பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, September 17, 2011

மகாகவி பாரதியார் - ரமண மகரிஷி சந்திப்பு

மகாகவி பாரதியார் - ரமண மகரிஷி சந்திப்பு

(மகாகவி பாரதியார் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியைச் சந்தித்ததாக ஒரு செய்தி. அது குறித்து அறிஞர் பெ.சு.மணி அவர்கள் "அந்த மகத்தான சந்திப்பு" எனும் தலைப்பில் 'குமுதல் ஸ்பெஷல்' 1996 ஜூன் இதழில் எழுதிய கட்டுரையைத் தந்திருக்கிறேன்.) 

பாரதியாரின் ஆன்மிக வாழ்க்கையில் அவர் சந்தித்த சில ஞானிகளைப் பற்றிக் கவிதையிலும் உரைநடையிலும் அறிகின்றோம். ஆனால் திருவண்ணாமலை ரமண மகரிஷியைச் சந்தித்ததைப் பற்றி அவர் வாய்மொழியாக அறிய வாய்ப்பில்லாமல் போயிற்று. அவர் ரமணரைச் சந்தித்ததைப் பற்றி ரமண மகரிஷி குறிப்பிட்டுள்ளார். இதற்குரிய சான்று "Day by day with Bhagavan" எனும் நூலில் உள்ளது. ரமண பக்தர் ஏ.தேவராஜ முதலியார் தமது நாட்குறிப்பில் ரமணருடன் நிகழ்ந்த உரையாடல்கள் பலவற்றை (மார்ச் 16, 1945 முதல் ஜனவரி 4, 1947 வரையில்) பதிவு செய்துள்ளார். இதுவே தனி நூலாக வெளிவந்தது.

இந்த நூலில் திரு ஜி.வி.சுப்பராமய்யா எனும் ரமண பக்தர் "சுப்பிரமணிய பாரதியாரைத் தாங்கள் சந்தித்தது உண்டா?" எனும் கேள்வியை ரமணரிடம் கேட்டார்.

"நாம் மலையில் இருந்த காலத்தில் அவர் ஒரு முறை வந்தார் என நினைக்கிறேன். ஒரு நாள் மாலையில் சிவய்யா (பிற்காலத்தில் குற்றாலம் மணி சுவாமி) மட்டும் இருந்தார். அப்பொழுது யாரோ ஒருவர் வந்து, சுமார் ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தார். பிறகு ஒரு வார்த்தையும் பேசாமல் சென்று விட்டார். பின்பு ஒரு சமயம் பாரதியார் படங்களைப் பார்த்த பொழுது, அன்று வந்தவர் அவர் தான் என அறிந்தேன்."

இங்கு 'மலையில் இருந்த காலம்' என்பது, ரமண மகரிஷி திருவண்ணாமலை ஸ்கந்தாஸ்ரமத்தில் 1916 முதல் 1922 வரையிலான காலத்தைக் குறிப்பதாகும். பாரதியார் எப்பொழுது திருவண்ணாமலை வந்து ரமணரைச் சந்தித்தார் எனும் கேள்விக்கு விடை காணப் பல ஆண்டுகள் பாடுபட்டேன். அண்மையில் 'சுதேசமித்திரன் பழைய பிரதிகளின் 'மைக்ரோ பிலிம்' சுருள்களைப் பார்த்துக் கொண்டு வந்து பொழுது, விடை கிடைத்து விட்டது.

1921 மே மாதம் 2,3 ஆம் தேதிகளில் பாரதியார் திருவண்ணாமலைக்கு வந்து இரு பொதுக் கூட்டங்களில் பேசியுள்ளார். இந்தச் செய்தி 'சுதேசமித்திரன்' 3, 5ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி எனும் தலைப்பில் 'பொது வர்த்தமானம்' பகுதியில் வெளிவந்துள்ளது.

முதல் கூட்டம் மே 2இல் அருணாசலேஸ்வரர் கோயில் எதிரில் 'இந்தியாவின் எதிர்கால நிலைமை' எனும் தலைப்பில் பேசியதன் சாரம்சம் பின்வருமாறு 'சுதேசமித்திரனில்' வெளிவந்துள்ளது.

"நமது வேதங்களில் வெகு நாளைக்கு முன்பாகக் கூறப்பட்டுள்ள ஏகை சுபாவம் என்னும் தத்துவத்தைக் கொண்டு நம் பாரத நாட்டின் எதிர்கால நிலைமை சீர்படுத்தப்பட வேண்டும் என்றும், தேசிய விடுதலை அல்லது ஸ்வராஜ்யத்திற்கு இந்த மார்க்கமே தக்க கருவியாய் இருந்து, இந்தியாவே அதற்குத் தலைமை ஸ்தானம் வகிக்க வேண்டுமென்றும் இந்தியாவின் விடுதலைக்கு எதிரியாய் உள்ளவர்களை யெல்லாம் கடவுள் சரியானபடி தண்டித்து வருகிறாரென்றும், கூடிய சீக்கிரத்தில் நாம் விடுதலையடைவோம்" என்றும் ஸ்ரீ பாரதியார் பேசினார். ஊரெங்கும் இப்பிரசங்கம் ஒரு மகத்தான பரபரப்பை உண்டாக்கி விட்டதென்று ஒரு நிருபர் தந்தி மூலம் அறிவிக்கின்றார்."

பாரதியார் பேசிய இரண்டாவது பொதுக்கூட்டம் 3ஆம் தேதியன்று அருணாசலேஸ்வரர் கோயில் பதினாறு கால் மண்டபத்தில் நடைபெற்றது. இங்கும் 'இந்தியாவின் எதிர்கால நிலைமை' எனும் தலைப்பில் பேசினார். இந்தப் பொழிவின் ஒரு பகுதி பின் வருமாறு.

"இராஜீய ஞானத்தில் இனி ஒப்புவமையில்லை என்று சொல்லும்படியாக மகாத்மா காந்தி இந்தியாவில் உற்பத்தியாகி இருக்கின்றார். விஷயங்களைக் கற்றுக் கொண்ட வகையில் இந்தியா சிஷ்யனாக இருந்ததும், இனி ஆசாரியனாக இருக்கும் பதவியை வகிக்க முன்வந்து விட்டது."

திருவண்ணாமலையில் பாரதியார், ரமண மகரிஷியை மே மாதம் 2 அல்லது 3ஆம் தேதியில் சந்தித்திருப்பார் என்பது முற்கூறப்பெற்ற செய்திகள் வழியே உறுதியாகின்றது.

சுமார் ஒரு மணி நேரம் அவர் ரமணர் முன் உட்கார்ந்திருந்தார் என்பது மிக முக்கியமான செய்தியாகும்.

1924இல் "வீரமுரசு சுப்பிரமணிய சிவாவும் பிறகு ராஜேந்திர பிரசாத்தும் ரமண மகரிஷியைச் சந்தித்ததற்கு முன்பு பாரதியார் சந்தித்ததைப் பற்றிய விவரம் கிடைக்காமல் இருப்பது வருந்தத் தக்கது. 17-2-1934இல் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் எதிரில் காந்தியடிகள் பேசியதைத் தொடர்ந்து, பக்கத்தில் இருந்த ரமண மகரிஷியைக் காந்தியடிகள் சந்திக்க ராஜாஜி ஏற்பாடு செய்யாமற் போனதும் வருந்தத் தக்கது. ஆனால், ரமண மகரிஷி ராஜேந்திர பிரசாத்திடம், "எந்த சக்தி இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறதோ, அதே சக்திதான் அங்கும் இயங்கிக் கொண்டிருக்கிறது" என்று காந்தியடிகளைக் குறிப்பிட்டுப் பெருமைப் படுத்தி உள்ளார்.

நன்றி: அறிஞர் பெ.சு.மணி. 'பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள்'

No comments: