பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, February 8, 2011

நூல்கள் வாசிப்பின் பெருமை.

நூல்கள் வாசிப்பின் பெருமை.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் விவரம் தெரிந்தவர்களில் நான்கில் ஒரு பங்கினர் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் என்பது தெரிய வந்தது. நம்மில் கால் பகுதியினர் படிக்கும் வழக்கம் இல்லாதவர் என்பது அவமானம் இல்லையா? அவமானமா, வருத்தமா? வருத்தம் என்றே கொள்ளலாம்.

அது மட்டுமா? ஆண்டுக்கு ஆண்டு புத்தகம் படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகவேண்டாமா? குறைந்தது ஒருவர் ஆண்டொன்றுக்கு ஒரு புத்தகமாவது படிக்க வேண்டுமென்கிற எண்ணம் கொள்ள வேண்டாமா? பத்திரிகை படிப்பது, கதை படிப்பது இவற்றை விட்டுவிடுங்கள். அறிவுக்கு விருந்தாக, வளர்ச்சிக்கு உதவியாக நல்ல நூல் குறைந்தது ஒரு நூலாவது படிப்பது என்ற பழக்கம் கொள்ள வேண்டும்.

மேற்சொன்ன கருத்துக் கணிப்பின்படி விபரம் தெரிந்தோர் ஓராண்டில் படிக்கும் நூலின் எண்ணிக்கை நான்குக்கும் குறைவாம். இவர்களில் பாதிப்பேர் இன்னும் குறைவாக, மூன்று, இரண்டு அல்லது ஒரு நூல் மட்டும் படிக்கும் வழக்கம் கொண்டவர்களாம். இந்த நிலைமை சரியா?

உங்களில் யாராவது புத்தகம் படித்து என்ன ஆகப் போகிறது. சரிதான் நமக்குத் தெரியாததையா இவர்கள் பெரிதாக எழுதிக் கிழித்துவிடப் போகிறார்கள் என்கிற எண்ணம் கொண்டு புத்தகம் படிக்கும் வழக்கம் இல்லாமல் இருந்தால் சற்று நான் சொல்லப் போகும் காரணங்களை எண்ணிப் பாருங்கள்.

1. புத்தகம் படித்தல் என்பது நமது மனத்தை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தொலைக்காட்சி போல அல்லாமல் புத்தகம் படித்தல் என்பது நமது மூளைக்கு வேலை கொடுக்கிறது. புதிய புத்தகங்களைப் படிப்பதனால் புதிய புதிய விஷயங்கள தெளிவாகின்றன. அது குறித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள ஆவலைத் தூண்டுகிறது.

2. புத்தகம் படித்தல் நமது திறமையை வளப்படுத்துகிறது. பூமியில் உள்ள எல்லா பொருட்கள் குறித்தும் முழு விவரங்களையும் படித்தறிந்து கொள்ள நூல்கள் இருக்கின்றன. புரியாத அல்லது கடினமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள புத்தகங்கள்தான் உதவ முடியும். ஒரு வகுப்பறையில் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை விட, பலரோடு உட்கார்ந்து விவாதிப்பதை விட ஒரு நூலில் உள்ள தகவல்கள் அதிகம் உதவுகின்றன.

3. நூல்களைப் படிப்பதன் மூலம் நம்முடைய பேச்சு வன்மை அதிகரிக்கிறது. புதிய சொல்லாக்கங்கள், புதிய கருத்துக்கள் தோன்றுகின்றன. ஆரம்பக் கல்வி பயிலும் போது நமக்கு ஒரு சொல்லின் பொருளை விளக்க ஒரு வாக்கியத்தைச் சொல்லி, அந்த வாக்கியத்தில் வரும் குறிப்பிட்ட பொருளின் விவரங்களைச் சொல்லித் தருவார்கள். ஒரு பானை என்று சொன்னால், என் வீட்டில் பானையில் தண்ணீர் பிடித்து வைப்பார்கள் என்று ஒரு வாக்கியம். அப்போது பானை என்பது என்ன என்பது குழந்தைக்குத் தெரிகிறது. இல்லையா? அதைப் போலத்தான் எந்த பொருள் குறித்த நூலைப் படித்தாலும் அந்த பொருளின் பயன்பாட்டை நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. புதிதாக ஒரு பொருள் குறித்த நூலைப் படிக்கும் போது புதிய புதிய சொல்லாக்கத்தை அதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு முன்பு இந்தச் சொல்லை நான் கேள்விப்பட்டதில்லையே என்றுகூட நாம் நினைப்போம். புதிய சொற்களை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு இது.

4. நமக்கு பழக்கமில்லாத, அன்னியமான கலாச்சாரம் அல்லது இடங்களைப் பற்றி உணர்ந்து கொள்ள அவை பற்றிய நூல்களைப் படிப்பதன் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும். ஒரு மாணவனைப் பார்த்து நீ விடுமுறையைக் கழிக்க எங்கே செல்ல விரும்புகிறாய் என்று கட்டுரை
எழுதச் சொல்லுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது அவனால் கற்பனையில் எந்த இடத்தையும் எழுதுவது என்பது இயலாத காரியம். ஒன்று அவன் அங்கு போயிருக்க வேண்டும் அல்லது அந்த இடம் குறித்த ஒரு நூலை அவன் படித்திருக்க வேண்டும். அந்த வகையில் நம் மாநிலத்திலும், நம் நாட்டிற்குள்ளும், பூமண்டலத்திலுள்ள எந்த நாட்டைப் பற்றிரும் படித்து அறிந்து கொள்ள முடியும். அதற்காக நாம் அங்கு போய்த்தான் பார்க்க வேண்டுமென்பதில்லை. படித்தே தெரிந்து கொள்ளலாம். அல்லவா?

5. நமது கவனத்தையும், நினைவாற்றலையும் புத்தகம் படிப்பது அதிகரிக்கிறது. முன்னமே சொன்னவாறு புத்தகம் படித்தல் நமது மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது. பத்திரிகைகள் அல்லது செய்தித்தாள்களைப் போல ஒரு சிறந்த தலைப்பிலான நூலை மேலோட்டமாகப் படித்துப் புரிந்து கொள்ளுதல் கடினம். அதற்காகச் சற்று ஆழமாக சிந்தித்துப் படிக்க வேண்டியிருக்கும். முன்பெல்லாம் கடிதம் எழுதுவது, அதனைப் படிப்பது என்பது ஒரு கலையாக இருந்தது. பல பெரியோர்களின் கடிதங்கள் இன்றும் புத்தகமாக வெளிவந்து புகழ் பெற்றிருக்கிறது. ஜவஹர்லால் நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள் இன்று 'உலக வரலாறு' என்றும் 'இந்திய வரலாறு' குறித்துமான நூலாக வெளிவந்திருக்கிறது. இப்போதெல்லாம் கடிதம் எழுதும் வழக்கம் ஈ மெயில், டெலிபோன் போன்றவை வந்தபின் எழுதுவது குறைந்து விட்டது. ஆகவே நூல்களைப் படிப்பதன் மூலம் மட்டும்தான் அரிய விஷயங்களை நாம் மனத்தில் வாங்கிக் கொண்டு நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது. உடலை நன்கு பாதுகாத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வது போல, மனப் பயிற்சியை நூல்களைக் கற்பதன் மூலம்தான் பெற முடியும்.

6. தன்னைத் தானே தரத்தில் உயர்த்திக் கொள்ளல். பல தலைப்புக்களில், பல புதிய தகவல்களைக் கொடுக்கும் நூல்களைப் படிப்பதால் நம்முடைய பரந்த அறிவு மேலும் சிறப்புப் பெறுகிறது. பல தலைப்புகளிலும் நம்மால் பேசவும், எழுதவும், பிறருக்குச் சொல்லிக் கொடுக்கவும் முடிகிறது. அதன் மூலம் உங்களுடைய சமூக அந்தஸ்து, கவுரவம் அதிகரிக்கிறது. மற்றவர்களுக்கு ஏதாவது சந்தேகம் எழுந்தால் இவரைக் கேட்டால் தெரியும் என்று உங்களிடம் வருவார்கள். அது பெருமை அல்லவா. அதன் மூலம் உங்களை உங்களாலேயே மதிக்க முடியும், உங்கள் கவுரவத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.

7. உங்களது நினைவாற்றல் அதிகரிக்கிறது. நம் மனித மனம் பல கம்ப்யூட்டர்களின் சக்தி படைத்தது. இந்த சிறிய மூளையில் எத்தனை விஷயங்களைத் தேக்கி வைத்திருக்கிறோம். நாம் ஐந்து வயதில் பள்ளிக்கு போனது முதல் இன்று அண்டை வீட்டாரோடு சண்டையிட்டது வரை அனைத்தும் நம் நினைவில் இருக்கிறது. கம்ப்யூட்டரிலாவது ஏதாவது வைரஸ் வந்தால் அத்தனை 'மெமரி'யும் அழிந்து விடும். மனித மனத்தின் நினைவுகள் அழிவதில்லை. அப்படிப்பட்ட மனத்தின் வல்லமையை நூல்கள் படிப்பதால் அதிகரித்துக் கொள்ள முடிகிறது. இரண்டாம் உலக யுத்தத்தில் இங்கிலாந்து படையில் தளபதி யார் என்றால் திடீரென்று எந்த புத்தகத்தைப் பார்த்து பதில் சொல்ல முடியும். நாம் அது குறித்த ஒரு புத்தகத்தைப் படித்திருந்தால், நம் நினைவில் தேக்கி வைத்திருக்கும் அறிவுப் பெட்டகத்திலிருந்து, இங்கிலாந்து தளபதியின் பெயர் ஜெனரல் மாண்ட்கோமரி என்று பதில் சொல்வோம். பல பத்திரிகைகளில் குறுக்கெழுத்துப் போட்டிகள் வைக்கிறார்கள். அதிலும், 'சொடுக்கு' என்ற எண் விளையாட்டு, இவை போன்றவற்றில் மனத்தை செலுத்துவதன் மூலம் "அல்ஸமீர் வியாதி' எனும் ஞாபகமறதி வியாதி வராமல் தடுத்துக் கொள்ள முடியும். "அல்ஸமீர் வியாதி" என்பது தான் யார், கூட இருப்பவர்கள் யார், இப்படி எதுவும் தெரியாமல் உயிருள்ள ஒரு காய்கறி போல வாழும் நிலை. அப்படி எத்தனை பேர் இருக்கிறார்கல் தெரியுமா. அந்த அபாயத்திலிருந்து நம்மைத் தடுப்பது புத்தகம் படிக்கும் வழக்கம்தான். படிப்பது ஒரு விளையாட்டு போல அல்ல. அது நினைவில் சேமிக்கப் புதிய செய்திகளைக் கொண்டு வரும் ஒரு முயற்சிதான். சில நிகழ்வுகளின் ஆண்டுகள், இன்ன நூல் இன்னாரால் எழுதப்பட்டது என்ற தகவல், ஒரு வரலாறு இந்த நூலில் இன்னாரால் எழுதப்பட்டிருக்கிறது இது போன்ற
எத்தனை விஷயங்கள் நம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். சகுனி எந்த புராணக் கதையில் வருகிறான். ஜடாயு என்பவன் எந்த கதையில் சொல்லப் படுகிறான். அட்சயகுமாரன் என்பவன் யார், எந்த கதையில் வருகிறான். தான்யமாலினி என்றொரு பாத்திரம். இவள் யார்? இவைகளுக்கெல்லாம் எப்படி பதில் தெரியும். நம் நினைவில் இருந்தால்தான் சொல்ல முடியும். இங்கு குறிப்பிட்டதால் சொல்கிறேன் "தான்யமாலினி" என்பவள் இராமாயணத்தில் வரும் இராவணனின் இரண்டாவது மனைவி. இவளது மகன்தான் அட்சயகுமாரன். அவனைத்தான் அனுமன் காலில் வைத்து தரையோடு தரையாக தேய்த்து விடுகிறான். இதெல்லாம் என்ன? பொய் புராணங்கள். இவைகளைத் தெரிந்து கொள்வதால் என்ன பயன்? யோசிக்கத் தோன்றுகிறது அல்லவா. இவைகள் நம் மனத்தில் இருந்தால், நம் நினைவாற்றல் பெருகி வருகிறது என்று பொருள். அதற்காகவாவது படித்துத் தெரிந்து கொள்ளூங்களேன்.

8. அதிகமான நூல்களைப் படிப்பதால் நமது ஒழுக்கமும் கட்டுப்பாடும் அதிகரிக்கிறது. நம்மில் நாலில் ஒருவர்தான் ஓராண்டு முழுவதற்கும் ஒரு புத்தகம் கூட படிப்பதில்லை யென்றால், நம்மில் கட்டுப்பாடோ அல்லது ஒழுக்கமோ நிலைபெறவில்லை என்பது பொருள். நூல்கள் படிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கம்ப்யூட்டரைத் திறந்து தட்டிவிட்டால் எல்லா விஷயங்களையும், விவரங்களையும் கொண்டு வந்து கொட்டி விட்டுப் போகிறது. எதற்காக நேரத்தை வீணடித்துக் கொண்டு பெரிய பெரிய புத்தகங்களைப் படித்து அவற்றை மூளையில் வாங்கிக் கொண்டு, பின்னர் அவற்றை நினைவில் தாங்கிக் கொண்டு, இதெல்லாம் பெரிய தொல்லை இல்லையா என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அதே கம்ப்யூட்டர், டி.வி. இவைகளெல்லாம் மனித ஆற்றலின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாகவும் இருந்து விடுகிறது. கம்ப்யூட்டர் வானத்துக்குக் கீழேயுள்ள அனைத்து விவரங்களையும் நொடிப்பொழுதில் கொண்டு வந்து கொட்டிவிடும் என்பதில் ஐயமில்லை. ஆனால் நாம் அவற்றை மனத்தில் வாங்கி நிறுத்திக் கொள்ள புத்தகங்களைப் படித்தால் முடியும். கம்ப்யூட்டர் தரும் தகவல் அடுத்த விநாடி மறைந்து விடும். நாம் ஒவ்வொரு நாளும் புத்தகம் படிக்க என்று எத்தனை நேரத்தை ஒதுக்குகிறோம். நேரமா? படிப்பதற்கா? சரிதான் வேலைக்குப் போய்விட்டு வந்து அக்கடா என்று சாப்பிட்டுவிட்டு, டி.வி.பார்த்துவிட்டுப் படுத்துத் தூங்கத்தான் நேரம் சரியாக இருக்கிறது. இதில் புத்தகம் படிப்பதாவது. ஏதோ, காலையில் ஒரு பத்திரிகை, இரவில் ஏதோவொரு வாரப் பத்திரிகை அத்தோடு சரி என்கிறார்கள். ஆனால், இன்று முதல் நல்ல நூல்களைப் படிக்க ஒரு நேரத்தை ஒதுக்குங்கள். வாழ்க்கையில் உயர முயலுங்கள்.

9. புத்தகங்கள் கையடக்கமானது, எங்கும் கொண்டு செல்லும் வசதி படைத்தது. கம்ப்யூட்டரி நீங்கள் வெளியூர் செல்லும் போது, பயணம் செய்யும் போது கொண்டு செல்வது சிரமம் இல்லையா. ஆனால் புத்தகங்களை கையோடு கொண்டு செல்ல முடியுமே. பேருந்தில் அல்லது புகைவண்டியில் பிரயாணம் செய்யும் நேரத்தை வீணடிக்காமல் நல்ல நூல்களைப் படிக்கலாமே.

10. புதிய செயல்பாட்டுக்கு, அல்லது உருவாக்கலுக்கு (Creativity) புத்தகம் படித்தல் மனதைத் தூண்டுகிறது. புதிய சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் இவற்றுக்கு நூல் படித்தல்தான் ஆதாரம். ஒரு மருத்துவர், புதிது புதிதாக் வெளியாகும் மருத்துவம் பற்றிய நூல்களை வாங்கிப் படித்துக் கொண்டிருப்பார். புதிய வியாதிகள் வரும்போது அதற்கு யாராவது நிபுணரிடம் அனுப்பவா முடியும். இவர் படிக்கும் நூல்களிலிருந்து புதிய வியாதிகள், அதன் விவரம், அதற்கான சிகிச்சை முறைகள் இவைகளை அவர் தெரிந்து கொள்ள முடிவது புத்தகம் படிப்பதால்தான். அதுமட்டுமல்ல, மருத்துவத் துறையும், மருத்துவ மாணவர்களும், ஏன் பொதுமக்களும் கூட தெரிந்து கொள்ளும் வகையில் பல புதிய நோய்கள் குறித்து விளக்கி இவரேகூட ஒரு நூலை எழுதி வெளியிடலாமே.

11. பிறரோடு உரையாட புதிய செய்திகள். பொதுவாக பல டி.வி.நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி நடத்துபவர், நேயர்களோடு உரையாடுவதைக் கவனியுங்கள். எப்படி இருக்கீங்க. நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க. இப்படிப் போகும் உரையாடல்கள். எப்படி
இருப்பாங்க? அதே மாதிரிதான் இரண்டு கால், இரண்டு கை இப்படி. ஆனால் அன்றைய நாளில் நிகழ்ந்த அல்லது பேசப்படும் ஏதாவது அரிய நிகழ்ச்சிகள், சாதனைகள், மக்களுக்குப் பயன்படும் செய்திகள் இவற்றைப் பற்றி அப்போதைக்கப்போது பேச புதிய நூல்கள் படிப்பது பயன்படும். சிலர் பேசிக் கொண்டே வருவார்கள். அப்புறம் பேசுவதற்கு விஷயம் எதுவும் கிடைக்காது. மெளனம் காப்பார்கள். பேசத்தான் ஒன்றுமில்லையே, என்ன பேசுவது. அந்த நிலைமை புத்தகம் படிப்பவருக்கு இருக்காது. உக்களுக்குத் தெரியுமா. நான் ஒரு நூலில் படித்தேன். இதே அளவில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருந்தால் சாப்பிட தானியங்கள் கிடைக்குமா, வாழ இடம் இருக்குமா, சாலைகளில் பயணம் செய்ய முடியுமா. வண்டிகளுக்கு எரிபொருள் கிடைக்குமா, இதையெல்லாம் குறித்து அந்த நூலில் விவரமாக எழுதியிருக்கிறார்கள். அதன் பெயர் "Future Shock" அதன் ஆசிரியர் இன்னார். அதைப் படியுங்கள் என்று அந்த நூலைப் பற்றி பேசத் தொடங்கினால் சென்னையில் கிளம்பி நியு யார்க் போய்ச்சேரும் வரை பேசிக் கொண்டிருக்கலாம். புத்தகம் படித்தால்தான் அது முடியும், தெரிந்து கொள்ளுங்கள்.

12. திரப்படங்களுக்குப் போவதற்கு ஆகும் செலவு, நண்பர்களோடு உணவு விடுதி அல்லது வேறு விடுதிகளுக்குப் போவதற்கு ஆகும் செலவு, இவற்றோடு பார்க்கும் போது நூல்கள் வாங்கும் செலவு குறைவு. இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் பார்க்க திரை அரங்கு வசூல் செய்யும் கட்டணம் எவ்வளவு? அந்த செலவுக்கு ஒரு அருமையான தலைப்பில் எம்.எஸ்.உதயமூர்த்தி அல்லது சுகி.சிவம் அல்லது டேல் கார்னிஜ் ஆகியோர் புத்தகங்களை வாங்கி வாழ்வில் முன்னேறும் வழிகளைப் படித்துத் தெரிந்து கொள்ளலாமே. அல்லது சில பெரிய ஊர்களில் சாலையோரம் கடை விரிக்கப்பட்டு படித்த பழைய நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும். அவைகளில் சில அருமையான நூல்கள் கூட கிடைக்கும் வாங்கலாமே.

13. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். புத்தகங்களைப் படிக்க பட்டதாரியாக இருத்தல் என்பது அவசியமில்லை. எழுதப் படிக்கத் தெரிந்த எவரும் புத்தகங்களைப் படிக்கலாம். சில கிராமங்களில் பெரியவர்கள் சிலர் அடிப்படி கல்வி இல்லாமலிருந்தும் பல அரிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவார்கள். எப்படித் தெரிந்தது அவர்களுக்கு. எங்கோ ஏதோ நூல்களைப் படித்துத்தான் அந்த அறிவு அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

14. ஒரு குறிப்பிட்ட துறையில் தலைமை ஏற்கும் தகுதி கிடைக்கும். உங்களுக்கு ஏதாவதொரு குறிப்பிட்ட துறையில் ஆர்வம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். குறிப்பாக தமிழ் இலக்கியங்களில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கிறது. ஆனால் நீங்கள் தமிழ் மொழியை முறையாகக் கற்று முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்றவரில்லை. எனினும் உங்கள் ஆர்வம் காரணமாக தமிழ் இலக்கியங்களைப் படிக்கிறீர்கள். படிக்கப் படிக்க உங்களுக்கு புதிய தமிழ் இலக்கிய நூல்களைக் கற்கும் ஆவல் தானாக உண்டாகிறது. மூன்றாம் வகுப்பு மட்டும் படித்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி. சிலப்பதிகார இலக்கியத்தில் பல முனைவர் பட்டம் பெறுமளவுக்கு தகுதி பெற்றிருந்தது எப்படி? ஆர்வமும், படிப்பும் தான். கம்ப ராமாயணத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பொருள் சொல்லி, கம்பனில் உட்செறுகள் என்று பல பாடல்களை ஒதுக்கி மாபெரும் இலக்கிய வாதியாகத் திகழ்ந்த டி.கே.சிதம்பரநாத முதலியார் எந்தப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்? ஆக ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அந்தத் துறையில் வெளியான நூல்களைப் படித்து அதில் நீங்கள் தலைமை ஏற்க முடியும்.

15. பொழுது போகாமல் ஊர் சுற்றி, திரைப்படம், அது இது என்று பணத்தை வீணடிப்பதற்கு நல்ல நூல்களை வாங்கிப் படித்து சேமித்து வைத்தல் நல்ல பழக்கமாக இருக்கும். பணமும் வீணாகாது, அறிவும் வளரும்.


16. புத்தகம் படித்து எது சரி, எது தவறு என்று புரிந்து கொள்வதன் மூலம் நாம் தவறுகள் செய்வது குறைந்து போகும். வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் உருவாகும். அதனை அடைய மேலும் முயற்சிகளை மேற்கொள்ள தூண்டும்.

17. நாம் படித்த செய்திகளை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லும்போது, அதைப் பற்றி தெரியாதவர்கள் திகத்துப் போவார்கள். ஒரு முறை கூட்டமொன்றில் பாரதியாரின் பாஞ்சாலி சபதம் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது "கட்டுண்டோம் பொறுத்திருப்போம், காலம் மாறும்" என்ற வரிகளைச் சொன்னபோது, அட! இது பாரதியார் எழுதியதா? நாங்கள் வேறு யாரோ வென்றல்லவா நினைத்திருந்தோம் என்றார்கள். அப்படி எதிர்பாராத இடத்தில் உங்கள் ஞானத்தை வெளியிட்டுப் புகழ் பெற உதவும்.

18. மனத் தளர்ச்சி, நம்பிக்கை இழப்பு ஏற்படுகின்ற போது நல்ல நூலை, நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நூலை எடுத்துப் படித்தால் நிச்சயம் அந்த நம்பிக்கையின்மை மறைந்து மனதில் உறுதி ஏற்படும்.

19. நீங்கள் படித்து மூளையில் சேமித்து வைத்திருக்கிற எல்லா விஷயங்களையும் வீணடிக்காமல் ஒரு நூலை எழுதி அதிலும் நீங்கள் லாபம் பெறலாம்.

ஒரு பெரிய அறிஞர், தொண்ணூறு வயதைக் கடந்தவர். அவர் வாழ்நாளில் மாபெரும் அறிஞராகப் போற்றப்பட்டவர். பல துறைகளிலும் புலமை பெற்றவர். அவர் காலமானபோது அவரது இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தது. பலர் அவரைப் பற்றிப் பேசினர். ஒருவர் சொன்னார். இவர் மறைந்தது குறித்து எனக்கு வருத்தமில்லை என்றார். கூடியிருந்தவர்களுக்கு அதிர்ச்சி, என்ன இது இப்படி பேசுகிறார். அவர் தொடர்ந்து சொன்னார், இவர் மறைந்தது பெரிய நஷ்டமில்லை, ஆனால் இவர் மூளையில் சேமித்து வைத்திருந்த பொக்கிஷங்களான பல அறிவுச் செல்வம் அத்தனையும் இவரோடு போய்விட்டது இந்த உலகத்துக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு என்றார். மனித உடலுக்குப் பெருமை இல்லை. அந்த மனித உடலில் மூளையில் சேமித்து வைத்திருந்த அறிவுச் செல்வத்துக்குத்தான் மதிப்பு அதிகம். அந்த மதிப்பை பல, பற்பல நூல்களைக் கற்பதன் மூலம்தான் அடையமுடியும் என்பதில் ஐயமில்லை.