பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, September 25, 2011

மராத்தியர் வரலாறு - Part 19


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 19

துளஜா ராஜா தனது ஆட்சி காலத்தின் தொடக்கத்திலேயே பல சிக்கல்களைச் சந்தித்தான். அவன் மனைவிகளுக்குப் பிறந்த குழந்தைகளும் இறந்து போன செய்திகளையும் சென்ற பகுதியில் பார்த்தோம். இனி ....
Thulaja Raja

துளஜா ராஜாவின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகளை எட்டு வயது ஆகும்போது காட்டிகே ராவ் என்பவனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார். அந்த மகளுக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மாருதிசாமி என்று பெயர். அதற்குப் பின் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சாந்தம்மாள் என்று பெயரிட்டனர். சாந்தாபாயி என்று சொல்வார்கள் அந்தக் குழந்தையை. இவ்விரண்டு குழந்தைகளைப் பெற்றுவிட்டு ராஜாவின் இரண்டாவது பெண் காலமாகிவிட்டாள்.

தன் மகள் வழியில் பிறந்த இவ்விரு பேத்தி குழந்தைகளையும் ராஜா அன்போடு வளர்த்து வந்தார். அவ்விரு குழந்தைகளும், ராஜாவின் தந்தையார் பிரதாபசிம்மர் காலமான ஆண்டிலேயே இறந்து போயினர். இப்படி துளஜா ராவாவுக்கு தனக்குப் பிறந்த பிள்ளைகளும் இறந்து, மகள் வழியில் பிறந்த பேரப் பிள்ளைகளும் இறந்து தனிமைப் பட்டுப் போனார். ராஜாவின் மனம் வருத்தமடைந்தது. குடும்பத்தில் நேர்ந்த இந்த இழப்பை நினைத்து நினைத்து ராஜா ராப்பகலாம உணவு சரியாக உண்ணாமல், தூக்கம் சரியாகத் தூங்காமல் மூன்று வருஷங்கள் படுத்த படுக்கையில் கிடந்தார்.




ஆற்காடு மீண்டும் தனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த தஞ்சை மராத்திய மன்னர்கள் தங்களுக்கு இனி கப்பம் செலுத்த வேண்டியதில்லை என்று முதலில் நவாப் முகமது அலி அறிவித்திருந்த போதிலும், சில நாட்கள் கழித்துத் தங்களது நிதி நிலைமை சரியில்லாமல் போகவே, தஞ்சாவூர் ராஜ்யம் தங்களுக்குக் கப்பம் செலுத்தத்தான் வேண்டும், அதிலும் விட்டுப்போன ஆண்டுகளுக்கும் சேர்த்துத் தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டது. அதன் காரணமாக நவாபின் மகன் தலைமையில் ஒரு படையை அனுப்பித் தஞ்சையைப் பிடித்துக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் பண்ணியதையும், ஆங்கில கம்பெனியாரின் தலையீட்டின் பேரில் நவாப் படைகள் திரும்பப் போன பிறகு துளஜா ராஜா ஆட்சியைப் பெற்ற வரலாற்றையும் பார்த்தோம்.

அப்படி அவர் மீண்டும் ராஜ்யத்தைப் பெற்ற போதிலும் அவருடைய பிரச்சனைகள் தீர்ந்துவிடவில்லை. மைசூரின் ஹைதர் அலி 1781இல் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்து பிடித்துக் கொண்டு கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் தஞ்சையை ஆட்சி செய்யும்படி ஆயிற்று. அந்த காலகட்டத்தில் தஞ்சை ராஜ்ய மக்கள் அனுபவித்தத் துன்பங்களுக்குக் குறைவில்லை. மக்களைத் துன்புறுத்தி கடுமையான வரிவசூல் நடைபெற்றது. நாட்டில் பஞ்சம் ஒரு புறம். விளைச்சல் மிகவும் குறைந்து போனது. 1780இல் விளைந்த நெல்லின் அளவைக் காட்டிலும் பத்து மடங்கு குறைவாக விளைச்சல் இருந்தது. மைசூர் படையெடுப்பின் காரணமாக தஞ்சாவூர் ராஜ்யத்தில் பல பகுதிகளில் விளை நிலங்கள் பயிரிடப்படாமல் போயிற்று. நீர் நிலைகளும் சேதப்பட்டிருந்தன. ஆகையால் நீர் வரத்தும் இல்லை. மக்களில் பெரும் பகுதியினர் பிழைப்பு நாடி வேறு இடங்களுக்குக் குடிபெயர நேர்ந்தது. . தஞ்சாவூர் ராஜ்யத்தின் ஊர்களையெல்லாம் ஹைதரின் படைகள் சூழ்ந்து கொண்டன. அந்த காலத்தில் தஞ்சாவூர் பகுதியில் ஒரு கொடிய பஞ்சம் தோன்றியது. மக்களுக்கு உண்ண உணவில்லாமல், நாளொன்றில் அறுனூறு எழுனூறு பேர் இறக்கலாயினர். கொடுமைகளில் எல்லாம் கொடுமை சிலவிடங்களில் நரமாமிசம் சாப்பிட்டதாகவும் செய்திகள் வந்தன.

இந்த கோளாறுகளை யடுத்து 1782இல் திப்பு சுல்தானும் தன் பங்குக்குத் தஞ்சை மீது படையெடுத்து வந்தார். பிரெஞ்சுக்காரர்கள் அவருக்குத் துணையாக இருந்தனர். இவர்கள் இணைந்து ஆங்கில கம்பெனியாரின் படையைத் தோல்வியுறச் செய்து மாயூரம், சீர்காழி ஆகிய பகுதிகளைப் பிடித்துக் கொண்டு கொள்ளை யடித்தார். இந்தத் தொல்லைகளுக்கு விடிவு காண்பதற்காக துளஜா ராஜா ஆங்கிலக் கம்பெனியாருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு தஞ்சை அரண்மனையில் ஆங்கிலேயர் படையை வைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டார். மராட்டிய மன்னர் ஆங்கிலப் படைகளை நம்பி வாழ வேன்டிய ஒரு சூழ் நிலையும் உருவாயிற்று.


"On the 20th July 1780 Hyder Ali with a formidable army descended into the Carnatic Payenghat through the Chengamma Pass. Slowly extending his depradations, he crossed Coleroon river in May 1781 and entered Tanjore Kingdom. He over ran the entire country. Closely following this devastation famine broke out in the Tanjore country. Many thousands have died of want."

தஞ்சை ராஜ்யத்தில் பஞ்சமும், ஹைதர் அலியின் படையெடுப்பும், இங்கிருந்த சூழ்நிலைகளின் காரணமாக முடிவுக்கு வந்தது. துளஜா ராஜாவுக்குத் தான் இனி நிரம்ப நாட்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை என்பது புரிந்து விட்டது. தனக்குப் பிள்ளைகளோ, பேரப் பிள்ளைகளோ பிறந்தும் தங்கவில்லை. தன் உயிரும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தனக்கு இறந்த பிறகு கொள்ளியிடவோ, ராஜ்யத்தைக் ஆட்சி புரியவோ வாரிசு இல்லாமல் போய்விட்டதே என்ற தவிப்பு ஏற்பட்டது.


துளஜா தனது தந்தையைப் பற்றி நினைத்துப் பார்த்தார். தந்தை பிரதாபசிம்மர் ஒரு ராஜரிஷி போல வாழ்ந்தார். புகழையும், வெற்றியையும், பெருமையும் அடைந்திருந்தார். எண்ணற்ற உறவினர்களை யெல்லாம் அனுசரித்துக் கொண்டு ஆதரித்து வந்தார். மாலையானால் பறவைகள் மரங்களை நாடி வருவது போல எங்கெங்கிருந்தெல்லாமோ உறவினர்கள் ராஜாவை நாடி வந்து சேர்ந்தனர்.

இவ்வளவு பெருமை அவருக்கு இருந்த போதும், அவர் பற்றிய ஒரு நெருடல் மட்டும் துளஜாவுக்கு இருந்து வந்தது. அதாவது பிரதாப சிம்மருடைய தந்தையாரான துக்கோஜி திருமணம் செய்து கொள்ளாமல் வைத்துக் கொண்டிருந்த மனைவிக்குப் பிறந்தவர் இவர் என்பதுதான் அது. அப்படியொரு அவப் பெயர் தனக்கு ஏற்படும்படியாகத் தான் நடந்து கொள்ளவில்லை என்பதில் துளஜாவுக்கு திருப்தி. தனக்கு வாரிசு சட்டப்படியும் இல்லை. உரிமையில்லாத வகையிலும் இல்லை. ஆகையால் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். தன்னுடைய குலத்தில், மராட்டியத்தில் இருக்கும் தனது தாயாதியர், உறவினர்களின் வகையில் நல்ல அழகும், நற்குணங்களும், ராஜ வம்சத்துக்கு ஏற்ற லட்சணங்கள் உள்ள ஒரு குழந்தையை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டு, அதற்கு ஜாதக கர்மாக்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

(ஜாதக கர்மா என்றால், பிள்ளை பிறந்தவுடன் தந்தை வடக்கு திசை நோக்கிச் சென்று ஸ்நானம் செய்து, எள், நெல், பொன், வஸ்திரங்கள், பசு, நிலம் இவைகளையோ, அல்லது இவற்றில் சிலவற்றையோ தானமாகக் கொடுத்து, சுப கிரகத்தின் நேரம் அமைந்ததும், தன் சொந்த பந்தங்களோடு, ஸ்வீகாரம் எடுக்கப் போகும் பிள்ளையின் முகத்தைப் பார்த்தல், பிறகு ஒரு சுப நட்சத்திரம், சுப நாள், சுப ராசி பார்த்து ஜாதகர்மா செய்து கொள்வது.)

மராத்தியர்களின் பூமியான புனா, சதாரா முதலான பகுதிகளுக்குத் தூதர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, ராஜாவுக்குத் தகுந்த வாரிசு அங்கு ராஜ வம்சத்தில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து வரப் பணித்தார்கள். அப்படி சதாரா பகுதிக்குப் போன தூதர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது தெரிய வந்தது. அந்த பிள்ளையை ராஜா ஸ்வீகாரம் எடுத்துக் கொள்வது என்று முடிவாயிற்று. அந்தப் பிள்ளைக்கு "சரபோஜி" என்றும் நாமகரணம் சூட்டப்பட்டது. யார் இந்த 'சரபோஜி'?

சத்ரபதி சிவாஜி, தஞ்சை மராட்டிய வம்சத்தில் முதல் ராஜாவாக இருந்த ஏகோஜி ஆகியவர்களின் தந்தை ஷாஜி. அவருடைய மனைவி ஜீஜா பாயிக்குப் பிறந்தவர் சத்ரபதி சிவாஜி. மற்றொரு மனைவிக்குப் பிறந்தவர்கள் ஏகோஜி, விட்டோஜி ஆகியோர். இந்த விட்டோஜி சதாராவிலும், புனாவிலும் ஆட்சி புரிந்தார்.

இந்த விட்டோஜிக்கு எட்டு பிள்ளைகள். அவர்கள் சம்பாஜி, கெலோஜி, மாளோஜி, பரகோஜி, நாகோஜி, மம்பாஜி, கக்காஜி, திரயம்பகராஜா ஆகியோர். இந்த எட்டாவது பிள்ளையான திரயம்பகராஜாவுக்கு கெங்காஜி என்று ஒரு மகன் இருந்தான். கெங்காஜிக்கு பூவாஜி, தாபூஜி என்று இரண்டு மகங்கள். பூவாஜிக்கு கெங்காஜி என்று மகன். கெங்காஜிக்கு சுபான்ஜி என்றொரு பிள்ளை. சுபான்ஜிக்கு பூவாஜி, ஷாஜி என்று இரு பிள்ளைகள். இவ்விருவரில் ஷாஜி என்பவரின் பிள்ளைதான் இப்போது துளஜா ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ளும் பிள்ளை சரபோஜி. என்ன குழப்புகிறதா? சரி. இந்த குடும்ப மரத்தைப் பாருங்கள். ஓரளவுக்கு குழப்பம் தீரலாம்.

                                  ஷாஜி ராஜா
-------------------------------------------------------------
ஜீஜாபாய்
         |                                                      துக்காபாயி
சத்ரபதி சிவாஜி
                                                 ஏகோஜி விட்டோஜி
                                                                |
                                                திரயம்பகராஜா (8வது)
                                                                |
                                                  கெங்காஜி
                                                                |
                                    தாபூஜி-------------- பூவாஜி
                                                                              |
                                                                     கெங்காஜி
                                                                              |
                                                                      சுபான்ஜி
                                                                              |
                                                          பூவாஜி ஷாஜி
                                                                              |
                                                                      சரபோஜி

இப்படி போன்ஸ்லே வம்சத்தில் ஏகோஜியின் வாரிசுகளின் வழியில் பிறந்த குழந்தை ஒன்று துளஜாவுக்கு ஸ்வீகாரப் புதல்வனாக அமைந்தது அவருக்கு மனத் திருப்தியை அளித்தது. அந்த குழந்தையை முறைப்படி சாஸ்திரோக்தமாக, சம்பிரதாயங்களை அனுசரித்து "நெளபத்" அடித்துக் கொண்டு அழைத்து வந்தனர். 'நேளபத்' அப்படியென்றால் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சகலவிதமான வாத்திய கோஷ்டிகள் முழங்க ஊர்வலமாக வருவது என்று பொருள்.

Noubet: Cerimonial music, the right to use which was specially granted by the Government.

குழந்தையை அழைத்துக் கொண்டு வரும் வழி நெடுக மக்களுக்குச் சர்க்கரை இனிப்பு வழங்குவர். உறவினர்கள் அனைவரும் ஊர்வலமாக உடன் வர, எல்லா சடங்க்குளையும் செய்து குழந்தையை மகனாக ஸ்வீகாரம் ஏற்றுக் கொண்டார்கள். 1787 ஜனவரி 22ஆம் நாள் துளஜா ராஜா சரபோஜியைத் தனது ஸ்வீகார மகனாக ஏற்றுக் கொண்டார்.

அது சரி, இந்த ஸ்வீகார நிகழ்ச்சி பற்றி எதற்கு இத்தனை build up என்றுதானே நினைக்கிறீர்கள். புரிகிறது. இந்த சரபோஜிதான் தஞ்சை மராத்திய மன்னர்களில் கலை, இலக்கியம், மருத்துவம், ஆராய்ச்சிகள், இசைக் கலைஞர்களை ஆதரித்தல் போன்ற எல்லா விஷயங்களிலும் வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட முதன்மையான ராஜாவாகத் திகழப் போகிறார். அதனால்தான். பிரதாபசிம்மர் போர்க்களத்திலும், வீரத்திலும் சிறந்து வின்றார் என்றால் சரபோஜி மேற்சொன்ன கலை, இலக்கியஸ் சமாச்சாரங்களில் சிறந்தவராக இருந்தார் என்பதால்தான் இத்தனை செய்திகள்.

சாஸ்திர முறைப்படி துளஜா சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட போதும், அரசியல் ரீதியாக ஆங்க்கில கிழக்கிந்திய கம்பெனியார், சென்னை கவர்னரின் உத்தரவுப்படி அதனை அங்கீகரிக்க வேண்டும். ஆகையால் துளஜா ராஜா, ஜான் ஹடுல்ஸ்டன், சேனைத் தலைவர்கள், கர்னல் இப்ஸ்லி, கமாண்டர் இஷ்டோட், கிறிஸ்தவ மத போதகரான பாதிரியார் ஸ்வார்ட்ஸ் ஆகியோரிடமும் தனது தத்து பற்றி எடுத்துச் சொன்னார். இதில் ஹடுல்ஸ்டன் என்பவர் தஞ்சாவூரில் ஆங்கிலேயர்களின் பிரதிநிதியாக Resident எனும் பதவியில் இருந்தவர்.

துளஜா தனது தத்துக் குழந்தையான சரபோஜியை அந்த ஆங்கிலேய அதிகாரிகளின் கையில் ஒப்படைத்து, இனி அவனை வைத்துத்தான் ராஜ்ய பாரம் நடத்த வேண்டும் என்று சொன்னார். அடுத்த நாலைந்து நாட்களில் வசந்த பஞ்சமி தினத்தில் ஒரு சிறந்த முஹூர்த்த நேரத்தில் பிரதாப ராமசாமி மகால் (மால்) எனும் சபையில் தர்பார் நடத்தி, நாட்டியம் உட்பட கலா நிகழ்ச்சிகள் நடத்தி அரசாங்க சிம்மாசனத்தில் குழந்தை சரபோஜியை உட்கார வைத்து அவையோர் அனைவரும் அவனை ஆசீர்வதித்தனர். அந்தக் குழந்தைக்கு ராஜாவுக்கு உண்டான மரியாதைகள் செய்த பின்னர் துளஜா மனது அமைதி அடைந்தார். சென்னையில் இருந்த ஆங்கில கம்பெனி அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதம்:--

Letter dated January 26, 1787 to Sir Archibald Campbell, Governor of Madras as translated by Maratha Interpreter.

"It has been my wish for two or three years past to adopt a son; but as I have had no opportunity of carrying it into execution, it has hitherto been delayed. Having now resolved to choose one out of my near relations, I have fixed upon the son of Shahajee (the son of Soubajee Rajah, my near cousin by lineal descent) who is ten years old and proper in all respects. Accordingly on the 2nd of Rubbi Sanni (22nd Jan.) in consequence of my wishes, I adopted and named him Serbojee Rajah with all the forms of our religion; this has afforded great relief to my mind. As your Excellency is my friend and favourer, I have written a letter to give you this pleasing information. I am firmly convinced that whatever favour and protection I have received from the Hon'ble Company and from your Excellency will hereafter be continued to my child Serbojee without deviation."

இப்படியொரு கடிதத்தை துளஜா ராஜா சென்னை கவர்னருக்கு அனுப்பினார்.

(இன்னும் தொடரும்)

No comments: