சில் நாடு எனப்படுவது இப்போதைய கன்னியாகுமரி மாவட்டம் என்று சொல்லலாம். இது அந்த நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட பிரதேசமாக இருந்தது. இந்தப் பகுதியில் பூர்வீகக் குடிகள் தவிர, சேர, சோழ, பாண்டிய நாட்டிலிருந்தெல்லாம் மக்கள் வந்து குடியேறி வாழ்ந்து வந்தனர்.

இப்படி பல பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து குடியேறியவர்கள் தத்தமது நாட்டின் கலாச்சாரத்தையே பின்பற்றி வாழ்ந்து வந்திருக்கின்றனர். நாஞ்சில் நாட்டு வேளாளர்கள் பெரும்பாலும் பாண்டிய தேசத்தவர்கள். அவர்களுடைய குலதெய்வங்கள் பாண்டிய நாட்டில் பரவிக் கிடந்தன. அவர்கள் திருமண பந்தங்களையும் பாண்டிய நாட்டிலேயே செய்து கொண்டனர். 

ஆனால் அன்றைய நாஞ்சில் நாட்டை ஆண்ட மன்னர்கள் சேர அரச வம்சத்தினர். தங்கள் ராஜ்யத்தின் ஒரு பகுதியில் வந்து குடியேறிய பாண்டிய நாட்டார் தங்கள் பந்த பாசங்களைத் தங்கள் பூர்வீக மண்ணுக்குத் தந்து வந்ததில் இந்த சேர மன்னர்களுக்கு அதிருப்தி உண்டு. ஆகையால் இவர்களையெல்லாம் தங்கள் நாட்டின் நிலைக்குடிகளாக செய்துவிட சேர அரசர்கள் எண்ணினார்கள்.

இங்கு ஒரு கர்ண பரம்பரைச் செய்தி கூறப்படுகிறது. கர்ண பரம்பரை என்றால் செவிவழி சொல்லப்பட்டு வந்த செய்தி. ஒரு சேர அரசன் இந்த வேளாளர் மக்கள் தங்கள் பூர்வீக நாட்டுக்குப் போய்விடாதபடிக்கு இவர்களுக்கு ஒரு புதிய சட்டத்தை உருவாக்கினான். அதுதான் "மருமக்கள் தாயம்" எனப்படும் சட்டம். இதற்கு சரியான உறுதியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் செவிவழி சொல்லப்படும் செய்தி இதுதான்.

சரி! இனி விஷயத்துக்கு வருவோம். அது என்ன "மருமக்கள் தாயம்". நாஞ்சில் நாட்டு வேளாளன் ஒருவனின் பூர்வீகச் சொத்து அவனது சகோதரியின் குழந்தைகளுக்குத் தாய முறைப்படி போய்ச்சேரும். அவனுடைய குழந்தைகளுக்கு ஏதோ சிறிய உரிமை மட்டும் தரப்படும், அதைத் தவிர பெருமளவு சொத்தும் மருமக்களுக்குத்தான் போய்ச்சேரும். இதை 'உகந்துடமை' என்பார்கள்.

இப்படிப்பட்ட சமூக நிலைமை காரணமாக நாஞ்சில் நாட்டு வேளாளர்கள் சொத்துரிமை இல்லாத தங்களது சொந்தக் குழந்தைகள் ஒரு புறம், மாமனின் சொத்துக்களை அனைத்தையும் பெற்றுக் கொண்டு செழித்து நிற்கும் அவன் சகோதரியின் குழந்தைகள் ஒரு புறம் என்று மக்கள் திண்டாடித் திணறிக் கொண்டிருந்தனர். பொதுவாக ஒரு தந்தையின் அன்பும், பாசமும் தன்னுடைய மக்களுக்குத்தான் இருக்கும். ஆனால் செயற்கையாகக் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டம் அதற்கு மாறாக சொத்தை சகோதரி மக்களுக்குக் கொடுத்துவிட்டுத் தன் மக்கள் திண்டாடுவதைப் பார்க்கும் அவலம் ஏற்பட்டது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொத்துத் தகறாறு இந்தப் பகுதியில் ஏராளமாக உருவாகி நீதிமன்றம், வழக்கு என்ற நிலை ஏற்பட்டது. இது தவிர நாஞ்சில் நாட்டில் ஒருவன் பல தாரங்களை மணந்து கொள்ளலாம். கணவன் இறந்த பிறகு அந்த விதவை மறுமணம் செய்துகொள்ளும் உரிமை இருந்தது. அப்படியிருந்தும் பெண்களின் அவலம் அந்தப் பகுதிகளில் மிக அதிகமாக இருந்து வந்தது.

இந்த அநியாய சட்டத்தையும், சமூக மூடப் பழக்கத்தையும் எதிர்த்து ஒரு இயக்கம் நாஞ்சில் நாட்டில் தொடங்கப் பட்டது. நேரடியாக எதிர்த்துப் போராடியவர்கள் தவிர சில பெரியோர்கள் மறைமுகமாக இந்த அநியாயங்களை எதிர்க்கத் தலைப்பட்டனர்.

அப்படிப்பட்ட பெரியோர்களில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் ஒருவர். இவர் நேரடியான போராட்டம் நடத்தி இந்த சமூக அவலத்தை எதிர்க்காமல் ஒரு வேலை செய்தார். அப்போது "மலபார் குவார்டர்லி ரெவ்யூ" என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடந்து வந்தது. அதில் இவரைப் போன்ற பெரியோர்கள் கொடுமையான இந்தச் சட்டத்தை எதிர்த்தும், கேலி செய்தும், பெண்களின் அவலங்களைச் சுட்டிக் காட்டியும் ஆங்கிலத்தில் கட்டுரைகளை எழுதி வந்தார்கள். இந்த வகையில் இவர்களுடைய எதிர்ப்பு பெருமளவில் மக்கள் மத்தியில் பரவியது. ஆட்சியாளர்கள் பார்வைக்கும் இவைகள் போய்ச்சேர்ந்தன.

அப்போதுதான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் மருமக்கள் வழி மான்மியம் எனும் கவிதை வடிவிலான ஒரு காவியத்தைப் படைத்துத் தன் பெயரைப் போடாமல், புனை பெயரில் பத்திரிகையில் எழுதி வெளியிட்டார். அந்தக் காவியம் படிப்பதற்கு ஒரு நகைச்சுவைக் காப்பியம் போலத் தோன்றும்.

இந்தக் காப்பியத்தில் நாஞ்சில் நாட்டு வேளாளர் குலப் பெண் ஒருத்தி. தன்னுடைய வாழ்நாளில் நடந்த துயரங்களையெல்லாம் சொல்லிச் சொல்லி வருந்துகிறாள். இவள் ஒரு பரம ஏழை. தன்னுடைய பதினாறாம் வயதில் செல்வந்தர் ஒருவருக்கு ஐந்தாம் மனைவியாகப் போகிறாள். கணவன் வீடு எப்படி இருந்தது தெரியுமா?

இவள் கணவன் வீட்டில் இவளது மாமியார், சக்களத்திகள், மதனி. இவர்கள் அனைவரும் இவளைப் படுத்திய பாடு, அப்பப்பா, படிப்போர் கண்களில் கண்ணீர் கொட்டும். இப்படி இவள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாளில், இவள் கணவனுக்கும், அவனுடைய மருமகனுக்கும் குடும்ப விஷயமாகப் பிணக்கு ஏற்பட்டு விடுகிறது. பிணக்கு முற்றி வழக்காக மாறி நீதிமன்றம் சென்றது. 

வழக்கு நடந்தது. வாய்தா, வாய்தா, வழக்கு முடிவில்லாமல் சென்றது. அந்த நீண்ட நெடிய பயணத்தின் இடையே அந்தக் கணவன் வியாதியால் படுக்கையில் வீழ்ந்து விட்டான். அப்படி அவன் படுத்துக் கிடக்கும் நாளில் அவனுக்கு இழைக்கப்பட்ட துன்பங்கள் கணக்கிலடங்கா. அவனுக்கு மரணம் நெருங்கி வந்துவிட்டது என்பது புரிந்தது. தன் மருமகனை அழைத்துத் தன் மக்களை அவனிடம் ஒப்படைத்து அவர்களைக் காப்பாற்றும்படி வேண்டிக் கொண்டான்.

என்ன கொடுமை. அவன் உயிர் பிரிந்ததுதான் தாமதம். அவனுடைய மனைவியும் குழந்தைகளும் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு விரட்டப்பட்டார்கள். அந்தத் துயரமான சமயத்தில் அந்தப் பெண் தங்கள் குல வழியில் நிலவிவரும் இந்த மருமக்கள் வழித் தாயத்தை இழித்தும் பழித்தும் புலம்புவதாக அமைந்து இந்தக் காவியம்.

அந்தப் பெண்ணின் கணவனுக்கு இவள் ஐந்தாவது மனைவி என்பதைப் பார்த்தோமல்லவா. இந்த காவியத்தில் அந்தக் கணவனுடைய மருமகன் தன் மாமனைப் பார்த்துச் சொல்வதாக வரும் வரிகள் இதோ.

"ஆரைக் கேட்டு நீர் ஐந்து கலியாணம்
அடுக்கடுக் காகச் செய்தீர் ஐயா!
பட்டப் பெயரும் பஞ்ச கலியாணிப்
பிள்ளை யென்று நீர் பெற்று விட்டீரே!"

இன்னொரு இடத்தில் அந்த மருமகனின் தந்தை வீரபத்திர பிள்ளை வந்து தன்னுடைய மகனுக்காக இவள் கணவனிடம் சண்டையிடுகிறான். அப்போது அவன் சொல்லும் சொற்கள்:

"வைய வைய வைரக்கல்லும்
திட்டத் திட்டத் திண்டுக்கல்லும்"

கணவன் உடல் நலம் கெட்டுப் படுத்த படுக்கையாகி தவிக்கும் காட்சி.

"படிப் படியாய் இப்படி அவர் பாடு
குறைந்து குறைந்து கொண்டே வந்தது
அண்டை வீடாகி, அறைப்புரை யாகி;
படிப்புரை யாகிப் பாயிலும் ஆனார்
எழுந்து நடக்க இயலா தானார்
நடந்தவர் கீழே நடந்தார், அம்மா!"

கணவன் இறக்கும் தருவாயில் அவனுக்கு அளிக்கப்பட்ட மரியாதை.

"கணவர்க்கு அந்திம காலம் தண்ணீர்
குடிக்கும் பாத்திரம் குடுக்கை ஆனதும்
பரந்த சட்டி படிக்கம் ஆனதும்
பாலும் அன்னப் பாலே ஆனதும்"

அவன் சாகும் காட்சி

"ஏங்கி அழுத எங்களை நோக்கினார்
வாடி அழுத மக்களை நோக்கினார்
கடவுளை எண்ணிக் கையை எடுத்தனர்
கண்ணை மூடினர், கயிலை போய்ச் சேர்ந்தனர்."

நாலு கால்கள் உள்ள ஒரு பெரிய யானையின் மீது உட்கார்ந்திருக்கும் ஈ ஒன்று தான் அந்த பெரிய யானையை ஓட்டிச் செல்வதாகச் சொல்லிக் கொள்ளுமாம். அதுபோல வக்கீல் குமாஸ்தா நாலு கைகள் உள்ள ஒரு பெரிய கருப்புக் கோட்டை அணிந்த வக்கீலைத் தான்தான் வழிநடத்துவதாகப் பீற்றிக் கொள்வானாம். இதெல்லாம் நீதிமன்ற காட்சிகளில் தருகிறார்.

கோர்ட்டுக்குப் போக வேண்டாம். உங்கள் காசு பணத்தை இழக்க வேண்டாம் என்று கவிஞர் சொல்லும் பகுதியைப் படிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கும். அவர் சொல்லுகிறார்.

"குத்தி ரத்தம் குடித்திடும் ஐயா!
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்!
குதித்துக் குடியைக் கெடுத்திட வேண்டாம்!
'இன்ன படியென்று எழுதிவிட்ட
சிவனே வரினும் சிறிதும் அஞ்சேன்."

"வீட்டை விட்டு வெளிவரா உமக்கு
கோர்ட்டுக் காரியம் கொஞ்சமும் தெரியுமோ?
பாரப் படிகளும் பட்டிகைப் படிகளும்
சாக்ஷிப் படிகளும் சமன்ஸுப் படிகளும்
ஜப்திப் படிகளும் வாசற் படிகளும்
ஏணிப் படிகளும், இப்படி அப்படி

எல்லாப் படிகளும் ஏறி இறங்கி,
வாணாள் கொடுத்து வாண தீர்த்தம்
ஆட ஆளும் நீரோ" ஐயா!
கோர்ட்டு பீஸு, குமாஸ்தா பீஸு,
கூடிக் காப்பி குடிக்கப் பீஸு,

வெற்றிலை வாங்கிட வேறொரு பீஸு,
வக்கீல் பீஸு, மகமைப் பீஸு,
வக்காலத்து வகைக்கொரு பீஸு,
எழுதப் பீஸு, சொல்லப் பீஸு,
எழுதிய தாளை எடுக்கப் பீஸு
நிற்கப் பீஸு, இருக்கப் பீஸு,
நீட்டின கையை மடக்கப் பீஸு,
பாரப் பீஸு, கீரப் பீஸு,
பார இழவு பயிற்றுப் பீஸு,
கண்டு பீஸு, காணாப் பீஸு,

முண்டுத் துணிக்கொரு முழு மல் பீஸு,
அந்தப் பீஸு, இந்தப் பீஸு,
ஆனைப் பீஸு, பூனைப் பீஸு,
ஏறப் பீஸு, இறங்கப் பீஸு,
இப்படியாக என்றென்றைக்கும்
பீஸு பீஸாகப் பிச்சுப் பிடுங்கும்
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்
குதித்துக் குடியை முடித்திட வேண்டாம்."

வழக்கில் வாதாடி, குறுக்கு விசாரணை நடத்தி அனைவரையும் திகைக்க வைக்கும் சாமர்த்தியமான வக்கீல் எப்படி நடந்து கொள்வாராம்.

".............. வக்கீல் உம்மைக்
கூட்டில் ஏற்றிக் குறுக்கு மறுக்காய்க்
கிராஸு கேட்டுக் கிடுக்கி விடுவான்;
சந்தேகமில்லை, சந்தேகமில்லை நீர்
அண்டப் புரட்டனை அறிய மாட்டீர்
புத்தியில் பெரியவர், பொல்லாத வம்பர்
ஆளும் தரமும் அறிந்திட வல்லவர்
சீரும் திறமும் தெரிந்திடச் சமர்த்தர்
ஆடிக் கறப்பதை ஆடிக் கறப்பார்
பாடிக் கறப்பதைப் பாடிக் கறப்பார்
தயவாய்ச் சொல்லுவார், தக்கில் கேட்பார்
இரைந்து சொல்வார், எச்சில் எழும்புவார்;
பார் பார் என்பார், பல்லைக் கடிப்பார்
போருக்கு நிற்பார், புலிபோல் பாய்வார்,
அங்கும் இங்கும் அசையாதே என்பார்
குனியாதே என்பார், கோட்டைப் பார் என்பார்
கோட்டையும் கூடக் கூட்டாக்காமல்
கேள்விகள் பலவும் கேட்க வருவார்.

ஓடும் குதிரைக்கு உச்சியில் கொம்புகள்
ஒன்றா? இரண்டா? உடன் சொல் என்பார் - நாம்
குதிரைக்கு ஏது கொம்புகள் என்றால் - அது
கோர்ட்டு அலட்சியக் குற்றம் என்பார்.
கேள்வியை நன்றாய்க் கேட்டுச் சொல்லும்
இரண்டா? ஒன்றா? என்பது என் கேள்வி:
உண்டா, இல்லையா? என்று நான் உம்மிடம்
கேட்டேனா ஓய்! காது கேட்காதோ?
என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி விடுவார்."


கோர்ட்டுக்குச் செல்லாதீர்கள் என்று கவிஞர் சொல்லும் வாசகங்களைக் கேளுங்கள்.

"பள்ளியில் பாடம் படிக்கவில்லையோ?
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்
அரை அடி சுவருக்காக ஐக்கோர்ட்டு
வரையிலும் ஏறி வழக்குப் பேசி
அந்திபுரத்து மந்திரம் பிள்ளை
அடியோடு கெட்டது அறிய மாட்டீரோ?
வடக்கு வீட்டு மச்சம்பியும் அவர்
மருமக்களுமாய் வருஷம் எட்டாக
மாறி மாறி வாதம் செய்து
யாவையும் போக்கி, இரவா வண்ணம்
இரந்து திரிவதை இவ்வூரில் நாம்
கண்ணால் இன்று காணவில்லையோ?
வேலுப் பிள்ளை வீட்டு நம்பரில்
ஐந்தாம் சாக்ஷி ஆண்டி அவனை
அழ அழப்படுத்தி அறுபது ரூபாய்
வாங்கிக் கொண்டு மேல் வாய்தாத் தோறும்
வீட்டுக் காரியம் வெட்ட வெளிச்சம்
முட்டப் பஞ்சம், மூதேவி வாசம்
பானையிலே பத்து அரிசி இல்லை
உப்போ புளியோ ஒன்றுமில்லை
உச்சிக்கு எண்ணெய் ஒரு துளி இல்லை
தொட்டில் கட்ட துணியுமில்லை
காந்திமதிக்கு கண்டாங்கி இல்லை
எனக்கும் வேட்டி யாதொன்று மில்லை
இப்படி இருக்க, எப்படி உமக்காய்
கோர்ட்டில் மொழி நான் கொடுக்க வருவேன்?

பின்பு வழக்காடுவதுதான் எப்படியாம்? என்று நாம் கேட்பதாக வைத்துக் கொள்வோம். அதற்கு கவிமணி, மனியான வாக்கால் சொல்லுகிறார்.

"ஐயா! ராஜி ஆவதே உத்தமம்!
ஐயா! ராஜி ஆவதே உத்தமம்!

இப்படி இந்த காவியத்தின் நயத்தைச் சொல்லி மாளாது. ஒரு முறை படித்தே பார்த்து விடுங்களேன்.

நாட்டில் நிலவும் இத்தகைய அநியாயச் சட்டம் ஒழியாதோ, எங்கள் அவலம் தீராதோ என்று அந்த ஐந்தாம் மனைவி, கணவனை இழந்து கதறும் காட்சியில்

"கற்றவர் உளரோ! கற்றவர் உளரோ!
பெற்ற மக்களைப் பேணி வளர்த்திடாக்
கற்றவர் உளரோ! கற்றவர் உளரோ!
அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!
வறுமைக்கு இரையாய் மக்களை விரட்டிடும்
அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!
மாதர் கண்ணீர் மாறா நிலத்தில்
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!
பொய்வழிப் பொருளைப் போக்கும் இந்நிலத்தில்
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!

இந்தக் காவியம் திருவனந்தபுரத்திலிருந்து வெளியான "தமிழன்" எனும் பத்திரிகையில் 1917ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி பகுதி பகுதியாக வெளியாகி 1918 பிப்ரவரியில் நிறைவடைந்தது. 

பல அறிஞர்கள் இந்தப் பிரச்சினையை எழுப்பிப் பரப்பி வந்த காலகட்டத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சர் சி.பி.இராமசாமி ஐயரின் முயற்சியால் ஒரு சீர்திருத்த மசோதா 1926இல் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டது. 1927இல் இந்த சட்டம் அமலானது. மக்களை வாட்டி வந்த மருமக்கள் தாயம் எனும் பழக்கமும் முடிவுக்கு வந்தது. ஒரு நல்ல சீர்திருத்தத்துக்கு ஒரு தமிழ்க் காவியம் உதவியிருக்கிறது.





Sunday, November 6, 2011

தஞ்சை ராஜராஜேச்சரத்தில் அம்மன் கோயில்


தஞ்சை ராஜராஜேச்சரத்தில் பாண்டிய மன்னன் எடுப்பித்த அம்மன் கோயில்

தஞ்சை பெரிய கோயில் சதயத் திருவிழா பற்றிய என்னுடைய கட்டுரையைப் பாராட்டி ஒரு அன்பர் பின்னூட்டம் எழுதியிருந்தார். அவர் எழுப்பியிருந்த நியாயமான கேள்வி, பண்டைய மன்னர்கள் கட்டிய ஆலயங்கள் அப்படியே இருக்க, அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள், தலைநகரம் ஆகியவை மட்டும் அழிந்து போகக் காரணம் என்ன என்பது. அதற்கு நான் எழுதிய பதில் இதோ:---


"உங்கள் ஐயம் நியாயமானது. பல காலங்களில் பலரும் கேட்டுக்கொண்டிருக்கும் வினா இது. ஆலயங்கள் நிலைத்திருக்க, அவர்கள் வாழ்ந்த நகரமும், அரண்மனைகளும் காணாமல் போனது ஏன்? அவசியம் விடை தெரிந்து கொள்ள வேண்டிய வினா. மாமன்னன் ராஜராஜனாகட்டும் வேறு பல தமிழக மூவேந்தர்கள், சிற்றரசர்கள் போன்ற அரசர்களாகட்டும், அடிக்கடி தம்முள் போர் செய்து கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் காலத்தில் போரில் சில தர்மங்கள் கடைபிடிக்கப்பட்டன. இன்னாரைத்தான் தாக்குவது, இன்னின்ன இடங்களைத்தான் இடிப்பது, அழிப்பது, தீயிட்டுக் கொளுத்துவது என்றெல்லாம் வரைமுறை இருந்தது. ராஜராஜனின் சகோதரன் மதுரைக்குச் சென்று பாண்டிய மன்னனைக் கொன்ற செய்தி வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. ராஜராஜன், ராஜேந்திரன் ஆகியோர் காலத்துக்குப் பின்னர் மதுரையிலிருந்து சுந்தர பாண்டியன் எனும் மன்னன் சோழ நாட்டின் மீது படையெடுத்து உறையூரையும், தஞ்சாவூரையும் மன்னனின் அரண்மனை, நகரம் உட்பட ஆலயங்கள் தவிர அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி, அரண்மனை, வீடுகள் அனைத்தையும் தரைமட்டமாக்கி, அவ்விடங்களை ஏர் கொண்டு உழுது அங்கு வரகு விதைத்துவிட்டுச் சென்றான். அரண்மனை அழிந்தது. ஊரும் அழிந்தது. ஆலயம் நின்றது. எதிரி நாட்டை வென்று அவன் தலைநகரை அழித்து, உழுது, வரகு அல்லது எருக்கு விதைப்பது என்பது அவர்களுக்குச் செய்யும் அவமானம். அப்படி தஞ்சையை அழித்த சுந்தரபாண்டியன் அருகில் ஒரு புதிய ஊரை நிர்மாணித்தான். அந்த இடம் தஞ்சையில் இப்போது இருக்கும் சாமந்தான் குளம், அங்குள்ள பெருமாள் கோயில் இவைகள்தான் அந்த இடம். தவிரவும் தஞ்சை பெருவுடையார் கோயிலில் அம்மனுக்குக் கோயில் எழுப்பியவனும் அவனே. இப்படி அந்தக் கால மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டு அரண்மனைகளையும், தலைநகரங்களையும் அழிப்பது வழக்கமாகக் கொண்டிருந்ததால் பெரும்பாலான இடங்கள் தரைமட்டமாயின. ஆலயங்கள் பொதுவானவை என்பதால் அவை அழிக்கப்படவில்லை. இதுகுறித்து விரிவான கட்டுரையொன்றை விரைவில் வலையேற்றுகிறேன்."



மேலே கண்ட பதிலில் தஞ்சை பெரிய கோயிலில் நந்தி மண்டபத்துக்கு வடக்குப் புறத்தில் இப்போது காணப்பெறும் அம்மன் கோயிலை பாண்டிய மன்னன் கட்டிவைத்தான் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

சோழப் பேரரசன் மூன்றாம் குலோத்துங்கன் மதுரை அரசன் குலசேகர பாண்டியனோடு 1202இல் போர் செய்தான். அப்போது அந்தப் போரில் வெற்றி பெற்ற சோழ அரசன் பாண்டியனுடைய அரண்மனையை தரைமட்டமாக இடித்து அவர்களுடைய பண்டாரங்களில் (Treasury) இருந்த ஏராளமான செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டான். அங்கிருந்து சோழ மன்னன் சென்ற இடம் ஆலவாயானும், மீனாட்சியும் வீற்றிருக்கும் திருக்கோயிலாகும். அங்கு சென்று தான் பாண்டிய அரண்மனை பண்டாரங்களில் இருந்து கவர்ந்த அத்தனை செல்வங்களையும் ஆலவாயான் சோமசுந்தரக் கடவுளுக்கும், மீனாட்சி அம்மைக்குமாக அளித்து விட்டான். ஆலயத்திலிருந்து ஈசனையும், அம்பாளையும் வீதி உலா எழுந்தருளச் செய்து கண்ணாரக் கண்டு மகிழ்ந்து பக்திவசப் பட்டிருக்கிறான். இந்தச் செய்தியை தன் மெய்க்கீர்த்திப் பாடல்களில் மன்னன் வெளியிட்டிருக்கிறான். 

பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின் பாண்டிய மன்னர்கள் வலிமை பெற்றார்கள். அப்போது மன்னனாக இருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பான், மூன்றாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் கி.பி.1219இல் சோழநாட்டின் படைஎடுத்த்டு வந்து சோழப் படையை வென்று அவனுடைய தலைநகரமான உறையூரையும், தஞ்சையையும் செந்தழலிட்டு அழித்ததோடு, அரண்மனையையும் தரைமட்டமாக்கினான். தான் சோழநாட்டில் கவர்ந்த செல்வங்களையெல்லாம் கொண்டு போய் பாண்டியன் தில்லை நடேசப் பெருமானுக்கு அளித்து வணங்கி மகிழ்ந்தான். 

திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் பாதையில் 'திருவெள்ளறை' எனும் ஒரு வைணவத் தலம் உள்ளது. அந்த ஆலயத்தில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. அந்தக் கல்வெட்டுக் கூறும் செய்தியாவது. பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டில் அரசுக்குச் சொந்தமான பல இடங்களை அழித்தான் என்றும், அப்படி அழிவினைச் செய்தபோது ஒரே ஒரு மண்டபத்தை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டுவைத்தான் எனவும் அந்தக் கல்வெட்டு கூறுகிறது. அப்படி பாண்டியன் விட்டு வைத்த இடம் எது தெரியுமா? அந்த பாண்டியன் வாழ்ந்த காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் கரிகால் பெருவளத்தான் எனும் புகழ்மிக்க சோழமன்னனைப் புகழ்ந்து "பட்டினப்பாலை" எனும் பாடலை உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் பாடியதற்காக, சோழன் கரிகாலன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகளையும், பதினாறு கால் மண்டபம் ஒன்றையும் அந்தப் புலவருக்கு அளித்திருந்தான். அந்த மண்டபத்தை பாண்டியன் இப்போது அழிக்காமல் விட்டுவைத்தான் என்றும் அந்தக் கல்வெட்டு கூறுகிறது.

திருவெள்ளறையில் காணப்படும் அந்தக் கல்வெட்டுப் பாடலைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது அல்லவா? இதோ அந்தப் பாட்டு.

"வெறியார் தவளத் தொடைசெயமாறன் வெகுண்ட தொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டிலர மியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறுமே யங்கு நின்றனவேய்."

மன்னர்கள் பழிவாங்க பல செயல்களைச் செய்தாலும், அதிலும் சில தர்மங்களைக் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதை இந்த செயல் காட்டுகிறதன்றோ?

அம்மன் கோயிலின் கருவறையின் மேற்குப் புறத்துச் சுவற்றில் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. இதனை ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் தன்னுடைய "ராஜராஜேச்சரம்" எனும் நூலில்விரிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார். அந்தக் கல்வெட்டுச் செய்தியாவது:---

"ஸ்வஸ்தி ஸ்ரீ கொட்டகர்க்குடியான உலகாண்டநாயகி நல்லூர்க்கு
எழுதின திருமுகப்படி. திருபுவனச் சக்கரவர்த்திகள் கோ
நேரின்மை கொண்டான் தஞ்சாவூர் உடையார் ஸ்ரீ இராஜ
ராஜீஸ்வரமுடையார் கோயில் தாணத்தார்க்கு
இக்கோயிலில் நாம் எழுந்தருளுவித்த உலக முழுதுமுடைய நாச்சி
யார்க்கு அமுது உள்ளிட்டு வேண்டும் அவையிற்றுக்கு அரு
மொழிதேவ வளநாட்டு மேல்கூறு விடையபுரப்பற்றிலே
கொட்டகர்க்குடியிலே பதின் ஒரு வேலி நிலம் இறையிலி
யாக இரண்டாவது வைகாசி மாதம் முதல் கொடுத்
தோம் இந்நிலம் பதின் ஒரு வேலியும் சந்திராத்தவற்
செல்லுவதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க
இந்நிலத்திற்கு காசுகடமை மரவடை புன்பயிர் குளவடை
அளவுவற்கம், உறைநாழி வெட்டி, மேற்பாடிகாவல்
அரைக்கால்வாசி உள்ளிட்ட அனைத்து வற்கமும் உட்பட்ட
தும் இவ்வூர் நத்தத்தில் ஒருபாதியும் உட்பட இறையிலி
யாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளச்
சொன்னோம் இப்படிக்கு இவை பழந்திபராயர் எழுத்து
இந்நிலத்துக்கு நான்கெல்லையும் திருச்சூலக்கல்லும்
நாட்டிக் கொள்க இவை கொடுமளூர் உடையான்
எழுத்து இவைகயலூர் உடையான் எழுத்து
யாண்டு இரண்டாவது நாள்."

முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களுடைய ஆய்வின் முடிவில் இக்கல்வெட்டின் எழுத்தமைதி கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று அறிஞர்கள் முடிவு செய்திருப்பதாகக் கூறுகிறார். இந்த அடிப்படையில் பார்த்தால் இக்கல்வெட்டு பாண்டிய மன்னன் ஒருவனுடைய கல்வெட்டு என்று கருத வேண்டியிருக்கிறது. மன்னனுடைய பெயர் குறிக்கப் பெறாமல் அவனது ஆணையாக மட்டும் இந்தச் சாசனம் இருந்தாலும், இவனே தற்போதுள்ள இந்த அம்மன் ஆலயத்தை எடுப்பித்தவன் என்பதையும் அறிய முடிகிறது. 

தஞ்சை பெரிய கோயிலை "ஸ்ரீ ராஜராஜீஸ்வரம்" என்றே இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அம்மனுடைய திருநாமத்தை "உலகு முழுதும் உடைய நாச்சியார்" என்று குறிக்கிறது. இவ்வாறு எடுக்கப் பெற்ற இந்தக் கோயிலின் பூசைகளுக்காக அருமொழித்தேவ வளநாட்டில் மேற்கூறாகத் திகழும் விடையபுரத்துக் கொட்டகர்க்குடி எனும் ஊரில் பதினொரு வேலி நிலம் அளித்ததையும் இந்தக் கல்வெட்டு விவரிக்கிறது. தஞ்சை பெரும் கோயிலுக்குப் பாண்டிய மன்னன் ஒருவன் அளித்த கொடையே இந்த அம்மன் ஆலயமாகும். இதுதான் குடவாயிலாரின் முடிவு.

இராஜராஜன் திருச்சுற்று மாளிகையில் 'பரிவாராலயத்து உமாபட்டராகி' எனும் பெயரில் ஒரு அம்மன் கோயில் ஏற்கனவே இருந்திருக்கிறது. அந்த அம்மன் கோயிலுக்கு முன்புறமாக 14ஆம் நூற்றாண்டில் இக்கோயில் எழுந்துள்ளது. இந்த அம்மன் கோயில் எழுப்பப்படுவதற்கு முன்பாகவே, பெரிய கோயிலின் திருச்சுற்று மாளிகையும் மகாமண்டபமும் சூறையாடப்பட்டு அழிவுக்கு உள்ளாக்கப் பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்கிறார் ஆய்வாளர்.

இந்த அம்மன் கோயிலின் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய பகுதிகளே கி.பி.14ஆம் நூற்றாண்டுக் கட்டுமானப் பகுதிகளாகத் தோற்றமளிக்கின்றன. மகாமண்டபத்துடன் இணைந்து மிகப்பெரிய அளவில் எழில்மிகு தூண்கள், நீண்டு வளைந்த கொடுங்கைகள் ஆகியவற்றுடன் திகழும் முகமண்டபம் பிற்காலப் பணியாகத் தோற்றமளிக்கிறது. விஜயநகர சாம்ராஜ்ய அரசர்கள் காலத்தியதாக இருக்கலாம். கருவறை விமானத்தின் சிகரம் இங்குள்ள சண்டீசர் விமானத்தின் கலைப் பாணியிலேயே அமைக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் எழுதுகிறார்.

கருவறையில் ஏழு அடிக்கும் மேற்பட்ட உயரமுள்ள நின்றகோலத்தில் அமைந்த அம்மன் திருவுருவம் மிகவும் எழிலோடு காட்சியளிக்கிறது. 'உலகமுழுதுடையநாச்சியார்' என்ற திருநாமமும் இதனை நிறுவிய பாண்டிய மன்னனால் கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பெயர் பிற்காலத்தில் பெரியநாயகி என்றும், சம்ஸ்கிருத மொழியில் 'ப்ருஹந்நாயகி' என்றும் மக்கள் அழைக்கின்றனர். இப்போதும் இந்தப் பெயர்தான் வழங்கப் படுகிறது.

இவ்வாலயம் பற்றிய இன்னும் பல வரலாற்றுச் செய்திகளை இனி வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.



Friday, November 4, 2011

ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி


"கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்"


தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!



கடகளிறு என்பது மதயானையைக் குறிக்கும். யானையின் தோலைத் தன் மீது உடையாக அணிந்தவள் என்பது அதன் பொருள். எந்த யானை? அந்த யானையின் தோலினை அம்மை உடையாக அணிந்தாளா. இவற்றைத் தெரிந்து கொள்ள நாம் அட்ட வீரட்டான தலங்களுக்குப் போக வேண்டும். இந்தப் பாடல் வரிகளை ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் தனது மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழில் கொடுத்திருக்கிறார்.

பிள்ளைத் தமிழ் என்பது தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. இவ்விலக்கியத்தை வழியாக வைத்து இங்கு மீனாட்சி அம்மையைப் பாடியிருக்கிறார் குமரகுருபர சுவாமிகள். பாடல் தலைவன் அல்லது தலைவியை முதலாக வைத்துப் பத்து பருவங்களை உருவாக்கி நூறு ஆசிரிய விருத்தங்களால் பாடப்படுவது பிள்ளைத் தமிழ். இதில் ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகையில் பாடுவார்கள். சுவாமிகள் இங்கு நமக்குத் தந்திருப்பது பெண்பால் பிள்ளைத் தமிழ்.

பெண்பால் பிள்ளைத் தமிழில் காப்பு, செங்கீரை, தாலம், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல் என பத்து பருவங்களை வைத்துப் பாடுவார்கள். ஒவ்வொரு பருவமும் பத்து பாக்களைக் கொண்டதாக இருக்கும். இது குறித்த ஒரு இலக்கணப் பாடல்:

"கடுங் கொலை நீக்கிக் கடவுள் காப்புச்
செங்கீரை, தால், சப்பாணி, முத்தம்
வாரானை, முதல் வகுத்திடும் அம்புலி
சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்னப்
பெறுமுறை ஆண்பாற் பிள்ளைப் பாட்டே.

அவற்றுடன்
பின்னைய மூன்றும் பேதயர்க் காகா;
ஆடும் கழங்கு அம்மானை, ஊசல்
பாடும் கவியால் பகுத்து வகுப்புடன்
அகவல் விருத்தத் தான்கிளை அளவாம்."

இது ஆண்பால், பெண்பால் பிள்ளைத் தமிழின் இலக்கணம்.

1) காப்புப் பருவம்: இஃது இரண்டு மாதக் குழந்தையைக் காக்குமாறு இறைவனிடம் வேண்டுவது.
2) செங்கீரை: ஐந்தாம் மாதம் ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி இரு கரங்களால் நிலத்தில் ஊன்றி தலை நிமிருந்து முகம் அசைய ஆடுதல்.
3) தாலப் பருவம்: எட்டாம் மாதம் 'தாலேலோ' என்று நாவசைத்துப் பாடுதல்.
4) சப்பாணி: ஒன்பதாம் மாதம் இரு கரங்களையும் சேர்த்து கைதட்டும் பருவத்தைப் பாடுதல்.
5) முத்தப் பருவம்: பதினொன்றாம் மாதம், குழந்தையை முத்தம் தர வேண்டிப் பாடுதல்.
6) வருகைப் பருவம்: ஓராண்டு ஆகும்போது குழந்தை தளிர்நடை பயிலும்போது பாடுதல்.
7) அம்புலிப் பருவம்: ஒன்றேகால் ஆண்டு ஆகும்போது குழந்தைக்கு நிலவைக் காட்டிப் பாடுதல்.
8) அம்மானை: குழந்தையை அம்மானை ஆடும்படியாகப் பாடுதல்
9) நீராடற் பருவம்: ஆற்று ஓடையில் நீராடும்படி பாடுதல் 10) ஊசல் பருவம்: ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டிப் பாடுதல்

கடைசி மூன்றும், அம்மானை, நீராடல், ஊசல் ஆகியவை ஐந்து முதல் பத்து வயது வரை நடக்கும் செயல்களாகப் பாடுதல்.

காப்புச் செய்யுள் முதலில் விநாயகரை வணங்கி, திருமால், சிவபெருமான், சித்தி விநாயகப் பெருமான், அறுமுகப் பெருமான், பிரம்ம தேவர், தேவேந்திரன், திருமகள் லக்ஷ்மி, கலைமகள் சரஸ்வதி, துர்க்கை, சப்தமாதர்கள், தேவர்கள், முப்பத்து மூவர் ஆகியோரைப் பாடியபின் செங்கீரைப் பருவத்தைப் பாடுவது என்பது இலக்கண மரபு.

ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் தனது மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழில் இந்த வரிசையில் பாடி வரும்போது காப்புச் செய்யுளில் சப்தமாதர்கள் எனும் தலைப்பில் பாடுகின்ற வரியில் இந்தத் தலைப்பு வருகிறது. இதில் திருமால், சிவன், முருகன், இந்திரன், பிரம்மன், ராமன் ஆகியோர் செய்த சாதனைகளை சக்தி தெய்வங்களின் பாங்காக வைத்து அந்த சிறப்புகளைக் கொண்ட அன்னை என்று புகழ்ச்சி செய்து பாடிவருகிறார். 

அப்படி இந்த சப்தமாதர்கள் செய்த சாதனைகள்தான் என்ன? அட்டவீரட்டான தலங்களில் ஒன்றான வழுவூரில் சிவபெருமான் கஜமுகாசுரனை வதம் செய்து, அவன் வயிற்றைக் கிழித்து வெளிவந்து அவன் உடலைத் தன்மீது போர்த்திக் கொண்ட நிகழ்வை இன்றைய தலைப்பு குறிக்கிறது. இந்த காரியத்தைச் செய்தவர் சிவபெருமான் என்றாலும், அவருடைய செயலை மகேஸ்வரியாம் பார்வதிக்குக் கொடுத்து சக்தியைப் புகழ்ச்சி செய்கிறார் சுவாமிகள். கடலைத் தூர்த்தவன் இராமன், நாராயணனின் அவதாரம். இங்கு அந்தச் செயல் நாராயணியின் செயலாகக் குறிக்கப் பெறுகிறது. கடல் எரியச் செய்தவன் ஆறுமுகன், அசுரர்களை வதம் செய்த போது, ஆனால் அது இங்கு கெளமாரியின் செயலாக விளக்கப் படுகிறது. கற்பக மரத்தினை மாலையாய் அணிந்த செயல் இந்திராணிக்கும், சிங்கத்தை அடக்கிய செயல் காளிக்கும், வேத நூல்களிலிருந்து ஞானம் பெருவதை அபிராமி அம்மையிடமும், பன்றி வடிவம் தாங்கி கொம்பினால் கடலுக்குள் சென்று பூமியை மீட்டுவந்த வராக அவதாரச் செயலை வாராகியின் செயலாகவும் வர்ணிக்கும் பாங்கு சிறப்புடையது.

இங்கு சக்தியின் மேலாதிக்கம்தான் உலகின் எல்லா செயல்பாடுகளையும் இயக்கி வருகிறது என்பதை விளக்குகின்றன இந்த செயல்கள் எல்லாம். சிவனோ, நாராயணனொ, பிரம்மனோ, இந்திரனோ, முருகனோ செய்தாலும் அதனதன் சக்தி உடனிருந்து அவற்றை இயக்குதல் பொருட்டு அனைத்தும் சக்தியின் செயலாகக் கருதப்படுகிறது. 

இந்தப் பாடல் மூலமும், இன்றைய தலைப்பின் மூலமும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு வழுவூரில் நடந்த கஜ சம்ஹார நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். சிவ ஆலயங்களில் அட்ட வீரட்டானம் என்பது எட்டு இடங்களில் சிவபெருமான் தனது சம்ஹாரங்கள் மூலம் தன் வலிமையை நிலைநிறுத்தியதைக் கூறும் இடங்களாகும். அட்ட வீரட்டானத் தலங்கள் எவை?

எம சம்ஹாரம் நடந்தது திருக்கடவூரில்
தக்ஷன் வதம் நடந்தது திருப்பறியலூரில்
பிரம்மன் சிரமெடுத்த தலம் திருக்கண்டியூர்
ஜலாந்தரன் வதம் நடந்த இடம் விற்குடி
திரிபுராந்தகன் வதம் திருவதிகை, திருக்கோயிலூர்
காம தகனம் ஆன இடம் திருக்குறுக்கை,
கஜ சம்ஹாரம் ஆன இடம் திருவழுவூர்.

உள்ளது உணர்வாய் உயிர் ஓவியம் கொண்டவனே
அள்ள அள்ள அருள் தரும் ஆனந்த ஐயனே
கொள்ளை போகுதே என் மனம் கொடும் கூற்றுவனும் நடுங்கிடுவான்
மெள்ள மெள்ள நீ வந்திடாதே, கடுகவே வந்தெனை காப்பாயே
ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தியே!

ஓம் தத் சிவ மகேஸ்வராய வித்மஹே
வேத மார்தாண்டாய தீமஹி
தன்னோ கஜ சம்ஹார மூர்த்தி ப்ரஜோதயாத்.

கடவுளை மறுப்பது, கடவுளை எதிர்ப்பது, கடவுளை நிந்திப்பது, ஆன்மீக உணர்வுகளை அவமதிப்பது, அவன் இல்லை என்று பரப்புவது, புராண இதிகாசங்களை இழித்துப் பேசுவது இவையெல்லாம் "நான்" எனும் அகந்தை உணர்வின் வெளிப்பாடுகளே!

இத்தகைய அகந்தை உணர்வுகளுக்கு மருந்து "கஜசம்ஹாரமூர்த்தி" மட்டுமே.

நான் எனும் அகந்தையை யானைக்கு ஒப்பிடுவர். கருவூரில் இருந்த எறிபத்த நாயனார் அகந்தையின் உருவகமான மன்னனின் பட்டத்து யானையை கடிந்து, பாகர் ஐவரையும் கொன்றது இந்த நோக்கில்தான்.

ஆன்மீக உணர்வுக்கு தடைக்கல் "நான்" எனும் அகந்தையே. தன்னுடைய குறைகளையெல்லாம் நீக்கிவிட்டாலும், "தான்" எனும் அகந்தை அவனை அழிவிலேயே கொண்டு செல்லும்.

மெத்த படித்தேன் எனும் அகந்தை ஒருவனை இறைவன் அடியிணையைத் தேடுதலைத் தடுத்துவிடும். நான் எனும் அகந்தையை இறைவன் தாமரை மலர்களில் விட்டுவிட்டால் மோட்சம் அவனை ஏற்றுக் கொண்டுவிடும்.

"நான்" எனும் அகந்தை எப்போது ஒருவனுக்கு வரும் என்பதை யாரும் சொல்ல முடியாது. அது வராமல் தடுக்க ஒரே வழி கஜ சம்ஹார மூர்த்தியை வழிபடுதல் மட்டுமே. தன்னை அழித்து, என்றும் நிலைபெறச் செய்யும் மாயமூர்த்தியே கஜ சம்ஹார மூர்த்தி.

இனி வழுவூரைப் பற்றியும் கஜசம்ஹாரக் காட்சிகளையும் சற்று பார்க்கலாம். இந்த வழுவூர் எனும் தலம் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் இருக்கிறது. எலந்தங்குடி எனும் கிராமத்தைத் தாண்டியதும் சாலையில் ஒரு அம்புக்குறி போட்டு வழுவூர் செல்லும் பாதை என்றிருக்கும். அதில் 1 கி.மீ. போனால் இந்த வழுவூர் வீரட்டானக் கோயிலை அடையலாம். அட்ட வீரட்டானத் தலங்களில் இது ஆறாவது வீரட்டானம். இங்கு அருளாட்சிபுரியும் ஈஸ்வரன் கஜசம்ஹாரமூர்த்தி என வழங்கப்படுகிறார்.

அதாவது கஜமுகாசுரனை வதம் செய்த இடம். சிவபெருமானுக்கு 64 விதமான உருவங்கள் உண்டு என்பது நமது புராணங்கள் கூறும் செய்தி. மகேஸ்வரர் என வழங்கப் படுபவர்கள். இங்கு சுவாமியின் பெயர் கிருத்திவாசர், அம்பாள் இளங்கிளைநாயகி. இந்த ஆலயம் கட்டி சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கக்கூடும். இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை திருநாவுக்கரசர் வைப்புத் தலமாகப் பாடியிருக்கிறார். திருமூலரும் இவ்வாலயம் குறித்துப் பாடியுள்ளார்.

இவ்வூர் தலபுராணத்தைப் புரட்டினோமானால் அனேக பல புராணக் கதைகளுடன் தொடர்புடையதாகக் காணப் படுவதை கவனிக்கலாம். தேவர்கள் அடிக்கடி யாருடைய சாபத்துக்காவது ஆளாவது வழக்கம் என்பதை நாம் பல புராணங்களில் காண்கிறோம். அதன் பிறகு சிவபெருமானோ அல்லது மகாவிஷ்ணுவோ தலையிட்டு அவர்களது சாபத்தை நீக்கப் போராடியதாகவும் புராணங்கள் விவரிக்கின்றன. அப்படி தேவர்களுக்கு துருவன் இட்ட சாபம் ஒன்று உண்டு. அந்த சாபத்தால் அவர்கள் வலிமை குறைந்து பலவீனப்பட்டுப் போயினர்.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமிழ்தம் எடுக்கத் துணிந்தனர். அந்த நேரத்தில் அவர்கள் பலவீனமானவர்களாக இருந்த காரணத்தால் பாற்கடலை அவர்களால் மட்டும் கடைய முடியவில்லை. ஆகவே அவர்கள் அசுரர்களின் தயவை நாடவேண்டியதாயிற்று. இந்த அமிழ்தம் அருந்தினால் அமரத்துவ நிலை அடையலாம். ஆகவே அதை அடைய இரு தரப்பாருக்கும் ஆசைதான். இவர்களை அவர்கள் ஏமாற்றிவிடலாம் என்றும், அவர்களை இவர்கள் ஏமாற்றி அமிழ்தத்தைக் கைப்பற்றிவிடலாம் என்கிற திட்டத்தில் இரு தரப்பாரும் சேர்ந்து கொண்டு மந்தர மலையை நட்டு, வாசுகிப் பாம்பினால் கடைய ஆரம்பித்தார்கள். ஆனால் அப்படி கடையத் தொடங்குமுன்பாக இருவருக்கும் ஒரு ஒப்பந்தம் உருவானது. அதன்படி அமிழ்தம் கிடைத்தவுடன் ஆளுக்குப் பாதி என்று முடிவாகியது.

தேவர்களுக்கு முழுவதையும் தாங்கள் எடுத்துக் கொள்ள ஆசைதான், ஆனால் என்ன செய்வது. அசுரர்களின் தயவு இல்லாமல் பாற்கடலைக் கடைவது என்பது முடியாத காரியமல்லவா? ஒப்புக் கொண்டார்கள். பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். இவர்கள் கடையக் கடைய அதிலிருந்து பல பயங்கரமான ஜீவராசிகள் வெளிவரத் தொடங்கின. பயந்து போனார்கள். இப்படி வெகு காலம் பல தீயவைகள் வெளிவந்த பிறகு நல்லவைகளும் வெளிவரத் தொடங்கின. காமதேனு என்கிற விரும்பிய பொருள் அனைத்தையும் தரக்கூடிய அபூர்வ சக்தி படைத்த பசு வெளிவந்தது. உச்சைஸ்ரவஸ் எனும் இறக்கைகள் கொண்ட பறக்கும் குதிரைகள் வெளிவந்தன. ஐராவதம் எனும் வெள்ளை யானை வெளிவந்தது. கல்பக விருக்ஷம் எனும் நினைத்ததைக் கொடுக்கும் புனிதமான மரம் வெளிவந்தது. கெளஸ்துபம் எனும் பெருமாளின் அணிகலன் வந்தது. வருணி எனும் இறக்கைகள் கொண்ட தேவதை வெளிவந்தது. மகாலக்ஷ்மி, சந்திரன் போன்ற எண்ணற்ற பெரு செல்வங்கள் வந்தபடி இருந்தன.

அசுரர்களுக்குக் கொண்டாட்டம். தேவர்களுக்கும் பேராசை. இவை அனைத்தையும் இந்த அசுரக் கூட்டத்துக்குத் தெரியாமல் தாங்கள் எடுத்துக் கொண்டு விடலாம் என்று. இருந்தாலும் ஒப்பந்தப்படி இருவரும் அவற்றைச் சமமாகப் பிரித்துக் கொள்ள சம்மதித்தனர். எப்படி பங்கு பிரிப்பது. எப்போதும் பங்கு பிரிப்பதில் சண்டை வருவதுதானே இயல்பு.

தேவேந்திரனான இந்திரன் கல்பகவிருக்ஷத்தையும் ஐராவதம் எனும் வெள்ளை யானையையும் விரும்பி எடுத்துக் கொண்டான். அசுரர்களின் ருசியே தனி அல்லவா? அவர்கள் உச்சிரவாசு எனும் இறக்கை முளைத்த குதிரையை எடுத்துக் கொண்டனர். காமதேனு எனும் பசு மட்டும் தான் விரும்பியவரிடம் போக முடிவெடுத்தது. அது வசிஷ்ட முனிவரிடம் போய்ச்சேர்ந்தது. 

கெளஸ்துபம் மகாவிஷ்ணுவின் மார்பை அலங்கரிக்கப் போகிறேன் என்று அவரிடம் போய்விட்டது. பாற்கடலில் இருந்து வெளிவந்த மகாலக்ஷ்மியும் கெளஸ்துபத்துடன் மகாவிஷ்ணுவுக்கு மாலை அணிவித்து அவரை மணாளனாக ஏற்றுக் கொண்டு அவரோடு இணைந்து கொண்டாள். சந்திரனோ, சிவபெருமானின் முடிமீது அமர்ந்து ஒளிர்விடத் தொடங்கினான்.

இப்படி எண்ணற்ற செல்வங்கள் வெளிவந்த போதும் இன்னும் அமிழ்தம் மட்டும் வெளிவரக் கானோமே என்று இரு தரப்பாரும் மாய்ந்து மாய்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள். இப்படி அவர்கள் முழு மூச்சுடன் மூச்சிறைக்கக் கடைந்த சமயம் கடல் பிளந்து கொண்டது. தாமரை மலர்வது போல அது மெல்ல மெல்ல விரிந்து அதிலிருந்து தன்வந்த்ரி எனும் மருத்துவக் கடவுள் வெளிப்பட்டது. அதன் பொன்னிற மேனி முழுவதும் கடல் நீர் பொட்டுப் பொட்டாக மிளிற, கையில் ஒரு பொற் கலசத்தை ஏந்திக் கொண்டு, அதில் அமிழ்தம் மேல் மட்டம் வரை தளும்பி ஆட வெளிவந்தது. 

அவ்வளவுதான். பஸ் வந்து நின்றதும் இடம் பிடிக்கப் பாய்ந்து ஏறும் பயணிகளைப் போலவும், வீட்டு வாயிலில் எறிந்த இலைக்குப் பறக்கும் நாய்கள் போலவும், அசுரர்களும் தேவர்களும் அந்த தன்வந்த்ரி மீது பாய்ந்தனர். அந்த தன்வந்த்ரி இவர்களைக் காட்டிலும் புத்திசாலி அல்லவா? அவர் என்ன செய்தார் தெரியுமா? அவர் அமுத கலசத்தைத் தாங்கிக் கொண்டு விண்ணில் பறக்கத் தொடங்கினார்.

விடுவார்களா நமது அசுரர்களும் தேவர்களும், அவர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். யார் முந்திச் செல்வது என்பதில் போட்டி, நீயா நானா என்ற அவசரம். நாயாய் பறப்பது இதுதானோ? இரு பிரிவினருக்கும் அமுத கலசம் தங்களுக்கு வேண்டும் என்கிற வேகம். அமிழ்தம் கிடைத்தால் ஆளுக்குப் பாதி பாதி என்று போட்டு ஒப்பந்தம் காற்றில் பறந்து போய்விட்டது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் பரந்தாமன். இந்த உலகத்தின் நன்மைக்காகத் தான் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கருதினார். இந்த அமிழ்தம் அக்கிரமத்தையே தொழிலாகக் கொண்ட அசுரர்கள் கையில் மாட்டிவிடக்கூடாது, அப்படி மாட்டிவிட்டால் காலம் முழுவதும் இவர்களின் அக்கிரம தொல்லைகள்தான். ஆகவே எப்படியாவது அமுத கலசத்தை அவர்களிடமிருந்து காப்பாற்றிவிட வேண்டுமென்று முடிவு செய்தார்.

அடுத்த நொடி மகாவிஷ்ணு ஓர் அழகிய மோகினியின் வடிவை எடுத்துக் கொண்டார். அடடா! அழகு என்றால் அத்தனை அழகு. இருண்ட அந்தக் கடற்பிரதேசம் முழுவதும் பளிச்சென்று பிரகாசம். அந்த மோகினியின் எழில், அவள் நிறம், அவள் அணிந்திருந்த மெல்லிய ஆடை, நகைகள், அன்ன நடை பயின்று அவள் தேவர்கள், அசுரர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்த இடத்தில் இடையில் புகுந்து நின்றாள். இந்த காட்சியை பாகவதம் எப்படி வர்ணிக்கிறது தெரியுமா?

"அந்த அழகிய இளம் பெண், மிக அழகான ஆபரணங்கள் உடைகள் அணிந்துகொண்டு, அவளுடைய அழகிய தொடைகள் யானையின் தந்தங்களைப் போல வெண்மையாக வழவழப்பாக மின்னிட, அன்னம் நடைபயிலுவதைப் போல நடந்து, நடக்கும் போது அவள் மெல்லிய இடை ஒடிந்துவிடுமோ என்று ஐயப்படும் அளவில், கருத்த விரிந்த அவள் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய, இடையில் அணிந்த மணிகள் கிண்கிணி போல் ஒலியெழுப்ப, தங்கக் குடங்களைப் போன்ற தனங்கள் அசைய, அந்த களத்திற்குள் நுழைந்தாள். அவள் மகாலக்ஷ்மியின் தோழியோ? அவள் செவிகளில் வைரங்கள் ஜொலிக்கும் அணிகலங்கள், சிவந்த கன்னங்கள், கூரிய நாசி, அழகொழுகும் முகம். இந்த கோலத்தில் அங்கு வந்தார் மோஹினி உருவில் மகாவிஷ்ணு. பார்த்தார்கள் தேவாசுரர்கள். ஓர்க்கண்களால் பார்த்தனர், ரசித்தனர், மோகம் தலைக்கேறி அத்தனை கூட்டமும் ஆடின, பாடின, அந்த அழகு தேவதையைத் தவிர இவ்வுலகம் அனைத்தையும் அவர்கள் மறந்தே போயினர்." ஸ்ரீமத் பாகவதம்.

அந்த கூட்டம் மெளனத்தில் ஆழ்ந்தது. அனைவர் வாய்களும் பிலங்கள் போல திறந்து கிடந்தன. அப்போது அந்த அழகு தேவதை வாய் திறந்து பேசினாள். "ஓ காசிபரின் மக்களே, நீங்கள் அமைதியாக இருந்தால் நான் இப்போது உங்களுக்கு இந்த அமிர்தத்தைப் பங்கிட்டு அளிப்பேன்" என்றாள் அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தியபடி. அவள் குரல் ஆயிரம் வானம்பாடியின் இனிய குரல்கள் போல இருந்தது.

"அப்படியே செய்கிறோம்" என்றனர் அனைவரும் ஒரே குரலில்.

பிறகு நடந்தது என்ன என்பதைச் சொல்லவா வேண்டும். மிகவும் சாமர்த்தியமாக அசுரர்களை தன் அழகால் மயக்கி அமிழ்தம் முழுவதையும் தேவர்களுக்குக் கொடுத்தாள். அசுரர்கள் ஏமாந்து போனார்கள். சண்டை துவங்கியது. அசுரர்கள் தோற்றார்கள். காரணம் மோஹினி கொடுத்த அமிழ்தம் அவர்களை அழியாமல் காத்தது. மறுமுறையும் மகாவிஷ்ணு தேவர்களைக் காத்து ஆட்கொண்டார். அசுரர்களைத் தனது மாயத் தோற்றத்தால் வீழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியோடு மோஹினி அவதாரத்தின் நோக்கம் முடிவடைந்துவிடவில்லை. இன்னும் இதற்கு வேலை இருக்கிறது. ஆகையால் நேரம் வரும் வரை தாருகவனத்தில் மோஹினி தங்கி இருந்தாள். தேவதாரு மரங்கள் அடங்கிய வனம் அது. ரொம்ப காலம் அங்கு தங்கினாள் பொறுமையாக.

அப்படி இருக்கும் காலத்தில் அங்கு மோஹினி யாருக்காகக் காத்திருந்தாளொ அந்த ஒரு மனிதன் வந்து சேர்ந்தான். அவன் ஒன்றும் சாதாரண மனிதன் அல்ல. மோஹினிக்கு ஏற்ற மோஹனன் அவன். நல்ல அழகு, வலுவான உடல், நல்ல லக்ஷணங்கள் பொருந்திய மனிதன். ஒரு கையில் திரிசூலமொன்றையும் மறு கையில் ஒரு கபாலத்தையும் தாங்கிக் கொண்டு வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். நின்றனர். வந்த மனிதன் வேறு யாருமல்ல, சாக்ஷாத் சிவபெருமானேதான். மிக அழகிய பிக்ஷாடனர் தோற்றத்துடன் வந்து சேர்ந்தார். 

அன்பர்களே! வழுவூர் போனீர்களானால் அங்கு ஆறடி உயரம் உள்ள அந்த பிக்ஷாடனர் விக்கிரகத்தைப் பாருங்கள், அதன் நின்ற தோற்றம், அதன் பின்னழகு, ஒரு காலை மடக்கி, மறுபுறம் திரும்பிப் பார்க்கும் நிலையில் அந்த சிற்பத்தின் அழகு, அடடா! காணக்கண் கோடி வேண்டும். என்ன அருமையான சிற்பக் கலை. நாம் பெருமைப்படத்தான் வேண்டும். 

பிக்ஷாடனரும் மோஹினியும் சந்தித்தனர். கண்ணோடு கண் இணைந்தது. இது எதேச்சையாக நடந்த நிகழ்ச்சி அல்ல. இது முன்கூட்டியே திட்டமிட்டப்பட்ட சந்திப்பாக இருந்தது. மகிஷி எனும் எருமை முக அரக்கியின் அராஜகங்களை ஒடுக்க இறைவன் திட்டமிட்ட சந்திப்பு இது. யார் இந்த மகிஷி?

மகிஷி என்ற ஓர் அரக்கி. இவளுக்கு மனித உடலும் எருமை முகமும் உண்டு. அவள் கடும் தவம் செய்து வரங்களைப் பெற்றாள். அவள் செய்த இரங்கி அவள் கேட்ட வரங்கள் கொடுக்கப்பட்டன. அது அவளுக்கு மரணம் என்று ஒரு வந்தால் அது சிவபெருமானுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் பிறந்த ஒரு ஆண் மகவினால்தான் கிடைக்க வேண்டும். அந்த ஆண் குழந்தையும் இப்பூவுலகில் 16 வயது சாதாரண சிறுவனாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பது அவள் கேட்ட வரம்.

அந்த மகிஷியை அழிக்க நேரம் வந்து விட்டது. மகாவிஷ்ணு ஒரு அழகிய மோகினியாகவும், சிவபெருமான் பிக்ஷாடனராகவும் வந்து ஒன்று சேர்ந்தனர். அவர்களுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. இரு கடவுளரும் அந்தக் குழந்தையை ஆசீர்வதித்தனர். தங்கள் சக்திகள் அனைத்தையும் அந்த குழந்தைக்குக் கொடுத்தனர். பிறந்த அந்த குழந்தையைக் காட்டில் விட்டுவிட்டு இருவரும் தத்தம் இருப்பிடம் சேர்ந்தனர்.

அந்த குழந்தை பந்தள ராஜனால் எடுத்து வளர்க்கப்பட்டது. குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிடப்பட்டது. அந்தச் சிறுவன் 16 ஆண்டுகள் வாழ்ந்து மகிஷியை வதம் செய்த பின் தன் இருப்பிடம் சென்றது. இது ஐயப்பனின் வரலாறு.

பிக்ஷாண்டாரும் மோஹினியும் காட்டில் சுற்றி வந்தனர். அந்த காட்டுக்கு தாருக வனம் என்று பெயர். அந்த வனம் அமைதியான இடம். இந்த தாருக வனத்தில் அனேக ரிஷிகளும் தவம் புரிவோரும் வாழ்ந்தனர். அந்த மகரிஷிகள் ஒன்றுகூடி இறைவன் இருக்கிறானா என்று விவாதித்தனர். அவர்கள் எடுத்த முடிவு, கடவுள் என்று எவரும் இல்லை தங்கள் தங்கள் கர்மாக்கள் ஒன்று சேர்ந்து வலிமை பொருந்தியதாக அமைந்து நமக்குப் பலாபலன்களைக் கொடுக்கிறது என்று நம்பினார்கள். இந்த நிலை நீடித்திருக்க சிவபெருமான் விரும்பாமல் இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினார்.

பிக்ஷாடனராக வந்திருக்கும் சிவபெருமான் மோஹினியுடன் தாருகவனத்தில் ரிஷிகளிடம் பிக்ஷை கேட்டுப் புறப்பட்டார். கையில் கபாலம் ஏந்தி பிக்ஷை கேட்டு வருபவரை ரிஷிகள் அதிசயத்துடன் பார்த்தார்கள். குபேரன் உட்பட வையகத்தின் செல்வங்களையெல்லாம் படைத்த எம்பெருமான் கையில் பிக்ஷை பாத்திரம் ஏந்தி வந்த காட்சியை என்னென்பது? தருகவனத்தில் வசித்த ரிஷ்களின் பத்தினிமார்கள் கையில் அன்னமும் காய் கனிகளும் கொண்டு வந்து இவர்களை எதிர் கொண்டார்கள். தங்கள் கணவன்மார்கள் செய்யும் யாகங்களுக்காக எப்போதும் வேலை செய்துகொண்டிருக்கும் இவர்கள் இப்போது கையில் பிக்ஷை ஏந்தி வந்திருக்கும் பிக்ஷாடனருக்கு இட காத்திருந்தார்கள். ரிஷிகள் தலையசைத்து சம்மதம் தெரிவிக்க இவர்கள் பிக்ஷையிட தயாராக இருந்தார்கள். பிக்ஷாடனரைக் கண்ட ரிஷி பத்தினிகள் அவருடைய தேஜசைப் பார்த்து அதிசயித்து நின்றார்கள். இது என்ன விந்தை. பிக்ஷாடனரின் பின்னால் அந்த ரிஷி பத்தினிகள் தங்களை மறந்து செல்லத் தொடங்கினார்கள்.

இங்கு இந்தவிதமாக பிக்ஷாடனரைப் பின்பற்றி ரிஷி பத்தினிகள் சென்று கொண்டிருக்க, அங்கு ரிஷிகள் யாகம் செய்துகொண்டிருந்த யாகசாலைக்குச் சென்றாள் மோஹினி. அங்கு சென்ற மோஹினி தன் இனிய குரலெடுத்துப் பாடினாள். அதற்கேற்ப ஆடத் தொடங்கினாள். ரிஷிகளின் கவனம் யாகத்திலிருந்து இப்போது மோஹினியின்பால் திரும்பியது. அதே நேரம் பிக்ஷாடனரும் அவரைப் பிந்தொடர்ந்த பத்தினிகளும் யாகசாலையைக் கடந்து சென்றனர். அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்த ரிஷிகளுக்கு அதிர்ச்சி. இது என்ன பிக்ஷையெடுத்துக் கொண்டு ஒருவர் செல்ல, அவர் பின்னால் பத்தினிகள் அணிவகுத்து செல்வது ஏன்? திகைத்தனர். பேச்சு நீங்கினர். வாய் பிளந்தனர். இவர்களுக்கெல்லாம் என்ன ஆயிற்று. ஏன் இவர்கள் இப்படி அந்த பிக்ஷாடனர் பின் செல்கின்றனர்? கொபம் தலைக்கேறியது ரிஷிகளுக்கு. முன்னால் சென்று கொண்டிருந்த பிக்ஷாடனரை கூவி அழைத்தனர். "ஓய்! பிக்ஷை ஏற்க உமக்கு இந்த வனாந்தரம்தான் கிடைத்ததா? இங்கு யார் இருக்கிறார்கள் உமக்கு பிக்ஷையிட. நாங்கள் செய்துகொண்டிருக்கும் யாகத்துக்கு இடையூறு செய்கிறீரே!" என்றனர்.

இதனைக் கேட்டுக்கொண்டு பிக்ஷாடனர் மோஹினியின் அருகில் சென்றார். ரிஷிகளைப் பார்த்து சொன்னார், "ஓ! சிறந்த ரிஷிகளே! நீங்கள் யாகம் புரிவதைப் போலவே நானும் தனித்திருந்து யோகம் செய்ய இந்த இடம் நாடி வந்தேன். என் மனைவியுடன் அமைதியான இடம் நாடி வந்த இடத்தில் பிக்ஷை எடுத்தோம், என்ன தவறு?" என்றார்.

ரிஷிகளுக்கு மற்றுமொரு அதிர்ச்சி. அப்போதுதான் அங்கு வன்த ஒரு மோஹினியின் பால் ஈர்ப்பு கொண்டு அவளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவள்தான் அந்த பிக்ஷாடனரின் மனைவி என்பது தெரிந்து அதிர்ந்தனர். 

பிக்ஷாடனரைப் பார்த்து கேட்டார்கள், " ஐயா! இவள் உன் மனைவியா? முற்றும் துறந்தவர்களான எம்மைப் போன்ற ரிஷிகளின் முன்பு அவள் நடந்துகொண்டதைப் பார்த்தாயா? ஆடுகிறாள், பாடுகிறாள், எங்கள் மனங்களைக் கெடுக்கிறாள். அவள் உம் மனைவியானால் அவள் கற்பு நிலை என்னவாயிற்று? ஏன் அவள் இப்படி நடந்து கொள்கிறாள்? என்றனர்.

பிக்ஷாடனர் மனம்விட்டுச் சிரித்தார். அந்த வனமே அவர் சிரிப்பை எதிரொலித்தது. 

"யாரது இப்படி பேசுவது? ஒரு பெண் வந்து பாடுகிறாள், ஆடுகிறாள் என்பதற்காக நீங்கள் செய்து கொண்டிருக்கும் புனிதமான யாகத்தை மறந்துவிட்டு அவள் பின்னால் வந்து ரசித்துக் கொண்டு நிற்கிறீர்களே. உங்கள் தவம் என்ன ஆயிற்று.? இதுதானா உங்கள் தவம்" என்று கேலி செய்தார்.

"என் மனைவி என் பின்னாலேயே உறுதியாக நிற்கிறாள். உங்கள் மனைவிமார்கள் என் பின்னால் வரிசையாக மோகித்து வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் யாருடைய கற்பு நிலைபற்றி கவலைப் படுகிறீர்கள்." என்றார். அவ்வளவுதான் ரிஷிகள் வாயடைத்து போய்விட்டார்கள். புதிய மனிதன் சொல்வது சரிதான். தங்கள் மனைவிமார்கள் அவர் பின்னால் ஓடுகிறார்கள், நாம் அவர் மனைவியைக் குறைகூறப் போனோமே என்று வெட்கினார்கள்.

பிக்ஷாடனரும், மோகினியும் பின்னர் அங்கு இருந்த வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றனர். வசிஷ்டர் அவர்களை மனமுவந்து பணிந்து வரவேற்றார். வசிஷ்டரும் அவர் மனைவியும் பாய் விரித்து இவர்களை அமரச் செய்து, உணவு பரிமாறி உபசரித்தனர். உணவுக்குப் பிறகு இருவருக்கும் தாம்பூலம் கொடுத்து, சந்தனம் தடவி மரியாதை செய்தனர். மகேஸ்வரனும், மகாவிஷ்ணுவும் பிக்ஷாடனராகவும் மோகினியாகவும் வந்திருந்த நிலையில் அவர்களுடைய உபசரிப்பில் மனமகிழ்ந்து அவர்களை ஆசீர்வதித்துவிட்டு அவரவர் கைலாய மலைக்கும், வைகுண்டத்திற்கும் திரும்பச் சென்றனர்.

அவர்கள் அங்கிருந்து போனபின்பு தாருகவனத்து ரிஷிகள் அவமானப்பட்டு முகம் கருத்து நின்றனர். தங்கள் மனைவிமார் நடந்து கொண்ட முறையில் மனம் கலங்கியிருந்தனர். அந்த குழப்பத்திலும் கோபத்திலும் அவர்கள் மனதில் உதித்தது ஓர் எண்ணம். இதற்கெல்லாம் காரணமான அந்த மனிதனைக் கொன்றால் என்ன என்பதுதான் அது. ரிஷிகள் ஒருமனதாக இந்தத் தீர்மானத்துக்கு சம்மதம் தெரிவித்தார்கள். இப்படிப் பட்ட கொலைபாதகச் செயலைச் செய்ய அவர்கள் "அபிச்சார ஹோமம்" எனும் அநாசார ஹோமத்தைச் செய்யத் தொடங்கினார்கள். 

எரியும் ஹோமகுண்டத்தில் காரமான மிளகாய்களை வார்த்தார்கள். மற்ற ஹோம திரவியங்களை இட்டார்கள். ஹோமகுண்டத்திலிருந்து கருத்த புகையும், நெருப்பும் வெளிக்கிளம்பியது. எங்கும் ஒரே மிளகாயின் கார நெடி. ரிஷிகள் கண்களை மூடி மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டிருந்தனர். நல்ல வேத மந்திரங்களைப் போல் இல்லாமல் இந்த தீய மந்திரங்களின் உச்சரிப்பு வித்தியாசமாக ஒலித்தது.

அப்போது ஹோமகுண்டத்தில் எரிந்து கொண்டிருந்த தீயிலிருந்து ஒரு பெரிய சர்ப்பம் 'உஸ்ஸ்" என்று சப்தம் செய்துகொண்டு விஷத்தைக் கக்கிக் கொண்டு எழுந்தது. அப்படி எழுந்த அந்த சர்ப்பம் நேரே சென்று சிவனுடைய கழுத்தை குறிவைத்துப் பறந்து சென்றது. ஆலகால விஷத்தைத் தன் கரங்களில் எடுத்து விழுங்கிய அந்த நீலகண்டனின் கழுத்தை நோக்கி இந்த பாம்பு அம்புபோலச் சென்றது. தன் கழுத்தைக் குறிவைத்து வரும் அந்த விஷ ஜந்துவைத் தன் இரு விரல்களால் பிடித்து அதைத் தன் இடையில் கச்சு போல அணிந்து கொண்டார். 

கோபம் கொண்ட ரிஷிகள் மறுபடி ஒரு புலியை உருவாக்கி அதனை சிவன் மீது ஏவினர். அதை எதிர்பார்த்திருந்த சிவபெருமான் அதை ஒரு விரலால் அடித்துக் கொன்று அதன் தோலைத் தன் இடையில் அணிந்து கொண்டார்.

தொடர்ந்து சளைக்காமல் ரிஷிகள் கோபாக்கினி ஜுவாலையையும், காதைக் கிழிக்கும் சப்தத்தை எழுப்பும் டமருகத்தையும் அவர் மீது ஏவினர். அவற்றை மெல்லத் தன் கரங்களில் வாங்கி அமைதியாக வைத்துக் கொண்டார். சிவபெருமானின் இடக்கரத்தில் மஞ்சள் நிற ஜுவாலையுடன் அந்தத் தீக்கதிர் அமர்ந்துவிட, டமருகம் 'ஓம்' 'ஓம்' என ஒலியெழுப்பிக் கொண்டு வலது கரத்தில் அமர்ந்தது.

ஹோமகுண்டத்தில் எழுந்த விஷ தேனீ ஒலி எழுப்பி சிவனது நடனத்து இசைக்கு ஸ்ருதி சேர்த்தது. உலகில் நிலவும் அத்தனை நோய்களும் 'முயலகன்' எனும் குள்ள தீய உருவத்தில் சிவபெருமான் நடனமாட மேடை அமைத்துக் கொடுத்து காலடியில் வீழ்ந்தது.

சிவபெருமான் ரிஷிகளைப் பார்த்து முறுவல் செய்தார். கண்களில் கேலிச் சிரிப்பு தெரிந்தது. அவ்வளவுதான் தாங்கள் நசுக்கப்பட்டதாக உணர்ந்த ரிஷிகளின் கோபம் கட்டுக்கடங்காமல் வெளிப்பட்டது. உடனே ஏராளமான ஹோம திரவியங்களைத் தீயிலிட்டு தீய மந்திரங்களை உரக்கக் கூவினர். அப்போது அந்த ஹோம குண்டத்தீயிலிருந்து தீமைகள் யாவையும் உள்ளடக்கிய ஒரு கன்னங்கரிய மதயானை படீலென்று வெடித்துச் சிதறி வெளிப்பட்டது. யானையின் கண்களில் கோபாக்கினி சுடர்விட்டது. அது வாலை சுழற்ற கானகத்து மரங்களெல்லாம் சடசடவென்று வீழ்ந்தது. காலால் பூமியை உதைக்க அங்கு புழுதிப் படலம் புறப்பட்டது. 

அந்த கரிய மதயானையை ஏவிவிட்டனர் ரிஷிகள் தன்னை எதிர்க்க வந்திருக்கும் புதியவரை. யானை பூமி அதிர ஓடி வந்து பிளிறிக்கொண்டு வாயைத் திறந்து துதிக்கையை தூக்கிக்கொண்டு அந்த புதியவரை விழுங்க ஓடிவந்தது. . சற்றும் கலக்கமின்றி அவர் அது தன்னை நெருங்குமுன்பாக அந்தப் புதியவர் மிகச் சிறு ஈ அளவுக்கு உடலைச் சுருக்கிக்கொண்டு அதன் வயிற்றுக்குள் புகுந்து கொண்டார். அவ்வளவில் இந்த உலகம் இருண்டது. எங்கும் ஒரே மை இருட்டு.

உலகத்தில் இயக்கங்கள் நின்றன. காற்று வீசுவது நின்றது. கடல் அலைகள் வீசுவது நின்றது. பறவைகள் பறப்பது நின்றது. உலகத்து ஜீவராசிகள் அனைத்தும் செய்வதறியாது திகைத்து அதது நின்ற இடத்தில் நின்றது. தேவலோகத்தில் தேவர்கள் பயந்து ஓடிவரத் தொடங்கினர். தாருகவனத்து ரிஷிகள் மட்டும் புதியவன் மாண்டுபோனான் என்று மகிழ்ந்து ஆடிப்பாடி குதித்தனர். 

அங்கு அன்னை பார்வதி மகேஸ்வரி தன் குழந்தைகள் விநாயகர், நான்முகன் ஆகியோருடன் விளையாடிக் கொண்டிருந்தவர் இந்த மாற்றங்களைக் கண்டு திகைத்தார். எதையோ விழுங்கிவிட்டு உலகில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அதிர்ந்த யானையும் செய்வதறியாது திகைத்து நின்றது.

ஒரு சில விநாடிகள்தான் அப்படி. அடுத்த விநாடி அந்த யானையின் போக்கு விசித்திரமாக இருந்தது. அது ஏதோ பிரசவ வலியால் துடிப்பதைப் போல துவண்டது, குதித்தது, ஆடியது, மண்ணைப் பிராண்டியது. துதிக்கையை உயர்த்தி உரத்த குரலில் பிளிறியது. அது மகிழ்ச்சி ஆரவாரமல்ல. வலியின், துன்பத்தின், மரண ஓலம். 

திடீரென்று யானை கீழே விழுந்தது. பிளிறியது. மனத்தில் சென்று மோதிக்கொண்டது. உடலெங்கும் எரிகிறதோ, ஓடிப்போய் நீர்நிலைகளில் விழுந்து புரண்டது. அங்கிருந்த பெரிய குளத்துள் குதித்து உடல் முழுவதையும் மூழ்கி குளிரவைக்க முனைந்தது. அதற்கெல்லாம் குணப்படக்கூடிய வஸ்துவா உடலுக்குள் போயிருக்கிறது. அந்த மூட யானைக்குத் தெரியவா போகிறது?

யானை நீருக்குள் முழுவதும் மூழ்கியது. அப்போது உலகை அதிரவைக்கும் ஒரு பெரிய வெடிச்சத்தம். குளத்தின் நீர் வெடித்துச் சிதறி நாலாபுறமும் பாய்ந்து அடித்தது. அங்கு அப்போது ஒரு விநாடி அமைதியில் நீர்நிலை சமனமாக அதிலிருந்து வெளிக்கிளம்பியது ஒரு ஒளிப்பிழம்பு. நன்றாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு அதுவரை பரவியிருந்த இருளைக் கிழித்துக் கொண்டு வெளிவரும் இந்த ஒளிப்பிழம்பு யார், என்ன? ஆம், கைலைநாதனான சிவபெருமாந்தான் அந்த யானையின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிவந்திருப்பவர். 

அப்போது அவரைக் காண கண்கள் கூசுகின்றன. ஒளிமயமான உருவம். ஆறு கரங்கள், அவைகளில் விதவிதமான ஆயுதங்கள், இரண்டு கரங்கள் யானையின் கிழிக்கப்பட்ட உடலை இருபுறமும் விலக்கிக் கொண்டு வெளிக் கிளம்பிய காட்சி. ஒரு காலடியில் யானையின் தலை மாட்டிக் கொண்டிருக்க, மற்றோரு காலைத் தூக்கிக்கொண்டு, கண்கள் தீக்கனலைக் கக்க, தலையில் சிகைக் கற்றை கொத்து கொத்தாக புன்னை மலர்களின் கொத்து போல அசைய அங்கு பொன்னிறத்தில் கஜசம்ஹாரமூர்த்தி வெளிப்பட்டார். அடடா! கண்படைத்த பாக்கியம் இந்தக் காட்சியைப் பார்ப்பவர்கள் பெறுவார்கள். அன்று மட்டுமல்ல, இன்றும் இந்தத் திருவிழா நடக்கும் நாட்களில் சிவபெருமான் கஜசம்ஹாரமூர்த்தியாகத் தோன்றும் காட்சி அரிய காட்சி.

அப்போதுதான் உலகம் இருண்டுவிட்டதைக் கண்டு தன்னிரு குழந்தைகளில் விநாயகரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு பால முருகனைத் தன் இடுப்பில் சுமந்துகொண்டு பரமேஸ்வரி அங்கு வந்து சேரவும், அந்தக் குளத்திலிருந்து கஜசம்ஹாரமூர்த்தி எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. உலகம் வெளிச்சம் பரவத் தொடங்கியதும், அங்கு தந்தையை முதன்முதலில் பார்த்த குழந்தை முருகன், "அதோ! அப்பா! என்று அன்னையின் இடுப்பில் இருந்த குழந்தை தன் பிஞ்சு விரலைக் காட்டி அன்னைக்குச் சொல்கிறது". அதி அற்புதக் காட்சி, அதி அற்புத சிற்பம். வழுவூர் செய்த பாக்கியம், அவ்வூர் மக்கள் செய்த பாக்கியம்.

தாருகவனத்து முனிவர்கள் செய்த தவறால் பாதிக்கப்பட்டிருந்த யாகங்களுக்கு உரிய வேதபுருஷன் ஒரு மான் வடிவம் தாங்கி சிவபெருமானின் காலடியில் வந்து பணிந்தார். தன்னை வைத்து இந்த யாகம் செய்து பாபம் இழைத்த அந்த ரிஷிகளுக்காக வருந்தி மன்னிப்புக் கோரினார் வேதபுருஷன். சிவன் அந்த மானைத் தன் இடக்கையால் பிடித்துக் கொண்டு வேதங்களை எப்போதும் தன் செவிகளில் ஓதிக்கொண்டிருக்கும்படி பணித்தார்.

தங்கள் யாகத்தாலும் செய்த பாவங்களாலும் தாருகவனத்து முனிவர்கள் வருந்தினர். சிவ விஷ்ணுவுக்குச் செய்த அபகீர்த்தி செயல்களுக்கான பலன்களை அனுபவித்தனர். இறுதியில் தாங்கள் கொண்டு கொள்கைகள் எவ்வளவு தவறானது, இறைவன் ஒருவனே பரம்பொருள் என்பதை உணர்ந்து கொண்டனர். சிவபெருமானின் காலடியில் சென்று விழுந்து தங்கள் அறியாமைக்காக வருந்தி வேண்டினர். கோபத்துக்குச் சென்ற வேகத்தில் சிவபெருமான் அமைதி அடைந்து அவர்களை ஆட்கொண்டு அருளினார். 

கைலைநாதனின் இந்தத் திருவிளையாடலைத்தான் அன்னை பராசக்தியின் திருவிளையாடலாக குமரகுருபர சுவாமிகள் கரியின் தோல் போர்த்தியவளாக பாரவதியைப் போற்றுகிறார். 

சிவன் எனும் மகா ஒளியின் முன் மற்ற எவ்வகை ஒளியும் விளங்கா என்பதை திருமூலர் திருமந்திரத்தில் ஒரு பாட்டில் விளக்குகிறார். அது

"முத்தீக் கொளுவி முழங்கு எரி வேள்வியுள்
அத்தி உரி அரன் ஆவது அறிகிலர்
சத்தி கருதியது ஆம் பல தேவரும்
அத்தீயினுள் எழுந்தன்று கொலையே."

மூன்று வகையான தீயினை எழுப்பி, நாதத்தை வெளிப்படுத்துகின்ற அக்கினியின் செயலுள், யானை போன்ற கரிய இருளைக் கிழித்துக்கொண்டு வெளிப்படும் ஒளி இறைவனாக ஆதலை யாரும் அறியவில்லை. குறி, குணம் கூடிய பல தேவர்களும் அந்தத் தீயின் கண் வெளிப்பட்டபோது மறைந்தனர் என்பது இதன் பொருள்.

யாகத்தில் அக்னி வளர்த்து வேள்வி செய்வது போல அகத்தே உள்ள அக்னியைத் தலையின் மீது வளர்த்துச் செய்வது அக்னி காரியம். இங்கு முத்தீ என்பதை பெரியோர்கள் காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினியம் என்பர். இப்படி அந்த முத்தீயிலிருந்து எழுந்த சிவன் முன் அனைத்தும் அழிந்தது என்பதை விளக்கும் கயமுகாசுர சம்ஹாரக் கொள்கை விளக்குகிறது என்கிறார் திருமூலர். இது நிகழ்ந்த இடம் வழுவூர் என்கிறது புராணங்கள். இத்தகைய வரலாற்றில் சக்தியின் பெருமையை உணரச் செய்தமைக்கு நன்றி.