பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, October 23, 2011

உலக சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்


உலக சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்

நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் உலக பயங்கரவாதத்தை ஊக்கி வந்தவரும், அமெரிக்கர்களாலும் மற்ற உலக சமாதானவிரும்பிகளாலும் "Mad Dog" என வர்ணிக்கப்பட்டவருமான லிபிய அதிபர் மும்மர் கடாஃபி காட்டில் வேட்டையாடப்படும் மிருகத்தைப் போல வேட்டையாடப்பட்டு, அரைகுறை உயிரோடு சாலைகளில் இழுத்துச் செல்லப்பட்டு கோரமாகச் சுடப்பட்டு இறந்த செய்தியைப் பார்த்தோம், கேட்டோம். என்னதான் வாழ்நாள் முழுவதும் சர்வ அதிகாரங்களோடும், மக்களை அச்சத்திற்காட்பட வைத்தபோதும், இதுபோன்ற சர்வாதிகாரிகளின் முடிவு இப்படித்தான் அமைந்து விடுகிறது. இது இறைவனின் கட்டளை போலும்.

இவருக்கு முன்பும் பல சர்வாதிகாரிகள் இருந்திருக்கின்றனர். அவர்களுக்கு ஏற்பட்ட இப்படிப்பட்ட கோர முடிவுகள் இவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்குமா? தெரிந்துதான் இருக்கும். அப்படியிருந்தும் இவர்கள் ஏன் சர்வாதிகாரிகளாக, மக்களைக் கொடுமைப் படுத்தி அவர்களுடைய எதிர்ப்பை, ஆத்திரத்தை எதிர்கொண்டு இப்படி பரிதாபமாக உயிரிழக்க முன்வரவேண்டும். ஏன் தெரிந்தே பாழ் நரகக் குழிக்குள் அழுந்த வேண்டும்? இதெல்லாம் இவர்களுக்கும் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டாமா?

இவற்றைப் பற்றி யோசிக்கும் போது ஒரு உண்மைதான் புலப்படுகிறது. சர்வ வல்லமையும், சர்வ ஆளுமையும், சர்வ அதிகாரங்களும் அமைந்து விடுகிறபோது அறிவுக்கண் மூடிக் கொண்டு விடுகிறது. அது நியாயங்களைப் பார்ப்பதில்லை; மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில்லை. மக்கள் ஆற்றாது அழுத கண்ணீரைத் துடைக்க முயற்சி செய்வதில்லை. ஆணவம் ஒன்றே மனம் முழுவதும் வியாபித்து விடுகிறது. விளைவு? இதுதான்.


நாஜி ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லர்:

இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலத்தில் யூதர்களுக்கு எதிரான மனித இனக் கொடுமைகளை ஈவு இரக்கம் இல்லாமல், அரக்க உள்ளத்தோடு அரங்கேற்றியவர் ஹிட்லர்.

முதல் உலகப் போரில் ஈடுபட்ட ஒரு போர்வீரன், தன் பேச்சுத் திறமையால், தோற்றத்தால், நடத்தையால் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவராகத் திகழ்ந்த அடால்ஃப் ஹிட்லர், நல்லவிதத்தில் மாறுபட்டிருக்கலாமே! அப்படியில்லாமல் கொடுமை, இரக்கமின்மை, ஆணவம் இவற்றால் ஆட்கொள்ளப்பட்டு, அறிவுக்கண் மூடிவிட அநியாயங்களைக் கூச்சமில்லாமல் அரங்கேற்றிக்கொண்டிருந்தார்.

உலகம் ஒரு கோரமான போரைக் கண்டது. லட்சக்கணக்கில் மனித உயிர்கள் கருகி, சுடப்பட்டு, உயிர் இழந்தனர். நாடுகள் கபளீகரம் செய்யப்பட்டன. போலந்து வீழ்ந்தது. பிரான்சும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் ஹிட்லரின் மின்னல்வேகத் தாக்குதல்களால் செயலிழந்தன.

சோவியத் ரஷ்யாவுடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம் மீறப்பட்டது. ஹிட்லரின் ராக்ஷசப் படைகள் சோவியத் யூனியனுக்குள் மாப்பிள்ளை போல நுழைந்து முன்னேறியது லெனின்கிராட் வரையிலும். அப்போது பனிக்காலம் தொடங்கவே ஜெர்மானியப் படை துவண்டது, பனியைத் தாங்கிக்கொள்ள முடியாத அவலம் ஏற்பட்டது. அதுவரை பின்னோக்கி ஓடிய ரஷ்யப் படை வெகுண்டெழுந்தது. நாசிப்படைகளை நாசம் செய்யத் தொடங்கியது. திரும்ப வந்த வழியே ஓடினார்கள், ஓடினார்கள் ஜெர்மானியர்கள்.

ரஷ்யர்களும் விடாமல் துரத்தித் துரத்தியடித்தார்கள். அந்த ஓட்டம் பெர்லின் நகரத்தின் பதுங்கு குழியொன்றுள் ஹிட்லரும், அவர் காதலியும் ஓர் அவசரத் திருமணம் புரிந்துகொண்டு தங்களையே போர்த்தீயில் ஆஹுதியாக்கிக் கொண்டு சுவடுபடாமல் மாண்டுபோன நிகழ்வும் நடந்தேறியது. இடைப்பட்ட காலத்தில்தான் அந்த ஹிட்லர் ஆடிய ஆட்டம்?

அடடா! மனிதகுலம் இனி நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடுமைகள். அதில் மிச்சம் மீதி இருந்த கொடுமையாளர்கள் நியூரம்பர்க் நகரில் நடந்த நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு மின்சார நாற்காலியில் தங்கள் நல்லுயிரை நல்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வரலாறு ஒரு நீதிபதியாகத்தான் நடந்து கொள்கிறது.

ஹிட்லரின் அந்த கடைசி நிமிடங்கள். ............

தனது தளபதிகள், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் கூடி தரைக்கடியில் அமைந்த அந்த பங்கரில் அவசர ஆலோசனை நடந்தது. வேறு வழியில்லை. சோவியத் படைகள் தங்களை நெருங்கி வந்துவிட்டன. மேற்கத்திய நேச நாட்டுப் படைகள் இரு திசைகளில் பெர்லினுக்குள் நுழைந்து விட்டன. பிரான்சின் டி கால் ஒரு புறம், இங்கிலாந்தின் மாண்ட்கோமரி மறுபுறம், உள்ளே நுழைந்துவிட்ட அமெரிக்க ரஷ்யப் படைகள். இப்போதோ இன்னும் சிறிது நேரத்திலோ நம்மை கோழி பிடிப்பது போல அமுக்கிவிடுவார்கள். அதன்பின் நடைபெறப்போகும், அவமானங்கள், தண்டனைகள், மக்களின் வெறித்தனமான கோபத்தின் வெளிப்பாடுகள் இவைகள் எல்லாம் நம்மை அலங்க மலங்கடிக்கப் போகின்றன. என்ன செய்யலாம்?

1945 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி. பெர்லின் நகரைக் காக்கும் நாசி படைவீரர்கள் துப்பாக்கி தோட்டக்கள், பீரங்கிக் குண்டுகள் எதுவும் இல்லாமல் தவிக்கிறார்கள் என்ற செய்தியை பீல்டு மார்ஷல் கீட்டெல் என்பார் ஹிட்லரிடம் சொல்கிறார். தனது முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த ஹிட்லர் இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவசரத் திருமணம் செய்துகொண்ட ஈவா பிரானுடனும் சேர்ந்து தனது உயிர்த்தியாகத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். இல்லாவிட்டால் ரஷ்யர்களின் இரும்புப் பிடியில் சிக்கி பிராணனை விட வேண்டியிருக்குமே!

சயனைட் குப்பிகளை உட்கொண்டு இறக்கலாமா? சரி,  அது சரிவர வேலைசெய்யுமா என்பதை ஒரு நாய்க்கும் அதன் குட்டிகளுக்கும் கொடுத்துப் பார்த்து, அவை உடனடியாக சரிந்து மாண்டதைக் கண்டு, இது வேலை செய்யும் என்ற முடிவுக்கு வந்தனர். தரைக்கடியில் உள்ள பங்கரில் ஹிட்லரின் நம்பிக்கைக்கு பாத்திரமான அத்தனை எஸ்.எஸ். நாசிப் படைத் தலைவர்களும் கூடினர். பேச்சு மறைந்து அமைதி நிலவியது.

அப்போது ஹிட்லரும், ஈவாவும், அந்த பங்கரில் உள்ளுக்குள் உள்ளாக இருந்த மற்றொரு பங்கருக்குக் கதவை தாளிட்டுக் கொண்டு செல்லுமுன்பாக துணைக்கு நின்ற அத்தனை நாசிக்களிடமும் பிரியாவிடை பெற்றனர். பலமுறை, பலரும் முயன்றும் கொல்ல முடியாத ஹிட்லரின் உயிர் அன்று அவராலேயே பறிக்கப்பட விருந்தது.

ரஷ்யப் பிடியில் சிக்க வேண்டும். வேண்டாம் அந்தக் கொடுமை. அவர்களிடம் மிலான் நகரில் முசோலினி பட்டபாடுதான் தெரியுமே! 3.30 மணி. உலகத்தை அஞ்ச வைத்துக் கொண்டிருந்த ஹிட்லர் தனது கைத்துப்பாக்கியை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு சுட்டுக்கொண்டார். உலகமே அஞ்சிய அந்த உயிர் உடனடியாகப் பிரிந்தது. தலையிலிருந்து குருதி கொப்புளிக்க அருகிலிருந்த சோபாவில் சரிந்தது ஹிட்லரின் உடல். பக்கத்திலிருந்து மேஜையில் முட்டி நின்றது அவரது தலை. அருகிலிருந்த ஈவா சையனைட் விஷக் குப்பியை எடுத்துக் கடித்தாள். அவர் உயிர் பிரிந்து உடல் சரிந்தது.

முன்கூட்டியே நாசி அதிகாரிகளுக்கு இடப்பட்ட கட்டளைக்கிணங்க இவ்விருவர் உடலும் பங்கருக்கு வெளியே இழுத்து வரப்பட்டு நாலைந்து கேன் பெட்ரோலை அவற்றின் மீது ஊற்றி தீக்குச்சியொன்றை உரசி அவற்றின் மீது வீசப்பட்டது. உலகத்தை உரையவைத்த அவ்வுடல் தீப்பற்றி எரியத் தொடங்கியது. மணித்துளிகள் கரைந்து இரண்டு மணியானபின் அவையிரண்டும் கரிக்கட்டைகளாக மாறின. அந்த கரிக்கட்டைகளை ஒன்று திரட்டி சாம்பரை பூமிக்கடியில் அமைந்திருந்த பதுங்கு குழியொன்றில் பதுக்கி வைக்கப்பட்டது.

இப்படி அமைந்தது அந்த சர்வாதிகாரியின் முடிவு. "ஆடிய ஆட்டமென்ன, தேடிய செல்வமென்ன, கூடுவிட்டு ஆவிதான் போனபின்னே கூடவே வருவதென்ன" என்று நமது டி.எம்.எஸ். பாடிய வரிகள் நினைவுக்கு வருகிறதல்லவா? ஆம்! அதுதான் 'தன் வினைத் தன்னைச் சுடும்' எனும் வரிகளுக்கு விளக்கம்.



இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி:

உலகமே திடுக்கிடும் வண்ணம், ஹிட்லருக்கும் முன்னோடியாய் வாழ்ந்த சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி. இத்தாலி மட்டுமல்ல, உலக நாடுகளே இவரது ஃபாசிஸக் கொள்கையால் ஆட்டம் கண்டிருந்த நேரம். போரின் உக்கிரம் தாங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

முசோலினிக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? 'கரடி விட்டால் போதும் கம்பளி மூட்டை வேண்டாம்' என்கிற நிலை. அது என்ன?

ஒரு ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. கரையில் இருந்த ஒருவன் ஆற்று வெள்ளத்தில் கருப்பாக ஒரு மூட்டை அடித்துக் கொண்டு வருவது தெரிந்தது. அதோ! ஒரு கம்பளி மூட்டை, அதை இழுத்துக் கொண்டு வருகிறேன் பார் என்று வெள்ளத்தில் குதித்து நீந்திப் போய் அந்த மூட்டையைப் பிடித்தான். அது ஒரு கரடி. வெள்ளத்தில் சிக்கியிருந்த அந்தக் கரடி ஒரு பிடிமானம் கிடைத்ததும் இவனை நன்றாக இறுகப் பிடித்துக் கொண்டது. இவன் மூச்சுத் திணறினான். ஐயோ! எனக்குக் கம்பளி மூட்டை வேண்டாம், இந்தக் கரடி விட்டால் போதும்! என்று கதறி அழுதானாம். பிறகு என்னவாயிற்று! என்ன ஆகவேண்டுமோ அது ஆகியிருக்கும்.

சரி! இனி முசோலினியிடம் வருவோம். போரின் திசை மாறத் தொடங்கியது. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும், ரஷ்யப் படையினரும் முசோலினியைத் தேடி அலைந்தனர். இவர் எப்படியாவது இத்தாலியை விட்டு வெளியேறி ஹிட்லர் இருக்குமிடம் போய்ச் சேர்ந்துவிட்டால் போதும் என்று ஓட்டமெடுத்தார். அவருடன் அவருடைய காதலியும், நடிகையுமான கிளாரா பெத்தாசி, பாசிச கட்சித் தலைவர்கள் பதினைந்து பேர் ஆகியோருடன் ஓடத் தொடங்கினார். தோல்வியின் விளிம்பில் இருந்து கொண்டு உயிர் பிழைத்தால் போதுமென்று ஓட்டமெடுத்த முசோலினியை விதி துரத்திக் கொண்டு வந்தது.

 1945ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி, முசோலினியும் அவர் காதலியும் மிலான் நகரில் ஒரு விடுதியில் ரகசியமாகத் தங்கியிருந்துவிட்டுக் காலையில் மாறுவேடம் தரித்து, ஜெர்மானிய ராணுவ உடையில் தப்பி ஓட முயற்சி செய்கிறார்கள். வழியில் சில இத்தாலிய கம்யூனிஸ்ட் வீரர்கள் இவர்களை அடையாளம் கண்டுகொண்டு பிடித்து விடுகிறார்கள். அவர்களிடம் இவர் அப்போது சுதேசியம் பேசுகிறார். நானும் இத்தாலிக்காரன், நீங்களும் இத்தாலிக் காரர்கள், எங்களை எப்படியாவது போக விட்டுவிடுங்கள், நாங்கள் ஹிட்லரிடம் சென்று சேர்ந்து விடுகிறோம் என்று கெஞ்சினார் முசோலினி.

ஐயோ பாவம்! ஒழிந்து போகட்டும் என்று சுதேசி உணர்வுடன் அந்த இத்தாலியர்கள் இவரை விட்டுவிட்டார்கள். மேலும் சிறிது தூரம்தான் சென்றிருப்பார்கள். மறுபடியும் மிலானிலிருந்து சிறிது தூரத்திலிருந்த கிராமமொன்றில் ஒரு கூட்டத்தாரிடம் சிக்கிக் கொண்டனர். இவரது விதி. அவர்கள் ரஷ்ய கம்யூனிஸ்டுகள். இவருடைய சுதேசிக் கெஞ்சல்கள் அவர்களிடம் எடுபடுமா? பிடித்தார்கள். நடுத்தெருவில் முசோலினியையும், அவருடைய காதலியையும், கூட வந்த பாசிஸ்டுகளையும் சுட்டுக் கொன்றார்கள். எப்படி?

வாழ்நாளெல்லாம் உத்தரவிட்டே பழகிவிட்டதால் பழக்க தோஷத்தால், தன்னைச் சுட வந்த சிப்பாய்க்கும் இவர் உத்தரவு பிறப்பித்தாராம். "என் நெஞ்சிலே சுடு!" என்று. எப்போதும் அவர் உத்தரவு எத்தனை சீக்கிரம் நிறைவேற்றப்படுமோ, அதே போல அவனும் உடனே சுட்டான். முதல் குண்டு நெஞ்சில் பாய்ந்ததும் கீழே சரிந்து வீழ்ந்தார் முசோலினி. ஆனால் உயிர் பிரியவில்லை. கிட்டே வந்து பார்த்த சிப்பாய் உயிர் இருக்கிறது என்பது தெரிந்ததும் மீண்டுமொரு முறை நெஞ்சைக் குறிபார்த்து சுட்டான். முசோலினி பிணமானார்.

 பிணமாகிக் கீழே விழுந்து கிடந்த இவர்களுடைய பிணங்களை எத்தனை அவமானப் படுத்த வேண்டுமோ அத்தனை அவமானங்களைச் செய்தார்கள்.  பிணங்களின் முகத்தில் சிறுநீர் கழிக்க மக்கள் க்யூவில் நின்றார்கள். பிணத்தை எடுத்துக் கொண்டு மிலான் நகருக்கு வந்து நள்ளிரவில் அங்குள்ள ஒரு பெட்ரோல் ஸ்டேஷனுக்கு அருகில் கொண்டு வந்து போட்டனர். பின்னர் இவர்களை ஒரு கூரையின் விட்டத்தில் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டார்கள்.

 பகல் பொழுதானதும் மக்கள் வந்து பார்த்து இப்படித் தொங்கும் இவர்களில் முசோலினியும் இருப்பது கண்டு செய்தியை ஊர் முழுவதும் பரப்பினார்கள். மக்கள் துக்கப்படுவதற்குப் பதிலாக உற்சாகத்தில் திருவிழாவாகக் கொண்டாடினார். பிணத்துக்குத் தரவேண்டிய மரியாதையைக்கூட மக்கள் இந்தப் பிணங்களுக்குத் தரவில்லை. மணிக்கணக்கில் மக்கள் பிணங்களின் முகத்தில் காரித் துப்பினார்கள்; காலால் உதைத்தார்கள், கல்லால் அடித்தார்கள்; கையில் கிடத்ததையெல்லாம் எடுத்து அடித்தார்கள்.அப்படி ஊரும், நாடும் வெறுக்கும் அளவுக்கு அவர் நடந்து கொண்டதாலா?

சர்வாதிகாரிகள் ஆட்டம் போடும் வரை சரிதான். வீழ்ந்து விட்டால் என்ன நடக்கும்? ஆம்! முசோலினிக்கு நடந்தது போலத்தான் நடக்கும். அவர் பிணத்தை மக்கள் படுத்திய பாட்டில் அவர் தலை உடைந்தது. ரத்த விளாராக அந்தப் பிணங்கள் மிலானில் தொங்கின. கசாப்புக் கடைகளில் மாமிசங்கள் தொங்கவிடப்படுவதைப் போல. சாதாரணமான நாட்களில் இதுபோன்ற காட்சிகள் நமது வயிற்றைப் பிசையும். வேதனையைத் தரும். ஆனால்? இங்கு, இப்போது? அவர்கள் உடல்கள் பட்ட பாடு, அவர்கள் அதுநாள் வரை அனுபவித்த சுகம், செளகரியம், ஆடம்பரம் அனைத்தும் கிழித்துத் தொங்கவிடப்பட்டது போல இருந்தது.

வேண்டாம். இனி எவருமே சர்வாதிகாரியாக ஆகவேண்டாம். நாம் நினைக்கிறோம். ஆனால் சந்தர்ப்பங்கள் அவ்வப்போது இதுபோன்ற சர்வாதிகாரிகளை உருவாக்கிக் கொண்டுதானே இருக்கிறது. யார், எப்போது சர்வாதிகாரியாக ஆவார் என்பது யாருக்குத் தெரியும்? சரித்திரம் தரும் பாடங்களைப் புரிந்து கொள்வோம்.


ருமானியா நாட்டின் சர்வாதிகாரி நிக்கோலஸ் சேசஸ்கோ:

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ஐரோப்பா கண்டம் முழுவதும் கிட்டத்தட்ட சிவப்பாக மாறியது. மாபெரும் நாடான சோவியத் யூனியனின் வலுவான இரும்புக் கரங்கள் ஐரோப்பிய நாடுகளை கம்யூனிச நாடாக ஆக்கியது. மாறியது மட்டுமல்ல, அந்த நாடுகளின் மீதான சோவியத் யூனியனின் இரும்புப் பிடியும் தொடர்ந்து இருந்து வந்தன. அவர்களுக்கு எதிராக எழும் எந்த மக்கள் கிளர்ச்சிகளும் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்பட்டன.

ஹங்கேரியில் இம்ரே நாகியின் தலைமையில் நடந்த வர்க்கப் புரட்சி, ரஷ்ய டாங்குகளின் இரும்புச் சக்கரங்களால் நசித்து ஒழிக்கப்பட்டது. புடாபெஸ்ட் நகரம் ரத்தக்களரியாக மாறியது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் உயிர் துறந்தவர் போக மிச்சமுள்ளவர்கள் அண்டாவ் நதியின் பாலத்தைக் கடந்து ஆஸ்திரியா நாட்டுக்குள் நுழைந்து உயிர் பிழைத்தார்கள். அதன் பிறகு பல ஆண்டுகள் ஐரோப்பா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. காரணம் மக்களின் கழுத்தை அழுத்தி வந்து அடிமைத் தளை.

இந்தச் சூழ்நிலையில் ருமானியாவை நிக்கோலஸ் சேசஸ்கோ எனும் சர்வாதிகாரி ஆண்டு வந்தார். அவருடைய ஆடம்பரமான மாளிகையும், வாழ்க்கை முறைகளும், ஆடை ஆபரணங்களும், கம்யூனிஸ்டுகள் வெறுக்கும் முதலாளி வர்க்கத்தின் ராஜாக்கள்கூட பெற்றிருக்க வில்லை என்பது உலக நாடுகளின் கணிப்பு.

 புக்காரஸ்ட் நகரத்து மக்கள் எழுச்சி பெற்றார்கள். மெல்ல சிவப்பு நாடுகளில் ஜனநாயக மூச்சுக் காற்றைச் சுவாசிக்க விரும்பிய மக்கள் தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினார். புக்காரஸ்ட் நகரம் விதிவிலக்கல்ல. அதிலும் ருமானியாவில் நடந்த அடக்குமுறை, ஆடம்பரம் இவற்றால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள் உயிரையும், உடைமைகளையும் இழக்கச் சித்தமாகத் தெருவுக்கு வந்தார்கள்.

போராட்டம் வலுவடைந்தது. உலகத்து மக்கள் பார்வை ருமானியாவின் பக்கம் விழுந்தது. கம்யூனிசத்தின் ஆணிவேரே ஆட்டம் கண்டு கொண்டிருந்த தருணத்தில் இவர் மட்டும் என்ன சாதித்து விட முடியும். மக்கள் சக்திக்கு முன்னால் சர்வாதிகார ஆட்சி நிலைத்து நிற்க முடியுமா? நிக்கோலஸ் புரிந்து கொண்டு விட்டார். தனது நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதையும் புரிந்து கொண்டார். எப்படியாவது தப்பிப் பிழைத்து ஓடிவிட்டால் என்ன என்று எண்ணினார். முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. கண்களில் எண்ணெயை விட்டுக் கொண்டு காவலிருக்கும் மக்கள் பிடித்து விட்டனர்.

இந்த நிலையில் 1989ஆம் வருஷம் புரட்சி கரைகடந்து சென்றது. மக்கள் அண்ணாந்து பார்க்கக்கூட பயந்திருந்த அதிபரின் மாளிகைக்குள் மக்கள் வெள்ளம் புகுந்தது. சர்வாதிகாரி தப்பிப்போக முடியாதபடி வளைத்துப் பிடிக்கப்பட்டதோடு மக்கள் நீதிமன்ற விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார். நீதியின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர்.

மக்களின் வெறுப்புப் பார்வைகள் சுட்டெரிக்க இவர்கள் விசாரணை நடைபெற்றது. ஏராளமான சொத்துக்களைக் குவித்து வைத்திருப்பது தவிர படுகொலைகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது. பயத்தில் உடல் நடுங்க இவரும், இவரது மனைவி எலினாவும் விசாரணையை எதிர் கொண்டனர். விசாரணை வெறும் 90 நிமிடங்கள் நடந்தது. .

 தீர்ப்பு? ஆம்! உலகத்து சர்வாதிகாரிகளுக்குக் கிடைத்த தீர்ப்புதான் நிக்கோலஸ் சேசஸ்கோவிற்கும். என்ன செய்வது? துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்க வேண்டும் என்பது நீதியின் ஆணை. கணவன், மனைவி இருவரையும் தனித்தனியாகச் சுட்டுக் கொல்வது என்று முதலில் தீர்ப்பளித்தனர். ஆனால் அவர்கள் அழுது புரண்டு இருவரையும் ஒருசேர கொன்றுபோட வேண்டினர்.

சரி உங்கள் விருப்பப்படியே இருவரையும் ஒருசேர சுட்டுக் கொல்கிறோம் என்றனர். செய்தும் முடித்தனர். எப்படி? தீர்ப்பு சொன்னவுடன் இருவர் கைகளையும் பின்புறம் சேர்த்துக் கயிற்றால் கட்டினர். எலினாவால் அப்படி இறுக்கமாகக் கட்டியதைத் தாங்க முடியாமல் வலி வலி என்று கதறி அழுதாள். சிப்பாய்கள் இரக்கம் காட்டவில்லை. உங்களுக்கெல்லாம் யாரும் இரக்கம் காட்டமாட்டார்கள் என்றனர். கூடியிருந்த மக்கள், 'வெட்கம், வெட்கம்' என்று இவர்களை ஏசிக்கொண்டிருக்க இவர்கள் இழுத்துச் செல்லப்பட்டு சிப்பாய்களின் தானியங்கி துப்பாக்கிக்கு இரையாக ஆக்கிவிட்டனர்.

ஒரு சிப்பாய் சொன்ன செய்தி. முதல் குண்டு வரிசை நிக்கோலசின் முழங்காலில் பாய்ந்தனவாம். அடுத்து மார்பைத் துளைத்ததாம்; அடுத்தது எலினாவின் உடலை துளைத்துச் சென்றனவாம். நிமிடங்கள்கூட அல்ல, விநாடிகளில் அவ்விருவர் உடலும் பிணமாகி கீழே விழுந்தன சுற்றிலும் குருதி வெள்ளம் நிறைந்திருக்க. மற்றொரு சர்வாதிகாரி 1989 டிசம்பர் 25இல் மண்ணில் சரிந்த வரலாறு இது.


உகாண்டாவின் இடி அமீன்.

முன்சொன்ன சர்வாதிகாரிகளைப் போல இவருக்கு மக்கள் தண்டனை வழங்கவில்லை. இவர் உகாண்டாவைவிட்டு ஓடிப்போய் லிபியாவில் தங்கி லிபியாவிலிருந்து விரட்டப்பட்டு செளதி அரேபியா சென்று மறைந்து வாழ்ந்த காலத்தில் உயிரிழந்தார். ஆனால் இவர் சர்வாதிகாரியாக இருந்த காலத்தில் நடத்திய கொடுமைகள்தான் எத்தனை எத்தனை???

1971ஆம் ஆண்டு தொடங்கி 1979 வரையிலான காலகட்டத்தில் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவை ஆண்ட சர்வாதிகாரி இடி அமீனின் கொடுமைகளைச் சொல்லி மாளாது. சட்டம் ஒழுங்கைப் பற்றியோ, மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டுமென்பதிலோ சற்றும் அக்கறையில்லாமலிருந்தவர் இடி அமீன். இவர் காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலையுண்ட செய்தியைச் சொல்வதா? நாட்டைவிட்டு விரட்டப்பட்ட இந்திய வியாபாரிகள், குடியேறிகளின் துன்பங்களைச் சொல்வதா? அல்லது நாடு குட்டிச்சுவராக ஆனபின்பும், இவருடைய எதேச்சாதிகாரமான செயல்பாடுகளைச் சொல்வதா? எதைச் சொல்வது, எதை விடுவது?

இந்த கொடுமைக்கார உகாண்டாவின் சர்வாதிகாரி அந்த நாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள புகாண்டா எனும் ஊரில் பிறந்தவர். அதிகம் படிக்காத முரட்டுப் பேர்வழியான இவர் இளம் வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்து கொண்டார். இவருக்குக் குத்துச் சண்டையில் பிரியம் அதிகம்; அதில் இவர் தேர்ந்த வீரராக ஆகியிருந்தார். இதனால் இவரை ராணுவத்திலிருந்த பெரும் அதிகாரிகள் கவனிக்கலாயினர். உகாண்டா நாட்டின் Heavy Weight Champion எனும் பட்டத்தை இவர் 1951 முதல் 1960 வரை பெற்றிருந்தார். இவர் 25 ஜனவரி 1971இல் மில்டன் ஒபோடே எனும் நாட்டின் அதிபர் வெளிநாடு சென்றிருந்த சமயம், அவருக்கெதிராக ஒரு புரட்சியை ஏற்படுத்தி ஆட்சியை அபகரித்துக் கொண்டார். ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய இடி அமீன் முதலில் நல்ல திறமைசாலிகளை நிர்வாகப் பொறுப்பைக் கவனிக்க நியமித்திருந்தார். ஆனால், அந்த அதிகாரிகள் சொல்லும் அறிவுரைகள், ஆலோசனைகள் எதையும் இவர் காதில் போட்டுக் கொள்வதில்லை. ராணுவத்தில் இவர் பிறந்த வடகிழக்குப் பிரதேசத்திலிருந்து இளைஞர்களை வரவழைத்து இவரே நேரடியாகத் தன் பொறுப்பில் அவர்களை நியமனம் செய்தார். அவர்கள் இவரிடம் மிகவும் பணிவோடு நடந்து கொண்டனர். இப்படி இவரால் நியமனம் செய்த ராணுவ வீரர்களை நம்பித்தான் இவர் நினைத்தபடி சர்வாதிகாரம் புரிந்து கொண்டிருந்தார்.

இவர் ஆட்சியைப் பறித்துக் கொண்ட உடன் இவர் செய்த காரியம் ஏராளமான லாங்கி, அச்சோலி எனப்படும் பதவி இழந்த அதிபர் ஒபோடேக்கு ஆதரவான படை வீரர்களைக் கொன்று குவித்ததுதான். தனது ராணுவ பலத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காக இவர் இங்கிலாந்தையும், இஸ்ரேலையும் உதவி செய்ய வேண்டிக் கொண்டார். ஆனால் இவரது தரம், நடத்தை இவற்றை கவனித்த இந்த நாடுகள் உதவி செய்ய மறுத்தன. இதனால் இடி அமீன் ஆத்திரமடைந்தார்.

1872இல் இவர் எல்லா இஸ்ரேலியர்களையும் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டு, லிபியாவின் உதவியை நாடினார். லிபிய அதிபர் மும்மர் கடாபி உடனடியாக இவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாரானார். இதன் மூலம் ஆப்பிரிக்க நாட்டிலேயே முதல் நாடாக உகாண்டா இஸ்ரேலுக்கு எதிரான நிலையை எடுத்ததோடு, இஸ்லாமிய நாடுகள் சார்பாகவும் நடந்து கொள்ளத் தொடங்கியது.

இஸ்ரேல் மீதிருந்த ஆத்திரத்தில் இவர் இரண்டாம் உலகப் போரில் அடால்ப் ஹிட்லர் செய்த யூதப் படுகொலையை நியாயப் படுத்தினார். உகாண்டாவின் தெற்குப் பகுதியில் அவருடைய ஆட்சிக்கு எதிராக எழுந்த எதிர்ப்பைக் காரணம் காட்டி டான்சானியா நாட்டின் மீது 1978இல் படையெடுத்தார். அந்த நாட்டின் எல்லையோரப் பகுதிகளை தன்வசம் எடுத்துக் கொண்டார். டான்சானியா நாடும் தனது ராணுவ பலத்தை அதிகப் படுத்திக் கொண்டு, தங்கள் எல்லையுள் புகுந்து ஆக்கிரமித்திருந்த உகாண்டா படை வீரர்களை 1979இல் உதைத்து வெளியேற்றியது. உதைவாங்கத் தொடங்கிய இடி அமீன் பயப்படத் தொடங்கினார். டான்சானியப் படைகள் உகாண்டாவின் உட்பகுதிக்குள்ளும் நுழைந்து தலைநகர் கம்பாலா வரை வந்து உகாண்டாவின் அதிபராக இருந்த இடிஅமீனைத் தூக்கி எறிந்தது.

உயிருக்குப் பயந்து இடி அமீன் லிபியாவுக்கு ஓடிவிட்டார். அந்த நாட்டில் சரணடைந்தார். அங்கு போன இடத்திலாவது சும்மா இருந்திருக்கலாமல்லவா? அங்கும் இவர் விஷமம் செய்யத் தொடங்கினார். இவரது படை வீரர்களுக்கும் லிபிய வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர் லிபியாவை விட்டுத் துரத்தப் பட்டார்.

1980இல் இவர் திருட்டுத் தனமாக மறுபடியும் உகாண்டாவிற்குள் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் சாய்ரே நாட்டில் இவர் அடையாளம் காணப்பட்டு துரத்தப்பட்டார். இவர் செளதி அரேபியா நாட்டில் அடைக்கலம் புகுந்தார். இடி அமீனின் ஆட்சி உகாண்டா நாட்டுக்குப் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்தது. இவர் ஆட்சியில் உயிர்களுக்கு மதிப்பு இல்லை. யார், எப்போது, எப்படி கொல்லப்படுவார்கள் என்பது தெரியாமல் எங்கு பார்த்தாலும் அராஜகம் நடந்தது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆசிய குடியேறிகள் அராஜகமாகத் துன்புறுத்தப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சொத்து, சுகம், வீடு, வாசல் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடத் தொடங்கினார்கள். நாட்டில் எங்கும் லஞ்சமும் ஊழலும் பேயாட்டம் போட்டன. பொருளாதாரம் சீர்குலைந்தது. உற்பத்தியும் குறைந்து நாட்டில் வறுமை, பஞ்சம் தோன்றத் தொடங்கியது.

கொடுமைக்கு மறுபெயர் இடி அமீன்; பைத்தியக்காரச் செயல்களுக்கு இடி அமீன் என்றெல்லாம் பெயர் வாங்கியவர் இந்த நபர். தன்னை ஆப்பிரிக்காவின் பவித்திரமான பிரஜை என்று சொல்லிக் கொண்டவர் இவர். தனது 80ஆவது வயதில் செளதி அரேபியாவில் இவர் காலமானார். இவரது கடைசி நாட்களில் இவர் நினைவு இழந்து கோமா நிலையில் மருத்துவ மனையில் இருந்தார். சிறுநீரகம் செயலிழந்து இவர் உயிர் பிரிந்தது.

ஃபெர்டினாண்ட் எட்றாலின் மார்கோஸ்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக இருந்தவர் இந்த மார்கோஸ். பிலிப்பைன்சில் 11-9-1917இல் பிறந்த இவர் ஒரு வழக்கறிஞர். இவருடைய தந்தையும் ஒரு அரசியல் வாதியாக இருந்தவர். பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் அதிபராக இருந்த மானுவல் ரோக்சாஸ் என்பவரிடம் இவர் வேலை பார்த்தார். 1966இல் இவர் நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடக்க காலத்தில் இவர் நாட்டின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அக்கறை காட்டிவந்தார். விவசாயம், தொழில், கல்வி ஆகிய துறைகளில் நாட்டை நல்ல வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். நாட்டில் தொடங்கிய அரசியல் கொந்தளிப்பையடுத்து 1972இல் இவர் நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார். ராணுவ ஆட்சி தொடங்கியது. இவருடைய அடுத்த கட்ட ஆட்சி ஊழல், பொருளாதார தேக்க நிலை, அரசியல் அடக்குமுறை இவற்றால் துவண்டு போயிற்று.

இவருடைய காலத்தில் இடதுசாரி பயங்கரவாதம் தலைதூக்கியது. ஆங்காங்கே தலைமறைவுப் புரட்சிக்காரர்கள் கொரில்லா தாக்குதல்களில் ஈடுபடலாயினர். இவர் காலத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த பெனிக்னோ அக்கினோ படுகொலைக்கு ஆளானார். அக்கினோ மார்க்கோசை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் மார்க்கோஸ் செய்த தில்லுமுல்லு காரணமாக அக்கினோ தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டில் குழப்பமும் எதிர்ப்பும் அதிகமாகவே மார்கோஸ் அமெரிக்க நாட்டின் ஹவாய் தீவிற்குக் குடியேறிவிட்டார்.

இமெல்டா

அங்கு இவரும் இவரது மனைவி இமெல்டாவும் பிலிப்பைன்ஸ் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்தமைக்காகவும், கையாடல் செய்து கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை யடித்ததற்காகவும் குற்றம் சாட்டப்பட்டனர். மார்கோஸ் இறந்த பிறகு இமெல்டா பிலிப்பைன்ஸ் நாட்டுக்குத் திரும்பினார். அங்கு அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்காக வழக்கு நடந்தது. ஊழல், லஞ்சக் குற்றச்சாட்டுகளில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டாலும், அது பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆளுமையில் இருந்த இந்த தம்பதியர் நாடு கடந்து ஹவாயில் தங்கி யிருக்க வேண்டிய நிலையும், சொந்த நாட்டிலேயே ஊழல் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டதும் இந்த ஜனநாயக சர்வாதிகாரியின் வரலாற்றில் ஒரு கறை படிந்த நிகழ்ச்சியாகும்.

இவர்களைத் தவிர வேறு பல சர்வாதிகாரிகளும் இருந்திருக்கின்றனர். அவர்களுக்கும் இதுபோன்ற முடிவுகள்தான் கிடைத்திருக்கின்றன. இத்தனை விவரங்களையும் தெரிந்த பின்னரும் யாராவது சர்வாதிகாரியாக ஆகலாம் என்று கனவு காண்பார்களா? ஆகலாம், யார் கண்டது.








Saturday, October 22, 2011

ஊத்துக்காடு.

ஊத்துக்காடு.

ஊத்துக்காடு எனும் இந்தத் தலம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வந்து வழிபட வேண்டியத் தலம். சங்கீதம், நாட்டியம் போன்ற கலைகளில் தேர்ந்தவர்கள் தேடிவந்து வணங்கிச் செல்ல வேண்டியத் தலம். இவ்வூர் எங்கே இருக்கிறது?

கும்பகோணத்திலிருந்து சுமார் 11 கி.மீ.தூரத்தில் ஊத்துக்காடு எனும் இவ்வூர் இருக்கிறது. வழியெங்கும் பசுமை கொஞ்சும் பச்சை வயல்வெளிகளும், தோப்பும் துரவுகளுமாக இயற்கை எழில் கொஞ்சும் இடமாக அமைந்திருப்பது இந்தத் தலம். இங்கு ஒருகாலத்தில் சந்நிதித் தெருவும், பல வீடுகளும், வேத பண்டிதர்களும், இசை அறிஞர்களும் வாழ்ந்திருக்க வேண்டும். அந்தப் பழமைச் சுவடுகள் நிறைந்த அந்த ஊர் இப்போது....?

போகட்டும், இங்குதான் ஸ்ரீ காளிங்கநர்த்தன கிருஷ்ணனுக்கு ஒரு தனிக் கோயில் அமைந்திருக்கிறது. இதுபோன்றதொரு தனிக் கோயில் வெறெங்கும் இருப்பதாகவும் தெரியவில்லை. இவ்வாலயத்தில் மூலவராக இருந்து சேவை சாதிக்கும் பெருமாள் ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள். மூலவர் சரி, உற்சவர்?

ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேதராகக் காட்சிதரும் ஸ்ரீ காளிங்கநர்த்தன பெருமாள்தான் இங்கு உற்சவர். மிகச் சிறிய ஆலயம்தான். முன் கோபுரம் சாதாரணமாகத்தான் காட்சியளிக்கிறது. படத்தில் பாருங்கள். ஆலயத்தில் நுழைந்ததும் ஸ்ரீ ஆனந்த நர்த்தன கணபதி சந்நிதி இருக்கிறது.

காமதேனு, கேட்டதைத் தரும் தெய்வீகப் பசு அல்லவா? அந்த காமதேனுவின் குழந்தைகள் நந்தினி என்றும் பட்டி என்றும் இரு பசுக்கள். இவை இரண்டையும் ஸ்ரீ காளிங்கநர்த்தன கிருஷ்ணனின் பொறுப்பில் விட்டுவிட்டு காமதேனு சென்று விட்டாள். இவை இரண்டுக்கும் இங்கு என்ன வேலை? இவைகள் இரண்டும் அருகில் ஆவூர் எனுமிடத்தில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீ கைலாசநாதஸ்வாமியின் அபிஷேகத்திற்கென்று பாலைச் சொரிந்து கொடுத்தன. பூனைகளுக்குரிய மலர்களைக் கொய்து வந்து கொடுத்தன.

இந்த ஆவூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கைலாசநாதரை பசுபதீஸ்வரர் என்று அழைப்பார்கள். இந்த ஊத்துக்காடு எனும் இடம் ஒரு காலத்தில் புஷ்பவனமாக இருந்ததாம். நந்தினியும், பட்டியும் தினமும் வந்து ஈஸ்வர கைங்கர்யத்துக்காக மலர்களைத் தேடிவந்து கொய்து செல்வதாலும், இறைபணியில் இந்த ஊர் வளமுள்ள புஷ்பவனமாகப் பூத்துக் குலுங்கியதாம்.

இப்படி இவ்விரு பசுக்களும் இங்கு வந்து புஷ்பசேகரம் செய்து செல்வதைக் கண்ட நாரத முனிவர் சும்மாயிருப்பாரா? அவரும் இங்கு வந்து உட்கார்ந்துகொண்டு இந்தப் பசுக்கள் செய்யும் பகவத் கைங்கர்யத்தைப் பார்த்துக்கொண்டே, அவைகளுக்குச் சில புராணக் கதைகளைச் சொல்லி வந்தாராம்.

அப்படி அவர் புராணக் கதைகளைச் சொல்லி வருகையில் பாகவதத்தில் வரும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளை விளக்கிக் கொண்டு வந்தார். ஸ்ரீ கிருஷ்ணன் ஐந்து வயது பாலகனாக இருந்த போது, தன் நண்பர்களுடன் ஆநிறைகளை ஓட்டிக்கொண்டு புல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒரு சுனையில் காளிங்கன் எனும் ஒரு விஷப் பாம்பு இருந்து அந்த ஆநிறைகளுக்குத் தொல்லை கொடுத்து வந்ததாம்.

இதைக் கண்ட ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அந்த காளிங்கனை அடக்கி, அவன் கொட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நினைத்து அந்தச் சுனையில் குதித்து அவனோடு போராடினாராம். அவனும் தன்னால் இயன்ற வரைப் போராடிப் பார்த்தபின் தன் தலைமீது நர்த்தனமிடும் இந்த பாலகன் யார் எனும் உண்மையைப் புரிந்து கொண்டு அடங்கிவிட, அவனை ஸ்ரீ கிருஷ்ணர் அனுக்ரகம் செய்த கதையைச் சொன்னார்.

நாரத முனிவர் கதையைச் சொல்லிக் கொண்டே வர, நந்தினியும் பட்டியும் கதையைக் கேட்டுக் கொண்டே கண்ணீர் விட்டுத் தேம்பித் தேம்பி அழுதனவாம். இதைக் கண்ட நாரதர் ஏன் இப்படி நீங்கள் இருவரும் அழுகிறீர்கள் என்று கேட்டாரம். அதற்கு அவ்விரு பசுக்களும் கண்ண பரமாத்மா ஐந்து வயது குழந்தை என்கிறீர்கள், இந்த காளிங்கனோ அதீதமான விஷம் கொண்ட பயங்கரமான ஜந்து. இவனோடு போராடும்போது அந்தக் குழந்தை கிருஷ்ணன் என்ன பாடுபட்டாரோ, எத்தனை சிரமங்களை அனுபவித்தாரோ என்பதை நினைத்து அழுகிறோம் என்றதாம். இப்படி நாரதருக்கும், நந்தினி பட்டி பசுக்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை தேவலோகத்திலிருந்த காமதேனு ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் சென்று முறையிட்டுத் தன் குழந்தைகளின் ஆதங்கத்தை எடுத்துச் சொல்லி, அவர்களுடைய மனக்கவலையை நீக்கும்படி கேட்டுக் கொண்டதாம்.

இதனைக் கேட்ட ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவ்விரு குழந்தைகளுக்கும் ஏற்பட்ட மனவேதனையை உணர்ந்து அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக பூலோகத்துக்கு வந்து அவ்விரு பசுக்குழந்தைகளுக்கும் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி தேற்றினாராம். அப்போதும் கவலை படிந்த முகத்துடன் அவ்விரு குழந்தைகளும் ஸ்ரீ கிருஷ்ணனைப் பார்க்க, உடனே அவர் அந்த இடத்திலேயே ஒரு ஆழமான நீரூற்றை உண்டாக்கி அதில் காளிங்கனை வரவழைத்து, அவனுடன் போராடி, அவன் தலையில் நர்த்தனமாடி, பாருங்கள், நான் இவனுடன் போராடும்போது சிரமப்படவில்லை என்பதைக் காட்டினாராம். இவ்வளவையும் பார்த்து ரசித்த அவ்விரு குழந்தைகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனவாம். நாரதர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம், நீங்கள் இங்கு காளிங்கனோடு மீண்டுமொருமுறை போராடியதால் இந்த இடம் தென் கோகுலமாக விளங்கட்டும் என்று அனுக்கிரகம் செய்யும்படி வேண்டினாராம்.

நாரதர் கேட்டுக் கொண்டபடியே ஸ்ரீ கிருஷ்ணன், இங்கு காளிங்கனுடன் போராடிய நிலையில் விக்கிரகமாக நிலைத்துப் புகழ் விளங்கும்படி இங்கேயே கோயில் கொண்டு விட்டாராம். அப்படிப்பட்ட காளிங்க நர்த்தன கிருஷ்ணன் விக்கிரகமாக விளங்க அவரை நாரத முனிவர் அங்கே ஸ்தாபித்து வைத்தார்.

அதன்படி இன்றும் ஊத்துக்காடு ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் காளிங்க நர்தன பெருமாளாகக் காட்சி அளிக்கிறார். அவருக்கு முன்னால் நந்தினியும், பட்டியும் பசுக்களாக இருந்து காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு காளிங்கன் தலைமீது ஒரு காலும், தூக்கிய சேவடியாக மற்றொரு காலுமாக ஸ்ரீ கண்ணபிரான் காட்சி தருகிறார். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், காளிங்கன் தலைக்கும் கண்ணபிரானின் காலுக்கும் இடையே ஒரு நூல் அல்லது காகிதம் நுழையுமளவுக்கு இடைவெளியிருக்கிறது. அவருடைய ஒரு கை அபயஹஸ்தம் காட்டி, மற்றொரு கரம் காளிங்கனின் வாலைப் பிடித்தபடி இருக்கிறது என்பது இந்த விக்கிரகத்தின் சிறப்பு.

காளிங்கனின் வாலை கண்ணனின் கட்டைவிரல் மட்டும்தான் தொட்டுக் கொண்டிருக்கும். மற்ற நான்கு விரல்களும் தனித்தே காட்சி தரும். ஆக ஸ்ரீ கண்ணனின் விக்கிரகம் காலும் காளிங்கன் தலையில் படவில்லை, கை விரலும் காளிங்கன் வாலில் பிடிமானம் இல்லை. என்ன அதிசயமான விக்கிரகம் இது?

இந்த அதிசயத்தைக் கண்டு வியந்துதான் நமது இந்திய அரசாங்கம் 1982ஆம் வருஷம் இந்த ஸ்ரீ கிருஷ்ண விக்கிரகத்துக்கு ரூ. 3 மதிப்புள்ள அஞ்சல் தலையொன்றை வெளியிட்டு மரியாதை செய்திருக்கிறது.

ஊத்துக்காடு காளிங்கநர்த்தன கிருஷ்ணன் ஒரு பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. பிள்ளைப்பேறு அமையாதவர்கள், திருமணம் தாமதம் ஆகிக் கொண்டிருப்பவர்கள், ராகு, கேது பரிகாரங்கள் செய்பவர்கள், நாகதோஷம், சர்ப்ப தோஷம் இவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பலதரப்பட்டவர்களும் பொதுவான பக்தர்களும் இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

ஊத்துக்காட்டுக்கு தஞ்சாவூரிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு. தஞ்சையிலிருந்து திட்டை, மெலட்டூர், திருக்கருகாவூர் வழியாகவும், மற்றொரு வழி தஞ்சை, புன்னைநல்லூர் மாரியம்மன்கோயில் வழியாக சாலியமங்கலம், திருக்கருகாவூர் வழியாகவும் போய்வரலாம். 13 கி.மீ. தூரம் இருக்கும். இவ்வூரில் ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் என்பவர் அவதரித்து கண்ணன் மீது பற்பல அபூர்வமான பாடல்களை இயற்றியிருக்கிறார். "ஊத்துக்காடு வேங்கடகவி" எனும் தலைப்பில் அவரைப் பற்றிய ஒரு கட்டுரை இதே வலைப்பூவில் இதற்கு முன்பு வெளியாகியிருக்கிறது. இது அந்தத் தலத்தைப் பற்றிய 'தலபுராணம்".

"காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு
அவன் நீள்முடியைந்திலும்நின்று நடம் செய்து,
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிப்பற.
(தூமணி வண்ணனைப் பாடிப்பற. பெரியாழ்வார் ஒன்பதாம் திருமொழி.

கதிரும் மதியும் என, நயன விழிகள் இருநளினமான, சலனத்திலே,
காளிங்க சிரத்திலே, கதித்த பதத்திலே என், மனத்தை இருத்தி
கனவு நினைவினோடு, பிறவி பிறவி தோறும் கனிந்துருக வரந்தருக
(பால்வடியும் முகம்) ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்.


Friday, October 21, 2011


Visu Iyer



தீர்ந்திடும் துன்பம் எல்லாம்......

கந்தன் திருநீறு அணிந்தால் 
கண்ட பிணி ஓடிவிடும்

குந்தகங்கள் மாறி 
குடும்பத்தை நாடி வரும்

சுந்தர வேல் அபிஷேக 
சுத்தத் திருநீறு அணிந்தால்

வந்து அமர்ந்த மூத்வளும் (மூதேவிளை குறித்தது)
வழி பார்த்து போய்விடுவாள்

அந்த நேரம் பார்த்து வந்து
அன்னைச் செல்வம் ஓடி வந்து

சிந்தையை குளிர வைத்து 
சொந்தம் கொண்டாடிவாள்

மணம் மிகுந்த சாம்பலிலே 
மகிமை இருக்குதடா

மணமுடன் அணிபவருக்கு
மகிழ்ச்சியை பெருக்குதடா

தினம் தினம் நெற்றியிலே
திரு நீறு அணிந்திடடா

தீர்ந்திடும் துன்பமெல்லாம்
தெய்வம் துணை காட்டுமடா



துதிக்க 
மறு பிறப்பினை தவிர்க்கும் என சொல்லும்
இந்த கந்தர் அலங்கார பாடலை துதிப்போமே..

முடியாப் பிறவிக் கடலில் புகார் முழுதும் கெடுக்கும்
அடியாற் படியில் விதனப் படார் வெற்றி வேல் பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப் 
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே




பகை மாறி உறவாடுமே...


முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே
முருகா

உடல் பற்றிய பிணி ஆறுமே
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று 
இனிதுற மெத்த இன்பம் சேருமே

குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு
குறைகள் யாவும் போகுமே- அவர் 
குடும்பம் தழைத்தோங்குமே 

உர சமர வேலாயுதம் 
பக்கத் துணை கொண்டால்
சகல பயம் தீருமே

அறுமுகனை வேண்டி ஆறாதனை செய்தால்
அறுதி ஓடி வருவார் - அன்பு 
பெருகி அருள் புரிவார்

அந்த கருணை உருவான 
குருபரன் என்றுமே
கைவிடாமல் ஆடுவார்

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
காரியம் கை கூடுமே
"பகை மாறி உறவாடுமே"

சிவ மைந்தன் அருளாலே
"மெய்றிவு உண்டாக்கி"
மேன்மை உயர்வாகுமே

 அன்பு வழி வாழவைக்கும் மருந்து



முருகன்

திருநீறில் மருந்து இருக்கு தெரியுமா...அதை
தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா..

ஆறு மணக்கும் அய்யனின் திருமருந்து நல்ல
அறிவு கண்ணை திறந்து வைக்கும் அரு மருந்து

"அன்பு வழி வாழ வைக்கும் பெரு மருந்து" நல்ல
ஆசி எல்லாம் நமக்கு என்றும் தரு மருந்து

சண்டியரை சத்து வழியில் நடத்தும் மருந்து
இளம் காளையரை காலமெல்லாம் காக்கும் மருந்து

மங்கையருக்கு மழலை செல்வம் கொடுக்கும் மருந்து திரு
மங்கலமாய் குங்குமமும் வழங்கும் மருந்து

கற்பனையில் கவிதை பாட செய்யும் மருந்து பெரும்
கள்வரையும் திருந்தி வாழ செய்யும் மருந்து

முன்வினை தந்த நோயெல்லாம் தீர்க்கும் மருந்து நம்
வாழ்வில் நல்ல செல்வம் எல்லாம் சேர்க்கும் மருந்து


ஆறுகள் எல்லாம் இணைந்தது ஒன்றாகும்


செந்துர் செல்லும் தென்றல் காற்றே முருகனை காண்பாயோ அவன் 
சேவடி நிழலில் சேர்ந்திட நானும் வருவதை சொல்வாயோ

ஓடிடும் போதும் என் குறை கேட்க ஒரு நொடி நில்லாயோ துணை
தேடிடும் ஏழை நான் வரும் சேதி அவனிடம் சொல்லாயா

நால் வகை பாடல் மல்லிகை முல்லை நறுமணம் உன்னோடு வெறும் 
ஆசைகள் துன்பம் ஆயிரம் இங்கே அடியவன் என்னோடு

ஆழ்கடல் கூடும் "ஆறுகள் எல்லாம் இணைந்தது ஒன்றாகும்"
நல்ல தாய் மணம் கொண்ட வேலவன் முன்னால் அனைவரும் ஒன்றாகும்

கடாஃபி

கடாஃபி பதுங்கியிருந்த குழாய்

லிபியாவின் சர்வாதிகாரி கடாஃபி

மேற்கத்திய ஊடகங்களால் 'Mad Dog' என்று வர்ணிக்கப்பட்ட லிபிய சர்வாதிகாரி கடாஃபியின் எழுச்சியும் வீழ்ச்சியும் மிகவும் சுவாரசியமானதும், வரலாற்றில் மிக ஆழமாக பதிவான செய்தியுமாகும். வட ஆப்பிரிக்கா நாடான இந்த லிபியா ஏமன், அல்ஜீரியா, சிரியா, எகிப்து, டூனிஷியா ஆகிய இடங்களில் நடந்த புரட்சியைத் தொடர்ந்து புரட்சிக்கு ஆளானது. இவருடைய எழுச்சியையும், வீழ்ச்சியையும் மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1969ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் லிபியாவின் மன்னரான இட்றிஸ் ராணுவத்தாரால் ரத்தப் புரட்சியின் மூலம் வெளியேற்றப்பட்டார். அந்தப் புரட்சியின் நாயகனான கடாஃபி கதாநாயகனாக ஆனார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் லிபியாவை சூடானுடனும் எகிப்துடனும் இணைக்க ஒரு திட்டத்தை இவர் அறிவித்தார். ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை.

 1970இல் கடாஃபியின் உத்தரவுப்படி லிபியாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ராணுவ முகாம்கள் நாட்டைவிட்டு வெளியேறும்படி ஆணையிடப்பட்டது. எண்ணை வளம் மிக்க லிபியாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த வெளிநாட்டு எண்ணைக் கம்பெனிகள் கடாஃபியின் உத்தரவின்படி 1973இல் நாட்டுடமையாக்கப்பட்டது.

1976இல் கடாஃபி தனது கொள்கை பிரகடனம் ஒன்றை வெளியிட்டார், அதன்படி லிபியா மக்கள் ஆட்சி முதலாளித்துவத்தையும், கம்யூனிசத்தையும் ஒருசேர நிராகரிக்கிறது என்ற அவருடைய கையேடு ஒன்றை வெளியிட்டார். அதற்கு Gaddafi's Green Book என்று பெயர்.

1977இல் லிபியாவை Socialist People's Libyan Arab Jamahiriya அல்லது State of the Masses என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1986ஆம் ஆண்டு லிபியா ரகசியப் படையொன்று ஜெர்மனியின் தலைநகரில் ஒரு தாக்குதலை நடத்தியது. அதில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கொல்லப்பட்டார். அதற்கு எதிர் நடவடிக்கையாக அமெரிக்க அரசு லிபியாவுடனான அரசியல் தொடர்புகளை விலக்கிக் கொண்டது.

1988இல் ஒரு மனிதகுலமே வெறுக்கக்கூடிய ஒரு அராஜகத்தை லிபியா நடத்திக் காட்டியது. ஸ்காட்லாந்தில் 259 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு அமெரிக்க விமானத்தை வெடிவைத்துத் தகர்த்தது லிபியாவின் பயங்கரவாதி ஒருவன்.. இந்தக் குற்றத்துக்காக ஒரு லிபிய ரகசியப் படையைச் சேர்ந்த ஒருவன் தண்டிக்கப்பட்டு ஸ்காட்லாந்தில் சிறையில் அடைக்கப்பட்டான்.

2006இல் நிலைமை சற்று தேறியிருந்த சமயம் அமெரிக்கா மீண்டும் லிபியாவுடன் அரசாங்கத் தொடர்புகளைப் புதுப்பித்துக் கொண்டது. உலக பயங்கரவாதி கடாஃபி மாறியிருக்கலாம் என்று அமெரிக்கா நம்பியது போலிருக்கிறது.

2009இல் ஸ்காட்லாந்தில் ஒரு விமானத்தை வெடிவைத்துத் தகர்த்தக் குற்றத்துக்காக சிறையிலிருந்த அந்த குற்றவாளி விடுதலையாகி லிபியாவுக்கு வந்தபோது அவனுக்கு அரசாங்க மரியாதையோடு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இது உலக நாடுகளை முகம் சுளிக்க வைத்தது. ஒரு பயங்கரவாதிக்கு இத்தனை மரியாதையா என்று.

இவ்வாண்டின் தொடக்கத்தில் வட ஆப்பிரிக்க நாடுகளில் சர்வாதிகாரிகளுக்கு எதிராகவும், அராஜக ஆட்சிகளுக்கு எதிராகவும் ஒரு மக்கள் புரட்சி ஏற்படத் தொடங்கியது. பிப்ரவரி 2011இல் லிபியாவிலும் கடாஃபிக்கு எதிரான போராட்டம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மார்ச் 19ஆம் தேதி நேட்டோ லிபியாவில் கடாஃபிக்கு எதிராக விமானத் தாக்குதலைத் தொடங்கியது. ஏப்ரல் மாதம் 31ஆம் தேதி கடாபியின் ஒரு மகனும், மூன்று பேரக் குழந்தைகளும் குண்டு வீச்சில் மரணமடைந்தார்கள். தொடர்ந்து கடாபிக்கு எதிரான போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்தது.

அக்டோபர் 20 நேற்று கடாஃபி புரட்சிப் படையினரால் அவனது சொந்த ஊரில் ஒரு சாலைக்கடியில் இருந்த குழாயொன்றில் பதுங்கி இருந்தபோது பிடித்து சித்திரவதை செய்து சுட்டுக் கொன்று தெருவோடு இழுத்து வந்து போட்டார்கள். நாற்பது ஆண்டுகள் உலகில் பயங்கர வாதத்தைப் பரப்பி வந்த ஒரு சர்வாதிகாரி கோரமான முறையில் கொல்லப்பட்டார்.

இதுதான் இன்றைய தலைப்புச் செய்தி. உலகத்தின் சர்வாதிகாரிகள் அனைவருமே இப்படிப்பட்ட கோரமுடிவைத்தான் அடைகிறார்கள் என்பதை ஹிட்லரும், முசோலினியும், கடாபியும் நிரூபித்து விட்டனர். இனி எவரும் இதுபோன்ற சர்வாதிகாரிகளாக ஆக விரும்ப மாட்டார்கள்.

Monday, October 17, 2011

தஞ்சாவூர் திருமதி டி.ஆர்.கமலாமூர்த்தி






ஹரிகதா விற்பன்னர்
தஞ்சாவூர் திருமதி டி.ஆர்.கமலாமூர்த்தி

தஞ்சையைச் சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான திருமதி டி.ஆர்.கமலாமூர்த்தி அவர்களுக்கு 80 வயது ஆவதை முன்னிட்டு தஞ்சை ஸ்ரீ தியாகபிரம்ம சபாவின் சார்பில், அதன் தலைவர் திரு எஸ்.பி.அந்தோணிசாமி மற்றும் நிர்வாகிகள் 19-10-2011 அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் அன்னாருக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள். டி.ஆர்.கமலாமூர்த்தி அவர்கள் ஹரிகதா கலைக்கு புத்துயிர் கொடுத்து, பலகாலம் இந்த அரிய கலையை நாடெங்கிலும் நடத்தியவர். தற்போது தனது வாரிசாக அவருடைய பேத்தி செல்வி சுசித்ரா அவர்களை (இவர் ஒரு நல்ல கர்நாடக இசைக் கலைஞரும்கூட) ஹரிகதை உலகுக்கு அளித்திருக்கிறார். அவர் நீடுவாழ இறைவனைப் பிரார்த்திக் கொண்டு அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கே அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். (ஆக்கியவர் ஹரிகதா தஞ்சை என்.ஸ்ரீநிவாசன் அவர்கள்.)

"பூலோக கைலாயம், தெரிசிக்கமுத்தி என்றெல்லாம் போற்றப்படும் தில்லைப்பதியான சிதம்பரத்துக்குஅருகேயுள்ள லக்ஷ்மிகுடி எனும் கிராமத்தில் ராமச்சந்திர அய்யர் - சீதாலக்ஷ்மி என்ற தம்பதியரின் மூத்த குமாரியாக 9-4-1932 அன்று பிறந்தார் கமலாமூர்த்தி. தர்மஸம்வர்த்தனி என்ற தங்கையும், நடராஜன் என்ற தம்பியும் இவருக்கு உண்டு. சின்னஞ்சிறு வயதிலேயே சிதம்பரத்திலுள்ள தன் தாய்மாமா வீட்டுக்கு வந்து அங்கே வளர்ந்து வந்தார் கமலா. இனிமையான குரலும், இசையில் ஆர்வமும், தெளிவான உச்சரிப்பும் பெற்றிருந்த கமலாவை ஒரு கதாகாலக்ஷேபக் கலைஞராக்கிவிட வேண்டுமென, கமலாவின் மாமா எண்ணினார். எனவே சிதம்பரத்திலிருந்த ராஜா பாகவதரிடம் கமலாவை ஹரிகதைக் கலைஞராக்கும் பொறுப்பை அவர் ஒப்புவித்தார்.

தன் ஒன்பதாம் வயதில், சிதம்பரத்தில் நடராஜ தீக்ஷிதர் என்பவரின் இல்லத்தில் கமலா, "வத்ஸலா கல்யாணம்" என்ற ஹரிகதையோடு அரங்கேறினார். ராஜா பாகவதர் அந்த ஆண்டின் இறுதியில் காலமானதால், மேலும் பல சரித்திரங்களைப் பயிலும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்காமற் போயிற்று. கமலாவின் தந்தை ராமச்சந்திர அய்யர் சில மாதங்கள் கழித்துக் குடும்பத்தோடு திருவையாற்றுக்கு வந்து வசிக்கலானார். இதனால் திருவையாற்றிலிருந்த அண்ணாசாமி பாகவதரிடம் தன் ஹரிகதைப் பயிற்சியைத் தொடரும் வாய்ப்பைப் பெற்றார் கமலா. இராமாயணம் மற்றும் நாயன்மார் சரித்திரங்களைக் கற்பித்தார் அண்ணாசாமி பாகவதர்.

1948ஆம் ஆண்டில் கிருஷ்ணமூர்த்தி என்பவரை மணந்து இல்லறத்தில் அடிவைத்த கமலா, தன் கலையை இடையூறு சிறிதுமின்றி தொடருவதற்குக் கணவர் கிருஷ்ணமூர்த்தி ஒத்துழைத்தார். ஹரிகதைத் தொடர்பான பல அரிய செய்திகல், முறைகள், சில சரித்திரங்கள், நிரூபணங்கள் ஆகியவற்றைக் கமலா மூர்த்திக்கு எம்பார் விஜயராகவாச்சாரியார், தஞ்சை ஸ்வாமிநாத ஆத்ரேயர், என்.வி.வெங்கடசுப்பிரமணிய சாஸ்திரிகல் ஆகியோர் கற்பித்தனர்.

இந்திய நாட்டின் பல பகுதிகளில் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா முதலான நாடுகளிலும் கமலாமூர்த்தி ஹரிகதை நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளார். இவருடைய கதைகளில் இசை முக்கிய இடம் பெற்றுக் கேட்போரைப் பெரிதும் கவர்ந்தது. கம்மலான குரலைக் கொண்டிருந்தாலும், ராகங்களின் ஜீவன் எடுத்த எடுப்பிலேயே வெளிப்படும்படியான இசை ஞானம் கமலாவுக்கு உண்டு. அவர் பாடும் முறை, அவருடைய குருவான அண்ணாஸ்வாமி பாகவதரை நினைவூட்டும்படியாக இருக்கும்.

திருவையாறு கண்ணன், மணல்மேல்குடி ஸ்ரீநிவாஸ சாஸ்திரிகள், இவ்விருவரில் ஒருவர் கமலாவுக்கு சாதகராக இருந்து வந்தார். பிறகு பின்பாட்டுக்காரரை வைத்துக் கொள்ளாமல் தஞ்சை விஸ்வநாதன், ஸ்ரீரங்கம் நாராயண ஐயங்கார், கோவை கைலாஸ பாகவதர் ஆகியோரில் ஒருவரது ஹார்மோனியத்துடன் கதைகள் சொல்லி வந்தார். அவருக்கு மிருதங்கம் வாசித்தவர்களில் தஞ்சை கிருஷ்ணமூர்த்தி நாயுடு (குருவப்பா) சேலம் ஏ.ஜனார்தனன், மகர்நோம்புச்சாவடி ஸம்பங்கி கோபால பாகவதர், தஞ்சை என்.ராஜம் அய்யர் ஆகியோரைக் குறிப்பிடலாம். தற்காலம் எம்பார் விஜயராகவாச்சாரியாரின் இளவல் லக்ஷ்மிநரசிம்ஹன் வாசித்து வருகிறார்.

"கலைமாமணி" (26-1-1978) சென்னை ஸங்கீத வித்வத் சபையின் டி.டி.கே. நினைவு விருது, சுந்தர்ராஜா நினைவு அறக்கட்டளையின் விருது (1996) ஆகியவை கமலாமூர்த்திக்கு வழங்கப்பட்டன. மேலும் "ஸங்கீதாமிருதவர்ஷினி", "ஹரிகதாவாணி", "ஸம்ப்ரதாய ரத்னா" போன்ற பல பட்டங்களைப் பெற்றவர் அவர். 2001இல் டில்லி சங்கீத நாடக அகாதமி இவருக்கு விருது வழங்கி கெளரவித்தது.

ஸ்ரீநிவாசன், லக்ஷ்மி, புவனஸரஸ்வதி, சுந்தர பாஸ்கர், பாலசுப்பிரமணியன், சம்பத்குமார் என்ற மக்களைப் பெற்றுள்ளார் கமலாமூர்த்தி. மரபு பிறழாமலும், சூழ்நிலைக்கு ஏற்றவாறும் சிறப்பாக ஹரிகதை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார் கமலா மூர்த்தி. இவர் நூறாண்டுகளும்மும் மேல் வாழ வாழ்த்துகிறோம்.




Learner always : T.R. Kamala Murthy

TORCHBEARERS
Clad in a six yard cotton sari, M.S. style, she greets you with a Namaste and ‘Ram Ram.’ Every sentence she speaks is punctuated with the refrain that her successes are due to the grace of her Guru and God.
Quite agile at 78, she is into her 55th year of performing for All India Radio. Harikatha exponent T.R. Kamala Murthy traverses back to her moorings in typical style at her son’s apartment in K.V. Colony, West Mambalam.
She dwells permanently in Thanjavur and visits Chennai either to fulfil professional commitment or to spend time with her sons and grandchildren.
“As a child I was drawn more towards music than studies and hence I would never miss any music programme or harikatha that took place in the vicinity of Tiruvaiyaru. My maternal grandmother who was very fond of me wanted me to stay with her at Chidambaram. Little did I realise that this stay was going to play a vital role in my life,” begins Kamala Murthy.
“On the East Car Street (Keezha Veedhi) lived 75-year old Raja Bhagavathar who was a bachelor, well versed in music and harikatha. Realising his talent Natarajarathna Dikshitar made him stay at his house, thus helping the cause of music. Joining the neighbourhood children when they went to him and singing along with them became a routine. Impressed by my turning phrases during classes and my undaunted approach, he volunteered to teach me harikatha in particular. He followed the style of Tirupazhanam Panchapakesa Bhagavathar”.
Basic exercise
Raja Bhagavathar first taught her the basic music exercises and varnams in ragas such as Bhairavi, Sankarabharanam and Thodi. The first harikatha she learnt from him was ‘Vathsala Kalyanam’ with all the ingredients and Kamalamba (as she was called before her marriage) had the talent of repeating it within a few classes without any stutter. Satisfied, Bhagavathar arranged for her arangetram at Dikshitar’s house. She was eight years old then.
“My guru sat beside me and maintained the rhythm with ‘kundu talam’ and for every mistake I made the kundu would come hard on my toes. The pain made me even more steadfast in correcting my mistakes never to repeat them. I still remember the vaira oosi full skirt, red in colour with green border, that was presented to me by Dikshitar. Chidambaram Srirangchariar’s second son Kanteeravan played the mridangam for my arangetram. Harikatha exponent Embar Vijayaraghavachariar was his other son.
“During Navaratri that immediately followed I was invited to perform harikatha on ‘Vathsala Kalyanam’ by the Dikshitar families at their houses. People thronged to listen to my harikatha, although the story had been repeated several times.”
She says she never missed the ardhajama puja and the gnana kshira prasadam at the temple of Lord Nataraja and owes her success to the blessings of the Kalanathan (Lord Nataraja).
“It was almost a year in Chidambaram, when my father unable to bear my separation, took me back to Tiruvaiyaru. I was not given enough time even to inform my guru Raja Bhagavathar about it. Realising my absence after a few classes he told my grandmother that my talent should not be wasted and that I should continue learning harikatha from Tiruvaiyaru Annasamy Bhagavatar, famous vidwan. Raja Bhagavatar passed away within a few weeks.” Kamala Murthy pauses choked with emotion.
Lessons continued
Music lessons continued with Annasamy Bhagavathar who, basically, was a very shy person. His knowledge and delineation of ragas such as Thodi and Bhairavi was admired by doyens, who stayed in his house during festival periods. She learnt Valli Kalyanam, Garuda Garva Haranam, Rukmini Kalyanam and Sita Kalyanam from him.
When hardly sixteen years old, Kamalamba’s maiden performance at Tiruvaiyaru was at the Saint poet’s samadhi attended by none other than Bangalore Nagarathnamma who lived there.
There again, it was ‘Vathsala Kalyanam’ that drew appreciation from everyone. Bangalore Nagarthnamma showered special praise on the teen’s talent. And for young Kamala it was a blessing to learn kritis from Nagarathnamma, who stayed at the samadi during the day.
It was time to get married and the groom was Krishnamurthy who was serving the military. She then came to be known as Kamala Murthy. Thanjavur Gopala Bhavathar played mridangam for her regularly.
Vocal support is indispensable for harikatha and Kamala found an ideal partner in her younger sister.
Marriage would have applied brakes on Kamala’s career but for the influence of Thanjavur Rajam (guru of mridanga vidwan Thanjavur Upendran).
He arranged many programmes for her and the family did not object. Rajam, in fact, became a regular in her performances. Kanteeravan took over after his passing away.
Classes with Annasamy Bhagavathar helped Kamala improve her repertoire in Tamil, Telugu, Kannada, Marathi, Hindi, Urdu and Sanskrit. Bhagavathar always insisted on learning the language to understand the songs.
The support of her husband and mother in taking care of the family and children was something rare to find in those days, a boon according to Kamala Murthy.
Kamala Murthy reveres Banni Bai, Saraswathi Bai and Pudukottai Kanakambujam Amma all experts in harikatha field.
Kamala Murthy adores Venkatasubramania Sastrigal of Saraswathi Mahal library who was well versed in Sanskrit and Tamil.
Honing skills
Embar Vijayaraghavachariar showed a lot of interest in her development and helped her hone her skills.
“Harikatha came to us from the Marathis. Thanjavur Krishna Bhagavathar could be called the moola purusha of harikatha that was in vogue in Thanjavur. He was responsible for bringing it on stage with a bench to seat the accompanists.”
Kamala Murthy then goes on to explain various aspects of harikatha and recalls the services of Soolamangalam Vaidyanatha Bhagavathar and Mangudi Chidambara Bhagavathar for the development of the genre.
Even today she consults Swaminatha Athreya, Asthana Vidvan of Kanchi Mutt, living in Thanjavur, for clearing her doubts and the Saraswathi Mahal library for reference purposes.
She firmly believes that the urge to learn new things should never be given up. It is continuous search that keeps the mind agile and the makes the art thrive.

Wednesday, October 5, 2011

மகாகவி பாரதி அனைவருக்குமே சொந்தம்!


 மகாகவி பாரதி அனைவருக்குமே சொந்தம்!
X
Inbox
X

ReplyReply
More
G Alasiam 



இன்றையப் பதிவு படிப்பதற்கு முன்பே நேற்று தங்களுக்கு ஒருக் கடிதம் எழுதியுள்ளேன்... அதிலே ஓரிரு வரிகள் இந்த பதிவை ஓட்டியக் கருத்து எதேச்சையாக அமைந்தது எனக்கு வியப்பை அளிக்கிறது... மகாகவியை ஆழ்ந்து, உணர்ந்து படிப்பவன் அவனின் கொள்கை குணங்களில் நனைந்து அவனின் பாணியிலே பயணிப்பது இயல்பே.. அதற்கு ஒரு உதாரணம் தாங்களே என்றும் தயங்காமல் கூறுவேன். 

இன்னொன்றையும் மிகவும் அடக்கத்துடன் கூறுவேன்...  இந்த வரிகளைப் படிக்கும் போதே பாரதி எதைக் குறிப்பிட்டு கூறியிருப்பான் என்பதை நான் யூகித்து பதிலை மனதில் கொண்டே பதிவை கீழேப் படித்தேன் தாங்களும் அதையே விளக்கமாக கூறி இருப்பதைக் கண்டும் வியந்தே! இருந்தும் இது தான் பாரதியின் விசுவாசிகளுக்குள் உள்ள ஒற்றுமை எண்ண அதிர்வு சிந்தனை எதேச்சையாக ஒரே மாதிரியாக அமைகிறது என்பதையும் உணர்ந்தேன். 

தங்களின் அளவிற்கு அவனைப் படிக்காவிட்டாலும் தங்கள் மூலம் அவனைப் படிக்கிறேன் என்ற உரிமையில் உங்களின் வரிசையில் உங்களுக்கு பின்பக்கமாக நிற்கிறேன் என்பதைக் கூறிக் கொள்கிறேன். அதனால் பெருமையும் அடைகிறேன்.

பதிவில் உள்ள கருத்தும், அதனின் தங்களின் தெளிவும், அதனால் விளைந்த முடிவும் அருமை...நிச்சயமாக தாங்கள் கூறுவது போல் 
மகாகவி பாரதி யாவருக்கும் சொந்தம் தான் அப்படி நாம் சொல்லிக் கொள்வதால் அவன் கூறுவது போல் "ஒரு கர்வம் பிறக்கிறது" அவனுக்கு முன்பு தோன்றியவர்கள் போல் அவ்வுலக வாழ்க்கையை மட்டும் கூறாமல் அல்லது அவ்வுலக வாழ்க்கைக்கு இவ்வுலக வாழ்க்கையை எப்படி செய்ய வேண்டும் என்று மட்டும் கூறாது... 

இன்றைய உலகில் வாழும் முறையை உலகத்தோடு அதன் இயல்பை, சரியாகப் புரிந்துக் கொண்டும்; தொன்மையைக் கண்டுப் பயப்படாமல்... அதன் உண்மையை விதியினை தெரிந்து அதன் தன்மையை பகுத்தறிந்து அதிலும் அதன் நுனியளவு சென்றுத் தெரிந்துக் கொண்டு அவசியப்பட்டால்... அது வேதமானாலும் அதிலே புதுமையை செய், தோல்வியைக் கண்டு பயப்படாதே, மீளுமாறு நீ உணர்ந்து செயல் படு.. அப்படி நினைக்கும் போது உன் நினைவு எதுவோ அதுவே நீயாவாய்.... 

நீதி நூலும், வான நூலும், உலோக நூலும் நித்தம் படி, அதை ஒரு தவம் போல் செய்... வீரியத்தைப் பேருக்கு, ஆண்மை கொள், நாளெல்லாம் வினை செய், பெரிதிலும் பெரிது கேள், பெரிய கடவுளும் காக்கும் (ஒரேக் கடவுள் சிறு தெய்வ வழிபாடை பெரிதாக வளர்த்து நமக்குள் பிரிவுகள் வேண்டாம் என்பதே அவனின் எண்ணம் / அப்பரும் அதையே கூறி இருக்கிறாராம்).  இதை அத்தனையும் அவன் ஒட்டு மொத்த மானிடத்திற்கும் கூறி இருக்கிறான்... இதிலே, இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், என்று அந்த மதப் புனித நூல்கள் அவரவருக்கு கூறியது போல் அதன் கொள்கைகளை கடைபிடிப்பவர்களுக்கு கூறியிருப்பது போல் தனிப்பட்ட யாருக்கும் கூறாமல்... வேதம் என்பது கூட அவரவர் வேதம் என்றேப் பொருள் கொள்ளவேண்டும்....

அப்படி இருக்க, இந்த மகாகவி, நம்மையெல்லாம் உய்விக்க வந்த மாதவன், யாருக்கு சொந்தம் என்றால்? யாவருக்குமே சொந்தம் தான்... அவனின் முழு உரிமையும் இந்த மானிடம் உள்ளவரை அது (மானிடம் முழுவதும்) பெற்றிருக்கும். 

இருந்தும் இங்கே ஒன்றை சொல்ல வேண்டும். அவனின் கொள்கைகளை பெண்டிர் முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும், பின்பற்ற வேண்டும். அப்போது தான் அது மிக விரைவாக எங்கும் பரவும். யாவரையும் சென்றடையும்... தையலை உயர்வு செய்"யச் சொன்னதோடு, புதுமைப் பெண் அவள் வேதம் புதுமை செய்பவள் என்றும் பாடியதின் நோக்கத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

சாதி அடிப்படையிலே சமூகத்தில் சலுகைக் காட்டி பொருளாதாரத்தில் தாழ்வுற்று இருப்பவருக்கு நல்லது செய்வதாகவும், கல்வி அறிவு அதிகம் பெறாத சிலருக்கு சலுகை அடிப்படையிலே கல்வி தருவதாகவும் கூறி கண்காணிப்பும், தணிக்கையும், அதன் அவசியத்தையும் சோதிக்காமல்; அவசியப்பட்டால் அதில் ஏதும் மாற்றம் கொள்ளச் செய்யாமல் வரும் அரசுகள் தொடரும் அந்த பணியினும் சிறந்த அவசியமான ஒருப் பணி உண்டு... 

ஆம், அது தான் பாரதி சொன்ன "தையலை உயர்வு செய்" அவர்களுக்கு தனிப் பிரிவு கொண்டு சலுகை செய்து, அவர்கள் சமூகத்தில் (எல்லா சாதியிலும் இது பொது தான்) படும் அவலத்தை போக்கி கல்வியையும் ஞானத்தையும் வளர்க்கும் வழியை ஆளும் அரசுகள் செய்யவேண்டும். 

அது நடக்கும் வரை பாரதியின் திட்டம் செயல் படுவது தடைபட்டே நிற்கும். அதோடு, அவனின் பாடல்கள் மேடை அலங்கார பேச்சிற்கு மட்டுமே பெரிதும் துணை நிற்கும் எனபதே உண்மை. இந்த அவலம் மாற, பெண்கள் வெறும்காட்சிப் பொருளாகவும், ஏமாற்றப் படுபவர்களாகவும், ஆடுகளைப் போல் அண்டிப்பிழைப்பவர்களாகவும், அடிமையாகவும், மோக போகப் பொருள்களாகவும், கலைக் கூடங்களிலே அறிவில்லா பொம்மைகளாகவும் இருப்பதை உணர்ந்து அந்நிலை மாற... அவர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. 

அது இந்த சமூகத்தில் பெரிய விஞ்ஞானிகளையும், மெஞ்ஞாநிகளையும் பெற்று வளர்த்து ஆளாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்பதை பாரதி கூறிய வழியிலே உணர்ந்து அதற்கு தன்னை ஆயுதப் படுத்த வேண்டும். அதை செய்ய உண்மையான உயர் கல்வி கற்க வேண்டும், அப்படி அதைப் பெரும் போது அறிவோடு, வீரமும், விவேகமும், உலக ஞானமும் கிடைக்கும். அப்படி ஒவ்வொருப் பெண்ணும் உலக ஞானம் பெற்றால், அங்கே மூடத்தனமும், அடிமைத்தனமும் ஒரு சேர அழியும் அப்போது புதிய தோர் உலகம் படைக்க அதாவது கிருத யுகம் படைக்க ஒவ்வொரு வீட்டிலும் மகா புருஷர்கள் அவதரிப்பார்கள் என்று தீர்க்கமாக கூறி விட்டு அதைக் காண இங்கே இயற்கையில் கலந்து நிற்கிறான் பாரதி...

இதை நாம் ஒவ்வொருவரும், இந்த அரசாங்கமும் உணரவேண்டும்.... அப்படி செய்தால் வெகு சீக்கிரத்தில், சாதி ஒழிப்பும் தேவை இல்லை.. சமூக சீரமைப்பும் தேவையில்லை, இலவசமும் தேவை இல்லை, இட ஒதுக்கீடும் தேவை இல்லை.... எல்லாம் தானாக நடக்கும். 

சக்திப் பெண், இயக்கம் பெண், இயங்க வைப்பவள் பெண், அந்த இயக்கம் சீராகும் போது அத்தனையும் சீராகும்.. இது தானே! வேறு யாரும் (இவனுக்கு முன்பு தோன்றியவர்கள், இவனே இவர்கள் தாம் எனது முன்னோடிகள், பெரியவர்கள் என்று போற்றியவர்களும் கூட) ஒரு உறுதியானத் தீர்வை அதற்கு முன்னதாக எங்கும் கூறாத தீர்வை இந்த எட்டயபுரத்து ஞானக் கிறுக்கன் சொல்லி இருக்கிறான். 

தாங்கள் கூறியது போல் அவன் எல்லோருக்கும்; இந்த உலக மானுடர்கள்... ஏன்? சொந்த, பந்தங்களோடு, பகைவனையும் மட்டுமல்லாது; ஆடு, மாடு, காக்கை, குருவி என்று எல்லா ஜீவராசிகளுக்கும் சொந்தக்காரன்... அவனை கேட்டிருந்தால் யாமே! இந்த உலகைப் படைத்தோம்!... அப்படி இருக்க இவைகள் யாவும், இந்த உலகம் யாவும் எனது சொந்தம் என்றே சொல்வான். 

உங்களின் நல்ல பதிவு.... உங்களின் மிக நல்ல முடிவு.... எனது கருத்தும் உங்களின் கருத்திற்கு வலு சேர்க்கும். வாய்ப்புக்கு நன்றிகள் ஐயா!

அன்புடன்,
ஆலாசியம் கோ.

வாழ்க! வளர்க!! பாரதி இலக்கியப் பயிலகம்!!!

Tuesday, October 4, 2011

மராத்திய மன்னர்களின் வாழ்க்கை

மராத்திய மன்னர்களின் வாழ்க்கையும், நாட்டின் நிலைமையும்.

தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னர் ஏகோஜி என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்குத் தீபாபாய், அண்ணுபாய் என இரு மனைவியர் இருந்தனர். இவர்கள் தவிர கங்காபாய் என ஒரு மனைவியும் இருந்ததாக ஒரு குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. அந்தக் குறிப்பு, "1776இல் கைலாசவாசி ஏகோஜி ராஜா சம்சாரம் கங்காபாய் பரலோகம் அடைந்ததற்கு உத்தரகிரியைக்கு 50 சக்கரம் வழங்கப்பட்டது" என்பது. ஏகோஜிக்கு ஆசை நாயகிகளாக இருந்தவர்கள் 30 பேர் என்பதால் இந்த கங்காபாய் அவர்களில் ஒருவராக இருத்தல் கூடும். ஏகோஜி 1682இல் காலமானர், அவருடைய மனைவி என குறிப்பிடப்படும் கங்காபாய் 1776இல் இறந்தார் என்றால் ஏகோஜிக்குப் பிறகு அத்தனை நாட்களா உயிரோடு இருந்தார்கள்? குழப்பமான செய்திதான்.

ஏகோஜிக்குப் பிறகு அவருடைய மூன்றாவது மகனான துக்கோஜி ஆட்சிக்கு வந்தார். இவருக்குத் திருமணம் செய்து கொண்ட மனைவியர் ஐவரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டவர் அறுவர் என்று தெரிகிறது. இந்த அறுவருள் ஒருவர் கத்திக் கல்யாணம் செய்துகொண்ட மராத்தியப் பெண் அன்னபூர்ணாபாயி என்பவரும் ஒருவர். அவருடைய மகன் தான் பிரதாபசிம்மன். இவரைத் தவிர சாமாபாயி என்றொரு பெண்ணும் இருந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. துக்கோஜி 1736இல் தெய்வகதி அடைந்தார் என்ற குறிப்பினால் அவர் இறந்த ஆண்டு உறுதியாகிறது. அவருடைய மனைவியருள் ஒருவரான லக்ஷும்பாயி என்பவர் 1779இல் இறந்தார் என்று குறிப்பிடப் படுவதால், கணவன் இறந்த பின் இவர் 43 ஆண்டுகள் வாழ்ந்தார் எனக் கொள்ளலாம். துக்கோஜிக்கு அன்னபூர்ணாபாயிக்குப் பிறந்த பிரதாபசிம்ம ராஜா தான் அரசன் ஆனதும் தனது மாற்றாந்தாயான இந்த லக்ஷும்பாயி என்பவரின் நினைவாக மாதிரிமங்கலம் எனும் கிராமத்தில் நிலக்கொடை கொடுத்ததாக ஒரு செய்தி கூறுகிறது.

துக்கோஜிக்குப் பிறகு இரண்டாம் ஏகோஜி எனும் பாவாசாஹேப் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு ஆறு மனைவியர். அவர்களுள் மூத்தவர் சுஜான்பாயி எனும் ராணி. பாவாசாஹேப் இறந்த பின் இவருக்குப் பிள்ளைகள் இல்லாமையால் மூத்த மனைவியான சுஜான்பாயிதான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். இது பற்றிய குறிப்புகள் 1857இல் இரண்டாம் சிவாஜியின் மனைவி காமாட்சியம்பாபாயி அவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு சம்பந்தமான ஆவணமொன்றில் இருக்கின்றன. "தஞ்சாவூரில் ஐந்தாவது மன்னராக பாவாசாஹேப் புத்திர சந்தானமில்லாமல் ஆறு பெண்சாதிகளை விட்டுவிட்டு இறந்து விட்டார்கள் அல்லவா? அவர்களுள் முதல் சம்சாரமான சுஜான்பாயி என்பவர்கள் அவருடைய எல்லா ராஜ்யமும் தான் முக்கியமுடையவர் என்று எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொண்டு ராஜ்யபாரம் நடத்தினார்" என்று குறிப்பிடுகிறது.

துக்கோஜி ராஜாவுக்கு நாயுடு சாதியில் ஐந்து பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட மனைவியராக இருந்திருக்கின்றனர். இவர்கள் மூலமாக அவருக்குப் பிறந்த பிள்ளைகள் மாலோஜிராஜா, அரிச்சந்திரராஜா என்கிற அண்ணாசாஹேப், நானாசாஹேப் என மூவர். இம்மூவரும் துக்கோஜி இருந்தபோதே காலமாகிவிட்டனர். இதில் நானாசாஹேப் என்பவருக்கு அப்பூசாஹேப் என்று ஒரு மகன் இருந்தார். இவர் சரபோஜி IV காலத்திலும் உயிரோடு இருந்திருக்கிறார் என்பது இவர் சென்னை ஆங்கிலேய கவர்னருக்கு எழுதிய ஒரு கடிதம் மூலம் தெரிய வருகிறது. அந்தக் கடிதத்தில் அவர் எழுதுவதாவது. "எங்களுக்கு வேறு வாசற்படி வைத்துச் சுவர் எழுப்பிச் சரபோஜி மகாராஜா ஜனங்க்கள் நமது பக்கம் வராமல், எங்களுக்கு ஒருவித அபாயமும் வராமல் பாதுகாப்புக்கு உங்க்கள் பாரா ஒன்று நியமிக்க வேணும். நாங்க்கள் வெளியே சுவாமி தரிசனத்துக்குப் போகும்போதும் வரும்போதும் தகுந்த பந்தோபஸ்துகள் செய்துகொண்டு வரவேண்டும். நாங்கள் ஏகோஜியின் வமிசத்தார். சரபோஜி மகாராஜா அவர்கள் எங்கள் பிள்ளைகளுக்கு அநியாய போதனை செய்து மித்திர பேதம் செய்து வருகிறார். சரபோஜி மகாராஜா எங்களுக்குச் சத்ரு. ஆகையால் எந்த நேரத்தில் எங்களுக்கு அபாயம் வருமோ என்று அவருக்கு உட்பட்டு நடந்து வருகிறோம்". இதிலிருந்து இவ்விருவருகுள் நல்ல உறவு இருக்கவில்லை என்பது தெரிய வருகிறது.

பிரதாபசிம்ம மகாராஜாவுக்கு ஐந்து மனைவியர் என்றும், சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆசை மனைவியர் ஏழு பேரும் இருந்தனர் என்பதைப் பார்த்தோமல்லவா? இவருக்குப் பின் பதவிக்கு வந்த இவரது மகன் துளஜா ராஜாவுக்கு ஆறு மனைவியர். இவருக்கு ஆசை நாயகிகள் குறித்து விவரங்கள் இல்லை. இந்த துளஜா ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட சரபோஜி IVக்கு இரண்டு மனைவியர். இவர் சேர்த்துக் கொண்ட நாயகிகள் பலர். இது போன்ற ஆசைக் கிழத்தியர் அனைவரையும் ஒரு தனி மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த மாளிகைக்கு "கல்யாண மகால்" என்று பெயர். இங்கு உள்ளப் பெண்களை கல்யாணமால் மகளிர் என்பர். சரபோஜிய்ன் மகன் சிவாஜி IIக்கு முறைப்படி மணந்து கொண்ட மனைவியர் மூவர். அதன் பின் இவருக்குக் குழந்தைகள் இல்லை என்பதால் ஒரே நாளில் இவர் 17 பெண்களை மணந்து கொண்டிருக்கிறார். அதன் பின் இவர் நீண்ட நாட்கள் வாழவில்லை. மூன்று ஆண்டுகளில் இறந்தும் போய்விட்டார். அப்படி இவர் சேர்த்துக் கொண்ட மகளிர் மங்களவிலாஸ் எனும் மாளிகையில் வாழ்ந்து வந்தனர்.

இப்படி மராத்திய மன்னர்கள் திருமணம் செய்துகொண்ட மனைவிமார்களும், சேர்த்துக் கொண்ட மாதர்களும், மாண்டவர் போக மீதமிருந்தவர்கள் நெடு நாட்கள் உயிரோடு இருந்திருக்கின்றனர். இவர்களை யெல்லாம் இந்த மாளிகைகளில் வைத்துக் காப்பாற்றி வந்திருக்கின்றனர். இப்படி இந்தக் குடும்பங்களுக்காக செலவு செய்யப்பட்டிருக்கிறது.

தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் மராத்தியப் பிரதேசத்திலிருந்து வந்தவர்களாதலின், தமிழ் நாட்டு பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபட்டவர்களாக இருந்தனர். இவர்கள் பேசும் மொழியும் மாறுபட்டிருந்தது. ஆகையால் மராத்தியப் பிரதேசத்திலிருந்து பலரையும் இங்கு அழைத்து வந்து குடியமர்த்தினர். இவர்களில் பலர் உயர்ந்த அரசாங்கப் பதவிகளை வகித்தனர். அப்படி உயர் பதவி வகித்தவர்கள் செல்வந்தர்களாகவும், செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருந்து வந்தனர். இவர்களது பெயருக்குப் பின்னால் 'அண்ணா' என்றும் 'அப்பா' என்றும் முடியும்படி இருக்கும். அப்படி மராத்திய ராஜ்யத்தில் பிரபலமாக இருந்த சில 'அப்பா'க்கள், தத்தாஜியப்பா, மானோஜியப்பா, ரகுனாத அப்பா, சோனாஜியப்பா, முத்தோஜியப்பா, மல்ஹர்ஜியப்பா என்பவர்களாவர். இப்போதும் தஞ்சாவூர் நகரத்தில் மானோஜியப்பா தெரு, முத்தோஜியப்பா சந்து போன்ற இடங்கள் உள்ளன. 'அண்ணா'க்களில், சிவாஜி II ராஜாவிடம் அமைச்சர்களாக இருந்த பெரியண்ணா சின்னண்ணா இவர்களைக் குறிப்பிடலாம். இதில் பெரியண்ணா என்பவரது பெயர் முத்தோஜி கோவிந்தராவ், சின்ன அண்ணா என்பவர் ரா.வெங்க்கட் ராவ் கோவிந்தராவ். இவர்கள் பெயரால் ஒரு தர்மஸ்தாபன மடம் இப்போதும் மானோஜியப்பா தெருவில் இருக்கிறது. இவர்கள்தான் மராத்தியிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்த "ஹரிகதை" எனும் அரிய கலையைப் பேணி வளர்த்தவர்கள். இவர்கள் உருவாக்கிய முறைதான் இப்போதும் ஹரிகதையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருவையாற்றில் சற்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழா நடைபெறும் சமயம் தஞ்சாவூரில் "வரகப்பய்யர் சந்து" எனுமிடத்திலுள்ள ஒருவரது வீட்டில் ஸ்ரீ தியாகராஜர் வழிபட்ட ஸ்ரீ ராமபட்டாபிஷேக விக்கிரகம் ஒன்றுக்கு ஆராதனை நடைபெறுவதை நாம் அறிவோம். அந்த சந்துக்கு வரகப்பய்யர் சந்து என்று பெயர் வரக் காரணமான நபர் யார் தெரியுமா? மராத்திய மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த வராஹப்பையா ராமசாமி அய்யர் என்பவரின் பெயரால்தான் இந்த சந்து அழைக்கப்படுகிறது. "சேனாதுரந்தார்" என்று இவரைக் குறிப்பிடுகிறார்கள். ஒரு குறிப்பேட்டில் இவரைப் பற்றிக் குறிப்பிடும் செய்தி, "சத்திரம் வகையாறாவைச் சேர்ந்த திம்மதிகாரர்களின் வேலைபார்க்கும் சேனாதுரந்தார்" என்று இருக்கிறது. சங்கீத வித்தையைக் கண்காணிப்பதும், சரஸ்வதி மகால் பண்டாரக் கண்காணிப்பும் இவருடைய வேலையாக இருந்திருக்கிறது. இவர் சங்கீதத்தில் வல்லவராகவும் தெலுங்கு மொழியில் பண்டிதராகவும் விளங்கியிருக்கிறார்.

பிரபல அப்பா ஒருவரைப் பற்றிய விவரங்களைப் பார்க்கலாமா? மானோஜியப்பா எனும் மானோஜி ராவ். இவர் பிரதாபசிம்ம ராஜாவின் படைத் தளபதியாக இருந்தவர். ஆங்கிலேயக் கம்பெனி படைகளுக்கு எதிராக தேவிகோட்டைப் போரில் வீரமாகப் போர் புரிந்தவர். 16-4-1872இல் கோயிலடியில் நடந்த போரில் இவர் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்தார். ஆற்காட்டு நவாபு சந்தா சாஹேபு இவரிடம் தான் சரண் அடைந்தான்.

இது தவிர லாவணி எனும் ஒரு அரிய கிராமப்புறக் கலையும் மராத்தியர்கள் இங்கு கொண்டு வந்த கலைதான். அதில் பங்கு பெற இருவர் வேண்டும். போட்டியிட்டுப் பாடல்களைப் பாடுவர். ஒரு 'டேப்' எனும் தோல் கருவியைத் தட்டிக் கொண்டு அவ்வப்போதே சமயத்துக்குத் தகுந்தபடி கவி இயற்றிப் பாடும் திறமை வேண்டும். கிராமங்களில் திரெளபதி அம்மன் கோயில் போன்ற இடங்களில் இதுபோன்ற லாவணிகள் நடைபெறுவதைப் பார்த்திருக்கலாம். இதில் மன்மதன் எரிந்தது, எரியாதது என்று இரு கட்சிகளாகப் பிரிந்து பாடும் லாவணி இப்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இப்படி குடியேறிய பெருந்தனக்காரர்கள், அதிகாரிகளுக்கெல்லாம் சிற்றேவல் செய்ய கீழ் மட்டத்திலும் ஆட்கள் தேவைப்பட்டன. அப்படிப்பட்டவர்களும் அங்கிருந்தே இங்கு வரவழைக்கப் பட்டனர். அப்படி வந்து சேர்ந்த பெண்களை 'அக்காமார்' என்பர்.

இங்கு சோழ தேசத்தில் கணக்கற்ற வேதம் படித்த பிராமணர்கள் உண்டு. இங்கிருந்துதான் பாலக்காடு போன்ற இடங்களுக்கு வேத பிராமணர்கள் குடியேறியதாக வரலாறு உண்டு. மராட்டியர்கள் அவர்கள் ஊரிலிருந்து பிராமணர்களையும், படைகளுக்கும், மற்ற பல வேலைகளுக்கும் பிராமணர் அல்லாதவர்களையும் அதிக அளவில் அழைத்து வந்து குடியமர்த்தினர். அங்கிருந்த வந்த பிராமணர்களை 'தேசஸ்த' பிராமணர் என்று அழைப்பர்.

இது தவிர, அப்போது தேவதாசி முறை இருந்தமையால் நல்ல அழகுள்ள பெண்கள் பலர் தேவதாசிகளாக இருந்து வந்தனர். இவர்களில் பதியிலார் என்றும், பரத்தையர் என்றும் சிலர் இருந்து வந்ததால் சமுதாயத்தில் ஒட்டுமொத்த கட்டுப்பாடான ஒழுக்கம் நிலவியதாகச் சொல்ல முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி எனும் 'ராஜராஜ்யம்' இங்கு நிலவியிருக்கவில்லை.

அப்போதும் சாதிப் பிரிவுகள் இருந்து வந்தன. இவர்களுக்கிடையே சச்சரவுகளும் ஏற்பட்டு அரசாங்கம் தலையிட வேண்டியும் இருந்திருக்கிறது. உள் நாட்டுச் சமயங்களைத் தவிர்த்து ஆங்கிலேய, பிரெஞ்சுக்காரர்களின் ஆக்கிரமிப்புக் காரணமாக கிறிஸ்துவம் பரவத் தொடங்கியது. கீழ்மட்ட சாதியினர் பலர் புதிய கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர். ஆற்காட்டுப் படைகள், மைசூரின் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் ஆக்கிரமிப்பின் காரணமாக இஸ்லாமும் இங்கு பரவியது. அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களும் இங்கு ஆங்காங்கே உருவாயின.

இசையும் மருத்துவமும் பேணிக் காப்பாற்றப்பட்டன. மராத்திய மன்னர்களின், குறிப்பாக சரபோஜி IVஇன் அவையில் பல கர்னாடக சங்கீத வித்வாங்களும், மருத்துவ வல்லுனர்களும், தமிழ்ப் புலவர்களும் நிறைந்திருந்தனர்.

இந்த மடாலயங்கள் அரசரின் ஆதரவைப் பெற்றிருந்தன. காஞ்சி காமகோடி மட அதிபரும் கும்பகோணத்துக்கு வந்து சேர்ந்தார். அவருக்கும் மராத்திய மன்னர்கள் மடத்தைக் கட்டி ஆதரவளித்தனர். சம்ஸ்கிருத மொழியும் செழித்து வளர்ந்து வந்தது. பல மொழிப் புலவர்கள் அவையை அலங்கரித்தனர். தமிழ், தெலுங்கு, மராத்தி, பாரசீகம், சமஸ்கிருதம் போன்றவை இங்கு நன்கு பாதுகாக்கப்பட்டன.

1801இல் துளஜா ராஜா இறந்த போது அவருடைய 'அஸ்தி' காசிக்குக் கொண்டு சென்று கங்கை நதியில் கரைக்கப்பட்டதாக குறிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நீண்ட தூர பயணங்கள் அப்போதும் இவர்களால் போக முடிந்திருக்கிறது என்பது வியப்பிற்குரிய செய்தி.

நாட்டில் பெரும் நிலக்கிழார்கள் பலர் இருந்தனர். சிறு நிலவுடைமையாளர்கள் ஒவ்வொரு ஊரிலும் அதிகம் இருந்தனர். இவர்கள் தவிர நிலமற்ற கூலிகளாக பெருமளவு மக்கள் உழைப்பை நம்பி வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்ட சமூக அமைப்புகள், அந்த கால வாழ்க்கை, நீதி பரிபாலனம், புழக்கத்தில் இருந்த நாணயங்கள் இவை குறித்தும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.

கண்டிராஜா அரண்மனை:

தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் கண்டிராஜா அரண்மனை என்றொரு இடம் இருக்கிறது. இந்தப் பெயர் வரக் காரணம் என்ன என்பதற்கு இந்த மராத்தியர் வரலாற்றில் சில குறிப்புகள் காணப்படுகின்றன. 1816இல் ஆங்கிலேயர்கள் இலங்கையில் உள்ள கண்டியைக் கைப்பற்றினார்கள். அப்போது அங்கு விக்கிரமசிங்கன் என்பவர் ஆட்சி செய்து வந்தார். கண்டியைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் மன்னர் விக்கிரமசிங்கனையும், அவரது தாய் மற்றும் நான்கு மனைவியரை அந்த மன்னரின் ஆட்கள் ஐம்பது பேருடன் ஒரு படகில் ஏற்றி தமிழகத்துக்கு அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது. சென்னை சென்றடைந்த அவர்களை சென்னை கம்பெனியார் வேலூருக்கு அனுப்பியிருக்கின்றனர். வெள்ளையரின் கைதிகளாக இங்கு வந்த கண்டிராஜாவும், ராணிகளும் அவர்கள் ஊழியர்களும் பின்னர் ராஜாவைத் தவிர மற்றவர்கள் தஞ்சைக்கு வந்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தஞ்சை மகர் நோன்புச்சாவடிக்கு வந்தார்கள். இந்த விக்கிரமசிங்கனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் கீர்த்திவர்மராஜா. இவர்களுக்காகக் கட்டப்பட்டு தங்க வைக்கப்பட்ட இடம்தான் கண்டிராஜா அரண்மனை.

மராத்தியர் ஆட்சிக்குட்பட்ட தஞ்சை ராஜ்யத்தின் பரப்பளவு:

மராத்திய மன்னர்கள் ஆண்ட பகுதி என்பது இப்போதைய தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தை உள்ளடக்கியப் பகுதிகள். ராஜ்யம் ஐந்து பிரிவுகளாக வகுக்கப்பட்டு ஒவ்வொன்றும் 'சுபா' என்று அழைக்கப்பட்டது. அந்த சுபாக்கள், பட்டுக்கோட்டை, மன்னர்குடி, கும்பகோணம், மாயூரம், திருவாடி (திருவையாறு) என்பன. ஒவ்வொரு சுபாவிற்குள்ளும் பல சீமைகள் என்று பிரிக்கப்பட்டன. நாட்டில் பல சிற்றூர்களிலும் கோட்டைகள் இருந்தன. ஒவ்வொரு கோட்டைக்கும் தலைவராக இருந்தவர் 'கில்லேதார்' என்று அழைக்கப்பட்டார். அப்படி இருந்த சில கோட்டைகள் பட்டுக்கோட்டை, மகாதேவபட்டணம், சாக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, பந்தநல்லூர் ஆகியவை.

கிழக்கிந்திய கம்பெனியாருடன் மராத்திய மன்னர்களின் தொடர்பு.
தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட கிழக்கிந்திய கம்பெனியாருடன் தொடர்பு கொண்டிருந்தனர். 'கும்பெனியார்' என்று அந்தக் காலத்தில் குறிப்பிடப்பட்ட இந்த ஆங்கிலக் கம்பெனியாருடன் மராத்திய மன்னர்கள் பல உடன்படிக்கைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த ஒப்பந்தங்களை கவனித்தால் இவற்றின் மூலம் மராத்திய மன்னர்கள் தங்களுடைய பல உரிமைகளை இழந்ததும், படைகளைக் குறைத்துக் கொள்ள நேர்ந்ததும், ஆங்கிலேயர்களின் படையைத் தஞ்சையில் தங்க வைத்து செலவு செய்ததும், ஆற்காட்டு நவாபுடனான உறவுகளை கும்பெனியார் வழியாக செய்து வந்ததும் தெரியவருகிறது. புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலெயருக்குப் பகை என்றால் தஞ்சை மன்னர்களுக்கும் பகை என்றாகியது. ஆங்கிலேயர்களின் கம்பெனி பிரதிநிதியாக தஞ்சையில் 'ரெசிடெண்ட்' என்று ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். சரபோஜி IV காலத்தில் வரிவசூலையும் ஆங்கிலேயர்களே செய்துகொள்ளத் தொடங்கினர். தஞ்சை நகரம் மட்டும்தான் மராட்டிய மன்னர்களின் நேரடிப் பார்வையில் இருந்து வந்தது.

ஆங்கில அதிகாரிகள் முறையே கவர்னர் ஜெனரலாகவும், கவர்னர்களாகவும், ரெசிடெண்ட் ஆகவும், பிற அலுவலர்களாகவும் இருந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட சிலரது பெயர்களைப் பார்க்கலாம். கவர்னர் ஜெனரலாக இருந்தவர்களில் வாரன் ஹேஸ்டிங்ஸ் இவர் கல்கத்தாவில் இருந்தார். அடுத்து லார்டு கார்ன்வாலிஸ் என்பவர். இவரும் கல்கத்தாவில் இருந்தவர். தஞ்சைக்கு இவர் இரு முறை வந்திருக்கிறார்.

சென்னையில் கம்பெனியின் கவர்னர்களாக இருந்தவர்களில் லார்டு பிகாட் (Lord Pigot) என்பவர் இருமுறை பதவி வகித்தவர். 1773இல் துளஜா ராஜா ஆற்காட்டு நவாபினால் சிறையில் அடைக்கப்பட்டு தஞ்சை நவாபு ஆட்சியில் இருந்தது. அரண்மனை நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன. தளபதி மானோஜி ராவும் சிறையில் அடைக்கப்பட்டார். இவைகள் எல்லாம் அப்போது சென்னையில் கவர்னராக இருந்த விஞ்ச் (Vynch) என்பவரின் தூண்டுதலோடு நடைபெற்றது. சென்னை கவர்னரின் இந்தச் செயலை இங்கிலாந்தில் இருந்த கம்பெனியின் Council of Directors ஏற்றுக் கொள்ளவில்லை. நவாபிடமிருந்து ராஜ்யத்தைக் கைப்பற்றி துளஜாவிடம் ஒப்படைக்குமாறு கம்பெனி உத்தரவிட்டது. உடனே லார்டு பிகாட் 11-4-1776இல் தஞ்சைக்கு வந்து நவாபை நீக்கிவிட்டு துளஜாவை விடுதலை செய்து ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார். அதனையடுத்து துளஜா ஆங்கில கம்பெனியாருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி வெள்ளைத் துருப்புக்கள் தஞ்சையிலும் வேறு சில இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டன. அவர்களின் செலவுக்காக ராஜா 4 லக்ஷம் வராகன் கொடுத்து வந்தார்.

அடுத்ததாக அலெக்சான்டர் டேவிட்சன் (Alexandar Davidson) என்பவர். இவர் 18-6-1785இல் சென்னை கவர்னர் ஆனார். இவரையடுத்து ஆர்ஸ்பால்டு காம்ப்பெல் (Sir Archbald Campbell) என்பவர் வந்தார். இவர் கவர்னராகவும் படைத் தளபதியாகவும் இருந்தார். துளஜா ராஜா காலமானபோது இவர்தான் சென்னை கவர்னர். துளஜாவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அமரசிம்மன் தனது ஆட்சி காலத்தில் ஆடம்பரச் செலவுகள் செய்கிறார் என்று புகார் போனதன் அடிப்படையில் அப்படி ஆடம்பரச் செலவுகள் செய்யக்கூடாது என்று இவர் மன்னருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இவர்களையடுத்து லார்டு ஹோபர்டு என்பவர் கவர்னர் ஆனார். இவர் நான்கு ஆண்டுகள் 1794 முதல் 1798 வரை கவர்னராக இருந்தார். இவர் மன்னர் சரபோஜியிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்திருக்கிறார். இவ்விருவரும் வேட்டைக்கு ஒன்றாகச் சென்றிருக்கிறார்கள். இவரையடுத்து கவர்னராக வந்தவர் சர் தாமஸ் மன்றோ (Sir Thomas Manro) இவர் 1820 முதல் 1827 வரை கவர்னராக இருந்தவர். இவரைப் பற்றிக் குறிப்பிடும் ஆவணம் ஒன்றில் இவரை The Right Hon'ble Major General Sir Thomas Manro K.C.B.Baronet" என்று குறிப்பிடப்படுகிறார். இவரும் 1826இல் தஞ்சாவூருக்கு வருகை புரிந்திருக்கிறார். இவருக்குப் பின் 1829இல் வாஷிங்டன் என்பவர் கவர்னராக இருந்திருக்கிறார்.

ரெசிடெண்டுகள்.
ரெசிடெண்டுகள் என்பவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் பிரதி நிதிகளாகத் தஞ்சையில் இருந்த அதிகாரிகள். அந்தந்தப் பகுதிகளை ஆண்ட அரசர்களை இவர்கள் மேற்பார்வையிட்டு வந்தனர். அப்படித் தஞ்சையில் ரெசிடெண்டுகளாகப் பலர் இருந்திருக்கின்றனர். அவர்களில் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் என்பவர் ஒருவர். மற்றொருவர் அலெக்சாண்டர் மக்லோட் (Alexandar Macleod) என்பவர். இவர் துளஜா ராஜா காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. ஜி.ஹெச்.ராம் என்றொருவர் இருந்திருக்கிறார். அடுத்து பெஞ்சமின் டூரின் (Benjamin Torin). இவர் 1798 முதல் தஞ்சையில் ரெசிடெண்டாக இருந்திருக்கிறார்.

இந்த ரெசிடெண்டுகளுக்குச் சம்பளம் மராத்திய அரசர்களே கொடுத்து வந்தார்கள். இந்த பெஞ்சமின் டூரினுக்குச் சம்பளம் 1000 பவுண்டுகள். வில்லியம் பிளாக்பர்ன் (William Blackburn) என்பவரும் ரெசிடெண்டாக இருந்திருக்கிறார். ஜான் பைல் (John Fyle), ஜே.பிளாக்பர்ன், கிண்டர்ஸ்லி, மங்கமாரி, பாரட் ஆகியோரும் ரெசிடெண்டாக இருந்து வந்தனர். இதில் பாரட் என்பவர் ஆக்டிங் ரெசிடெண்டாக இருந்தவர். 1847இல் ஜே.பிஷப் என்பவரும், ஹெச்.போர்பஸ் (H.Forbes) ஆகியோரும் ரெசிடெண்டாக இருந்தனர். இந்த போர்பஸ் பட்டுக்கோட்டையில் தங்கியிருந்திருக்கிறார். மராத்தியர் ஆட்சி 1855இல் முடிவுக்கு வந்த பின்னர் பிலிப்ஸ் என்பவர் 1858, 59 ஆண்டுகளில் ரெசிடெண்டாக இருந்திருக்கிறார்.

ஸ்வார்ட்ஸ் பாதிரியார்.
மன்னர் சரபோஜியின் காப்பாளராக இந்த ஸ்வார்ட்ஸ் பாதிரியார் இருந்ததையும், இவருக்காக மன்னர் ஒரு வழிபாட்டுத் தலத்தை சிவகங்கைத் தோட்டத்தில் கட்டிக் கொடுத்திருப்பதையும் முன்னமே பார்த்தோமல்லவா? இவர் ஒரு ஜெர்மானிய பாதிரியார். தரங்கம்பாடியில் 11 ஆண்டுகள் இருந்தவர். பின்னர் திருச்சினாப்பள்ளியிலும் இருந்தார். கி.பி.1769இல் தஞ்சைக்கு வந்தார். இங்கு அவர் கிறிஸ்தவ மதப் பணியில் ஈடுபட்டிருந்தார். துளஜா ராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டு அவரோடு நண்பராகப் பழகினார். இவருக்கு பாரசீகம், உருது, மராத்தி ஆகிய மொழிகள் தெரியும். கிழக்கிந்திய கம்பெனியாரிடம் இவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. 1787இல் துளஜா சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட பிறகு, அந்தச் சிறுவனை கல்வி புகட்டிப் பாதுகாக்கும் பொறுப்பை ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம்தான் கொடுத்திருந்தனர். இவர் 13-2-1798இல் காலமானார்.

அரசாங்க அலுவலர்கள்.
தஞ்சை மராத்தியர் ஆட்சியில் மன்னர்தான் ஆட்சித் தலைவர். அவருக்கு உதவியாகப் பல அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் முறையே சர்க்கேல், சுபேதார், பதக்தார், அமல்தார், சிரஸ்தேடார், தாசில்தால், ஹவில்தார், கொத்தவால், கார்பாரி, கில்லேதார், கார்கூன், திம்மதி, காவல்காரர், ஹர்காரா, வக்கீல், மஹால் மத்யஸ்தர், கமாவிஸிதார், கலாசி, கோட்டிவாலா, நிஷ்பதி, இமாரதி, பதக்னீஸ், காஸ்னீஸ், தஸ்தூர், ராயஸ், ஹேஜிப், சிட்னீஸ், பாக்குவான் இப்படிப் பலப் பலப் பெயர்களில் ஊழியர்கள் இருந்திருக்கிறார்கள்.

சர்க்கேல் என்பவர் தலைமை அதிகாரி போல அதிகாரமுள்ள பதவி. அதற்கடுத்து சுபேதார் எனும் பதவி. மராத்திய ஆட்சிக்குரிய பகுதிகளாகப் பட்டுக்கோட்டை, மன்னார்குடி, மாயூரம், கும்பகோணம், திருவையாறு என சுபாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இதில் ஒவ்வொரு சுபாவுக்கும் ஒரு அதிகாரி உண்டு. அவர்தான் சுபேதார் எனப்படுபவர். இந்த சுபேதார்கள் ஆட்சித் தலைமை மட்டுமல்லாமல், ராணுவத் தலைமையும் பெற்றிருந்தார்.

ஒரு சில ஊர்களை உள்ளடக்கிய பகுதிக்கு பதக் என்று பெயர். இந்த கிராமக் குழுக்களுக்கு பதக்தார் எனும் அதிகாரி இருந்தார். இப்போதைய பஞ்சாயத்து யூனியனுக்கு ஒப்பாகச் சொல்லலாம். வருவாய்த் துறையை கவனித்துக் கொள்ள அமில்தார் என்ற அதிகாரி இருந்தார். ஆவணங்களைக் காக்கும் பணிக்கு சிரஸ்ததார் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். தாசில்தார் என்பவர் ஒரு சிறிய பகுதியில் வரி வசூல் செய்யும் பணியில் இருந்தவர். இராணுவத்தில் ஹவில்தார் என்ற பதவி இருந்தது.

கோட்டையின் காவல் அதிகாரியாக கொத்தவால் என்பவர் இருந்தார். கார்பாரி என்பது அரண்மனையில் ஒரு பெரிய பதவி. கில்லேதார் கோட்டையில் மிகப் பெரிய பொறுப்புள்ள அதிகாரி. ஒரு மஹால் அல்லது சிறு பிரிவுக்கு அதிகாரி மஹால்மத்யஸ்தர் எனப்படுவார். சூப்பர்வைசர் என்கிறோமல்லவா அது போன்ற பொறுப்புள்ளவர் கமாவிஸ்தார். குமாஸ்தா அல்லது கணக்கெழுதியாக இருப்பவர் கார்கூன். நாட்டிலும், வெளியிலும் ஒற்றர்களாக வேவு பார்ப்பவர்களுக்கு ஹர்காரா என்று பெயர். நீதிமன்றங்களில் திம்மதி என்றொரு பதவி இருந்தது. பொது மராமத்து பணியினைச் செய்பவர் இமாரதி எனப்படுவர். ஹேஜிப் என்பவர் கணக்குப் பிள்ளை. சிட்னீஸ் என்பது ஸ்டெனோகிராபர் பணி போன்றது. அதிகாரிகள் சொல்வதை எழுதுவது. காவலர்கள் "காவல்காரர்கள்" என அழைக்கப்பட்டனர். இதுபோன்ற பல பணிகளுக்கு ஆட்கள் இருந்தனர்.

மராட்டியர் ஆட்சியில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள்.

தஞ்சை மராத்தியர் ஆட்சியில் பல்வகையான நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. ஆவணங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பெறும் சில நாணயங்களில் "சக்கரம்" என்பது ஒன்று. மேலும் 'புலிவராகன்', பணம், காசு என்றெல்லாமும் குறிப்பிடப் பெறுகிறது. இதில் பத்துப் பணம் ஒரு சக்கரம் என்று எழுதப்படுகிறது.

இது தவிர சென்னைப்பட்டணம் வெள்ளிப்பணம் என்றொரு நாணயம் குறிப்பிடப்படுகிறது. அதாவது இரண்டரை பணம்த்துக்கு ஒரு சென்னைப்பட்டனம் வெள்ளிப்பணம். சக்கரத்தில் நாலில் ஒரு பங்கு. தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள விவரப்படி நாணய மாற்று கீழ்கண்ட முறையில் இருந்திருக்கிறது.

32 காசுகள் என்பது 1 பணம்.
2 1/2 பணம் என்பது 1 சென்னைப்பட்டண வெள்ளிப் பணம்
4 வெள்ளிப் பணம் அல்லது 10 பணம் என்பது 1 சக்கரம்
4 1/2 சக்கரம் அல்லது 45 பணம் என்பது 1 புலி வராகன்

இந்த வராகன் சில இடங்களில் மாறுபட்ட மதிப்பிலும் இருந்திருக்கிறது. பரங்கிப்பேட்டை வராகன் என்றும், நாகப்பட்டினம் வராகன் என்றும் இருந்திருக்கிறது.

நாணய வகைகளில் தங்க நாணயமும் இருந்திருக்கிறது. இது அதிக அளவில் சாதாரண மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்திருக்கவில்லை. இது தவிர 'ஹொன்னம்' எனும் நாணய மதிப்பு பற்றியும் சில குறிப்புகள் வருகின்றன. கோணிக்காசு என்றும், சாணார்காசு என்றும், கிணிகாசு என்றும் சிலவகை நாணயங்கள் இருந்திருக்கின்றன.

திருமருகல் எனும் ஊரில் அமரசிம்மன் காலத்தில் ஒரு நாணயம் உற்பத்திச் சாலை இருந்திருக்கிறது.

மராத்தியர் காலத்தில் சமயங்களும், ஆலய நிர்வாகங்களும்.

தமிழ் நாட்டுக்கு அன்னியமானவர்களாக இருந்த போதிலும், மராத்தியர்கள் இங்கு வழக்கத்தில் இருந்த ஆலய வழிபாடு, நிர்வாகம் இவற்றில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட வில்லை. இன்னும் சொல்லப் போனால் சில ஆலயங்களின் நிர்வாகத்தை மன்னர்கள் நேரடியாகக் கண்காணித்துச் சிறப்பாக நடத்தி வந்தனர். இவர்கள் தீவிரமாக எந்தப் பிரிவையும் ஆதரிக்கவில்லை. சைவ, வைணவ வேற்பாடுகளை இவர்கள் பார்த்ததில்லை. இருவகை ஆலயங்களையும் நன்கு பராமரித்து வந்தனர். தஞ்சாவூர் நகரத்துக் கோயில்கள் அனைத்துமே இவர்களது பராமரிப்பில் சிறப்பாக நடந்து வந்திருக்கிறது. தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில், திருவிடைமருதூர், கும்பகோணம், திருபுவனம், திருவாரூர், திருப்பழனம்,பந்த நல்லூர், திருவாப்படி, பட்டீச்சரம், மன்னர்குடி, திருவானைக்கா, வைத்தீஸ்வரங்கோயில், திருமயிலாடி, திரு நள்ளாறு, திருவண்ணாமலை, திருப்பதி, மதுரை ஆகிய இடங்களுக்கு இவர்கள் செய்திருக்கும் சேவை குறித்து விவரங்கள் இருக்கின்றன. இவை தவிர, திருவரங்கம், இராமேஸ்வரம், திருப்பனந்தாள், யாழ்ப்பாணம் ஆகிய கோயில்களும் இவர்கள் முழு கவனத்துக்கு ஆளாகியிருக்கின்றன.

கிறிஸ்தவ தேவாலயங்கள் பல இவர்களால் எழுப்பப்பட்டிருக்கின்றன. தஞ்சையில் சரபோஜி ராஜா, தன் காப்பாளராக இருந்த ஸ்வார்ட்ஸ் பாதிரியாருக்காக ஒரு தேவாலயத்தை எழுப்பிக் கொடுத்தார். 1822இல் சரபோஜி ராஜா மருதப்ப மேஸ்திரி என்பவரை தரங்கம்பாடிக்கும், நாகைப்பட்டினத்துக்கும் அனுப்பி கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைப்பது குறித்து மாதிரிகளைப் பார்த்து வர அனுப்பியிருக்கிறார்.

தரங்கம்பாடியில் இருந்த ஒரு பாதிரியார் நடத்தி வந்த ஆங்கிலப் பள்ளிக்கு நிதியுதவி செய்து வந்ததாக 1819இல் உள்ள ஒரு குறிப்பு கூறுகிறது. மாயூரத்திலும் பர்ங்கடிக் எனும் பாதிரியாருக்கு சர்ச் நடத்த நிதியளித்து வந்திருக்கிறார்.

மராத்திய மன்னர்களின் கலைப் பணிகள்.

எப்போதுமே தஞ்சை கலைகளின் இருப்பிடம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. மராத்திய மன்னர்கள் காலத்தில் இசைக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தனர். கோயில்கள் சுவாமி புறப்பாடு போன்ற நேரங்களில் இசையும் நாட்டியமும் நடக்கும்படி சில சேவைகளை இவர்கள் நடத்தி வந்தார்கள். அதில் பல்லகீ சேவை என்பதும் ஒன்று. சுவாமி புறப்பாட்டின்போது இசையும், நாட்டியமும் நடக்கும் நிகழ்ச்சி இது. நாடகங்களும் இவர்கள் காலத்தில் வளர்ந்து வந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் சம்ஸ்கிருதத்திலும் நாடகங்கள் நடிக்கப்பட்டிருக்கின்றன.

நாயக்கர் காலத்தில் தமிழகத்துக்கு வந்த பாகவத மேளாவும் மராத்தியர் காலத்தில் செழித்து வளர்ந்திருக்கிறது. மிலட்டூர், நீடாமங்கலம் போன்ற இடங்களில் இன்றளவும் இந்தக் கலை புகழோடு நடத்தப் பட்டு வருகிறது.

இவர்கள் ஆட்சியில் நாட்டியக் கலை சிறந்து விளங்கியது. ஆண்களும் நாட்டியம் ஆடி வந்தனர். நாட்டியம் ஆடும் பெண்கள் குறித்தும், நட்டுவனார்கள் குறித்தும் பல செய்திகள் கிடைக்கின்றன. எல்லா கோயில்களிலும் நாட்டியப் பெண்கள் இருந்தனர். மகாராஜாவின் சபையில் நாட்டியங்கள் அடிக்கடி நடந்து வந்திருக்கின்றன.

நாட்டியப் பெண்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். சில குறிப்பிட்ட ஆபரணங்களை அவர்கள் அணியக்கூடாது. குறிப்பாக வைர ராேக்கோடி, பேசரி, அட்டிகை, வெள்ளி மெட்டி இவை கூடாது. நெற்றியில் குறுக்காக நீளமாக குங்குமம் இடக்கூடாது. அணியும் உடைகளில், புடவை, ரவிக்கை இவைகளில் சில கட்டுப்பாடுகள், கையில் உருமால் வைத்திருக்கக்கூடாது. அரண்மனையில் நாட்டியம் ஆடும்போது இறைவன், ராஜா தவிர வேறு 'நரஸ்துதி' எதுவும் கூடாது. இறைவன் சந்நிதியில் இறைவனை மட்டும்தான் பாடி ஆடவேண்டும் இதுபோன்ற பல கட்டுப்பாடுகள்.

நட்டுவனார்கள் சபையில் இருக்கும்போது துப்பட்டா அல்லது சால்வைகள் கழுத்தில் அணிய வேண்டும். தலையில் கட்டியிருக்கக்கூடாது. காலில் செருப்பு அணிதல் கூடாது. இதுபோன்ற சில கட்டுப்பாடுகள் உண்டு.

தஞ்சையின் பிரபலமான நட்டுவனார்.

தஞ்சாவூரில் பல பிரபலமான நட்டுவனார்கள் இருந்தனர். தஞ்சையில் இருந்த சுப்பராய ஓதுவார் என்பவருடைய பிள்ளைகளான பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர் இருந்தனர். இவர்கள்தான் தஞ்சை நால்வர் என்று புகழ் பெற்றவர்கள். இதில் சிவானந்த நட்டுவனாரைப் பற்றி ஒரு ஆவணம் இருக்கிறது. இவர் தஞ்சை பெரிய கோயிலில் நட்டுவாங்கம் செய்து வந்தவர். அந்த சமயத்தில் தஞ்சையின் கடைசி ராஜாவான சிவாஜி IIஇன் மகளான ராஜஸாபாயி அம்மணி சாயேப் என்பவருக்குத் திருமணம் நடந்தது. நட்டுவனார் சிவானந்தம் அந்தத் திருமணத்துக்குச் சென்றிருந்தார். அப்போது ராஜா சிவாஜி நட்டுவனாரிடம் தஞ்சையில் இருக்கும் தேவதாசிகளுக்கு ஹிந்துஸ்தானிய நாட்டியமும், கர்நாடக நாட்டியமும் கற்றுத்தரும்படி பணித்தார். அந்த உத்தரவுக்கிணங்க சகோதரர்கள் நால்வரும் இரவு பகலாக தேவதாசிகளுக்கு இவ்விரு நாட்டியத்தையும் கற்றுக் கொடுத்தனர். இந்த நிலையில் தஞ்சை பெரியகோயில் அதிகாரி ஒருவர் சிவானந்தம் அரசர் முன்னிலையில் ஆடக்கூடாது என்று தடைவிதித்து விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சிவானந்த நட்டுவனார் அரசரிடம் மேல் முறையீடு செய்திருக்கிறார். இந்த விவரம் ஆவணங்கள் மூலம் கிடைக்கிறது.

இந்த பிரபலமான நட்டுவனார்கள் தஞ்சை மேல வீதியில் இருந்திருக்கிறார்கள். பின்னர் இவர்களில் சின்னையா மைசூர் சமஸ்தானத்துக்குச் சென்று விட்டார். வடிவேலு திருவிதாங்கூர் சமஸ்தான வித்வானாகச் சென்று விட்டார். பொன்னையா முத்துஸ்வாமி தீக்ஷிதருடன் இருந்தார். சிவானந்தம் மட்டும் தஞ்சையில் சிவாஜி ராஜாவின் ஆதரவில் தஞ்சை பெரிய கோயில் நட்டுவாங்கப் பணியில் ஈடுபட்டிருந்தார். மன்னர் சிவாஜி II காலத்தில் வாழ்ந்த இந்த தஞ்சை நால்வரின் புகழ் இன்றும் தொடர்ந்து நாடெங்கும் புகழ் மணம் பரப்பி வருகிறது. இந்த நால்வர் நினைவாக தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் புகழ்பெற்ற நட்டுவனார் ஹேரம்பநாதன் அவர்கள் "சின்ன மேளம்" எனும் பெயரில் ஒரு நாட்டிய விழாவினை நடத்தி வருகிறார். அரண்மனை தேவஸ்தானமும், தஞ்சை இளவரசரும் இந்த நிகழ்ச்சிக்கு உதவி வருகின்றனர்.

மராத்தியரின் புகழ் பரப்பும் 'சரஸ்வதி மகால்'.

அந்த நாட்களில் கல்வி இன்றுபோல் சிறந்து விளங்கவில்லை. அனைவருக்கும் கல்வி போன்ற எந்த நிலையும் இல்லை. மிகச் சிலரே கல்வி கற்று வந்தனர். வேதம் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. அது ஒரு சாரார் மட்டும்தான் படித்து வந்தனர். இங்கு ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களால் தெலுங்கும், நவாபுகள், சுல்தான் கள் ஆகியோரால் இந்துஸ்தானியும், மராத்தியர்களால் மராத்தி மொழியும், இந்த மண்ணுக்குரிய தமிழும், வெள்ளைக்காரர்களால் ஆங்கிலமும் மக்கள் கற்கத் தொடங்கினர்.

தஞ்சையில் "நவவித்யா கலாசாலை" என்றொரு அமைப்பு இருந்திருக்கிறது. இதில் 1785இல் 86 பேர் வேத அத்யாயனம் செய்து வந்திருக்கின்றனர். மற்ற மொழிப் பள்ளிகளில் 385 பேர் படித்து வந்தனர் என்பதும் தெரிய வருகிறது. இந்த வித்யாலயாவில் தங்கிப் படிக்கவும், உணவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்தக் கலாசாலை "சரஸ்வதி பண்டாரம் - சரஸ்வதி மகால்" என்று பெயர் பெற்றது. இதில் பல மொழி சுவடிகளும் இருந்தன. இது நாளடைவில் வளர்ந்து பெரிதாகி இன்று நாடு புகழும் ஒரு ஆவணக் காப்பகமாகத் திகழ்கிறது. மராத்திய மன்னர்கள் இலக்கியத்துக்கும், கலாச்சார பாதுகாப்புக்கும் செய்திருக்கும் பெரிய தொண்டு சரஸ்வதி மகால் நூலகம்.