பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, November 6, 2010

நவசக்தி மார்க்கம்

பாரதி சிந்தனை: 5. நவசக்தி மார்க்கம். வழங்குவோர்: தஞ்சை வெ.கோபாலன்.

கணபதி: வேதத்தில் பிரம்ம தேவனையே கணபதி என்று ரிஷிகள் வணங்கினர். அவரே பிரஹ்மணஸ்பதி; அவரே பிருஹஸ்பதி. விநாயகர் பிரணவ மந்திரத்தின் வடிவம். யானை முகம் பிரணவ மந்திரத்தைக் காட்டுவது. அறிவின் குறி 'கணா நாம் த்வா கணபதியும் ஹவாமஹே' என்று சாமான்ய வழக்கத்திலுள்ள வேத மந்திரத்திலே பிள்ளையாரைப் பிரம்ம தேவனென்று காட்டியிருப்பது தெரிந்து கொள்க.
'ஒன்றே மெய்ப்பொருள்; அதனை ரிஷிகள் பல விதமாகச் சொல்லினர்' என்று வேதமே சொல்லுகிறது. கடவுளின் பல குணங்களையும் சக்திகளையும் பல மூர்த்திகளாக்கி வேதம் உபாஸனை செய்கிறது. வேதகாலம் முதல் இன்று வரை ஹிந்துக்கள் தம் தெய்வங்களை மாற்றவில்லை. வேதம் எப்போது தொடங்கிற்றோ, யாருக்கும் தெரியாது. கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய தெய்வங்களெல்லாம் காலத்தில் மறைந்து போயின. ஹிந்துக்களுடைய தெய்வங்கள் அழியமாட்டா. இவை எப்போதும் உள்ளன.

காளி: படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய முத்தொழிலையும் குறிப்பிட்டுப் புராணங்களில் மூன்று மூர்த்தியாகப் பரமாத்மாவைப் பேசுகிறார்கள். பிரம்மம் என்ற பெயரை விசேஷமாகப் பரமாத்மாவுக்கு வேதாந்த சாஸ்திரம் வழங்குகிறது. பிரம்மம் என்பது வேள்வியையும், மந்திரத்தையும், ஞானத்தையும் குறிப்பிட்டு வேத ரிஷிகளால் வழங்கப்பட்டது. மந்திர நாதனும், ஸரஸ்வதி நாயகனும், வேதமூர்த்தியுமாகிய பிரம்ம தேவனை வேதம் 'ப்ரஹ்மணஸ்பதி' என்று கூறும். அதாவது, ப்ரஹ்மத்தின் பதி அல்லது தலைவன் என்று அர்த்தம். மூன்று மூர்த்திகளின் ஒவ்வொன்றையும் உபாஸனையின் பொருட்டுப் பிரிவாகக் காட்டினால், அந்த அந்த மூர்த்தியையே, ஸாக்ஷாத் பரமாத்மாவாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். நாராயணன் பரிபாலன மூர்த்தி, பரப்ரஹ்மம் அவரே. சிவன் ஸம்ஹார மூர்த்தி, பரப்ரஹ்மம் அவரே. பிரம்மா சிருஷ்டி மூர்த்தி; அவரே ஸாக்ஷாத் பரப்ரஹ்மம். அவருடைய பெயரடித்தான் பிரஹ்மத்திற்கு வைத்திருக்கிறது.

இந்திரன், அக்னி, வாயு, வருணன் என்ற நாமங்கள் வேதத்தில் பரமாத்மாவுக்கே வழக்குகின்றனெ. மேலே 'ஏகம் ஸத்' என்ற ரிக்வேத மந்திரத்தின் பொருள் குறிப்பிட்டிருக்கிறோம். மூர்த்தியுபாஸனைக் கூட்டத்தாருக்கிடையே லெளகிக காரியங்களை அனுசரித்துப் பிற்காலத்தில் பல சண்டைகள் உண்டாயின. தக்ஷயாகத்தில் வீரபத்திரன் வந்து, இந்திரன், அக்னி, சூரியன், பகன், விஷ்ணு முதலிய தேவர்களைத் தண்டனை செய்ததாக ஒரு புராணம் சொல்லுகிறது. இப்படியே பல புராணங்கள் தாம் உபாஸனைக்குக் காட்டும் மூர்த்தி, மற்ற மூர்த்திகளைப் பல விதங்களில் விரோதித்துத் தண்டனை செய்ததாகச் சொல்லுகின்றன. இப்படிப்பட்ட கதைகள் பழைய புராணங்களில் பிற்காலத்தாரால் நுழைக்கபட்ட பொய்க்கதைகளே யன்றி வேறில்லை. இந்தக் கதைகள் வேதகாலத்துக்கு முற்றிலும் விரோதம். வேதத்தில் இந்துக்களுடைய தேவர்கள் ஒருவரையொருவர் பழிப்பதும் அடிப்பதும் இல்லை.

சிதம்பரம்: காலை பத்து மணி இருக்கும். நான் ஸ்நானம் செய்து பூஜை முடித்து, பழம் தின்று, பால் குடித்து, வெற்றிலை போட்டு, மேனிலத்திற்கு வந்து நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொண்டு இன்ன காரியம் செய்வதென்று தெரியாமல் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு எதிரே வானம் தெரிகிறது. இளவெயில் அடிக்கிறது. வெயிற்பட்ட மேகம் பகற் சந்திரன் நிறங் கொண்டு முதலையைப் போலும் ஏரிக்கரையைப் போலும் நானாவிதமாகப் படுத்துக் கிடக்கிறது. எதிர் வீட்டில் குடி இல்லை. அதற்குப் பக்கத்து வீட்டிலிருந்து சங்கீத ஓசை வருகின்றது. வீதியிலிருந்து குழந்தைகளின் சப்தம் கேட்கிறது. வண்டிச் சப்தம், பக்கத்து வீட்டு வாசலில் விறகு பிளக்கிற சப்தம், நான்கு புறத்திலும் காக்கைகளின் குரல், இடையிடையே குயில், கிளி, புறாக்களின் ஓசை, வாசலிலே காவடிகொண்டு போகும் மணியோசை, தொலைவிலிருந்து வரும் கோயிற் சங்கின் நாதம். தெருவிலே சேவலின் கொக்கரிப்பு, இடையிடையே தெருவில் போகும் ஸ்திரீகளின் பேச்சொலி, அண்டை வீடுகளில் குழந்தை அழும் சப்தம், "நாராயணா, கோபாலா!" என்று ஒரு பிச்சைக்கரனின் சப்தம், நாய் குலைக்கும் சப்தம், கதவுகள் அடைத்துத் திறக்கும் ஒலி, வீதியில் ஒருவன் 'ஹூகும்' என்று தொண்டையை லேசாக்கி இருமித் திருத்திக் கொள்ளும் சப்தம், தொலைவிலே காய்கறி விற்பவன் சப்தம், 'அரிசி! அரிசி!' என்று அரிசி விற்றுக் கொண்டு போகிற ஒலி - இப்படிப் பலவிதமான ஒலிகள் ஒன்றன்பின் மற்றொன்றாக வந்து செவியில் படுகின்றன. இந்த ஒலிகளையெல்லாம் பாட்டாக்கி இயற்கைத் தெய்வத்தின் மஹா மெளனத்தைச் சுருதியாக்கி என் மனம் அனுபவித்துக் கொண்டு இருந்தது.

வல்லூறு நாயக்கர்: இப்படி இருக்கையில், என் முன்னே வேதபுரம் ஸ்ரீ கிருஷ்ணகான சபையாரின் காரியதரிசியாகிய வல்லூறு நாயக்கர் வந்து நின்றார். உட்காரும்படி சொன்னேன். உட்கார்ந்தார். 'விஷயமென்ன?' என்று கேட்டேன். அவர் சொல்லுகிறார்:- "அடுத்த செவ்வாய்க்கிழமை இரவு நமது சபையின் ஆதரவின்கீழ் நடைபெறும் ராமாயண உபந்நியாசக் கோவையில் இரண்டாவது பகுதியாகிய சீதா கல்யாணம் நடக்கிறது. முதல் கதையாகிய ஸ்ரீராமஜனனம் சென்ற புதன்கிழமை நடந்தது. தஞ்சாவூரிலிருந்து மிகவும் நன்றாகப் பாடக்கூடிய பின்பாட்டுக்காரர் வந்திருக்கிறார். இவருக்குச் சன்னமான சாரீரம். ஆனால் பெண் குரல் அன்று. நன்றாகப் பாடுவார். ஒருதரம் வந்து சேட்டால் உங்களுகே தெரியும். மேலும் இந்த ராமாயணக் கதையில் வசூலாகும் பணத்தில் ஒரு சிறு பகுதி நமது அரசாங்கத்தாரின் சண்டைச் செலவிற்கு உதவி செய்வதாக அதிகாரிகளிடம் வாக்குக் கொடுத்திருக்கிறொம். நான்கு ரஸிகர் வந்து கேட்டால்தானே பாகவதற்குச் சந்தோஷம் ஏற்படும். ரஸிகராக இருப்பவர் வந்து கேட்டால் மற்ற ஜனங்களும் வருவார்கள். நம் சபைக்கு லாபம் உண்டு. பாகவதர் ராமாயணப் பிரசங்கத்தில் தேர்ச்சியுடையவர். மிருதங்கம் அடிக்கிற பிராமணப் பிள்ளை பதினைந்து வயதுடையவன்; ஆனால் மிகவும் நன்றாக அடிக்கிறான். தாங்கள் அவசியம் வரவேண்டும்" என்றார்.
அதற்கு நான், 'சீதா கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம், லக்ஷ்மண சக்தி, பட்டாபிஷேகம் என்கிற நான்கு கதைக்கும் நான் வரலாமென்று உத்தேசிக்கிறேன்; நிச்சயமாக வருகிறேன். எனக்கு இரவில் தூக்கம் விழிப்பது கொஞ்சம் சிரமம். ஆயினும் தங்கள் பொருட்டாகவும் தங்கள் சபையின் தலைவராகிய ஓங்காரச் செட்டியார் பொருட்டாகவும் அந்தச் சிரமத்தைப் பார்க்காமல் வருவேன்' என்றேன். "இராமாயணப் பிரசங்கத்தில் வரும் தொகையிலே ராஜாங்கத்தாரின் சண்டைச் செலவிற்காக உதவி செய்யப்படும் என்ற விஷயத்தைத் தனியாகக் காட்டி ஒரு விசேஷ விளம்பரம் போடப் போகிறோம். அதில் என்ன மாதிரி வக்கணை எழுத வேண்டும் என்பதைத் தாங்கள் தெரிவிக்க வேண்டும்" என்று வல்லூறு நாயக்கர் பிரார்த்தித்துக் கொண்டார். நான் வக்கணை சொன்னேன். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் குள்ளச்சாமி வந்து சேர்ந்தார்.

ஜீவன் முக்தி; அதுவே சிதம்பரம்: குள்ளச்சாமி யாரென்பதை நான் முன்னொரு முறை சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதிய "வண்ணான் கதை"யில் சொல்லியிருக்கிறேன். இவர் ஒரு பரமஹம்ஸர். ஜடபரதரைப் போல், யாதொரு தொழிலும் இல்லாமல், முழங்காலுக்குமேல் அழுக்குத் துணி கட்டிக்கொண்டு போட்ட இடத்தில் சோறு தின்று கொண்டு, வெயில் மழை பாராமல் தெருவிலே சுற்றிக் கொண்டிருக்கிறார். இவருடைய ஒழுக்க விநோதங்களை மேற்படி "வண்ணான் கதையிலே" காண்க. இவர் வந்து சோறு போடு என்று கேட்டார். தாம் திருவமுது செய்யுமுன்பாக, ஒரு பிடி அன்னம் என் கையில் நைவேத்தியமாகக் கொடுத்தார். நான் அதை வாங்கியுண்டேன். அப்பொழுது சாமியார் போஜனம் முடித்த பிறகு என்னுடன் மேல் மெத்தைக்கு வந்தார். 'கண்ணை மூடிக்கொள்' என்றார். கண்ணை மூடிக்கொண்டேன். நெற்றியில் விபூதியிட்டார். 'விழித்துப்பார்' என்றார். கண்ணை விழித்தேன் நேர்த்தியான தென்றல் காற்று வீசுகிறது. சூரியனுடைய ஒளி தேனைப்போல மாடமெங்கும் பாய்கின்றது. பலகணி வழியாக இரண்டு சிட்டுக் குருவிகள் வந்து கண்முன்னே பறந்து விளையாடுகின்றனெ. குள்ளச்சாமியார் சிரிக்கிறார். கடைக்கண்ணால் தளத்தைக் காட்டினார். கீழே குனிந்து பார்த்தேன். ஒரு சிறிய ஓலைத்துண்டு கிடந்தது. அதை நான் எடுக்கப் போனேன். அதற்குள்ளே அந்தக் குள்ளச்சாமி சிரித்துக் கொண்டு வெளியே ஓரிப்போனார். அவரைத் திரும்பவும் கூப்பிட்டால் பயனில்லை என்பது எனக்குத் தெரியும். அவர் இஷ்டமானபோது வருவார்; இஷ்டமான போது ஓடிப்போவார். சிறு குழந்தை போன்றவர். மனுஷ்ய விதிகளுக்குக் கட்டுப்பட்டவரில்லை. ஆகவே, நான் அவரைக் கூப்பிடாமலே கீழே கிடந்த ஓலையை எடுத்து வாசித்துப் பார்த்தேன்.

1. எப்போதும் வானத்திலே சுற்றும் பருந்துபோல் போக விஷ்யங்களினால் கட்டுப்படாமல், பரமாத்மாவின் ஞானக் கதிரை விழித்து நோக்குதலே விடுதலை. அதுதான் சிதம்பரம். மகனே! சிதம்பரத்துக்குப் போ!
2. சிதம்பரத்தில் நடராஜருடன் சிவகாம சக்தி பக்தருக்கு வரதானம் கொடுக்கிறார். போய் வரம் வாங்கு.
3. சிதம்பரமே ஸ்ரீரங்கம்; அதுவே பழனிமலை. எல்லாப் புண்ணிய க்ஷேத்திரங்களும் ஜீவன் முக்திச் சின்னங்கள் என்று தெரிந்துகொள். உனக்கு க்ஷேமமும் நீண்ட வயதும் ஜீவன் முக்தியும் விளைக என்று எழுதியிருந்தது. இந்த வசனங்கள் நமது புராதன வேத தர்மத்திற்கு ஒத்திருக்கிற படியால் அவற்றைச் சுதேசமித்திரன் பத்திரிகை மூலமாக வெளியிடலானேன்.

குறிப்பு:- "சிதம்பரம் போகாமல் இருப்பேனோ? இந்த ஜன்மத்தை வீணாகக் கழிப்பேனோ?" என்று நந்தன் சரித்திரத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் பாடியிருப்பதற்கும் இதுவே பொருள் என்று உணர்க.

No comments: