பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 20, 2011

பாரதிதாசன்

பாரதிதாசன்

புதுச்சேரியில் வாழ்ந்த செல்வந்தர் குடும்பத்தில் கனகசபை முதலியார், லக்ஷ்மி அம்மாள் எனும் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்புரத்தினம். தொடக்கக் கல்வியிலிருந்து தமிழிலக்கியம், இலக்கணம், சைவ சித்தாந்தம் வேதாந்தம் ஆகியவற்றைச் சிறந்த அறிஞர்களிடம் கற்று புலமை பெற்றார். மகாகவி பாரதியாரின் அறிமுகம் இவருக்கு 1909இல் கிடைத்தது. முதல் சந்திப்பிலேயே மகாகவியை இவர் தனது குருநாதராக வரித்துக் கொண்டார். கல்லூரி படிப்புக்குப் பிறகு காரைக்கால் பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இந்திய சுதந்திரப் போரில் இவர் ஈடுபட்டு இந்தியாவில் ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், புதுச்சேரி பகுதியை ஆண்டுவந்த பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராகவும் தனது பேச்சு, எழுத்துக்கள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தார். இவருடைய இந்த எழுத்துக்களுக்காக பிரெஞ்சு ஆட்சியாளர்கள் இவரை சிறையில் அடைத்தனர். பிற்காலத்தில் இவர் பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய கருத்துக்களால் கவரப்பட்டு அவருடைய அத்தியந்த சீடரானார். அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் இவர் ஒரு தூணாக இருந்து செயல்பட்டார். அதன்பின் சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கமாக உருவெடுத்த பிறகும் இவர் அதிலும் தீவிரமாக ஈடுபட்டார். திராவிட இயக்கத்தார் இவரை பாவேந்தர் என பெயரிட்டுப் பெருமைப் படுத்தினர். சென்னையில் நடைபெற்ற நாத்திகர்கள் மகாநாடொன்றில் தன்னையொரு "நாத்திகன்" எனப் பிரகடனப் படுத்திக் கொண்டு பெருமைப் பட்டார். இவருடைய இந்த கருத்துக்களாலும், பாரதியாரை ஒரு பிராமண சமூகத்தில் பிறந்தவர் என்பதற்காக அவரை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாமலும், அவருக்குப் போட்டியாளரைப் போல திராவிட இயக்கத்தார் இவரைப் போற்றிப் பெருமைப் படுத்தத் தொடங்கினர். ஆனாலும், பாரதிதாசனோ, தன்னுடைய சுப்புரத்தினம் எனும் பெயரை பாரதிதாசன் என்று வைத்துக் கொண்டு தன்னுடைய குரு பக்தியை வெளிப்படுத்தியும், பாரதியை யார் குறை சொன்னாலும், இவர் ஏற்றுக் கொள்ளாததோடு, பாரதியாரின் சீடன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்றும் பெருமையோடு குறிப்பிட்டார். 1950இல் "தினத்தந்தி" பத்திரிகையில் இவர் தன் குரு நாதரின் பெருமையையும், தான் அவரது தாசன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இவர் காலத்தில் அறிஞர் அண்ணாவின் கருத்துக்களோடு ஒத்துப் போய் பல மேடைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். எம்.ஜி.ஆருடனும் இவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. 1954இல் இவர் புதுச்சேரி சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964இல் இவர் சென்னை மருத்துவ மனையொன்றில் காலமாகும் வரை தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இவரது பாடல்கள் பாரதியாரின் அடியொற்றிய அறிவுபூர்வமான எழுத்துக்களாக இன்றும் திகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பாரதியை இவர் பெயர் சொல்லி எழுதுவதோ பேசுவதோ கிடையாது. "ஐயர்" என்றும் "குருநாதர்" என்றே குறிப்பிட்டிருக்கிறார். இவர் "புதுவை கலைமகள்", "தேசோபகாரி", "தேசபக்தன்" போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். பெரியாரின் பக்தர் என்பதால் இவர் பிராமண எதிர்ப்பில் ஊறித்திளைத்தவர் ஆகையால் இவரது எழுத்துக்களில் பிராமண எதிர்ப்பு என்பது வெளிப்படையாகக் காணப்படும். தமிழர்களுக்குள் 'தமிழ் இனம்' என்றும் 'ஆரிய இனம்' என்றும் இனம் பிரித்துப் பார்த்து பிராமணர் பிராமணரல்லாதாரைக் குறிப்பிட்டு வந்ததை கவனிக்கலாம். இவருக்கு "புரட்சிக் கவிஞர்" எனும் பட்டத்தை பெரியார் ஈ.வே.ரா. அளித்தார். இவரது அமைதி ஊமை எனும் நாடகத்துக்கு விருது கிடைத்தது. 'பிரிராந்தையார்' எனும் நூலுக்கு இவரது காலத்துக்குப் பிறகு 1970இல் சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது.

1 comment:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் ஐயா,

பாரதிதாசனைப் பற்றிய ஆக்கம் அருமை,,

//தன்னுடைய சுப்புரத்தினம் எனும் பெயரை பாரதிதாசன் என்று வைத்துக் கொண்டு தன்னுடைய குரு பக்தியை வெளிப்படுத்தியும், பாரதியை யார் குறை சொன்னாலும், இவர் ஏற்றுக் கொள்ளாததோடு, பாரதியாரின் சீடன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்றும் பெருமையோடு குறிப்பிட்டார்.//

அவரது குருபக்திக்கு தலைவணங்குகிறேன்.

நன்றி...

http://sivaayasivaa.blogspot.com