பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, April 26, 2011

"இன்குலாப் ஜிந்தாபாத்."


                                                                                               
மாவீரன் பகத்சிங். "இன்குலாப் ஜிந்தாபாத்."

பகத்சிங், இந்தப் பெயர் இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் ஆழப்பதிந்துவிட்ட பெயர். தனது 24ஆம் வயதில் இந்த வீர இளைஞன் ஆங்கில அரசால் தூக்கிலடப்பட்டான். இவன் வரலாற்றை அறிந்து கொள்ள, அவன் வாழ்ந்த காலத்தில் இந்தியாவின் நிலை குறித்து நாம் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இந்திய சுதந்திரப் போர் மூன்று கட்டம்.
1885 முதல் 1906 வரை மிதவாத காங்கிரசார் மனுச்செய்து உரிமைகள் கேட்ட வரலாறு
1906 முதல் திலகர் காலம். திசை தெரியாத போர். தனித்தனி வன்முறை
1919க்குப் பிறகு மகாத்மா சகாப்தம். அகிம்சை, சத்தியாக்கிரக முறை.
ஆங்கிலேயர் அடக்குமுறையை எதிர்த்து ஆங்காங்கே வன்முறை இயக்கங்களும் இருந்தன.
உ.பி.யில் சந்திரசேகர ஆசாத் தலைமையில்
பஞ்சாபில் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் போர் முரசு
1907 செப்டம்பர் 28இல் பஞ்சாப் மாநிலம் லாகூர் அருகில் சாந்தோ கிராமம், சீக்கிய விவசாயக்குடும்பம். அப்பா சர்தார் கிஷன் சிங், அம்மா வித்யாவதி தேவி.
சித்தப்பா ஒருவர் அஜித் சிங் புரட்சிக்காரர், லாலா லஜபதி ராயுடன் நாடுகடத்தப்பட்டு பர்மா மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டவர்.
மற்றொரு சித்தப்பா சர்தார் ஸ்வரண் சிங், சிறைக் கொடுமைக்கு ஆளாகி மாண்டுபோனார்
அப்பா சர்தார் கிஷன் சிங்கும் சிறந்த தேசபக்தர், புரட்சிக்காரர்.
இத்தகைய குடும்பத்தில் பிறந்த பகத்சிங் தேசபக்தனாக உருவெடுத்தார்.

1927 நவம்பரில் காந்திஜி மங்களூரில் இருந்தார். அப்போது வைஸ்ராய் இர்வின் காந்திஜியை அவசரமாக டில்லிக்கு அழைத்தார். நவம்பர் 5இல் தம்மை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.
காந்திஜியும் உடனே டில்லி விரைந்தார். எதிர்பார்ப்புகளோடு.
வைஸ்ராய் இந்தியா மந்திரி அனுப்பியிருந்த ஒரு அறிக்கையைக் காட்டினார்.
அதில் இந்தியாவுக்கு என்னென்ன சலுகைகள் அளிக்கலாம் என்பது பற்றி ஆராய்ந்து அறிக்கை கொடுக்க சர் ஜான் சைமன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தியர் எவரும் இதில் இல்லை.
ஒரு அஞ்சல் அட்டையில் தெரிவிக்க வேண்டிய செய்தியை 1500 மைல் பயணம் செய்து காந்திக்கு தந்தது
நவம்பர் 8, 1927இல் சைமன் கமிஷன் அமைப்பு.
அன்னிபெசண்ட் அம்மையார் கூட இந்த கமிஷன் எதற்கு என்றார்.
1929இல் இங்கிலாந்தில் பொதுத்தேர்தல். அதற்கு கண்துடைப்புதான் இந்த கமிஷன்.
இந்தியாவில் எல்லா கட்சிகளும் சைமன் கமிஷனை எதிர்த்தன.
தங்களுக்குத் தேவை "பூரண சுதந்திரம்" சைமன் கண்துடைப்பு அல்ல என்றனர்.
காங்கிரஸ் கட்சி சைமனை நிராகரித்தது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதைதான் கமிஷன் என்றார் அன்னி பெசண்ட்

1927இல் சென்னையில் AICC. காந்தி வரவில்லை. Dr.அன்சாரி தலைவர்
முக்கிய தீர்மானம் சைமனை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
தென் இந்தியாவில் நீதிக்கட்சி தவிர மற்ற அனைவரும் சைமனை எதிர்த்தனர்.
2-2-1928 இல் சைமன் கமிஷன் பம்பாய் வந்தது.
அன்று இந்தியா முழுவதும் ஹர்த்தால். சென்னையில் துப்பாக்கி பிரயோகம் மூவர் இறப்பு. பலர் காயம்
கல்கத்தாவில் போலீஸ் - மாணவர்கள் மோதல்
டில்லியில் பலத்த எதிர்ப்பு. கமிஷனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
லாகூரில் பிரம்மாண்ட கூட்டம். லாலா லஜபதி ராய் தலைமையில் ஊர்வலம்.
லால் (லஜபதி ராய்) பால் (பிபின் சந்திர பால்) பால் (பால கங்காதர திலகர்)
30-10-1928 சைமனே திரும்பிப்போ Simon Goback ஆர்ப்பாட்டம். போலீஸ் தாக்குதல்
Police Supdt. Scott உத்தரவு Sanders DSP லாலாவை மார்பில் தடியால் அடித்து மயக்கம்
பஞ்சாப் சிங்கம் லாலாஜி மயக்கத்தோடு ஆஸ்பத்திரியில் அனுமதி
17-11-1928 லாலா காலமானார்.
"போலீசார் என்மீது அடித்த ஒவ்வொரு அடியும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் சவப்பெட்டியில் அடித்த ஒவ்வொரு ஆணியாகும்" என்றார் லாலா.
லக்னோவில் நேரு, கோவிந்த வல்லப பந்த் தாக்கப்பட்டனர். பந்த் கழுத்து நரம்பில் அடித்து அவர் வாழ்நாள் முழுவதும் தலை ஆடிக்கொண்டிருந்தது.
லக்னோ நகர் எங்கும் பலூன் காத்தாடி எங்கும் சைமன் திரும்பிபோ என்று எழுதியிருந்தது.
பாட்னாவில் ஆங்கில அதிகாரிகள் கூலிக்குக் கொண்டு வந்த 50,000 பேரும் போராட்டத்தில் குதித்தனர்.
பம்பாயில் சர் பட்டம் பெற்ற 22 பேரில் ஒருவர் கூட சைமனை வரவேற்க வரவில்லை.
சைமன் பெருவியாதிக்காரன்போல் நாடு திரும்ப நேர்ந்தது.
பாரதமாதா சங்கம் என்ற புரட்சி இயக்கம் கூடி லாலாவின் மரணத்துக்கு பழிவாங்க முடிவு

இந்த பாரதமாதா சங்கம் பகத் சிங் சித்தப்பா அஜித் சிங்கால் தொடங்கப்பட்டது.
லாலா இறப்பதற்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அப்போது அஜித் சிங்கும் அவரோடு நாடு கடத்தப்பட்டார். இந்த முறையில் அஜித்சிங், லாலா உறவு அதிகம்.
இந்த அஜித் சிங் சுதந்திரத்துக்கு முதல் நாள் 14-8-1947இல்தான் காலமானார்.
பகத்சிங்கின் குடும்பமே தியாகக் குடும்பம்.
பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளை எதிர்த்து மாணவராக இருந்த பகத்சிங் தனது 17வயதில் தீவிரமாக ஈடுபட்டார்.
லாகூரில் ஆரிய சமாஜ் பள்ளியில் ஆரம்பக் கல்வி, தேசியக் கல்லூரியில் படிப்பு.
இவர்கள் அனைவரும் பாரத இளைஞர் சங்கம் என்ற தேசிய இயக்கம் நடத்தினர்.
இதன் செயலர் பகத் சிங். பகவதிசரண் முதலானோர் உறுப்பினர்.
காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்பு. சீக்கியர்கள் நடத்திய அகாலி இயக்கத் தொடர்பு.
உ.பியிலிருந்து சந்திரசேகர ஆசாத் லாகூர் வந்தார். பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் சந்திப்பு.

லாலாஜியை அடித்துக் கொன்ற DSP சாண்டர்சை நிழல்போல ஜெயகோபால் தொடர்ந்தான்.
சாண்டர்சின் போலீஸ் ஸ்டேஷன் கண்காணிப்பு. ஜெயகோபால் தகவல் கொடுக்க வேண்டும்.
ஆசாத், பகத்சிங், ராஜகுரு சைக்கிளில் வந்து தனித்தனியாக நின்றனர்.
சாண்டர்ஸ் வெளியே வந்ததும் ஜெயகோபால் சமிக்ஞை கொடுக்க இவர்கள் தயார் நிலை.
சாண்டர்ஸ் மோட்டார் சைக்கிளை எடுத்து அதில் ஏறவும், ராஜகுரு துப்பாக்கியால் சுட்டார்.
குண்டு அவன் மீது பாய்கிறது. அவன் தப்பிவிடக்கூடாது என்று பகத்சிங்கும் சுடுகிறார்.
சாண்டர்ஸ் பிணமாகிறான்.
பகத்சிங், ராஜகுரு இருவரும் காலேஜ் நோக்கிச் செல்ல, ஒரு போலீஸ்காரன் பின்தொடர்கிறான். ஆசாத் அவனை எச்சரித்தும் கேட்காததால் அவனை ஆசாத் சுட்டுக் கொல்கிறார்.
பிறகு மூவரும் நிதானமாக நடந்து காலேஜ் ஹாஸ்டலுக்குச் செல்கிறார்கள்.
நாடு முழுவதும் மறு நாள் ஒரே பரபரப்பு. பத்திரிகைகளில் செய்தி.
"லாலாவின் மரணத்துக்கு பஞ்சாப் இளைஞர்கள் பழிக்குப் பழி வாங்கினர்"
"இந்திய தேசிய ராணுவம்" என்ற பெயரில் ஊர் முழுவதும் நோட்டிஸ் ஒட்டப்பட்டது.
அரசாங்கம் நடுங்கியது. வெள்ளையர்கள் வெளியே வர பயந்தனர். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்.
லாகூரில் பல இளைஞர்களை போலீஸ் கைது செய்தது.
எனினும் புரட்சி இயக்கத்தினர் மாறு வேடத்தில் ஊரைச் சுற்றி வந்தனர்.
இனி இங்கு இருக்கக்கூடாது என்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் முயற்சி.

சந்திரசேகர ஆசாத்: இவர் உ.பி.யைச் சேர்ந்தவர், பார்க்க பண்டா மாதிரி இருப்பார், போலீசுக்கு இவரை அடையாளம் தெரியாது, எனவே இவர் சுலபமாகத் தப்பித்துவிடலாம்.
பகத் சிங்: இவர் ஊரறிந்த நபர். எல்லோருக்கும் இவரைத் தெரியும். உயரமானவர், அழகானவர், இளமை யானவர், அழகிய மீசை, ஐரோப்பியர் போல உடை. இவர் தப்புவதுதான் கடினம்.
பகவதிசரண் என்பவர். புரட்சிக்காரர்களுக்கு நண்பர். இவர் மனைவி துர்க்கா தேவி.
சுகதேவ் துர்க்காதேவியிடம் பகத் சிங் தப்ப உதவி கேட்டார். என்ன உதவி?
கல்கத்தா தப்பி செல்லும் வரை பகத் சிங்கின் மனைவி போல நடிக்க வேண்டும். தயக்கத்துடன் துர்க்காவும் கணவர் பகவதிசரணும் ஒப்புக்கொண்டனர்.
பகத் சிங், அண்ணி என்று துர்க்கா தேவியை வணங்கினார். இருவரும் கணவன் மனைவி போலவும், ராஜகுரு அவர்களுடைய வேலைக்காரன்போலவும் நடித்து விடியற்காலை 5க்கு கிளம்பினர்.லாகூரிலிருந்து கல்கத்தா செல்லும் மெயிலில் பயணம். இருவரும் மேல் வகுப்பு. ராஜகுரு வேலைக்காரனாக மூன்றாம் வகுப்புப் பயணம். ராஜகுரு வழியில் லக்னோவில் இறங்கிக் கொண்டார்.
பகத் சிங், துர்க்கா தேவி கல்கத்தா சேர்ந்தனர். பகவதிசரண் வரவேற்று உபசரிப்பு. வங்காளி உடையில் பகத் சிங் நடமாட்டம். ஊர் சுற்றல்.
கல்கத்தாவில் வெடிகுண்டு செய்யும் நிபுணர் யதீந்திரநாத்துடன் நட்பு. இவருடன் ஆக்ரா சென்று அங்கு ஓர் பாழடைந்த வீட்டில் வெடிகுண்டுகள் செய்தனர்.
ஓராண்டு காலம் கழிந்தது. டில்லி சென்றார் பகத் சிங். அங்கு பூதகேஸ்வர தத் என்பவருடன் ஊர் சுற்றல்.
புரட்சிக்கு ஏதாவது செய்ய நினைத்தனர்.
அப்போது டில்லி சட்டசபையில் தொழில் தகறாறு சட்டமும், இந்திய உள்நாட்டு பாதுகாப்புச் சட்டமும்
விவாதிக்கப்பட்டது. இரண்டும் இந்தியர்களுக்கு தொழிலாளர்களுக்கு எதிரானவை. இந்திய மண்ணில்
இந்திய வரிப்பணத்தில், இந்தியர்களுக்கு எதிரான சட்டங்களா?
பகத் சிங் முடிவு செய்தார். சட்டசபை கட்டிடத்தில் குண்டு வீச. இது ஆபத்தானது என்பதால், இதில் பகத் சிங்கை ஈடுபடுத்த புரட்சிக்குழு சம்மதிக்கவில்லை. எனினும் பகத் சிங் தீர்மானித்துவிட்டார்.
1929 ஏப்ரல் 8ஆம் தேதி, டில்லி சட்டசபை கட்டிடம். பார்வையாளர் காலரி நிரம்பி வழிந்தது. அதில் பகத் சிங்கும் பூதகேஸ்வர தத்தும் இருந்தனர். மோதிலால் பேசிக்கொண்டிருந்தார். வித்தல்பாய் படேல் தலைமை வகித்தார். மதன்மோகன் மாளவியா இருந்தார். வைஸ்ராய் லார்டு இர்வினும் அவனருகில் சர் ஜான் சைமனும் இருந்தனர்.
அப்போது இரண்டு குண்டுகளை எடுத்து மனிதர்கள் இல்லாத வெற்றுப் பகுதியில் வீசினர் இருவரும். குண்டு பெரிய சத்தத்துடன் வெடித்தது. கட்டிடம் அதிர்ந்தது. உயிர் இழப்பு எதுவும் இல்லை. அச்சுறுத்தவே இது.
பலர் ஓடினர். சிலர் மேஜைக்கு அடியில் ஒளிந்தனர். வைஸ்ராயும் சர் ஜான் சைமனும் ஓசையின்றி எழுந்து ஓடிவிட்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயம் பிடித்தது. கலக்கமின்றி இருந்தவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே.
\ ஆரவாரம் அடங்கியது. புகைமூட்டம் குறைந்தது. பார்வையாளர் காலரியில் ஐரோப்பிய உடையுடன் இருவர் மட்டும் கையில் துப்பாக்கியோடு தப்பியோட முயற்சிக்காமல் தலை நிமிர்ந்து நின்றனர்.
அனைவருக்கு அச்சம், யாரும் அவர்களை நெருங்கவில்லை. பயம்.
சிவப்பு நிற துண்டுப் பிரசுரங்கள் அவைக்குள் வீசப்பட்டன. "இன்குலாப் ஜிந்தாபாத்" "வந்தேமாதரம்" கோஷம்.
தப்பிச் செல்ல எந்த முயற்சியும் இருவரும் மேற்கொள்ளவில்லை.
சார்ஜெண்ட் இவர்கள் அருகில் வந்தார். இருவரும் கைதாக ஒத்துழைத்தனர். துப்பாக்கிகளை தூர எறிந்தனர்.
"ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்றான் சார்ஜெண்ட்.
"செவிடர்கள் காதில் நாங்கள் சொல்லும் செய்தி விழவேண்டுமல்லவா? அதற்காக" என்றனர் வீரர்கள்.
சார்ஜெண்ட்டுக்கு இருவரிடமும் பக்தி, மரியாதை ஏற்பட்டது.
8-4-1929 இந்த நிகழ்ச்சி. பிறகு 2 மாதம் கழித்து 6-6-1929 அன்று நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
கோர்ட்டில் பகத் சிங் கொடுத்த வாக்குமூலத்தின் ஒரு பகுதி:--

"நாங்கள் யாரையும் கொல்லும் நோக்கத்தில் குண்டுகளை வீசவில்லை. கொடுங்கோல் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை குறிவைத்தே அவை வீசப்பட்டன. இது இரக்கமற்ற, பொறுப்பற்ற, வெள்ளை ஏகாதிபத்திய அரசு. இந்திய மக்கள் செயலற்று செய்வதறியாது நிற்கிறார்கள். அவர்களை ஏமாளிகளாக ஆக்கிக்கொண்டு இந்த சட்டசபை, இந்திய மக்களுக்கு, உழைக்கும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. எங்கள் நோக்கமெல்லாம் ஏகாதிபத்திய அடக்குமுறை ஆட்சி நடத்தும் செவிடர்களின் காதில் ஒலியைப் பாய்ச்சுவதுதான். தலையற்றவர்களுக்கு அறிவுபுகட்டவும், அமைதியாக இருக்கும் இந்த நாட்டில் வீசப் போகும் புயலுக்கு முன்னெச்சரிக்கையாகவும் இந்த குண்டுகளை வீசினோம். தனிப்பட்ட எவரையும் கொல்லும் நோக்கம் எங்களுக்கு இல்லை. நினைத்திருந்தால் இந்திய மக்களின் வெறுப்பை முழுமையாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் வைஸ்ராய் இர்வினையும், சர் ஜான் சைமனையும்கூட கொன்றிருக்க முடியும். ஆனால் நாங்கள் அதனைச் செய்யவில்லை. அது எங்கள் நோக்கமும் அல்ல. ஏகாதிபத்திய ஆட்சிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கவே இப்போது நாங்கள் குண்டுகளை வீசினோம். நாங்கள் உங்களிடம் எந்த சமாதானமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எங்கள் சுயமரியாதையைக் காண்பிக்கவும், உங்களுக்குச் சரியான எச்சரிக்கை கொடுக்கவும் நடந்த இந்த முயற்சி நாங்கள் விரும்பியே செய்தோம்"

தீர்ப்பு வந்தது: குண்டு வீசிய குற்றத்துக்காக பகத் சிங்குக்கும், பூதகேஸ்வர தத்துக்கும் ஆயுள் தண்டனை.
பகத் சிங்கின் வாக்குமூலம் உலக பத்திரிகைகள் அனைத்திலும் வந்து பரபரப்பாகப் பேசப்பட்டன. இந்திய நாட்டு இளைஞர்கள் இவ்விரு இளைஞர்களின் வீர தீர பராக்கிரமத்தைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் வீறுகொண்டு எழலாயினர். இவர்கள் இந்தியர்களின் ஆதர்ச வீர புருஷர்களாயினர்.
இந்த வழக்கையடுத்து DSP சாண்டர்ஸ் கொலை வழக்கு தொடர்ந்தது.
சிறையில் பல தொல்லைகள். அவமதிப்புகள். கைதிகள் நீண்ட நாள் உண்ணா நோன்பு இருந்தனர். வழக்குக்கு ஒத்துழைப்பு கிட்டவில்லை என்பதால் பிரிட்டிஷ் அரசு ஒரு அவசர சட்டத்தைக் கொணர்ந்தது. குற்றவாளிகளை நீதிமன்றத்தில் கொணராமலும், சாட்சிகள் விசாரிக்காமலும் இவர்களுக்குத் தண்டனை கொடுக்க வகை செய்தது சட்டம்.
உண்ணாவிரதத்தின் 63 வது நாளில் ஜதீந்தாஸ் இறந்தார். இவர் குண்டு செய்யும் நிபுணர்.
தலைமறைவாக இருந்த பகவதிசரண் காட்டில் குண்டு தயாரிக்கையில் வெடித்துச் சிதறினார். இவரது உடல் ஊருக்குள் கொண்டு வரப்படாமல் ராவி நதியில் இழுத்து விடப்பட்டது.

7-10-1930இல் பகத் சிங், ராஜ்குரு, சுகதேவி மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

சாண்டர்ஸ் கொலை வழக்கு நடந்து வந்த நாளில் பகத் சிங்கின் தந்தை ஒரு மனு கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் பகத் சிங், கொலை நடந்த அன்று ஊரிலேயே இல்லை என்று. வெகுண்டெழுந்தான் பகத் சிங். பொய் சொல்வதை அவன் மனது ஏற்கவில்லை. தந்தையை கடுமையாகக் கோபித்துக்கொண்டு கடிதம் எழுதினான்.
பகத் சிங்கை காப்பாற்ற அரசியல் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. மகாத்மா காந்தி வைஸ்ராய்க்குக் கடிதம் எழுதினார். கடைசிவரை அந்த கடிதங்களை வைஸ்ராய் எடுத்துக் கொள்ளவேயில்லை. நேரு எப்படியும் பகத் சிங் காப்பாற்றப்பட்டு விடுவான், மகாத்மாவின் முயற்சி பலிக்கும், வைஸ்ராய் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகவாவது மாற்றிவிடுவார் என்று நம்பினார். அவர் நம்பிக்கை பலிக்கவில்லை.

24-3-1931 விடியற்காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற முடிவாகியது.
மக்கள் வெள்ளம் கூடத் தொடங்கியது. அடுத்த மூன்றாம் நாள் லாகூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கவிருந்தது. லாகூர் சிறையைச் சுற்றி தேசபக்தர்களும் தேசத் தொண்டர்களின் உறவினர்களும் கூடினர். தண்டனை நிறைவேறும் நாளில் சமாளிக்கமுடியாத கூட்டம் வரும் என்று அரசு நினைத்தது.
\ சிறையில் மூவரும் எந்த சலனமும் இன்றி அமைதியாக இருந்தனர். வெளியே மழை மேகம் திரண்டு பெரிய பிரளயம் ஏற்படுவது போன்ற மக்கள் வெறி. உள்ளே "இன்குலாப் ஜிந்தாபாத்" "வந்தே மாதரம்" இவற்றுடன் தேசபக்தி பாடலை உரத்தக் குரலில் மூவரும் பாடுவது வெளியே கேட்டது. நிசப்தத்துடன் மக்கள் அதனைக் கேட்டனர்.
உறவினர்களும் பகத்சிங்கின் பெற்றோர் சகோதரர்கள் எல்லோரும் சிறைக்குள் சென்று பகத் சிங்கைப் பார்த்தனர். சற்றும் கலங்காத பகத் சிங் அனைவருக்கும் தைரியம் சொன்னார். தாய் மயங்கி வீழ்ந்தாள். அவரைத் தேற்றி அனுப்பினார் பகத் சிங்.
மறுநாள் வரை காத்திருக்க விருப்பமில்லாத சிறை அதிகாரிகள் மூவரையும் 23ஆம் தேதி மாலையே தூக்குமேடைக்கு அழைத்துச் சென்றனர். சிறைக்குள்ளே பாடல். "இங்குலாப் ஜிந்தாபாத்" என்ற பகத் சிங்கின் கோஷம் விண்ணை முட்டியது. பதிலுக்கு சிறைக்கைதிகள் அனைவருமே "இங்குலாப் ஜிந்தாபாத்" என்று எதிரொலித்தனர். பாடலும், கோஷமும் சிறிது சிறிதாக குறைந்தது.
என்ன நடக்கிறது உள்ளே? நாளைதானே தூக்கு என்று என்ன நடக்கிறது.
அதிகாரிகள் மூவரையும் தூக்கு மேடையில் நிறுத்தினர். முகத்தை மறைக்க கட்ட வந்த கருப்பு துணியை நிராகரித்தனர். எங்கள் பாரத மண்ணைப் பார்த்துக் கொண்டே உயிர் விடுவோம் என்றனர். தூக்குக் கயிறு மாட்டப்பட்டது. இழுக்கப்பட்டது. நொடிப்பொழுதில் அவர்கள் ஆவி பிரிந்து உடல் தொங்கியது. மூன்று விலை மதிக்கமுடியாத வீரத் தியாகிகளின் உடல் பிணமாகத் தொங்கியது.
செய்தி தெரிந்து வெளியே கொந்தளிப்பு. மக்கள் வெள்ளம் அலைமோத, அதிகாரிகள் திருட்டுத் தனமாக அவர்கள் உயிரை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் தாங்களே கொண்டு போய் சட்லெஜ் நதிக்கரையில் எரித்து மிச்சத்தை ஆற்றில் இழுத்து விட்டுவிட்டனர்.
மறுநாள் மக்கள் சட்லெஜ் நதிக்கரையில் மிச்சமிருந்த அவர்கள் சாம்பலை எடுத்து வந்து ஊர்வலம் விட்டனர். நினைவாலயம் எழுப்பினர். சுதந்திர இந்தியா பாகிஸ்தான் வசம் போய்விட்ட அந்த இடத்தை வாங்கி அங்கோர் நினைவாலயம் 1950இல் எழுப்பினர்.
பின்னர் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரில் அந்த நினைவாலயம் இடிந்து போனதால், மறுபடியும் அங்கு ஓர் நினைவாலயம் எழுப்பப்பட்டது.
பகத் சிங் தூக்கிலடப்பட்டுவிட்ட செய்தி கேட்டு நேரு சொன்னார்:

"எல்லாம் முடிந்து விட்டதே. கடந்த சில நாட்களாக நான் வாய் மூடிக் கிடந்தேன். எனது ஒரு வார்த்தைகூட நன்மைக்கு எதிராக அமைந்துவிடக்கூடும் என்று கருதி வாய் மூடி இருந்தேன். இதயமே வெடித்து விடுவது போலிருந்தது. இருந்தாலும் நான் அமைதியாக இருந்தேன். இப்போது எல்லாம் முடிந்து விட்டது. நமக்கு யார் மிகவும் அன்பானவனாயிருந்தனோ, எவனுடைய மகத்தான தைரியமும் தியாகமும் இந்திய இளைஞர்களுக்கு ஆதர்ஷமாக விளங்கியதோ, அவனை நம்மில் யாராலுமே காப்பாற்ற முடியாமல் போய்விட்டது"
24 வயதில் தூக்கில் தொங்கி நாட்டுக்காக உயிர்விட்ட அந்த வீரத் தியாகியை நாடே போற்றி வாழ்த்துகிறது. அவன் கடைசியாகக் கூறிய வார்த்தைகளை நாம் மீண்டும் சொல்லி புனிதமடைவோம்.
"இன்குலாப் ஜிந்தாபாத்." வந்தே மாதரம்.












No comments: