பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, October 29, 2010

தேசபக்திப் பாடல்கள்


திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
தேசபக்திப் பாடல்கள்

(சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் சென்னையில் 1980ம் வருஷம் செப்டம்பர் மாதம் தொடங்கி 1982 செப்டம்பர் மாதம் வரையில் மயிலை இலக்கிய வட்டமும், பாரதிய வித்யா பவனத்தின் மயிலை கிளையும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த மகாகவி பற்றிய தொடர் சொற்பொழிவில் ஆற்றிய உரையிலிருந்து ஒரு சிறு பகுதியை உங்களுக்குக் கொடுக்கிறோம்.)


விடுதலை வேட்கையுடைய தேசபக்தன்

பாரதியாரின் பாடல்களிலுள்ள இலக்கிய நயங்களையோ, சொற்சுவையையோ, பொருட் செறிவையோ விளக்குவது மட்டும் எனது குறிக்கோள் அல்ல. அப்படிப் பேசினால் அது ஓர் இலக்கியப் பேச்சாகத்தான் இருக்கும். பாரதி, வெறும் இலக்கியப் புலவர் மட்டுமல்ல; அவர் விடுதலை வேட்கையுடைய தேசபக்தர். விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறைபுகுந்த தியாகி! நாடுகடத்தப்பட்ட நிலையிலே தமிழ் நாட்டுக்கு வெளியே பிரெஞ்ச் இந்தியப் பிரதேசமான பாண்டிச்சேரியில் பத்தாண்டுக் காலம் வனவாச வாழ்க்கையை நடத்தியவர். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றிலிருந்து பாரதியையோ, பாரதியிடமிருந்து விடுதலைப் போராட்ட வரலாற்றையோ பிரித்துப் பார்க்க முடியாது. விடுதலைப் போர் வேறு; பாரதியார் வேறு அல்ல. விடுதலைப் போரிலே அவர் இரண்டறக் கலந்தவர். அதனால், விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு பாரதியாரின் தேசிய கீதங்களை யான் விமர்சிக்கிறேன்.

டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் (இவர் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த அறிஞர்) ஒரு சமயம் சொன்னார், "பாரதியார் தோன்றித் தேசிய கீதங்களைப் பாடியில்லையானால் நாடு விடுதலை பெறுவது இன்னும் பல ஆண்டுகளுக்குத் தள்ளிப் போயிருக்கும்" என்று. அது முற்றிலும் உண்மை. ஆகவே, பாரதியாரின் தேசிய கீதங்களிலே எங்கெல்லாம் விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கின்றன என்பதை யான் எடுத்துக் காட்டிப் பேசுகிறேன்.

எனது முதற் சொற்பொழிவை என்னுடைய தொடர் சொற்பொழிவு என்னும் காப்பியத்திற்கான பதிகம் என்று முன்னர் கூறினேன். ஒரு காப்பியத்திலே பதிகத்தை அடுத்து வருவது 'பாயிரம்' ஆகத்தான் இருக்கும். இன்றைய எனது பேச்சும் பாயிரம் போன்றதுதான். பாயிரம் என்பது, காப்பியப் புலவன் நிகழ்த்தும் கடவுள் வழிபாட்டுடன் கலந்ததாகும். நான் எந்தக் கவிஞரைப் பற்றிப் பேசி வருகின்றேனோ, அந்தக் கவிஞர் ஒரு புதிய தெய்வத்தைப் பாடினார். அந்தத் தெய்வத்தின் பெயர் 'பாரத மாதா'.

தேசபக்த மதத்தாரின் தெய்வம்

ஒவ்வொரு மதத்தாரும் தனித்தனியாக ஒவ்வொரு தெய்வத்தை வாழ்த்தி வழிபடுவதைப் பார்க்கிறோம். இந்துக்களிலே சைவர்கள் சிவனையும், வைணவர்கள் திருமாலையும், இந்துக்களல்லாத இஸ்லாமியர் அல்லாவையும், கிறிஸ்தவர்கள் கர்த்தரையும் வழிபட்டு வருவதைப் பார்க்கிறோம்.

எல்லா சுபங்களுக்கும் ஆதாரமான சுபகிருது ஆண்டில் தோன்றிய தேசபக்த மதத்தாருக்கும் ஒரு கடவுள் வேண்டுந்தானே! அந்தக் கடவுள்தான் பாரதமாதா. விடுதலைப் போர்க்களத்திலே தேசபக்த மதத்தாரின் தெய்வமாக பாரதமாதாவைத் தேர்ந்தெடுத்தது யார் என்று அறுதியிட்டுச் சொல்வதற்கில்லை. பாரதமாதா வழிபாடு முதலில் வடக்கில் தோன்றி, பின்னர் தென்னவர் அதனை ஏற்றிருந்தாலும் இருக்கலாம். ஆனால், நான் அறிந்தவரை தமிழ் மொழியிலே பாரதமாதா மீது பதிகம் பாடிய முதற் கவிஞர் பாரதியார்தான். இதனை நான் உறுதியாகச் சொல்லுவேன்.

சிவனும் விஷ்ணுவும் அல்லாவும் கர்த்தரும் பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு முக்தி கொடுக்கும் தெய்வங்கள் எனலாம். ஆனால் தேசபக்த மதத்தார் விடுதலைப் போர்க்களத்தில் வழிபட்ட புதிய தெய்வமான பாரதமாதா முக்தி கொடுக்கும் தெய்வம் அல்ல. அப்படிப் பாரதி சொல்லவும் இல்லை. ஆனால், பக்குவப்பட்ட பாரத மக்களுக்கு அரசியல் விடுதலை தரும் தெய்வமாகும். அப்படித்தான் பாரத மாதாவை அறிமுகப்படுத்தினார் பாரதியார். ஆன்ம முக்தி வேறு; அரசியல் விடுதலை வேறுதானே!

பாரதியார் வடபுலத்துத் தேசபக்தர்களிடமிருந்து வந்தேமாதரம் என்னும் மந்திரச் சொல்லை ஏற்றுக் கொண்டார். விடுதலைப் போராட்ட காலத்திலே அந்த மகா மந்திரத்திற்குத்தான் என்ன மதிப்பு. அதிலே யான் பெற்ற அனுபவத்தைக் கொண்டு அந்த மந்திரத்தை எனது நாவால் யான் இன்று உச்சரித்தாலும் என் உடல் சிலிர்க்கிறது; மயிர்க் கூச்செரிகிறது. என் உள்ளத்திலிருந்து ஏதோ ஒரு தெய்விக உணர்ச்சி எழுவதை நான் உணர்கிறேன். 'வந்தே மாதரம்' என்று இன்று நான் சொல்லக் கேட்டு, உங்களுக்கு, எனக்கு ஏற்படும் உணர்ச்சி உண்டாகிறதோ இல்லையோ - உண்டாகாதுதான். வந்தேமாதரம் என்னும் மந்திரத்தைப் பற்றிய அனுபவம் எல்லாம் பொய்யாய், கனவாய், பழங்கதையாப் போய்விட்டனவே.

மந்திரச்சொல் 'வந்தேமாதரம்'

நண்பர்களே! நான் உறுதியாகச் சொல்லுகிறேன், நம்புங்கள்! உண்மை உணர்வோடு சொல்கிறேன், நம்புங்கள்! சத்தியம் செய்து சொல்லுகிறேன், நம்புங்கள்! சைவர்களுக்கு 'ஓம் நமசிவாய' என்னும் மந்திரம் எப்படியோ, வைணவர்களுக்கு 'ஓம் நமோ நாராயணாய' எனும் மந்திரம் எப்படியோ அப்படிப்பட்டதுதான் விடுதலைப் போராட்ட காலத்திலே தேசபக்த மதத்தாருக்கு 'வந்தேமாதரம்' என்னும் சொல்! இந்த மந்திரத்தை எத்தனையோ பாடல்களுக்குத் தலைப்பாக்கி விட்டார் பாரதி. அவர் பாடிய முதல் பாடலின் தலைப்பே 'வந்தே மாதரம்' தான். அவர் அளவுக்கு வந்தேமாதரம் என்னும் மந்திரச் சொல்லை வைத்துத் தேசிய கீதங்களைப் புனைந்த கவிஞர் வேங்கடத்திற்கு வடகே பிறந்திருப்பாரா என்பது ஐயப்பாடுதான்.

நண்பர்களே! விடுதலைப் போராட்டக் காலத்திலே தேசபக்தர்கள் இருவர் சந்தித்தால் பரஸ்பரம் 'வந்தேமாதரம்' என்று சொல்லிக்கொள்வது வழக்கமாக இருந்தது. இன்று படித்த இருவர் சந்தித்தால் 'குட்மார்னிங்' என்று சொல்லிக் கொள்ளுகிறார்களே, அதுபோல! ஒரு தேசபக்தனுக்குத் திருமணம் நடந்தால், தாலி அணிவிக்கும் சடங்கின் போது திருமண அரங்கிலே 'வந்தேமாதரம்' என்னும் மந்திரப் பேரொலி பலமுறை எழும்.

ஒரு தேசபக்தன் இன்னொரு தேசபக்தனுக்குக் கடிதம் எழுதினால், அந்தக் கடிதத்தின் தலைப்பில் இந்துக்களின் வழக்கப்படிப் பிள்ளையார் சுழி போடுமிடத்திலே 'வந்தேமாதரம்' பொறிக்கப்படும். சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டியிலுள்ள நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றை யான் பார்த்திருக்கிறேன். அவற்றுள் சிலவற்றில் பிள்ளையார் சுழிக்குப் பதில் 'வந்தேமாதரம்' பொறிக்கப்பட்டுள்ளது. வேறு சில கடிதங்களிலே பிள்ைளையார் சுழியையும், 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தையுமடுத்து 'வந்தேமாதரம்' என்னும் தேசபக்த மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

வலி தெரியாது

நண்பர்களே! இன்று நினைத்தாலும் எனது நெஞ்சத்தை உருக்குகின்ற ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அந்நாளிலே தேசபக்தர்கள் சட்டத்தை மீறி ஊர்வலம் செல்வார்கள். ஐந்து பேருக்கு மேல் கூடிச் சென்றால் அது சட்டவிரோத ஊர்வலம். ஊர்வலத்தினர், பாரதியாரின் 'அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!' என்ற வழிநடைப் பாட்டை ஆவேசத்துடன் பாடிக்கொண்டு செல்வார்கள். 'பாரத சமுதாயம் வாழ்கவே!' என்ற பாடலையும் பாடிச் செல்வார்கள். 'ஜெய பேரிகை கொட்டடா!' என்றும் இசைத்துச் செல்வதுண்டு.

இப்படிப் பாடிச் செல்லும் ஊர்வலத்தின் இருமருங்கிலும் கைகளில் குண்டாந்தடிகளுடன் போலீஸ் வீரர்கள் தங்கள் கால்களில் அணிந்துள்ள பூட்சுகள் பயங்கர ஒலி எழுப்ப நடைபோட்டுக்கொண்டு வருவார்கள். தடை செய்யப்பட்டுள்ள பிரதேசத்தை ஊர்வலம் தொடுகிற போது திடீரென போலீஸ் வீரர்கள் தொண்டர்கள் மீது பாய்ந்து குண்டாந்தடிகளால் அடித்து நொறுக்குவார்கள். அவர்களிடம் அடிபட்ட அனுபவம் அடியேனுக்கும் உண்டு. போலீசார் தங்கள் கைகளிலுள்ள தடிகளை உயர்த்தியதுமே தோண்டர்கள், 'வந்தேமாதரம்', 'வந்தேமாதரம்' என்று மிகுந்த உணர்ச்சியோடு தங்களை மறந்து ஒலி எழுப்புவார்கள். அப்போது போலீசாரின் குண்டாந்தடி அந்தத் தேசபக்த வீரர்களின் உடம்பில் உருண்டு உருண்டு விளையாடும் என்றாலும் அவர்களுக்கு வலி தெரியாது. ஆம்; 'வந்தேமாதரம்' என்று கோஷித்துக் கொண்டிருக்கும் வரை வலி தெரியவே தெரியாது.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு முன்பு அறுக்க வேண்டிய இடத்திலே 'கொக்கெயின்' இஞ்செக்ஷன் போடுகிறார்கள். ஆம்; அறுக்கும் போது வலி தெரியாமலிருக்க. அதுபோல போலீசார் அடிக்கத் தொடங்கியதுமே தேசபக்தர்கள் தங்களுக்குத் தாங்களே 'வந்தேமாதரம்' என்ற கொக்கெயின் இஞ்செக்ஷனைப் போட்டுக் கொள்வார்கள். டயாபிடிக் பேஷண்டுகள் செல்ப் இஞ்செக்ஷன் போட்டுக் கொள்வது போல!

பாரதியார் மக்கள் மத்தியிலே சங்கீத வித்வான்கள் பயன்படுத்தி வரும் சந்தங்களில் மட்டுமின்றி, பாமர மக்கள் பயன்படுத்தி வரும் சந்தங்களிலும் பாக்கள் புனைந்தார். அது அவருடைய கொள்கையாகவும் இருந்தது.

தாலாட்டு பாடாததேன்?

பாரதிக்கு முன் தோன்றிய புலவர்களும் அவர் காலத்திலேயே வாழ்ந்த கவிஞர்களும் உறங்க வைக்கத் தாலாட்டுப் பாடலும், விழிக்க வைக்கப் பள்ளியெழுச்சிப் பாடலும் பாடினர்.

வைணவ ஆழ்வாராதியரிலே குலசேகரப் பெருமாள் திருமாலைக் குழந்தையாக்கி, அக் குழந்தையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடினார். பாரதி காலத்தவரான கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ஆகியோரும் தாலாட்டுப் பாடல்கள் பாடியுள்ளனர்.

கவிஞர் குலம் வழிவழி கடைப்பிடித்து வந்த மரபைப் பாரதியார் புறக்கணித்து விட்டார். அந்த மகாகவி எது எதைப்பற்றியெல்லாம் பாடினார் என்பதை விடவும் எது எதைப்பற்றியெல்லாம் பாடாமல் விட்டார் என்பது சுவையான செய்தியாகும். பாரதியார் தாலாட்டுப் பாடவில்லை. மாறாக உறங்குவோரை எழுப்புகின்ற பள்ளியெழுச்சி பாடியுள்ளார். மாணிக்க வாசகர் இறைவனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடினார். பாரதியார் பாரத தேசத்திற்கு திருப்பள்ளியெழுச்சி பாடினார்.

பாரதியார் பாடிய திருப்பள்ளியெழுச்சி

"மகாகவி பாரதியார் தோன்றிய காலத்தில் பாரத சமுதாயம் முழுவதும் நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. தூங்கிக் கிடந்த சமுதாயத்தைத் துயிலெழுப்பத் தோன்றியவராதலால், அவருக்குத் தாலாட்டுச் சந்தம் தேவைப்படவில்லை. அதனால், அவர் தாலாட்டுப் பாடவில்லை. பாரதியாரின் உள்ளத்தை அறிந்த பாவேந்தர் பாரதிதாசன் 'நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா' என்று வருணிக்கிறார்.

துயில் பலவகைப்பட்டது. அவற்றுள் ஒன்று, அறிதுயில் இன்னொன்று நீடுதுயில். அறிதுயில் என்பது ஆண்டவனுக்குரியது. அது, தூங்காமல் தூங்குவதாம். அப்படித்தான் தூன்குகிறார் திருவரங்கத்திலே அரங்கநாதர்! தாயுமானவரும் 'தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்' என்கிறார்.

நீடுதுயில் என்பது, எழவேண்டிய நேரத்திலும் எழாமல் தூங்குவதாம். இது, அடிமைப்பட்ட சமுதாயத்தின் தூக்கம். இதனாற்றான் 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா' என்கிறார் பாரதிதாசன்.

பாரதி பாடிய பள்ளியெழுச்சியிலே யான் ஒரு புதுமையைக் காண்கிறேன். தேசம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் மக்கள் உறங்கிக் கிடப்பது இயற்கை. அது, அடிமைப்பட்டதன் விளைவு. ஆனால், விடுதலை பெற்றுவிட்ட பின்னரும் தேசம் விழித்தெழாமல் உறங்குவது விதியின் விளையாட்டாகும். மழை நெடு நாட்கள் பெய்து விட்டால், அது நின்ற பிறகும் நிலத்தில் ஈரம் உலர்வதற்கு நாளாகும். அதுபோல இருநூறு ஆண்டுகாலம் அன்னியரான ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த பாரத தேசம், வெள்ளையன் வெளியேறிவிட்ட பிறகும் விழித்தெழாமல் உறங்கி விடலாம் என்று பாரதியார் ஐயுற்றார். அதனால், சுதந்திர பாரதத்திற்குப் பள்ளியெழுச்சி பாடுகிறார்.

"பொழுது புலரந்தது; யாம்செய்த தவத்தால்
புன்மை இருட் கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற் கிங்குன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழிதுயில் கின்றனை இன்னுமெந் தாயே!"

இந்தப் பாடல் சுதந்திர பாரதத்தைப் பற்றியதுதான் என்பதற்கு,

"பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்;
பார்மிசை நின்னொளி காணுதற்கு அலந்தோம்!"

என்னும் வரிகள் சான்றாகும்.

தேசம் என்பதற்கு முப்பது கோடி மக்கள் என்றே இங்கு கவிஞர் பொருள் கொண்டார். நாடு பெறுகின்ற சுதந்திரம் சமுதாயத்திலுள்ள மேட்டுக்குடி மக்களின் கைகளுக்குப் போய்விடுமோ? என்று அந்த மகாகவி ஐயுற்றார். அப்படிப் போனாலும், அந்த ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடாமல், சமுதாயத்தின் அடித்தளத்து மக்கள் நீடுதுயில் கொண்டு விடுவார்களோ என்றும் ஐயுற்றார். அதனாற்றான், நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள மக்கள் விழிப்போடிருக்க வேண்டும்; அப்போதுதான் பெற்ற விடுதலை பறையருக்கும், தீயருக்கும், புலையருக்கும் போய்ச்சேரும் என்ற உண்மையை உணர்த்த சுதந்திர பாரதத்திற்கே பள்ளியெழுச்சி பாடினான்.

தேசிய பஜனை

விடுதலைப் பாராட்ட காலத்திலே மார்கழித் திங்களில் விடியற் காலையில் எழுந்து பாரதியாரின் இந்த பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சிப் பாடலைப் பாடிக்கொண்டு வீதிவலம் செல்வோம். சுப்பிரமணிய சிவா இதற்கென்று ஒரு பஜனை கோஷ்டியையே படைத்தார். மார்கழியிலே வைணவர்கள் ஆண்டாள் புனைந்த திருப்பாவையையும், சைவர்கள் மணிவாசகர் இயற்றிய திருவெம்பாவையையும் திருப்பள்ளியெழுச்சியையும் பாடியும் விடியற் காலை நேரத்திலே வீதிவலம் செல்கிறார்கள் அல்லவா! அதுபோல, பாரதியார் புனைந்த பாரதமாதா திருப்பள்ளியெழுச்சியைப் பாடி, அந்நாளிலே தேச பக்தர்கள் விடியற்காலை நேரத்தில் வீதிவலம் சென்றனர். இது தமிழ் நாட்டிலுள்ள பிரதான நகரந்தோறும் நடந்ததெனலாம்.

பாரதமாதா மீது பதிகம்

பாரதமாதா மீது பாரதியார் பதிகம் பாடினார். ஒன்றா, இரண்டா, பத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடினார்.

'வந்தேமாதரம்' என்னுந் தலைப்புத் தந்து இரண்டு பாடல்களைப் பாடினார். 'நாட்டு வணக்கம்', 'எங்கள் நாடு', 'பாரத நாடு', 'பாரத தேசம்', 'ஜெய பாரத' என்னுந் தலைப்புக்களிலே பாரதியார் பாடி வைத்துப் போயுள்ள பாடல்களெல்லாம் பாரத மாதா பற்றியவையாகும். இந்தப் பாடல்களெல்லாம் அவரே பாடியுள்ள தெய்வபக்திப் பாடல்களை விஞ்சி நிற்கின்றன. ஆம்; 'பாரதியாரிடம் விஞ்சி நிற்பது தேசபக்தியா? தெய்வ பக்தியா? என்று வினா எழுந்தால், யான் 'தேசபக்தி' என்றே விடையளிப்பேன்.

'எங்கள் தாய்', 'வெறி கொண்ட தாய்', 'பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி', 'பாரதமாதா நவரத்தின மாலை', 'பாரத தேவியின் திருத்தசாங்கம்', 'மாதாவின் துவஜம்' என்னுந் தலைப்புக்கள் தந்து அவர் பாடியுள்ளவை யெல்லாமும் பாரத மாதா வழிபாடேயாகும்.

சுதந்திரம் என்னும் உரிமை வாழ்வைக்கூடத் தேவி வடிவத்தில் கண்டு, 'சுதந்திர தேவியின் துதி' என்னும் தலைப்பில் ஒரு பாடலைப் பாடி வைத்துள்ளார்.

சொர்க்கமா, சொந்த தேசமா?

பாரத தேவியையே யன்றி அந்தத் தேவியின் பக்தனையும் பாட விரும்பிப் 'பாரத தேவியின் அடிமை' என்ற தலைப்பிலும் ஒரு கவிதையைத் தந்துள்ளார்.

அடிமைப்பட்டுள்ள ஒரு நாட்டின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தேசபக்தனுக்குச் சுதந்திர வாழ்வை விடவும் சொர்க்க வாழ்வு பெரிதல்லதானே! அவரே சொல்கிறார், "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே" என்று. ஆம்; சொர்க்கத்தைவிடச் சிறந்தது சொந்த நாடு என்பது அவரது சித்தாந்தம். இதிலே பாரதியார் விவேகானந்தரையே பின்பற்றினார் எனலாம். விவேகானந்தர் சொல்லுகிறார்:--

"இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு இந்த மகத்தான தாய்நாட்டைப் பற்றியே நாம் நினைக்க வேண்டும். அது ஒன்றே நமது தேசிய வாழ்க்கையின் சிறப்பான குறிக்கோளாகும். இக்காலத்தில் மற்றெல்லாத் தெய்வங்களும் நம் மனத்தைவிட்டு அகலட்டும். நமது தேசம், நமது மக்கள் இவைகள் தாம் உயிருள்ள தெய்வங்கள். இத் தெய்வத்தின் கைகளும் கால்களும் சமூகம் முழுவதும் நாடு முழுவதும் எங்கும் பரவியிருக்கின்றன. மற்ற தெய்வங்கள் அனைத்தும் இப்பொழுது உறங்கிக் கொண்டிருக்கின்றன. நம்மைச் சுற்றிலும் பரவி, எங்கும் திகழ்ந்து கொண்டிருக்கும் இவ்விராட சக்தியை வழிபடுவதை விடுத்து, நாம் வேறு தெய்வங்களை நாடிச் செல்ல வேண்டுமா? இந்தத் தெய்வத்தை நாம் முதலில் வழிபடுவோமாக!"

வந்தேமாதரம் என்போம்!

பாரதியார் விவேகானந்தரின் உபதேசப்படிதான் பாரத தேசத்தைத் தெய்வமாக்கி, அந்தத் தெய்வத்திற்குப் 'பாரத மாதா' எனப் பெயர் தந்து, அந்த மாதாவை வழிபடப் பாடல்களைப் புனைந்தளித்தார்.

பாரதியரின் பாடல் தொகுப்பிலுள்ள முதல் பாடலிலே 'வந்தேமாதரம் என்போம்' என்று இருக்கிறது. இதனை 'வந்தேமாதரம் என்று சொல்லுவோம்' என்று கொண்டால், இந்த வாசகம் ஒரு செய்தியை நமக்குத் தருகிறது. அந்த நாளிலே வந்தேமாதரம் என்று சொல்வதை அரசு வெறுத்திருக்கிறது; அதிகார வர்க்கம் தடை செய்திருக்கிறது. அதனால், 'வந்தேமாதரம்' என்று குரல் கொடுக்க மக்கள் அஞ்சி நடுங்கினர். அவர்களைக் கூட்டி வைத்து, "வந்தே மாதரம்" என்று சொல்லுங்கள் எனப் பாரதி கூறியிருக்கிறார். பாரதியார் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் தேசபக்தர்கள் 'வந்தே மாதரம்' என்று கோஷிக்கும்படி அதாவது அரசுக்கு அஞ்சாது, அதிகார வர்க்கத்துக்கு நடுங்காது, பாரதத் தாயை வாழ்த்தி வணங்குமாறு வற்புறுத்தி யிருக்கின்றார்.

தமிழ்நாட்டிலே, தமிழிலே, பாரதி, 'வந்தே மாதரம் என்போம்' என்று சொன்னது போல, வடபுலத்திலே, 'போலோ வந்தே மாதரம்' என்று பொதுமக்களைக் கூட்டி தேசபக்தர்கள் கோஷித்திருக்கின்றனர். 'போலோ' என்றால், 'சொல்லு' என்று பொருள்.

வ.உ.சியே முன்னோடி!

பாரதியாரின் பாடல்கள் கிடைப்பதற்கு முன்பு தமிழ் நாட்டிலும் தேசபக்தர்கள் 'போலோ, வந்தே மாதரம்' என்றுதான் கோஷித்துக் கொண்டிருந் தார்கள். ஆம்; அதன் பொருளைத் தெரிந்து கொள்ளாமலே! அவர்களைப் பார்த்து

"வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"

என்று பாடினார் பாரதியார்.

வந்தே மாதரம் என்றால் தமிழிலே 'தாயை வணங்குகிறோம்' என்று பொருள். தேசாவேசத்திலே - தேசபக்தி வெறியிலே தமிழர் மீது பிறமொழி ஆதிக்கம் ஏற்பட்டு விடுமோ என்று பாரதிக்கு அச்சம்; அதனால், 'போலோ வந்தே மாதரம்' என்று வடபுலத்தார் சொல்வதைத் தமிழரும் பொருளறியாமலே வடவரைப் பின்பற்றி உளறுவதைத் தவிர்க்க, தூய தமிழிலே 'எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்' என்று மொழிபெயர்த்துக் கொடுத்தார்.

தமிழும் தேசியமும்

பாரதியார் தமிழைக் கொண்டு தேசபக்தியை வளர்த்தார்; தேசபக்தியைக் கொண்டு தமிழை வளர்த்தார். அவர், தமிழ்ப் பற்று காரணமாக தேசபக்திக்குப் பகையாகி விடவில்லை. அதுபோல தேசப்பற்றுக் காரணமாகத் தமிழ் பக்தியை வெறுத்து விடவில்லை. தமிழ் மொழிப் பற்றையும், பாரதநாட்டுப் பற்றையும் பிணைத்த முதல் கவிஞர் பாரதியார்தான். இன்றுள்ள தேசபக்தர்களுக்கு - என் சகோதர தேசிய வாதிகளுக்குச் சொல்கிறேன், தேசியம் இல்லாமல் தமிழ் வாழ முடியும்; வளரவும் முடியும். ஆனால், தமிழ் மண்ணிலே தமிழ் இல்லாமல் தேசியம் வாழாது; வாழ்ந்தாலும் வளராது! இது நான் தரும் சாபமல்ல; சரித்திரம் போதிக்கும் பாடம்!

சிதம்பரம் பிள்ளையை அவர் கப்பல் கம்பெனி நடத்திய காலத்திலேயே, 'வந்தே மாதரம் பிள்ளை' என்றுதான் மக்கள் அழைத்தார்கள். பாரதியார் 'வந்தே மாதரம் என்போம்' என்ற பாடலைப் புனைவதற்கு முன்பே சிதம்பரனார் நெல்லை மாவட்டத்திலே ஊருக்கு ஊர் - தூத்துக்குடி நகரிலே தெருவுக்குத் தெரு - கூட்டம் போட்டு, மக்களைக் கூட்டி வைத்து 'வந்தே மாதரம்' என்று கோஷிக்குமாறு தூண்டினார்.

தேசமே தேவி

பாரதியாருக்கு பாரத தேசம் வேறு, பாரத தேவி வேறு அல்ல; தேசமே தேவி; தேவியே தேசம்! சுவாமி விவேகானந்தர் கூறியது போல பழைய தெய்வங்களெல்லாம் பாரத தேசத்திற்கு விடுதலை தேடச் சக்தியற்று விட்டன என்று பாரதியார் கருதினார் போலும்! அதனால், பாரத மாதா என்ற புதிய தெய்வத்தைப் படைத்தார் - பாடினார்!

பாரதி தேசபக்த மதத்தாருக்கு ஒரு புதியதெய்வத்தைத் தந்து, அதனை வழிபட்டு உய்யுமாறு வற்புறுத்தினாரென்றால்; அறிவுக்குப் புறம்பாக அல்ல; அறிவுக்குப் பொருந்தக்கூடிய வகையில்தான்! அவன் தந்த பாரதமாதா சூன்யத்திலிருந்து பிறந்த கற்பனைத் தெய்வமல்ல; நாம் கண்ணெதிரே காண்கிற பாரத தேசந்தான்! அந்தத் தெய்வந்தான் அடிமைப்பட்ட சமுதாயத்திற்கு விடுதலையைத் தந்தது! சாதி, மத, மொழி, குல, வேறுபாடுகளால் பிளவுபட்டுக் கிடந்த பாரத சமுதாயத்தை ஒரே வடிவத்தில் - அதையும் அன்னை வடிவத்தில் காணச் செய்து, அந்த விராட சொரூபத்தை 'வந்தே மாதரம்' என்னும் மந்திரத்தால் பாரதி வழிபட வைத்தார்.

தேசியம் அழியாது

பாரதியார் வாழ்ந்த காலத்தில் பலர் அடங்கிய கூட்டத்திலே 'வந்தேமாதரம்' என்று உணர்ச்சியோடு கோஷிக்கத் துணிவு தேவைப்பட்டது. சிறை செல்லத் துணிந்தவந்தான் அப்படிச் சொல்ல முடியும் என்ற நிலைமையும் இருந்தது. அந்தச் சூழ்நிலையில்தான் மக்களைப் பார்த்து 'வந்தேமாதரம் என்போம்' என்று பாடுகின்றார் பாரதியார்.

'கூட்டங்கூடி வந்தேமாதரம் என்று கோஷித்தாய்; எமைத் தூஷித்தாய்' என்று கலெக்டர் விஞ்ச் துரை சினங்கொண்டு கூறியபோது, 'வந்தேமாதரம் என்று உயிர்போம் வரை வாழ்த்துவோம்; சிரம் தாழ்த்துவோம்' என்று வ.உ.சி. பதிலளித்தார்.

பாரதியார் பாடியும் கப்பலோட்டிய தமிழர் பாடுபட்டும் வளர்த்த தேசியம் - தேசபக்தி - தமிழ் மண்ணில் அழிந்து விடுமோ என்று அஞ்சுகிறேன். அழியாது - அழிய விட மாட்டார்கள் தமிழர்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

"பாரதியார் பாடியுள்ள தேசபக்திப் பாடல்களிலே தலை சிறந்தது எது?" என்று என்னை ஒருவர் கேட்டால், 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி' என்று தொடங்குகின்றதே, அந்தப் பாடல்தான்" என்று தயக்கமின்றிப் பதிலளிப்பேன்.

"எந்தையும் தாயும் ....."

பாரத தேசத்தைத் தேவி வடிவத்தில் கற்பனை செய்து பாரதியார் புனைந்துள்ள பாடல்களிலே ' எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது மிந்நாடே' என்று தொடங்கும் பாடலே தலை சிறந்ததாகும். இதற்கு 'நாட்டு வணக்கம்' என்று தலைப்புத் தந்திருக்கிறார். மூன்று செய்யுட்களைக் கொண்டது இப்பாடல்.

இதிலே பாரதியார் ஊனக் கண்களை மூடிக்கொண்டு ஞானக் கண்களால் பாரத நாட்டைப் பார்க்கிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, இந்நாட்டில் வாழ்ந்த மக்களை யெல்லாம் காண்கின்றார். அவர்களுடைய அரும் பெரும் சாதனைகளை யெல்லாம் கண்டு நமக்கும் காட்டுகின்றார். இதோ, ஒரு செய்யுளைப் பார்ப்போம்:

"எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி
யிருந்ததும் இந்நாடே - அதன்
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து
முடிந்தது மிந்நாடே - அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே - இதை
வந்தனை கூறி மனதி லிறுத்தி யென்
வாயுற வாழ்த்தேனோ - இதை,
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
என்று வணங்கேனோ!"

"என் தந்தையும் தாயும் வாழ்வாங்கு வாழ்ந்த வீடு - தங்கள் காதற் பருவத்திலே அவர்கள் கலந்து மகிழ்ந்த பள்ளியறை - ஓய்ந்த நேரங்களிலே ஓடியாடிய பூங்கா இந்தப் பாரதப் பெருநாடே!" என்கிறார் பாரதியார்.

"என் தாய் தந்தையர் மட்டுமா? அவர்களுடைய முந்தையரும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வழிவழி தோன்றி வாழ்ந்து மறைந்ததும் இந்தப் பாரதத் திருநாட்டிலேதான்" என்றும் அந்த மகாகவி பெருமிதத்தோடு பேசுகின்றார்.

கற்பனையில் கண்ட பாரதம்

"எந்தையரும் முந்தையரும் வெந்ததைத் தின்று வாழ்ந்து, சாவு வந்தபோது செத்தொழிந்த மானுடப் பூச்சிகளா? இல்லை, இல்லை, இல்லை; அவர்களுடைய சிந்தையில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் வளர்ந்தன. ஆம்; மெய்ப்பொருளைப் பற்றிய உண்மைகளை யெலாம் கண்டார்கள். பிரபஞ்சத்தின் தோற்றம், வளர்ச்சி, மறைவு ஆகியவற்றைப் பற்றிய அற்புதங்களை யெல்லாம் ஆய்ந்து அறிந்தார்கள். அறிந்த வழி வேதாந்த சித்தாந்த சாத்திரங்களைத் தந்தார்கள். இராமாயண, பாரத, சிலப்பதிகாரக் காப்பியங்களைப் படைத்தார்கள். மனு தருமம், திருக்குறள் போன்ற நீதி நூல்கள் யாத்தளித்தார்கள். இதனால், மனித சமுதாயத்தின் முன்பு பாரத சாதி தலை நிமிர்ந்து நிற்கச் செய்தார்கள்" என்கிறார் பாரதியார்.

"அசோகனும் கரிகாலனும் இராசராசனும் தோன்றி சாம்ராஜ்யங்களைக் கண்ட சரித்திரமெல்லாம் நம்முடைய முந்தையோரின் சாதனைகள்தானே!" என்றும் பாரதியார் தமது நெஞ்சை நிமிர்த்திக் கூறுகின்றார்.

"இந்தப் பெருமைகளை யெல்லாம் மனதிலிறுத்தி, இவற்றைச் சாதித்த எந்தையோருக்கும் முந்தையோருக்கும் வந்தனம் செலுத்தி, அவர்களையெலாம் தந்த பாரதப் பெருநாடு வாழ்க என்று வாயார வாழ்த்துவோம்!" என்று சொல்லிவிட்டு, 'வந்தேமாதரம்', 'வந்தேமாதரம்' என்று இதய எழுச்சியோடு கோஷித்து, தனக்குக் காட்சியளித்த பாரதத்தாயை வணங்குகின்றார்.

இது, முதலாவது செய்யுள் தரும் புதை பொருளாகும். இனி, இரண்டாவது செய்யுளையும் பார்ப்போம்:

"இன்னுயிர் தந்தெமை யீன்று வளர்த்தருள்
ஈந்தது மிந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்தது மிந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினில் ஆடிக்
களித்தது மிந்நாடே! - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளையாடி, இல்
போந்தது மிந்நாடே - இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
என்று வணங்கேனோ!"

"கல்தோன்றி மண் தோன்றிய காலத்தையடுத்து ஓரறிவுடைய தாவரத்திலிருந்து ஆறறிவுடைய மக்கள் வரை அடுக்கடுக்காக உயிர்க்குலங்கள் முதன் முதலில் தோன்றியது இந்தப் பாரதத்தில்தான்! ஆம்! ஆதி மனிதன் தோன்றியது இந்தப் புனித பூமியில்தான்! அந்த உயிர்க் குலத்திலே எங்கள் அன்னையர் தோன்றி, அவர்கள் மழலை பேசி மகிழ்ந்ததும் இந்தப் புனித பூமியில்தான்! எங்கள் அன்னையர் தங்கள் மழலைப் பருவம் தீர்ந்து, கன்னிப் பருவத்தை எய்தியபோது, எழுநிலை மாடங்கள் கொண்ட மாளிகைகளிலே ஏழாவதான வேயா மாடத்தில் அமர்ந்து, தங்கள் காதலருடன் உரையாடி மகிழ்ந்ததும் இந்தப் பாரத நாட்டில்தான்!"

"காதல் வாழ்க்கையிலே இரவைக் கழித்தபின், விடியற் காலையிலே எழுந்து கங்கையிலே - காவிரியிலே - வைகையிலே நீராடித் தங்கள் இல்லம் திரும்பியதும் இந்த நாட்டிலேதான்!"

இப்படி எங்கள் அன்னையர் குலம் வாழ்வாங்கு வாழ்ந்து அருமை பெருமைகளை யெல்லாம் தனது ஆதிவரலாறாகக் கொண்ட இப் புனித நாட்டை - எந்தன் தாய்நாட்டை - தந்தையர் பூமியை, 'வந்தே மாதரம்', 'வந்தே மாதரம்' என்று வாயாரச் சொல்லி தலையார வணங்கேனோ!"

இது, இரண்டாவது செய்யுளில் புதைந்துள்ள பொருளாகும். இறுதியாகவுள்ள மூன்றாவது செய்யுளைப் பார்ப்போம்.

"மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்தது மிந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே - மக்கள்
துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்தது மிந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்தது மிந்நாடே - இதை
'வந்தே மாதரம், 'வந்தே மாதரம்'
என்று வணங்கேனோ!"

"எங்கள் அன்னையர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தில் மழலை பேசிப் பின், கன்னிப் பருவத்தில் நதிகளிலே நீர்விளையாடி, அதற்குப்பின் மங்கைப் பருவத்தை எய்தியபோது காதலொருவனைக் கைப்பிடித்து இல்லறம் நடத்தி, சரித்திரத்திற்கு முற்பட்ட வேதகாலத்திலே முனிவர்களையும், பின்னர் மகாவீரர், புத்தர் போன்ற ஞானியரையும், சரித்திர காலத்திலே ஞானசம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், துளசிதாசர், ஆண்டாள், மீராபாய் போன்ற தங்க மதலைகளை ஈன்று அமுதூட்டி வளர்த்ததும் இந்த நாட்டில்தான்!"

"இப்படி, வழிவழி தோன்றி வந்த ஆன்றோரும் சான்றொரும் சமயக் குரவர்களும் மாய்ந்து மாய்ந்து மறைய மறைய அவர்களுடைய புனித அஸ்திகளெல்லாம் கலந்தது இந்தப் பாரத நாட்டில்தான்!" என்று கூறி, "நாட்டு வணக்கப்" பாடலை பாரதியார் முடிக்கிறார்.

தமிழா, பார்த்து நட!

இந்தப் பாடலைத் தேசபக்தியோடு பாடிப் பார்த்தால் பாரதியார் கண்ட பழம் பெரும் பாரதத்தை நம்மில் ஒவ்வொருவரும் பார்க்க முடியும். ஒவ்வொரு நூற்றாண்டிலும் அந்தந்த நூற்றாண்டிலே ஒவ்வொரு தலைமுறையிலும் தோன்றித் தோன்றி வாழ்ந்து அற்புதங்கள் செய்து மறந்த சான்றொர்களின் புனித அஸ்திகள் இந்த மண்ணிலே கலந்திருத்தலால், தமிழ் மகனே, பார்த்து நட! உன் காலடிபட்டு நமது முன்னோரின் அஸ்தி அழிந்து போகாதபடி, பயபக்தியோடு அடியெடுத்து வை!

தமிழ் மகனே! நம்முடைய மூதாதையரான சரித்திர நாயகர்களெல்லாம் - சமயத் தலைவர்களெல்லாம் மூடர்கள்; நாம்தான் பகுத்தறிவாளன் என்னும் ஆணவத்தோடு பாரத மண்ணில் அடியெடுத்து வைத்தால், நமது முன்னோரின் புனித அஸ்தி அழிந்துவிடும்.

தமிழ் மகனே! உன் வாழ்க்கையிலே ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தேசபக்தியும், தெய்வ பக்தியும் மணக்கட்டும்! என்றெல்லாம் பாரதியார் சொல்லாமல் சொல்லுகிறார்.

பாரதியாரின் நாட்டு வணக்கப் பாடலிலே வரிக்கு வரி சொல்லுக்குச் சொல் புதைந்து கிடக்கும் பொருள்களையே இங்கு விளக்குகிறேன். பாரதியார்

"அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்"

என்று பாடியிருக்கிறார். "பாரதியாரின் பாடல்களிலே "சொல்லுக்குச் சொல் அழகு தோன்றும்" என்கிறார் கவிமணி.

"எங்கள் தாய்" என்னும் பாட்டிலே பாரதத் தாயின் விசுவரூபத்தை வருணிக்கிறார். அதிலே

"முப்பது கோடி முகமுடையா ளுயிர்
மொய்ம்புற வொன்று டையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டு டையாள், எனிற்
சிந்தனை யொன்று டையாள்"

என்ற வரிகளிலே, பாரத தேசத்தையே தேவி வடிவத்தில் காட்டுகின்றார். இது, பகுத்தறிவுக்கு மாறுபட்ட கற்பனை யன்று. பகுத்தறிவாளரும் போற்றும் வள்ளுவரும் நிலத்தை 'நல்லாள்' என்னும் சொல்லால் பெண் வடிவில் காட்டுகின்றார். பகுத்தறிவாளர் ஆட்சியிலே, தமிழைத் தாய் வடிவில் வாழ்த்தி வழிபடச் செய்ய 'நீராருங் கடலுடுத்த' என்னும் பாடலை அரசாங்கக் கீதமாகச் செய்திருப்பதைப் பார்க்கிறோமல்லவா!

பகுத்தறிவும் கற்பனையும்

சாக்ரடீஸ் என்ற கிரேக்க ஞானி பகுத்தறிவு வாதிதான். 'நாத்திகன்' என்று ஏதென்ஸ் நாட்டவரால் குற்றஞ் சாட்டப் பட்டவனுமாவான். அவன்கூட, ஏதென்ஸ் நகரைத் தாயாகக் கற்பனை செய்திருக்கிறான்.

என் தமிழ்நாட்டு இளைஞர்களை வேண்டுகிறேன்; பகுத்தறிவு வாதம் பேசி கற்பனா சக்தியை இழந்து விடாதீர்கள். பாரதியார் பாரத நாட்டை மாதா வடிவில் கண்டு வழிபடப் பாடல்கள் புனைந்தில்லையானால், சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள சாதாரண மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்தியிருக்க முடியாது.

விடுதலைப் போராட்ட காலத்திலே பாரதமாதா படத்தை எடுத்துக் கொண்டு வீதியில் ஊர்வலமாகச் செல்வோம். அந்த மாதா, விரித்த கூந்தலுடனும், கை கால்களில் விலங்குகளுடனும், அழுத கண்ணீருடனும் காட்சியளிப்பாள். அந்தப் படத்தை எடுத்துக் கொண்டு 'சிறை வாயில்தனில் அழுதாள், பாரத மாதா!' என்ற யாரோ எழுதிய பாட்டைப் பாடிக்கொண்டு செல்வோம்.

வீடுதோறுமுள்ள ஆண்களும் பெண்களும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து நின்று பாரதமாதாவின் படத்தை வழிபடுவார்கள். அவள் அழுத கோலத்துடன் காட்சியளிப்பதைக் கண்டு, அவர்களும் கண்ணீர் வடிப்பார்கள். இப்படித்தான் எழுத்து வாசனையற்ற பாமர மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்த முடிந்தது அந்நாளிலே!

பாரதியார், பாரதப் பெருநாட்டைத் தாய் வடிவில் கற்பனை செய்து, அந்தத் தாயை வழிபடுவதற்குப் பதிகங்கள் படைப்பதற்கு முன்பு சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள சாதாரண மக்களை ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணியில் கொண்டு வர வழியில்லாமல் இருந்தது.

தேசத்தைத் தேவியாகக் கருதுவது வெறும் கற்பனைதான். ஆனால், அது பொய் அல்ல. அந்தக் கற்பனை மக்களை ஏமாற்றும் எண்ணத்திலிருந்து பிறந்ததல்ல. கற்பனை வேறு; பொய் வேறு. பொது நலனை யொட்டிப் பிறக்கும் கற்பனை பொய்யாகாது. தேசம் இருப்பது உண்மை. அந்தத் தேசத்திலே கோடிக்கணக்கான மக்கள் வாழ்வதும் உண்மை. அவர்கள் ஆங்கிலேய நாட்டாருக்கு அடிமைப்பட்டிருப்பதும் உண்மை. இந்த உண்மைகளைப் பாமர மக்களுக்கு உணர்த்துவதற்குப் பாரதமாதா வழிபாடு தேவைப்பட்டது. தேசம் விடுதலை பெற்றபின் பாரத மாதா வழிபாடு மறைந்துவிட்டது.

பரிகசித்த தமிழர்கள்

தமிழ் நாட்டுத் தேசபக்தர்கள் பாரதமாதாவை வழிபட்ட போது, இங்குள்ள சிலர் கேலி பேசினார்கள். "பாரதமாதாவுக்கு 30 கோடி மக்கள் என்றால், அவளுக்குக் கணவன்மார் எத்தனை பேரோ?" என்று கூட வம்பளந்தார்கள். நீங்கள் சிரிக்கிறிர்கள்; ஆனால், அன்று எங்களால் சிரிக்க முடியவில்லை. எங்களைக் கேலி பேசியவர் மீது நாங்கள் சீறி விழவுமில்லை. எங்களுடைய சக்தி முழுவதையும் நாங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் ஈடுபடுத்தினோ மாதலால், எங்களைக் கேலி பேசிய தமிழர்களை மன்னித்தோம்; மறந்தோம்!

விடுதலைப் போராட்ட காலத்திலே தேச பக்தர்களின் தெய்வமான பாரத மாதாவுக்குக் கோயில்களெடுக்கவும் முயற்சிகள் நடந்தன. பாரதியாரே தமது கட்டுரையொன்றிலே, 'தமிழ் நாட்டில் கிராமந்தோறும் பாரத மாதாவுக்குக் கோயிலெடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பாரதியாரின் அத்தியந்த நண்பரான சுப்பிரமணிய சிவா, தருமபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி கிராமத்திலே பாரதமாதா கோயிலொன்றை நிறுவத் திட்டமிட்டு, தேசபந்து சித்தரஞ்சன் தாசரை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார். சிவா அகால மரணமடைந்ததால், அவரது முயற்சி அடிக்கல்லோடு நின்றுவிட்டது.

பம்பாய் நகரில் காந்தியடிகளே பாரதமாதா கோயிலொன்றைத் திறந்து வைத்தாரென்றால், தேசபக்தர்கள் பாரதமாதாவிடம், கொண்டிருந்த பக்திக்கு வேறு சான்றும் வேண்டுமோ.

விடுதலைப் போர் முடியும் வரையிலே காங்கிரஸ் கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் மூன்று கோஷங்கள் எழுப்பப்பட்டன தேச பக்தர்களால். அவற்றுள் ஒன்று, 'வந்தே மாதரம்' மற்றொன்று 'பாரத மாதாவுக்கு ஜே' இன்னொன்று 'மகாத்மா காந்திக்கு ஜே'. தூக்கு மேடையில் ஏறிய புரட்சி வீரர்கள்கூட இந்த மந்திரங்களைக் கோஷித்து விட்டுத்தான் தூக்குக் கயிற்றைக் கழுத்தில் மாட்டிக் கொள்வார்கள் அந்த நாளிலே!

பாரதமாதா வழிபாட்டை மக்கள் ஏற்கச் செய்ததன் மூலமும் பாரதி காலத்தை வென்ற கவிஞனாகி விட்டான்! சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள சாமான்யர்களை - ஆம்; படித்தறியா மிக ஏழைகளை, பட்டி தொட்டிகளில் வாழும் மக்களை, ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஈடுபடுத்த வழிகண்டு விட்டான் பாரதி. இது ஒரு கவிஞனால்தான் முடியும்!

அபிமானம் பலவகை

அபிமானம் என்பது பலவகைப்பட்டது. சாதியபிமானம், மதாபிமானம், தேசாபிமானம், மனிதாபிமானம், ஜீவாபிமானம் என்றெல்லாம் பல்வேறு அபிமானங்களுக்கு மனிதன் அடிமைப்பட்டிருக்கிறான். இந்த அபிமானங்களிலே சாதியபிமானத்தைப் பாரதியார் வெறுத்தார். அதிலும் ஏற்றத் தாழ்வுடைய சாதிப்பாகுபாட்டை ஒழிக்க விரும்பினார். 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடி, பாப்பாவிலிருந்து தோன்றும் புதிய சமுதாயத்தைச் சாதி வேற்றுமையற்றதாகச் செய்ய முயன்றார். 'குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்' என்று கூறி, ஒருகால், தொழில் வேறுபாடு காரணமாக வேறுபாடு தேவைப்படினும், அவற்றிடையே உயர்வு, தாழ்வு - அதாவது - இழிவு, சிறப்பு இருத்தல் கூடாது என்று கூறினார்.

பாரதியார் மதாபிமானத்தை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லலாம். ஆம்; 'எம்மதமும் சம்மதம்' என்ற நிபந்தனையோடு! தனது சொந்த மதமான இந்து மதத்திடமும் அவருக்குப் பற்று இருந்தது. ஆயினும், பிற மதங்களிடம் அவர் பகைமை காட்டவில்லை. கிறித்துவ மதத்தார் போற்றும் ஏசு பெருமானைப் புகழ்ந்து பாடினார். இஸ்லாமியர் வழிபடும் அல்லா மீதும் பாடி, அவரை வழிபட்டார். 'தியானத்தை ஏற்பார்களானால், நாத்திகர்களும் நம்மவர்களே' என்னும் கருத்தை உரைநடைக் கட்டுரையொன்றிலே வெளிப்படுத்தினார்.

பாரதியார் தேசாபிமானத்தை மதமாகக் கொண்டிருந்தார்.

'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே'

என்று அவர் இயற்றியுள்ள சூத்திரம் அவர் பின்பற்றிய தேசாபிமான மதத்தின் மந்திரம் ஆகும்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்!'

என்பது தமிழனத்தாரின் மதாபிமானக் கொள்கை. இதற்குட்பட்டதே பாரதிக்கு இருந்த தேசாபிமானம்.

அவர் தேசாபிமானியாக இருந்தது குறுகிய உணர்வாலன்று; பிற தேசத்தின் ஆதிக்கத்திலிருந்து தன் தேசத்தை விடுவிக்க வேண்டுமென்ற விருப்பத்தாலாகும். அவர் காலத்திலே, ஆறு லட்சம் வெள்ளையர்கள் முப்பது கோடி இந்தியர்களை அடிமைப்படுத்தி அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினார்களே, அந்தக் கொடுமையை அழிக்கத்தான் மனிதாபிமானியான பாரதியார் தேசாபிமானியாகவும் வாழ்ந்தார். ஒவ்வொரு இந்தியனையும் தேசாபிமானியாக்கப் பாடுபட்டார்.

'பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு'

என்று தமது தாய்நாட்டைப் பெருமிதத்துடன் போற்றினார். 'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்றும் பாடி, தன் தாயகத்தின் எல்லையிலுள்ள இமயத்தின் பெருமையை இதய எழுச்சியோடு கூறினார். தேசாபிமானம் இல்லாதவனுக்கு மனிதாபிமானமும் இருக்காது என்பது பாரதியின் சித்தாந்தம். தேசாபிமானமின்றிப் பரதேசிகளாக வந்த வெள்ளைப் பரங்கியர்களிடம் உத்தியோகம் பெற்று வயிறு வளர்த்தவர்களைப் பார்த்து, 'நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு' என்று சாடினார்.

'இந்தியா'வும் 'பாரத'மும்

பாரதியாரின் தேசாபிமானம் தன்மானத்தையும் தழுவியதாகும். தனது தேசத்தின் பழம் பெருமைகளைக் காப்பதிலேயும் வளர்ப்பதிலேயும் அவர் கண்ணுங் கருத்துமாக இருந்தார். தமது தாய்நாடு இந்தியா என்றும் அழைக்கப்படுகிறது. இது, நமது முன்னோரால் வைக்கப்பட்ட பெயர் அன்று. இயற்கையாக வந்ததும் அன்று. இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்த அன்னியன் எவனோ சிந்து நதியை நினைத்துக்கொண்டு அதைச் சரிவரச் சொல்ல முடியாமல் உளறினான். அதுவே 'இந்தியா' என்று திரிந்துவிட்டது. இந்தப் பெயர் பாரதியைக் கவரவில்லை. தன் பாடல்களிலே மூன்றே பாடல்களில் - ஆறே இடங்களில் - இந்தியா என்னும் பெயரைப் பாரதியார் பயன்படுத்தியிருக்கிறார். அந்த மூன்று பாடல்களும் அவர் தன் வாழ்நாளின் கடைசிக் காலத்தில் பாடியவை. 'விடுதலை' என்னும் பாட்டிலே

'ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனுமில்லை, சாதியில்
இழிவுகொண்ட மனிதரென்பர்
இந்தியாவில் இல்லையே!'

என்று பாடியிருக்கிறார். கவிதைகளாலான "நவரத்தின மாலை" யொன்றை பாரத மாதாவுக்கு அணிவித்திருக்கிறார் பாரதியார். அதிலே

'திறமிக்க நல்வயிரச் சீர்திகழு மேனி
அறமிக்க சிந்தை; அறிவுபிற - நலங்கள்
எண்ணற்றன பெறுவார் 'இந்தியா' என்ற நின்றன்
கண்ணொத்த பேருரைத்தக் கால்'

என வரும் வெண்பாவிலேயும், 'இந்தியா' என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்.

பாரதியார் தம் வாழ்க்கையின் முடிவிலே, திருவல்லிக்கேணிக் கடற்கரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்திலே "பாரத சமுதாயம் வாழ்கவே" என்ற பாடலைப் பாடியதாகச் சொல்லைப்படுகிறது. அதிலே

'எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம், ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்' என்றும்

'எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்தியா மக்கள்'

என்றும் பாடியுள்ள வரிகளிலே, நான்கு இடங்களில் 'இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.

இவை தவிர எண்ணற்ற கவிதைகளிலே - நூற்றுக்கு மேற்பட்ட இடங்களிலே தன் தாய்நாட்டை, பாரதம், பாரத நாடு, பாரத தேசம், பாரத பூமி, ஆரிய நாடு, ஆரிய தேசம், ஆரிய பூமி என்றெல்லாம் பெயர் சொல்லி அழைக்கிறார். தனது தாயகத்தை அன்னையாகக் கற்பனை செய்து வருணிக்கும் இடங்களிலேயும், பாரத தேவி, பாரத ராணி, பாரதநாயகி, ஆரிய தேவி, ஆரிய ராணி என்றெல்லாம் பெயர் சொல்லி அழைக்கிறார்.

எவனோ வைத்த பெயரைச் சொல்லித் தன் தாயகத்தை அழைப்பது இழிவு என்று அவர் எண்ணினார். அதனாற்றான், அன்னியன் வைத்த 'இந்தியா' என்ற பெயர் அவரது உள்ளத்தைத் தொடவில்லை. பாரதியார் நடத்திய வாரப்பத்திரிகைக்கு "இந்தியா" என்றுதான் பெயர். அதனை நான் மறந்துவிடவில்லை. அந்தப் பத்திரிகையிலேயே ஒரு இதழில் எழுதியிருக்கிறார், முதலில் 'வந்தேமாதரம்' என்ற பெயரையே வைக்க நினைத்ததாக.

இந்தியா என்னும் பெயரை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் சொந்தப் பெயரை மறந்துவிட்டு, வந்தவன் வைத்த பெயருக்கே வாழ்வளிக்க எனக்குள்ள தேசாபிமானம் என்னை அனுமதிக்கவில்லை. இதே தன்மான - தேசாபிமான உணர்ச்சியுடந்தான் தமிழ் வழங்கும் மாநிலத்திற்குப் பரங்கியர் வைத்த 'மெட்ராஸ் ஸ்டேட்' என்னும் பெயர் நீடிப்பதை - நிலைபெறுவதை நான் எதிர்த்தேன்.

பாரதியாரின் தேசாபிமானம் உலகம் தழுவிய மனிதாபிமானத்திற் குட்பட்டதுதான். தேசபக்தி நல்லதுதான் என்றாலும் அதுகூடத் தடிப்பேறி விடக்கூடாதுதானே! பழுத்த தேசாபிமானியான பாரதி மனிதாபிமானத்தையும் கொண்டிருந்தார். தேசபக்தி என்னும் மதத்தின் சார்பில் தோன்றிய தேசாபிமானத்தை வளர்ப்பதற்கென்றே கடவுளால் அனுப்பப்பட்ட - தேசியக் கவிஞர்தான் என்றாலும் மனிதாபிமானத்திலே தலை சிறந்து விளங்கினார்.

சுதந்திரம்

நமது சுதந்திரம்

1. சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள்
அரசியல் அமைப்பு உருவாகி 60 ஆண்டுகள்
சுதந்திரத்துக்கு முன்பிருந்த இந்தியாவும்
இன்றைய இந்தியாவுக்குமுள்ள மாற்றங்களை
உணர வேண்டும். அது முதியவர்களுக்குத்தான்
அதாவது 70க்கும் மேலானவர்களே உணர்வர்.

2. சிலருக்கு எதிர்மறைப் போக்கும் தோல்வி
மனப்பான்மையும்தான் வாழ்க்கை.
எதனையும் நேரடியாக ஏற்றுக் கொள்ள
மறுப்பார்கள். ”என்னத்தே கன்னையா” போல.
அது பெசிமிசம். அத்தகையோர் எழுதியது
'இரவில் பெற்றோம் சுதந்திரம் விடியவேயில்லை'
என்பது. இது தோல்வி குணம். இத்தகையோரால்
நாடு முன்னேறாது.

3. நாட்டில் எங்கும் லஞ்சம், ஊழல்.
அடிமட்டத்தில் நிலவிய இந்த நச்சுப்பழக்கம்
இன்று எல்லா மட்டங்களிலும் இருக்கிறது.
'ஜனநாயகத்தில்' மக்களே உயர்ந்தவர்கள்,
அரசில் பணிபுரிவோர் வேலைக்காரர்களே.
அவர்கள் வேலைக்கேற்ப கூலி பெறுகிறார்கள்.
எனில் அவர்களுக்கு ஏன் கையூட்டு?
ஒரு DRO கெசடட் பதவி வகிப்பவர்,
விரைவில் IAS பெறவிருந்தவர், அவர் லஞ்ச
ஊழலில் சிக்கினார். பிடிபட்டது கோடி கோடியாக
லஞ்சப் பணம். இது என்ன கொடுமை? இதுவா
ஜனநாயகம்? மக்கள்தான் கேட்க வேண்டும்.

4. அரசாங்கம் பலதரத்து மக்களுக்கு பல
சலுகைகளை அறிவிக்கிறது. அந்தச் சலுகைகளைப்
பெற அவர்களுக்குப் பல சான்றிதழ்கள் தேவை.
அவற்றைப் பெற கையூட்டு. இது என்ன நியாயம்?
இத்தகைய ஊழல் பெருச்சாளிகள் ஓடி ஒளிந்து
கொள்ளும் இடம் அரசியல் புள்ளிகளின் பின்னால்.

5. ஊழலுக்கு என்ன காரணம்? முதலில் தேசபக்தி
இன்மை. இந்த தேசத்தின் சுதந்திரத்தின் விலையை
மக்கள் உணராத தன்மை. நமக்கு ஏன் வம்பு என்று
கண்டும் காணாமல் போகும் அலட்சியப் போக்கு.
இதனால் நஷ்டமடைவது மக்களே!

6. உலக நாடுகளில் நடைபெற்ற புரட்சிகள் எவை?
ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில்தான் சுதந்திரப் போர்.
இங்கெல்லாம் ஒரே மாதிரி போராட்டம் இல்லை.
இந்தியாதான் உலகத்துக்கு வழிகாட்டி.
இங்குதான் அகிம்சை முறையில் மகாத்மா காந்தி
வழிகாட்டிப் போராட்டம் நடந்தது.
மற்ற நாடுகளில் தென்னாப்பிரிக்கா தவிர மற்ற
இடங்களில் வன்முறை தான்.

7. இங்கெல்லாம் மக்கள் ஒருசேர எழுச்சியுற்று
போராடினர். உயிர்ப் பலி ஏராளமாக இருந்தது.
ரஷ்யப் புரட்சியில் Tsar மன்னனின் கொடுங்கோலை
எதிர்த்து லெனின் தலைமையில் ரத்தப் புரட்சி.
பிரான்சில் மன்னனின் கொடுங்கோலை எதிர்த்து
மக்கள் புரட்சி. ஆனால் இந்தியாவில் மட்டும்தான்
அகிம்சைப் புரட்சி. ஓரளவு தென்னாப்பிரிக்காவில்.

8. இந்தோனேஷியாவில்: சுகர்ணோ
பர்மாவில்: யு நு
கீன்யாவில்: ஜோமோ கென்யாட்டா
தெ.ஆப்பிரிக்காவில்: நெல்சன் மண்டேலா
இந்தியாவில்: மகாத்மா காந்தி

9. இந்திய சுதந்திரப் போரை நடத்தியது காங்கிரஸ்.
தலைமை வகித்தது மகாத்மா காந்தி.
கடைபிடித்த வழி: அஹிம்சை.
அறவழி பிறழ்ந்ததால் போராட்டம் வாபஸ் பெற்றார்
காந்தி. ஆகையால் போரில் ஈடுபட்டவர் காந்தி
அடிகளின் சீடர்களே. அவரது தொண்டர்களே.
மக்களுக்கு ஒட்டுமொத்த பங்கு இல்லை.

10. இந்த காரணத்தால் ஒவ்வொரு ஊரிலும்
ஒரு சிலர் மட்டுமே போராட்டம் செய்தனர்.
மற்றவர்கள் அவர்களை காந்தி கட்சி என்றும்,
வந்தேமாதரம் கட்சி என்றும் தூர இருந்து
பார்த்து நின்றனர். நேரடி பங்கு இல்லை.
எனவே சுதந்திரம் பெற்றதில் சிலர் தியாகம்
செய்ய, பலர் பலனை மட்டும் அனுபவித்தனர்.

11. சுதந்திரத்தின் விலை என்ன? தெரியாது.
தெரிந்த தியாகிகளின் காலம் முடிந்து விட்டது.
இன்றைய தலைமுறையினருக்கு சுதந்திரப் போர்
பற்றி சொல்லத் தொடங்கினால், 'bore' என்று
விலகிவிடுவர். நம் சுதந்திரத்தின் விலை தெரியாத
மக்கள் தேசபக்தி கொள்ள வாய்ப்பில்லை.
தேசபக்தியை ஊட்டுவது தேசபக்தர்கள் கடமை.

12. 150 ஆண்டுகள் இந்தியர்கள் இருளில் இருந்தனர்.
1858 சிப்பாய் கலகம் வட இந்திய சிப்பாய்கள் செய்தது.
வெள்ளையர் விழித்துக் கொண்டனர். இந்தியர்களுக்கும்
ஏதாவது நிர்வாகத்தில் பங்கு கொடுத்தால்தான் மறுபடி
ஒரு கலகம் வராமல் தடுக்க முடியும் என்று நினைத்தனர்.
லார்டு மெக்காலே கல்வித் திட்டமும், வெள்ளையர்க்கு
சேவை செய்ய இந்தியர்க்கு வாய்ப்பும் தரப்பட்டது.

13. 1885ல் காங்கிரஸ் மகாசபை ஒரு ஆங்கிலேயரால்
ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவரால் தொடங்கப்
பட்டது. தொடர்ந்து வெள்ளைக்காரர்கள் தலைவர்.
இங்கிலாந்து மன்னருக்கு பல்லாண்டு பாடித்தான்
காங்கிரஸ் மகாநாடுகள் தொடங்கும். மரியாதையுடன்
ஆங்கில ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள்கள்
வைக்கப்படும்.

14. 1906க்குப் பிறகு திலகரின் காலத்தில்தான் இந்தப்
போக்கு மாறத் தொடங்கியது. அவர் சுதந்திரம்
எனது பிறப்புரிமை என்றார். பிறகு கராச்சி காங்கிரஸ்
மகாநாட்டில் ஜவஹர்லால் நேரு பூரண சுயராஜ்யம்
தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

15. இவ்வளவையும் மக்கள் வேடிக்கைப் பார்த்தார்கள்.
எங்கும் நேரடியாக மக்கள் இறங்கி வெகுஜன
இயக்கமாக நடத்தவில்லை. 1942 மட்டும் ஒரு
மாறுதல். காரணம் வழிநடத்த தலைவர்கள் வெளியில்
இல்லை. இதில் மக்கள் நேரடியாக இறங்கினர்.
அரசு பணிந்து வந்தது.

16. இன்று நம் மக்களுக்குத் தேவை தேசபக்தி.
ஊழலற்ற நிர்வாகம், நேர்மையான அரசு அதிகாரிகள்.
இந்த குறிக்கோளோடு தேசபக்தி கொண்டவர்கள்
இணைந்து செயல்படுதல் அவசியம்.
இந்த நாட்டை தேசபக்தி ஒன்றுதான் காக்க முடியும்.

17. அப்படியொரு நிலைமை வரக்கூடாது என்றுதான் சில
சக்திகள் முயற்சி செய்யும். அப்போதுதான் தங்கள்
தேட்டையை தொடரமுடியும் என்பதால். மக்கள் - சாதியால்,
மதத்தால், மற்ற பல ஏற்றத்தாழ்வுகளால் பிளவுபடாமல்
ஒன்றுபட்டு இந்த நாட்டைக் காப்போம். அப்படியொரு
சபதத்தை குடியரசு நாளில் ஏற்போம்.

வாழ்க பாரத நாடு. வந்தேமாதரம்.

Thursday, October 28, 2010

தஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா ஓர் ஆய்வு

                                                        தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா
ஓர் ஆய்வு
தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் 22ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. கடந்த ஓரிரு மாதங்களாகவே தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதற்காக தமிழக அரசு 26 கோடி ரூபாயும் மத்திய அரசு 25 கோடி ரூபாயும் தருவதாக அறிவிக்கப்பட்டன. தஞ்சை நகராட்சி நகரின் பல பாகங்களையும் விழாவுக்குத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியது. முக்கிய சாலைகளில் ஒளி விளக்குகள் புதிதாக அமைக்கப்பட்டன. சாதாரண தார்ச்சாலைகள் சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட்டன. நகரத்தின் கரந்தை தமிழ்ச்சங்கம், மணிமண்டபம், அரண்மனை வளாகம், திலகர் திடல், பெரிய கோயில் போன்ற பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், காவல்துறையின் ஆயுதப்படை மைதானத்தில் பெரிய கோயிலின் மாடலில் ஒரு மேடை அமைத்து நிறைவு விழாவில் முதலமைச்சர் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விழாவின் சிறப்பு அம்சமாக கோயிலின் நந்தி மண்டபத்தைச் சுற்றிலுமுள்ள இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் பத்மஸ்ரீ கலைமாமணி பத்மா சுப்ரமணியன் தலைமையில் 'ராஜராஜேச்சரத்தைப்' போற்றி நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நிறைவு நாளில் கோயில் குறித்த ஒரு தபால் தலை வெளியீடும், புதிய நாணயம் வெளியீடும் ஏற்பாடாயிருந்தன. தஞ்சை மாவட்ட நிர்வாகம் முழுவதும் இந்த மாநாட்டுப் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டது. அரண்மனை திடலில் அமைந்திருந்த கண்காட்சியை துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பதாக ஏற்பாடு நடந்தது. இதில் அரிய வகை சிலைகள், ஆயுதங்கள், சிற்பங்கள் இவையெல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டன. இங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 23, 24, 27 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டன. தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரின் இணைய தள முகவரியில் நேரடி ஒளிபரப்புக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆலயத்திற்குள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதால் நுழைவு வாயிலுக்கு அடுத்துள்ள புல்வெளியிலும் வெளியே அகழிக்கருகிலும், வாகனங்கள் நிறுத்துமிடத்திலும் எல்சிடி திரைகள் அமைக்கப்பட்டு மக்கள் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இத்தனை தயாரிப்புக்கிடையில் ஐந்து நாள் விழா செப். 22ம் தேதி தொடங்கியது. இந்த விழாவின் தொடக்கமாக மங்கள இசையுடனும், மாலையில் அமைச்சர் கோ.சி.மணி, மத்திய நிதித்துறை அமைச்சர் பழனிமாணிக்கம் அவர்களும் முரசு கொட்டி விழாவைத் துவக்கி வைத்தனர். மாலை பெரிய கோயில் வளாகத்தில் பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான பந்தலில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமதி சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. 'சங்கமம்' கலைவிழா நிகழ்ச்சிகள் நடந்த இடங்களிலெல்லாம் கிராமிய கலைகள் என்ற பெயரில் தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற வகைவகையான ஆட்டங்கள் நடந்தன. இவற்றை கனிமொழியின் தலைமையிலான குழு ஏற்பாடு செய்து நடத்தினர். சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத்துறை செயலர் வெ. இறையன்பு, சுற்றுலாத் துறை இயக்குனர் மோகந்தாஸ், கலை பண்பாட்டுத் துறை ஆணையர் மணி, மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.சண்முகம், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கே.ஏ.செந்தில்வேலன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரடியாக கவனம் செலுத்தி விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கலந்து கொண்டனர்.


விழாவின் இரண்டாம் நாளான 23ஆம் தேதி எல்லா இடங்களிலும் கிராம கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெரிய கோயிலில் டி.எம்.கிருஷ்ணாவின் இசைக் கச்சேரியும், ஜாகீர் உசேனின் நடனமும் நடைபெற்றன.

மூன்றாம் நாளாகிய செப். 24 அன்று காலை அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வரலாற்றுக் கண்காட்சியைத் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்று காலை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல ஆய்வரங்கங்கள், கருத்தரங்குகள் நடைபெற்றன. இதில் பற்பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். அன்று மாலை ஆலய வளாகத்தில் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் குழுவினரின் தாளவாத்தியக் கச்சேரியும் தொடர்ந்து அருணா சாயிராமின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. பாடல்களுக்கிடையே இவர் முதல்வரின் புகழ்பாடி கச்சேரி செய்தார். கருத்தரங்கங்களிலும் அறிஞர்களும் முதல்வரைப் பற்றி புகழுரைகளை நிகழ்த்தினர்.

நான்காம் நாள் செப். 24 அன்று காலை பெரிய கோயிலில் நிதி அமைச்சர் க.அன்பழகன் தலைமையில் ஒளவை நடராஜன், குடவாயில் பாலசுப்பிரமணியன், நடனகாசிநாதன், சாரத நம்பி ஆரூரன் ஆகியோர் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது. மாலையில் திருக்குவளை சகோதரிகளின் நாதஸ்வரம் அதனைத் தொடர்ந்து பத்மஸ்ரீ பத்மா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதக் கலைஞர்கள் கலந்து கொண்ட நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. வரலாற்றில் இதுபோன்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடந்திருக்குமா என்ற எண்ணம் அனைவருக்குமே ஏற்படும் வகையில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சை திலகர் திடலில் அமைக்கப்பட்டிருந்த எழில்மிகு அரங்கில் 'ராஜராஜ சோழன்' எனும் வரலாற்று நாடகம் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு 'காதல்' பத்திரிகை ஆசிரியர் அரு.ராமநாதன் எழுதிய இந்தக் கதையை அன்றைய பழம்பெரும் நாடகக் கலைஞர்களான டி.கே.சண்முகம், டி.கே.பகவதி ஆகியோர் நாடகமாக நடித்துக் கொண்டிருந்தனர் டி.கே.சண்முகம் அவர்களின் குமாரர்கள் டி.கே.எஸ்.கலைவாணன், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இம்முறை நாடகத்தை அரங்கேற்றினர். அன்றைய நாளில் டி.கே.பகவதி தனக்கே உரித்தான கம்பீரத்தோடு ராஜராஜனாக நடித்த காட்சியை அன்று பார்த்தவர்கள் எவரும் மறந்துவிட முடியாது. அவர் ராஜராஜனாகவே மாறியிருந்தார் என்று சொல்லலாம். அதே கம்பீரத்தோடும், சிறப்பாகவும் இந்த நாடகத்தை டி.கே.எஸ்.கலைவாணன் சகோதரர்கள் நடத்திக் காட்டியது சிறப்பாக இருந்தது. இந்தக் கதை ராஜராஜனின் முழு வரலாறாக இல்லாமல் அவன் வாழ்க்கையில் நடந்த குடும்பம் சம்பந்தப்பட்ட சிறு வரலாற்று நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. மாமன்னனின் வரலாறு முழுமையையும் கூட நாடகமாக ஆக்கினால் நிச்சயம் அது சிறப்பாக இருந்திருக்கும்.

25ம் தேதி காலையில் பல ஊர்களிலுமிருந்தும், பல மாநிலங்களிலிருந்தும், அயல் நாடுகளிலிருந்தும் வந்திருந்த நடனக் கலைஞர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அவர்களோடு வந்த உறவினர்கள், குருமார்கள் என்று கூட்டம் கூட்டமாகத் தஞ்சையில் நெருக்கடி ஏற்படும் வகையில் வந்து குவிந்தார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் ஓரியண்டல் டவர்ஸ், கமலா சுப்பிரமணியம் பள்ளி, கந்த சரஸ் மகால் ஆகிய இடங்களில் தங்கவும், உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை தஞ்சை பிரஹன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் பத்மா சுப்பிரமணியத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். மாலை 6.45க்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சிக்காக அனைத்து கலைஞர்களும் நடன உடை அணிந்துகொண்டு ஆலயத்துக்குள் மாலை 5க்குள் வந்து விட்டனர். அவர்கள் வரிசையாக ஆயிரம் பேருக்குமேல் நின்று கொண்டு ஆடத் தயாராகினர்.


ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் ஆடுவதற்காகவும், வரலாற்றில் இடம்பெற வேண்டிய இந்த அரிய நிகழ்ச்சியில் தங்களுக்கும் பங்கு உண்டு என்ற பெருமிதத்திலும் அத்தனைக் கலைஞர்களும் ஆர்வத்தோடும், அவர்களுக்கு பயணத்திலும், நகருக்குள் நுழைந்து வருவதிலும், தங்குவதிலும், பல இடையூறுகளும் இன்னல்களும் இருந்தபோதும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியோடு வந்து கலந்து கொண்டு சென்றது அனைவரையும் பாராட்ட வைத்தது.

தேவார இசையை ஓதுவார்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். முதல்வர் வருகைக்காக நிகழ்ச்சி தாமதமாகிக் கொண்டிருந்தது. சுமார் 7.30 மணிக்கு முதல்வர் பேட்டரியில் இயங்கும் மோட்டாரில் சிவகங்கை தோட்டம் வழியாக வந்து, தனியாக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த பிறகு நடனம் தொடங்கியது. முதல்வர் அவர்கள் நாட்டியம் தொடங்குமுன் மற்றொரு தேவாரம் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். ஓதுவார்களும் பாடினார்கள். தேவாரப் பாடலோ என்று கவனித்தால் இல்லை. அது அருணகிரிநாதர் தஞ்சை கோபுரத்தில் அமைந்த முருகப் பெருமான் குறித்துப் பாடிய திருப்புகழ் பாடல்.

பத்மா சுப்பிரமணியமும் மற்ற நடனக் கலைஞர்களும் சுமார் முக்கால் மணிநேரம் ஆடினர். முன்னதாகவே தயார் செய்யப்பட்ட டிவிடி யைப் போட்டுப் பார்த்து ரிகர்சல் பார்த்துவிட்டு வந்ததால் நடனம் ஒரே மாதிரியாக ஆடமுடிந்தது. சிறிதுகூட பிசிறு காணப்படவில்லை. இதில் பிரபல நடிகர் வினீத், நடனக் கலைஞர் ஸ்வர்ணமால்யா போன்ற பிரபலங்களும், மும்பை, சிங்கப்பூர் முதலான இடங்களிலிருந்தும் வந்திருந்த நடனக் கலைஞர்கள் மகிழ்ச்சியோடு ஆடினர். கணபதி கவுத்துவம், தொடர்ந்து கருவூரார் இயற்றிய திருவிசைப்பாவில் ராஜராஜேச்சரத்தைப் பற்றிய பத்து பாடல்களுக்கும் ஆடினர். இறுதியில் ஆதிசங்கரரின் சிவஸ்துதி பாடி நிறைவு செய்தனர். முதல்வரை பத்மா சுப்பிரமணியம் சென்று மேடையில் வணங்கி ஆசி பெற்றார். அப்போது பேசிய முதல்வர், அவர்கள் பாடியது எதுவானாலும், அவர்கள் நடனம் நன்றாக இருந்தது. பத்மாவின் தலைமையில் ஒரு படையே ஆடியது என்று வாழ்த்தினார். முதல்வர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்களை மனதாரப் பாராட்டி பொன்முடிப்பு வழங்கினார். டாக்டர் பத்மா சுப்பிரமணியம் போல மற்றொரு கலைஞர் உருவாக வேண்டுமே என்ற கவலை பலருக்கும் உண்டு. இன்று இந்தக் கலையில் பலரும் அந்த அளவுக்குத் திறமையோடு ஆடிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. டாக்டர் பத்மா சுப்பிரமணியம் குடும்பத்தில் மூன்றாம் தலைமுறை வாரிசு ஒன்றும் உருவாகிவிட்டது. அன்று ஆடிய நடிகர் வினீத்தின் பின்னால் ஆடிய சின்னஞ்சிறு சிறுமி, டாக்டர் பத்மாவின் சகோதரரின் பேத்தி. துறுதுறுப்பும் உத்சாகமும் கொண்டு அவர் ஆடியது மகிழ்ச்சியளித்தது. இந்த ஆயிரம் கலைஞர்களில் சின்னஞ்சிறு குழந்தைகள், வயதானவர்கள், ஆண்கள் என்று பலரும் ஆடியது உண்மையிலேயே மயிர்கூச்செரிய வைத்தது. உலகில் வேறு எங்குமே நடைபெற்றிருக்குமா என்ற அளவுக்கு மிக பிரமாண்டமாக ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கு கொண்டு ஒரே மாதிரி ஆடியது பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம்தான் பெரும்பாலானவர்கள் கருவூர்த் தேவர் இயற்றிய திருவிசைப்பா பற்றி தெரிந்து கொண்டனர். அதிலுள்ள பத்துப் பாடல்களும் மிகச் சிறப்பாகப் பாடி அபிநயம் செய்த காட்சி மனதை நெகிழச் செய்வதாக அமைந்தது. பொதிகை தொலைக் காட்சி உட்பட பல உள்ளூர் தொலைக் காட்சிகளும் இந்த அபூர்வ நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்தன. டிவி கேமரா கலைஞர்களைக் காட்டிக் கொண்டே செல்லும் போது பல அறிமுகமான முகங்கள் தென்பட்டன. அவர்கள் அத்தனை பேரும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்கள் சொந்த செலவில் வந்து போனது அவர்கள் கலையின் மீது வைத்திருக்கும் பக்தியையும், தஞ்சை பெருவுடையார் ஆலயம் கலைகளின் பிறப்பிடம் அங்கு வந்து ஆடுவது இந்த ஜன்மம் எடுத்ததின் பலன் என்று நினைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியை நடத்துவது என்று முதன்முதலாக முடிவு செய்தது தஞ்சை பிரஹன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை. டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து இவர்கள் இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தப் போகிறார்கள் என்ற செய்தி பத்திரிகைகளில் வந்த பிறகு தமிழக அரசு இவ்விழாவைத் தன் பொறுப்பில் செய்வதாக முடிவு செய்தது. என்றாலும் உள்ளூரில் இது குறித்த எல்லா ஏற்பாடுகளையும் டாக்டர் வி.வரதராஜன் தலைமையில் செயல்படும் பிரஹன் நாட்டியாஞ்சலி, செயலர் முத்துக்குமார் ஆகியோர்தான் தங்களது கட்டுக்கோப்பான உற்ப்பினர்களோடு மிகச் சிறப்பாகச் செய்தனர். ஆனால் இந்த விழா குறித்து நன்றி சொல்லியவர்கள் எவரும் பிரஹன் நாட்டியாஞ்சலிக்கோ, டாக்டர் வரதராஜனுக்கோ அல்லது முத்துக்குமாருக்கோ நன்றி சொல்லவில்லை. எனினும் கூடியிருந்த மக்களுக்கும் பங்கு கொண்ட பெரும்பாலான கலைஞர்களுக்கும் இந்த விழாவின் சிறப்புக்கு மேற்சொன்னவர்களே காரணம் என்பது நன்கு தெரியும். அது போதும்.

செப். 26 விழாவின் நிறைவு நாளில் காலையில் திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை ஆயுதப்படை மைதானத்தில் முதலில் பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் முதல்வர் அவர்கள் வந்த பிறகு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் அவர்கள் ராஜராஜ சோழன் காலத்தில் குடவோலை முறையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தை மிக விரிவாக எடுத்துரைத்து, மன்னராட்சி நடைபெற்ற போதும் மக்கள் ஜனநாயக முறைப்படி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த செயல் உலகில் வேறு எங்கும் கிடையாது என்றார். அது போதாது என்று ராஜராஜன் ஆட்சியைப் போலவே தனது ஆட்சியும் ஜனநாயகத்தைப் பேணி, மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று சொன்னார்.

முதல்வர் தனது உரையின் முடிவில் இந்த விழாவையொட்டி தஞ்சை நகருக்குச் செயல்படுத்தியிருக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். விழாவில் தஞ்சை ராஜராஜேச்சரம் குறித்த தபால் தலை வெளியிடப்பட்டது. அதன் முதல் தபால் தலையை முதல்வர் வெளியிட மத்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் ஜி.கே.வாசன் அவர்கள் பெற்றுக் கொண்டார். விசேஷ 10 ரூபாய் நாணயத்தை முதல்வர் வெளியிட அதன் முதல் காசை மத்திய அமைச்சரும் புதுச்சேரி காங்கிரஸ் தலைவருமான நாராயணசாமி பெற்றுக் கொண்டார்.

இங்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, தான் ராஜராஜன் கட்டிய பெரிய கோயிலின் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா என்பதை மறந்து விட்டார் போல இருக்கிறது. அவர் வழக்கம்போல அரசியல் மேடையில் பேசுவது போல கூட்டணி பற்றியும், ராஜராஜனைப் போலவே தமிழக முதல்வரின் ஆட்சி அமைந்திருப்பது பற்றியும், தமிழ் நாட்டு மக்கள் ராஜராஜன் காலத்து மக்களைப் போல் மகிழ்ச்சியோடும், நிறைவோடும் இருக்கிறார்கள் என்று பேசினார். யாராவது அவரிடம் மன்னன் ராஜராஜன் பற்றியும், பெரிய கோயில் பற்றியும் பேசச் சொல்லியிருக்கலாம். பாவம் அவர் என்ன செய்வார்.

நகரின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற தமிழக நாட்டுப்புற கலை விழாவில் பெரும்பாலும் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் போன்றவைகள்தான் நடைபெற்றன. சோழ வளநாட்டில் அன்று வழக்கத்தில் இருந்த பல கலைகளும், பல வாத்தியக் கருவிகளும் பயன்படுத்தப்பட்டு மக்களுக்குக் கொண்டு சென்றிருக்கலாம். மாறாக மேற்சொன்ன ஆட்டங்களை மட்டும் காட்டினாலும், மக்கள் கூட்டம் இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அலை மோதியது. சோழர் காலத்துக்குப் பிறகு இங்கு நாயக்க மன்னர்களும், மராத்திய மன்னர்களும் ஆண்டிருக்கிறார்கள். நாயக்கர்களில் ரகுநாத நாயக்கர் ஒரு கலை மேதை. இசை, வாத்தியக் கருவிகள் வாசித்தல் போன்றவற்றில் நிபுணனாக இருந்திருக்கிறான். போரிலும் வல்லவன். இவன் "ஜெயந்தசேனா" எனும் புதிய ராகத்தையும் "ராமானந்தா" எனும் தாளத்தையும் கண்டுபிடித்தான். இவன் "விபஞ்சி வீணை" எனும் புதிய வகை வீணையைக் கண்டுபிடித்து வாசித்துக் காட்டினான். இவன் காலத்தில் வீணை வாத்தியத்தில் செய்த மாற்றங்கள்தான் இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது. "தஞ்சை வீணை" என்று பிரபலமாக இருக்கும் வீணை இவன் உருவாக்கியதே. இப்படிப் பல இசைக்கருவிகளும், பல கலை வடிவங்களும் பழைய காலம் முதல் இருந்தாலும், இப்போது நாட்டுப்புறக் கலை என்றதும் மேலே சொன்னது போன்ற ஒருசிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை ஒதுக்கிவிடுகிறார்கள். ஒருக்கால் மக்கள் இந்த வகையான கலைச்சுவைக்குப் பழகிவிட்டார்கள் போலும்.

தஞ்சையில் நடந்த இந்த கலாச்சார விழா உலகம் முழுவதும் வியப்போடு பார்த்து மகிழும்படி அமைந்திருந்தது. தமிழக அரசு ஏற்பாடு செய்து நடத்திய இந்த விழாவில் திருமுறை ஓதுகின்ற ஓதுவார்களில் தலை சிறந்தவர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து பாராட்டியிருக்கலாம். காரணம் மன்னன் ராஜராஜன் திருமுறைக்கும் அதை ஓதுவோர்க்கும் சிறப்பிடம் கொடுத்து வைத்திருந்தான். மற்றொரு குறை இப்படிப்பட்ட பெரிய கோயிலைக் கட்டி அதில் பதினெட்டு அடி உயரமுள்ள சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த பின் ஆகம முறைப்படி மூலவராக விளங்கும் இறைவனின் விக்கிரகத்தின் அளவையொட்டி தினப்படி நெய்வேத்தியத்துக்கென்று அரசன் பல நிவந்தங்களை இட்டு வைத்தான் அல்லவா. அவைகளின் இன்றைய நிலைமை என்ன, மாலிக்காபூர் படையெடுப்பின் போது சூறையாடிச் சென்றவை எவ்வளவு என்பது போன்ற விவரங்களையும் விரிவாகக் கொடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் தமிழர்கள் பெருமை கொள்ளும் அளவுக்குச் சிறப்பாக நடந்த விழா. தஞ்சை நகரம் புத்துணர்வு பெற்றிருக்கிறது, புதிய வசதிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அளவில் பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு விழா
மாபெரும் வெற்றிதான்.

Tuesday, October 26, 2010

தமிழிசை வடிவங்கள்

தஞ்சை பெரிய கோயிலில் - பாடப்பட்ட தமிழிசை வடிவங்கள்
(திருமதி கி.உமாமகேஸ்வரி,  இசை விரிவுரையாளர்)


முகப்புரை.
நமது பாரதத் திருநாட்டில் ஆலயங்கள் நிறைந்த பகுதி தமிழகம்தான். இங்கு திரும்பிய பக்கமெல்லாம் கோபுரங்களும், வானளாவிய விமானங்களும் காணமுடியும். இவையெல்லாம் இப்பகுதிகளை ஆண்ட தமிழ்ப்பேரரசர்களது கலை ஆர்வத்தையும், இறையுணர்வையும், கலைகளுக்கு அவர்கள் செய்த தொண்டுகளையும் பறைசாற்றுவனவாக அமைந்திருக்கின்றன.

தமிழக வரலாற்றில் சோழர்கள் காலம் கலை, இலக்கியங்களின் வளர்ச்சிக்குப் பொற்காலமாகத் திகழ்ந்திருக்கிறது. கடைச்சோழ வம்சமான விஜயாலயன் வம்சத்தில் வந்த மாமன்னன் ராஜராஜன் பாரத புண்ணிய பூமியில் மட்டுமல்ல, கடல்கடந்தும் தன் ராஜ்யாதிகாரத்தை விரிவுபடுத்தி நல்லாட்சி வழங்கியிருக்கிறான். அவன் கால்பதித்த இடங்களிலெல்லாம் கலைகள் சிறப்பாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆன்மீகத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இறையுணர்வு மேலோங்க நல்லாட்சி வழங்கி இப்பூவுலகை சொர்க்க பூமியாக மாற்றியிருந்தான். அவனது இத்தகைய பெருமைகளை இன்றும் மக்கள் உணரும் வகையில் இஞ்சிசூழ் தஞ்சை என்று கருவூர்த்தேவரால் வர்ணிக்கப்படும் தஞ்சை மாநகரத்தில் அவன் அமைத்த பெருவுடையார் ஆலயம் உலகுக்குப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வாலயம் அமைந்து ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் இக்கோயில் இன்றும் பல நுண்கலைகளின் பெட்டகமாகப் பொலிந்து கம்பீரமாக எழும்பி நிற்கிறது.

இத்தகைய புகழ்மிக்க வரலாற்றுத் தலைநகரத்தை "பிரஹதீஸ்வர மகாத்மியம்", "சமீவனக்ஷேத்திர மகாத்மியம்" போன்ற வடமொழி புராணங்களும், "தஞ்சபுரி மகாத்மியம்" எனும் மராட்டிய மொழி நூலும் பெருமையாகப் பேசுகின்றன. தஞ்சை பெருவுடையாரைப் பற்றி எல்லா மொழிகளிலுமுள்ள நூல்களும் பெருமை படுத்திப் பேசினாலும், மிக அதிகமாக இதன் புகழைக் கூறுவது தமிழ்மொழியில் அமைந்த நூல்களும், கல்வெட்டுகளுமே. அத்தகைய சிறப்புமிகு தமிழ் மொழியில் அமைந்த தமிழிசை வடிவங்களைப் பற்றி இக்கட்டுரையில் ஒரு சிறிது காணலாம்.

தமிழ்ப்பற்றாளன்

தஞ்சை பெருவுடையார் ஆலயம் முழுவதும் எங்கு நோக்கினும் பல கல்வெட்டுக்களைக் காணமுடியும். அதில் மன்னன் ராஜராஜன் காலத்திய கல்வெட்டுக்கள் எல்லாம் அன்றைய வழக்குத் தமிழில் வெட்டப்பட்டிருப்பதாக கல்வெட்டுத்துறை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த கல்வெட்டுக்களில் எல்லாம் பெரிய கோயில் அமைந்த வரலாறு, அவன் பல்வேறு பணிபுரிவோர்க்குக் கொடுத்த நிவந்தங்கள், யார் யாருக்கு எந்த பணி அந்தப் பணிக்காக அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியம் முதலியவற்றையும் அருந்தமிழில் வடித்து வைத்திருக்கிறான்.

ஆலயத்தில் வழிபாடு நடத்த தேவாரப் பண்களைப் பாட ஆட்களை நியமித்திருந்தான். தில்லை நடராஜர் ஆலயத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த தேவார ஏடுகளை வெளிக் கொணர்ந்து அவற்றில் செல்லரித்தது போக மீதமுள்ளவற்றை ஒன்று சேர்த்து வரிசைப்படுத்தி நம்பியாண்டார் நம்பி மூலம் பன்னிரு திருமுறைகளை வகுத்து, அந்தத் திருமுறைகள் முறையாக ஆலயங்களில் பாடப்பட ஏற்பாடுகளைச் செய்து வைத்த பணி அவனது தமிழ்மொழிப் பற்றுக்கும், தெய்வ பக்திக்கும் சான்றாக அமைந்திருக்கின்றது. ஆலயம் கலைகளின் இருப்பிடம் என்பதற்குச் செயல் வடிவம் கொடுத்து, ஆடல், பாடல் என்று எங்கும் எதிரொலிக்கச் செய்த அருந்தமிழ் வாணன் ராஜராஜன். அவனது அடியொற்றி, அவனுக்குப் பின் வந்த மன்னர்கள் காலத்திலும் தமிழ் இசை, தேவாரம் முதலியன ஆலயங்களில் முழங்கி வர அவனே வழிகாட்டியாக இருந்திருக்கிறான்.

தமிழிசை வடிவங்கள்

தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் தமிழிசையின் வடிவங்கள் பல்வேறு வகையாக ஒலித்திருப்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. சைவத்திருமுறைகளில் திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் இங்கு இருந்து மன்னனுக்கு வழிகாட்டியாக, குருநாதராக இருந்ததோடல்லாமல், அவரது தஞ்சை புகழ்பாடும் திருவிசைப்பா ஆலயத்தில் ஒலித்திடவும் காரணமாக இருந்திருக்கிறார். கருவூர்த்தேவர் தன்னுடைய திருவிசைப்பா பத்து பாடல்களிலும் 'இஞ்சி சூழ் தஞ்சை' என்று தொடங்கி தஞ்சையின் பெருமைகளைச் சொல்லிப் பின் ராஜராஜேச்சரத்துப் பெருவுடையாரின் கருணையை வேண்டி பல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். முதன்முதல் ராஜராஜேச்சரம் என்ற இவ்வாலயத்தின் பெயரை மக்கள் உணரக்கூடிய வாய்ப்பினையும் திருவிசைப்பாதான் ஏற்படுத்தியிருந்தது. ஒன்பதாம் திருமுறையில் வரும் கருவூராரின் திருவிசைப்பா அன்று ஆலயங்களில் பாடப்பட்டிருக்க வேண்டும். திருப்புகழ் பாடி குமரன் அருள் பெற்ற அருணகிரிநாதரும் தனது திருப்புகழில் இங்கு தஞ்சையில் ஆலயத்து கோபுரத்தமர்ந்த பெருமானைப் பாடிக் களித்திருக்கிறார். இவர் தனது திருப்புகழ் பதிகங்களில் மூன்று பாடல்களில் இவ்வாலயத்துக் குமரனை மனதாரப் புகழ்ந்து பாடியிருப்பதைக் காணமுடிகிறது. இங்கு இரண்டாம் சரபோஜி காலத்தில் அந்த மன்னரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்த கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் என்பார் "தஞ்சை பெருவுடையார் உலா" எனும் அற்புதமான உலா இலக்கியத்தைப் படைத்திருக்கிறார்.

தஞ்சை இராஜராஜேச்சரத்தில் இயல் இசை நாடகம் எனும் தமிழனின் முத்தமிழ் பிரிவுகள் சிறப்பாக வளர்ந்திருக்கின்றன. இவை இங்குள்ள கல்வெட்டுகள், சுவடிகள், சிற்பங்கள், ஓவியங்கள் வாயிலாக அறியலாம். பின்னர் வந்த விஜயநகரப் பேரரசுகள், மராத்தியர்கள் ஆகியோர் காலத்திலும் இவை இங்கு சிறப்பாக வளர்க்கப்பட்டிருக்கின்றன. இது ஓர் கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்திருப்பதை அறியமுடிகிறது.

இசைக்கலையும் ஆடற்கலையும்

இராஜராஜன் தேவார ஏடுகளைச் சிதம்பரம் ஆலயத்திலிருந்து மீட்டான் எனவும், அதனை திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி, அவ்வூர் பொல்லாப் பிள்ளையாரின் அருளால் முறைப்படுத்திக் கொடுத்தார் எனவும் வரலாறு சொல்லுகிறது. நம்பியாண்டார் நம்பி தன் அருள் திறத்தால் திருமுறைகளுக்குரிய இசையத் தெரிந்து இசையோடு இறைவனை வழிபடவேண்டுமென்று எண்ணி, திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் உதித்த ஒரு பெண்மணிக்கு இறைவன் வழங்கிய இசைத்திறத்தால் பண்ணடவு வகுத்துக் கொடுக்க தேவாரப் பாடல்கள் அதற்குரிய இசையோடு பாடத்தொடங்கினர். எனினும் இராஜராஜன் காலத்துக்கு முன்பிருந்தே ஆலயங்களில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் முறை இருந்திருக்கிறது. இதற்காக பணியாற்றியோர் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழக இசைத் துறைத் தலைவர் ஒரு கட்டுரையில் குறிப்பிடும் செய்தியை இங்கு பார்க்கலாம். அவர் கூறுகிறார், "இந்திய இசைப் பாடல்களிலேயே முதன் முதலில் தோன்றிய பாடல்கள் தேவாரப் பாடல்களே. தற்போதுள்ள தமிழிசை எனப்படும் கர்நாடக இசையின் தனித் தன்மைக்கு காரணமான ராகம், கமகம், தாளம் போன்றவற்றுக் கெல்லாம் அடிப்படி இலக்கியங்களாக இந்தப் பாடல்கள் திகழ்கின்றன. தற்போதுள்ள ராகங்கள் எல்லாம் தேவாரப் பண்களின் வளர்ச்சி நிலையில் உருவானவையே".

தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் தேவாரத் திருமுறை ஓதுதற்கு 48 பிடாரர்கள் (ஓதுவார்கள்) நியமித்து அவர்களுக்குத் துணையாக ஐம்பது பக்கவாத்தியங்களையும் அமைத்துக் கொடுத்து நிவந்தங்களை ஏற்படுத்தினான். இவ்வாறு தேவாரத் திருமுறைகளும் திருமுறைகளின் பண்ணிசை மரபும் கோயில்களில் வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

திருப்பதிகங்கள் அனைத்தும் வாய்ப்பாடலாக இருக்கின்றன. அப்படிப்பாடப்படும் பாடல்களோடு உடன் வாசிக்கப் பல பக்க வாத்தியங்களும் அப்போது பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இங்கு திருமுறை விண்ணப்பம் பாடுவோர், உடுக்கை வாசிப்போர், மத்தளம் வாசிப்போர் ஆகியோர் இருந்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியக் கலை மிக மேன்மையாக வளர்க்கப்பட்டிருக்கிறது என்பது முக்கிய செய்தி. தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் நாட்டியத்திற்காக நானூற்று ஏழு நாட்டிய மங்கைகளும் ஏழு நட்டுவனார்களும், உடன்பாடுவோர் நான்கு பேரும், மெராவியம் எனும் இசைக்கருவி இசைப்பார் இருவர், கானம் பாடுவோர் இருவர், வங்கியம் இசைப்பார் மூவர், பாடவியம் எனும் இசைக்கருவியை இசைப்போர் நால்வர், உடுக்கை வாசிப்போர் இருவர், வீணை வாசிப்போர் இருவர் ஆரியம் பாடுவார் மூவர் (அதாவது வேதம் ஓதுதல்) தமிழ் பாடுவோர் நால்வர், கொட்டி மத்தளம் வாசிப்போர் இருவர், முத்திரைச் சங்கு ஊதுவோர் மூவர், பக்கவாத்தியம் வாசிப்போர் ஐவர் இப்படிப் பற்பலர் இங்கு பணிபுரிந்ததற்கான வரலாற்று ஆவணங்கள் உண்டு. திருப்பதியம் விண்ணப்பம் செய்வோருக்கு பிடாரர்கள் என்று பெயர். இந்த செய்திகளிலிருந்து மாமன்னன் ராஜராஜன் இசையின் மீது எந்த அளவு ஆர்வம் கொண்டிருந்தான் என்பது புலப்படுகிறது.

இப்படி ஆலயத்தில் பாடுவதற்கும், உடன் வாத்தியம் வாசிப்பதற்கும், நடனமிடுதற்கும் இந்தக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் இவைகள் விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நாட்டியமாடும் நங்கையர் நானூற்றி ஏழு பேருக்கும் இரண்டு தளிச்சேரிகள் (குடியிருப்புப் பகுதிகள்) அமைத்து அவரவர்க்குத் தனித்தனியாக வீடுகள் கொடுத்து அவற்றுக்கு இலக்கங்களும் கொடுத்த செய்தி குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நங்கையர் அனைவர் பெயர்களும் அவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவர், முன்பு பணிபுரிந்த இடம் ஆகிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருப்பதிலிருந்து, அரசன் இசை ஆடற்கலைஞர்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்தான் என்பதை இதிலிருந்து அறியலாம்.

அருணகிரிநாதரின் திருப்புகழ் இசையில் தஞ்சை

'திருப்புகழ்' எனும் சந்தக்கவிதைகளை இயற்றி அறுமுகனுக்கு இசை மழை பொழிந்தவர் அருணகிரிநாதர். அவர் பாடல்களில் சந்தம் தாளம் தவறாமல் வந்து விழுந்திருப்பதை ரசிக்காதவர் இல்லை. அப்படிப்பட்ட அருணகிரியின் திருப்புகழ் பாடல்கள் சிலவற்றில் தஞ்சை மேவிய பெருமாளே என்று முருகனை அவர் வழிபட்டிருக்கிறார். தஞ்சைக் கோயிலில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஆலயம் நாயக்கர் கால ஆட்சியில் சேவப்ப நாயக்கர் கட்டியதாக வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தின் கோபுரத்தில் காணப்படும் முருகனின் விக்கிரகத்தைப் பார்த்து அருணகிரியார் இந்தப் பாடல்களைப் பாடியிருக்கிறார். அதில்

"அஞ்சன வேல்விழி மடமாதர் அங்கவர் மாயையில் அலைவேனோ
விஞ்சுறு மாவுன தடிசேர விம்பமதாயருள் அருளாயே
நஞ்சமு தாவுணும் அரனார்தம் நன்கும் ராவுமை அருள்பாலா
தஞ்சென வாமடியவர் வாழத் தஞ்சையில் மேவிய பெருமாளே."

இந்தப் பாடலில் அருணகிரியார் ஆலகால விடத்தை அமுதாக உட்கொண்ட பெருமானின் புதல்வா! உமாதேவியாரால் அருளப்பட்ட பாலனே! தம்மைச் சரணடைந்தவர்கள் வாழும் தஞ்சையில் எழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இனியும் மைதீட்டிய வேல்போன்ற கண்களுடைய மாதரின் மோகத்தில் மூழ்கித்திரிவேனோ? அடியேன் மேன்மை அடையும்படியாக உன்னுடைய திருவடிகளைச் சேர அருள்புரிவாயாக என்கிறார்.

மற்றொரு பாடலில் பூங்கொம்பு போன்ற இடை, கொவ்வைக்கனி யொத்த அதரங்கள், கருமேகமன்ன கூந்தல், மேருமலையனைய தனங்களையும் உடையவளாகிய குறக்குலப் பெண்ணாம் வள்ளியைத் தலைவியாகக் கொண்ட நற்குணங்களனைத்தையும் உடைய வேலவா! சம்பரனைக் கொன்றவனான காமனை எரித்து அழித்த நெற்றிக்கண் கொண்ட சிவபெருமானுக்கு ஆச்சாரியனே! மிக உயர்ந்த கோபுரங்களும், செம்பொன்னாலாகிய மாளிகைகளுமுடைய தஞ்சை மாநகரில் எழுந்தருளியிருக்கும் மேலோனே! கடல் மீன்களை வீழ்த்தும்படியான அழகிய நெடிய கண்களையுடைய மாதரின் இன்பக் கடலாகிய தீயில் அழுந்தி மீளமுடியாமல் தவிக்கின்ற நான், என்பிரானாகிய உன்னை நினையாமல் போன இந்திரஜாலம் போன்ற இந்த மயக்கம் தீர இங்கு வாவென்று உன்னை அழைத்தேன். எனக்கு ஞானம் அருள்வாய்! என்கிறார்.

அடுத்தப் பாடலில் கற்பக விருக்ஷத்தைப் பூமிக்குக் கொணர்ந்தவனும், பாஞ்சஜன்யம் எனும் சங்கை உடையவனும் எல்லாப் பொருள்களுக்கும் ஆதியாகிய கேசவனும், உலகோர் புகழ்வாழும்படியான 'கவுஸ்துவம்' எனும் மணியை மார்பில் அணிந்தவனாகிய திரிவிக்கிரமாவதாரம் எடுத்த திருமாலின் மருகனே! எண்திசை பூமி இவை முற்றும் நிரம்பப்பெற்ற பலம் பொருந்திய அசுரசேனை சாம்பற்பொடிபோல அழிய வென்று மிக்க ஒளி வீசும் திருமேனியை உடைய வேலவா! சந்திரனைச் சூடியவலும், நாகங்களை ஆபரணமாகப் பூண்டவளும், உலகை உண்ட நாரணி என்ற பெயரை உடையவளும் ஆலகால விஷத்தை உண்டவளும், உலகத்திற்கெல்லாம் தாயுமாகிய உமாதேவியார் பெற்ற ஞானப்புதல்வனே! குறத்தியாகிய வள்ளியம்மை உறங்கும் அழகிய மார்பை உடையவனே, பலமிக்க நீலமயிலாகிய வாகனத்தில் விளங்கி, பிரமனும், திருமாலும், அவரவர் வாழ்கின்ற பதிகள் அனைத்துக்கும் மேன்மை பொருந்திய தஞ்சை மாநகரின் சிறந்த கோயில் ராஜகோபுரத்தில் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானே! மணமிக்க கூந்தலைக் கோதி மாலைகள் தரித்து, மஞ்சளால் மேனியை அழகு செய்துகொண்டு கழுத்தில் உயர்ந்த ஆணிமுத்துக்கள் பொருந்திய மாலைகளை அணிந்து, தெருவின் நடுவில் கண்டபேர்களையெல்லாம் அன்புள்ளவர்கள் போல் அழைத்து வந்து, மேருமலையன்ன தனங்களில் கண்களாகிய கூரிய வேலினை எறிந்து, விலையைக் கூறி வந்தவர்களையெல்லாம் கையினால் அணைத்து, தேனூறும் அதரங்கள் பருகி, மந்தமாருதம் வீசும் பஞ்சணையில் புணர்ந்து, மயக்கம் செய்யும் மங்கையரின் சுகபோகமெனும் தீவினைகள் ஒளிமங்கிக் கெடுமாறு எனக்கு அறிவைப் புகட்டி வண்டுகள் உலவும் கடம்ப மாலை சற்றிலங்க வந்து அருள் புரிவாயே! என்கிறார்.

பெருவுடையார் உலா

இரண்டாம் சரபோஜி மன்னரின் அவைக்களப் புலவராய்த் திகழ்ந்த கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய பக்தி உலா பெருவுடையார் உலா. இதில் சிவபெருமானின் திருமேனி எழிலினையும், கோயிலின் சிறப்பையும் பலவாறு சுவைபட பாடியுள்ளார். ஒளிமிக்க பிறைச்சந்திரனைத் தம் சடையில் அணிந்த எங்கள் பெருமான் ஸ்ரீ பிரகதீஸ்வர சுவாமி. அவர் வழிபடுபவர்க்குப் புகழினைக் கொடுப்பார்.. கருணையுடைய அருள்மொழி விநாயகப் பெருமானின் அழகிய மலர் போன்ற இரு திருவடிகளையும் பணிந்து வணங்கி அவர் அருளால் இதை இயம்பலுற்றேன் என்பதாகும்.

இராஜராஜேச்சர நாடகம்.

இராஜராஜன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். அவரது பிறந்த நாள் மிகச் சிறப்பாக அந்த நாட்களில் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது. "இராஜராஜேச்சர நாடகம்" எனும் கூத்து அத்தகைய விழாக்களில் நடிக்கப்பெறுவது உண்டு. அந்த நாடகத்தை ஆடுபவர்களுக்கு ஆண்டுதோறும் நூற்றியிருபது கல நெல் அளிக்க இராஜேந்திர சோழன் ஏற்பாடு செய்திருந்த செய்தி நமக்குத் தெரியவருகிறது.அக்காலத்தில் நடனங்களும் நாடகங்களும் அனேகமாக ஆலயங்களிலுள்ள அரங்க மண்டபங்களிலேயே நடைபெற்று வந்தது என்று கூறுவதால் நகரில் பல ஆடலரங்குகளும், நாடகச் சாலைகளும் இருந்தன என்று தெரிகிறது. மேலும் இசை நாடகங்களில் வல்ல நாடகமய்யன், சாக்கை, கனபாடி காமரப் பேரரையன், வாத்திய மாராயன் முதலியோரும் இத்துறையில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிகிறது. மேற்சொன்ன ராஜராஜேச்சர நாடகம் நெடுங்காலமாக வழக்கில் இல்லாமல் போய்விட்டது.

ஆலயம் வளர்த்த தமிழிசை

இராஜராஜ சோழன் காலத்தில் தேவார மூவரது அருட்பாடல்கள் ஒரு சிலவே திருவாரூர் போன்ற பெருந்தலங்களில் திருமுன்னர் பூஜாகாலங்களி ஓதப்பெற்றன. தஞ்சைப் பெரிய கோயில் எடுப்பிக்கு முன்னர் முதலாம் இராஜராஜன் திருவாரூர் தியாகேசர் சந்நிதியில் தினமும் பாடுகின்ற சில பாடல்களின் அருட்சுவையையும், பொருட்சுவையயும் உணர்ந்து இவை எவ்வகைப் பாடலென கேட்டுத் தெரிந்துகொண்டு அவற்றில் மற்ற பாடல்களையும் தேடிக் கண்டுபிடிக்க விரும்பி முயற்சி செய்தான். முயற்சி திருவினையாகியது.

சிதம்பரத்துக்குச் சென்ற மன்னனிடம் தீட்சிதர்கள் அந்த ஏடுகளை அங்கு கொண்டு வந்து வைத்த மூவரும் வந்தால் அவற்றை எடுத்துச் செல்லலாம் என இயம்பினர். மன்னனும் அறிஞர் பெருமக்களின் ஆலோசனையின் பேரில் அம்மூவருக்கும் பொன்னால் சிலைகள் செய்து அவற்றைப் பல்லக்கில் வைத்துக் கொண்டு போய் தீட்சதரிடம், இதோ அந்த மூவர், ஏடுகளை எடுங்கள் என்று சொல்ல அவர்களும் மறுபேச்சு இன்றி அந்த ஏடுகள் இருந்த அறைகளைத் திறந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சுவடிகளில் பல அரிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாகியிருப்பதையும், மீதமிருந்த சில ஏடுகளை மட்டும் எடுத்துச் சுத்தம் செய்து இறைவன் வாக்குப்படி அவற்றை நம்பியாண்டார் நம்பி மூலம் பன்னிரு திருமுறைகளை வகுத்தான் என்பதை முற்பகுதியில் பார்த்தோம். இவ்வாறு பெருமன்னன் ராஜராஜனின் காலம் தமிழுக்கும், தமிழிசைக்கும் பெருமைக்குரிய காலமாகத் திகழ்ந்தது என்பதை வரலாறு நமக்கு அறிவிக்கிறது.

முடிவுரை.

உலகம் உள்ளவரை, இறைவனும், ஆலயங்களும் வழிபாடுகளும் என்றென்றும் நீடிக்கும் என்று மாமன்னர் உறுதியாக நம்பினார். இந்த இறைவழிபாடு சிறக்கவும், மக்கள் பக்தி மார்க்கத்தில் ஈடுபடவும் இந்தத் தேவார இசையை மக்களுக்குக் கொடுத்து அவை உலகம் உள்ளளவும் இருக்க ஏற்பாடு செய்தார். பெரிய கோயிலின் பெருமையும், தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் இந்த அரிய தமிழிசை வடிவங்கள் வழி என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

"அன்னமிட்ட அன்னையின் கை!"

                                                                   Sri Maha Mariamman

"அன்னமிட்ட அன்னையின் கை!"
(எனக்கு ஏற்பட்ட அனுபவம் www.classroom2007.blogspot.com இல் வெளியிடப்பட்டது)
நன்றி: திரு சுப்பையா அவர்கள்.

மகாத்மா காந்தி முதன் முதலில் காலடி எடுத்து வைத்த தமிழக கிராமம் எது தெரியுமா? தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தில்லையாடி எனும் கிராமம். அங்கு அவருக்கு என்ன அப்படி ஆர்வம்? தென்னாப்பிரிக்காவில் மகாத்மா சத்தியாக்கிரகம் செய்தபோது அவரோடு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்பட்ட ஒரு டீன் ஏஜ் பெண், வள்ளியம்மை என்று பெயர், அவர் சிறையில் மாண்டு போனார். அந்த சின்னஞ்சிறு பெண்ணின் தியாகத்தைப் போற்ற மகாத்மா அந்தப் பெண் பிறந்த கிராமமான தில்லையாடிக்கு விஜயம் செய்து அங்கு அவர்கள் நினைவாக ஒரு ஸ்தூபியையும் திறந்து வைத்தார். அந்த தில்லையாடியில்தான் நானும் அவதரித்தேன்.

அப்படிப்பட்ட தியாகி பிறந்த ஊரில் பிறந்ததனால் உனக்கு என்ன பெருமை என்று நீங்கள் கேட்பதும் எனக்குப் புரிகிறது. ஒரு அல்ப ஆசை. அந்த மண்ணின் ராசி, நாமும் ஏதாவது ஒரு வகையில் தியாகியாக முடியாதா என்று. இன்று வரை ஆகவில்லை. அது போகட்டும். இந்த ஊரில் நாராயணசாமி என்றொரு நெசவாளி. இவரும் மேலும் சிலரும் தென்னாப்பிரிக்கா சென்றால் அங்கு நல்ல வேலை கிடைக்கும், பணம் சம்பாதித்து ஊர் திரும்பலாம் என்று நம்மவர்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் "கங்காணி'களை அணுகினார்கள். அப்போதெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சி நடக்கும் எந்த நாட்டுக்கும் நம் இஷ்டத்துக்குச் செல்லலாம். பாஸ்போர்ட் இல்லை, விசா இல்லை. நேராக நாகப்பட்டினம் போனார்கள், அங்கிருந்து படகில் சென்று கடலில் வெகு தூரத்தில் நிற்கும் கப்பலில் ஏறிப் பயணம் செய்து தென்னாப்பிரிக்காவில் இறங்கினார்கள். அங்கு இவர்களுக்கு என்ன பெயர் தெரியுமா? கூலிகள். ஆம்! காந்தி கூட அங்கு ஒரு வழக்குக்காக சென்றவர் இல்லையா? அதனால் அவருக்கும் 'கூலி வக்கீல்' என்றுதான் பெயர். தானாக வலியச் சென்று அடிமைகளானவர்கள் நமது சகோதரர்கள். ஏற்கனவே அந்த பூமியின் சொந்தக்காரர்களான கருப்பர்கள் அடிமைப்படுத்தப் பட்டுள்ள நிலையில் இங்கிருந்தும் மேலும் அடிமைகள். ஆனால் அவர்களும் இவர்களும் கருப்பர்கள் என்றும், அடிமைகள் என்றும் வகைப்படுத்தப் பட்டார்கள். அங்கிருந்த நிலைமை குறித்து மேலதிகத் தகவல்களுக்கு மகாத்மா காந்தியின் "சத்திய சோதனை"யைப் படியுங்கள்.

அப்படி தென்னாப்பிரிக்காவில் குடியேறிய குடும்பத்தில் உதித்த பெண்தான் வள்ளியம்மை. அந்தப் பெண் எங்கள் சின்னஞ்சிறிய கிராமத்துக்கு பெருமை சேர்த்து விட்டாள். அந்த கிராமமே 'வள்ளியம்மை நகர்' என்றே அழைக்கப்படலாயிற்று. அந்த புண்ணிய பூமியில் நான் அவதரித்ததாகச் சொன்னேன் அல்லவா? ஆனால் எந்த வகையிலும் வாழ்க்கை சொல்லும்படியாக அமையவில்லை. அந்த ஊரைச்சுற்றி பல அருமையான தலங்கள். மிக அருகில் திருவிடைக்கழி எனும் அருணகிரியால் பாடப்பட்ட திருத்தலம். வடக்குத் திருச்செந்தூர் என வழங்கப்படும் முருகத்தலம். அடுத்தது திருக்கடவூர் எனும் அபிராமியம்மைத் திருத்தலம். இங்கு கோயில் கொண்டுள்ள காலசம்ஹாரமூர்த்திதான் மார்கண்டனுக்காக எமனை வதம் செய்தவர். அபிராமி அந்தாதி எனும் மிக உயர்ந்த நூல் சுப்பிரமணிய பட்டர் என்பவரால் எழுதப்பட்டது. பின்னர் இவர் அபிராமி பட்டர் என அழைக்கப்பட்டார். அதற்கடுத்ததாக அனந்தமங்கலம் எனும் சிற்றூர். இங்கு மிக உயரமான ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கிறார். அதையொட்டி எப்போதும் அலைகள் பாடிக்கொண்டிருக்கும் இடம், தரங்கம்பாடி. அந்த நாளில் டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டையை இன்றும் காணலாம், அருகில் கடல் எப்போது விழுங்குமோ என்றபடி உயிரைக் கையில் பிடித்தபடி நிற்கும் மாசிலாமணிநாதர் ஆலயம். அங்கு போகும் வழியில் ஒழுமங்கலம் என்றொரு ஊர். அங்கு எழுந்தருளியுள்ள மாரியம்மன் மிகப் பிரசித்தமானவள். இந்த மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்த தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வர். அப்படிப்பட்ட சூழலில் அமைந்த ஊர் தில்லையாடி எனும் வள்ளியம்மை நகர். அது சரி! இதெல்லாம் எதற்கு இப்போது. பூகோள பாடமா? இல்லை, இந்த ஒழுமங்கலம் மாரியம்மனின் திருவிளையாடலைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்காக இத்தனை பீடிகை போட்டேன். கொஞ்சம் பொறுமை காட்டுங்கள், விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

நான் எனது ஒன்பதாவது வயதில் பிறந்த மண்ணை விட்டு மயிலாடுதுறை செல்லும்படியாகி விட்டது. அப்போது எங்களுக்கிருந்த வீடு அறுநூறு ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர் திருவிடைக்கழியில் இருந்த நஞ்சை நிலமும் சில ஆயிரங்களுக்கு விலை போயிற்று. ஒருவழியாகப் படித்து வேலையில் சேர்ந்தது திருச்சியில். அங்கிருந்து கரூர், பின்னர் புதுக்கோட்டை, கடைசியில் தஞ்சாவூர். கரூரில் இருந்த சமயம் திருமணம் ஆயிற்று. முதலில் ஒரு ஆண் குழந்தை. அதன் ஓராண்டு நிறைவுக்கு காது குத்தி, தலைக்கு மொட்டை போட பிறந்த பூமிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்படி வேண்டுதல். ஒழுமங்கலம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்ல கரூரிலிருந்து மயிலாடுதுறை வந்து தங்கி மறுநாள் காலையில் கிளம்பி ரயிலில் பயணம் செய்து பொறையாறு என்கிற ரயில் நிலையத்தில் இறங்கி அருகிலுள்ள ஒழுமங்கலம் சென்றோம். அப்போது மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையே ரயில் போக்கு வரத்து இருந்தது. வழியில் மாயூரம் டவுன், மன்னம்பந்தல், ஆக்கூர், செம்பொன்னார்கோயில், திருக்கடவூர், தில்லையாடி, பொறையாறு கடைசியில் தரங்கம்பாடி.

ஒழுமங்கலத்தில் குழந்தைக்கு மொட்டை அடித்து, குளத்தில் மூழ்கி பின்னர் மாரியம்மனுக்கு மாவிளக்கு முதலியன போட்டு தரிசனம் முடிய கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணியாகிவிட்டது. ஒழுமங்கலம் மாரியம்மன் மிக சக்தி வாய்ந்தவள் என்பது பொதுவாக அங்கு நம்பப்படும் செய்தி. எந்தக் குறையுமில்லாமல் எங்கள் நேர்த்திக் கடன் முடிவடைந்தது. நல்ல வெயில். அருகிலுள்ள பொறையாறு ரயில் நிலையம் சென்றோம். குழந்தைக்கு நல்ல பசி. எங்காவது பசும்பால் கிடைக்குமா என்று விசாரித்துப் பார்த்தேன். எங்கும் கிடைக்கவில்லை. பொறையாறு நிலையத்துக்கு அருகிலும் எந்த ஓட்டலும் இல்லை. எங்களுக்கும் நல்ல பசி. என்ன செய்வது. மாயூரம் செல்ல தரங்கம்பாடியிலிருந்து 12.45க்கு ஒரு ரயில் வரும். அது கிட்டத்தட்ட இரண்டு மணிக்குத்தான் மாயூரம் போகும். அதுவரை பசி தாங்கமுடியுமா? குழந்தையின் அழுகையும் அதிகரித்து வந்தது. ரயில் சரியாக 12.45க்கு வந்தது. இங்கிருந்த அடுத்த நிலையம் தில்லையாடிதான். அங்கு இப்போது யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் ஒன்றும் தெரியாது. அப்படி யாராவது இல்லாமலா போய்விடுவார்கள். போய் அங்கு யார் வீட்டுக்காவது போய் நிலைமையைச் சொல்லி அங்கு சாப்பிட்டால் என்ன என்று தோன்றியது. சரியாக ஒரு மணிக்கு ரயில் தில்லையாடி போய்ச் சேர்ந்தது. நாங்கள் துணிந்து இறங்கி விட்டோம்.

கோயிலுக்கு எதிரில் சந்நிதித்தெருவின் முடிவில் ரயில் நிலையம். நான் இருந்தது வடக்கு மடவளாகம் எனும் தெரு. அங்கு போவது மிகவும் சுலபம். அதிகம் நடக்கத் தேவையில்லை. நல்ல வெய்லில் வேகமாக சந்நிதித் தெருவைக் கடந்து வடக்கில் திரும்பி வடக்கு மடவளாகம் போய்ச் சேர்ந்தோம். அங்கு சுமார் பதினைந்து இருபது வீடுகள்தான் இருக்கும். அந்தத் தெருமுனையில் நாங்கள் திரும்பிய போது அங்கு ஒருவரையும் காணவில்லை. ஏழெட்டு வீடு தாண்டி ஒரு வீட்டு வாசலில் ஒரு அம்மையார் நிற்பது தெரிந்தது. சரி அங்கு போய்விடுவோம். மொட்டையடித்த கைக்குழந்தை, கணவன் மனைவியாக நாங்கள் இருவர். எங்களுக்கு உணவு இல்லாமலா போய்விடும். ஆபத்துக்குப் பாவமில்லை. பசி என்று கேட்டால் போட மறுக்கப் போகிறார்களா என்ன? துணிந்து நடந்தோம்.

அந்த வீட்டை நெறுங்கிய சமயம் அந்த அம்மையார் எங்களை எதிர்பார்த்து நிற்பது போலத் தெரிந்தது. நாங்கள் நெறுங்கி வந்ததும் "வாருங்கள், வாருங்கள்" என்று தெரிந்த உறவினரை அழைப்பது போல அந்த அம்மையார் எங்களை அழைத்தார்கள். நாங்களும் அப்பாடா என்று வீட்டினுள் நுழைந்தோம். நான் சொன்னேன், இதே தெருவில் இருந்த சுந்தராம்பாள் பாட்டியின் பேரன் நான். என் அப்பா சைகோன் வெங்கட்டராமன் என்பது என்றேன். ஆகா, தெரியுமே, நன்றாகத் தெரியுமே என்று எங்கள் குடும்ப விஷயங்களை விசாரிக்கத் தொடங்கி விட்டாள்.

உள்ளே வாருங்கள், கைகால்களை சுத்தம் செய்துகொண்டு வந்து உட்காருங்கள். சாப்பிடலாம். மணி ஆகிவிட்டது என்றார். என்ன இது ஆச்சரியம். எங்கள் மனவோட்டத்தை இந்த அம்மையார் புரிந்து கொண்டாரா என்ன. குழந்தைக்கு பால் தரட்டுமா, நீங்கள் வேறு ஏதாவது கொடுப்பீர்களா என்றார். பால் முதலில் தருகிறோம். பிறகு சிறிது ரசம் சாதம் கொடுக்கலாம் என்று என் மனைவி சொன்னாள். எங்களுக்கு இன்னமும் ஆச்சரியம் தாங்கவில்லை. நானே கேட்டேன்.

"நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா, அம்மா?" என்று. இன்னும் இல்லை என்றார் அவர். "ஏன், நேரமாகிவிட்டதே" என்றேன். அப்போது அந்த அம்மாள் சொன்ன செய்திதான் எனக்கு இத்தனை ஆண்டுகள் கழித்தும் மனதைவிட்டு அகலாமல் இருக்கிறது. அவர் சொன்னார். நாங்கள் எப்போதும் காலையில் பழைய சாதம் சாப்பிட்டுவிடுவோம். பிற்பகல் ஒரு மணிக்கு தரங்கம்பாடி ரயில் வந்த பிறகு அதில் யாராவது விருந்தாளிகள் வருகிறார்களா என்று பார்த்துவிட்டுத்தான் சாப்பிடுவது வழக்கம் என்றார் அவர்.

அது எப்படி இந்த கிராமத்துக்கு விருந்தாளி தினம் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்றேன். அவர் சொன்னார், இங்கு மிக அருகாமையில் இருக்கும் திருவிடைக்கழி, திருக்கடவூர், ஒழுமங்கலம் இவைகளெல்லாம் பிரார்த்தனை தலங்கள். இங்கு வேண்டுதல் உள்ளவர்கள் அடிக்கடி வந்து தரிசனம் செய்து, பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு போவார்கள். அப்படி இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இருந்தால் நிச்சயம் இங்கு வந்துவிட்டுத்தான் போவார்கள். அப்படி அடிக்கடி இங்கு வருபவர்கள் உண்டு. அந்த வகையில் வரும் விருந்தினர்களை உபசரித்து, பசியோடு வரும் அவர்களுக்குச் சாப்பாடு போட்டுவிட்டுத்தான் நாங்கள் சாப்பிடுவது என்பது நெடுநாட்களாக இருந்து வரும் பழக்கம் என்றார். அப்போது அவரது கணவர் அந்த ஊரின் கணக்குப் பிள்ளை எங்கோ வெளியில் போய்விட்டு குடையோடு வீட்டுக்குத் திரும்பினார்.

எங்களைப் பார்த்ததும் முகம் மலர்ந்து முகமன் கூறி, வாருங்கள், கொஞ்சமும் தயக்கமில்லாமல் உங்கள் வீடு போல இங்கு சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு மாலை ரயிலில் போகலாம் என்றார். வீட்டில் அவர்கள் இரண்டே பேர்தான் என்றாலும், நாலைந்து பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம். இது என்ன அதிசயம். நாங்கள் வருவதை எப்படி அவ்வளவு நிச்சயமாக எதிர்பார்த்தார்கள். ஒன்றும் புரியவில்லை. அவரும் கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து உட்கார அனைவரும் உணவு அருந்தி எழுந்த பின் அந்த வீட்டு அம்மாள் தான் உட்கார்ந்து உணவருந்தினார். அவர் சொன்னது போலவே அன்று பகல் வெயில் நேரத்தில் அவர்கள் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு மாலை ரயிலேறி ஊர் திரும்பினோம்.

Thirukkadavur temple

Thiruvidaikkazhi (Thirukuravadi)

Thillayadi temple

அந்த அம்மையாரின் பரந்த உள்ளத்தினால் ஏற்பட்டதா, அல்லது ஒழுமங்கலம் மாரியம்மன் எங்களை "பசியாயிருக்கிறது என்று தவிக்கிறீர்களே, போங்கள், அங்கு ஒரு அம்மாள் உங்களுக்காக சாப்பாடு வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள்" என்று எங்களை இங்கே அனுப்பி வைத்தாளா? தெரியவில்லை. இன்று வரை புரியவில்லை.     .

கவியோகி சுத்தானந்த பாரதியார்

கவியோகி சுத்தானந்த பாரதியார்
(தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது)

யோகியார் பற்றிய முன்னுரை:
கவியோகி சுத்தானந்த பாரதியார் குறித்து நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் அந்தக் காலத்தில் டி.கே.பட்டம்மாள் பாடிய "எப்படிப் பாடினரோ அடியார் - அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே!" என்ற பாடலை நினைத்துப் பார்க்கலாம். அல்லது எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி பிரபலமான இந்தப் பாடலை நினைவுப் படுத்திக் கொள்ளலாம். அது:- "இல்லையென்பான் யாரடா? என் அப்பனைத் தில்லையிலே பாரடா! கல்லும் கசிந்துருகக் கனிந்த முறுவலுடன் காட்சியளிக்கும் அந்தக் கருணைச் சுடரொளியை, இல்லையென்பான் யாரடா?" இந்தப் பாடலும் நமக்கு கவியோகியை நினைவு படுத்தும். மற்றொரு பாடல் "அருள் புரிவாய் கருணைக் கடலே, ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே, அருள்புரிவாய் கருணைக் கடலே" என்பது. அடுத்தது "ஜகஜ்ஜனனீ சுகவாணி கல்யாணி", "ஜங்கார ஸ்ருதி செய்குவாய்", “சகல கலா வாணியே, சரணம் தாயே!" என்றொரு பாடல். இது அந்தக் காலத்தில் பல பள்ளிக்கூடங்களில் காலையில் பள்ளி தொடங்கும் போது பாடப்படும் கடவுள் வாழ்த்துப் பாடலாகத் திகழ்ந்திருக்கிறது. இப்படி அந்தக் காலத்தில் கவிதை உலகில் கொடிகட்டிப் பறந்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். இவற்றிலெல்லாம் மிகச் சிறந்தது என்று அனைவராலும் பாராட்டப்பட்டது "பாரத மகாசக்தி காவியம்" எனும் படைப்புதான்.

இவரது படைப்புக்கள் பலப்பல. இவர் ஒரு சிறந்த இலக்கிய வாதி. ஆன்மீக உலகத்திலும் கொடிகட்டிப் பறந்தவர். மகாத்மா காந்தி விரும்பிய "உலகமே ஒரு குடும்பம்" என்பது யோகியின் பார்வை. இவருக்கு ஜாதி, மதம், இனம், நாடு என்ற எல்லைகள் கிடையாது. சுத்த ஆன்ம யோக நெறிமுறைகளே இவரது வாழ்க்கை. எட்டு வயதிலேயே சில மகான்களின் கருணையால் குறிப்பாக இவரது உறவினரும் மாபெரும் யோகியுமான பூர்ணானந்தர் என்பவரால் பேரின்பப் பாதையை அறிந்து கொண்டவர். இவர் சந்தித்தப் பெரியோர்கள் அனேகர். அவர்கள் மகாத்மா காந்தி, பாரதியார், வ.வெ.சு.ஐயர், அரவிந்தர், திலகர், வ.உ.சி., கல்கி இப்படிப் பற்பல பெயர்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆன்மீகத் தூண்களான ஷீரடி பாபா, ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், அரவிந்த அன்னை, ஞானானந்தகிரி சுவாமிகள் ஆகியோரின் தொடர்பும் இவருக்கு இருந்தது.

சுத்தானந்த பாரதியார் ஒரு பன்மொழிப் புலவர். தமிழில் கவிதை, இசைப்பாடல்கள், சிறுகதை, கட்டுரை, நாவல் முதலியன இவரது புகழ் மிக்கப் படைப்புகள். மொழிபெயர்ப்புப் பணியிலும் இவர் தனி முத்திரை பதித்தவர். "பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" எனும் மகாகவி பாரதியின் வாக்கைச் செயல்படுத்திக் காட்டியவர். பல அயல்நாட்டு அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை இவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். இத்தாலிய மகாகவி தாந்தே வரலாறு, அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் வரலாறு, பிரெஞ்சு இலக்கிய மேதை விக்டர் ஹியூகோவின் அற்புதமான நாவலான "லே மிசரபிளே', "லாஃபிங் மேன்" போன்றவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதியிருக்கிறார். விக்டர் ஹியூகோவின் 'லே மிசரபிளே'தான் பட்சிராஜா பிலிம்ஸ் நாகையா நடித்த "ஏழை படும் பாடு" எனும் படமாக வெளிவந்தது. 'லாஃபிங் மேன்" கதையை "இளிச்சவாயன்" என்று மொழிபெயர்த்து எழுதினார்.

இளமைப் பருவம்.
இவரது இளமைக்காலம் பற்றி அதிகமாக யாரும் எழுதாவிட்டாலும் இவரே ஒரு காலத்தில் சில பத்திரிகைகளில் எழுதியிருக்கிற கட்டுரையிலிருந்து சில செய்திகள் தெரிய வருகின்றன. "சோதனையும் சாதனையும்" எனும் நூலில் இவர் தன் சுயசரிதையை விரிவாக எழுதியிருக்கிறார். அது தவிர சிவகங்கை மன்னர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து பின்னர் அருகிலுள்ள சோழபுரத்தில் யோகியார் தொடங்கிய உயர்நிலைப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக வந்த அவரது உறவினர் திரு ஆர்.வெங்கடகிருஷ்ண ஐயர் எழுதி வெளியிட்ட "Experiences of a pilgrim soul" எனும் வாழ்க்கை சரிதமும் இவர் வரலாற்றைக் கூறுவதாகும். சிவகங்கை இவரது ஊர். தந்தை பெயர் ஜடாதரர். தாயார் பெயர் காமாட்சி அம்மாள். இவர் பிறந்தது 11-5-1897. இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள், ஒரு மூத்த சகோதரி. இவர்கள் இப்போதைய ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தென் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள். வேதம், இசை இவற்றில் தேர்ந்தவர்கள்.அந்த குடும்பம் பக்தி நெறியில் ஈடுபட்டவர்கள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வெங்கடசுப்பிரமணியன் என்பது. இவருடைய வீட்டுக்கு வந்த இவரது உறவினரும் மாபெரும் ஞானியுமான பூர்ணானந்தர் இவரது ஆற்றலை உணர்ந்து இவருக்கு சுத்தானந்தர் என்று பெயர் சூட்டினார். இவரது தகப்பனார் வக்கீலாக இருந்தவர். பள்ளியில் பயிலும் காலத்திலேயே இவருக்குக் கம்பன் கவியமுதில் மனம் நாட்டம் கொண்டார். திருக்குறள் இவர் மனதைக் கவர்ந்தது. தந்தை ஜடாதரர் இவரது கல்வி, ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். மதுரையில் இவரது தாயின் குடும்பமும் வசதியான குடும்பம். மதுரையில் இவரது தாய் மாமாவும் ஒரு வக்கீல். நல்ல செல்வந்தர்.

இவருடைய தாய்வீட்டில் எல்லா வசதிகளும் இருந்த போதும் மனத்தில் மகிழ்ச்சியில்லையாம். அமைதி இல்லையாம். சிவகங்கையில் தந்தை வீட்டில் அமைதியையும், மதுரையில் தாய்மாமன் வீட்டில் உலகத்தையும் அறிந்தேன் என்கிறார் இவர்.

இளம் வயதிலேயே சுற்றுப்புற ஊர்களுக்குச் சென்று பெற்றோருடன் சேர்ந்து ஹரிகதை, பஜனை இவற்றை நடத்தி வந்தார். அவருக்கு எட்டு வயது இருக்கும்போது சிதம்பரம் ஆடல்வல்லான் ஆலயத்துக்குச் சென்று நடராஜர் சந்நிதியில் ஆழ்ந்த யோகத்தில் இருந்தார். நெஞ்சம் நெகிழ்ந்து அவர் மனதில் தோன்றியது ஒரு தமிழ்ப்பாட்டு. அதுதான் நான் முன்பே சொன்ன "எப்படிப்பாடினரோ, அடியார் அப்படிப்பாட நான் ஆசை கொண்டேன் சிவனே!" எனும் பாட்டு.

"எப்படிப் பாடினரோ - அடியார்
அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே!
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணிவாசகரும்
பொருளுணர்ந்து உன்னையே (எப்படிப்)
குருமணி சங்கரரும்
அருமைத் தாயுமானரும்
அருணகிரி நாதரும் அருட்சோதி வள்ளலும்
கருணைக் கடல் பெருகி
காதலினால் உருகி, கனிதமிழ்ச் சொல்லினால்
இனிதுனை அனுதினம் (எப்படிப்)

சிதம்பரம் சிவகாமி நடராஜப் பெருமான் திருவருளால் முதன்முதல் கவிபாடி அரங்கேற முடிந்தது சுத்தானந்தரால்.

தெய்வசிகாமணிப் புலவர் என்பவர் இவருக்குத் தமிழ் போதித்தார். இலக்கணம், இலக்கியம் முதலானவற்றை முறையாகப் பயின்றார் இவரிடம். யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரிடம் இவர் ஒரு குறள் எழுதிக் காட்டினார். அது:

"தெய்வ வொளிதனையே தேடு, பிறவெல்லாம்
கைநழுவும் கால்த்திற்காண்" என்பது.

இதைக் கண்ட ஆசிரியர் "நீ எழுது. மேன்மேலும் எழுது, உன்னிடம் கலைமகள் அருள் நிறைந்திருக்கிறது, புலமை இருக்கிறது" என்றார். தன் இளமைக் காலத்திலேயே தமிழ் தவிர, சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். "மில்டனில் தாந்தேயைக் காண்கிறேன், தாந்தேயே என் கவிக்கனவின் தந்தை" என்கிறார்.

மதுரை மீனாட்சி அருளால் யோகியானது.
இவரது இளம் வயதில் தனது தந்தையை இழந்து, இவரும் இவரது தாயாரும் மதுரையில் இருந்த இவரது தாய்மாமா வீட்டில் தங்கி படித்தார். பெரிய மாமாவின் பெயர் வக்கீல் ராமசாமி ஐயர். ஆங்கிலத்தில் பெரும் புலவர். ஜபம், தியானம், பூஜை, பாராயணங்கள் இவைகளை செய்து வந்தார். தானே ராட்டையில் நூல் நூற்று கதர் வாங்கி அணிவார். அவரது மாப்பிள்ளை ஒரு ஞானி. சதா தத்வமசி என்று வாழ்ந்தார். அவரை மனநலமில்லாதவர் என்று துரத்திவிட்டனர். அவர் சுத்தானந்தரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு இவர்களுக்கு நம் வழி புரியவில்லை, நீயும் என்னுடன் வந்து விடு என்றார். அவர் சொன்னார், "ஞானிகளைப் பித்தர் என்று கூறும் இந்த நரகம் உனக்கு வேண்டாம். உலகம் ஒரு துன்பக்காடு, உள்ளுறவுதான் நல்ல உறவு. நீ தனித்திரு, இனித்திரு" என்றார்.

சுத்தானந்தரின் சித்தியின் கணவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர் தகாத உறவொன்றை வைத்துக் கொண்டு இவரது சித்தியைப் படாத பாடு படுத்தி வந்தார். இப்படி அவர் குடும்பத்தில் அனைவர் மீதும் இவருக்குப் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது.

சுத்தானந்தர் கல்லூரிப் படிப்பை முடித்தபின் இவரை லண்டனுக்கு அனுப்பி பார் அட் லா படிக்கவைக்க வேண்டுமென்பது மாமனின் விருப்பம். தனக்குப் பின் தன் வக்கீல் தொழிலைத் தன் குடும்பத்தார் செய்யவேண்டுமென்பது அவரது ஆவல். ஆனால் இவருக்கு வேலைக்குப் போகவேண்டும், சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் சதா ஆன்மீக சிந்தனையில் ஈடுபட்டு வந்தார். கோயில் குளம் போன்ற இடங்களில் தனிமையில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்திருப்பார். இவரது போக்கு இவரது மாமாவுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு நாள் இவரது மாமா இவரை அழைத்து நீ ஒழுங்காகப் படித்து மேற்கொண்டு சட்டம் படிக்க முயற்சி செய்யாமல் சதா சர்வ காலம் கோயில், குளம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறாய். அங்கெல்லாம் போய் கண்ணை மூடிக்கொண்டு யோகம் செய்கிறாயாம். என்னடா இது? படிக்கிறதாய் இருந்தால் இங்கே இரு. இல்லாவிட்டால் எங்காவது போய்விடு. உன்னையும் உன் அம்மாவையும் உட்கார வைத்து சோறு போடுவது நீ படித்து முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் தெரிகிறதா? என்றார்.

யோகிக்கு அவர் சொல்கிற பாதை பிடிக்கவில்லை. என்னால் யோகத்தில் ஈடுபடுவதை நிறுத்த முடியாது. எனக்கு இறைவன் வகுத்த வழி யோகியாக ஆவதுதான் என்றார். அவர் மாமா தன் பெட்டியைத் திறந்து அதில் ஏராளமாகச் சேர்த்து வைத்திருந்த பொன், நகைகள் இவைகளைக் காட்டி, இவைகளெல்லாம் உனக்காகத்தான் நான் சொல்கிறபடி கேட்டால் இவையெல்லாம் உனக்குத் தருகிறேன். இல்லையேல் வேறு யாருக்காவது கொடுத்துவிடுவேன் என்றார். இவர் அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. எனக்கு என் மீனாட்சி அம்மன் அருள் செய்வாள் என்றார். அப்படியானால் நீ இந்த வீட்டில் இருக்க வேண்டியதில்லை, எங்கேயாவது போய் உன் யோகத்தை நடத்திக் கொள் என்றாள். இவரும் சரியென்று சொல்லி கிளம்பினார். உடனே மாமாவும் இவரது அம்மாவும் இவரைத் தடுத்து நிறுத்தினார்கள்.
மாமா கேட்டார், பெரிய வீராப்போடு போகிறாயே, ராத்திரி சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்? திரும்ப இங்கதானே வரவேண்டும் என்றார். இதைக் கேட்ட யோகி நிதானமாகச் சொன்னார், "நான் வெளியே போய்விட்டால் இரவு சாப்பாட்டை என் அன்னை மீனாட்சி போடுவாள்' என்றார். அப்படியா போடாவிட்டால் என்ன செய்வாய் என்றார் மாமா. மரியாதையாக நான் தோற்றுவிட்டேன் என்று சொல்லி இங்கே திரும்பி வந்து விடுகிறேன். இல்லையென்றால் மீனாட்சி விட்ட வழியில் நான் என் பாட்டைப் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

வீட்டைவிட்டுப் புறப்பட்ட சுத்தானந்தர் மீனாட்சி கோயிலுக்குச் சென்றார். ஆலயத்தில் எல்லா சந்நிதிகளிலும் சென்று வழிபட்டு முடித்துவிட்டு அங்கிருந்த ஒரு மரத்தடி மேடையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. அர்த்தஜாமம் முடிந்து வெளியே வந்த தேவேந்திர பட்டர் எனும் சிவாச்சாரியார் மேடையில் தியானத்தில் அமர்ந்திருக்கும் இவரிடம் வந்தார். அவருக்குச் சுத்தானந்தரை நன்கு தெரிந்திருந்தது. அவரை எழுப்பி என்னப்பா இங்கே இந்த நேரத்தில் ஆத்தில் மாமா, அம்மா எல்லோரும் செளக்கியமா? என்று விசாரித்தார். பிறகு அர்த்தஜாமத்துக்கு செய்த நைவேத்தியம் இருந்த பாத்திரத்திலிருந்து பிரசாதத்தை அவருக்குக் கொடுத்து உண்ணச் செய்தார். இவரும் அவற்றைப் பசியாற உண்டார். ஆகா! மீனாட்சி என் விரதத்தை அங்கீகரித்து விட்டாள். இனி அவள் காட்டும் பாதையில் செல்வேன் என்று சபதம் செய்து கொண்டார்.

வீட்டுக்குப் போகலியா என்று கேட்ட சிவாச்சாரியாரிடம் நடந்த விவரங்களைச் சொன்னார். அவர் சுத்தானந்தரை வக்கீல் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுவிட்டு நடந்ததை விவரித்தார். மாமாவுக்கும் இவரது யோகத்தின் மீது நம்பிக்கைப் பிறந்தது. இவர் உறுதியாக நம்பியபடி மீனாட்சி இவருக்கு இரவு உணவு அளித்து தங்க இடமும் கொடுத்து விட்டாளே என்று.

சிவகங்கை வாசம்
தனது பதினெட்டு வயதுவரை இவர் சிவகங்கையில்தான் இருந்தார். ஐந்து வயதில் ரங்க ஐயங்கார் திண்ணைப் பள்ளியில் படித்தார். பின்னர் அரசர் பள்ளியில் படிப்பு. படிப்பில் அதிக கவனமின்றி புலவர்கள், பெரியோர்களின் சொற்பொழிவு என்று இவர் சுற்றத் தொடங்கினார். ஒரு ஆசிரியர் மாணவர்களையெல்லாம் திட்டிக்கொண்டே இருப்பார். பிறகு அவர்களைப் பார்த்து "டேய், தடிப்பயல்களா, நான் சொல்வதை எழுதுங்கள்" என்பாராம். இவரோ, அவர் திட்டிய சொற்களையெல்லாம் எழுதிக் காண்பிக்க அவரிடம் மறுபடி அர்ச்சனை வாங்குவாராம். "பத்து முறை எழுதுடா கழுதை" என்றால், கழுதை கழுதை என்று பத்து முறை எழுதி அடிவாங்கியிருக்கிறார்.

தெய்வசிகாமணிப் புலவர் என்பவர் இவரது தமிழறிவை ஊக்குவித்தார் என்று முன்னமேயே சொன்னேன். மேலும் சில ஆசிரியர்கள் ஆங்கிலப் புலமையை வளர்த்துவிட்டனர். சிவகங்கையில் வாழ்ந்த நாட்கள் கல்வி வளர்ச்சியில் இவரை ஊக்கவில்லை ஆனால் யோக வளர்ச்சியில் ஊக்குவித்தது.

இலக்கியமும், கவிதைத்திறனும்.
ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட், ஷெல்லியின் புரோமிதியஸ், பிரான்சிஸ் தாம்சனின் ஹெளண்ட் இவை எனக்கு ஆவேசமளிக்கின்றன, அரவிந்தரின் அஹானா என் உள்ளத்தை அள்ளுகிறது என்று இவர் எழுதியிருக்கிறார். நாளெல்லாம் படிக்கிறேன், பசித்தபோது படித்துக் கொண்டே இருக்கிறேன்" என்கிறார். என் சிறந்த நண்பர்கள் இலக்கியங்களே, இலக்கியத்துக்கு அடுத்ததாக அறிவியல் நூல்களைப் படிக்கிறேன் என்கிறார் இவர்.

கவிதை எழுதத் தூண்டுபவை எவை என்றால் இவர் சொல்கிறார்: "அருவியும் குருவியும் அளித்தன கவிதை; காடும் மலையும் கவிமலர் கொய்தேன், கொய்த மலர்களைக் கோர்த்துக் கோர்த்துச் சுத்த சக்திக்கே சூட்டி மகிழ்ந்தேன்" என்று.

சிவயோக ஆன்மாக்களின் தொடர்பால் இவரது மனம் பக்குவப்பட்டது. அதன் பின்னர் கல்லூரி பாடங்களில் மனம் பதிந்தது. முதலாவது மாணவனாக இவர் தேர்ந்தார். நாட்டரசன்கோட்டையில் கம்பர் சமாதியில் அமர்ந்து கம்பராமாயணம் முழுதும் பயின்றார். பற்பல இலக்கிய நூல்களைப் படித்துப் பல நூல்களை இவரும் எழுதிவைத்தார். வேதம், உபநிஷத்துக்கள், பிரமசூத்திரம், ஜூதஸம்ஹிதை முதலியன கற்றார். அவற்றையெல்லாம் தமிழாக்கம் செய்தார். தெலுங்கும் இந்தியும் பயின்றார், அவற்றிலும் கவிதைகள் எழுதினார்.

அக்கால வழக்கப்படி ஆங்கிலத்தை சிறப்பாகக் கற்றார். பிரெஞ்சும், லாட்டினும் பயின்றார். ஷேக்ஸ்பியர், மில்டன், பைரன், டென்னிஸன், பிரெளனிங், வேட்ஸ்வொர்த், ஷெல்லி, அரிஸ்டாடில், பிளேட்டோ, ஸ்காட், அன்னிபெசண்ட், இராமதீர்த்தர், விவேகானந்தர் ஆகியோருடைய நூல்களைக் கற்றார். பட்டப்படிப்பு முடித்தவுடன் மேலும் படிப்பதற்காகவே அரசர் கல்லூரியில் இவர் நூலகர் வேலையில் சேர்ந்து அங்கும் ஓயாமல் படித்தார். இப்படி இவர் விடாமல் படித்ததால்தான் அறிவு பெற்றாரா என்று கேட்டால், இவர் சொல்கிறார், என்மீது திணிக்கப்பட்ட நூலறிவு சிற்றறிவே, என் யோகத்தால் உள்ளிருந்து மலர்ந்த சுத்த ஆன்மஞானமே பெரியது என்றார்.

ஒரு இளைஞனின் வாழ்க்கையில் இருக்க வேண்டிய குணங்கள் இவரிடம் இல்லை. மாறாக எப்படி யிருந்தது என்பதை அவர் சொல்வதைப் பார்ப்போம். "சக்தியின் அருளால் நான் பெண்களை சக்திமயமாகப் பார்த்தேன். எல்லா பெண்களையும் ஓம் ஓம் சுத்த சக்தி என்று வணங்கினேன். என் மனம் மாசுற்றால் உடனே பராசக்தியைப் பாடுவேன், பட்டினி போடுவேன், என்னை நானே தண்டித்துக் கொள்வேன். புலனடங்கினால் மனமும் அடங்கும். புலனடக்கத்திற்கு தூய்மை வேண்டும்." என்கிறார்.

அவரது இளமைக் காலம் வீட்டில் எங்ஙனம் இருந்தது என்றால்:

"வீட்டில் இனிய பாட்டின் முழக்கம்
இப்புறம் வேதம்; அப்புறம் கீதம்;
எதிரே கோயிலில் இசையின் அலைகள்
சிவகங்கை யெங்கும் திருவிழாக் கோலம்.
பாடகர், பண்டிதர், பாவலர், நாவலர், பாக
வதர்கள் பஜனை மடங்கள்
மல்கிய சூழலில் வளர்ந்தது என் வாக்கே
கேட்டுக் கேட்டுப் பாட்டுக் கற்றுப்
பாமாலை சூட்டிப் பரமனைத் தொழுதேன்" என்கிறார்.

தமிழ் மொழிபால் இவருக்கிருந்த விருப்பத்தைப் பல பாடல்களில் விவரித்திருக்கிறார்.

"வெள்ளி நகைப்பது பார், வெண் சங்கொலிப்பது கேள்;
கிள்ளை கூறு மொழியும் கீதக் குயிலிசையும்
அள்ளி வரும் தென்றல் அருந்தேன் மலர்களுடன்
துள்ளி விளையாடுதல் பார்!
தும்பி ஓம் சக்தியெனக் கள்ளுண்டு அலம்புவ பார்
காதற் களிப்பூறி உள்ளம் குளிர உயிர் குளிர
ஊன் குளிரத் தெள்ளருளாம் தெய்வத் திருவாரமுதமய
வெள்ளத்திலாட விரைந்தேலோ ரெம்பாவாய்!"

இவருக்குத் திருக்குறள் மீதும், மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் மீதும், சங்க இலக்கியங்கள் மீதும், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் காவிய நயத்திலும் அபாரமான ஈடுபாடு, இவை அனைத்தும் அழியாப் பீடினைப் பெற்றவை என்பது இவர் கருத்து. அதைச் சொல்லும் போது:-
"தேவர் குறளாட்டித், திருவாசகம் சூட்டி
மூவர் தமிழ் ஓதி, நாலாயிரம் பாடி
தாவடங்களாக முச்சங்கத் தமிழணிந்து
காவிய மாமணியாம் கம்ப முடி கவிழ்த்து
கூவித் திருப்புகழைக் கூத்தாடித் தெண்டனிட்டு
தேவாதி தேவனருட் சேர்ந்திடுவோ மெம்பாவாய்" என்கிறார்.

தமிழை வாழ்த்தி ஒரு கவிதை:
"திருகொலு விருக்கும் தமிழ்த் திருவாழ்க!
அரனருட் புதல்வி, அருங்கலைச் செல்வி
வரனருள் முதல்வி; வாழிய தமிழ்த்தாய்
அறிவனல் விழியாள், அமுதக் கதிர்விரி
முழுமதி முகத்தாள், மோகன காந்தம்
வீசிடும் அரசி மின்னெனத் தெறிக்கும்
பொலிநகை முத்தம் பொழிந்திடும் வாயாள்"

மற்றொரு கவிதை தமிழ் அன்னை என்ற தலைப்பில்
"அன்புருவான தமிழ் அன்னை மொழி
அரசியான தமிழ் அன்னை இன்பம் அளிக்கும் தமிழ் அன்னை
எங்கள் இன்னுயிரான தமிழ் அன்னை
ஆறுகள் ஊறும் மலை வளர்த்தாள் - இயல்
அழகு சொட்டும் பசு வளர்த்தாள்
வீறுய் மிகுந்த படை வளர்த்தாள் - ஞான
வித்தகர் போற்றும் கலை வளர்த்தாள்"

"தமிழ் முழக்கம்" எனும் தலைப்பில் பாடிய கவிதை.
"வைய மெங்கும் தமிழ் முழக்கம் செய்ய வாருங்கள்
ஒன்றாய்ச் சேருங்கள்
கைகள் செந்தமிழாலயம் கட்டிடக் காணுங்கள்
வெற்றி பூணுங்கள்
தேனினும் இனிய தெய்வத் தமிழிசை நலம் கூறுவோம்
நானிலத்தினில் தாயின் மணிக்கொடி நாட்டுவோம்
வீரம் காட்டுவோம்"
இப்படித் தமிழ் மீது பற்பல கவிதைகள் பாடியிருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நம் நாட்டினர் ஆண்மையற்றுக் கிடந்த நிலையைப் பார்த்து மனம் நொந்தார். நெஞ்சில் ஆவேசக் கனல் ஆர்த்தெழ வேண்டும் என்ற விருப்புடன் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதினார். அப்படி அவர் எழுதிய கட்டுரைகள் எண்ணற்றவை. வீரத் தமிழர்க்கு ஆவேசக் கடிதங்கள் எனும் தலைப்பில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கவியோகி அற்புதமான நூலொன்றை எழுதியிருக்கிறார். அந்த நூலில் எம் தமிழர்க்கு மொழி அன்பு, நாட்டு அன்பு, உலக அன்பு, கடவுள் அன்பு இவை நான்கும் இதயத்தில் பொங்கி எழ வேண்டுமெனத் தன் கருத்தை வெளிப்படுத்துகிறார்.

எல்லோருக்கும் தமிழுணர்வு வேண்டும். இந்தத் தமிழுணர்வு எலெக்ட்றான் அணுக்களைப் போல எங்கணும் பரவ வேண்டும் என்கிற தனது பேரவாவை வெளிப் படுத்துகிறார். தமிழரின் முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக இருப்பது போலிச் சாதி உணர்வு என்கிறார். இந்த உணர்வு நொறுக்கப்பட வெண்டும், பெயருக்குப் பின் ஜாதிப் பெயர்களைத் தூக்கி எறிய வேண்டுமென்கிறார்.

இவர் தனது "முன்னேற்ற முழக்கம்" எனும் கவிதை நூலில் தமிழர் எழுச்சி குறித்து அருமையான கவிதைகளை எழுதியிருக்கிறார். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

"தங்கமணிப் படுகையிலே முத்திறைத்து
தவழமுத வெள்ளமென நடைகுங்குஞ்
சங்கமணிச் செல்வங்கல் மல்கு நாட்டீர்!
தமிழ் மறையைப் புவிக்கீந்த செந்நாப்போதர்
துங்கமணிக் கவியரசன் கம்பன் துலங்குமிளங்
கோவடிகள் சொல்லையுண்ட
சிங்க அணித் தமிழர்காள் கலையினுச்சிச்
சிகரத்தில் செயக் கொடியை நாட்ட வாரீர்!

தமிழ் மன்னர்களின் வீரம் குறித்த இவரது கவிதை தெவிட்டாத இன்பமூட்டக்கூடியது.

"கண்ணகிக்குப் பத்தினிக்கல் கொணர்ந்த சேரன்
கனக விசயர் செருக்களிக்க நடந்து போரில்
விண்ணெட்ட வெற்றி முரசொலித்த நாட்டீர்
வியன் கப்பற் படை நடத்தி ராச ராசன்
கண்ணெட்டு நாடெல்லாம் கைக்கொண்டான்
கலைச்சாலை அறச்சாலை கவின்செய்
கோயில் விண்ணெட்டப் புகழ்
விளங்கச் செய்தான் அன்னான்!
வெற்றி நினைந்து ஆவேசம் பெற்று வாரீர்!

கவியோகி பன்மொழிப்புலவர் என்பதை முன்பே பார்த்தோம். அப்படிப் புலமை பெற்ற அத்தனை மொழிகளிலும் இவர் மிக அருமையான படைப்புக்களை வெளிக் கொணர்ந்திருக்கிறார். அவர் எழுதியுள்ள பாடல்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டுகிறது. இவை தவிர தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இவர் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக் குவித்திருக்கிறார். அவர் எழுதியுள்ள நூல்கள் ஆயிரத்தைத் தாண்டும்.

தனிமனிதனொருவன் தானே இவ்வளவு பெரிய சாதனையைச் செய்திருக்கிறான், அதுவும் இன்றுபோல அத்துணை வசதிகள் இல்லாத காலகட்டத்தில் எழுதிக் குவித்திருக்கிறான் என்றால் இதற்கு ஈடு இணை இல்லை என்றே சொல்லலாம்.

இவர் உணவு நெறியை மிகக் கவனமாகக் காத்தார். உப்பு, புளி, மிளகாயை நீக்கினார். வேகும் சோற்றில் காய்கறிகளைப் போட்டு உண்டார். உணவோடு நல்ல சாதுக்களின் சகவாசமும் இவருக்கு உதவியது என்கிறார். நிலக்கடலை, பழங்கள் இவைதான் இவருக்கு உணவு. இதனை எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கவனமாக கடைப்பிடித்தார்.

இவருக்கு மதுரையில் இருந்த நாட்களில் வ.உ.சி., ஜி.சுப்பிரமணிய ஐயர், சிவா ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. பாரதியாரும் பிறகு அங்கு சேர்ந்து கொண்டார். மதுரை பசுமலையில் இவர் ஆசிரியர் பயிற்சியும் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு திருமங்கலத்தில் வேலைக்கு போன இடத்தில் நிரம்பியிருந்த ஊழலைக் கண்டு ஓடிவந்து விட்டார். அப்போது முசிறி அருகே இருந்த காட்டுப்புத்தூர் எனும் ஜமீன் கிராமத்தில் ஆசிரியர் வேலை இருப்பது அறிந்து மனுப்போட்டார் அங்கு வேலை கிடைத்தது.

காட்டுப்புத்தூர்
காட்டுப்புத்தூர் இவரை பொறுத்தவரை பாட்டுப்புத்தூராக இருந்தது என்கிறார். அவ்வூரின் ஜமீந்தார் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரம் ஐயர் என்பார். காட்டுப்புத்தூர் பள்ளிக்கூடத்தில் இவர் ஆங்கிலம், சயின்ஸ், பூகோளம் ஆகியவை கற்பித்தார். 7ஆம் வகுப்புக்கு கணக்கும் பாடம் எடுத்தார். அங்கு மாணவர்களை இவர் கேட்டார், "நீ எதற்கு பள்ளிக்கூடம் வந்தாய்?" என்று. ஒவ்வொருவரும் ஒரு பதிலை அளித்தனர். அப்பா அனுப்பினார் வந்தேன் என்றான் ஒருவன். வீட்டில் பொழுது போகவில்லை வந்தேன் என்றான் மற்றொருவன். ஒரே ஒருவன் மட்டும் சொன்னான் "அறிவு வளர்ச்சி பெற வந்தேன்" என்று. இவருக்கு சாரணர் பயிற்சி அளிக்கப்பட்டது. இவரும் அதனை ஆவலுடன் கற்றுக் கொண்டு மாணவர்களையும் அதில் பயிற்றுவித்தார். அந்தப் பள்ளி மாணவர்களுக்குத் தீக்குச்சி செய்ய கற்றுத் தருகிறேன் என்று இவர் எதையோ போட்டு அரைக்க அது வெடித்து, இவரது ஆசிரியர் பதவிக்கும் வேட்டு வைத்துவிட்டது.

மற்றவர்கள் இவரைப் போகச் சொல்லாவிட்டாலும், இவருக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. வேலையை விட்டுவிட்டு சுற்றுப்புற ஊர்களுக்கெல்லாம் செல்ல ஆரம்பித்தார். ஆங்காங்கே மக்களைக் கூட்டிவைத்து பேசினார். இவரது தோற்றம், இவரது பாடல்கள், பேச்சு முதலியன மக்களைக் கவர்ந்ததால், இவர் போகுமிடங்களிலெல்லாம் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

"நச்சரிக்கும் வாழ்வைநீ நம்பாதே என்று அம்மான்
எச்சரிக்கை செய்தான், இனிநானும் - அச்சமுறேன்
சாவையும் வெல்லுமொரு சக்திப் பணிசெய்யப்
போவேன், அவனே புகல்" என்று அங்கிருந்து வெளியேறினார்.

இவர் கரூர், நெரூர், தாந்தோன்றிமலை ஆகிய இடங்களுக்கும், அகண்ட காவிரி பாயும் பகுதிகளுக்கும் சென்று அங்கெல்லாம் அமர்ந்து "பாரத மகாசக்தி காவியம்" என்ற பெயரில் ஒரு காவியத்தை எழுதினார்.

இவர் புதுச்சேரி சென்று வ.வெ.சு.ஐயரையும் பாரதியாரையும் பார்த்தார். பாரதி இவருடைய "பாரதசக்தி" நூலைப் பாராட்டி "தமிழுக்கு ஒரு மகாகாவியம் விளங்கட்டும், செய் பாண்டியா, பராசக்தி உனக்கு நல்ல வாக்குத் தருவாள்" என்று ஆசிர்வாதித்தார். பாரதியைப் போற்றி இவர் எழுதிய வெண்பா:-

"வீரங் கனலும் விழிக்கனலும், பிள்ளைபோல்
ஈரந் திகழும் இளநெஞ்சும் - பாரதியின்
சொல்லும் பொருளும் சுதந்திரப் பேரிகையும்
வெல்லும் புவியை விரைந்து".

இவருக்கு சுதந்திர வேட்கை பிறந்தது. திருச்சியில் அப்போது இருந்த காங்கிரஸ் ஆபீசுக்குச் சென்றார். அங்கு கல்கியின் அறிமுகமும், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜனின் அறிமுகமும் கிடைத்தது. அங்குதான் இவர் காந்திஜியைச் சந்தித்துப் பேசினார். அவர் அழைப்பை ஏற்று காங்கிரஸ் பிரச்சாரப் பணியில் இறங்கினார். சுத்தானந்தர் கரூரில் அரசியல் கூட்டங்களில் பேசினார். அங்கு கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டார். கரூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையோடு தொடர்பு ஏற்பட்டது.

காந்தியடிகளுடன்
மகாத்மா காந்தி ரயிலில் திருச்சி வருகிறார், அவரை கட்டளை ரயில் நிலையத்தில் சந்திக்க இரவு பன்னிரெண்டு மணிக்குத் தன்னுடன் மாணவர்கள் பலரையும் சேர்த்துக் கொண்டு காந்திஜியைச் சந்திக்கச் சென்றார். ரயில் வந்து நின்றபோது நள்ளிரவு. அனைவரும் தூங்கும் நேரம். ரயில் வந்து நின்றதும் இவரும் நண்பர்களும் 'மகாத்மா காந்திக்கு ஜே!' என்றும் 'வந்தேமாதரம்' என்றும் குரல் கொடுத்தனர். ஜன்னல் திறந்தது. செளகத் அலி எனும் தலைவர் தலையை வெளியே நீட்டி, "அரே அங்கு என்ன கூச்சல்! மகாத்மா தூங்குகிறார்" என்றார். உடனே கொண்டுவந்திருந்த மாலையையும், பணத்தையும் செளகத் அலியிடம் கொடுத்துவிட்டு மகாத்மாவிடம் சமர்ப்பியுங்கள் என்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் காந்தி எழுந்து விட்டார். உடனே அவரைப் பார்த்து சுத்தானந்தர் "நமஸ்தே" என்றார். காந்தி மலர்ந்த முகத்துடன் நாங்கள் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டார். "சிரமம் கொடுத்துவிட்டோம், படுத்துக் கொள்ளூங்கள், நாங்கள் திருச்சியில் தங்களைச் சந்த்க்கிறோம்' என்று சொல்லி திரும்பி வந்துவிட்டார். அதன்படி மறுநாள் திருச்சியில் மகாத்மா காந்திஜியை சந்தித்தார்.

திருப்பதி யாத்திரை
பிறகு இவர் திருப்பதி, காளகஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். காங்கிரசில் இருந்த பிளவு குறித்து மனம் வருந்தி இவர் அதிலிருந்து ஒதுங்கி ஒரே இடத்தில் தங்கிவிட முடிவு செய்தார். சொந்த ஊரான சிவகங்கைக்கு வந்தார். இவருக்கு தேவகோட்டையில் நண்பர் ஒருவர் தொடங்கிய பள்ளிக்கூடத்தில் வேலை கிடைத்தது. அங்கு பணி புரிந்தார். தினமும் ஆறு மணி நேரம் மட்டும் பேசுவதும், மற்ற நேரங்களில் மெளன விரதமும் அனுஷ்டித்தார். விடுமுறை நாட்களில் முழுவதும் மெளனம்தான். தினமும் காலை 3 மணிக்கு எழுந்துவிடுவார். உடனே தியானம். பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்துவதில் முழு உழைப்பையும் நல்கினார்.

தேவகோட்டையில் இவர் பொது சேவையில் ஈடுபட்டிருந்த சமயம் வ.வெ.சு.ஐயரிடமிருந்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது. இவரை அவரது பரத்வாஜ ஆசிரமத்துக்கு வரசோல்லி. இவரும் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் இவர் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. வ.வெ.சு.ஐயர் ஒரு புரட்சிக்காரர். அவரோடு போய் இவர் சேருவதை குடும்பத்தார் விரும்பவில்லை. அது குறித்து இவர் எழுதியிருப்பதைப் பாருங்கள்:-

"சில நண்பர்களைக் கொண்டு எனக்கு வீட்டில் புத்தி சொல்லச் சொன்னார்கள். ஒருவர் கண்டபடி திட்டினார். நான் மெளனமாக பொறுத்துக் கொண்டு என் வேலையைப் பார்த்தேன். உலகுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் கழுதை விற்ற கந்தப்பன் கதைதான். அனைவரும் என்னை பைத்தியம் என்றனர். அது சரிதான் என்று நிரூபிப்பது போல நான் எனது தலைப்பாகையைக் கழற்றி எறிந்தேன். என் உடைமைகள், உடைகள் அனைத்தையும் தீயிட்டு எரித்தேன். நான் எழுதிய கையெழுத்துப் பிரதிகளில் "பாரத சக்தி"யை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற நாவல்கள், நாடகங்கள் அனைத்தையும் தீயிட்டு எரித்தேன்."
அப்போது ராமேஸ்வரத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்கு இவர் சென்றார். அங்கு ந.சோமையாஜுலு, ஸ்ரீனிவாசவரதன் ஆகியோரை சந்தித்தார். அங்கு மாநாடு முடிந்ததும் தனுஷ்கோடி, மதுரை போய்விட்டு சேரன்மாதேவிக்குப் போனார். அங்கு வ.வெ.சு.ஐயர் இவரை வரவேற்றார்.

வ.வெ.சு.ஐயரின் 'பரத்வாஜ் ஆசிரமத்தில்'
தியாகச்சுடர், மாவீரன் வ.வெ.சு.ஐயரிடம் இவருக்கு நல்ல பழக்கம் உண்டு. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் ஐயர் நிறுவிய பரத்வாஜ் ஆசிரமத்திலும், அவரது பத்திரிகையான 'பாலபாரதி'யிலும் சுத்தானந்தருக்கு தொடர்பு உண்டு. இவரது தமிழார்வத்தையும், கவிதைத் திறத்தையும் ஐயர் வெகுவாக புகழ்ந்திருக்கிறார். ஐயர் மீது இவருக்கு இருந்த அன்பை விளக்க இவர் ஐயருக்கு எழுதிய கடிதமொன்றில் இவரது வாசகத்தைப் பார்க்கலாம். அதில் இவர் ஐயரை, "வீரவிளக்கே! விக்ரமச் சிங்கமே! வ.வெ.சுப்பிரமணிய தீரனே! தீப்பொறி சிந்தும் சிங்கம் போல பாரத தேவியின் துயர் தீர்க்க வீறுகொண்டெழுந்த வித்தகனே! என்றெல்லாம் போற்றியிருக்கிறார்.

ஐயரை இவர் வர்ணிப்பதைப் பார்க்கலாம்:

"சிங்க முகம், நீலமணிக் குன்று போல் திண்ணுடல்; புதிய வைரம்போல் உறுதியான அங்கங்கள்; கர்லாவும் பஸ்கியும் செய்து இறுகிய தசைகள்; செவ்வரி படர்ந்த கூர்விழிகள்; அடர்ந்த தாடி; வகுடெடுத்துஒழுங்காகச் சீவி விட்ட கேசம். அகன்ற மார்பு, பஞ்சகச்ச வேஷ்டி, மேலே கதர் துப்பட்டா, பிறைச்சந்தனத்தின் நடுவே குங்குமப் பொட்டு. அவரது கிண்கிணிக் குரலுடன் நாணப் புன்னகையும் சேர்ந்து என் உள்ளத்தில் அன்பு மின்சாரம் பாய்ச்சின"

சேரன்மாதேவியில் வ.வெ.சு.ஐயரின் குருகுலம் அமைக்கப்பட்டது. அதற்கு தலைவர் வ.வெ.சு.ஐயர். அங்கு சுத்தானந்தர் இலக்கியம், கல்வி விளம்பரம், பத்திரிகை காரியாலயம் நிர்வாகம் ஆகியவற்றைக் கவனித்தார். "பாலபாரதி" இதழ் பொறுப்பு முழுவதும் இவருடையது. வ.வெ.சு.ஐயரின் குருகுல வாழ்க்கை பற்றி இவர் எழுதியதைப் படித்தால்தான் அந்த குருகுலம் எப்படிச் செயல்பட்டது என்பது புரியும். அங்கு ஒருநாள் வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா?

காலை நாலறைக்கு அனைவரும் எழவேண்டும். காலைக்கடன்கள் அனைத்தும் முடியும். பல்துலக்க மாவிலை பறித்து அதில்தான் துலக்க வேண்டும். சிறிது உடற்பயிற்சி. பின்னர் ஆசிரமத்தைக் கூட்டி சுத்தம் செய்தல்; பின்னர் குளிக்க வரிசையில் தாமிரபரணி ஆற்றுக்குச் செல்வர். ஆசிரமம் திரும்பியதும் காலை உணவாக வாழைப்பழம், வேர்க்கடலை, மோர் அல்லது பழைய சோறு. வகுப்புகள் தொடங்கும். பதினோரு மணிக்கு மதிய உணவு. சாப்பிடும்போது யாரும் பேசக்கூடாது. உணவு, சோறு, கூட்டு, மோர், பழம், தேங்காய் இவைகளே. புளி, மிளகாய், வெங்காயம், காபி, டீ இவை அறவே கிடையாது. உணவுக்குப் பின் தட்டுக்களைக் கழுவுதல், இடத்தை சுத்தம் செய்தல் அனைத்தும் மாணவர்களே. பிற்பகல் சந்தைக்குச் சென்று சிலர் வேண்டிய சாமான்களை வாங்குவர். மற்றவர் ராட்டையில் நூல் நூற்பர். பிற்பகல் நான்கு மணிக்கு வகுப்புகள் தொடங்கும். மாலையில் விளையாட்டு. இரவு பஜனை தொடர்ந்து உணவு. ஒன்பது மணிக்கு ஆசிரமம் தூங்கிவிடும்.

இங்கு சுத்தானந்தர் எழுதிய பாரதசக்தி மகாகாவியம் ஐயரால் மேலும் மெருக்கூட்டப்பட்டது. இங்கு தலைவர்களின் விழாக்கள் நடக்கும். திலகர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, நவராத்திரி உத்சவம், உடல்நலம் கெட்டால் இயற்கை வைத்தியம் இப்படி. பாலபாரதி பத்திரிகைக்கு சுத்தானந்தரே முழுப்பொறுப்பெடுத்து வெளியிட்டார். படிப்பு தவிர மாணவர்களை அடிக்கடி வெளியில் சுற்றுலா அழைத்துச் சென்று இயற்கை வளங்களைக் காண்பிப்பார்கள். அப்படி அவர்கள் சென்ற இடங்கள், கல்யாண அருவி, குற்றாலம், நாகர்கோயில், குமரி முனை, பத்மநாபபுரம், திருவனந்தபுரம், கொல்லம், திருச்செந்தூர் இப்படி பல இடங்களுக்கும் சென்று நல்ல அனுபவம் பெற்றனர் மாணவர்கள்.

இவர் அங்கிருந்த காலத்தில்தான் வ.வெ.சு.ஐயர் மீது ஜாதிப்பிரிவினைப் பார்த்து உணவு வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வளவுக்கும் ஐயர் மிகப் பரந்த மனப்பாங்கு உள்ளவர். குறுகிய ஜாதிப்பிரிவுகளில் உட்படாத புரட்சிக்காரர். அவருக்கே இப்படிப்பட்ட குற்றச்சாட்டு எழுந்ததை சிறுபிள்ளைத்தனமாக இருந்தது என்கிறார் சுத்தானந்தர். பிரயாணங்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாக கலந்தே சமைத்து உண்டோம் என்கிறார் இவர்.

இவரிடம் ஐயர் மனம்வருந்தி பேசிய மற்றொரு செய்தி எவருடைய மனதையும் நெகிழச்செய்து விடும். அது என்ன? சுத்தானந்தர் எழுதுகிறார்:- "மணி பதினொன்று. நான் கீதை காட்டும் பாதை எழுதிக் கொண்டிருந்தேன். "ஸஞ்சலம் ஹி மனக் கிருஷ்ண' என்ற பகுதியை உரக்கப் படித்தேன். அப்போது ஐயர் வந்தார். ஆம், மனம் ஸஞ்சலமாகத்தான் இருக்கிறது. தைர்யவானையும் காலம் சோதிக்கத்தான் செய்கிறது. மனம் உடைகிறது. சோதனைகளை வென்றுதான் நமது தார்மிக வாழ்வை நிலைநாட்ட வேண்டும் என்றார்.

வ.வெ.சு.ஐயர் அருவியில் விழுந்து இறப்பதற்கு முதல்நாள் ஐயர் தன் மகளுடன் கல்யாண அருவிக்குப் புறப்பட்டார். அப்படி புறப்பட்ட ஐயரை இவர் வர்ணிக்கும் பகுதி இது: "சிங்கம் போன்ற முகம்; நெற்றி நிறைய விபூதி; அழகாகச் சீவி கழுத்தில் படிந்த கேசம்; நீண்டு வளர்ந்த தாடி - இரவும் பகலும் போல் கருப்பும் வெள்ளையும் காட்டுகிறது. வீரக்கனல் விழிகள்; நீர்க்காவி ஏறிய கதர் பஞ்சகச்சம்; மேலே பூப்போட்ட கதர் அங்கவஸ்திரம்; இறுகிப் புடைத்த தோளில், பை; அந்தி அழகெல்லாம் ஐயர் மேல் பொலிகிறது. மஞ்சள் வெயிலில் அவரது வீர வடிவம் தெரிகிறது. அந்தி மல்லிகைக் கொடிபோல் சுபத்திரா தவழ்கிறாள். நமஸ்காரம்.... என்றேன். அந்தோ! அதுதான் அவரது கடைசி சமஸ்காரமானதோ!"

பிறகு, மறுநாள் நடந்தவைகளை அவர் வாக்கால் கேட்டால்தான் அதன் ஆழம் புரியும். அவர் சொல்லுகிறார்:-

"மறுநாள் அனந்தகிருஷ்ணய்யர் ஓடிவந்தார். வாருங்கள் என்று என்னை மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் விம்மி விம்மி அழுதார். 'சுபத்ரா கால் தவறி அருவியில் விழுந்தாள். அவளை எடுக்க ஐயரும் குதித்தார். இதுகாறும் உடல் கிடைக்கவில்லை' என்றார். என் தலை சுழன்றது. தமிழகம் சுழன்றது. உலகமே சுழன்றது."

"கல்யாண அருவியை நோக்கி ஓடினேன். அப்போதுதான் ஐயரின் உடலை எடுத்துப் போட்டிருக்கிறார்கள். பார்க்கச் சகிக்கவில்லை. தாடி மீசையெல்லாம் முகம் முழுவதும் மீன்கள் கொத்தி விகாரப்படுத்தியிருந்தன. அழகான பெண் சுபத்ரை பிணமாகக் கிடக்கிறாள். மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் வந்தாள். அந்த சோகமயமான சூழ்நிலையை எப்படிச் சொல்வது. இறுதி கிரியைகள் முடித்து அந்த அம்மாள் தன் மகன் கிருஷ்ணமூர்த்தியுடன் திருச்சிக்குச் சென்றாள்." இப்படி அந்த சோக நிகழ்ச்சியை வர்ணிக்கிறார் யோகி.

மறுநாள் அந்த கல்யாண அருவிக்குப் போனார் சுத்தானந்தர். முதல்நாள் நடந்தவை அவர் மனக்கண்ணில் ஓடுகின்றன. ஐயரின் நினைவு அவர் மனத்தை வாட்டுகிறது. ஒரு பாடல் தோன்றுகிறது.

"சிங்கம் போல் வீறுடையான், சேய்போல் வஞ்சமிலான்
தங்க மணிக்குரலான் சாவிற்கும் அஞ்சாதான்;
முனிபோல் முகமுடையான் முத்துநகையுடையான்
கனிபோல் மொழியுடையான் கண்ணிலினிக் காண்பேனோ?"

தஞ்சையில் "சமரஸபோதினி"
அதன் பின் இவர் பாலபாரதியை நடத்த முயன்றாலும் முடியவில்லை. பத்திரிகை நின்று போனது. ஆசிரமத்திலிருந்தும் சுத்தானந்தர் வெளியேறினார். பின்னர் தஞ்சையில் அப்போது வெளியான "சமரஸபோதினி" எனும் பத்திரிகைக்கு ஆசிரியரானார். அதுகுறித்து அவர் சொல்லும் செய்திகளைப் பார்ப்போம். இதில் தி.ஜ.ரங்கனாதன் துணை ஆசிரியர். (இவர் பின்னாளில் மஞ்சரி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர்) மற்றும் பலரும் பத்திரிகை வெளிவர துணை புரிந்தனர். அப்போது இவரை டாக்டர் கோபு, பூவராகவன் ஆகியோர் வந்து காண்பராம். பத்திரிகை அலுவலகத்திலேயே இவரும் தங்கிக்கொண்டார்.

தஞ்சையில் இவருக்குப் பிடித்த இடங்களாக இவர் குறிப்பிடுபவை, வெண்ணாற்றின் பொழில், கருந்திட்டைக்குடி தமிழ்ச்சங்கம், சேதுபாவா மடம், பூர்ணானந்தர் தோட்டம், பிரஹதீஸ்வரர் கோயில், கருவூரார் சந்நிதி, பங்காரு காமாட்சி ஆலயம் இங்கெல்லாம் இவர் மனம் பறிகொடுத்து தியானத்திலும் பாடல்களைப் பாடுவதிலும், பிரசங்கங்கள் செய்வதிலும் கழித்ததோடு பல பெரியவர்களையும் தரிசித்துப் பழகியிறுக்கிறார். இவர் அடிக்கடி தியானம் செய்யச் செல்லும் மற்றொரு இடம் 'நீலகிரி தோட்டம்''. இங்கு சுவாமி கேவல்ராம் என்பவர் இருந்தாராம். இவர் அரவிந்தருக்கும் நண்பராம்.

தஞ்சையில் இருந்தபோது இவர் திருப்பூந்துறுத்தி சென்றிருக்கிறார். அங்கு ஓர் வேதாந்த சுவாமிகள் இருந்தாராம். அப்பர் மடம் இடிந்து கிடந்ததாம். அங்கிருந்து திருவையாறு சென்றிருக்கிறார். தியாகப்பிரம்மத்தின் சமாதியில் கீர்த்தனங்களை இயற்றிப் பாடினாராம். கல்யாணமஹால் சம்ஸ்கிருத கல்லூரிப் புலவர்களுடன் அளவளாவியிருக்கிறார்.

சமரஸபோதினி எனும் இந்த பத்திரிகை வாரம் இருமுறையாக வெளிவந்தது. இவர் பத்திரிகையில் சாத்தூர் விஸ்வநாத ஐயர் பாரதியார் பற்றி எழுதிவந்தார் என்கிறார். இவர் பாரதியாரின் தம்பி சி.விஸ்வநாத ஐயராக இருக்க வேண்டும். இவர் தஞ்சையில் இருந்த போது 1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மகாநாடு நடந்திருக்கிறது. அதில் திரு வி.க. தலைமை வகிக்க வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டி பெரியார் தீர்மானம் கொண்டு வந்து அது ஏற்றுக்கொள்ளப் படாமையால் அதிலிருந்தும் காங்கிரசிலிருந்தும் வெளிநடப்பு செய்தார். அந்த மாநாட்டிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். அந்த மகாநாட்டுக்கு முதல்நாள் நடந்த 'விஷயாலோசனைக் கூட்டம்' எப்படி நடந்தது என்பதை இவர் எழுதுகிறார். "விஷயாலோசனைக் கூட்டம் சந்தைக்கூட்டமாக இருந்தது. பேச்சுக்கு பேச்சு வாள்வீச்சாக இருந்தது. ஒருவர் பேசியபின் மற்றவர் பேசினால் நன்றாக இருக்கும், இவர்கள் சளசளவென்று ஒரே நேரத்தில் அனைவரும் கூக்குரல் இட்டனர்" என்கிறார்.

காஞ்சிபுரம் மகாநாட்டையடுத்து வேதாரண்யத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டிலும் கலந்துகொண்டு இவர் பேசியிருக்கிறார். அதன் பின் சீர்காழியை அடுத்த எருக்கூர் சென்றார். இவ்வூரில்தான் புரட்சிவீரன் நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்தார் என்பதை நினைவு படுத்திக் கொள்ளலாம். இங்குள்ள பாரத சமாஜத்தில் இவர் பேசினார்.

திருவையாற்றில் நடக்கும் தியாகபிரம்ம உத்சவத்திலும் கலந்துகொண்டு பல பாகவதர்களிடம் பேசியிருக்கிறார். அப்போது மைசூர் நாகரத்தினம்மாள் இவரிடம் உமக்கு எதற்கு அரசியலும் பத்திரிகையும். பேசாமல் கீர்த்தனாஞ்சலி செய்து கொண்டு இரும், என்று கூறியிருக்கிறார்.

ஒரு முறை ஈரோட்டுக்குச் சென்று பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமி நாயக்கரிடம் பேசிவிட்டு பெரியார் வீட்டுக்குப் போக வழி கேட்க, அவர் சொன்னாராம், "சை! அவன் பாமரன், நாத்திகன், ராமாயண விரோதி, பிராமண விரோதி" என்று அஷ்டோத்திரம் நடத்தினார். பிறகு ஒரு மாட்டு வண்டியில் இவரை தன் தம்பி ராமசாமி நாயக்கர் வீட்டுக்கு அனுப்பினாராம். அங்கு இவரை ஈ.வே.ரா. அன்புடன் வரவேற்று மனைவிக்கு அறிமுகப்படுத்தினாராம். இவர் பெரியாரின் இல்லத்தில் ஸ்நானம் செய்து நித்ய அனுஷ்டானங்களை முடித்து சூரிய நமஸ்காரம் செய்வதை அவர் பார்த்துக் கொண்டிருந்தாரம். அதற்குள் அந்த அம்மாள் கூடத்தில் கோலம் போட்டு, ஊதுவத்தி கொளுத்தி, விளக்கேற்றி தட்டில் பழங்களைக் கொண்டு வைத்தாராம். பெரியார் இவரிடம் "பூஜை சேயண்டி" என்றார். இவரும் ஜபமும் தியானமும் செய்து கற்பூரம் ஏற்றி அந்தச்சுடரை தியானம் செய்ய, பெரியார் "பாகு பாகு சரியண்டி (நல்லது சரி சரி) என்றாராம். பெரியாரைப் பற்றி இவர் கூறுவது: "நாயக்கர் காந்தியிடம் அன்பு வைத்திருந்தார். சாதி இறுமாப்பையும் கடவுள் பெயரால் நடக்கும் போலி நாடகங்களையும் அவர் கண்டித்தார். அரசியல் நாடகத்தில் புகுந்த கூனி வேலைகளையும் கோமாளிக் கூத்துக்களையும் அவர் வெறுத்தார், கண்டித்தார்."

பத்திரிகை தொழிலை விட்டுவிட்டு திருத்துரைப்பூண்டி அருகிலுள்ள பாமணி கிராமத்தில் மக்கள் நல்வாழ்வுக்காகப் பல சீர்திருத்தங்களைக் கற்றுக் கொடுத்து அந்த கிராம மக்களின் மனங்களில் இடம் பிடித்தார். பின்னர் அங்கிருந்து பாலையூர் எனுமிடத்துக்குப் போய் அங்கு தங்கி ஆசிரமம் ஏற்படுத்திக்கொண்டு கிராம முன்னேற்றத்துக்குப் பாடுபட்டார். மக்களின் மகோன்னத ஆதரவு இவருக்குக் கிடைத்தது.

அப்போது காங்கிரசை விட்டு விலகிய பெரியார் தொண்டர்கள் நாகப்பட்டினத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு நடத்தினார்கள். அதில் மாயவரம் சின்னையா பிள்ளை தலைமை வகித்தார். அதில் காந்தி படத்தைத் திறந்து வைத்து சுத்தானந்தர் பேசினார். இந்த மகாநாட்டில் பட்டுக்கோட்டை அழகிரி, மாயவரம் நடேசன், சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பலரும் பார்ப்பனீயம் என்றும் பிராமணர்கள் பற்றியும் கேலியாகப் பேசினர். ஒருவர் "பார்ப்பனீயம் ஒழிக!" என்றார். பின்னர் சுத்தானந்தர் பேசுகையில் சொன்னது:- "நான் ஒரு பார்ப்பான். எதைப் பார்ப்பான் தெரியுமா? எல்லோர் மனதையும் ஊடுருவிப் பார்ப்பான். சமரசத்தால் உங்களைப் பார்ப்பான். சாதி மதம் ஒழியப் பார்ப்பான் (கைதட்டல் கேட்கிறது) நான் ஒரு புரட்டன். ஆன்மாவைப் புரட்டிப் பார்ப்பவன். நான் ஒரு பஞ்சாங்கன், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்ச அங்கமுடையோன். பசியும் தாகமும் அனைவருக்கும் ஒன்றுதான். தோலைத் தாண்டினால் உள்ளம் ஒன்றுதான். நம்மைக் கெடுப்பது மனமயக்கம்தான். உள்ளறிவால் கண்டால் ஒருமையே தெரியும். இதைத்தான் அருட்சுடர் வள்ளலார் சொன்னார்" என்று பேசியதை பலரும் வரவேற்றார்கள்.

திருவாரூரில் ரயிலேறி பயணம் செய்கையில் இவருக்கு தொண்டு செய்யும் சீடர்கள் போல நடித்து இருவர் இவர் பெட்டியைத் திருடிச்சென்று விட்டனர். டிக்கட் இல்லாமல் பயணம் செய்த இவரை மாயவரம் ஸ்டேஷனில் இறக்கி விசாரித்தபோது இவர் விவரங்களைச் சொல்ல, அந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு இவரைத் தெரிந்திருந்தமையால் அங்கு சிலநாட்கள் தங்கி பின் பயணத்தை தொடர்ந்தார்.

சென்னையில்
சென்னையில் இவர் மனம் கவர்ந்த இடம் மைலாப்பூர். அடையாற்றில் இவர் அன்னிபெசண்ட் அம்மையாரையும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியையும் சந்தித்துப் பேசினார். அப்போது சென்னை இந்தி பிரச்சார சபா திருவல்லிக்கேணியில் இருந்தது. அங்கிருந்த பாரதியின் உறவினர் ஹரிஹர சர்மாவோடு பழக்கம் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் இவர் பெங்களூர் மற்றும் வடநாட்டுத் தலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்துக்கும் சென்றார். பம்பாய் பெருநகரத்திலும் இவரது வாசம் சில நாட்கள் இருந்தன. சென்னையில் இவருக்கு காந்திஜியோடு இருக்கும் பாக்கியம் கிடைத்தது. காந்திஜி இவரை ஆசீர்வதித்தார்.

"ஸ்வராஜ்யா"
இவர் சென்னையில் இருந்த சமயம் டி.பிரகாசம் "ஸ்வயராஜ்யா" பத்திரிகையை நடத்த இவரை அழைத்தார். அதே காரியாலயத்தில் இவருக்குத் தங்க இடம் தரப்பட்டது. அவர் "சுயராஜ்யா" பத்திரிகையில் ஆசிரியராக இருந்தது பற்றி அவரே கூறும் செய்தியைப் பார்ப்போம்.

"பிராட்வேயில் மிகப் பெரிய மாளிகையில் 'ஸ்வராஜ்யா' காரியாலயம் இருந்தது. முதல் தளத்தின் முன்புறம் இரண்டு 'லைனோக்கள்' வேலை செய்தன. அடித்த்தளத்தின் பின்புறம் பெரிய ஆங்கில இயந்திரம் ஆங்கில 'ஸ்வராஜ்யா'வை அச்சடித்துக் கொண்டிருக்கும். மூன்றாம் மாடிக்குச் சென்றால் இவருடைய அறை. ஒரு கோவணத்தைக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் பேனரை ஓட்டிக் கொண்டிருப்பார். இவர் ஸ்வராஜ்யா ஆசிரியராக இருந்த சமயம் "பால்ய விவாகம்" பற்றிய சர்ச்சை எழுந்து பல கூட்டங்களில் விவாதங்கள் நடந்தன. அங்கெல்லாம் இவர் போய் பால்ய விவாகத்தை எதிர்த்தார். அப்போது சிலர் 'பெண்களுக்கு எட்டு வயதில் திருமணம் செய்ய வேண்டும், அதுதான் சாஸ்திரம். விதவைத் திருமணம் விபசாரமாகும்" என்றெல்லாம் பேச அங்கெல்லாம் கலவரம் நடந்தது. இந்த பத்திரிகை சிலகாலம் வரை வெளிவந்து கொண்டிருந்தது.

ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூரில் பெண்ணுரிமை கூட்டமொன்று நடந்தது. அவ்வூரில் பால்ய விவாகத்தின் காரணமாகப் பல விதவைகள் இருந்தனர். அதன் கொடுமைகள் குறித்து இவர் பேச அங்கு சென்றார். கோயில் மண்டபத்தில் கூட்டம். பெண்கள் பலர் அங்கு வந்து கன்னத்தில் கைவைத்துக் கொண்டு நின்றிருந்தனர். சில வைதீகர்கள் அவர்களை விரட்டியடித்தனர். "புருஷாள் கூட்டத்தில் உங்களுக்கு என்ன வேலை, போங்கோ" என்று விரட்டினார். அவர்கள் சுற்றியிருந்த வீட்டுத் திண்ணையில் கூடி கூட்டத்தைக் கேட்டனர். வைதீகர்கள் 'கலிகாலம் கலிகாலம்' என்றனர்.

உள்ளூர் பிரமுகர் யாரும் முன்வராததால் சுத்தானந்தர் பேசத் தொடங்கினார். அவர் பராசர ஸ்மிருதி, வேதம், பகுத்தறிவு இவற்றை ஆதாரமாகக் கொண்டு வாதம் புரிந்தார். ஆண்டாள் புரிந்தது காதல் திருமணம் என்றார். அங்கிருந்த வைதீகர்கள் சிலர் "நீங்கள்தான் கலிகால தூதர்கள், உங்களால்தான் மழை பெய்யவில்லை, கம்மனாட்டிகளுக்குக் கல்யாணமாம், திரண்டு குளித்த பெண்டுகளை மணையில் வைப்பதாம், காதலாம் கத்தரிக்காயாம், கலியாணமாம், போங்காணும்; கோயில் மண்டபத்தில் அபசாரமாகப் பேசக்கூடாது" என்று கூச்சலிட்டனர். அப்போது விசாலாட்சியம்மாள் என்பவர் பேச வந்தார். "ஏய்! பெண்கள் புருஷாள் முன் பேசக்கூடாது" என்று தடுத்தனர். இவர்கள் கோயிலுக்கு வெளியே ஒரு மேஜையைப் போட்டு அதில் ஏறி பேசிமுடித்துவிட்டே அங்கிருந்து கலைந்தனர். முத்துலட்சுமி ரெட்டி தலைமையில் தேவதாசி முறை ஒழிப்பையும் இவர் ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்தார்.

"சக்தி"
நமக்கெல்லாம் "சக்தி" கோவிந்தன் பற்றி தெரியும். இவர் வெளியிட்ட சக்தி எனும் பத்திரிகை மிகவும் பிரபலம். அதில் ஆரம்பகாலத்தில் கவியோகிதான் ஆசிரியராக இருந்தார். "மஞ்சரி" பத்திரிகையில் இருந்த தி.ஜ.ரங்கநாதன் என்பவர்தான் இவருக்கு "சக்தி"யில் உதவி ஆசிரியர். "சக்தி" ஒரு மிகச்சிறந்த இலக்கியப் பத்திரிகை. அதில் யோகியின் கவிதைகள், கட்டுரைகள் அதிகம் இடம்பெற்றன.

"இயற்கை போதினி"
இவை தவிர "இயற்கை போதினி" என்ற ஒரு குறும் பத்திரிகையிலும் இவருக்குத் தொடர்பு இருந்தது. அல்லயன்ஸ் குப்புசாமி ஐயர் 1908 முதல் 1924 வரை நடத்தி வந்த "விவேக போதினி" பத்திரிகையிலும் யோகி எழுதி வந்தார்.

கவிதைகள்:
யோகி சுந்தானந்தருடைய கவிதைகள் கணக்கிட வேண்டுமென்றால் அது சாத்தியமான காரியமாக இருக்காது. பல்லாயிரக்கணக்கான பாடல்களை இவர் பாடியிருக்கிறார். மகாகவி பாரதியாரைப் போன்றே இவரும் சக்தியைப் பற்றிப் பாடியிருக்கிறார். "சுத்த சக்தி தாண்டவம்" எனும் தலைப்பில் அமைந்த பாடலின் மேன்மையைப் பார்ப்போம்.

"ஓங்குயர் மோன ஒளி அதனில்
ஓமென யாழிசைத்தாய் அந்த
நீங்கறு பாட்டினிலே - பராசக்தி
நீளுலகைப் படைத்தாய்.
ஈருயிர் யாவினுக்கும் - உயிராய்
எங்கும் இருப்பவளே - எம்மைத்
தாங்கி வளர்ப்பவளே - சுத்த சக்தி
தர்மச் சுடர் மணியே!"

இன்னொரு பாடல்:

"ஓடும் அருவியெலாம் அம்மா உன்
ஓங்கார வீணையன்றோ?
பாடும் பறவையெல்லாம் திருப்
பாவை முழக்கமன்றோ"
கூடும் மணத் தென்றல் கண்ணன்
குழலமுத மன்றோ?
ஆடும் அவனியெல்லாம் ஓம் சச்சி
தானந்த தாண்டவமே!"

இங்கே ஒரு திருப்பள்ளி எழுச்சி. கேட்போமா?

"விண்முகம் கனிந்தது விடிந்தது காலை
வீங்கிருள் அகன்றது தூங்கின குமுதம்
தண்முகம் அருளைத் தணல்முக மானது
தடங்களில் விரிந்தன தாமரை யெல்லாம்
மண்முகம் புதுப்பசும் பொன்முக மாகிட
மங்கலச் செங்கதிர் மலர்ந்தது வானில்
எம்முகம் பார்த்தருள் புரிவதற் கெண்ணி
எழுந்தருள் இத்தினம் இன்பக் கொழுந்தே!"

பெண்மைக்கு இலக்கணம் சொல்கிறார் இந்தப் பாட்டில்:
"வசந்த சோலை போலே மின்னும் வான்முகிலைப் போலே
இசைந்த காதல் போலே நல் இன்பமான பெண்மை
கலை வளர்க்கும் பெண்மை கவிகனிய நிற்கும் பெண்மை
தலை சிறந்த இன்பம் நல்கும் தாயமுதப் பெண்மை
தேன் மொழிகள் பேசி அன்புத் திருநகையை வீசி
வானமுதம் ஊட்டி நம்மை வளர்க்கும் பெண்மை வாழ்க"

'இளங்கதிர்' என்றொரு கவிதை:
"இளங்கதிர் காலை இயற்கையின் அழகில்
இலக்கியங்காணோமோ?
களங்க மில்லாத மலை அருவியினிலே
கவிதைகள் கேளோமோ?
உளங்குளிர் காதல் ஒருமையில் இன்பம்
ஊறிடக் காணோமோ?
வளம்பெறும் ஆண்பெண் சிவசக்தி எனவே
வாழ்ந்திட மகிழோமோ?

"யசோதரையும் சித்தார்த்தனும்" எனும் தலைப்பில் ஒரு கவிதையை சுத்தானந்தர் இயற்றியிருக்கிறார்.

தமிழிசைப் பற்று.
கர்நாடக இசையில் பெரும்பாலும் தெலுங்குப் பாடல்கள்தான் அதிலும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பாடல்களைத்தான் எல்லோரும் பாடுகிறார்கள். ஓரிருவர் முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் பாடல்களையும், ஒரு காலத்துக்குப் பிறகு கன்னட மொழிப் பாடல்களையும் பாடிவருகின்றனர். இதையொட்டி தமிழ்நாட்டில் தமிழிசை இயக்கம் தொடங்கியது. செட்டிநாட்டரசர் தலைமையில் கல்கி, ராஜாஜி ஆகியோரும் தமிழிசைக்கு ஆர்வம் காட்டி வளர்க்கத் தொடங்கினர். தமிழிசை பரவ வேண்டுமானால் தமிழில் நல்ல சாகித்தியங்கள் இயற்றப்பட வேண்டும் என்று பாரதியார் கூட விரும்பியிருக்கிறார். அதையொட்டி சுத்தானந்தர் கச்சேரிகளில் பாடக்கூடிய பல நல்ல தமிழ் சாகித்தியங்களை இயற்றினார்.

இவருடைய தமிழ்ப் பாடல்களை திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எம்.தண்டபாணி தேசிகர், டி.கே. பட்டம்மாள், ஜி.என்.பாலசுப்பிரமணியம், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடிப் பிரபலப்படுத்தினார்கள். எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி பிரபலமான பாடல் "இல்லையென்பான் யாரடா" எனும் பாடல். தமிழில் பாட பாடல்கள் எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு பதிலடி கொடுப்பது போல இந்தப் பாடல் அமைந்தது என்று தேசிகருக்கு பெருமகிழ்ச்சி.

தமிழில் சாகித்தியங்கள்
இவர் திரைப்படங்களிலும் பாடல்களை எழுதியிருக்கிறார். அந்தக் காலத்தில் வந்த போஜன், ஆண்டாள், சுதர்சன், பொன்வயல், பார் மகளே பார், மரகதம் போன்ற படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் சுதர்சன் படத்தில் பி.யூ.சின்னப்பா பாடியுள்ள
"உன்னடியில் அன்பு வைத்தேன்
கண்ண பரமாத்மா
உலகெல்லாம் நீயே அன்றோ
கண்ண பரமாத்மா" எனும் பாடலும்
"பொன்வயல்" படத்தில், "சிரிப்புத்தான் வருகுதையே, உலகைக் கண்டால் சிரிப்புத்தான் வருகுதையே" எனும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடலும், "பார் மகளே பார்" எனும் படத்தில் வரும் "வெட்கமாய் இருக்குதடி இந்த வேலவர் செய்திடும் வேலை இல்லா வேலை" எனும் பாடலும், "மரகதம்" படத்தில் வந்து பிரபலமாக விளங்கிய "மாலை மயங்குகின்ற நேரம், பச்சை மலை வளரும் அருவி ஓரம்" எனும் சுப்பையா நாயுடு இசை அமைத்த பாடல் இவை சிறப்பாக விளங்கிய பாடல்களாகும்.

சர்வமத சம்மதம்
இவருக்கு மத பாகுபாடு இல்லை. இந்து மதத்தாராயினும் மற்ற மதங்களையும் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல, அந்தந்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அந்த மதத்தாராகவே இருக்கப் பழகியவர். மற்ற மதங்களின் நூல்களைப் பழுதறக் கற்றவர். ஜைன மத்தின் தத்துவங்களை ஆழமாகக் கற்றுத் தேர்ந்தவர் இவர். அது போலவே பைபிள் முழுவதும் இவர் கற்று அறிந்து வைத்திருந்தார்.

இஸ்லாம் தத்துவங்களைக் கற்றுக் கொள்வதற்காக திருக்குர்ரானை முற்றிலுமாக ஓதியவர். அவர் இயற்றியுள்ள "பாரத சக்தி மகா காவியம்" எனும் நூலில் இந்த சர்வமதக் கருத்துக்களை ஆழ்ந்து படித்து நமக்குக் கொடுத்திருக்கிறார். இவர் கிறிஸ்தவ மதம் பற்றிய "கிறிஸ்து சாதனம்" எனும் கட்டுரையொன்றை எழுதி அந்த மதம் சார்ந்த கருத்துக்களைச் சிறப்பாக எடுத்து விவரிக்கிறார். கிருஸ்துவ மத நூலான பைபிளில் 25000 சொற்கள் உண்டு என்றும், இதை வைத்துக் கொண்டு பாதிரிமார்கள் அரிய தொண்டினை இயற்றுவதாகக் கூறுகிறார். பைபிள் உலகிலுள்ள 400 மொழிகலில் இருப்பதாகவும் இவர் ஒரு தகவலைக் கொடுக்கிறார். தான் சென்ற உலக நாடுகள் அனைத்திலும் பைபிள் படிக்கப்படுவது குறித்தும் இவர் குறிப்பிடுகிறார்.

இவர் "புத்தர் கருணை" எனும் சிறிய நூலொன்றை எழுதியிருக்கிறார். புத்தரைப் பற்றி இவர் கூறும் கருத்துக்கள். "புத்தர் அரச போகத்தைத் துறந்தார். அரச மரத்தினடியில் அமர்ந்து இவர் உலகத்தார் துயர் நீங்க ஓர் மார்க்கம் கண்டார். பெளத்தம் அறவழியை போதிக்கிறது. அன்பு, இரக்கம், எளிமை, தன்னலமில்லாதிருத்தல், தானம், சீலம், நல்லொழுக்கம் இவை அமைதிக்கான வழி என்கிறார் சுத்தானந்தர். புத்தமத பிரச்சாரத்திலும் இவர் ஈடுபட்டார். ஜைனர்களின் மகாவீரர் பற்றியும் இவர் விளக்குகிறார்.

அவர் சொல்கிறார்: "மகாவீரர் என்ற பெயரால் அவர் ஏன் அழைக்கப்பட வேண்டும் தெரியுமா? அதிமுத்தம் என்கிற பயங்கரமான சுடுகாட்டில் மகாவீரர் தியானத்தில் இருந்தார். கடுமையான இடி மின்னலுடன் மழை பெய்தது. பேய்க்கணங்களும், கொள்ளிவாய்ப் பிசாசுகளும் அவரை அச்சுறுத்தின. மகாவீரர் அசையவில்லை. பின்னும் அவரது பிரம்மச்சரியம் மாயப்பெண்களால் மாசுபடுத்த முயல்கின்றன. ஒன்றுக்கும் அசையாத மகாவீரரை ஒரு தேவதை "முனிவரே, உம்மை சோதித்தோம், நீரே பிரம்மச்சாரி, உம்மை மகாவீரர் என்பேன் என்கிறது அந்த தேவதை.

இப்படி இவர் மற்ற மதங்களையும் விரும்பி அதன் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு அதன் பெருமைகளையெல்லாம் ஊருக்குச் சொன்னவர். ஆனாலும் அவர் அடிப்படையில் ஓர் அத்வைதி. ஆதி சங்கரரின் மீது அசைக்கமுடியாத பக்தி கொண்டவர்.

மகாகவி பாரதியாரோடு சுத்தானந்தர்
மகாகவியின் பெருமையை மக்கள் பெரிதும் உணராதிருந்த காலத்தில் அந்த மாபெரும் கவிஞனைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டவர் சுத்தானந்தர். பாரதி குறித்து அவர் "பாரதி விளக்கம்", "கவிக்குயில் பாரதியார்" என இரு நூல்களை எழுதியிருக்கிறார். பாரதிக்கும் தனக்கும் இருந்த பழக்கம் குறித்து அவரே எழுதியதைப் பார்க்கலாம்.

"பாரதியாரை சிறுவயதில் நான் மதுரையில் பார்த்தேன். அப்போது அவர் வாட்டசாட்டமாக களை பொருந்தியவராக இருந்தார். புதுச்சேரியில் அவரைப் பார்த்தபோது அவர் மெலிந்து போயிருந்தார். நெற்றியில் நாமமும், கூரிய பார்வையும், பாவறா வாயும், தைரிய மீசை தாடியும் பாரதியை விளக்கின. இப்போது எவ்வளவு வேற்றுமை. ஆள் இளைத்திருந்தார். ஆனால் விழிகளில் அதே கனல். வெற்றிலைக் காவியேறி உதட்டில் அதே முத்து நகையைக் கண்டேன். மீசை ஜயமுண்டு பயமில்லை என்று பேசியது. தாடியில்லை."

கடையத்துக்குச் சென்று பாரதியைக் கண்ட காட்சியை இப்படி விளக்குகிறார். "முதலில் அக்கிரகாரத்துக்குச் சென்று பாரதியார் வீடு எது என்று வினவினேன். அடடா! நீர் வைதிகமாயிருக்கிறீர். அவனை ஏன் பார்க்கிறீர், அவன் முழு அனாச்சாரம் என்றார் ஒருவர். 'அது கிறுக்குப் பிடித்து கஞ்சா போட்டு எங்காவது திரியும்' என்றார் இன்னொருவர். 'நாங்கள் யாரும் அவன் வீட்டுக்குப் போவதில்லை, அவன் கழுதையைக் கொஞ்சும் கவி' என்றார் இன்னொருவர்.

நான் அவர்கள் வாயை அடக்கினேன். 'ஐயா! தமிழ்நாடு முழுவதும் கொண்டாடும் கவிக்குயிலை காகமும், கூகையும் வெறுத்தால் பரவாயில்லை, அவர் பெருமையை நான் அறிவேன் என்றேன்.

ஒருவர் மட்டும் கடையம் சத்திரத் திண்ணையிலிருந்து வந்து "அதோ அந்த ஆற்றங்கரை தோப்பில் தாண்டுகால் போடுகிறார்" என்றார்.

ஓடினேன். "விட்டு விடுதலை ஆகிடுவாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே" என்ற பாட்டு என்னை வரவேற்றது. பாரதியார் அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு வெகு முறுக்காக ராணுவ நடைபோட்டுக் கொண்டிருந்தார். இடையிடையே மீசையை நகாசு செய்து கொண்டே, அஸ்தமனச் சூரியனைப் பார்த்தார். பசுஞ்சோலையில் தங்க முலாம் பூசியது போல மஞ்சல் வெயில் படர்ந்தது." இப்படிச் சொல்லிக்கொண்டே போகிறார் சுத்தானந்தர்.

மறுமுறை திருச்செந்தூரிலும் பாரதியாரைச் சந்தித்திருக்கிறார். அங்கு பாரதியார் "முருகா, முருகா" எனும் பாடலைப் பாடியதைக் கேட்டிருக்கிறார். கடைசி முறையாக பாரதியைச் சென்னைக் கடற்கரையில் பார்த்திருக்கிறார். அப்போதுதான் பாரதியார் "பாரத சமுதாயம் வாழ்கவே" எனும் பாடலைப் பாடியதையும் அப்போது வ.வெ.சு.ஐயரும் கூட இருந்ததையும் விவரிக்கிறார். அந்தக் கூட்டம் மழை காரணமாக சீக்கிரம் முடிந்துவிட்டதாம்.

வ.உ.சிதம்பரம் பிள்ளையுடன்
தூத்துக்குடி சென்று இவர் வ.உ.சி.யைச் சந்தித்தார். அப்போது காங்கிரசில் இரு பிரிவுகள். ஒன்றுக்கு வரதராஜுலு நாயுடு தலைவர். இவர் அங்கு சென்றதும் மற்றொரு கோஷ்டி இவரை கூட்டங்களில் பேச அழைத்தது. வ.உ.சியுடன் நெருங்கிப் பழகிய காலமும் இதுதான். அவரைப் பற்றி சுத்தானந்தர் கூறுவது: "உரம் பெற்ற வீர உள்ளம், கம்பீரமான கருமேனி, முரசம் போன்ற தமிழ்ப்பேச்சு, பேச்சுக்கேற்றபடி துடிக்கும் மீசை, வக்கீல் உடை, அன்பான மனம், புலமை நிரம்பிய சொல் - எல்லாம் என் மரியாதையை அதிகரிக்கச் செய்தன. 'வீரச்சிதம்பரம் பிள்ளை' என்ற பாட்டைப் பாடினேன்." என்கிறார்.

பாட்டைக் கேட்ட வ.உ.சி. "பாட்டு கம்பீரமாக இருந்தது. பாரதி கேட்டால் மகிழ்வார். ஸ்வயராஜ்யாவில் தங்கள் தலையங்கம் படித்தேன், நடையில் பழைய விறுவிறுப்பும் புதிய மறுமலர்ச்சியும் உள்ளன. ஆனால் எல்லாம் காந்தி மயமாக இருக்கிறது. திலகரும் உமது நண்பர்தானே?" என்றார் பிள்ளைவாள்.

அதற்கு சுத்தானந்தர், "திலகரிடமும் எனக்கு உள்ளன்புதான். அந்த மராட்டிய வீரம் தங்கள் தமிழ் மீசையில் துடிக்கிறதே. வெள்ளையரை விரட்டியடிக்க அவர் வீரம் பேசினார். தாங்கள் வெள்ளையன் வெட்கும்படி கப்பல் விட்டீர்கள். தங்கள் தியாகத்தை சுதந்திர பாரதம் பொன் எழுத்துக்களால் பொறிக்கும்" என்றேன்.

பிள்ளை சொன்னார், "நான் சிறையை விட்டு வெளிவந்தபோது எனக்கு மாலை சூட்டி வரவேற்க ஒரு தமிழன்கூட இல்லை. எண்ணைக்கடை வைத்துப் பிழைத்தேன். வறுமையில் வாடினேன். வாலஸ் துரை எனது சன்னத்தை மீட்டுத்தந்தார். அந்த நன்றிக்கே என் பிள்ளைக்கு வாலேசன் என்று பெயரிட்டேன். அதற்கொரு குறள்:

"கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்று நன்றுள்ளக் கெடும்".

இன்று எனக்கு மாதம் முன்னூறு ரூபாய் தந்தால் இப்படியே அரசியல் மேடையில் குதிக்கிறேன். நான் ஒருவன் கிளம்பினால் போதும், நாட்டை உரிமைக்கு அழைத்துச் செல்வேன்" என்றார்.

"தங்கள் உணர்ச்சிதான், பாரதி வாணியாகப் பாடியது. தங்கள் பேச்சு, பாரதி பாட்டு, ஐயர் எழுத்து, சிவாவின் ஆவேசம் - இந்த நான்கும் தமிழுலகைத் தட்டி எழுப்பின. இன்று வகுப்புவாதம்தான் நாட்டைப் பிளக்கிறது" என்றேன்.

அதற்கு வ.உ.சி. சொன்னார், "என் குருநாதர் காலத்தில் வகுப்புவாதமே கிடையாது. இன்று நாடு வகுப்புக் கந்தலாயிருக்கிறது. இந்து, முஸ்லீம், பார்ப்பான், அல்லான், வைதிக ஒத்துழையாமை, ஸ்வயராஜ்யக் கட்சி என்ற பிரிவெல்லாம் தற்கால அரசியல் ஊழலையே காட்டுகின்றன. எனக்கு மட்டும் வாய்ப்பளித்தால், தமிழரை ஒன்று சேர்ப்பேன். நாயக்கரும், நாயுடுவும், ஐயங்காரும், ஐயரும் என்னுடன் கைகோர்த்து நடக்கச் செய்வேன்" என்றார்.

அன்று நடந்த கூட்டத்துக்கு சிதம்பரம் பிள்ளை தலைமை வகித்தார். வரதராஜுலு நாயுடு, எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, சுப்பையர் ஆகியோர் பேசினர். கடைசியில் சுவாமி சுத்தானந்த பாரதியார் பேசுகிறார், பேசத்தான் வேண்டும், பேசும் பாரதியார் என்று அழைத்தார் தமிழ்ச்சிங்கம் வ.உ.சி. காலமும் கடமையும் என்று நான் பேசினேன், இல்லை கர்ஜித்தேன் என்கிறார் சுத்தானந்தர்.

சுத்தானந்தரைப் பற்றிய பொதுவான சில செய்திகள்
1979ஆம் வருஷம். சென்னை பள்ளிப்பட்டு ஸ்ரீராம் நகரில் யோகி சுத்தானந்த பாரதியார் தனது "யோக சமாஜம்" அமைத்து அதில் தங்கி இருந்தார். அங்கே அவருடைய சீடர்கள் சிலர் தங்கியிருந்தனர். அந்த காலத்தில் அவர் பல ஊர்களுக்கும் கூட்டங்களுக்கும் மற்ற நிகழ்ச்சிகளுக்கும் போய்வந்தார். பெரும்பாலான நேரங்களில் அந்த கட்டடத்தின் மாடியில் எழுதிக்கொண்டோ அல்லது தியானத்திலோ இருப்பது வழக்கம். இவருக்கு உதவியாகச் சில சீடர்களும் உடன் இருந்தார்கள். அடிக்கடி பல பெரியவர்கள் இவரைப் பார்க்க வருவார்கள். அவர்களுடன் இவர் இலக்கியம், கவிதை, யோகம், அரசியல் என்று ஒன்றுவிடாமல் பேசினார்.

அவர் ஃபிரெஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்த கதையான "ஏழை படும் பாடு" என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுத்தார்கள் அல்லவா, அதில் நடித்த வி.நாகையா பற்றி இவருக்கு நல்ல அபிப்பிராயம். அவர் நன்றாகப் பாடுவார், நல்ல சங்கீத ஞானமுள்ளவர் என்பார். இவர் ஃபிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்த மற்றொரு கதையை எம்.ஆர்.ராதா படமெடுக்க விரும்பினார் என்றும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் கூறுகிறார்.

இவர் தன்னை மட்டும் பற்றி சிந்திக்கவில்லை, அவர் காலத்து மற்ற எழுத்தாளர்கள், படைப்பாளிகள் பற்றியெல்லாம் இவருக்கு நல்ல எண்ணம் உண்டு. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் இவர்களது சிறுகதைகளை இவர் பெரிதும் பாராட்டியிருக்கிறார். பாரதிதாசனனின் கவிதை வேகத்தையும் இவர் புகழ்ந்து பேசுகிறார். கம்பதாசன் குறித்து இவர் சொன்னது, "அந்த ஆள் அற்புதமான கவிஞன், ஆனால் ஒண்ணாம் நம்பர் குடிகாரன்" என்றார். கண்ணதாசன் குறித்து, "அவர் நல்ல கவிஞர், என் மீது நிரம்ப மரியாதை உள்ளவர்" என்கிறார்.

கவிஞர் சுரதா பற்றி இவர் கூறுவது: "சுரதாவை எனக்கு அவரது இளமைக் காலம் தொட்டே தெரியும். அவர் என் புத்தகங்களை எல்லாம் படித்து என்மீது ஆர்வம் கொண்டு தன் பெயரை "சுத்தானந்த தாசன்" என்று வைத்துக் கொண்டார். பின்னாளில் பாரதிதாசனிடம் ஐக்கியமாகி சுப்புரத்தினதாசன் என ஆனார்" என்கிறார்.

காஞ்சி மகாசுவாமிகள்
காஞ்சி மகான் பற்றி இவர் எழுதியதைப் பார்ப்போம். 'இவர் துறவுலகத்துக்கே தூய ஒளியாகத் துலங்குகிறார். அவரை நான் ஐந்து முறை தரிசித்துள்ளேன். 1922இல் அவர் சிவகங்கைக்கு வந்தபோது ராஜா சத்திரத்தில் தங்கியிருந்தார். நானும் என் தமயனாரும் சென்று தரிசித்தோம். எப்போதும் அவர் மகா தேஜஸ்வியாகத் துலங்கினார். அவர் பேச்சு மிக இனியது. அவர் குறித்து நான் பாடினேன்.

"தேனினும் இனிய சொல்லான், தீச்சுடர் மேனிகொண்டான்
ஊனுயிர்க்குயிரதான ஒன்றினைக் கலந்து நின்றான்
ஏனினிக் கவலை நெஞ்சே; இன்றுனக் கருள்செய் தானிஞ்
ஞானவான் - காமகோடி நாதனை நம்புவோமே"

அவருடைய திருக்கரத்தால் தேங்காயும் கனிகளும் திருநீறும் அளித்தார். மறுமுறை நான் திருப்பெருந்துறைக் கோயில் குறுந்தமரத்தடியே நிஷ்டைகூடி மாணிக்கப்பாட்டு எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது அடியார் சூழ ஆசாரியார் வந்தார். ஒரு பாட்டுப் படித்தேன். என்னை ஆசீர்வதித்தார். ஒரு வாரம் அவருடனே இருந்தேன். பிறகு காஞ்சி, சென்னை, திருப்பதி மூன்றிடங்களுக்குத் தலைமை வகித்து அவரைப் பற்றிப் பேசினேன்.

ரமண மகரிஷியும் அரவிந்த மகானும்
அரசியல், ஆசிரியர் பணி, ஊர் சுற்றல், வாதம் புரிதல், கிராம நிர்மாணத் திட்டங்கள் இப்படி பல அவதாரங்களை எடுத்த இவர் அடிக்கடி தியானத்தில் அமர்ந்துவிடுவார் என்பதைப் பார்த்தோம் அல்லவா? ஒரு நிலையில் இவரது தியானத்தில் ரமணமகரிஷி தோன்றத் தொடங்கினார். அது முதல் ரமணர் குறித்தும், அவர் வாழ்ந்த திருவண்ணாமலை, அவர் தவமிருந்த விருபாக்ஷி குகை இவை மனதில் ஓடத்தொடங்கின. விடுவாரா இவர்? எங்கெங்கோ சுற்றி மறுபடி திருவண்ணாமலை வந்து சேர்ந்தார்.

திருவண்ணாமலையில் வந்து இறங்கியதும் அண்ணாமலைப் பிள்ளை, ஜானகிராம அய்யர் ஆகிய இருவர் இவரை வரவேற்றனர். இவர் அண்ணாமலை குன்றில் ஏறி அங்கு அருவியில் நீராடிவிட்டு விருபாக்ஷி குகைத் திண்ணையில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். பின்னர் அங்கிருந்து ரமணாசிரமம் சென்றார். அங்கு அப்போது இருந்த பிரபல காங்கிரஸ் தலைவரும் ஆன்மீகத்துறையில் பெரியவருமான காவ்யகண்டம் கணபதி சாஸ்திரிகள் இருந்தார். மகரிஷியிடமும் காவ்யகண்டம் சாஸ்திரிகளிடமும் சுத்தானந்தர் நன்கு அளவளாவினார். இந்த சந்திப்பினால் தான் 'ரமணப்பிரகாசத்தின்' பெருமையை அறிந்தேன் என்கிறார் சுத்தானந்தர். இவர் திருவண்ணாமலையில் பகவான் ரமணரின் அனுமதியோடு மலைமீது ரமணர் தவமிருந்த விரூபாக்ஷி குகையில் அவரைப் போலவே மெளனத் தவத்தில் அமர்ந்து இருந்திருக்கிறார்.

ரமணாசிரமத்தில் சுத்தானந்தர் வசித்து வரும் போது அங்கிருந்த காவ்யகண்டம் கணபதி சாஸ்திரிக்கு அரவிந்தரை தரிசிக்க வருமாறு அழைப்பு வருகிறது. தானும் அரவிந்தரை தரிசிக்கவும் தன் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை அரவிந்தரிடம் கொடுத்துவிட வேண்டுமென்கிற எண்ணமும் உதயமாகியது. ரமணரின் சந்நிதியில் இருக்கும்போதுதான் 'ரமணரைப் பார்த்தாலே போதும், அவர் அடைந்த உயர் நிலையைப் பிறரும் அடையத் தூண்டும் சக்தி கிடைக்கும்' என்று உணர்ந்தார் சுத்தானந்தர். திருவண்ணாமலை வாசத்தின் போதுதான் சேஷாத்ரி சுவாமிகளையும் தரிசித்தார். அவர் சொன்ன மகா உபதேசம் "சுத்தானந்தமாக இரு" என்பது. அந்த ஆசியை மனதில் வாங்கிக்கொண்டு திருவண்ணாமலையை விட்டுப் புறப்பட்டார்.

அங்கிருந்து புதுச்சேரி வந்தார். அங்கு அரவிந்தரையும் அன்னையையும் தரிசித்தார். 5-12-1950இல் அரவிந்தர் முக்தி அடைந்தார். அதன் பின் ஆரோவில் எனும் ஊர் உருவானது. அதில் 200 பேர் அயல்நாட்டார் சிறு குடில்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர். அப்போது அன்னையும் காலமானார். அதன்பின் அங்கு தொடர்ந்து வாழ்ந்து வந்த சுத்தானந்தர் முதல் ஏழு ஆண்டுகளில் அரவிந்தரின் நூல்கள் அனைத்தையும் பயின்றார். பல நூல்களை மொழி பெயர்த்தார். அவர் கவிதைகளை வரிவரியாக ஆழ்ந்து படித்தார். அதைப்பற்றியெல்லாம் சுமார் 40 நூல்கள் எழுதி வெலியிட்டார். அங்கு மெளனமும், நூல் எழுதுதல், படித்தல் என்று பொழுது போயிற்று.
Seshadri swamigal 

அரவிந்த ஆசிரமத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளைக் கழித்தபின் அவர் புதுவையை விட்டு வெளியேறினார். புதுவையில் இருந்த 25 ஆண்டுகளும் அவர் மெளன விரதம் பூண்டிருந்தார். முதல் பத்து ஆண்டுகளில் அரவிந்தரின் நூல்கள் அனைத்தையும் படித்துத் தேர்ந்தார். பின்னர் பற்பல நூல்களை எழுதிக் குவித்தார். அத்தனையும் தனது மெளன விரதத்தோடேயே நடந்தது. அங்கு இவர் யோகம் பயின்றதோடு, அரவிந்தரின் அன்புக்கும், அன்னையின் கருணைக்கும் பாத்திரமானார். தினம் இவர் அவர்களை தரிசித்தபின் தான் தனது வேலைகளைத் தொடங்குவார். அரவிந்த அன்னை இவருக்குத் தினமும் ஒரு மலரைக் கொடுத்து ஆசி வழங்கி வந்தார். வாழ்க்கைப் பலனைப் பெற்றதாகவும், அவர்களது அருளாசி தனக்கு முழுமையாகக் கிடைத்ததாகவும் இவர் கருதினார். நான் ஏன் அரவிந்தாசிரமத்தை விட்டு வெளியேறினேன் என்பதற்கு "கடவுள் ஆணை' என்கிறார். அரவிந்த ஆசிரமத்தைவிட அரவிந்தரை மேலாக நினைக்கிறேன் என்கிறார். அங்கிருந்து சிதம்பரம் அண்ணாமலை நகருக்குச் செல்கிறார். அங்கு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பேசினார். பிறகு தருமபுரம் ஆதீனம் சென்று அவர்களோடு சைவ சித்தாந்தத்தைப் பரப்புவது குறித்து பேசினார். அங்கிருந்து வைத்தீஸ்வரன்கோயில் சென்று தரிசித்தார். சுவாமி சிவானந்த சரஸ்வதி, ஆரிய சமாஜ் தலைவர் சுவாமி ஸ்ரத்தானந்தா, ஷீரடி சாய்பாபா, புட்டபர்த்தி பாபா, மேகர் பாபா, இவர்கள் தவிர பிரபல விஞ்ஞானி சர் சி.வி.ராமன், கே.எம்.முன்ஷி, ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, திருக்கோயிலூர் தபோவனம் சுவாமி ஞானானந்தா ஆகியோர்களோடும் இவருக்கு பழக்கம் இருந்தது. இதன் பின் உலக நாடுகள் பலவற்றுக்கும் யாத்திரை சென்றார். அதன் விவரங்கள் இதோ:
                                                                   Swamy Sivananda
வெளிநாட்டுப் பயணங்கள்.
இன்றைய சூழ்நிலையில் வெளிநாடு செல்வது என்பது நம் ஊரிலிருந்து சென்னைக்குப் போய் திரும்புவது போலத்தான். ஆனால் அதிக வசதிகள் இல்லாத நிலையில் யோகி சுத்தானந்த பாரதி பல ஊர்களுக்கும் சென்று வந்ததென்பது சிறப்பான செய்தி. இவர் சென்ற நாடுகளிலெல்லாம் இவரது தோற்றமும், பேச்சும் இவர் மீது மக்கள் மதிப்பும் பக்தியும் கொள்ள வைத்தது. இந்து சமயத்தைப் பற்றி பேசும் இவர் மற்ற சமயங்களையும் போற்றிப் பேசியதை மக்கள் வரவேற்றனர்.

இவர் வெளிநாட்டுப் பயணங்கள் இவர் மட்டும் கண்டும் வசித்தும் வந்த நிகழ்ச்சியாகி விடாமல் அவற்றை "நான் கண்ட ரஷ்யா", "நான் கண்ட ஜப்பான்" என்றெல்லாம் நூல்களை எழுதி மக்களும் படிக்க வசதி செய்து கொடுத்தார். இவர் சென்று வந்த நாடுகள் ரஷ்யா, இலங்கை, மலாயா (மலேசியா), தாய்லாந்து, ஜப்பான், பிரான்ஸ், லண்டன் (இங்கிலாந்து), ஜெர்மனி, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இத்தாலி ஆகியவைகளாகும்.

ரஷ்ய அனுபவம்.
மாஸ்கோவிலிருந்து சுமார் 100 மைல் தூரத்திலிருந்த டால்ஸ்டாய் பண்ணையும், அவரது மாளிகையும் இவர் சென்று பார்த்த இடங்களில் முதலாவதாகும். அங்கு டால்ஸ்டாயின் வீட்டில் ஒரு நினைவகம் இருக்கிறது. அங்கு டால்ஸ்டாய் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் கண்டு களித்தார். பின்னர் அங்கு அமர்ந்து தியானம் செய்தார். அங்கு போய் டால்ஸ்டாயின் நினைவிடத்தில் அமர்ந்து கொண்டு நமது ஊரில் வடலூரிலுள்ள வள்ளலாரின் நினைவிடத்தையும் அப்படி மாற்ற வேண்டுமென்று எண்ணமிடுகிறார்.

அங்கிருந்து லெனின்கிராட் செல்கிறார். அங்கு இவர் ஒரு பள்ளிக்கூடத்துக்குச் செல்கிறார். அங்கு ஒரு மாணவனிடம் போய் இவர் "நீ கடவுளை நம்புகிறாயா?" என்றார். அந்த மாணவன் சொன்னானாம், "ஆம் நான் நம்புகிறேன், ஆனால் இந்த விஷயம் என் ஆசிரியருக்குத் தெரியக்கூடாது" என்றானாம். இதை அவரே எழுதுகிறார்.

இவரது ரஷ்யப் பயணத்தின் போது இவர் எழுதிய இரு ஆங்கிலக் கவிதைகள் படிக்க சுவாரசியமாக இருக்கும்.

“Gandhiji's spirit is speaking here
With Tolstoy soul to soul
What they are speaking I can hear
With my heart so closely near
When shall we see a world of peace
Where wicked, wasteful wars shall cease
Where Nations are one human fold
And all countries form a unique world
Where lovers unite like gem and gold
Where truth is bright and love is bold
Where bread comes out of workers sweat
Where joy smiles out of every heart
Where the toiler to his field goes
Kissing the lips of blooming rose
Where existence is Master's treat
And peace keeps on in cold and heat
Where all have work, dress and food
Where government goes on as it should be
To the rhythm of the people's voice
Such is the New World of our Choice.”

மற்றொரு அருமையான கவிதை.

“Work and food and cloth for all
Equal status for all
Health and Home and School for all
A happy world for all
No idle rich, no more beggars
All are equal workers”.

வார்சா நகருக்குப் போனபோது அவர் மனதில் தோன்றிய ஓர் அருமையான ஆங்கிலக் கவிதை:-

“Warsaw saw War
We saw ruins
Let the war be ruined
What a pitiful havoc
Ukraine comes
Wheat Wheat everywhere
Eat Eat Ukraine bread
It looks like Marvari turban”

இலங்கை அனுபவம்
இவர் இலங்கை சென்ற சமயம் அங்கு அமைதி நிலவியிருந்தது. மன்னார் சென்றடைந்த இவர் அங்கிருந்து கதிர்காமம் வரை சென்ற போது இவருக்கு அதி விமரிசையான வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஒவ்வோர் ஊரிலும் ஆடலும், பாடலும், நாட்டியம், ஊர்வலம் என்று தடபுடலாக வரவேற்பு இருந்தது. சைவம் தழைத்தோங்கிய பகுதி அது. அங்கு அனைத்து மதத்தினரும் அன்பு, பக்தி, நேர்மை இவற்றோடு ஒற்றுமையாக வாழ்வதை இவர் கண்டதாக எழுதுகிறார். ஆறுமுக நாவலரின் சைவம், சுவாமி விபுலானந்தரின் சங்கத் தமிழ், பொலநருவாவில் புத்தர் காட்சியும், திரிகோணமலையின் கடற்கரையும், ச்கிரியா மலையின் மேல் சித்திரக் காட்சிகளும், சிங்கக் குகையும், அனுராதபுரத்தில் அசோகனின் மகள் சங்கமித்திரையால் நடப்பட்ட அரச மரம், புத்த நாகரிகச் சின்னங்கள் இவைகளைக் கண்டு இவர் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார்.

கண்டியில் புத்தருடைய பல் இருப்பதை தரிசனம் செய்திருக்கிறார். அங்கு இவர் "சமயோக தர்மம்" எனும் தலைப்பில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார். இவர் நாவலப்பிட்டி, வதுளை, குவீன்ஸ்மேரி, கல்யோயா ஆகிய ஊர்களுக்குச் சென்றபோது கடுமையான மழை பெயதபோதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இவர் பேச்சைக் கேட்டனர். வவுனியாவில் சுத்தானந்தர் இளைஞர் மன்றம் எனும் ஓர் அமைப்புச் செயல்பட்டு வந்தது. அங்கு ஏராளமான தமிழ் அன்பர்கள் இவருக்கு மறக்கமுடியாத வரவேற்பு கொடுத்தனர்.

மலாயா பயணம்
மலாயா செல்வதற்காக இவர் முதலில் சிங்கப்பூர் சென்று அங்கு நகரசபை மண்டபத்தில் மாபெரும் கூட்டத்தில் உரையாற்றினார். தலைப்பு "சர்வமத சமரசம்" என்பது. அங்கிருந்தவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது, எனவே இவர் ஆங்கிலத்தில் பேசினார். அங்குள்ள பத்திரிகைகள் இவரது பேச்சை விவரமாக வெளியிட்டிருந்தன. தமிழ் முரசு, மலாயா மெயில், தமிழ்நேசன், டைம்ஸ் ஆகிய பத்திரிகைகள் தினமும் இவரது பேச்சை வெளியிட்டன. கோலாலம்பூர் முதலான இடங்களிலும் இவரது பேச்சைக் கேட்க மக்கள் திரளாக வந்திருந்தனர்.

தாய்லாந்து பயணம்
இவர் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கிற்கு சென்றதும் அங்கு பரவியிருந்த இந்திய பண்பாடு கலை இவைகளைக் கண்டு ரசித்திருக்கிறார். புத்தர் கோயில், ராமாயண சிற்பங்கள் இவை இவருக்கு உள்ளக்கிளர்ச்சியை உண்டு பண்ணியதாக இவர் குறிப்பிடுகிறார். சயாம் சங்கத்தில் இவர் கம்ப ராமாயண சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார். இவர் பன்மொழிப் புலவர் அல்லவா? அங்கு இந்தியில் வேதம் குறித்த சொற்பொழிவொன்றையும் நிகழ்த்தியிருக்கிறார். தற்போதைய வியட்நாமிலுள்ள சைகோனுக்கும் சென்றார். இப்படி தென்கிழக்கு ஆசியா முழுவதும் இவர் பயணம் செய்தார்.

ஜப்பான் பயணம்
ஜப்பானின் பயணம் இவருக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்ததாம். அவர் சொல்கிறார், "ஆசியாவின் ஆற்றல் பெற்ற வீரத் திருநாடு ஜப்பான்" என்று. அங்கு போனதும் அது இவரது தாய்வீடு போல உணர்ந்தாராம். யோகஹாமா துறைமுகம் பார்த்துவிட்டு அங்கு நடந்த உலக பெளத்த மகாநாட்டில் ஜென் புத்தம் எனும் தலைப்பில் ஒரு மணிநேரம் பேசினாராம். டோக்கியோ பல்கலைக்கழகத்தையும் இவர் கண்டு களித்திருக்கிறார்.

ஃபிரான்ஸ் பயணம்
ஃபிரான்சின் வண்ணமிகு தலைநகர் பாரிசுக்கு இவர் சென்றார். அங்கு ஜோன் ஆஃப் ஆர்க் கையில் வைத்திருந்த வாளைக் கண்டு அதைக் கண்களில் ஒத்திக் கொண்டாராம். ஈஃபிள் டவர் இவரைக் கவர்ந்த இடம். இவருக்கு ஃபிரெஞ்சு மொழி நன்றாகத் தெரியும். கவிதைபாடும் ஆற்றலும் உண்டு. ஆகவே அங்கு இவர் பல ஃபிரெஞ்சு புலவர்களைக் கண்டு உரையாடியிருக்கிறார்.

லண்டன் பயணம்
லண்டன் சென்று அங்கிருந்து ஷேக்ஸ்பியர் கிராமமான ஸ்டாட்ஃபோர்டு சென்று அங்கு ஷேக்ஸ்பியர் விழாவில் கலந்து கொண்டார். ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களுக்குச் சென்று வந்தார்.

ஜெர்மனி பயணம்
பெர்லினில் உலக சமாதான மகாநாடு நடைபெற்றது. அதில் பங்குகொண்டு இவர் பேசினார். இவர் பேச்சுக்கு ஜெர்மானியர்கள் அடிக்கடி எழுந்து வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஆர்ப்பரித்தனராம்.

இந்த நாடுகள் தவிர இவர் அமெரிக்கா, இத்தாலி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார். உலக நாடுகள் முழுவதையும் சுற்றி பார்த்த பின் பூரண ஞானத்துடன் இவர் தனது வாசத்தைச் சென்னையில் நிலைநிறுத்தினார். அங்கு ஒரு யோக சமாஜம் எனும் இடத்தை அமைத்துக் கொண்டு அங்கு சந்நியாச வாழ்க்கையைத் தொடர்ந்தார். இவர் தனது தென்னாப்பிரிக்கப் பயணத்தின் போது டர்பன், ஜோஹன்ஸ்பர்க், கேப்டவுன், கிம்பர்லி, ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள தமிழர்களிடையே பேசினார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இவர் பேச்சைக் கேட்டனர்.

ராஜராஜன் விருது
இவர் சென்னையில் தனது "யோக சமாஜத்தில்' இருந்த காலத்தில்தான் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் இவருக்கு முதன்முதலாக அறிவிக்கப்பட்ட "ராஜராஜன் விருதை"க் கொடுத்து கெளரவித்தது. இந்த விருதைப் பெற்ற முதல் அறிஞர் இவர்தான். தமிழ்ப் பல்கலைக் கழகம் தோன்றி அறிவித்த முதல் விருது இது. இதனைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றவர் யோகி சுத்தானந்த பாரதியார்.

இவர் பாடல்களிலும், எழுத்திலும் மணிப்பிரவாள நடையே அதிகமிருக்கும். தனித்தமிழ் இயக்கத்தார் சிலர் இவரது இந்த மணிப்பிரவாள நடையை ஏற்றுக் கொள்ளவில்லை, குறை சொன்னவர்களும் உண்டு. அவர் அதிகம் உறங்குவது கிடையாது. அது பற்றி வ.வெ.சு.ஐயர் கூறுகிறார்; "அவர் பேனா நள்ளிரவில்கூட ஓடிக்கொண்டிருக்கும்" என்பார். அதிக நேரம் தியானத்தில் இருப்பார். உணவு வகைவகையாக சாப்பிடமாட்டார். அரிசியோடு காய்கறிகளையும் ஒன்றாகப் போட்டு வேகவைத்து சாப்பிட்டுவிடுவார். வயதான காலத்திலும் கிணற்றில் நீர் இறைத்து குளித்து தன் உடைகளைத் தானே துவைத்து உணர்த்திப் போட்டுக் கொள்வார்.

சென்னை அடையாறு யோக சமாஜத்தில் இருந்து கொண்டிருந்த சுவாமிஜிக்கு திடீரென்று தான் பிறந்த சிவகங்கையின் நினைவு வந்தது. அங்கு தொடங்கிய அவரது வாழ்வு உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தபின் சென்னை அடையாற்றில் பல காலம் யோக சாதனையில் ஈடுபட்டுப் பிறகு தன் வாழ்வின் அந்தி நேரம் நெருங்குகிறது என்பதை உணர்ந்தோ என்னவோ தன் சொந்த ஊருக்கு வர எண்ணினார்.

1973இல் சிவகங்கை ராஜா உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த ஆர்.வெங்கடகிருஷ்ண ஐயருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் சிவகங்கை நகரையொட்டிய புறநகர் பகுதியில் ஓர் பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும், அதற்கு ஆகவேண்டிய காரியங்களைத் தொடங்குங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் ஒரு பள்ளிக்கூடம் தொடங்க வேண்டுமானால் அதற்கான பூர்வாங்க வேலைகள் எவ்வளவு சிரமம் என்பது அதில் ஈடுபட்டவர்களுக்குத்தான் தெரியும். எத்தனை நடைமுறைகள், எத்தனைத் தடைகள், அலைச்சல், செலவு, இதையெல்லாம் எண்ணி தலைமை ஆசிரியர் சற்று திகைத்தார். இருந்தாலும் இப்படியொரு பள்ளி தொடங்குவது என்பது வரவேற்கத்தக்கதுதான் என்று முடிவு செய்து அதற்காக ஒரு கமிட்டி ஏற்படுத்தி வேலைகளில் இறங்கினார்.

பள்ளிக்கூடம் தொடங்குவது என்றால் அதனை ஏதாவது ஒரு அமைப்பின் சார்பில்தான் தொடங்க வேண்டுமென்று சுவாமிஜி விரும்பியதால் "யோக சமாஜம்" எனும் பெயரில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. உடனே சிவகங்கையைச் சுற்றி பள்ளிக்கூடத்துக்கு ஏற்ற இடம் கிடைக்கிறதா என்று தேடத் தொடங்கினார்கள். அப்படியொரு பெரிய இடம் சோழபுரம் எனும் கிராமத்தில் இருந்தது. அதன் உரிமையாளர்களான இரு செல்வந்தர்கள் தங்கள் இடத்தைத் தானமாகக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்கள். நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த இரு தனவந்தர்கள் மனமுவந்து இந்த நற்பணிக்காகத் தங்கள் 27.37 ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுத்தனர். வாழ்க அவர்களது தர்ம சிந்தை. ஒருவருடைய இடம் 22 ஏக்கர் மற்றொருவருடையது 7.37 ஏக்கர். இரண்டும் ஒரே இடத்தில் அமைந்திருந்தது. 1977 ஜனவரியில் Gift Deed பதிவு செய்யப்பட்டது.

சிவகங்கை கம்பன் விழாவுக்கு வந்த யோகி சுத்தானந்த பாரதியார் யோக சமாஜத்துக்கு "சுத்தானந்தா யோக சமாஜம்" எனப் பெயரிட்டு பதிவு செய்யச் சொன்னார். 1978இல் பள்ளிக்கூடம் தொடங்க அனுமதி கேட்டு மனுச்செய்தனர். கே.என்.ராமநாதன் செட்டியார் என்பவர் தனது மாளிகையொன்றை தற்காலிகமாக பள்ளிக்கூடம் நடத்த கொடுத்தார். பல அரசு அதிகாரிகளும் இப்படியொரு பள்ளிக்கூடம் தொடங்க, அதுவும் சுவாமி சுத்தானந்தர் தொடங்குவதனால் அனைத்து ஒத்துழைப்பையும் தந்தனர். ஆனால் ஒரே ஒருவர் Joint Director of School Education அனுமதி தர மறுத்துவிட்டார். எனவே கமிட்டி சென்னையிலிருந்த டைரக்டருக்கு மேல் முறையீடு செய்தனர். அப்போது டைரக்டராக இருந்தவர் கல்வியாளர் டாக்டர் கே.வெங்கடசுப்பிரமணியம். அவர் அவசரமாக மும்பை செல்லவிருந்ததால் வந்தவுடன் அனுமதி தந்துவிடுவதாகச் சொல்லி மனுவைத் தன் உதவியாளரிடம் கொடுத்துச் சென்றார். அந்த உதவியாளர் வேண்டுமென்றோ அல்லது தவறாகவோ அதனை அனுமதி மறுத்த அதிகாரிக்கு அனுப்பி வைத்துவிட்டார். மறுபடி தேர் புறப்பட்ட இடத்திலேயே சென்று நின்றது.

அப்போது எதிர் கட்சி தலைவராக இருந்த உ.சுப்பிரமணியமும் அவர் தம்பி உ. பில்லப்பன் என்பவரும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் இது குறித்து பேசினார். பண்ருட்டி ராமச்சந்திரனிடமும் பேசினார். உடனே பண்ருட்டி டைரக்டருக்கு போன் செய்து அனுமதி தருவது குறித்து முடிவு என்ன ஆயிற்று என்று முதலமைச்சர் கேட்பதாகக் கேட்டதும், அவசர அவசரமாக கையெழுத்தாகியது. இப்படி மலையைக் கெல்லி ஒரு எலியைப் பிடிக்க வேண்டியிருந்தது, இப்படியொரு பள்ளிக்கூடம் தொடங்குவதற்காக.

சிவகங்கை ராஜா உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த வெங்கடகிருஷ்ணன் தான் இந்த பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1-9-1979 அன்று பள்ளிக்கூடம் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டில் பத்தாவது ஆரம்பிப்பது என்று முடிவானது. அதுவரை 59 பேர் பள்ளியில் சேர்ந்திருந்தனர்.

பள்ளிக்கூடத்துக்கு தானமாக வந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. 1-6-1987இல் இந்த புதிய கட்டடத்துக்கு பள்ளிக்கூடம் மாற்றப்பட்டது. அந்தக் கட்டடம் Dr.K.வெங்கடசுப்பிரமணியம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. உதவி செய்த அத்தனை கல்வித்துறை அதிகாரிகளும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள்.

சென்னை அடையாறு யோக சமாஜத்தில் தங்கியிருந்த யோகியார் சிவகங்கை சோழபுரத்துக்கு வந்து நிரந்தரமாகத் தங்குவதென்று முடிவுக்கு வந்தார். 1982 டிசம்பரில் இவர் சிவகங்கை வந்து சேர்ந்தபோது மகிழ்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு அவருக்கு பல ஊர்களிலிருந்தும் சீடர்களும், ஆர்வலர்களும் வந்து சேர்ந்தார்கள். இவருடைய ONE GOD, ONE WORLD AND ONE COSMIC RACE எனும் சித்தாந்தம் தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

1990இல் அவரே சோழபுரம் பள்ளிக்கூடத்தில் தன் வரலாற்றைப் பேசினார். அது:- "என்னை ஆட்கொண்டு ஆளாக்கிய மகான்கள் பலர். தேவி மீனாட்சி அருளால் அருட்கவியானேன். பூர்ணானந்தர், ஞானசித்தர், ரமணர், ஷீரடி சாயிநாதர், சேஷாத்ரி சித்தர், சித்தாரூடர், அப்துல்லா மெளல்வி, சாது சுந்தர் சிங், மெஹர்பாபா, அரவிந்த அன்னை, அனிபெசண்ட், வ.வெ.சு.ஐயர், கவிக்குயில் பாரதியார் போன்ற எத்தனையோ அருளறிவுச் செல்வருடன் பழகிய அனுபவங்கள் இங்கே செயல்வடிவம் பெற வேண்டும்.

பல மொழிகளைக் கற்றேன், பல சமயங்களையும் பழகிப் பயின்றேன். பாரத நாட்டைப் பலமுறைச் சுற்றினேன். உலகைப் பலமுறை வலம் வந்தேன். நாடு நாடாகச் சுற்றி, மலைக் குகைகளிலும், காடுகளிலும் அரவிந்தர் ஆசிரமத்திலும் முப்பதாண்டுகள் மோனத்தவமிருந்து எனது அனுபவங்களையெல்லாம் ஆயிரம் நூல்களில் எழுதிக் குவித்துள்ளேன். அவை அனைத்தும் மீண்டும் அச்சேறி வரவேண்டும். பிற்காலத்தில் இதை ஒரு அன்புப் பணியாக மேற்கொள்க" என்று உரையாற்றினார்.

சுவாமிஜி அந்த முதிர்ந்த வயதிலும் மறுபடி ரிஷிகேஷ், சிம்லா, ஐதராபாத், பாட்னா ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தார். 1990 பிப்ரவரியில் இவர் ஊர் திரும்பினார். அது முதல் அவரது உடல் நிலை கெடத்தொடங்கியது. ஜோதி விழா நடந்த சமயம் கூட அவரால் பேச முடியவில்லை. மார்ச் மாதம் 4ஆம் தேதி முதல் சுவாமிஜி உணவு உட்கொள்ள மறுத்து விட்டார்.

வயது மூப்பும், தள்ளாமையும் யோகி சுத்தானந்தரை மிகவும் வாட்ட 7-3-1990இல் இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார். அன்று காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் யோகியார் அதுவரை எழுந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து அவர் அறைக்குச் சென்று பார்க்க அங்கு கவியோகி சுத்தானந்த பாரதியார் மீளாத அமரத்துவம் பெற்றுவிட்டதைக் கண்டார். 11-5-1897இல் பிறந்த அவர் தனது 93ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். யோகியாரின் பூதவுடல் அந்தப் பள்ளி வளாகத்திலேயே சமாதி வைக்கப்பட்டு அங்கு ஓர் கோயில் எழுப்பப் பட்டது. ஏற்கனவே ஒரு நகரத்தார் நண்பரிடம் பள்ளி வளாகத்தில் ஒரு ஆலயம் எழுப்பி அதிலொரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டும், அதற்காக ஒரு லிங்கம் கொண்டு வரப் பணித்திருந்தார். அந்த லிங்கம் இவர் காலமான சமயம் வந்து சேர்ந்தது. அது சுவாமிஜியின் சமாதி ஆலயத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டு பஜனை முதலிய வழிபாடுகள் நடந்து வருகின்றன. அவரது பூதவுடல் மறைந்தாலும் தமிழில் அவர் படைத்த படைப்புக்கள் அனைத்தும் என்றென்றும் வாழ்ந்திருக்கும். நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை இவரைப் பற்றி பாடிய பாடல் ஒன்றை நினைவுகூர்வோம்.


"தென்மொழியும் வடமொழியும் தெளியக் கற்றான்
திசைமொழியாம் ஆங்கிலத்தில் திறமை மிக்கான்
மென்மைமிகும் பிரெஞ்சு மொழியை விரும்பிக் கொண்டான்
பன்மொழிகள் பரிந்தொளிரும் சுத்தானந்த பாரதி மெய்ஞ்ஞானப் பண்பில்
மிக்கத் தன் மொழியே தலைசிறந்த மொழியா மென்று
தமிழுக்கே பணிபுரியும் தவசியானான்!":

வாழ்க கவியோகி சுத்தானந்த பாரதியார் புகழ்!