பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 16, 2011

டி.எம்.செளந்தரராஜன்.

டி.எம்.செளந்தரராஜன்.

நம் காலத்தில் வாழ்ந்து கொண்டு செயற்கரிய சாதனைகளை செய்து முடித்துவிட்டுத் தனக்கு பின்னால் தான் கொடிகட்டிப் பறந்த துறையில் புதிதாகப் பற்பல புதிய சாதனையாளர்கள் வளர்ந்து வருவதைப் பார்த்து மகிழ்ந்து, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் கூடும் இடங்களில் அந்த இளைய தலைமுறையை மகிழ்ச்சியோடு, மலர்ந்த முகத்தோடு உளமாற வாழ்த்திக் கொண்டிருக்கும் ஒருவரை நாம் எப்படி எழுதாமல் விட முடியும். வாழ்ந்து கொண்டிருக்கும் சாதனையாளர்களை எழுதுவதில்லை என்றுதான் முடிவெடுத்திருந்தேன். ஆனால், இவரைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.

அவர்தான் டி.எம்.செளந்தரராஜன்.

அடடா! இவர் பாடாத பாடல்களா, பக்திப் பாடல்கள், தனிப்பாடல்கள், சினிமாவில் டூயட் பாடல்கள், எத்தனை விதமான குரல்கள். பாடத்தான் பாடலாம், அதிலும் எந்த நடிகருக்காகப் பாடுகிறாரோ அந்த நடிகரின் குரலைப் போலத் தன் குரலை மாற்றிப் பாடும் திறமையை என்னவென்று சொல்வது. திரைப்படங்களில் எம்.ஜி.ஆருக்கு என்றால் அவரைப் போன்ற குரல், சிவாஜிக்கு என்றால் அவருடைய குரல் எப்படி முடிந்தது இவரால்?

1957 என்று நினைக்கிறேன். திருச்சிராப்பள்ளியில் பிரம்மச்சாரிகள் வசிக்கும் ஒரு லாட்ஜ் அறையில் தங்கி வேலைக்குப் போய்க்கொண்டிருந்தேன். என் லாட்ஜின் கீழ் தளத்தில் வானொலி நிலையத்தில் வயலின் வித்வானாகப் பணியாற்றிக் கொண்டிருந்த திருகோகர்ணம் உலகநாதப் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். அவர் ஒரு நாள் என்னையும் எங்கள் லாட்ஜில் இருந்த சில நண்பர்களையும் அகில இந்திய வானொலி நிலையத்தில் அன்று மாலை நடக்க விருக்கும் ஒரு இசை நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார். அப்படி யார்தான் பாடுகிறார்கள் போய்க் கேட்டுத்தான் பார்ப்போமே, அதிலும் நம் லாட்ஜ் நண்பர் கூப்பிடுகிறார் என்று போனோம்.

அவர் சொன்னார் தூக்குத் தூக்கி போன்ற படங்களில், பாடிப் புகழ் பெற்றிருக்கும் டி.எம்.செளந்தரராஜன் என்பவர் பாடுகிறார் என்றார். நாங்கள் ஐந்தாறு பேர் அன்று மாலை வானொலி நிலையத்துக்குச் சென்றோம். பிளாசா தியேட்டருக்கு அருகில் இருந்தது வானொலி நிலையம். அங்கிருந்து மிக அருகில்தான் எங்கள் லாட்ஜ். நிலையத்தின் இயக்குனர் அறைக்கு வெளியே நின்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு நண்பர் சொன்னார், அது என்னய்யா குரல், "ஏறாத மலைதனிலே" என்ற பாட்டு 'தூக்குத் தூக்கி'யில். இதுவரை அப்படியொருவர் பாடி நான் கேட்டதில்லை என்றார். ஆமாம் "பெண்களை நம்பாதே, கண்களே பெண்களை நம்பாதே' என்றொரு பாட்டு. உச்ச ஸ்தாயியில் பாடப்பட்ட அந்தப் பாட்டுக்கள் எங்களை திகைக்க வைத்தன.

அப்போது அந்தப் பாடகரை நாங்கள் பார்த்ததும் இல்லை, அவருக்கு என்ன வயதிருக்கும் என்பதெல்லாம் தெரிந்திருக்கவும் இல்லை. எங்கள் வழக்கப்படி 'அவன்' 'இவன்' என்றெல்லாம் அவரைக் குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் வாயிலிருந்த வெற்றிலைப் பாக்கை துப்புவதற்காக வெளியில் வந்து ஒரு குவளை நீரைக் கொண்டு வாயைக் கழுவிக் கொண்டிருந்தார். நாங்கள் பேசுவதையெல்லாம் அவர் கேட்டுக் கொண்டிருந்து விட்டுப் பின் எங்களைப் பார்த்து ஒரு மோகனச் சிரிப்பு சிரித்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார்.

பின்னர் நேரமாகிவிட்டது கச்சேரி நடக்கும் திறந்த வெளி அரங்குக்குச் சென்றோம். கச்சேரி தொடங்கும் நேரம். பாடகர் வந்து அமர்ந்தார். பார்த்தால் தாம்பூலத்தைத் துப்பிய அந்த மனிதர்தான் வந்து அமர்ந்தார். எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. அவர்தான் டி.எம்.எஸ். என்று தெரியாமலே அவரைப் பற்றி அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசியும், அவர் சிரித்துக் கொண்டு போய்விட்டாரே. அவரது குணத்தைத் தெரிந்து கொள்ள வேறு நிகழ்ச்சி தேவையா என்ன?

வட இந்தியாவில் பல பாடகர்கள். அன்றைய இளைஞர்கள் கேட்டு மகிழ்ந்து பாராட்டிக் கொண்டிருந்தார்கள். திருச்சி கெயிட்டி தியேட்டர் அப்போது இந்திப் படங்களை மட்டும்தான் திரையிடும். அங்கு சென்று எல்லா படங்களையும் பார்ப்போம். எங்களுக்கு இந்தி தெரியாது. ஏதோ அருகில் இருப்பவன் கதை சொன்னால் கேட்போம். பாட்டுக்களை ரசிப்போம். அவ்வளவுதான். அடே அப்பா அங்கு பார்த்த இந்திப் படங்கள்தான் எத்தனை. அத்தனையும் யாருக்காக? முகமது ரஃபி, முகேஷ், லதா மங்கேஷ்கர், கிஷோர் குமார், மன்னா டே, போன்றவர்களின் பாடல்களுக்காகத்தான். அப்படி அன்றைய ரசிகர்கள் இந்தி பாடல்களில் திளைத்துக் கிடந்தவர்களைத் தமிழ்ப் பாடல்களைக் கேட்டு கிறுகிறுக்க வைத்த குரல் டி.எம்.செளந்தரராஜனுடையது.

'வணங்காமுடி' என்றொரு படம். அதில் டி.எம்.எஸ்.சும் பாடியிருக்கிறார். சீர்காழி கோவிந்தராஜனும் பாடியிருக்கிறார். இப்படியொரு போட்டி. தமிழ்த் திரைப் பாடல்கள் அகில இந்திய அளவில் புகழ்பெறத் தொடங்கியது இவர்களுடைய காலத்தில்தான் என்றால் மிகையன்று. முதலில் இவர் பாடிய பாடல்கள் எம்.கே.தியாகராஜ பாகவதரை நினைவு படுத்துபவை போலத்தான் தோன்றியது. பிறகு இவர் குரலை எப்படியும் மாற்றி, யாருக்கும் பொருந்தும்படி பாடத் தொடங்கி இவருக்கென்று ஒரு முத்திரையைப் படைத்தார் டி.எம்.எஸ். இவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் மக்களுக்கு ஆதர்சமாக விளங்க வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக் கொண்டு அவரைப் பற்றிய ஒரு சில விவரங்களை இங்கு பார்க்கலாம்.

டி.எம்.எஸ். மதுரையில் 1923 மார்ச் மாதம் 24ஆம் தேதி பிறந்தார். தமிழ் நாட்டில் சில ஊர்களில் அதிகம் வசிக்கும் செளராஷ்டிர இனத்தில் பிறந்தார் இவர். மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் போன்றோர் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். செளராஷ்டிர பிரிவின் வழக்கப்படி இவரது முழுப் பெயர் துகல்வா மீனாட்சி ஐயங்கார் செளந்தரராஜன் என்பது. தந்தையார் மீனாட்சி ஐயங்கார், தாயார் வேங்கடம்மாள்.

பிறக்கும் போதே இசையோடு பிறந்தவரோ என்னவோ, இவர் மிக இளம் வயதிலேயே பாடத் தொடங்கி விட்டார். ஏழு வயதில் இவர் பிரமாதமாகப் பாடுவதைக் கேட்டு அண்டை அயலார் வியந்து பாராட்டியிருக்கிறார்கள். அந்த நாட்களில் திரையுலகில் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா போன்றோர் பாடி நடித்துக் கொண்டிருந்தார்கள் அல்லவா? அவர்களைப் போலத் தானும் பாட வேண்டுமென்பது இவரது அவா. கர்நாடக சங்கீதம் பயின்றால்தான் பாடல்களை முறையாகப் பாடமுடியும் என்பதால் இவர் படித்துக் கொண்டிருந்த செளராஷ்டிரா பள்ளிக்கூடத்திலேயே இவர் கர்நாடக இசையைப் பயிலத் தொடங்கினார். பள்ளிக்கூடம் மற்றும் பொதுவிடங்களிலும் பல இசைப் போட்டிகளில் இவர் கலந்து கொண்டார்.

பல நேரங்களில் இவர் பாடுவதைத் தெருவில் போவோர் வருவோர் கேட்கும் போது பாகவதர்தான் பாடுகிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு அச்சு அசலாக அப்படியே பாடி வந்தார். பாகவதரிடமே போய் இவர் பாடிக் காட்ட, அவரும் இவருக்குச் சில உபதேசங்களைச் செய்து அனுப்பினார், இவருடைய முன்னேற்றத்துக்காக. திரைப் படங்களில் பாடுவதற்கு இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அவற்றை இவர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறத் தொடங்கினார். மிக உறுதியான, கனமான, சுகமான ஒரு குரல், முறையான உச்சரிப்பு, தமிழ்த் திரையுலகத்துக்குக் கிடைத்தது சினிமா ரசிகர்கள் செய்த பாக்கியம் என்றே கூறலாம்.

1946இல் இவரது திருமணம் நடைபெற்றது. இவருக்கு 3 மகன்கள் 3 மகள்கள். 1946 தொடங்கி இவர் சினிமாவில் பாடத் தொடங்கி விட்டார். 'கிருஷ்ண விஜயம்' எனும் படம் 1946இல் இவர் பாடி வெளிவந்தது. அதன் இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. தொடர்ந்து இவர் பாடாத தமிழ்ப் படமே இல்லையெனும் அளவுக்கு இவரது பாடல்கள் இடம்பெறலாயின. கோவை ராயல் டாக்கீசில் மாதம் ரூ.50 சம்பளத்துக்குப் பாடத் தொடங்கிய டி.எம்.எஸ். பின்னர் புகழின் உச்சிக்குச் சென்றபோது சம்பாதித்ததை யார் கணக்கிட முடியும்.

இவர் எத்தனை நடிகர்களுக்குப் பாடல்களைப் பாடியிருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, ராஜேந்திரன், ஜெய் சங்கர், ஏ.வி.எம்.ராஜன், முத்துராமன், நாகேஷ் இப்படி எத்தனையோ பேர். இவர் பாட்டைப் பாடுவதுபோல சிவாஜி நடிக்கும் போது அவரது வாயசைப்பு திகைக்க வைக்கும். இவர் சில படங்களில் நடித்தார். அருணகிரிநாதர் போன்ற படங்களில் இவர் பாடி நடித்தபோது இந்த நடிகருக்குச் சிவாஜி பாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தினார்.

இவர் பாடிய பாடல்களைப் பட்டியலிட முடியுமா? அப்படியானால் எத்தனைப் பாடல்களைப் பாடியிருப்பார். உத்தேசமாக 10,500க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், 2500க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்கள். இவர் பெற்ற விருதுகளை மட்டும் தனியாக எழுதலாம், அத்தனை விருதுகள், அத்தனை கலைமாமணி விருதுகள், தேசிய விருதுகள். இப்படிப்பட்ட ஒரு மனிதரைப் பெற தமிழ்நாடு நெடுங்காலம் தவம் செய்திருக்க வேண்டும். இவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள் ஏராளம். இவருக்கு மிகவும் நெருக்கமான விஸ்வநாதன் (இராமமூர்த்தி), கவிஞர் கண்ணதாசன் இவர்கள் வாயிலாக வெளிவந்த செய்திகள் படிக்கச் சுவாரசியமானவை. இருந்தாலும் இப்போதைக்கு இவரைப் பற்றி இதுமட்டும் போதும். பிறகு மிக விரிவாகப் பார்க்கலாம். வாழ்க டி.எம்.செளந்தரராஜன் புகழ்! அவர் வாழ்க நீடூழி!!

No comments: